Monday, September 17, 2018

04.52 – புடைமருதூர் - (திருப்புடைமருதூர்)


04.52புடைமருதூர் - (திருப்புடைமருதூர்)



2014-03-01
புடைமருதூர் - (திருப்புடைமருதூர்)
----------------------------------
(எழுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் மா விளம் மா விளம் விளம் மா' - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை");
(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்");



1)
சொற்சுவை யோடு பொருட்சுவை மிக்க
.. தொடைபல கொண்டடி போற்றும்
நற்சுவை அறிந்த நாவினர் தமக்கு
.. நலமெலாம் நல்கிடும் நம்பன்
கற்சிலை ஒன்றைக் கையினில் ஏந்திக்
.. கடிமதில் மூன்றையும் எய்த
பொற்சடை யானூர் பொருநையின் கரைமேற்
.. பொழிலணி புடைமரு தூரே.



தொடை - பாமாலை;
நம்பன் - விரும்பத்தக்கவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று;
கற்சிலை - கல் + சிலை - மேருமலை வில்; (கல் - மலை; சிலை - வில்);
கடிமதில் மூன்று - காவலுடைய கோட்டைகள் மூன்று - முப்புரங்கள்; (கடி - காவல்);
பொருநை - தாமிரபரணி ஆறு;
பொழில் அணி புடைமருதூரே - சோலைகள் சூழ்ந்த திருப்புடைமருதூர்;



2)
துரிசடை யாத தூயம னத்தர்
.. துணையடி தோத்திரம் செய்யும்
பரிசுடை யார்தம் பழவினை தீர்த்துப்
.. பரகதி கொடுத்தருள் பரமன்
விரிசடை யாய்வெள் விடையினாய் என்று
.. வேண்டிய பகீரதற் கருள்செய்
புரிசடை யானூர் பொருநையின் கரைமேற்
.. பொழிலணி புடைமரு தூரே.



பதம் பிரித்து:
துரிசு அடையாத தூய மனத்தர்
.. துணையடி தோத்திரம் செய்யும்
பரிசு உடையார்தம் பழவினை தீர்த்துப்
.. பரகதி கொடுத்து அருள் பரமன்;
"விரிசடையாய்! வெள் விடையினாய்!" என்று
.. வேண்டிய பகீரதற்கு அருள்செய்
புரிசடையான் ஊர், பொருநையின் கரைமேல்
.. பொழில் அணி புடைமருதூரே.


துரிசு - குற்றம்;
துணையடி - இரு திருவடிகள்; துணையாக உள்ள திருவடி என்றும் கொள்ளலாம்;
பரிசு - குணம்; தன்மை;
விரிசடையாய் - விரிந்த சடையை உடையவனே; (இங்கே கங்கையை மண்ணுலகிற்குக் கொண்டுவருவதற்காகப் பகீரதன் வேண்டுவதால், 'சடையானே, அதை விரிப்பாயாக' என்றும் பொருள்கொள்ளாலாம்);
விடையினாய் - இடபத்தை வாகனமாக உடையவனே;
புரிசடையான் - முறுக்கிய சடையை உடையவன்; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்);



3)
முன்சிறு நகையால் முப்புரம் எரித்த
.. முக்கணன் தன்திரு நாம
இன்சுவை அறிந்த நாவுடை யார்தம்
.. இருவினை தீர்த்தருள் ஈசன்
மென்சிறை வண்டு முரல்நறுங் கொன்றை
.. வெறிகமழ் கூவிளம் விரவும்
புன்சடை யானூர் பொருநையின் கரைமேற்
.. பொழிலணி புடைமரு தூரே.



மென்சிறை வண்டு - மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகள்;
முரல் - முரலுதல் - ஒலித்தல்; பாடுதல்;
வெறி கமழ் கூவிளம் - மணம் வீசும் வில்வம்; (வெறி - வாசனை);
புன்சடை - செஞ்சடை; (புன்மை - tawny color; புகர் நிறம்);



4)
கலியிடை மலையை மத்தென நாட்டிக்
.. கடைந்திடும் போதெழு நஞ்சால்
மெலிவடை உம்பர் ஒலிகழல் போற்ற
.. மிடற்றினில் வைத்தருள் விமலன்
பலிகடை தோறும் சென்றிரந் துண்ணும்
.. பண்பினன் பணிந்தெழு திங்கள்
பொலிசடை யானூர் பொருநையின் கரைமேற்
.. பொழிலணி புடைமரு தூரே.



கலி - கடல்;
நாட்டுதல் - ஸ்தாபித்தல்; நடுதல்; (சுந்தரர் தேவாரம் - 7.55.5 - "கோல மால்வரை மத்தென நாட்டிக்");
மெலிவு அடைதல் - துன்புறுதல்;
உம்பர் - தேவர்கள்:
ஒலிகழல் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடி; (சம்பந்தர் தேவாரம் - 3.90.11 - "... ஒண்ணுலாம் மொலிகழ லாடுவார்..." - ஒலிக்கின்ற கழல்கள் அணிந்த திருவடியைத் தூக்கி நின்றாடுவார்);
பலி கடைதோறும் சென்று இரந்து உண்ணும் - பிச்சையை வீட்டுவாயில்கள்தோறும் சென்று யாசித்து உண்கின்ற; (அப்பர் தேவாரம் - 6.79.7 - "விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை");
திங்கள் பொலிசடையான் - சந்திரன் திகழ்கின்ற சடையை உடையவன்;



5)
தனக்கிணை இல்லான் தாயினும் நல்லான்
.. தடவரை யான்மகள் தலைவன்
பனைக்கர வேழம் படவுரி செய்து
.. பாரிடம் சூழந டிப்பான்
முனர்ச்சலந் தரனைத் தடிந்தசக் கரத்தை
.. முளரிபோற் கண்ணனுக் கீந்த
புனற்சடை யானூர் பொருநையின் கரைமேற்
.. பொழிலணி புடைமரு தூரே.



தட வரையான் மகள் தலைவன் - மலைமகளுக்குத் தலைவன்; (தட வரை - பெரிய மலை);
பனைக்கர வேழம் பட உரி செய்து - பனைபோன்ற துதிக்கையை உடைய யானையைக் கொன்று தோலை உரித்த; (படுதல் - சாதல்);
பாரிடம் - பூதம்;
நடித்தல் - கூத்தாடுதல்; நடம்செய்தல்;
முனர் - முன்னர் - இடைக்குறை விகாரம்;
தடிதல் - வெட்டுதல்; அழித்தல்
முளரி போல் கண்ணன் - தாமரை போன்ற கண் உடையவன் - திருமால்; (முளரி - தாமரை);
(சுந்தரர் தேவாரம் - 7.16.2 - "செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி....");



6)
மருவுடை மலரை வாளியாக் கொண்ட
.. மன்மதன் மதியில னாகி
அருகடை நாளில் அழலுமிழ் கண்ணால்
.. அவனழ குடல்தனைக் காய்ந்தான்
திருவுடை யான்ஓர் சிரத்தினில் ஐயம்
.. தேர்பவன் அடியவர்க் கரணாம்
பொருவிடை யானூர் பொருநையின் கரைமேற்
.. பொழிலணி புடைமரு தூரே.



மரு - வாசனை;
வாளி - அம்பு;
அவன் அழகு உடல்தனைக் காய்ந்தான் - மன்மதனின் அழகிய உடலை எரித்துச் சாம்பலாக்கியவன்;
திரு - செல்வம்; நன்மை; விபூதி/திருநீறு;
(சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நன்றுடையானை .... சென்றடையாத திருவுடையானை...");
(திருவாசகம் - அச்சப்பத்து - 8.35.9 - "மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் ... திருமுண்டம் தீட்ட மாட்டாது அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே." - 'திரு' என்றது, 'விபூதி' என்னும் பொருட்டாய்த், திருநீற்றை உணர்த்திற்று.);
ஐயம் - பிச்சை;
அடியவர்க்கு அரண் ஆம் பொருவிடையான் - பக்தர்களுக்குக் காவலாக இருக்கும், போர்செய்ய வல்ல இடபத்தை வாகனமாக உடையவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்தும் .... அண்ணல் அரண்முரண் ஏறும் .... ");



7)
கனைகடல் கக்கு கருவிடந் தன்னைக்
.. கருணையொ டுண்டிருள் கண்டன்
நனைசடை உடையான் கொடியிடை அன்ன
.. நடையுடைக் கோமதி நாதன்
நினைபவர் நெஞ்சில் நின்றருள் நிமலன்
.. நீறொளிர் மார்பினில் அரவம்
புனைபெரு மானூர் பொருநையின் கரைமேற்
.. பொழிலணி புடைமரு தூரே.



* கோமதி - இத்தலத்து இறைவி திருநாமம்;
கனைகடல் கக்கு கருவிடம் தன்னைக் கருணையொடுண்டு இருள் கண்டன் - ஒலிக்கின்ற கடல் உமிழ்ந்த கரிய நஞ்சைக் கருணையினால் உண்டு இர்ுண்ட கண்டத்தை உடையவன்;
நனை சடை உடையான் - ஈரச் சடையன்; (கங்கைநீர் நனைக்கின்ற சடை; கங்கைநீரில் நனைந்த சடை);
கொடியிடை, அன்ன நடையுடைக் கோமதி நாதன் - கொடி போன்ற இடையும் அன்னம் போன்ற நடையும் உடைய கோமதிக்குத் தலைவன்;
நினைபவர் நெஞ்சில் நின்றருள் நிமலன் - எண்ணி வழிபடும் பக்தர்கள் நெஞ்சிள் தங்கும் தூயவன்;
நீறு ஒளிர் மார்பினில் அரவம் புனை பெருமான் ஊர் - திருநீற்றைப் பூசிய மார்பில் பாம்பை மாலையாக அணிந்த பெருமான் உறையும் ஊர்;
பொருநையின் கரைமேல் பொழில் அணி புடைமருதூரே - தாமிரபரணியின் கரையில், சோலை சூழ்ந்த திருப்புடைமருதூர் ஆகும்;



8)
தேர்விடத் தடையோ இம்மலை என்று
.. சினமிகு மனத்தனாய் அதனைப்
பேர்மட அரக்கன் வலிகெட ஊன்றிப்
.. பின்னவன் பெரிதழு தேத்தப்
பேர்கொடுத் தருள்செய் பிஞ்ஞகப் பித்தன்
.. பேதையோர் பங்கினன் வெள்ளைப்
போர்விடை யானூர் பொருநையின் கரைமேற்
.. பொழிலணி புடைமரு தூரே.



பேர் மட அரக்கன் வலி கெட ஊன்றிப்- கயிலைமலையைப் பெயர்க்கமுயன்ற, மடமை மிக்க இலங்கைமன்னனது வலிமை அழியும்படி ஒரு விரலை ஊன்றி; (வலி - வலிமை);
பின் அவன் பெரிது அழுது ஏத்தப், பேர்கொடுத்து அருள்செய் - பிறகு அவன் நெடுங்காலம் ஓலமிட்டு அழுது துதிக்க, அவனுக்கு இரங்கி இராவணன் என்ற பெயரும் கொடுத்து அருள்செய்த;
பிஞ்ஞகப் பித்தன் - தலைக் கோலமும், பேரருளும் உடையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.48.10 - "கோணிய பிறைசூடியைக் ... பிஞ்ஞகப் பித்தனை ....");
(6.79.10 - "கைத்தலங்க ளிருபதுடை அரக்கர் கோமான்...... பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப் பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாமத் தத்துவனைத்...." - இராவணன் - அழுதவன்);
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.87.10 - "கடுத்த மேனி யரக்கன் ... மணஞ் சேரி யருளெனக்
கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே.");



9)
மருப்பொசி மாலும் மலர்மிசை அயனும்
.. மலரடி மணிமுடி காணா
நெருப்புரு வாகி நின்றவன் இன்று
.. நேற்றொடு நாளையும் ஆகி
இருப்பவன் அன்பர் விருப்பவன் உம்பர்
.. இடர்கெட எயில்களை எரித்த
பொருப்புவில் லானூர் பொருநையின் கரைமேற்
.. பொழிலணி புடைமரு தூரே.



மருப்பு ஒசி மாலும் - குவலயாபீடம் என்ற யானையின் தந்தத்தை ஒடித்த திருமாலும்; (மருப்பு - யானைக்கொம்பு; தந்தம்); (ஒசித்தல் - ஒடித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.52.9 - "வேழவெண்கொம் பொசித்தமாலும் ...");
மலர்மிசை அயனும் - தாமரைமேல் இருக்கும் பிரமனும்;
விருப்பவன் - விருப்பமாய் இருப்பவன்;
(திருநாவுக்கரசர் தேவாரம் - 6.90.9 - "நெருப்புருவத் திருமேனி வெண்ணீற் றானை....தக்கோர் சிந்தை விருப்பவனை .... " - தகுதி பெற்றவரது விருப்பமாய் இருப்பவன்);
பொருப்பு வில் - மேருமலை வில்;



10)
சேர்வழி அறியாக் கார்மலி நெஞ்சர்
.. செப்பிடும் சிறுமொழி கொள்ளேல்
ஓர்வழி உண்மை நேர்வழி எளிதில்
.. உய்வழி நீறணி பத்தர்
சார்வழி ஆன சங்கரன் கங்கைச்
.. சடையினன் கடகரி உரிவைப்
போர்வையி னானூர் பொருநையின் கரைமேற்
.. பொழிலணி புடைமரு தூரே.



வழி - நெறி;
கார் - கருமை; இருள்; அறிவுமயக்கம் (Ignorance, illusion);
மலிதல் - மிகுதல்;
சிறுமொழி - புன்மொழி; சிறுசொல்; - அற்ப வார்த்தைகள்;
கொள்ளேல் - மதிக்கவேண்டா;
ஓர் வழி - ஒப்பற்ற நெறி;
உண்மை நேர்வழி - உண்மைவழி, நேர்வழி - மெய்ந்நெறி, செவ்வையான வழி;
எளிதில் உய் வழி - எளிதில் உய்யும் நெறி;
நீறு அணி பத்தர் சார் வழி - திருநீறு பூசிய பக்தர்கள் சாரும் நெறி; (சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; பொருந்துதல்);
கட கரி உரிவைப் போர்வையினான் - மத யானையின் தோலைப் போர்வையாக அணிந்தவன்; (கடம் - யானை மதம்); (கரி - யானை); உரிவை - தோல்); (அப்பர் தேவாரம் - 4.66.5 - "கடகரி யுரியர் போலும்....");



11)
தீங்கரும் பன்ன இன்மொழி பேசும்
.. தேவியோர் பங்கனே சிவனே
தாங்கருந் துன்பம் தருவினை தீராய்
.. சம்புவே என்றடி தொழுவார்க்
கீங்கருந் துணையாய் இன்பம ருள்வான்
.. இரக்கமில் காலனை உதைத்த
பூங்கழ லானூர் பொருநையின் கரைமேற்
.. பொழிலணி புடைமரு தூரே.



தீம் கரும்பு அன்ன இன்மொழி - இனிய கரும்பு போன்ற இன்மொழி;
தாங்கருந்துன்பம் - தாங்க அரும் துன்பம் - தரிக்க ஒண்ணாத துன்பம்; ('தாங்க அரும்' என்பது 'தாங்கரும்' என்று வந்தது. பெயரெச்சத்து விகுதி அகரம் தொகுத்தல் விகாரம்);
துன்பம் தருவினை தீராய் - துன்பத்தைத் தரும் வினைகளைத் தீர்ப்பாயாக;
சம்பு - இன்பத்தை ஆக்குபவன்; சுகத்தைத் தருபவன் - சிவன் (Siva, as bestowing happiness);
ஈங்கு அரும் துணையாய் - இங்கே (இப்பிறப்பில், இவ்வுலகில்) அரிய துணை ஆகி;
இரக்கம் இல் காலனை - இரக்கமற்ற எமனை;
பூங்கழலான் - பூவையொத்த பொலிவுடைய கழலணிந்த திருவடியினன்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) திருப்புடைமருதூர் - பாண்டிய நாட்டுத் தலம். கல்லிடைக்குறிச்சியிலிருந்து 10 கிமீ தொலைவில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ளது.
திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=827
----------- --------------

04.51 – சிவசைலம்


04.51சிவசைலம்



2014-02-15
சிவசைலம்
-------------------------------------------
(கலிவிருத்தம் - 'விளம் காய் விளம் காய்' என்ற வாய்பாடு;
விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி காய்ச்சீரும் வரலாம்.)
(சுந்தரர் தேவாரம் - 7.29.3 - "பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்");
(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடியுடை மழுவேந்தி மதகரி யுரிபோர்த்துப்");



1)
வெண்பிறை விடநாகம் வேணியில் அணிவோனே
கண்புனை நுதலானே கடுவினை தீர்த்தருளாய்
பண்பயில் மொழிமாது பரமகல் யாணியொடும்
தெண்புனற் கடனாபாய் சிவசைலம் அமர்ந்தவனே.



* சிவசைலத்தில் இறைவன், இறைவி திருநாமங்கள் - சிவசைலநாதர், பரம கல்யாணி;
விடநாகம் - விஷமுடைய நாகப்பாம்பு;
வேணி - சடை;
நுதல் - நெற்றி;
கடுவினை - கொடிய வினை;
தெண் புனல் - தெளிந்த நீர்;
கடனா - சிவசைலத்தில் ஓடும் நதியின் பெயர்;
அமர்தல் - விரும்புதல்; உறைதல்;



2)
வரைதனை வளைவித்து மாற்றலர் புரமெய்தாய்
அரைதனில் அரவார்த்தாய் அயன்தலைப் பலிகொள்வாய்
குரைகழல் தொழுவேன்றன் கொடுவினை தீர்த்தருளாய்
திரைமலி கடனாபாய் சிவசைலம் அமர்ந்தவனே.



வரைதனை வளைவித்து மாற்றலர் புரம் எய்தாய் - மலையை வில்லாக வளைத்துப் பகைவர்களது முப்புரங்களை எய்தவனே; (வரை - மலை); (மாற்றலர் - பகைவர்); (வளைவித்தல் - வளைத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.2 - "மலையார் சிலையா வளைவித் தவனே" - மலையை வில்லாக வளைத்தவனே);
அரைதனில் அரவு ஆர்த்தாய் - பாம்பை அரைணாகக் கட்டியவனே; (ஆர்த்தல் - கட்டுதல்);
குரைகழல் தொழுவேன்றன் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியைத் தொழும் என்னுடைய;
கொடுவினை - கொடிய வினை;
திரைமலி கடனாபாய் - அலைகள் மிக்க கடனா நதி பாய்கின்ற; (திரை - அலை);



3)
சாம்பலை உடற்பூசித் தாளிணை தனையென்றும்
ஓம்பிடும் ஒருமாணி உயிர்க்குறு துணையானாய்
பாம்பணி மணிமார்பா பழவினை தீர்த்தருளாய்
தேம்புனற் கடனாபாய் சிவசைலம் அமர்ந்தவனே.



சாம்பல் - திருநீறு;
ஓம்புதல் - போற்றுதல்;
பாம்பு அணி மணி மார்பா - பாம்பை மாலையாக அழகிய மார்பில் அணிந்தவனே;
தேம்புனல் - இனிய நீர்;



4)
வாயினில் தமிழ்மாலை மறப்பிலா அடியார்க்குத்
தாயினும் நல்லவனே சங்கரா ஒருகண்ணில்
தீயினை உடையானே தீவினை தீர்த்தருளாய்
சேயிழை ஒருகூறா சிவசைலம் அமர்ந்தவனே.



தமிழ்மாலை - தேவாரம், திருவாசகம், முதலியன;
மறப்பிலா - மறப்பு இலா - மறத்தல் இல்லாத;
சேயிழை - பெண் - உமையம்மை;
ஒருகூறா - ஒரு கூறனே - ஒரு பங்காக உடையவனே;



5)
வான்மனம் மிகவாடி வணங்கிட விடமுண்டாய்
மான்மறி மழுவேந்தீ மதகரி உரிமூடீ
பான்மதிச் சடையானே பழவினை தீர்த்தருளாய்
தேன்மலி பொழில்சூழ்ந்த சிவசைலம் அமர்ந்தவனே.



வான் - தேவர்கள்;
மான்மறி மழுவேந்தீ - மான்கன்றையும் மழுவையும் ஏந்தியவனே;
மதகரி உரிமூடீ - ஆண்யானையின் தோலைப் போர்த்தவனே;
பான்மதிச் சடையானே - பால் போன்ற வெண்ணிறப் பிறைச்சந்திரனை சடையில் அணிந்தவனே;
தேன் - வாசனை; வண்டு;



6)
கூனணி மதிநாகம் கூவிளம் புனைவோனே
மானன விழிமாது மருவிய மணவாளா
கானகம் தனிலாடீ கடுவினை தீர்த்தருளாய்
தேனறை பொழில்சூழ்ந்த சிவசைலம் அமர்ந்தவனே.



கூன் அணி மதி, நாகம், கூவிளம் புனைவோனே - வளைந்த அழகிய சந்திரனையும், பாம்பையும், வில்வத்தையும் சூடியவனே; (கூன் - வளைவு); (அணி - அழகு; அணிதல் - பொருந்துதல்); (கூவிளம் - வில்வம்);
மான் அன விழி மாது மருவிய மணவாளா - மான் போன்ற விழியையுடைய உமைக்குக் கணவனே; (அன - அன்ன - போன்ற); (மருவுதல் - கலத்தல்; தழுவுதல்);
கானகம் - காடு - சுடுகாடு;
ஆடீ - ஆடுபவனே;
கடுவினை - கொடிய வினைகள்;
தேன் அறை பொழில் - வண்டுகள் முரலும் சோலை; (தேன் - வண்டு);



7)
பிறையணி சடையானே பெண்ணொரு புடையானே
கறையணி மிடறானே கண்ணுதல் உடையானே
துறைபல அடைபெம்மான் தொல்வினை தீர்த்தருளாய்
சிறையளி முரல்சோலைச் சிவசைலம் அமர்ந்தவனே.



புடை - பக்கம்;
மிடறானே - மிடற்றானே - கண்டத்தை உடையவனே;
கண்ணுதல் - நெற்றிக்கண்;
துறை பல அடை பெம்மான் - பல துறைகளால் அடையப்பெறும் பெருமானே; (துறை - வழி);
(பெம்மான் - அண்மை விளியாக வந்தது - பெம்மானே; பெருமானே);
சிறைளி முரல் சோலை - சிறகுகளையுடைய வண்டுகள் ரீங்காரம் செய்யும் பொழில்; (சிறை - இறகு); (அளி - வண்டு);



8)
மழுவலன் உடையாய்நின் மலைபெயர் இலங்கைக்கோன்
அழுதிட விரலிட்டாய் அணிமலர்க் குழல்மாது
தழுவிய தடமார்பா பழவினை தீர்த்தருளாய்
செழுமலர் மலிசோலைச் சிவசைலம் அமர்ந்தவனே.



மழு வலன் உடையாய் - மழுப்படையை வலக்கையில் உடையவனே; (வலன் - வலம் - வலப்பக்கம்);
நின் மலை பெயர் இலங்கைக்கோன் அழுதிட விரல் இட்டாய் - உன் கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அழும்படி அம்மலையின்மேல் விரலை ஊன்றியவனே;
அணிமலர்க் குழல்மாது தழுவிய தடமார்பா - அழகிய மலர்களைக் கூந்தலில் அணிந்த உமையம்மை தழுவிய, அகன்ற மார்பை உடையவனே; (தடம் - பெருமை; அகலம்); (இராவணன் கயிலைமலையை அசைத்தபோது உமை அஞ்சி ஈசனைத் தழுவியதைச் சுட்டியது);
பழவினை தீர்த்தருளாய் - என் பழைய வினைகளையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;
செழு மலர் மலி சோலைச் சிவசைலம் அமர்ந்தவனே - செழுமையான மலர்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த சிவசைலத்தில் எழுந்தருளிய சிவபெருமானே;



9)
அன்றுல களந்தானும் அணிமலர் மிசையானும்
நின்றிரு வடிவாழ்த்த நீளெரி எனநின்றாய்
உன்றனைப் பணிவேன்றன் உறுவினை ஒழித்தருளாய்
தென்றலில் மணம்வீசும் சிவசைலம் அமர்ந்தவனே.



அன்று உலகு அளந்தானும் அணிமலர் மிசையானும் - முன்பு (மஹாபலியிடம் மூவடி மண் யாசித்து) உலகத்தையே அளந்த திருமாலும், அழகிய தாமரைமலர்மேல் உறையும் பிரமனும்;
நின் திருவடி வாழ்த்த நீள் எரி என நின்றாய் - உன் திருவடியை வணங்கும்படி எல்லையின்றி நீண்ட சோதி என நின்றவனே;
உன்றனைப் பணிவேன்றன் - உன்னைப் பணியும் என்னுடைய;
உறுவினை - மிகுந்த வினைகள்; (உறு - மிக்க); (உறுதல் - இருத்தல்; மிகுதல்; பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.121.10 - "இடை மருதுகை தொழுதெழும் அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே.");



10)
மெய்ம்மையை அறியாத மிண்டர்கள் விளம்பரஞ்செய்
பொய்ம்மைகள் பொருளல்ல புரிசடைப் பெருமானே
எம்மிறை என்றுகழல் ஏத்துவார்க் கருள்செல்வன்
செம்மலர் திகழ்சோலைச் சிவசைலம் அமர்ந்தவனே.



மெய்ம்மை - உண்மை;
மிண்டர்கள் - கல் நெஞ்சர்கள்; அறிவிலிகள்;
விளம்பரஞ்செய் பொய்ம்மைகள் பொருள் அல்ல - விளம்பரம் செய்யும் பொய்கள் பொருளற்றவை ; (பொருள் - தத்துவம்; மதிக்கப்படுவது);
புரிசடைப் பெருமானே எம்மிறை என்று கழல் ஏத்துவார்க்கு அருள் செல்வன் - "முறுக்குண்ட சடையை உடைய பெருமானே எம் இறைவன்" என்று கழல் அணிந்த திருவடியைத் துதிக்கும் பக்தர்களுக்கு வரங்களை அருளும் செல்வன்; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்); ("எம்மிறை" என்பதை அண்மைவிளியாகவும் கொண்டும் பொருள்கொள்ளல் ஆம்); (செல்வன் - எல்லாத் திருவும் உடையவன்) ; (அப்பர் தேவாரம் - 6.87.1 - "வானவன்காண் ... சென்றடையாச் செல்வன் றான்காண் சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே"):
செம்மலர் - சிவந்த மலர்; அழகிய மலர்;



11)
முன்னடு முடிவானாய் மூளெரி வடிவானாய்
உன்னடி போற்றிடுவார் ஊழ்வினை பாற்றிடுவாய்
சென்னியில் நதியானே சிவசைலப் பதியானே
பன்னகம் அணிவோனே பதமலர் பணிவேனே.



முன் நடு முடிவு ஆனாய் - ஆதியும் இடையும் அந்தமும் ஆனவனே; (திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.8 - "முந்திய முதல்நடு இறுதியு மானாய்");
மூள் எரி வடிவு ஆனாய் - மூளும் சோதி வடிவினனே;
உன் அடி போற்றிடுவார் ஊழ்வினை பாற்றிடுவாய் - உன் திருவடிகளைப் புகழும் பக்தர்களுடைய பழவினைகளைத் தீர்ப்பவனே; (ஊழ்வினை - பழவினை); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.76.1 - "பொருவ னார்புரி நூலர் ... வாஞ்சியத் துறையும் ஒருவனார் அடி யாரை ஊழ்வினை நலியஒட் டாரே");
சென்னியில் நதியானே சிவசைலப் பதியானே - கங்காதரனே, சிவசைலத் தலத்தில் எழுந்தருளியிருப்பவனே.
பன்னகம் அணிவோனே பதமலர் பணிவேனே - பாம்பை அணிந்தவனே, உன் பாதமலரை வணங்குவேன். (பன்னகம் - பாம்பு );
குறிப்பு : இப்பாடலில் அடிதோறும் 2-ஆம் 4-ஆம் சீர்களிடையே எதுகை/இயைபுத்தொடை அமைந்துள்ளது.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) சிவசைலம் : பாண்டிய நாட்டுத் தலம். திருநெல்வேலி - தென்காசி இடையே ஆழ்வார்குறிச்சி அருகுள்ளது. தேவாரத்தில் 6.71.8-இல் வரும் அத்தீச்சுரம் என்ற தலம்.
இத்தல விவரங்களை இங்கே காணலாம்: http://www.sailapathiparamakalyani.com/about-tamil.html
சிவசைலநாதர் கோயில் - தினமலர தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=1867
----------- --------------