Showing posts with label மா மா மா கூவிளம். Show all posts
Showing posts with label மா மா மா கூவிளம். Show all posts

Monday, December 26, 2022

05.46 – சாட்டியக்குடி

05.46சாட்டியக்குடி

2015-07-30

சாட்டியக்குடி

(திருவாரூர்க்குத் தென்கிழக்கே 20 கிமீ தூரத்தில் உள்ள தலம்)

----------------------------------

(கலிவிருத்தம் - மா மா மா கூவிளம் - என்ற வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய மாதரார்")


1)

வேத நாவன் ஈர வேணியன்

காதல் மாதோர் பாகன் கண்ணுதல்

தாதை ஏர்கொள் சாட்டி யக்குடி

நாதன் அன்பர் வினைகள் நாசமே.


வேத நாவன் - வேதங்களை ஓதிய நாவை உடையவன்;

ஈர வேணியன் - கங்கையைச் சடையில் உடையவன்;

காதல் மாது ஓர் பாகன் - உமையை ஒரு பாகமாக உடையவன்;

கண்ணுதல் தாதை - நெற்றிக்கண்ணை உடைய தந்தை; (கண்ணுதல் - நெற்றிக்கண்ணன்); (தாதை - தந்தை); (கண்ணுதற்றாதை = கண்ணுதல் + தாதை);

ஏர்கொள் சாட்டியக்குடி நாதன் அன்பர் வினைகள் நாசமே - அழகிய திருச்சாட்டியக்குடியில் உறையும் தலைவனான சிவபெருமான் அடியவர்களுடைய வினைகள் அழியும்; (ஏர் - அழகு);


2)

சந்தத் தமிழை மகிழும் சங்கரன்

அந்தி வண்ணத் தழகன் ஐங்கரன்

தந்தை ஏர்கொள் சாட்டி யக்குடி

எந்தை அன்பர்க் கிடர்கள் இல்லையே.


சங்கரன் - நன்மை செய்பவன்;

அந்தி வண்ணத்து அழகன் - செந்நிறத்து மேனி உடைய அழகன்;

ஐங்கரன் தந்தை - ஐந்து கைகளையுடைய கணபதிக்குத் தந்தை;

எந்தை - எம் தந்தை;


3)

மெய்யில் நீறு பூசும் வேதியன்

செய்யன் மதனை நீறு செய்தவன்

தையல் பங்கன் சாட்டி யக்குடி

ஐயன் அன்பர்க் கல்லல் இல்லையே.


நீறு - திருநீறு; சாம்பல்;

வேதியன் - வேதத்தைச் சொன்னவர்; வேதத்தின் பொருளாவார்; வேதத்தில் விளங்குபவர்; வேதித்தல் - வேறுபடுத்துதல் என்று கொண்டு உரைத்தலுமாம்.

செய்யன் - செம்மேனியன்;

மதனை - மன்மதனை;

தையல் பங்கன் - அர்த்தநாரீஸ்வரன்; (தையல் - பெண்);

ஐயன் - தலைவன்;


4)

மழவெள் விடையன் வாச மாமலர்க்

குழலி பாகம் ஆகும் கொள்கையான்

தழலின் உருவன் சாட்டி யக்குடிக்

குழகன் அன்பர்க் கின்பம் கூடுமே.


மழ வெள் விடையன் - இள வெண் இடபத்தை ஊர்தியாக உடையவன்;

கந்த மாமலர்க் குழலி பாகம் ஆகும் கொள்கையான் - வாசமலர்களை அணீந்த கூந்தலை உடைய உமையை ஒரு பாகமாகக் கொள்ளும் கொள்கை உடையவன்;

தழலின் உருவன் - சோதி வடிவினன்; செந்நிறத்தன்;

குழகன் - இளைஞன்; அழகன்;


5)

ஓத்தை ஓதி ஓம்பு மாணியைக்

காத்துப் பாசம் ஏந்து காலனைச்

சாய்த்த பாதன் சாட்டி யக்குடித்

தீர்த்தன் அன்பர் செல்வர் ஆவரே.


ஓத்தை ஓதி ஓம்பு மாணியைக் காத்துப் - வேதத்தை ஓதி வழிபட்ட மார்க்கண்டேயரைக் காத்து; (ஓத்து - வேதம்); (ஓம்புதல் - பேணுதல்);

பாசம் ஏந்து காலனைச் சாய்த்த பாதன் - பாசத்தை ஏந்தும் எமனைக் காலால் உதைத்தவன் (சாய்த்தல் - அழித்தல்; தோல்வியுறச் செய்தல்);

தீர்த்தன் - பரிசுத்தமானவன்;

செல்வர் ஆவரே - செல்வங்கள் பெறுவார்கள்; (அப்பர் தேவாரம் - 5.65.1 - "தேவர் கோவினும் செல்வர்கள் ஆவரே"); (சம்பந்தர் தேவாரம் - 3.49.6 - "பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சிவாயவே.");


6)

கடலின் நஞ்சைக் கண்டம் இட்டவன்

சுடலைப் பொடியைப் பூசு சுந்தரன்

சடையன் ஏர்கொள் சாட்டி யக்குடி

விடையன் அன்பர் வினைகள் வீடுமே.


கடலின் நஞ்சு - பாற்கடலினின்று எழுந்த ஆலகால விடம்;

சுடலைப் பொடி - சுடுகாட்டுச் சாம்பல்;

விடையன் - இடப வாகனன்;

வீடும் - அழியும்;


7)

கால காலன் திங்கட் கண்ணியன்

நீல கண்டன் நெற்றிக் கண்ணினன்

சால அழகன் சாட்டி யக்குடிச்

சூலன் அன்பர்க் கில்லை துன்பமே.


திங்கட் கண்ணியன் - சந்திரனை முடிக்கு அணியும் மாலையாக ஏற்றவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

சால அழகன் - மிக அழகு உடையவன்;

சூலன் - சூலபாணி;


8)

சிலையைப் பேர்த்தான் பத்துச் சென்னிவாய்

அலற ஊன்றி அருள்செய் அங்கணன்

தலையில் ஆற்றன் சாட்டி யக்குடித்

லைவன் அன்பர் வினைகள் சாயுமே.


சிலையைப் பேர்த்தான் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனுடைய; (சிலை - மலை);

பத்துச் சென்னிவாய் அலற - பத்துத் தலைகளில் இருந்த வாய்கள் எல்லாம் அலறும்படி;

ஊன்றி அருள்செய் அங்கணன் - ஒரு விரலை இட்டு நசுக்கிப் பின்னர் அருள்செய்த அருட்கண் உடையவன்;

தலையில் ஆற்றன் - கங்காதரன்;

சாட்டியக்குடித் தலைவன் அன்பர் வினைகள் சாயுமே - திருச்சாட்டியக்குடியில் உறைகின்ற தலைவனான சிவபெருமானது பக்தர்களது வினைகள் அழியும்; (சாய்தல் - அழிதல்; தோற்றோடுதல்); (அப்பர் தேவாரம் - 5.19.8 - "கங்கை யானுறையுங் கரக்கோயிலைத் தங்கையால் தொழுவார் வினை சாயுமே");


9)

மாலுக் கயனுக் கரிய மாவழல்

கோல மார்பிற் கொன்றைத் தாரினன்

சாலப் பழையன் சாட்டி யக்குடிச்

சூலப் படையன் தொண்டர்க் கின்பமே.


மாலுக்கு அயனுக்கு அரிய மா அழல் - திருமால் பிரமன் இவர்களுக்கு அறிய ஒண்ணாத பெரிய சோதி;

கோல மார்பிற் கொன்றைத் தாரினன் - அழகிய மார்பில் கொன்றைமாலை அணிந்தவன்;

சாலப் பழையன் - மிகவும் தொன்மையானவன்;

சாட்டியக்குடிச் சூலப் படையன் தொண்டர்க்கு இன்பமே - திருச்சாட்டியக்குடியில் உறையும் சூலபாணியின் தொண்டர்களுக்கு இன்பமே;


10)

வழியை மாற்ற இழிவு வார்த்தைகள்

மொழியும் மூர்க்கர் தம்மை நீங்குமின்

உழுவை உரியன் சாட்டி யக்குடி

தொழவல் வினையற் றின்பம் சூழுமே.


மூர்க்கன் - மூடன்;

உழுவை உரியன் - புலித்தோல் அணிந்தவன்; (உழுவை - புலி); (உரி - தோல்);

சாட்டியக்குடி தொழ வல்வினை அற்று இன்பம் சூழுமே - திருச்சாட்டியக்குடியில் உறையும் சிவபெருமானை வணங்கினால் வல்வினைகள் தீர்ந்து இன்பம் பெருகும்;


11)

பனிவெண் மலையன் சீறு பாந்தளும்

குனிவெண் பிறையும் குலவு சென்னியன்

தனியன் ஏர்கொள் சாட்டி யக்குடி

இனியன் அன்பர்க் கில்லை துன்பமே.


பனி வெண் மலையன் - பனி சூழ்ந்த கயிலைமலையில் உறைபவன்;

சீறு பாந்தளும் குனி வெண் பிறையும் குலவு சென்னியன் - சீறும் பாம்பும் வளைந்த பிறைச்சந்திரனும் சேர்ந்து இருக்கும் திருமுடி உடையவன்; (பாந்தள் - பாம்பு); (குனிதல் - வளைதல்);

தனியன் - ஒப்பற்றவன்;

ஏர்கொள் சாட்டியக்குடி இனியன் அன்பர்க்கு இல்லை துன்பமே - அழகிய திருச்சாட்டியக்குடியில் உறையும் சிவபெருமான் அன்பர்களுக்குத் துன்பம் இல்லை;


பிற்குறிப்புகள் :

சாட்டியக்குடி - வேதநாதர் கோயில் : https://www.kamakoti.org/tamil/tiruvasagam17.htm

திருவிசைப்பாவில் இத்தலத்திற்கு ஒரு பதிகம் உள்ளது - 9.15 - "பெரியவா கருணை".


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Friday, August 21, 2015

01.78 – ஆனைக்கா - (திருவானைக்கா)


01.78 –
ஆனைக்கா - (திருவானைக்கா)



2010-08-04
திருவானைக்கா
-------------------
(கலிவிருத்தம் - 'மா மா மா கூவிளம்' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய மாதரார்")



1)
மருளில் ஆழ்த்தி வாட்டும் வல்வினை
இருளை நீங்க எய்து நெஞ்சமே
ஒருசி லந்திக் குலகை ஆளவே
அருள்செய் அண்ணல் ஆனைக் காவையே.



* கோச்செங்கணான் வரலாற்றைச் சுட்டியது. தலவரலாற்றுச் சுருக்கத்தைப் பிற்குறிப்பிற் காண்க.
மருள் - மயக்கம் (Bewilderment of mind, confusion);



2)
விளித்துக் காலன் பாசம் வீசுமுன்
களிக்க எண்ணில் கருது நெஞ்சமே
களிற்றின் அன்பைக் கண்டு நற்பதம்
அளித்த அண்ணல் ஆனைக் காவையே.



("களிக்க எண்ணில், காலன் விளித்துப் பாசம் வீசுமுன் கருது நெஞ்சமே" என்று பொருள் கொள்க).
* யானைக்கு அருளியதைச் சுட்டியது. தலவரலாற்றுச் சுருக்கத்தைப் பிற்குறிப்பிற் காண்க.



3)
துன்பத் தொடரில் சுழன்று தொய்வதேன்
இன்புற் றிருக்க எய்து நெஞ்சமே
தன்பத் தர்க்குத் தடைகள் தீர்த்தருள்
அன்பத் தனுறை ஆனைக் காவையே.



தன்பத்தர்க்கு - தன் பத்தர்க்கு; (பத்தர் - பக்தர்);
அன்பத்தனுறை - அன்பு அத்தன் உறை;
அத்தன் - தந்தை;


(அப்பர் தேவாரம் - 5.31.6 -
நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா ண்ணலே. )



4)
நம்மை வினைகள் நாடி எய்துமுன்
செம்மை ஆகச் சேர்க நெஞ்சமே
இம்மை அம்மை இன்பம் நல்கிடும்
அம்மை யப்பன் ஆனைக் காவையே.



இம்மை அம்மை - இம்மை மறுமை;



5)
சுழலார் வினையுள் தோய்ந்து துன்பினால்
அழலேன்; மகிழ அடைக நெஞ்சமே,
நிழலார் மழுவன் நீற்றன் நெற்றியில்
அழலார் விழியன் ஆனைக் காவையே.



சுழல் ஆர் வினை - சுழல் பொருந்திய வினை / சுழல் மிக்க வினை;
தோய்தல் - முழுகுதல்;
நிழல் ஆர் மழுவன் - ஒளி பொருந்திய மழுப்படையை ஏந்தியவன்;
அழல் ஆர் விழியன் - தீ உமிழும் கண்ணை உடையவன்;


நெஞ்சே! வினைச்சுழலில் முழுகித் துன்பமுற்று அழுவது ஏன்? இன்புற வேண்டில், ஒளிவீசும் மழுவை ஏந்தியவனும், திருநீறு பூசியவனும், தீ உமிழும் கண்ணை நெற்றியில் உடையவனும் ஆன சிவபெருமானின் திருவானைக்காவைச் சென்று அடைவாயாக.



6)
அலையும் நிலையும் அழியும்; வல்வினை
தொலையும்; சென்று தொழுக நெஞ்சமே
கலையும் ஏந்தி கழலைக் காவிரி
அலைகொண் டேத்தும் ஆனைக் காவையே.



கலையும் ஏந்தி - மானையும் ஏந்தியவன்;
(கலையும் ஏந்தி - 'கலையும்' என்றது எச்சவும்மை. சூலம், மழு, முதலியவற்றையும் சிவன் ஏந்துவது உணர்த்தப்பெற்றது);


நெஞ்சே! கையில் மானையும் ஏந்தும் சிவபெருமானின் திருவடியைக் காவிரி தன் அலைகளால் வழிபடும் திருவானைக்காவிற்குச் சென்று அப்பெருமானை நீயும் தொழுவாயாக! அவ்வாறு செய்தால், இப்படி அலைந்து வருந்தும் நிலையும் நீங்கும்; அதற்குக் காரணமான வல்வினைகளும் அழியும்;



7)
ஊறு செய்யும் வினைகள் ஓய்ந்துநற்
பேறு பெறுதற் கெய்து நெஞ்சமே
நீறு பூசி நெற்றிக் கண்ணினன்
ஆறு சூடி ஆனைக் காவையே.



நெஞ்சே! கேடு விளைக்கும் வினைகள் எல்லாம் அழிந்து நீ நற்கதி பெறுவதற்குச் சென்றடைவாயாக, திருநீறு பூசியவனும் நெற்றிக்கண்ணனும், கங்காதரனும் ஆன சிவபெருமானின் திருவானைக்காவை!



8)
நடுக்கம் தீர நண்ணு நெஞ்சமே,
வெடுக்கென் றோடிக் கயிலை வெற்பினை
இடக்க முயன்ற இலங்கைக் கோன்தனை
அடர்த்த அண்ணல் ஆனைக் காவையே.



நடுக்கம் - மிக்க அச்சம்;
நண்ணு - கிட்டுதல் (approach, reach);
வெடுக்கெனல் - திடீரெனற்குறிப்பு (suddenness and unexpectedness); விரைவுக்குறிப்பு (quickness);
இடத்தல் - பெயர்த்தல்;
அடர்த்தல் - நசுக்குதல்;


நெஞ்சமே! திடீரென்று ஓடிக் கயிலைமலையை பெயர்க்க இராவணன் முயன்றபொழுது, அவனை அம்மலைக்கீழ் நசுக்கிய அண்ணல் சிவபெருமான் உறையும் திருவானைக்காவைச் சென்றடைந்து நீ அச்சம் தீர்ந்து மகிழ்வாயாக!



9)
புரிவல் வினையுன் புடைபு காமலே
இரிய எண்ணில் எய்து நெஞ்சமே
எரியின் உருவன் இருவர் காணுதற்(கு)
அரியன் உறையும் ஆனைக் காவையே.



புரிவல்வினை - புரிந்த வலிய வினைகள்;
புடை புகாமல் - பக்கத்தில் வாராமல்;
எண்ணில் - எண்ணினால்;
எரி - சோதி;
இரிதல் - அஞ்சி ஓடுதல்;


நெஞ்சே! முன்செய்த வலிய வினைகள் எல்லாம் உன்னை அணுகாமல் ஓடவேண்டும் என்று நீ விரும்பினால், திருமாலுக்கும் பிரமனுக்கும் காண அரிய சோதி வடிவினன் ஆன சிவபெருமானின் திருவானைக்காவைச் சென்றடைவாயாக!



10)
வெந்த நீற்றை விலக்கும் பொய்யரின்
மந்த வார்த்தை மதியு ளோர்கொளார்
வந்தித் துய்வர் மதியம் சூடிய
அந்தி வண்ணன் ஆனைக் காவையே.



வெந்த நீறு - திருநீறு;
விலக்குதல் - கூடாதென்று தடுத்தல் (To forbid, prohibit); நீக்கிவிடுதல் (To eschew, discard, remove);
மந்தம் - அறிவுமழுக்கம்;
மதி - அறிவு;
கொள்ளுதல் - கருதுதல்; மதித்தல்; அங்கீகரித்தல்;
வந்தித்தல் - வணங்குதல்;
மதியம் - சந்திரன்;
அந்திவண்ணன் - மாலைக் காலத்துச் செக்கர் வானத்தின் நிறத்தினை ஒத்த செம்மேனியன்;


தாமும் திருநீறு அணியாமல் பிறரையும் திருநீறு அணியக்கூடாது என்கிற வஞ்சகர்கள் சொல்லும் அறிவற்ற சொற்களை அறிவுடையோர் பொருளாகக் கொள்ளமாட்டார்கள். பிறைச்சந்திரனைச் சூடியவனும் மாலைக் காலத்துச் செக்கர் வானத்தின் நிறத்தினை ஒத்த செம்மேனியனும் ஆன சிவபெருமானின் திருவானைக்காவை அறிவுடையோர் வணங்கி உய்வார்கள்.



11)
பிணிசெய் வினைகள் பிரிய வேண்டினீர்
பணிசெய் தரனைப் பரவச் சேர்மினே
பணியும் நிலவும் பாயும் கங்கையும்
அணிசெய் முடியன் ஆனைக் காவையே.



பிணி - கட்டு; நோய்; துன்பம்;
வேண்டினீர் - வேண்டில் நீர்; வேண்டியவர்களே;
வேண்டுதல் - விரும்புதல்; பிரார்த்தித்தல்;
பணி - 1) தொண்டு; 2) நாகம்;


பிணித்திருக்கும் வினைகள் எல்லாம் நீங்க வேண்டும் எனில் நீங்கள் தொண்டுசெய்து ஹரனைப் போற்றச் சேருங்கள், நாகமும் திங்களும் பாய்கிற கங்கையும் அழகுசெய்யும் முடி உடைய சிவபெருமான் உறையும் திருவானைக்காவை.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :



ஆனைக்கா - திருவானைக்காவல் - கோயில் தகவல்கள்:
தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=314



யானைக்கும் சிலந்திக்கும் அருளியது: http://www.thevaaram.org/katturai/27.html
"…..... முற்பிறவியில் சிலந்தியாயிருந்து வெண்ணாவல் மரத்தடிக்கீழ் வீற்றிருந்த பெருமான்மீது சருகு படாவண்ணம் தன் வாயின் நூலால் பந்தர் செய்த புண்ணியத்தால் மறுபிறவியில் சோழ மன்னரான கோச்செங்கட் சோழர் வரலாறு பெரியபுராணத்துள் காண்பது. சிலந்தியும், யானையும் முற்பிறவி உணர்ந்தவர்கள், முற்பிறவியிலும் இருவரும் பகையாயிருந்தவர்களே. இருவருள் சிலந்தி சோழ மன்னர் ஆனார். யானை கயிலையில் கணங்கட்குத் தலைவர் ஆனார். முற்பிறவியில் மாலியவானே சிலந்தி, புட்பதந்தனே யானை. சிலந்திக்கு அருள்செய்த திறத்தைப், "பூச்சூழ்ந்த" என்னும் பாடலில், "சிலந்திக் கந்நாள் கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்" (தி. 6 . 75 பா.8) என்ற பகுதியில் போற்றி உள்ளமை காணலாம்....... “

-------- ---------------