Showing posts with label மயிலாப்பூர். Show all posts
Showing posts with label மயிலாப்பூர். Show all posts

Monday, September 1, 2025

P.448 - மயிலாப்பூர் - புயல்வணன் வாயு

2018-09-04

P.448 - மயிலாப்பூர்

-------------------------------

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி");

(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்");


 * முற்குறிப்பு: மகிழிடமாமயிலாப்பே = 1. மகிழ் இடம் மா மயிலாப்பே; 2. மகிழ் இடம் ஆம் மயிலாப்பே; (மா - அழகு); (மயிலாப்பு - மயிலாப்பூர்); (அப்பர் தேவாரம் - 6.2.1 - "மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார்");


1)

புயல்வணன் வாயு எரியிணை அம்பு .. பொன்மலை வில்லிவை ஏந்தி

எயிலொரு மூன்றை எய்தழி வீரன் .. இளமதிச் சடையினில் நீரன்

அயிலுறு சூலன் உண்பலி தேர .. அங்கையில் ஏந்துக பாலன்

மயிலன சாயல் மாதொரு பங்கன் .. மகிழிட மாமயி லாப்பே.


புயல்வணன் வாயு எரிணை அம்பு, பொன்மலை-வில்வை ஏந்தி - மேகம் போன்ற நிறத்தினனான திருமால், வாயு,அக்கினி இணைந்த ஒரு கணையும், மேருமலையால் ஆன வில்லும் ஏந்தி; (புயல் - மேகம்); (சேந்தனார் - திருவிசைப்பா - 9.7.8 - "புரம்பொடி படுத்த பொன்மலை வில்லி");

எயில் ஒரு மூன்றை எய்து அழி வீரன் - முப்புரங்களைக் எய்து அழித்த வீரன்; (எயில் - கோட்டை);

ளமதிச் சடையினில் நீரன் - இளந்திங்களைச் சூடிய சடையில் கங்கையை உடையவன்;

அயில் உறு சூலன் - கூர்மை மிக்க சூலத்தை ஏந்தியவன்; (அயில் - கூர்மை); (உறுதல் - இருத்தல்; மிகுதல்);

உண்பலி தேர அங்கையில் ஏந்து கபாலன் - பிச்சையெடுக்கக் கையில் பிரமனது கபாலத்தை ஏந்தியவன்; (உண்பலி - பிச்சை); (* கபாலன் - இத்தலத்து இறைவன் திருநாமம் - கபாலீஸ்வரன்);

மயில் அன சாயல் மாது ஒரு பங்கன் மகிழ் இடம் மா மயிலாப்பே - மயில் போன்ற சாயலை உடைய உமையை ஒரு பங்கில் உடைய சிவபெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்; (அன – அன்ன – போன்ற); (* உமாதேவி மயில்-உருவில் ஈசனை வழிபட்ட தலம் இது);


2)

புனலலை கின்ற புன்சடை மீது .. பொறிதிகழ் பாம்பையும் வைத்தான்

சினமலை போன்ற வெள்விடை ஏறும் .. சேவகன் போரது செய்த

வனமலை அனைய மதகரி உரிவை .. மார்பினை மூடிடப் போர்த்தான்

வனமுலை மங்கை கற்பகத் தோடும் .. மகிழிடம் மாமயி லாப்பே.


புனல் அலைகின்ற புன்சடை மீது பொறி திகழ் பாம்பையும் வைத்தான் - கங்கை திரியும் செஞ்சடைமேல் புள்ளிகள் திகழும் பாம்பையும் வைத்தவன்; (புன்மை - புகர்நிறம்); (பொறி - புள்ளி);

சினமலை போன்ற வெள்விடை ஏறும் சேவகன் - கோபம் உடைய மலை போன்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய வீரன்; (சினம் - கோபம்); (சேவகன் - வீரன்);

போரது செய்த வனமலை அனைய மதகரி உரிவை மார்பினை மூடிடப் போர்த்தான் - போர்செய்த காட்டில் வாழும் மலை போன்ற மதயானையின் தோலைத் திருமார்பில் போர்வை போலப் போர்த்தவன்; (வனம் - காடு); (அனைய - போன்ற); (கரி - யானை); (உரிவை - தோல்);

வனமுலை மங்கை கற்பகத்தோடும் மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் அழகிய ஸ்தனங்களை உடைய கற்பகாம்பாளோடு விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்; (வனம் - அழகு); (* கற்பகம் - கற்பகாம்பாள் - இத்தலத்து இறைவி திருநாமம்);


3)

ஆனது நல்கும் அஞ்சுகந் தாடும் .. அங்கணன் செஞ்சடை தன்னில்

தேனலர் சூடி கானகந் தன்னில் .. மாநடம் செய்திடும் தேவன்

மானன நோக்கி மாதொரு பங்கன் .. மலரடி இணைதனைத் தொழுத

வானவர் வாழ வல்விடம் உண்டான் .. மகிழிடம் மாமயி லாப்பே.


ஆன்அது நல்கும் அஞ்சு உகந்து ஆடும் அங்கணன் - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் (பஞ்சகவ்வியத்தால்) அபிஷேகம் செய்யப்பெறுபவன், அருள்நோக்கம் உடையவன்;

செஞ்சடை-தன்னில் தேன்-அலர் சூடி - சிவந்த சடையில் தேன் நிறைந்த மலர்களைச் சூடியவன்;

கானகம்-தன்னில் மா-நடம் செய்திடும் தேவன் - சுடுகாட்டில் திருக்கூத்து ஆடுகின்ற தேவன்;

மான் அன நோக்கி மாது ஒரு பங்கன் - மான் போன்ற பார்வையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்;

மலரடி-இணைதனைத் தொழுத வானவர் வாழ வல்விடம் உண்டான் - அப்பெருமானது மலர் போன்ற இரு-திருவடிகளை வணங்கிய தேவர்கள் வாழ்வதற்காகக் கொடிய விஷத்தை உண்டவன்;

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


4)

பொங்கிள நாகம் பொலிதிரு மார்பில் .. பொடிதனைப் பூசிய புனிதா

மங்கிய திங்கள் வந்தடி போற்ற .. வார்சடை வாழ்வருள் செய்தாய்

கங்குலில் ஆடும் சங்கர என்று .. கைகுவித் தேத்திடு வார்க்கு

மங்கல மெல்லாம் மல்கிட அருள்வான் .. மகிழிடம் மாமயி லாப்பே.


"பொங்கு இளநாகம் பொலி திருமார்பில் பொடிதனைப் பூசிய புனிதா - "சீறும் இளம்பாம்பு திகழ்கின்ற மார்பில் திருநீற்றைப் பூசிய புனிதனே;

மங்கிய திங்கள் வந்து அடி போற்ற வார்-சடை வாழ்வு அருள்செய்தாய் - தேய்ந்து அழிந்துகொண்டிருந்த சந்திரன் வந்து திருவடியை வணங்க, இரங்கி அருள்புரிந்து நீள்சடைமேல் நிலைக்கவைத்தவனே; (வார்தல் - நீள்தல்);

கங்குலில் ஆடும் சங்கர" என்று கைகுவித்து ஏத்திடுவார்க்கு - இருளில் ஆடுகின்ற சங்கரனே" என்று கைகூப்பி வழிபடும் பக்தர்களுக்கு;

மங்கலம் எல்லாம் மல்கிட அருள்வான் - எல்லா மங்கலங்களும் பெருகும்படி அருள்பவன்;

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


5)

சொல்வினை மனத்தால் தொழுமறை முனிக்குத் .. துணையென நின்றுயிர் காத்தாய்

கொல்வினை செய்யும் கூற்றுவன் தன்னைக் .. குரைகழ லாலுதை செய்தாய்

பல்வினைப் பயனால் படுதுயர் களையாய் .. பரமனே என்றடி பணிவார்

வல்வினை தீர்த்து வானருள் வள்ளல் .. மகிழிடம் மாமயி லாப்பே.


"சொல் வினை மனத்தால் தொழு மறைமுனிக்குத் துணை என நின்று உயிர் காத்தாய் - "சொல்லால், செயலால், மனத்தால் ( = மனம், வாக்கு காயம் இவை மூன்றாலும்) வழிபட்ட மார்க்கண்டேயருக்குத் துணை ஆகி நின்று அவருடைய உயிரைக் காத்தவனே; (குறிப்பு: மனம் மொழி உடல் என்ற தொடர், யாப்பு நோக்கி வரிசை மாறி வந்தது);

கொல்-வினை செய்யும் கூற்றுவன்-தன்னைக் குரைகழலால் உதைசெய்தாய் - கொலைத்தொழிலைச் செய்யும் காலனை ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியால் உதைத்தவனே;

பல்வினைப் பயனால் படு-துயர் களையாய் பரமனே" என்று அடி பணிவார் - பல வினைகளின் பயனால் அனுபவிக்கின்ற துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக" என்று திருவடியை வணங்கும் பக்தர்களுக்கு; (படுதல் - உண்டாதல்; துன்பம் அனுபவித்தல்);

வல்வினை தீர்த்து வான் அருள் வள்ளல் - அவர்களது வலிய வினையைத் தீர்த்துச் சிவலோக வாழ்வை அருளும் வள்ளல் சிவபெருமான்;

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


6)

வெண்டலை ஏந்தி உண்பலி தேர்வான் .. மென்மலர் வாளிமன் மதனைப்

பண்டெரி செய்த கண்திகழ் நுதலன் .. பண்திகழ் செந்தமிழ் பாடும்

தொண்டருக் கென்றும் துணையென நின்று .. தொல்வினை தீர்த்தருள் தூயன்

வண்டமர் ஓதி மாதொரு பங்கன் .. மகிழிடம் மாமயி லாப்பே.


வெண்தலை ஏந்தி உண்பலி தேர்வான் - வெள்ளிய மண்டையோட்டைக் கையில் தாங்கிப் பிச்சை ஏற்பவன்;

மென்மலர்-வாளி மன்மதனைப் பண்டு எரி செய்த கண் திகழ் நுதலன் - மென்மையான மலர்களை அம்பாக உடைய மன்மதனை முன்பு எரித்த நெற்றிக்கண்ணன்; (வாளி - அம்பு); (நுதல் - நெற்றி); (பண்டு - முன்பு); (நுதல் - நெற்றி);

பண் திகழ் செந்தமிழ் பாடும் தொண்டருக்கு என்றும் துணை என நின்று தொல்வினை தீர்த்தருள் தூயன் - பண் பொருந்திய தேவாரப் பதிகங்களைப் பாடும் பக்தர்களுக்கு என்றும் துணையாகிக் காத்து அவர்களுடைய பழவினையைத் தீர்க்கும் புனிதன்;

வண்டு அமர் ஓதி மாது ஒரு பங்கன் - வண்டுகள் விரும்பும் கூந்தலையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (அமர்தல் - விரும்புதல்); (ஓதி - கூந்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின");

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


7)

நுழைவிலாத் தக்கன் வேள்வியைச் செற்றான் .. நூல்திகழ் மார்பினில் நீற்றன்

குழையணி காதன் குரைகழற் பாதன் .. குளிர்மதி சூடிய நாதன்

முழவுகள் ஆர்க்கச் சுடலையில் ஆடும் .. முக்கணன் அக்கணி அழகன்

மழவிடை ஏறி வருமொரு மன்னன் .. மகிழிடம் மாமயி லாப்பே.


நுழைவு இலாத் தக்கன் வேள்வியைச் செற்றான் - நுண்ணறிவு இல்லாத தக்கன் செய்த வேள்வியை அழித்தவன்; (நுழைவு - நுட்பவறிவு);

நூல் திகழ் மார்பினில் நீற்றன் - மார்பில் பூணூலும் திருநீறும் திகழ்பவன்;

குழை அணி காதன் - காதில் குழையை அணிந்தவன்;

குரைகழற் பாதன் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியினன்;

குளிர்மதி சூடிய நாதன் - குளிர்ச்சி பொருந்திய சந்திரனைச் சூடிய தலைவன்;

முழவுகள் ஆர்க்கச் சுடலையில் ஆடும் முக்கணன் - முழாக்கள் ஒலிக்கச் சுடுகாட்டில் ஆடுகின்ற முக்கண்ணன்;

அக்கு அணி அழகன் - எலும்புகளை அணிகின்ற அழகன்; (அக்கு - எலும்பு);

மழவிடை ஏறி வரும் ஒரு மன்னன் - இளைய எருதினை வாகனமாக உடைய ஒப்பற்ற அரசன்;

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


8)

வல(ம்)மலி தோள்கள் மன(ம்)நினை மடையன் .. மாமலை தனையெறி நாளில்

மலரன பாதம் தனையிறை ஊன்றி .. வாயொரு பத்தழ வைத்தான்

தலைமலி மாலை தலையணி தலைவன் .. தாழ்சடை மேல்மதி சூடி

மலைமக ளோடு மழவிடை ஏறி .. மகிழிடம் மாமயி லாப்பே.


வல(ம்) மலி தோள்கள் மன(ம்) நினை மடையன் மா-மலை-தனைறி நாளில் - வலிமை மிகுந்த புஜங்களை மனத்தில் எண்ணிய அறிவிலியான இராவணன் கயிலைமலையைப் பெயர்த்து வீச முயன்ற பொழுது;

மலர் அன பாதம்-தனைறை ஊன்றி வாய் ஒரு-பத்து அழ வைத்தான் - தாமரைமலர் போன்ற திருவடியைச் சிறிதே ஊன்றி அவனை நசுக்கி அவனது பத்துவாய்களையும் அழச்செய்தவன்; (அன - அன்ன); (இறை - கொஞ்சம்);

தலை மலி மாலை தலை அணி தலைவன் - தலைக்குத் தலைமாலை அணிந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.4.1 - "தலைக்குத் தலைமாலை அணிந்ததென்னே");

தாழ்சடைமேல் மதி சூடி - தாழும் சடைமேல் சந்திரனைச் சூடியவன்;

மலைமகளோடு மழவிடை ஏறி - மலைமகளான உமையோடு இளைய இடபத்தின்மேல் ஏறுபவன்;

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


9)

நாரணன் பிரமன் நண்ணொணாச் சோதி .. நாள்தொறும் நறுமலர் தூவிப்

பூரணன் என்றும் புண்ணியன் என்றும் .. புலியதள் ஆடையன் என்றும்

ஆரணன் என்றும் அடிதொழும் அன்பர் .. அருவினை தீர்த்தருள் அண்ணல்

வாரணத் துரிவை போர்த்திடு மார்பன் .. மகிழிடம் மாமயி லாப்பே.


நாரணன் பிரமன் நண்ணொணாச் சோதி - திருமால் பிரமன் இவர்களால் அடைய ஒண்ணாத ஜோதி வடிவினன்; (நண்ணொணா - நண்ண ஒண்ணாத; தொகுத்தல், இடைக்குறை விகாரம்);

நாள்தொறும் நறுமலர் தூவிப், பூரணன் என்றும், புண்ணியன் என்றும், புலி-அதள் ஆடையன் என்றும், ஆரணன் என்றும், அடிதொழும் அன்பர் அருவினை தீர்த்தருள் அண்ணல் - தினமும் வாசமலர்களைத் தூவிப், "பூரணன், அறவடிவினன், புலித்தோலை ஆடையாக அணிந்தவன், வேத முதல்வன்" என்றெல்லாம் போற்றித் திருவடியை வணங்கும் பக்தர்களது பழவினையைத் தீர்த்து அருள்கின்ற தலைவன்; (பூரணன் - நிறைவானவன்); (அதள் - தோல்); (ஆரணன் - வேதமுதல்வன்);

(அப்பர் தேவாரம் - 6.8.3 - "பூரணன்காண் புண்ணியன்காண்"); (சுந்தரர் தேவாரம் - 7.97.6 - "செஞ்சடைமேல் மதியும் அரவும் உடனே புல்கிய ஆரணன்");

வாரணத்து உரிவை போர்த்திடு மார்பன் - யானைத்தோலை மார்பில் போர்த்தவன்; (வாரணம் - யானை); (உரிவை - தோல்); (சம்பந்தர் தேவரம் - 2.10.3 - "கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்");

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


10)

பொய்யணி யாகப் பூண்டுழல் புல்லர் .. புன்னெறி விற்பவர் நீறு

மெய்யணி யாத வீணர்சொல் விடுமின் .. விடைமிசை ஏறிய விகிர்தன்

நெய்யணி சூலன் நீள்கழல் போற்றும் .. நேயர்கள் நினைவரம் தருவான்

மையணி கண்டன் மாதொரு பங்கன் .. மகிழிடம் மாமயி லாப்பே.


பொய் அணியாகப் பூண்டு உழல் புல்லர் புன்னெறி விற்பவர் - பொய்யையே அணிந்து உழல்கின்ற கீழோர்கள் சிறுநெறியை விற்கின்றவர்கள்; ("அணி ஆகப் பொய் பூண்டு உழல் புல்லர்" என்றும் இயைத்துப் பொருள்கொள்ளக் கூடும்; "கூட்டம் சேர்ப்பதற்காகப் பொய்யை அணிந்து உழல்கின்ற கீழோர்கள்"); (அணி - 1. ஆபரணம்; 2. கூட்டம்);

நீறு மெய் அணியாத வீணர் சொல் விடுமின் - திருநீற்றை உடம்பின்மேல் பூசாத பயனிலிகள் பேசும் பேச்சை மதிக்கவேண்டா, அவர் பேச்சை நீங்குங்கள்; (மெய் - உடம்பு);

விடைமிசை ஏறிய விகிர்தன் - இடபவாகனன், மாறுபட்ட செயலினன்; (விகிர்தன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று);

நெய் அணி சூலன் - நெய் பூசப்பெற்ற திரிசூலத்தை ஏந்தியவன்; (ஆயுதங்கள் துருப்பிடித்தலைத் தடுக்க அவற்றின்மேல் நெய் தடவி வைப்பது வழக்கம்); (சம்பந்தர் தேவாரம் - 3.60.4 - "நெய்யணி சூலமொடு நிறை வெண்மழுவும்");

நீள்-கழல் போற்றும் நேயர்கள் நினை-வரம் தருவான் - தன் திருவடியை வழிபடும் பக்தர்கள் எண்ணிய எவ்வரமும் தருபவன்;

மை அணி கண்டன் - நீலகண்டன்; (மை - கருமை);

மாது ஒரு பங்கன் - உமையை ஒரு பங்கில் உடையவன்;

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


11)

மணிமலர் தூவி வழிபடும் அன்பர் .. மகிழ்வுற வரமருள் வள்ளல்

பிணியிலன் என்றும் நரைதிரை இல்லான் .. பேர்களோர் ஆயிரம் உடையான்

பணியணி மார்பன் பாய்புலித் தோலன் .. பாற்கடல் நஞ்சினை உண்டு

மணியணி கண்டன் மாதொரு பங்கன் .. மகிழிடம் மாமயி லாப்பே.


மணி-மலர் தூவி வழிபடும் அன்பர் மகிழ்வுற வரம் அருள் வள்ளல் - அழகிய பூக்களைத் தூவி வழிபடும் பக்தர்கள் மகிழும்படி வரங்கள் அருளும் வள்ளல்; (மணி - அழகு);

பிணி இலன் என்றும் நரை திரை இல்லான் - பந்தங்களும், நோயும், மூப்பும் என்றும் இல்லாதவன்; (பிணி - பந்தம்; நோய்); (நரை திரை - நரைத்த மயிர், சுருங்கிய தோல் - முதுமையைக் குறித்தது); ("என்றும்" என்ற சொல்லை இடைநிலைத்-தீவகமாகக் கொண்டு இருபக்கமும் இயைத்து, "என்றும் பிணியிலன்", "என்றும் நரைதிரை இல்லான்" என்று பொருள்கொள்க); (சம்பந்தர் தேவாரம் - 3.33.11 - "சம்பந்தன் ஒண் தமிழ்வல்லார் நரைதிரை இன்றியே நன்னெறி சேர்வரே");

பேர்கள் ஓர் ஆயிரம் உடையான் - சஹஸ்ரநாமங்கள் உடையவன்;

பணி அணி மார்பன் - பாம்பை மாலைபோல் மார்பில் அணிந்தவன்; (பணி - நாகம்);

பாய்புலித்-தோலன் - பாயும் புலியின் தோலை ஆடையாக அணிந்தவன்;

பாற்கடல் நஞ்சினை உண்டு மணி அணி கண்டன் - பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டதனால் கண்டத்தில் நீலமணியை உடையவன்;

மாது ஒரு பங்கன் - உமையை ஒரு பங்கில் உடையவன்;

மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Sunday, April 20, 2025

P.398 - மயிலாப்பூர் - அயில் மூவிலைவேல்

2017-05-16

P.398 - மயிலாப்பூர்

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனதானா)

(தனதானன தானன தானன தானா - என்றும் நோக்கலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.31.1 - "விழுநீர் மழுவாட் படையண் ணல்விளங்கும்"); (சம்பந்தர் தேவாரம் - 1.32.1 - "ஓடேகல னுண்பது மூரிடு பிச்சை")


1)

அயில்மூ விலைவேல் உடையான் அடையாதார்

எயில்மூன் றெரிசெய் சிலையான் எருதேறி

மயிலாய் உமையாள் துதிசெய் மயிலாப்பூர்ப்

புயலார் மிடறன் புகழைப் புகல்நாவே.


அயில் மூவிலைவேல் உடையான் - கூர்மை பொருந்திய திரிசூலத்தை ஏந்தியவன்; (அயில் - கூர்மை);

அடையாதார் எயில் மூன்று எரிசெய் சிலையான் - பகைவர்களது முப்புரத்தை எரித்த வில்லை ஏந்தியவன்; (அடையாதார் - பகைவர்); (எயில் - மதில்); (சிலை - வில்);

எருதேறி - இடபவாகனன்;

மயிலாய் உமையாள் துதிசெய் மயிலாப்பூர்ப் - மயில் உருவில் உமையம்மை ஈசனை வழிபட்ட மயிலாப்பூரில் உறைகின்ற; (* "மயிலாய் உமையாள் துதிசெய் மயிலாப்பூர்" - மயிலாப்பூர்த் தலபுராணச் செய்தி);

புயல் ஆர் மிடறன் புகழைப் புகல் நாவே - மேகம் போன்ற நிறம் திகழும் கண்டத்தை உடைய சிவபெருமான் புகழை, நாக்கே நீ சொல்வாயாக; (புயல் - மேகம்); (ஆர்தல் - ஒத்தல்); (புகல்தல் - சொல்லுதல்);


2)

உடையாய் அருளென் றழுதார்க் குயிர்தந்த

விடமார் மிடறன் புரிநூல் மிளிர்மார்பன்

மடமான் விழியாள் துதிசெய் மயிலாப்பூர்

நடமா டிறைவன் புகழே நவில்நாவே.


"உடையாய் அருள்" என்று அழுதார்க்கு உயிர் தந்த, விடம் ஆர் மிடறன் - "சுவாமீ! அருள்புரியாய்" என்று அழுத தேவர்கள் உயிர்பிழைக்கும்படி விடத்தை உண்டருளிய நீலகண்டன்; (ஆர்தல் - உண்தல்; பொருந்துதல்); (மிடறு - கண்டம்; மிடற்றன் என்பது மிடறன் என்று சந்தம் கருதி வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 2.72.9 - "மையார் மணிமிடறன்");

புரிநூல் மிளிர் மார்பன் - மார்பில் ஒளிதிகழும் பூணூல் அணிந்தவன்;

மடமான் விழியாள் துதிசெய் மயிலாப்பூர் - இளமான் போன்ற நோக்குடைய உமையம்மை ஈசனை வழிபட்ட மயிலாப்பூரில் உறைகின்ற;

நடம் ஆடு இறைவன் புகழே நவில் நாவே - கூத்து ஆடும் பெருமானது புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (நவில்தல் - சொல்லுதல்);


3)

துணைநீ அருளென் றடைவார் துயர்தீர்ப்பான்

கணமார் படையன் பனியார் கயிலாயன்

மணமார் குழலாள் துதிசெய் மயிலாப்பூர்ப்

பணமார் அரையன் புகழே பகர்நாவே.


"துணை நீ அருள்" என்று அடைவார் துயர் தீர்ப்பான் - "நீயே துணை" என்று சரண்புகுந்த அடியவர்களது துயரைத் தீர்ப்பவன்;

கணம் ஆர் படையன் - பூதப்படையை உடையவன்;

பனி ஆர் கயிலாயன் - பனி நிறைந்த கயிலைமலைமேல் உறைபவன்;

மணம் ஆர் குழலாள் துதிசெய் மயிலாப்பூர்ப் - வாசக்குழலியான உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரில் உறைகின்ற;

பணம் ஆர் அரையன் புகழே பகர் நாவே - பாம்பை அரையில் கட்டிய (/ மார்பில் அணிந்த) தலைவன் புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (பணம் - பாம்பு); (ஆர்த்தல் - கட்டுதல்; ஆர்தல் - அணிதல்); (அரையன் - தலைவன்); (பகர்தல் - சொல்லுதல்);


4)

தலையோர் கலனாப் பலிதேர் தழல்வண்ணன்

உலவான் பிறவான் மதமா உரிசெய்தான்

மலரார் குழலாள் துதிசெய் மயிலாப்பூர்

உலராச் சடையான் புகழே உரைநாவே.


தலை ஓர் கலனாப் பலிதேர் தழல்வண்ணன் - பிரமன் மண்டையோட்டைப் பிச்சைப்பாத்திரமாக ஏந்திப் பிச்சை ஏற்பவன், தீப் போன்ற செம்மேனியன்; (பலி - பிச்சை); (தழல் - தீ);

உலவான் பிறவான் - இறப்பும் பிறப்பும் இல்லாதவன்; (உலத்தல் - சாதல்; அழிதல்);

மதமா உரிசெய்தான் - மதயானையின் தோலை உரித்தவன்; (மதமா - யானை);

மலர் ஆர் குழலாள் துதிசெய் மயிலாப்பூர் - மலர் அணிந்த கூந்தலை உடைய உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரில் உறைகின்ற;

உலராச் சடையான் புகழே உரை நாவே - சடையில் என்றும் நீரை உடையவன் (கங்காதரன்) புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (உரைத்தல் - சொல்லுதல்);


5)

அருவாய் உருவாய் அடியார்க் கருள்செய்யும்

பெருமான் பிறவான் இறவான் பிணியில்லான்

மருவார் குழலாள் துதிசெய் மயிலாப்பூர்

ஒருமா மிடறன் புகழே உரைநாவே.


அருவாய் உருவாய் அடியார்க்கு அருள்செய்யும் பெருமான் - அருவமாகிக் கண்ணுக்குத் தெரியாமல் நின்றும், உருக்கொண்டு தென்பட்டும், பக்தர்களுக்கு அருள்செய்யும் பெருமான்;

பிறவான் இறவான் பிணில்லான் - பிறப்பு, இறப்பு, பந்தம், நோய், இவையொன்றும் இல்லாதவன்;

மருவார்-குழலாள் துதிசெய் மயிலாப்பூர் - வாசம் பொருந்திய நீண்ட கூந்தலை உடைய உமையம்மை ஈசனை வழிபட்ட மயிலாப்பூரில் உறைகின்ற; (மருவார் - 1. மரு ஆர்; 2. மரு வார்); (மரு - வாசனை); (ஆர்தல் - பொருந்துதல்); (வார்தல் - நீள்தல்);

ஒரு மா-மிடறன் புகழே உரை நாவே - ஒப்பற்ற அழகிய கண்டத்தை உடைய சிவபெருமானது புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (ஒரு - ஒப்பற்ற); (மா - அழகு);


6)

தலையேந் திறைவன் சடையிற் சலமேற்றான்

அலையார் கடலின் கருநஞ் சணிகண்டன்

மலையான் மகளோர் புடையான் மயிலாப்பூர்

நிலையா கியவன் பெயரே நினைநெஞ்சே.


தலை ஏந்து இறைவன் - கபாலத்தை ஏந்துகின்ற இறைவன்; (தலை - மண்டையோடு); (* கபாலீஸ்வரன் - மயிலாப்பூரில் ஈசன் திருநாமம்);

சடையில் சலம் ஏற்றான் - சடையில் கங்கையை அணிந்தவன்; (சலம் - ஜலம் - கங்கை);

அலை ஆர் கடலின் கருநஞ்சு அணி கண்டன் - அலை மிகுந்த பாற்கடலில் எழுந்த கரிய விஷத்தைக் கண்டத்தில் அணிந்தவன்;

மலையான் மகள் ஓர் புடையான் - மலைமங்கையை ஒரு பக்கத்தில் (கூறாக) உடையவன்; (புடை - பக்கம்);

மயிலாப்பூர் நிலை ஆகியவன் பெயரே நினை நெஞ்சே - மயிலாப்பூரில் நீங்காமல் உறையும் அப்பெருமானது திருநாமத்தையே, என் நெஞ்சே, நீ நினைவாயாக;


7)

கனலும் கலைமான் மறியும் கரமேந்தி

சினவெள் விடையன் புரிநூல் திகழ்மார்பன்

வனமென் முலையாள் துதிசெய் மயிலாப்பூர்ப்

புனலார் சடையான் புகழே புகல்நாவே.


கனலும் கலைமான் மறியும் கரம் ஏந்தி - தீயையும் கலைமான்-கன்றையும் கையில் ஏந்தியவன்;

சின-வெள்-விடையன் - கோபிக்கின்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;

புரிநூல் திகழ் மார்பன் - மார்பில் பூணூல் திகழ்பவன்;

வன-மென்-முலையாள் துதிசெய் மயிலாப்பூர்ப் - அழகிய மென்மையான முலைகளை உடைய உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரில் உறைகின்ற;

புனல் ஆர் சடையான் புகழே புகல் நாவே - கங்கைச்சடையன் புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (புகல்தல் - சொல்லுதல்);


8)

எதிர்வார் இலனாய் அருவெற் பெறிவானை

அதிரார் கழலோர் விரல்வைத் தழவைத்தார்

மதிபோல் நுதலாள் துதிசெய் மயிலாப்பூர்

பதியா மகிழ்வார் புகழே பகர்நாவே.


எதிர்வார் இலனாய், அரு-வெற்பு எறிவானை - தன்னை எதிர்ப்பவர்கள் யாரும் இல்லாதவனாகி, அரிய கயிலைமலையை வீசி எறிய முயன்ற இராவணனை; (எதிர்தல் - எதிர்த்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.56.8 - "இமையவர் அஞ்சியோட எதிர்வாரவர் தம்மையின்றி அமைதரு வல்லரக்கன் அடர்த்தும்மலை அன்றெடுப்ப");

அதிர் ஆர் கழல் ஓர் விரல் வைத்து அழவைத்தார் - அதிரும் கழல் அணிந்த திருவடியின் விரல் ஒன்றை ஊன்றி அழச்செய்தவர்; (அதிர் - ஒலி; ஒலித்தல்); (அதிரார் - "மனம் நடுங்காதவர்" என்று கொண்டும் பொருள்கொள்ளல் ஆம்); (சம்பந்தர் தேவாரம் - 3.42.4 - "அதிரார்பைங்க ணேறுடை ஆதிமூர்த்தி");

மதி போல் நுதலாள் துதிசெய் மயிலாப்பூர் - பிறை போன்ற நெற்றியை உடைய உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரே; (நுதல் - நெற்றி); (சம்பந்தர் தேவாரம் - 2.85.4 - "மதிநுதல் மங்கையோடு");

பதியா மகிழ்வார் புகழே பகர் நாவே - தாம் உறையும் தலமாக விரும்பிய சிவபெருமான் புகழையே, நாக்கே நீ சொல்வாயாக; (பதி - இடம்; தலம்); (பகர்தல் - சொல்லுதல்);


9)

பதியார் எனு(ம்)மால் அயனார் பதமேத்த

எதிரே அளவில் சுடராய் எழுநாதன்

மதுவார் குழலாள் துதிசெய் மயிலாப்பூர்

நதியார் சடையான் பெயரே நவில்நாவே.


"பதி யார்" எனும் மால் அயனார் பதம் ஏத்த - தம் இருவருள் யார் தலைவன் என்று வாதிட்ட விஷ்ணுவும் பிரமனும் தன் திருவடியைப் போற்றும்படி;

எதிரே அளவு-இல் சுடராய் எழு நாதன் - அவர்கள்முன் எல்லையற்ற ஜோதி வடிவில் உயர்ந்த தலைவன்;

மது வார் குழலாள் துதிசெய் மயிலாப்பூர் - தேன் சொரியும் மலர்களை அணிந்த நீண்ட கூந்தலை உடைய உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரில் உறைகின்ற; (வார்தல் - ஒழுகுதல்; நீள்தல்);

நதி ஆர் சடையான் பெயரே நவில் நாவே - சடையில் கங்கையை உடைய சிவபெருமானது திருநாமத்தையே, நாக்கே நீ சொல்வாயாக;


10)

ஓரா தவமே புரிவார் ஒருநாளும்

தீரார் வினைநோய் தொலையாத் திருவேண்டில்

வாரார் முலையாள் துதிசெய் மயிலாப்பூர்

நீரார் சடையான் பெயரே நினைநெஞ்சே.


ஓராது அவமே புரிவார் ஒருநாளும் தீரார் வினைநோய் - (சிவபெருமானை வணங்க) எண்ணாமல், எந்நாளும் அவச்செயல்களே செய்தும் புன்மொழிகளே பேசியும் உழல்கின்றவர்களது வினைகள் தீரமாட்டா;

தொலையாத் திரு வேண்டில் - அழியாத செல்வத்தை அடைய நீ விரும்பினால்;

வார் ஆர் முலையாள் துதிசெய் மயிலாப்பூர் - கச்சு அணிந்த முலைகளை உடைய உமாதேவி ஈசனை வழிபாடு செய்த மயிலாப்பூரில் உறைகின்ற;

நீர் ஆர் சடையான் பெயரே நினை நெஞ்சே - சடையில் கங்கையை உடைய சிவபெருமானது திருநாமத்தையே, நெஞ்சே, நீ எண்ணுவாயாக;


11)

குரையார் கழலால் நமனைக் குமைசெய்தாய்

திரையார் சடைமேற் பிறையைத் திகழ்வித்தாய்

வரையான் மகளோர் புடையாய் மயிலாப்பூர்

அரையா எனவல் வினைதீர்த் தருள்வானே.


"குரை ஆர் கழலால் நமனைக் குமைசெய்தாய் - "ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியால் காலனை உதைத்து அழித்தவனே;

திரை ஆர் சடைமேல் பிறையைத் திகழ்வித்தாய் - கங்கையை அணிந்த (/ கங்கை ஒலிக்கும்) சடைமேல் சந்திரனைத் திகழச்செய்தவனே; (திரை - நதி; அலை); (ஆர்தல் - அணிதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);

வரையான்-மகள் ஓர் புடையாய் - மலைமங்கையை ஒரு பக்கத்தில் பாகமாக உடையவனே; (வரை - மலை; வரையான் - இமவான்); (சம்பந்தர் தேவாரம் - 2.24.6 - "வரையான் மகள் காண மகிழ்ந்தவனே");

மயிலாப்பூர் அரையா" என, வல்வினை தீர்த்து அருள்வானே - மயிலாப்பூரில் உறைகின்ற அரசனே" என்று வாழ்த்தினால், அப்பெருமான் நம் வலிய வினைகளைத் தீர்த்து அருள்புரிவான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Saturday, April 19, 2025

T.199 - மயிலாப்பூர் - இட்டமும் வினைகளும்

2017-04-30

T.199 - மயிலாப்பூர் - இட்டமும் வினைகளும்

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தன தனதன தத்தன தனதன

தத்தன தனதன .. தனதான)

(கைத்தல நிறைகனி - திருப்புகழ் - விநாயகர் துதி)


இட்டமும் வினைகளும் உய்த்திட நிலமிசை

.. .. எய்ப்புறு நிலைதனை .. விலகேனும்

.. எட்டனை அனுதின(ம்) நற்றமிழ் மலர்களை

.. .. இட்டடி தொழுதுய .. அருளாயே

திட்டிய தசமுகன் அச்சுற மிகுபுகழ்

.. .. செப்பிட முடிபுய(ம்) .. நெரிபாதா

.. செத்தவர் பொடியணி நித்திய நிலையின

.. .. திக்குகள் உடையென .. உடையானே

மட்டவிழ் கணைதொடு விற்கரன் உடலினை

.. .. மத்திய விழிகொடு .. சுடுவோனே

.. மத்தள முழவொலி மிக்கெழ இருளினில்

.. .. வட்டணை யிடுமதிர் .. கழலானே

கட்டட(ம்) மதிதனை எட்டிட உயர்பதி

.. .. கத்தலை மயிலையில் .. அழகாரும்

.. கற்பகம் அவளுடன் உற்றடி தொழுமவர்

.. .. கட்டுகள் அறவருள் .. பெருமானே.


பதம் பிரித்து:

இட்டமும் வினைகளும் உய்த்திட நிலமிசை

.. .. எய்ப்புறு நிலைதனை .. விலகேனும்,

.. எள்-தனை அனுதின(ம்) நற்றமிழ் மலர்களை

.. .. இட்டு அடி தொழுது உய .. அருளாயே;

திட்டிய தசமுகன் அச்சுற மிகு-புகழ்

.. .. செப்பிட முடி புய(ம்) .. நெரி-பாதா;

.. செத்தவர் பொடி அணி நித்திய நிலையின;

.. .. திக்குகள் உடை என .. உடையானே;

மட்டு அவிழ் கணை தொடு விற்கரன் உடலினை

.. .. மத்திய விழிகொடு .. சுடுவோனே;

.. மத்தள முழவு ஒலி மிக்கு எழ இருளினில்

.. .. வட்டணை இடும் அதிர் .. கழலானே;

கட்டட(ம்) மதிதனை எட்டிட உயர்-பதி,

.. .. கத்து-அலை மயிலையில் .. அழகு ஆரும்

.. கற்பகம் அவளுடன் உற்று அடி தொழுமவர்

.. .. கட்டுகள் அற அருள் .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

இட்டமும் வினைகளும் உய்த்திட, நிலமிசை எய்ப்புறு நிலைதனை விலகேனும் - ஆசைகளும் பழவினைகளும் என்னை ஏவிடப், பூமியின்மேல் எப்போதும் வருந்துகின்ற நானும்; (உய்த்தல் - செலுத்துதல்; நடத்துதல்; ஆணைசெலுத்துதல்); (எய்ப்பு - வருத்தம்); (விலகேனும் - விலகாத நானும்);

எள்-தனை அனுதினம் நற்றமிழ் மலர்களை இட்டு அடிதொழுது உய அருளாயே - தினமும் எள்ளளவாவது (சிறிதளவேனும்) தேவாரம் திருவாசகம் முதலியன பாடி, உன் திருவடியை வழிபட்டு உய்வதற்கு அருள்புரிவாயாக; (எட்டனை - எள் தனை); (தனை - அளவு குறிக்கப் பிறசொல்லின் பின் வரும் ஒரு சொல்); (நல் தமிழ் மலர்கள் - சிறந்த தமிழ்ப்பாமாலைகள்); (உய - உய்ய - இடைக்குறையாக வந்தது); (அப்பர் தேவாரம் - 5.2.3 - "கூத்தனை எட்டனைப் பொழுதும் மறந்துய்வனோ");

திட்டிய தசமுகன் அச்சுற, மிகு-புகழ் செப்பி, முடி புயம் நெரி-பாதா - இகழ்ந்து பேசிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அஞ்சும்படியும், அவன் உன் பெரும்புகழைப் பாடும்படியும், அவனது தலைகளையும் புஜங்களையும் (ஒரு விரலை ஊன்றி) நசுக்கிய திருப்பாதனே;

செத்தவர் பொடி அணி நித்திய நிலையின - இறந்தவர்களை எரித்த சாம்பலை அணிகின்ற, அழிவற்ற தன்மை உடையவனே; (நித்தியம் - சாசுவதம்); (நிலை - தன்மை);

திக்குகள் உடைன உடையானே - திசைகளையே ஆடையாக உடையவனே (திகம்பரனே); (திகம்பரன் - சிவன் திருநாமம்; அம்பரம் - ஆடை);

மட்டு அவிழ் கணை தொடு வில்-கரன் உடலினை மத்திய விழிகொடு சுடுவோனே - வாசம் கமழும் மலரை அம்பாக ஏவும் வில்லைக் கையில் ஏந்திய மன்மதனது உடம்பை (நெற்றி) நடுவில் உள்ள கண்ணால் எரித்தவனே; (மட்டு - வாசனை; தேன்); (மத்தியம் - நடு); (கொடு - கொண்டு - மூன்றாம்வேற்றுமை உருபு);

மத்தள முழவு ஒலி மிக்கு எழ இருளினில் வட்டணை இடும் அதிர் கழலானே - மத்தளங்களின் ஒலியும், முழவுகளின் ஒலியும் மிகுந்து எழ, நள்ளிருளில் திருக்கூத்து ஆடுகின்ற, ஒலிக்கின்ற கழலை அணிந்தவனே; (வட்டணை - வட்டணை என்னும் நாட்டிய வகை); (காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் - 11.2.7 - "கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக் காலுயர் வட்டணை யிட்டு நட்டம்");

கட்டடம் மதிதனை எட்டிட உயர் பதி, கத்து-அலை மயிலையில் - கட்டடங்கள் சந்திரனைத் தொடுமாறு உயரும் இடமானதும், முழங்குகின்ற கடலின் அருகு உள்ளதுமான மயிலாப்பூரில்; (கத்தலை = கத்துகடல்; "அலை கத்து" என்று இயைத்தும் பொருள்கொள்ளலாம்); (அலை - கடல்; கடலின் அலை); (காளமேகப் புலவர் - "கத்துகடல் சூழ்நாகை");

அழகு ஆரும் கற்பகம் அவளுடன் உற்று அடி தொழும்அவர் கட்டுகள் அற அருள் பெருமானே - அழகிய கற்பகாம்பாளுடன் எழுந்தருளி, வந்து திருவடியை வழிபடும் அடியவர்களின் பந்தங்கள் எல்லாம் நீங்க அருளும் பெருமானே; (உறுதல் - இருத்தல்; அடைதல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------