2019-08-22
T.235 - நின்றியூர் - பாதங்கள் நான் நற்செந்தமிழ்
-----------------
(வண்ணவிருத்தம்;
தானந்த தானத்தந் .. தனதான)
(நீலங்கொள் மேகத்தின் - திருப்புகழ் - பொது)
பாதங்கள் நானற்செந் .. தமிழ்பாடிப்
.. பாவங்கள் தீரக்கும் .. பிடுவேனாய்
வேதங்கள் நாடற்கும் .. பெரியாய்நின்
.. மேலன்பு பூணத்தந் .. தருளாயே
கீதங்கள் ஓதிக்கண் .. புனல்வாரக்
.. கேளென்று நாடிச்சென் .. றடைவார்தம்
ஏதங்கள் தீர்முக்கண் .. திகழ்தேவா
.. ஏர்நின்றி யூர்நச்சும் .. பெருமானே.
பதம் பிரித்து:
பாதங்கள் நான் நற்செந்தமிழ் பாடிப்,
.. பாவங்கள் தீரக் கும்பிடுவேனாய்,
வேதங்கள் நாடற்கும் பெரியாய், நின்
.. மேல் அன்பு பூணத் தந்தருளாயே;
கீதங்கள் ஓதிக், கண் புனல் வாரக்,
.. "கேள்" என்று நாடிச் சென்று அடைவார்தம்
ஏதங்கள் தீர் முக்கண் திகழ்-தேவா;
.. ஏர்-நின்றியூர் நச்சும் பெருமானே.
பாதங்கள் நான் நற்செந்தமிழ் பாடிப், பாவங்கள் தீரக் கும்பிடுவேனாய் - நான் நல்ல செந்தமிழ்ப் பாமாலைகளைப் பாடி, என் வினைகள் தீரத் திருவடிகளை வணங்குபவன் ஆகி;
வேதங்கள் நாடற்கும் பெரியாய், நின்மேல் அன்பு பூணத் தந்தருளாயே - வேதங்களாலும் அறிவதற்கு அரிய பெருமை உடையவனே, உன்மேல் பக்தி கொள்ளுமாறு எனக்கு அருள்வாயாக; (நாடுதல் - அறிதல்; கிட்டுதல்); (திருமாளிகைத்தேவர் - திருவிசைப்பா - 9.1.11 - "மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன் திருமாலொடு மயங்கி");
கீதங்கள் ஓதிக், கண் புனல் வாரக் "கேள்" என்று நாடிச் சென்று அடைவார்தம் ஏதங்கள் தீர் முக்கண் திகழ்-தேவா - பாடல்கள் பாடிக், கண்ணீர் சொரிய, "எம் உறவு நீ; எம் குறை கேட்டருள்" என்று வழிபடும் பக்தர்களது குறைகளைத் தீர்க்கும் முக்கண்ணுடைய தேவனே; (வார்தல் - சொரிதல்; ஒழுகுதல்); (கேள் - 1. உறவு; நண்பன்; 2. கேள் என்ற ஏவல்வினை); (ஏதம் - துன்பம்; குற்றம்);
ஏர்-நின்றியூர் நச்சும் பெருமானே - அழகிய திருநின்றியூரை விரும்பும் (= விரும்பி உறையும்) பெருமானே; (ஏர் - அழகு); (நச்சுதல் - விரும்புதல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment