Showing posts with label சந்தம். Show all posts
Showing posts with label சந்தம். Show all posts

Thursday, November 9, 2023

07.17 - கொள்ளிக்காடு - செஞ்சொ லார்தமிழ்

07.17 - கொள்ளிக்காடு (திருக்கொள்ளிக்காடு)

2015-12-29

கொள்ளிக்காடு

---------------------------------

(எழுசீர்ச் சந்த விருத்தம் - தான தானன தான தானன தான தானன தானனா);

(சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானினேர்விழி மாதராய்");

(சுந்தரர் தேவாரம் - 7.36.1 - "காருலாவிய நஞ்சை யுண்டிருள்");


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


1)

செஞ்சொ லார்தமிழ் மாலை யாலுன செம்பொ னார்கழல் ஏத்தினேன்

அஞ்சி னோடொரு நான்கு கோள்களும் ஆசி லாநல(ம்) நல்குமே

பஞ்சின் மெல்லடி மாது பங்கமர் பண்ப னேஎரி போல்திகழ்

குஞ்சி மேல்நதி கூவி ளம்புனை கொள்ளிக் காடுறை கூத்தனே.


செஞ்சொல் ஆர் தமிழ் மாலையால் உன செம்பொன் ஆர் கழல் ஏத்தினேன் - சிறந்த சொற்கள் பொருந்திய தமிழ்ப் பாமாலைகளால் (தேவாரம், திருவாசகம் முதலியன) உன்னுடைய செம்பொன் போன்ற திருவடிகளைத் துதித்தேன்; (இலக்கணக் குறிப்பு - உன - உன்+- உன்னுடைய; "" ஆறாம் வேற்றுமை உருபு);

அஞ்சினோடு ஒரு நான்கு கோள்களும் ஆசு இலா நலம் நல்குமே - நவக்கிரகங்களும் குற்றமற்ற நன்மையே செய்யும்; (சம்பந்தர் தேவாரம் - கோளறு பதிகம் - 2.85.1 - "வேயுறு தோளி பங்கன் ... ஆசறு நல்ல நல்ல ...");

பஞ்சின் மெல்லடி மாது பங்கு அமர் பண்பனே - பஞ்சினும் மென்மையான பாதங்களை உடைய உமையை ஒரு பங்காக விரும்பிய பண்பு உடையவனே; (* பஞ்சின் மெல்லடியம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்);

எரி போல் திகழ் குஞ்சி மேல் நதி கூவிளம் புனை - தீப்போன்ற செஞ்சடை மீது கங்கையையும் வில்வத்தையும் அணிந்த; (குஞ்சி - தலை; ஆண்களின் தலைமயிர்); (கூவிளம் - வில்வம்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.25.4 - "தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித்"); (சுந்தரர் தேவாரம் - 7.94.1 - "அழல்நீர் ஒழுகி யனைய சடையும்");

கொள்ளிக்காடு உறை கூத்தனே - திருக்கொள்ளிக்காடு என்ற தலத்தில் உறைகின்ற கூத்தப்பெருமானே; (கூத்தன் - திருநடம் செய்பவன்);


2)

நீல மாமணி கண்ட னேஉனை நித்த லுந்தொழு தேத்தினேன்

சூல னேமலை போன்ற வல்வினை தூள தாகிட நல்கிடாய்

ஏல வார்குழ லாளை ஓர்புடை ஏற்ற ஏறமர் ஏந்தலே

கோல வெண்பிறை சூடி னாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


நீல மாமணி கண்டனே, உனை நித்தலும் தொழுது ஏத்தினேன் - அழகிய நீலமணியைக் கண்டத்தில் உடையவனே, உன்னை நாள்தோறும் போற்றி வணங்கினேன்;

சூலனே, மலை போன்ற வல்வினை தூளது ஆகிட நல்கிடாய் - சூலபாணியே, என்னுடைய மலைபோன்ற வலிய வினைகள் தூளாகும்படி அருள்புரியாய்;

ஏல வார் குழலாளை ஓர் புடை ஏற்ற, ஏறு அமர் ஏந்தலே - நீண்ட வாசக்கூந்தல் உடைய உமையைத் திருமேனியில் ஒரு பக்கம் ஏற்றவனே, இடபத்தை வாகனமாக விரும்பியவனே;

கோல வெண்பிறை சூடினாய் - அழகிய வெண்பிறைச்சந்திரனைச் சூடியவனே;

அணி கொள்ளிக்காடு உறை கூத்தனே - அழகிய திருக்கொள்ளிக்காட்டில் உறைகின்ற கூத்தப்பெருமானே;


3)

வம்பு நாண்மலர் தூவி நின்னடி வாழ்த்தி னேன்இடர் மாய்த்திடாய்

அம்பை ஏவிய மன்ம தன்றனை ஆகம் அற்றவன் ஆக்கினாய்

செம்பொ னேர்சடை மீது வெண்மதி சீற ராவொடு சேர்த்தினாய்

கொம்ப னாளொரு கூற னேஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


வம்பு நாண்மலர் தூவி நின் அடி வாழ்த்தினேன் இடர் மாய்த்திடாய் - வாசம் மிக்க புதுமலர்களைத் தூவி உன் திருவடியை வாழ்த்திய என் இடர்களைத் தீர்த்து அருள்வாயாக; (வம்பு - வாசனை); (நாண்மலர் - நாள் மலர் - அன்று பூத்த பூ);

அம்பை ஏவிய மன்மதன்தனை ஆகம் அற்றவன் ஆக்கினாய் - மலர்க்கணை ஏவிய காமனை உருவம் அற்றவன் ஆகுமாறு செய்தவனே; (அப்படி நெற்றிக்கண்ணால் நோக்கியவனே);

செம்பொன் நேர் சடை மீது வெண்மதி சீறு அராவொடு சேர்த்தினாய் - செம்பொன் போல் திகழும் சடைமேல் வெண்-திங்களைச் சீறுகின்ற பாம்போடு சேர்த்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.78.5 - "திங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்");

கொம்பு அனாள் ஒரு கூறனே - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக உடையவனே;

அணி கொள்ளிக் காடுறை கூத்தனே - அழகிய திருக்கொள்ளிக்காட்டில் உறைகின்ற கூத்தப்பெருமானே;


4)

பொடிய ணிந்தடி போற்றி னேன்வினை போக்கி இன்பம ளித்திடாய்

கொடிய கூற்றுதை கால னேஉமை கூற னேஒரு கையினில்

வடியி லங்கிய சூல னேமழு வாள னேவலம் ஆர்தரு

கொடியின் மேல்விடை காட்டி னாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


பொடி அணிந்து அடி போற்றினேன் வினை போக்கி இன்பம் அளித்திடாய் - திருநீற்றைப் பூசி நான் உன் திருவடியை வணங்கினேன்; என் வினைகளைத் தீர்த்து இன்பம் அருள்வாயாக;

கொடிய கூற்று உதை காலனே - கொடிய நமனை உதைத்தவனே;

உமை கூறனே - உமையை ஒரு கூறாக உடையவனே;

ஒரு கையினில் வடி இலங்கிய சூலனே மழுவாளனே - ஒரு கையில் கூர்மை மிக்க சூலத்தை ஏந்தியவனே; மழுவாள் உடையவனே; (வடி - கூர்மை);

வலம் ஆர்தரு கொடியின் மேல் விடை காட்டினாய் - வெற்றி மிகுந்த கொடியின் மீது இடபச்சின்னம் உடையவனே; (வலம் - வெற்றி); (ஆர்தல் - மிகுதல்); (தருதல் - ஒரு துணைவினை);


5)

விமல னேஅடி வாழ்த்தி னேன்வினை வீட்டி இன்பம ளித்திடாய்

கமல மென்றொரு கண்ணை இட்டரி கைதொ ழப்படை நல்கினாய்

உமைய வட்கொரு கூறு கந்தளி உம்ப னேஉல குய்ந்திடக்

குமைவி டந்தரி கண்ட னேஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


விமலனே, அடி வாழ்த்தினேன் வினை வீட்டி இன்பம் அளித்திடாய் - தூயவனே, உன் திருவடியை வணங்கினேன்; என் வினைகளைத் தீர்த்து இன்பம் அருள்வாயாக;

கமலம் என்று ஒரு கண்ணை இட்டு அரி கைதொழப் படை நல்கினாய் - (ஆயிரம் தாமரைப்பூக்களில் ஒரு பூக் குறையவும்) தன் மலர்க்கண்ணை இடந்து இட்டுத் திருமால் அர்ச்சிக்கவும், மகிழ்ந்து அவனுக்குச் சக்கராயுதத்தைத் தந்தவனே; (திருவீழிமிழலைத் தலவரலாறு காண்க); (படை - ஆயுதம்);

உமையவட்கு ஒரு கூறு உகந்து அளி உம்பனே - உமைக்கு ஒரு பங்கு விரும்பி அளித்த தேவனே; (உம்பன் - தேவன்);

உலகு உய்ந்திடக் குமை விடம் தரி கண்டனே - உலகுகள் உய்வதற்காகக் கண்டத்தில் கொல்லும் விடத்தைத் தரித்தவனே;


6)

பொங்கும் அன்பொடு போற்றி னேன்வினை போக்கி இன்பம ளித்திடாய்

வெங்க ணேறமர் வேந்த னேபுரம் வேவ மேருவி லேந்தினாய்

அங்கி வாழ்த்திய அண்ண லேநதி ஆர்ந்த வேணிய தன்மிசைக்

கொங்கி லங்கிய கொன்றை யாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


வெங்கண் ஏறு அமர் வேந்தனே - (கொடிய) சினம் மிக்க இடபத்தை ஊர்தியாக விரும்பிய அரசனே;

(சம்பந்தர் தேவாரம் - 2.23.5 - "வெங்கண் விடையாய் எம் வெண்நாவலுளாய்"; வெம்கண் - கண்ணில் விளங்கும் சினக்குறிப்பை உணர்த்துவது);

புரம் வேவ மேரு வில் ஏந்தினாய் - முப்புரங்களும் வெந்து அழிய மேருமலையை வில்லாக ஏந்தியவனே;

அங்கி வாழ்த்திய அண்ணலே - அக்கினி தேவன் வழிபட்ட ஈசன்; (அங்கி - அக்னி); (* அக்கினிதேவன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதைத் தலவரலாற்றிற் காண்க);

நதி ஆர்ந்த வேணி அதன்மிசைக் கொங்கு இலங்கிய கொன்றையாய் - நதி பொருந்திய (கங்கையை உண்ட) சடையின்மேல் வாசம் மிக்க கொன்றையை அணிந்தவனே; (ஆர்தல் - பொருந்துதல்; உண்ணுதல்; தங்குதல்); (மிசை - மீது); (கொங்கு - வாசனை; தேன்);


7)

வல்ல வாறுனை வாழ்த்தி னேன்எனை வாட்டு வல்வினை மாய்த்திடாய்

நல்ல நீறணி மார்பில் ஓர்விட நாக மும்புனை நாதனே

வெல்லு மாபடை பார்த்த னுக்கருள் வேட னேகரி காடனே

கொல்லை ஏறமர் கொற்ற வாஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


வல்லவாறு உனை வாழ்த்தினேன் எனை வாட்டு வல்வினை மாய்த்திடாய் - இயன்ற அளவில் உன்னைப் போற்றினேன்; என்னை வாட்டுகின்ற வலிய வினைகளைத் தீர்த்து அருள்வாயாக; (வல்லவாறு - இயன்றவாறு); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.70.7 - "கொண்டீச்சுரவனை வல்லவாறு தொழ வினை மாயுமே");

நல்ல நீறு அணி மார்பில் ஓர் விடநாகமும் புனை நாதனே - சிறந்த திருநீறு பூசிய மார்பில் மாலையாக ஒரு விஷப்பாம்பையும் அணிந்தவனே;

வெல்லு மா படை பார்த்தனுக்கு அருள் வேடனே - வெல்லும் சிறந்த படையான பாசுபதாஸ்திரத்தை அருச்சுனனுக்கு அருளிய வேடனே;

கரிகாடனே - சுடுகாட்டில் இருப்பவனே; (சுடலையில் திருநடம் செய்பவன்);

கொல்லை ஏறு அமர் கொற்றவா - முல்லை நிலத்திற்கு உரிய விடையை ஊர்தியாக விரும்பிய அரசனே; (கொல்லை - முல்லைநிலம்); (கொற்றவன் - அரசன்);


8)

பாவி னாலடி வாழ்த்தி னேன்வினை பாற வேஅருள் நல்கிடாய்

மாவி லங்கலை வீச வந்தவன் வாய்கள் பத்தழ ஊன்றினாய்

தேவி பங்கமர் செல்வ னேஒரு சேவ தேறிய சேவகா

கூவி ளந்திகழ் குஞ்சி யாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


பாவினால் அடி வாழ்த்தினேன் வினை பாறவே அருள் நல்கிடாய் - செந்தமிழ்ப் பாமாலைகளால் உன் திருவடியைப் போற்றினேன்; என் வினைகள் அழிய அருள்புரிவாயாக; (பாறுதல் - அழிதல்);

மா விலங்கலை வீச வந்தவன் வாய்கள் பத்து அழ ஊன்றினாய் - பெரிய மலையான கயிலையைப் பெயர்த்து எறிய வந்த இராவணனின் பத்து வாய்களும் அழும்படி (ஒரு விரலை மலைமேல்) ஊன்றியவனே; (விலங்கல் - மலை); (வீசுதல் - எறிதல்);

தேவி பங்கு அமர் செல்வனே - உமையை ஒரு பங்காக விரும்பியவனே;

ஒரு சேவது ஏறிய சேவகா - ஓர் இடபத்தின்மேல் ஏறிய வீரனே; (சே - இடபம்); (சேவகன் - வீரன்);

கூவிளம் திகழ் குஞ்சியாய் - உச்சிமேல் வில்வம் அணிந்தவனே; (கூவிளம் - வில்வம்); (குஞ்சி - தலை);


9)

மாண டிப்புகழ் பாடி னேன்நல(ம்) மல்க வேஅருள் நல்கிடாய்

ஆண வத்தொடு நேடு மாலயன் அஞ்சி ஏத்திட மாவொளித்

தூண தாகிய மூர்த்தி யேதிரி சூல னேபரி சுத்தனே

கோண லார்மதி சூடி னாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


மாணடி - மாண் அடி - மாட்சிமை மிக்க திருவடி; (மாண் - மாட்சிமை);

மல்குதல் - மிகுதல்; நிறைதல்;

நேடு மால் அயன் - தேடிய திருமாலும் பிரமனும்; (நேடுதல் - தேடுதல்);

மா ஒளித்தூண் அது ஆகிய மூர்த்தியே - எல்லையில்லாத சோதி ஆகிய பெருமானே;

கோணல் ஆர் மதி சூடினாய் - வளைந்த பிறைச்சந்திரனைச் சூடியவனே; (கோணல் - வளைவு; கூன்);


10)

நன்று தானறி யாத தெண்ணர்சொல் நம்பி டேல்நலம் வேண்டினீர்

நின்று மாமலர் தூவி வாழ்த்திடு(ம்) நேய ருக்கிடர் நீக்குவான்

மன்றில் மாநடம் ஆடு மன்னவன் வன்னி கூவிள(ம்) மாசுணம்

கொன்றை சூடிய சென்னி யான்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


நன்றுதான் அறியாத தெண்ணர் சொல் நம்பிடேல், நலம் வேண்டினீர் - நன்மை பெற விரும்பும் நீங்கள், நல்லது எது என்று அறியாத அறிவிலிகள் சொல்லை நம்பவேண்டா; (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி); (தெண்ணர் - அறிவிலிகள்); (இலக்கணக் குறிப்பு: "நலம் வேண்டினீர் நம்பிடேல்" - என்றது ஒருமை பன்மை மயக்கம்);

நலம் வேண்டினீர் நின்று மாமலர் தூவி வாழ்த்திடும் நேயருக்கு இடர் நீக்குவான் - நன்மை பெற விரும்பும் நீங்கள், ஈசன் திருமுன் நின்று சிறந்த பூக்களைத் தூவி வாழ்த்துங்கள்; அப்படி வழிபடும் அன்பர்களுக்கு இடர்களை நீக்கி ஈசன் அருள்வான்; ("நலம் வேண்டினீர்" என்ற சொற்றொடரை இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம் - இடைநிலைத்தீவகம்);

மன்றில் மா நடம் ஆடு மன்னவன் - தில்லை மன்றில் திருநடம் ஆடுகின்ற நடராஜன்;

வன்னி கூவிளம் மாசுணம் கொன்றை சூடிய சென்னியான் - வன்னி, வில்வம், பாம்பு, கொன்றை இவற்றையெல்லாம் முடிமேல் சூடியவன்; (கூவிளம் - வில்வம்); (மாசுணம் - பாம்பு);


11)

பரவி உன்னடி போற்றி னேன்வினை பாற்றி டாய்உமை பங்கனே

சிரம துண்கலம் ஆக ஊர்ப்பலி தேர்ந்து ழன்றிடு செல்வனே

அரவை மார்பினில் ஆர மாஅணி ஐய னேவட வாலமர்

குரவ னேமறை நாவ னேஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


பரவி உன் அடி போற்றினேன் வினை பாற்றிடாய் - உன் திருவடியைப் பாடிப் பணிந்தேன்; என் வினையை அழித்தருள்வாயாக; (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்; பாடுதல்); (பாற்றுதல் - அழித்தல்);

உமை பங்கனே - உமையொரு பாகம் உடையவனே;

சிரம் அது உண்கலம் ஆக ஊர்ப்பலி தேர்ந்து உழன்றிடு செல்வனே - (பிரமனது) மண்டையோட்டில் ஊரார் இடும் பிச்சையை ஏற்று உழலும் செல்வனே;

அரவை மார்பினில் ஆரமா அணி ஐயனே - பாம்பை மார்பில் மாலையாக அணியும் தலைவனே; (ஆரமா - ஆரமாக - கடைக்குறை விகாரம்);

வடவால் அமர் குரவனே - கல்லால மரத்தின்கீழ் இருந்த குருவே; (வடவால் - கல்லால மரம்);(குரவன் - குரு); (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று");

மறை நாவனே - வேதம் ஓதியவனே;


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு:

எழுசீர்ச் சந்த விருத்தம் - "தான தானன தான தானன தான தானன தானனா" என்ற சந்தம்;

முதற்சீர் "தனன" என்றும் சில பாடல்களில் வரலாம்;

சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானி னேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள்"


2) கொள்ளிக்காடு - இத்தலம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இடையே உள்ளது.

பஞ்சின் மெல்லடியம்மை சமேத அக்னீஸ்வரர் கோயில்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Saturday, November 27, 2021

05.26 – புகலூர் (திருப்புகலூர்)

05.26 – புகலூர் (திருப்புகலூர்)

2015-03-13

புகலூர் (திருப்புகலூர்)

----------------------

(எழுசீர்ச் சந்தவிருத்தம் - "தனதான தான தனதான தான தனதான தான தனனா" என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன்")


1)

வனமேந்து கின்ற முலைமாதை வாமம் மகிழ்கின்ற எந்தை புகழே

தினமோதும் அன்பர் இடர்தீர்த்து மல்கு திருவாக நல்கும் ஒருவன்

கனலேந்தி ஆடி கடல்நஞ்சம் உண்டு கறைகாட்டு கின்ற மிடறன்

புனலார்ந்த வாவி புடைசூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.


வனம் ஏந்துகின்ற முலை மாதை வாமம் மகிழ்கின்ற எந்தை புகழே - அழகு மிக்க முலையையுடைய உமையை இடப்பக்கம் கூறாக விரும்பிய எம் தந்தையின் புகழையே; (வனம் - அழகு); (ஏந்துதல் - சிறத்தல்; மிகுதல்); (வாமம் - இடப்பக்கம்);

தினம் ஓதும் அன்பர் இடர் தீர்த்து மல்கு திரு ஆக நல்கும் ஒருவன் - தினமும் ஓதுகின்ற பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து மிகுந்த திருவை அருளும் ஒப்பற்றவன்;

கனல் ஏந்தி ஆடி - தீயை ஏந்தி ஆடுபவன்; (ஆடி - ஆடுபவன்);

கடல்நஞ்சம் உண்டு கறை காட்டுகின்ற மிடறன் - கடலில் எழுந்த விடத்தை உண்டு கறையைக் கண்டத்தில் உடையவன்;

புனல் ஆர்ந்த வாவி புடைசூழ்ந்து இலங்கு புகலூரில் நின்ற பரனே - நீர் நிறைந்த தடாகம் சூழ்ந்திருக்கும் திருப்புகலூரி உறைகின்ற பரமன்;


2)

வடியாரும் மூன்று நுனைவேலும் மானும் மழுவாளும் ஏந்தும் இறைவன்

அடியேநி னைந்து துதிபாடு கின்ற அடியார்க்கு நல்கும் அருளன்

துடியேர்ம ருங்குல் உமைபங்கன் நீறு துதைகின்ற மார்பில் அரவன்

பொடியாரும் வண்டு புகழ்பாடு கின்ற புகலூரில் நின்ற பரனே.


வடியாரும் மூன்று நுனைவேலும் - கூரிய மூன்று நுனிகளையுடைய சூலத்தையும்; (வடி - கூர்மை); (நுனை - முனை; நுனி);

துடி ஏர் மருங்குல் - உடுக்கை போன்ற இடை - சிற்றிடை;

துதைதல் - படிதல்; மிகுதல்;

அரவன் - பாம்பை அணிந்தவன்;

பொடி ஆரும் வண்டு புகழ் பாடுகின்ற புகலூரில் நின்ற பரனே - பூக்களில் மதுவுண்டு மகரந்தப் பொடியை உடல்மேல் அணிந்த வண்டுகள் துதி பாடுகின்ற புகலூரில் உறைகின்ற பரமன்; (பொடி - மகரந்தம்); (திருநீறு பூசித் தொண்டர்கள் ஈசன் புகழைப் பாடுவது போல் பொடி அணிந்த வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற புகலூர்);


3)

பாதார விந்த இணைபோற்று பத்தர் பவநீக்கி இன்பம் அருள்வான்

மாதாரு மேனி மணியேறு கண்டம் மதியேறு சென்னி உடையான்

ஆதார மாகி உலகங்க ளாக்கி அவைநீக்கி ஆடல் புரிவான்

போதாரும் ஏர்கொள் பொழில்சூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.


பாதாரவிந்த இணை போற்று பத்தர் பவம் நீக்கி இன்பம் அருள்வான் - இரு திருவடித்தாமரைகளைப் போற்றும் பக்தர்களது பிறவிப்பிணியை நீக்கி இன்பம் அருள்பவன்; (பவம்- பிறவித்தொடர்);

மாது ஆரும் மேனி, மணி ஏறு கண்டம், மதி ஏறு சென்னி உடையான் - அர்த்தநாரீஸ்வரன், நீலகண்டன், சந்திரசேகரன்;

ஆதாரம் ஆகி உலகங்கள் ஆக்கி அவை நீக்கி ஆடல் புரிவான் - ஆதாரம் ஆகி, உலகங்களையெல்லாம் படைத்துப், பின் அவற்றை ஒடுக்கித் திருவிளையாடல் செய்பவன்; (ஆதாரம் - பற்றுக்கோடு);

போது ஆரும் ஏர்கொள் பொழில் சூழ்ந்து இலங்கு புகலூரில் நின்ற பரனே- பூக்கள் நிறைந்த அழகிய சோலை சூழ்ந்து விளங்குகின்ற புகலூரில் உறைகின்ற பரமன்; (போது - பூ); (ஏர் - அழகு);


4)

சேவேறு கின்ற சிவனைப்ப ணிந்து திருவாக்கும் நால்வர் தமிழ்தான்

நாவேறு கின்ற அடியார்கள் என்றும் நலவாழ்வு வாழ அருள்வான்

வானாறு கொன்றை மதமத்தம் வன்னி மதிசூடு கின்ற முடியன்

பூநாறு கின்ற பொழில்சூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.


சே ஏறுகின்ற - இடபத்தை ஊர்தியாக உடைய;

திரு ஆக்கும் நால்வர் தமிழ்தான் நா ஏறுகின்ற அடியார்கள் - நன்மை தரும் தேவாரம், திருவாசகம் பாடுகின்ற பக்தர்கள்;

என்றும் நலவாழ்வு வாழ அருள்வான் - என்றும் நலம் மிக்க வாழ்வு பெற அருள்பவன்; (நலவாழ்வு - 1. நலம் + வாழ்வு; 2. நல்ல வாழ்வு);

வான் ஆறு, கொன்றை, மதமத்தம், வன்னி, மதி சூடுகின்ற முடியன் - திருமுடிமேல் கங்கை, கொன்றை, ஊமத்தமலர், வன்னி, திங்கள் அணிந்தவன்; (வான் ஆறு - வானதி - கங்கை);

பூ நாறுகின்ற பொழில் - பூக்கள் மணம் வீசுகின்ற சோலை;


5)

கதநாகம் ஆர்த்த அரையாதொ டுத்த கணைகண்டு கண்ணி லெரியால்

மதனாகம் அட்ட மணியேபி றங்கு மதியாயெ னச்சொ லடியார்

எதனாலும் இன்னல் இலராக நல்கும் எழிலார்ந்த கண்டம் உடையான்

புதுவீயில் வண்டு மதுவுண்டு பாடு புகலூரில் நின்ற பரனே.


கத நாகம் ஆர்த்த அரையா - சீறும் பாம்பைக் கட்டிய அரையை உடைய அரசனே; (கதம் - சினம்); (அரையன் - அரசன்); (அரை - இடுப்பு );

தொடுத்த கணை கண்டு கண்ணில் எரியால் மதன் ஆகம் அட்ட மணியே - மன்மதன் மலர்க்கணையைத் தொடுத்தபொழுது நெற்றிக்கண்ணின் நெருப்பால் அவனது உடலை எரித்தவனே, சிறந்த மணி போன்றவனே;

பிறங்கு மதியாய் எனச் சொல் அடியார் - பிரகாசிக்கும் சந்திரனை அணிந்தவனே என்று போற்றும் பக்தர்கள்; (பிறங்குதல் - விளங்குதல்); (அப்பர் தேவாரம் - 4.89.2 - "தேய்ந்திலங்கும் சிறு வெண்மதியாய்");

எதனாலும் இன்னல் இலராக நல்கும் எழில் ஆர்ந்த கண்டம் உடையான் - எவ்விதத் துன்பமும் அற்றவர்கள் ஆகும்படி அருளும், அழகிய நீலகண்டத்தை உடையவன்;

புது வீயில் வண்டு மது உண்டு பாடு - அன்று பூத்த பூவில் வண்டுகள் தேனை உண்டு ரீங்காரம் செய்கின்ற; (வீ - பூ); (சுந்தரர் தேவாரம் - 7.41.1 - "மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள்தன் மணவாளா");

புகலூரில் நின்ற பரனே - திருப்புகலூரில் எழுந்தருளிய பரமன்;


6)

நாவார வாழ்த்தி அடிபோற்றும் அன்பர் நலமாக வாழ அருள்வான்

மேவார்தம் மூன்று புரம்வேவ மேரு விலையேந்தி நக்க பெருமான்

தேவாதி தேவன் மலைமங்கை கூறு திகழ்கின்ற மேனி உடையான்

பூவாச மல்கு பொழில்சூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.


மேவார் - பகைவர்;

மேரு விலை - மேருமலை என்ற வில்லை; (விலை - வில்லை என்பது இடைக்குறையாக வந்தது);

நக்க - சிரித்த;

பூவாசம் மல்கு பொழில் - பூக்களின் மணம் மிகுந்த சோலை;


7)

அவியாது வாழ அமுதத்தை நாடும் இமையோர்க டைந்த கடலில்

குவிநஞ்சு கண்டு தவிநெஞ்சு கொண்டு குழுமிப்ப ராவு மொழிகள்

செவியேற்று நஞ்சை மணிசெய்து காத்த திருநீல கண்டம் உடையான்

புவியோர டைந்து புகழ்பாடு கின்ற புகலூரில் நின்ற பரனே.


அவியாது வாழ அமுதத்தை நாடும் இமையோர் கடைந்த கடலில் - இறவாமல் வாழ அமுதத்தைப் பெற விரும்பிய தேவர்கள், கடைந்த பாற்கடலில்; (அவிதல் - சாதல்);

குவி நஞ்சு கண்டு தவி நெஞ்சு கொண்டு குழுமிப் பராவு மொழிகள் - திரண்ட விடத்தைக் கண்டு தவிக்கும் மனம்கொண்டு ஒன்றுகூடித் துதித்த துதிகளை; (குவிநஞ்சு - குவிந்த நஞ்சு);

செவியேற்று நஞ்சை மணிசெய்து காத்த திருநீலகண்டம் உடையான் - கேட்டருளி, ஆலகால விடத்தை நீலமணி (போல) ஆக்கிக் காத்த திருநீலகண்டன்; (அப்பர் தேவாரம் - 5.97.24 - "மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்");

புவியோர் அடைந்து புகழ் பாடுகின்ற புகலூரில் நின்ற பரனே - உலகத்தினர் வந்து ஈசன் புகழைப் பாடி வழிபடுகின்ற திருப்புகலூரில் எழுந்தருளிய பரமன்;


8)

கரமூன்றி நீடு வரைபேர்த்த மூடன் உரமார்பு யங்க ளுடனே

சிரமூன்று மேழும் இறவூன்றி யாழின் இசைகேட்டி ரங்கு வரதன்

சரமூன்றி ரண்டு தனையேவு காமன் உடல்நீறு செய்த தலைவன்

புரமூன்றை எய்த வரைவில்லி எந்தை புகலூரில் நின்ற பரனே.


பதம் பிரித்து:

கரம் ஊன்றி நீடு-வரை பேர்த்த மூடன் உரம் ஆர் புயங்களுடனே

சிரம் மூன்றும் ஏழும் இற ஊன்றி, யாழின் இசை கேட்டு இரங்கு வரதன்;

சரம் மூன்று இரண்டுதனை ஏவு காமன் உடல் நீறு செய்த தலைவன்;

புரம் மூன்றை எய்த வரைவில்லி, எந்தை, புகலூரில் நின்ற பரனே.


கரம் ஊன்றி நீடு வரை பேர்த்த மூடன் - கைகளால் கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான இராவணனது; (நீடு வரை - நெடிய மலை - இங்கே கயிலைமலை);

உரம் ஆர் புயங்களுடனே சிரம் மூன்றும் ஏழும் இற ஊன்றி - வலிய புஜங்களும் பத்துத்தலைகளும் அழியும்படி திருப்பாத விரலை ஊன்றி;

யாழின் இசை கேட்டு இரங்கு வரதன் - அவன் இசைத்த யாழ் இசையைக் கேட்டு இரங்கி வரம் அருளியவன்; (வரதன் - வரம் அளிப்பவன்);

சரம் மூன்று இரண்டுதனை ஏவு காமன் உடல் நீறு செய்த தலைவன் - ஐந்து பாணங்களைத் தொடுக்கும் மன்மதனது உடலைச் சாம்பலாக்கிய தலைவன்;

புரம் மூன்றை எய்த வரைவில்லி - மேருமலையை வில்லாக ஏந்தி ஒரு கணையை எய்து முப்புரங்களை அழித்தவன்; (வரைவில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்);

எந்தை - எம் தந்தை;

புகலூரில் நின்ற பரனே - திருப்புகலூரில் எழுந்தருளிய பரமன்;


9)

மயல்கொண்டு நேடு மலரானும் மாலும் அறியாத சோதி வடிவன்

இயல்கொண்டும் ஏழின் இசைகொண்டும் ஏத்தும் அடியாரை நாடி வருவான்

கயல்கெண்டை பாயும் வயல்கண்டு நாரை இரைதேர நிற்க அயலே

புயல்வந்து தீண்டு பொழில்சூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.


மயல்கொண்டு நேடு மலரானும் மாலும் அறியாத சோதி வடிவன் - ஆணவத்தால் தேடிய பிரமனாலும் திருமாலாலும் அறிய ஒண்ணாத சோதி உருவினன்; (மயல் - அறியாமை); (கொண்டு - ஆல் என்ற வேற்றுமை உருபு); (மலரான் - பிரமன்);

இயல்கொண்டும் ஏழின் இசைகொண்டும் ஏத்தும் அடியாரை நாடி வருவான் - இயற்றமிழ் இசைத்தமிழ் இவற்றால் வழிபடும் பக்தர்களைத் தேடி வருபவன்; (இயல் - இயற்றமிழ்);

கயல் கெண்டை பாயும் வயல் கண்டு நாரை இரைதேர நிற்க அயலே - கயல், கெண்டை முதலிய மீன்கள் பாயும் வயலைக் கண்டு நாரைகள் இரைதேர்வதற்காக நிற்க, அருகே;

புயல் வந்து தீண்டு பொழில் சூழ்ந்து இலங்கு புகலூரில் நின்ற பரனே - மேகம் வந்து தீண்டுகின்ற உயர்ந்த சோலை வீளங்குகின்ற திருப்புகலூரில் எழுந்தருளிய பரமன்; (புயல் - மேகம்);


10)

கள்ளங்க ரந்த கருநெஞ்சி னோர்கள் கழறும்பு ரட்டை ஒழிமின்

உள்ளங்க ரைந்து தொழுவார்க்கு நம்பன் உலவாத இன்பம் அருள்வான்

வெள்ளங்க ரந்த சடைமீது நாகம் வெறியார்ந்த கொன்றை அணிவான்

புள்ளின்கு லங்கள் ஒலிசோலை சூழ்ந்த புகலூரில் நின்ற பரனே.


கள்ளம் கரந்த கருநெஞ்சினோர்கள் - வஞ்சத்தை உள்ளே மறைத்திருக்கும் கொடிய மனம் உடையவர்கள்; (கருமை - கறுப்பு ; கொடுமை);

கழறுதல் - சொல்லுதல்;

புரட்டு - வஞ்சகப்பேச்சு;

ஒழிமின் - ஒழியுங்கள்; விட்டுநீங்குங்கள்; (ஒழிதல் / ஒழித்தல்);

நம்பன் - விரும்பத்தக்கவன்; விரும்பப்படுபவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று;

உலவாத இன்பம் - அழிவற்ற இன்பம்; (உலத்தல் - குறைதல்; அழிதல்);

வெள்ளம் கரந்த சடைமீது நாகம் வெறி ஆர்ந்த கொன்றை அணிவான் - கங்கையை ஒளித்த சடைமேல் பாம்பு, மணம் மிக்க கொன்றைமலர் இவற்றை அணிந்தவன்; (வெள்ளம் - நீர் - கங்கை); (வெறி - வாசனை);

புள்ளின் குலங்கள் ஒலி சோலை - பறவை இனங்கள் ஒலிக்கின்ற பொழில்;


11)

ஒலிமாலை சூட்டி உளமார வாழ்த்தி உடலால்வ ணங்கும் அடியார்

மெலியாத வண்ணம் வினைமாசை வீட்டி மிகவேவ ழங்கும் ஒருவன்

நலியாத வண்ணம் நளிர்திங்கள் வாழ நதியோடு சென்னி அணிவான்

பொலிகோபு ரத்தை முகில்தீண்டு கின்ற புகலூரில் நின்ற பரனே.


ஒலிமாலை சூட்டி உளமார வாழ்த்தி உடலால் வணங்கும் அடியார் - மனம், மொழி, மெய் மூன்றாலும் வழிபடும் பக்தர்கள்; (ஒலிமாலை - பாமாலை; (கலிக்கோவை)); (சம்பந்தர் தேவாரம் - 2.12.11 - "கலிக்கோவையால் சந்தமே பாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன்");

மெலிதல் - இளைத்தல்; வருந்துதல்;

வீட்டுதல் - அழித்தல்;

நலிதல் - அழிதல்; இளைத்தல்; வருந்துதல்;

நளிர்தல் - குளிர்தல்;

பொலிதல் - சிறத்தல்; பெருகுதல் (To be enlarged; to appear grand);


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள்:

1) யாப்புக்குறிப்பு:

  • எழுசீர்ச் சந்தவிருத்தம் - "தனதான தான தனதான தான தனதான தான தனனா" என்ற சந்தம்.

  • சில பாடல்களில் முதற்சீர் 'தானான' என்றும் வரும்;

2) சம்பந்தர் தேவாரம் - 2.88.1 -

துளிமண்டி உண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன்

ஒளிமண்டி உம்பர் உலகங் கடந்த உமைபங்கன் எங்க ளரனூர்

களிமண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவில்

தெளிமண்டி உண்டு சிறைவண்டு பாடு திருமுல்லை வாயி லிதுவே.

---- --------


Tuesday, October 23, 2018

04.56 - மணஞ்சேரி - கொங்கலர் சூடும்

04.56 - மணஞ்சேரி - கொங்கலர் சூடும்

2014-03-22

மணஞ்சேரி (திருமணஞ்சேரி)

------------------

(சந்தக் கலித்துறை - தானன தான தானன தான தனதான)

(தானன என்ற இடத்தில் தனதன என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நன்றுடையானைத் தீயதிலானை")


1)

கொங்கலர் சூடும் குழலியொர் பங்கன் குளிராரும்

திங்களைச் சென்னித் திகழ்ந்திட வைத்த திருவாளன்

மங்கையர் மைந்தர் வந்தடி போற்றும் மணஞ்சேரிச்

சங்கரன் அன்பர் தங்களுக் கின்பம் தருவானே.


கொங்கு அலர் சூடும் குழலிர் பங்கன் - வாசமலர்களை அணிந்த கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (கொங்கு - வாசனை);

குளிர் ஆரும் திங்களைச் சென்னித் திகழ்ந்திட வைத்த திருவாளன் - குளிர்ந்த சந்திரனைத் தன் தலைமேல் திகழவைத்த செல்வன்;

மங்கையர் மைந்தர் வந்து அடி போற்றும் மணஞ்சேரிச் சங்கரன் - இளம்பெண்களும் அவர்கள் கணவர்களும் வந்து வழிபாடு செய்கின்ற திருமணஞ்சேரியில் உறைகின்ற சங்கரன்; (மைந்தன் - இளைஞன்); (சங்கரன் - சிவன் திருநாமம் - சுகத்தைச் செய்பவன்);

அன்பர் தங்களுக்கு இன்பம் தருவானே - தன் பக்தர்களுக்கு இன்பம் அளிப்பவன் / அளிப்பான்;

(அப்பர் தேவாரம் - 4.32.3 - "ஓதுவார்கள் தங்களுக் கருளும் எங்கள் தத்துவன்");


2)

யாதொரு நேரும் அற்றவன் அங்கை அழலேந்தி

போதொடு வாசப் புகையொடு கண்ணிற் பொழிவோடு

மாதர்க ளோடு மைந்தர்கள் போற்றும் மணஞ்சேரிக்

காதொரு தோடன் கழல்தொழு வார்கள் கவலாரே.


யாதொரு நேரும் அற்றவன் - எவ்வித ஒப்பும் இல்லாதவன்; (நேர் - ஒப்பு);

அங்கை அழல் ஏந்தி - கையில் தீயை ஏந்துபவன்;

போதொடு வாசப்-புகையொடு கண்ணில் பொழிவோடு மாதர்களோடு மைந்தர்கள் போற்றும் - பெண்களும் ஆண்களும் கண்கள் கசியப், பூக்கள் தூபம் இவற்றால் வழிபாடு செய்கின்ற; (போது - பூ); (வாசப்-புகை - தூபம்);

மணஞ்சேரிக் காது ஒரு தோடன் கழல் தொழுவார்கள் கவலாரே - திருமணஞ்சேரியில் உறைகின்றவனும் ஒரு காதில் தோடு அணிந்தவனுமான சிவபெருமானது திருவடியைத் தொழும் பக்தர்களது கவலைகள் தீரும்; (கவலார் - வருத்தம் அடையமாட்டார்);


3)

தேரினில் ஏறித் திரிபுரம் செற்ற சிலைவில்லான்

ஆரியன் அன்பர் கோரிய வெல்லாம் அருளின்ப

வாரியன் நீல மணிதிகழ் கண்டன் மணஞ்சேரி

நாரியொர் பாலன் பேர்சொலக் காலன் நணுகானே.


சிலைவில்லான் - மேருமலையை வில்லாக ஏந்தியவன்; (சிலை - மலை);

ஆரியன் - பெரியோன்; ஆசிரியன்; (திருவாசகம் - சிவபுராணம் - அடி-64 - "பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே");

அன்பர் கோரிய எல்லாம் அருள் இன்ப வாரியன் - பக்தர்கள் வேண்டிய எல்லா வரங்களையும் அருள்கின்ற இன்பக்கடல் ஆனவன்; (கோருதல் - விரும்புதல்; வேண்டிக்கொள்ளுதல்); (வாரி - கடல்); (திருவாசகம் - 8.8.2 - "பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்");

நாரி ஒர் பாலன் - பெண்ணை ஒரு பக்கத்தில் உடையவன்; (அப்பர் தேவாரம் - 5.98.5 - "உமைபாகம் ஓர் பாலராய்"); (அப்பர் தேவாரம் - 4.88.1 - "மலைமகள் தன்னுடைய பாலனை");

நணுகான் - நெருங்கமாட்டான்;


4)

பையர வோடு பான்மதி வைத்துப் பகைதீர்த்துத்

தையலொர் பாகம் தாங்கிய கோனைச் சடையானை

மையணி கண்ணர் மாலைகள் பாடு மணஞ்சேரிச்

செய்யனை நாடும் சிந்தையி னார்க்குத் தெளிவாமே.


பையரவோடு பால்மதி வைத்துப் பகைதீர்த்துத் - படத்தை உடைய நாகப்பாம்போடு பால் போன்ற வெண்திங்களைப் பகையின்றி ஒன்றாக வாழவைத்து;

தையல் ஒர் பாகம் தாங்கிய கோனை - உமையை ஒரு பாகமாக உடைய தலைவனை;

மை அணி கண்ணர் மாலைகள் பாடு - மை தீட்டப்பெற்ற கண்களையுடைய பெண்கள் பாமாலைகள் பாடித் துதிக்கின்ற; (பாடுதல் - துதித்தல்); (மாலை - சொல்மாலை; பாமாலை);

மணஞ்சேரிச் செய்யனை - திருமணஞ்சேரியில் உறைகின்ற செம்மேனிப் பெருமானை;

நாடும் சிந்தையினார்க்குத் தெளிவாமே - விரும்பி வழிபடும் பக்தர்களுக்குத் தெளிவு உண்டாகும் (= அறியாமை தீரும்);


5)

இண்டைகள் கட்டி இணையடி போற்றும் இணையில்மார்க்

கண்டரைக் காத்துக் காலனைச் செற்ற கரிகாடன்

வண்டமிழ் வாயர் மகிழ்வொடு போற்றும் மணஞ்சேரிக்

கொண்டலங் கண்டன் குரைகழல் போற்றக் குறைபோமே.


இண்டை - ஒருவித மாலை;

இணை இல் மார்க்கண்டர் - ஒப்பற்ற மார்க்கண்டேயர்;

காலனைச் செற்ற - இயமனை உதைத்து அழித்த;

கரிகாடன் - சுடுகாட்டில் இருப்பவன்;

வண்டமிழ் வாயர் - வண்தமிழ் வாயர் - தேவாரம் திருவாசகம் முதலியன பாடுபவர்கள்;

கொண்டலங் கண்டன் - மேகம் போல் அழகிய கண்டத்தை உடையவன்; (அம் - அழகு);

குரைகழல் போற்றக் குறை போமே - அப்பெருமானுடைய (ஒலிக்கின்ற கழலை அணிந்த) திருவடியை வழிபட்டால் குறைகள் தீரும்;


6)

சிர(ம்)மலி மாலை திகழ்முடி மீது திரையாறு

விரவிடு கின்ற வேணியி னானை விடையானை

மர(ம்)மலி சோலை வயல்புடை சூழ்ந்த மணஞ்சேரி

வரதனை வாழ்த்த மங்கல(ம்) மல்கு(ம்) மகிழ்வாமே.


சிரம் மலி மாலை திகழ் முடிமீது திரை-ஆறு விரவிடுகின்ற வேணியினானை - தலைமாலை அணிந்த திருமுடியின்மேல் அலைமோதும் கங்கை பொருந்துகின்ற சடையானை;

விடையானை - இடப-வாகனனை;

மரம் மலி சோலை வயல் புடை சூழ்ந்த மணஞ்சேரி வரதனை - மரங்கள் நிறைந்த சோலையும் வயலும் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உறைகின்ற வரதனை; (வரதன் - வரம் அருள்பவன்)

வாழ்த்த மங்கலம் மல்கும் மகிழ்வு ஆமே - போற்றி வழிபட்டால், திரு மிகும், இன்புற்று வாழலாம்;


7)

தளைகளி லாத தன்மையன் எந்தை தனிநாதன்

வளையொரு கையன் வல்விடம் உண்ட மணிகண்டன்

வள(ம்)மலி கின்ற வயல்புடை சூழ்ந்த மணஞ்சேரி

இளமதி சூடி இணையடி ஏத்த இடர்போமே.


தளைகள் இலாத தன்மையன் - மும்மலக்கட்டு அற்றவன்; (சுதந்திரன்);

எந்தை தனி நாதன் - எம் தந்தை, ஒப்பற்ற தலைவன்; (தனி - ஒப்பில்லாத);

வளைரு கையன் - ஒரு கையில் வளையல் அணிந்தவன் - உமைபங்கன்;

வல்விடம் உண்ட மணிகண்டன் - கொடிய நஞ்சை உண்ட நீலகண்டன்;

வளம் மலிகின்ற வயல் புடை சூழ்ந்த மணஞ்சேரி - வளம் மிக்க வயல் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உறைகின்ற;

இளமதி சூடி இணையடி ஏத்த இடர் போமே - இளம்பிறையை அணிந்த பெருமானது இரு-திருவடிகளைத் துதித்தால் துன்பம் நீங்கும்;


8)

அருவரை பேர்த்தான் ஐயிரு வாய்கள் அழுதேத்தத்

திருவிரல் ஒன்றைச் சிறிதள வூன்று சிவனெம்மான்

வருமடி யார்கள் மனமகிழ் வெய்து மணஞ்சேரி

எருதமர் ஈசன் இணையடி ஏத்த இடர்போமே.


அரு-வரை பேர்த்தான் ஐயிரு-வாய்கள் அழுது ஏத்தத் - கயிலைமலையை பெயர்த்தவனான இராவணனது பத்துவாய்களும் அழுது துதிபாடும்படி; (வரை - மலை);

திருவிரல் ஒன்றைச் சிறிது அவு ஊன்று சிவன் எம்மான் - திருப்பாத விரல் ஒன்றைச் சிறிதளவே ஊன்றிய சிவன், எம் தலைவன்;

வரும் அடியார்கள் மனமகிழ்வு எய்து மணஞ்சேரி - வந்து வழிபடும் பக்தர்கள் மனத்தில் இன்பம் அடைகின்ற திருமணஞ்சேரியில் உறைகின்ற;

எருது அமர் ஈசன் இணையடி ஏத்த இடர் போமே - இடபத்தை ஊர்தியாக விரும்பும் ஈசனது இரு-திருவடிகளைப் போற்றினால் துன்பம் தீரும்;


9)

வேணுவை ஏந்தி மேய்த்தவன் வேதன் மிகநேடி

நாணுற ஓங்கு நம்பனை நட்டம் நவில்வானை

வாணுதல் மாதர் மலர்கொடு போற்று மணஞ்சேரித்

தாணுவை நெஞ்சில் தரித்தவர்க் கில்லை தடுமாற்றே.


வேணுவை ஏந்தி மேய்த்தவன் - வேணுகோபாலன் - திருமால்; (வேணு - புல்லாங்குழல்);

வேதன் - பிரமன்;

மிக நேடி நாணுற ஓங்கு நம்பனை - அவ்விருவரும் அடிமுடி மிகவும் தேடி நாணும்படி எல்லையின்றி ஓங்கிய சிவனை; (நேடுதல் - தேடுதல்); (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

நட்டம் நவில்வானை - திருநடம் செய்பவனை;

வாணுதல் மாதர் மலர்கொடு போற்று மணஞ்சேரித் தாணுவை - ஒளியுடைய நெற்றியுடைய பெண்கள் பூவால் வழிபாடு செய்யும் திருமணஞ்சேரித் தாணுவை; (வாணுதல் - வாள் நுதல் - ஒளிபொருந்திய நெற்றி); (தாணு - ஸ்தாணு - சிவன் திருநாமங்களுள் ஒன்று);

தடுமாற்று - தடுமாற்றம் - மனக்கலக்கம்;


10)

வீண்மொழி பேசும் மிண்டர்கள் என்றும் விரவாதான்

நாண்மலர்ப் பாதன் நங்கையொர் பங்கன் நலம்நாடி

வாண்முக மாதர் வந்தடி போற்று மணஞ்சேரி

நீண்மதி சூடி நினைபவர் நெஞ்சில் நிறைவானே.


மிண்டர் - கல்நெஞ்சர்;

விரவாதான் - விரவாதவன்; சேராதவன்; (விரவுதல் - அடைதல்; கலத்தல்); (அப்பர் தேவாரம் - 6.46.8 - "மெய்யானைப் பொய்யரொடு விரவாதானை");

நாண்மலர்ப் பாதன் - புதிதாகப் பூத்த மலர் போன்ற பாதத்தை உடையவன்;

நங்கைர் பங்கன் - உமைபங்கன்;

வாண்முக மாதர் - வாள்-முக-மாதர் - ஒளி பொருந்திய முகத்தை உடைய பெண்கள்;

நீண்மதி சூடி - நீள்மதி சூடி - திங்களை அணிந்தவன்;


11)

வெண்டிரை ஆரும் வேலையு மிழ்ந்த விடமுண்ட

கண்டனை நெற்றிக் கண்ணனை வீரக் கழலானை

வண்டறை கின்ற வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரி

அண்டனை அண்டும் அன்பரை அல்லல் அடையாவே.


வெண் திரை ஆரும் வேலை உமிழ்ந்த விடம் உண்ட கண்டனை - வெண்ணிற அலைகள் பொருந்திய கடலான பாற்கடல் உமிழ்ந்த ஆலகால விடத்தை உண்ட நீலகண்டனை;

வீரக் கழலானை - வீரக்கழலை அணிந்த திருப்பாதனை;

வண்டு அறைகின்ற வண்-பொழில் சூழ்ந்த மணஞ்சேரி - வண்டுகள் ஒலிக்கின்ற வளம் மிக்க சோலைகளால் சூழப்பெற்ற திருமணஞ்சேரியில் உறைகின்ற;

அண்டனை அண்டும் அன்பரை அல்லல் அடையாவே - சிவபெருமானைச் சரண்புகுந்த பக்தர்களைத் துன்பங்கள் நெருங்கா; (அண்டன் - சிவன்); (அண்டுதல் - சரண்புகுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------- --------------