Showing posts with label திருவிராகம். Show all posts
Showing posts with label திருவிராகம். Show all posts

Monday, September 1, 2025

P.447 - இடையாறு - செந்தழலை ஒத்தநிற

2018-08-30

P.447 - இடையாறு

-------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தானதன தானதன தானதன தானா) (திருவிராகம் அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 2.29.1 - திருவிராகம் - "முன்னிய கலைப்பொருளும்")


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


1)

செந்தழலை ஒத்தநிற வேணிதிகழ் செல்வன்

இந்துதனை இண்டையென ஏற்றருளும் ஏந்தல்

இந்திரனு(ம்) மாலயனும் ஈசனென ஏத்தும்

எந்தையிடம் ஈரவயல் சூழுமிடை யாறே.


செந்தழலை ஒத்த நிற வேணி திகழ் செல்வன் - சிவந்த நெருப்புப் போன்ற நிறமுடைய சடையை உடைய செல்வன்; (வேணி - சடை);

இந்துதனை இண்டை என ஏற்று அருளும் ஏந்தல் - திங்களை இண்டைமாலை போலச் சூடிய தலைவன்; (இந்து - சந்திரன்); (இண்டை - தலையில் அணியும் மாலைவகை);

இந்திரனும் மால்-அயனும் ஈசன் என ஏத்தும் - இந்திரன், திருமால், பிரமன் இவர்களால் "ஈசன்" என்று போற்றி வழிபடப்பெறும்;

எந்தை இடம் ஈர-வயல் சூழும் இடையாறே - எம் தந்தையான சிவபெருமான் உறையும் தலம் ஈரம் மிக்க வயல் சூழ்ந்த இடையாறு ஆகும். (ஈரம் - நீர்ப்பற்று; குளிர்ச்சி); (ஈரவயல் - தண்வயல் என்பதனை ஒத்த பிரயோகம்; சம்பந்தர் தேவாரம் - 2.45.11 - "தண்வயல்சூழ் காழி");


2)

வாச(ம்)மலி கொன்றையணி வார்சடையன் நாளும்

நேச(ம்)மிக ஏத்துமவர் நெஞ்சிலுறை தேசன்

நாசமிலி பார்த்தனவன் நாடுபடை ஈந்த

ஈசனிடம் ஈரவயல் சூழுமிடை யாறே.


வாசம் மலி கொன்றை அணி வார்-சடையன் - மணம் மிக்க கொன்றைமலரை நீள்சடையில் அணிந்தவன்; (வார்தல் - நீள்தல்);

நாளும் நேசம் மிக ஏத்தும் அவர் நெஞ்சில் உறை தேசன் - தினமும் அன்போடு துதிப்பவர் நெஞ்சில் உறைகின்ற ஒளிவடிவினன்;

நாசமிலி - அழிவற்றவன்;

பார்த்தனவன் நாடு-படை ஈந்த - அர்ஜுனன் விரும்பிய பாசுபதாஸ்திரத்தை அருளிய; (பார்த்தன் - அர்ஜுனன்; அவன் - பகுதிப்பொருள்விகுதி); (நாடுதல் - விரும்புதல்); (படை - ஆயுதம்);

ஈசன் இடம் ஈர-வயல் சூழும் இடையாறே - சிவபெருமான் உறையும் தலம் ஈரம் மிக்க வயல் சூழ்ந்த இடையாறு ஆகும்.


3)

சாந்தமென நீறுதனை மார்பிலணி தந்தை

சேர்ந்துசுரர் ஏத்தவருள் செய்துபெரு நஞ்சை

மாந்துமணி கண்டனுமை மங்கையொரு கூறாம்

ஏந்தலிடம் ஈரவயல் சூழுமிடை யாறே.


சாந்தம் என நீறுதனை மார்பில் அணி தந்தை - சந்தனம் போலத் திருநீற்றை மார்பில் பூசிய தந்தை; (சாந்தம் - சந்தனம்);

சேர்ந்து சுரர் ஏத்த அருள்செய்து பெரு-நஞ்சை மாந்து மணிகண்டன் - தேவர்களெல்லாம் கூடி இறைஞ்ச, அவர்களுக்கு அருள்செய்து, ஆலகாலத்தை உண்ட நீலமணிகண்டம் உடையவன்; (மாந்துதல் - உண்ணுதல்);

மை மங்கைரு கூறு ஆம் - திருமேனியில் உமாதேவி இடப்பக்கம் ஒரு பாகம் ஆகிய;

ஏந்தல் இடம் ஈர-வயல் சூழும் இடையாறே - பெருமையுடையவனான சிவபெருமான் உறையும் தலம் ஈரம் மிக்க வயல் சூழ்ந்த இடையாறு ஆகும். (ஏந்தல் - பெருமையிற் சிறந்தோன்; அரசன்);


4)

போற்றுமுனி பொன்றுதினம் என்றுவரு பொல்லாக்

கூற்றையுதை செய்தவிறை கூவிளமும் ஆறும்

சீற்ற(ம்)மலி பாம்புமணி செஞ்சடையன் வெள்ளை

ஏற்றனிடம் ஈரவயல் சூழுமிடை யாறே.


போற்று முனி பொன்று தினம் என்று வரு பொல்லாக் கூற்றை உதைசெய்த இறை - திருவடியைப் போற்றி வணங்கிய மார்க்கண்டேயர் இறக்கும் நாள் என்று வந்த கொடிய கூற்றுவனை உதைத்த இறைவன்; (முனி - முனிவர்); (பொன்றுதல் - சாதல்);

கூவிளமும் ஆறும் சீற்றம் மலி பாம்பும் அணி செஞ்சடையன் - செஞ்சடையில் வில்வம், கங்கை, சினம் மிக்க பாம்பு இவற்றையெல்லாம் அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்);

வெள்ளை-ஏற்றன் இடம் ஈர-வயல் சூழும் இடையாறே - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான் உறையும் தலம் ஈரம் மிக்க வயல் சூழ்ந்த இடையாறு ஆகும். (ஏறு - இடபம்);


5)

பருக்கையுடை வேழமது பற்றியுரி செய்த

திருக்கையினன் ஆரமென நாகமணி தேவன்

இருக்குதனை ஓதியவன் என்றுமக லாதே

இருக்குமிடம் ஈரவயல் சூழுமிடை யாறே.


பருக்-கையுடை வேழம்அது பற்றி உரிசெய்த திருக்-கையினன் - பருத்த துதிக்கையை உடைய யானையைப் பிடித்து அதன் தோலைக் கையால் உரித்தவன்;

ஆரம் என நாகம் அணி தேவன் - பாம்பை மாலையாக அணிகின்ற தேவன்;

இருக்குதனை ஓதியவன் - வேதங்களைப் பாடியருளியவன்; (இருக்கு - ரிக் - வேதம்);

என்றும் அகலாதே இருக்கும் இடம் ஈர-வயல் சூழும் இடையாறே - அச்சிவபெருமான் நீங்காது உறையும் தலம் ஈரம் மிக்க வயல் சூழ்ந்த இடையாறு ஆகும். (அகல்தல் - நீங்குதல்);


6)

கண்திகழு(ம்) நெற்றிகொடு காமனையெ ரித்தான்

பெண்திகழு(ம்) மேனியினன் நாளுமடி பேணித்

தெண்டனிடும் அன்பரிடர் தீர்க்குமிறை திங்கள்

இண்டையனி ருக்குமிடம் ஏர்கொளிடை யாறே.


கண் திகழும் நெற்றிகொடு காமனைரித்தான் - நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தவன்; (கண்டிகழும் = கண் + திகழும்); (கண் திகழும் நெற்றி = நெற்றிக்கண்);

பெண் திகழும் மேனியினன் - உமை ஒரு பங்கன்; (பெண்டிகழும் = பெண் + திகழும்);

நாளும் அடி பேணித் தெண்டனிடும் அன்பர் இடர் தீர்க்கும் இறை - தினமும் திருவடியைப் போற்றி வணங்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்க்கும் இறைவன்;

திங்கள்-இண்டையன் இருக்கும் இடம் ஏர்கொள் இடையாறே - சந்திரனைத் திருமுடிமேல் இண்டைமாலை போல அணிந்த சிவபெருமான் உறையும் தலம் அழகிய இடையாறு ஆகும். (இண்டை - தலையில் அணியும் மாலைவகை); (ஏர் - அழகு);


7)

நீற்றையணி நேயரிடர் நீக்கியருள் நாதன்

தோற்றமிலி அந்தமிலி தூயசடை மீது

நாற்ற(ம்)மலி கொன்றையொடு நச்சரவு திங்கள்

ஏற்றவனி ருக்குமிடம் ஏர்கொளிடை யாறே.


நீற்றை அணி நேயர் இடர் நீக்கி அருள் நாதன் - திருநீற்றைப் பூசி வழிபடும் பக்தர்களது துன்பங்களைத் தீர்த்து அருளும் தலைவன்;

தோற்றமிலி அந்தமிலி - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்;

தூய சடைமீது நாற்றம் மலி கொன்றையொடு நச்சரவு திங்கள் - தூய சடையின்மேல் மணம் மிக்க கொன்றைமலர், விஷப்பாம்பு, சந்திரன் இவற்றையெல்லாம்;

ஏற்றவன் இருக்கும் இடம் ஏர்கொள் இடையாறே - அணிந்த சிவபெருமான் உறையும் தலம் அழகிய இடையாறு ஆகும். (ஏர் - அழகு);


8)

திருத்தகுபொ ருப்பெறிசெ ருக்கனழ ஊன்றி

நெரித்தினிய கீதமது கேட்டருள்நி ருத்தன்

மருத்திகழும் அம்புதொடு மன்மதனை முன்னம்

எரித்தவனி ருக்குமிடம் ஏர்கொளிடை யாறே.


திருத்தகு பொருப்பு எறி செருக்கன் அழ ஊன்றி நெரித்து - திரு மிக்க அழகிய கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்றவனான செருக்குடைய இராவணனை அவன் அழும்படி ஒரு விரலை ஊன்றி நசுக்கி; (திருத்தகுதல் - பரிசுத்தம் பொருந்துதல்; அழகு தகுதல்); (பொருப்பு - மலை); (செருக்கன் - கர்வம் மிக்கவன்); (நெரித்தல் - நசுக்குதல்);

இனிய கீதம்அது கேட்டு அருள் நிருத்தன் - அவன் இசைபாடக் கேட்டு இரங்கி அருள்புரிந்த கூத்தன்; (நிருத்தன் - கூத்தன்);

மருத் திகழும் அம்பு தொடு மன்மதனை முன்னம் எரித்தவன் - வாசனையுடைய மலர்-அம்புகளைத் தொடுக்கின்ற மன்மதனை முற்காலத்தில் எரித்தவன்; (மரு - வாசனை);

இருக்கும் இடம் ஏர்கொள் இடையாறே - அப்பெருமான் உறையும் தலம் அழகிய இடையாறு ஆகும். (ஏர் - அழகு);


9)

அயன்திருவின் நாயகன கழ்ந்துயர ஏறி

முயன்றிடவ ளர்ந்தவெரி முன்பணியும் அன்பர்

வியன்புவனம் ஆளவருள் நல்குமரன் எல்லாம்

இயன்றவனி ருக்குமிடம் ஏர்கொளிடை யாறே.


அயன் திருவின் நாயகன் அகழ்ந்து உயர ஏறி முயன்றிட வளர்ந்த எரி - பிரமனும் திருமகள் தலைவனான திருமாலும் நிலத்தை அகழ்ந்தும் வானில் பறந்து உயர்ந்தும் தேடும்படி ஓங்கிய ஜோதிவடிவினன்; (அயன்றிருவின் = அயன் + திருவின்); (திருமால் பிரமன் இவர்கள் அடிமுடி தேடியது எதிர்நிரனிறையாக வந்தது);

முன் பணியும் அன்பர் வியன் புவனம் ஆள அருள் நல்கும் அரன் - திருமுன்பு வணங்குகின்ற பக்தர்கள் அகன்ற பெரிய உலகெல்லாம் ஆளும்படி அருள்கின்ற ஹரன்;

எல்லாம் இயன்றவன் - எல்லாம் செய்ய வல்லவன்;

இருக்கும் இடம் ஏர்கொள் இடையாறே - அப்பெருமான் உறையும் தலம் அழகிய இடையாறு ஆகும். (ஏர் - அழகு);


10)

பொய்ம்மொழிகள் நாளுமுரை புல்லருரை பேணேல்

கொய்ம்மலர்கள் இட்டுருகு நெஞ்சர்குறை தீர்ப்பான்

அம்மையொரு பங்கமரும் அத்தனர வார்த்த

எம்மிறையி ருக்குமிடம் ஏர்கொளிடை யாறே.


பொய்ம்மொழிகள் நாளும் உரை புல்லர் உரை பேணேல் - பொய்களையே தினந்தோறும் பேசுகின்ற கீழோர்களது வார்த்தைகளை மதிக்கவேண்டா;

கொய்ம்மலர்கள் இட்டு உருகு நெஞ்சர் குறை தீர்ப்பான் - பறித்த மலர்களைத் தூவி உருகுகின்ற மனம் உடைய அன்பர்களது குறைகளையெல்லாம் தீர்ப்பவன்; (கொய்தல் - பறித்தல்);

அம்மை ஒரு பங்கு அமரும் அத்தன் - உமையம்மையை ஒரு பங்கில் விரும்பும் அப்பன் - அம்மையப்பன்;

அரவு ஆர்த்த எம் இறை - பாம்பை நாணாகக் கட்டிய எம் இறைவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

இருக்கும் இடம் ஏர்கொள் இடையாறே - அப்பெருமான் உறையும் தலம் அழகிய இடையாறு ஆகும். (ஏர் - அழகு);


11)

சிற்றிடைம டக்கொடியை வாம(ம்)மகிழ் தேவன்

வெற்றிவிடை மீதுவரு வேந்தனிரு தாளைப்

பற்றியவர் உற்றதுணை மேயபதி பெண்ணை

எற்றுதிரை எய்துகரை ஏர்கொளிடை யாறே.


சிற்றிடை மடக்கொடியை வாமம் மகிழ் தேவன் - சிற்றிடையை உடையவளும் இளங்கொடி போன்றவளுமான உமாதேவியைத் தன் திருமேனியில் இடப்பக்கம் ஒரு பாகமாக விரும்பிய தேவன்; (மகிழ்தல் - விரும்புதல்); (* சிற்றிடை நாயகி - இத்தலத்து இறைவி திருநாமம்);

வெற்றி-விடைமீது வரு வேந்தன் - வெற்றியை உடைய இடபத்தை வாகனமாக உடைய அரசன்;

இரு-தாளைப் பற்றியவர் உற்ற துணை மேய பதி - தன் இரு-திருவடிகளைப் பற்றிய அடியவர்களுக்குச் சிறந்த துணைவன் ஆன சிவபெருமான் விரும்பி உறையும் தலம்; (மேய - மேவிய); (பதி - தலம்);

பெண்ணை எற்று திரை எய்து கரை ஏர்கொள் இடையாறே - பெண்ணையாற்றின் மோதுகின்ற அலைகள் அடைகின்ற கரையில் உள்ள அழகிய இடையாறு ஆகும். (பெண்ணை - பெண்ணையாறு); (எற்றுதல் - மோதுதல்); (திரை - அலை); (ஏர் - அழகு);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Wednesday, March 5, 2025

P.361 - சிரபுரம் (காழி) - பெரியவன் அரியவன்

2016-11-13

P.361 - சிரபுரம் (காழி)

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தனதன தனதன தனதன தனதன - திருவிராகம் ஒத்த அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 1.123.5 - "பிடியத னுருவுமை")


1)

பெரியவன் அரியவன் ஒருமத கரியதன்

உரிபுனை வடிவினன் உமையிடம் உடையவன்

அரிவையர் இடுபலி அதுபெற உழலிறை

திரிபுரம் எரியரன் நகர்சிர புரமே.


பெரியவன் அரியவன் - மிகவும் பெரியவன் (/மகாதேவன்), மிகவும் அரியவன்;

ஒரு மதகரி அதன் உரி புனை வடிவினன் - பெரிய ஆண்யானையின் தோலை மார்பு சூழப் போர்த்த கோலத்தினன்;

உமை இடம் உடையவன் - உமையை இடப்பாகமாக உடையவன்;

அரிவையர் இடுபலிஅது பெற உழல் இறை - பெண்கள் இடும் பிச்சைக்காகத் திரியும் இறைவன்;

திரிபுரம் எரி அரன் - முப்புரங்களை எரித்த ஹரன்;

நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் தலம் சிரபுரம் (சீகாழி); (சிரபுரம் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);


2)

அஞ்சிய இமையவர் அடியிணை பரவிட

நஞ்சணி மிடறினன் நடமிடு கழலினன்

வெஞ்சின விடையினன் விரிபுனல் அலைதரு

செஞ்சடை யினனுறை நகர்சிர புரமே.


அஞ்சிய இமையவர் அடியிணை பரவிட நஞ்சு அணி மிடறினன் - ஆலகால விஷத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் இரு-திருவடிகளைப் போற்றவும், இரங்கி அவ்விடத்தைக் கண்டத்தில் அணிந்தவன்; (மிடறு - கண்டம்; மிடற்றினன் என்றும், சந்தம் நோக்கி "மிடறினன்" என்றும் பாடல்களில் வரும்);

நடமிடு கழலினன் - கூத்தன்; (கழல் - திருவடி);

வெஞ்சின விடையினன் - சினக்கும் இடபத்தை ஊர்தியாக உடையவன்;

விரிபுனல் அலைதரு செஞ்சடையினன் - பரந்த கங்கையாறு அலைமோதுகின்ற (/அலைகின்ற) சடையை உடையவன்; (அலைத்தல் - அலைமோதுதல்; அலைதல் - திரிதல்); (தருதல் - ஒரு துணைவினை);

உறை நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் பதி சிரபுரம் (சீகாழி);


3)

புகலியர் பதிமொழி தமிழுரை தகவினர்

அகமகிழ் வுறவினை அறவருள் புரிசிவன்

இகலிய எயிலெரி இறையவன் இளமதி

திகழ்சடை முடியினன் நகர்சிர புரமே.


புகலியர்பதி மொழி-தமிழ் உரை-தகவினர் அகம் மகிழ்வுற வினை அறருள்புரி சிவன் - காழியர்கோனான திருஞான சம்பந்தர் பாடியருளிய தேவாரத்தைச் சொல்லும் அடியார்கள் மனம் மகிழ அவர்களது வினையெல்லாம் தீர அருள்கின்ற சிவன்; (புகலி - சீகழியின் 12 பெயர்களில் ஒன்று); (பதி - தலைவன்); (தகவு - தகுதி; குணம்);

இகலிய எயில் எரி இறையவன் - பகைத்த முப்புரங்களை எரித்த இறைவன்; (இகல்தல் - பகைத்தல்); (எயில் - கோட்டை);

இளமதி திகழ் சடைமுடியினன் நகர் சிபுரமே - இளம்பிறை விளங்குகின்ற சடையை உடைய பெருமான் நகர் சிரபுரம் (சீகாழி); (சடைமுடி - ஜடாமகுடம்);


4)

சேவடி யிணையவை தின(ம்)நினை அடியவர்

காவலன் அளிகொடு கவுணியர் பரவிய

பாவமர் செவியினன் அமரர்கள் பணிபதி

சேவமர் சிவனுறை நகர்சிர புரமே.


சேவடி-ணை-வை தினம் நினை அடியவர் காவலன் - சிவந்த இரு-திருவடிகளைத் தினமும் நினைகின்ற பக்தர்களைக் காப்பவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.87.1 - "வனமுலை யிணையவை");

அளி-கொடு கவுணியர் பரவிய பா அமர் செவியினன் - அன்பால் திருஞான சம்பந்தர் பாடியருளிய பாடல்களை விரும்பிக் கேட்கும் காதினன்; (அளி - அன்பு); (கவுணியர் - கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தர்); (அமர்தல் - விரும்புதல்);

அமரர்கள் பணி பதி - தேவர்கள் வழிபடும் தலைவன்;

சே அமர் சிவன் உறை நகர் சிரபுரமே - இடபத்தை ஊர்தியாக விரும்பிய சிவபெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


5)

தவமுனி வர்கள்தொழு தருநிழல் அமர்குரு

அவனியில் வழிபடும் அடியவர் உறுதுணை

பவனறு மலர்மதி படர்சடை மிசையணி

சிவனவன் உறைதரு நகர்சிர புரமே.


தவ-முனிவர்கள் தொழு தருநிழல் அமர் குரு - தவமுனிவர்கள் நால்வர் போற்றக் கல்லாலமரத்தின்கீழ் இருந்த தட்சிணாமூர்த்தி; (தரு - மரம்);

அவனியில் வழிபடும் அடியவர் உறுதுணை - உலகில் வழிபடுகின்ற பக்தர்களுக்கு உற்ற துணை;

பவன் - என்றும் உள்ளவன்; (பவன் - சிவன் திருநாமம் - என்றும் இருப்பவன்);

நறுமலர் மதி படர்-சடைமிசை அணி சிவன்அவன் உறைதரு நகர் சிரபுரமே - வாசமலர்களையும் திங்களையும் படர்ந்த சடையின்மேல் அணியும் சிவபெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


6)

தினமரு மறையுரை சிறுவர துயிர்கொல

முனமடை மறலியை உயிரற முனிபவன்

அனநடை உமையொரு புடையினன் அடல்மிகு

சினவிடை அமரரன் நகர்சிர புரமே.


தினம் அருமறை உரை சிறுவரது உயிர் கொல - தினமும் அரிய வேதங்களைச் சொல்லி வழிபட்ட மறைச்சிறுவரான மார்க்கண்டேயரின் உயிரைக் கொல்வதற்கு;

முனம் அடை மறலியை உயிர் அற முனிபவன் - முன்பு அடைந்த காலனின் உயிர் அழியுமாறு அவனைக் கோபித்தவன் (சினந்து உதைத்தவன்); (மறலி - கூற்றுவன்); (முனிதல் - கோபித்தல்);

அன நடை உமை ஒரு புடையினன் - அன்னம் போன்ற நடையை உடைய உமையை ஒரு பக்கம் உடையவன்; (அனநடை - அன்னநடை);

அடல் மிகு சின-விடை அமர் அரன் நகர் சிரபுரமே - வலிய, சினம் மிகுந்த இடபத்தை ஊர்தியாக விரும்பிய ஹரன் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


7)

மங்கல வடிவினன் மலரடி தொழுதவர்

தங்களின் அருவினை தனையழி பரிவினன்

அங்கமும் அரவமு(ம்) மலர்களும் அழகிய

திங்களும் அணிசிவன் நகர்சிர புரமே.


மங்கல வடிவினன் - மங்கலத்தின் திருவுரு;

மலரடி தொழுதவர் தங்களின் அருவினைதனை அழி பரிவினன் - மலர் போன்ற திருவடிகளை வழிபட்டவரின் பழவினைகளை அழிக்கும் கருணாமூர்த்தி;

அங்கமும் அரவமும் மலர்களும் அழகிய திங்களும் அணி சிவன் - எலும்பையும் பாம்பையும் பூக்களையும் அழகிய சந்திரனையும் அணிந்த சிவபெருமான்; (அங்கம் - எலும்பு);

நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


8)

வரைபெயர் மதியிலி மணிமுடி ஒருபது

கரமிரு பதுநெரி விரலினன் அரவினன்

இரவினில் அருநடம் இடுபவன் ஒலிமலி

திரையடை சடையினன் நகர்சிர புரமே.


வரை பெயர் மதியிலி மணிமுடி ஒருபது கரம் இருபது நெரி விரலினன் - கயிலைமலையைப் பெயர்த்த அறிவில்லாதவனான இராவணனின் கிரீடம் அணிந்த பத்துத் தலைகளையும் இருபது கைகளையும் திருப்பாத-விரல் ஒன்றை ஊன்றி நசுக்கியவன்; (வரை - மலை);

அரவினன் - பாம்பை அணிந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.72.3 - "நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்");

இரவினில் அருநடம் இடுபவன் - நள்ளிருளில் அரிய கூத்து இயற்றுபவன்;

ஒலி மலி திரை அடை சடையினன் - மிகவும் ஒலிக்கின்ற அலைகளை உடைய கங்கையை அடைத்த சடையை உடையவன்; (திரை - அலை; நதி);

நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


9)

முன்னரி முளரியன் அடிமுடி முயலெரி

உன்னிய அடியவர் உளமுறை விடமென

மன்னிய பெருமையன் வளர்மதி அலைநதி

சென்னியின் மிசையினன் நகர்சிர புரமே.


முன் அரி முளரியன் அடிமுடி முயல் எரி - முன்னர்த் திருமாலும் தாமரைமேல் இருக்கும் பிரமனும் அடியும் முடியும் தேடி முயலுமாறு உயர்ந்த ஜோதி; (முளரி - தாமரை); (சம்பந்தர் தேவாரம் - 1.92.9 - "அயனு மாலுமாய் முயலு முடியினீர்");

உன்னிய அடியவர் உளம் உறைவிடம் என மன்னிய பெருமையன் - தியானிக்கும் பக்தர்களின் உள்ளமே தான் தங்கும் இடமாக நிலைத்த பெருமையை உடையவன்; (உன்னுதல் - எண்ணுதல்); (மன்னுதல் - நிலைபெறுதல்; மிகுதல்);

வளர்மதி அலைநதி சென்னியின் மிசையினன் - வளர்கின்ற திங்களையும் அலைக்கின்ற (/அலையுடைய / அலைகின்ற) நதியையும் திருமுடிமேல் உடையவன்; (மிசை - மேல்);

நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


10)

ஐயனை அடைகிலர் அனுதினம் அவ(ம்)மொழி

பொய்யரின் நெறிதனை விலகுமின் அடிதொழு

கையினர் இடரவை களையிறை பொடியணி

செய்யவன் உறைதரு நகர்சிர புரமே.


ஐயனை அடைகிலர் - ஈசனை அடையாதவர்கள்;

அனுதினம் அவம் மொழி பொய்யரின் நெறிதனை விலகுமின் - தினந்தோறும் இழிந்த சொற்களைப் பேசும் அப்-பொய்யர்கள் சொல்லும் மார்க்கத்தை நீங்கள் நீங்குங்கள்;

அடிதொழு கையினர் இடர்அவை களை இறை - திருவடியைக் கையால் தொழும் பக்தர்களின் இடர்களை நீக்கும் இறைவன்; ( சம்பந்தர் தேவாரம் - 1,52.3 - "நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.");

பொடி அணி செய்யவன் - திருநீற்றைப் பூசிய செம்மேனியன்;

உறைதரு நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


11)

மூவரின் முதலினன் முடிவிலன் அருமறை

நாவினன் நகுதலை தரிகரன் நறைமலி

பூவணி திருமுடி யினனொளிர் பொடியணி

தீவணன் உறைதரு நகர்சிர புரமே.


மூவரின் முதலினன் - மும்மூர்த்திகளின் முதலானவன்; மும்மூர்த்திகளுக்கும் தலைவன்;

முடிவு இலன் - அழிவற்றவன்;

அருமறை நாவினன் - அரிய வேதங்களை நாவினால் ஓதியவன்;

நகு தலை தரி கரன் - ஒளிவீசும் மண்டையோட்டைக் கையில் தாங்கியவன்; (நகுதல் - சிரித்தல்; பிரகாசித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.133.8 - "நகுதலையிற் பலிதேர்ந்து");

நறை மலி பூ அணி திருமுடியினன் - தேன் மிக்க பூக்களைத் திருமுடிமேல் அணிந்தவன்;

ஒளிர் பொடி அணி தீவணன் - ஒளிவீசும் திருநீற்றை அணிந்த தீப்போன்ற செம்மேனியன்; (பொடி - திருநீறு); (தீவணன் - தீவண்ணன்);

உறைதரு நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு :

  • சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" என்ற சந்தம்.

  • முதற்சீர் "தானன" என்றும் சில பாடல்களில் வரலாம்.

  • பாடல்தோறும் பாடலின் ஈற்றுச்சீர் "தனனா".

  • முடுகு ஓசை அமைந்த பாடல்கள். தேவாரத்தில் உள்ள திருவிராகம் ஒத்த அமைப்பு.

சம்பந்தர் தேவாரம் - 1.123.5 - பிடியத னுருவுமை கொளமிகு கரியது


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Saturday, November 11, 2023

07.23 – முதுகுன்றம் (விருத்தாசலம்) - சுடலையில் இருளினில்

07.23 – முதுகுன்றம் (விருத்தாசலம்)

2016-01-23

முதுகுன்றம் (திருமுதுகுன்றம் - விருத்தாசலம்)

----------------------

(சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" - திருவிராகம் ஒத்த அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - திருவிராகம் - 1.123.5 - பிடியத னுருவுமை கொளமிகு கரியது)


1)

சுடலையில் இருளினில் நடமிடு கழலினன்

இடைமெலி மலைமகள் இடமுறை எழிலினன்

அடலெரு தமரரன் அழகிய மதியொடு

படவர வணியிறை பதிபழ மலையே.


சுடலையில் இருளினில் நடம் இடு கழலினன் - சுடுகாட்டில் நள்ளிருளில் திருநடம் செய்யும் திருவடியினன்;

இடை மெலி மலைமகள் இடம் உறை எழிலினன் - மெலிந்த இடையை உடைய உமாதேவி இடப்பக்கம் உறையும் அழகிய திருமேனி உடையவன்;

அடல் எருது அமர் அரன் - வலிய இடபத்தை ஊர்தியாக விரும்பும் ஹரன்; (அடல் - வலிமை);

அழகிய மதியொடு பட-அரவு அணி இறை பதி பழமலையே - அழகிய சந்திரனையும் படம் உடைய நாகத்தையும் அணியும் இறைவன் உறையும் தலம் திருமுதுகுன்றம்; (பதி - உறைவிடம்; ஊர்); (பழமலை - முதுகுன்றம் - விருத்தாசலம்);


2)

துன்னிய மலர்கொடு துணையடி தொழுமவர்

நன்னிலை பெறவருள் அரனிமை யவர்பதி

சென்னியில் அணிமதி திரைநதி குரவொடு

பன்னகம் அணியிறை பதிபழ மலையே.


துன்னிய மலர்கொடு துணையடி தொழும்அவர் நன்னிலை பெற அருள் அரன் - நெருங்கத் தொடுத்த மலர்களால் இருதிருவடிகளைத் தொழும் பக்தர்கள் நற்கதி பெற அருளும் ஹரன்; (துன்னுதல் - செறிதல்);

இமையவர் பதி - தேவர்கள் தலைவன்; (பதி - தலைவன்);

சென்னியில் அணி மதி, திரை நதி, குரவொடு பன்னகம் அணி இறை பதி பழமலையே - திருமுடிமேல் அழகிய திங்கள், அலையுடைய கங்கை, குரா மலர் இவற்றோடு பாம்பையும் பூணும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (அணி - அழகிய); (திரை - அலை); (குரவு - குராமலர்); (பன்னகம் - பாம்பு);


3)

சாந்தலர் மணமலி தமிழ்கொடு தொழவினை

மாய்ந்துயர் கதிபெற வரமருள் இனியவன்

ஏந்திழை இடமமர் எழிலவன் நிலவொடு

பாந்தளும் அணியிறை பதிபழ மலையே.


சாந்து, அலர், மணம் மலி தமிழ்கொடு தொழ - சந்தனம், பூக்கள், மணமிக்க தமிழ்ப்பாமாலைகள் இவற்றால் வணங்கினால்; (சாந்து - கலவைச்சந்தனம் - Sandal paste); (அலர் - பூ); (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு);

வினை மாய்ந்து உயர் கதி பெற வரம் அருள் இனியவன் - அவ்வடியவர்களுடைய வினைகள் அழிந்து அவர்கள் சிவலோகம் அடைய வரம் அருளும் இனியவன்;

ஏந்திழை இடம் அமர் எழிலவன் - உமையை இடப்பக்கம் பாகமாக விரும்பிய அழகன்; (அமர்தல் - இருத்தல்; விரும்புதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.110.5 - "கரியுரி போர்த்துகந்த எழிலவன்");

நிலவொடு பாந்தளும் அணி இறை பதி பழமலையே - சந்திரனையும் பாம்பையும் அணியும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (பாந்தள் - பாம்பு);


4)

அடைவது சுதையென அலைகடல் கடையவும்

விடமெழ வெருவிய சுரரடி தொழுதெழ

உடனொரு மணியென மிடறிடு பரனதி

படர்சடை அணியிறை பதிபழ மலையே.


அடைவது சுதை என அலைகடல் கடையவும் விடம் எழ - அமுதத்தை அடைவோம் என்று எண்ணிக் கடலைக் கடைந்தபோது நஞ்சு தோன்றவும்; (சுதை - அமுதம்); (அலைகடல் - அலைக்கின்ற கடல்);

வெருவிய சுரர் அடி தொழுதெழ - அஞ்சிய தேவர்கள் ஈசன் திருவடியை வணங்கவும்; (வெருவுதல் - அஞ்சுதல்); (சுரர் - தேவர்கள்);

உடன் ஒரு மணி என மிடறு இடு பரன் -உடனே அவ்விடத்தை உண்டு ஒப்பற்ற நீலமணி போலக் கண்டத்தில் இட்ட பரமன்;

நதி படர்சடை அணி இறை பதி பழமலையே - கங்கையைப் படரும் சடையில் அணியும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்;


5)

கையினில் உழைமழு கனலெரி யிவைதரி

செய்யவன் ஒருவிடை திகழ்கொடி உடையவன்

மையணி மிடறினன் வளர்மதி அதனொடு

பையர வணியிறை பதிபழ மலையே.


கையினில் உழை, மழு, கனல்-ரி இவை தரி செய்யவன் - கையில் மான், மழு, ஒளி வீசும் நெருப்பு இவற்றைத் தாங்கும் செம்மேனியன்; (உழை - மான்); (கனல் எரி - கனல்கின்ற தீ); (செய் - சிவப்பு); (அப்பர் தேவாரம் - 4.37.5 - "காடிட மாக நின்று கனலெரி கையில் ஏந்திப்");

ஒரு விடை திகழ் கொடி உடையவன் - ஒப்பற்ற இடபக்கொடி உடையவன்;

மை அணி மிடறினன் - கறையை அணிந்த கண்டம் உடையவன்; (மை - கருநிறம்; கறை);

வளர்-மதி அதனொடு பை-அரவு அணி இறை பதி பழமலையே - இளம் திங்களையும் படம் உடைய பாம்பையும் அணியும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (பை - பாம்பின் படம்);


6)

மணிமலர் மறைமொழி இவைகொடு மலரடி

பணிபவர் அருவினை பறைதர அருள்பதி

துணிமதி அதனொடு சுழிநதி மணமலர்

பணிமுடி அணியிறை பதிபழ மலையே.


மணிமலர் மறைமொழி இவைகொடு மலரடி பணிபவர் அருவினை பறைதர அருள் பதி - அழகிய பூக்கள், வேதமந்திரங்கள் இவற்றால் மலர் போன்ற திருவடியைத் தொழும் அன்பர்களது அரிய வினைகளெல்லாம் அழிய அருளும் தலைவன்; (மணி - அழகு); (மறை - வேதம்); (பறைதல் - அழிதல்); (தருதல் - ஒரு துணைவினை); (பதி - தலைவன்);

துணிமதி அதனொடு சுழிநதி மணமலர் பணி முடி அணி இறை பதி பழமலையே - பிறைச்சந்திரனோடு சுழிகள் உடைய கங்கையையும் வாசமலர்களையும் நாகப்பாம்பையும் திருமுடியில் அணியும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (துணிமதி - நிலாத்துண்டம்); (துணி - துண்டம்; துணிதல் - வெட்டுண்ணுதல்); (சுழி - நீர்ச்சுழி - Whirl, vortex, eddy); (சுழித்தல் - 2. To form whirlpools, eddies; நீர்ச்சுழியுண்டாதல்);(பணி - நாகம்); (பெரிய புராணம் - சண்டேசுர நாயனார் புராணம் - 12.20.56 - "துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்");


7)

காய்கணை கொடுதிரி புரமெரி சிலையினன்

ஆய்மலர் கொடுதொழும் அடியவர் அருவினை

மாய்தர அருளரன் மலைமகள் அவள்பதி

பாய்விடை அமரிறை பதிபழ மலையே.


காய்கணைகொடு திரிபுரம் எரி-சிலையினன் - எரிக்கும் அம்பினால் முப்புரங்களை எரித்த வில்லை உடையவன்; (காய்தல் - சுடுதல்; எரித்தல்; அழித்தல்); (கணை - அம்பு); (சிலை - வில்);

ஆய்மலர் கொடு தொழும் அடியவர் அருவினை மாய்தர அருள் அரன் - ஆய்ந்து எடுத்த சிறந்த பூக்களால் வணங்கும் பக்தர்களது அரிய வினைகள் அழிய அருளும் ஹரன்; (ஆய்தல் - தெரிந்தெடுத்தல் - To select, choose); (மாய்தர - மாய; தருதல் - ஒரு துணைவினை);

மலைமகள் அவள் பதி - உமாபதி; (பதி - தலைவன்; கணவன்); (அவள் - பகுதிப்பொருள்விகுதி);

பாய்விடை அமர் இறை பதி பழமலையே - பாய்ந்து செல்லக்கூடிய இடபத்தை ஊர்தியாக விரும்பிய இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (பதி - தலம்);


8)

அருவரை எறிதச முகனழ நெரிதரு

திருவிரல் உடையவன் நிருபமன் அழிவிலன்

உருகிய மனமுடை அடியவர் இடர்துடை

பரிவுடை அரனுறை பதிபழ மலையே.


அருவரை எறி தசமுகன் அழ நெரிதரு திருவிரல் உடையவன் - கயிலாயமலையைப் பெயர்த்து வீச முயன்ற இராவணனை அவன் அழுமாறு நசுக்கிய திருவிரல் உடையவன்; (அரு வரை - அரிய மலை - கயிலாயமலை); (நெரித்தல் - நசுக்குதல்); (தருதல் - ஒரு துணைவினை) (சம்பந்தர் தேவாரம்- 1.125.8 - "கரமிரு பதுமுடி யொருபது முடையவன் உரநெரி தரவரை யடர்வுசெய் தவனுறை");

நிருபமன் - ஒப்பில்லாதவன்;

அழிவு இலன் - அழிவற்றவன்;

உருகிய மனம் உடை அடியவர் இடர் துடை பரிவு உடை அரன் உறை பதி பழமலையே - மனம் உருகும் அடியவர்களது துன்பங்களைத் தீர்க்கும் கருணை உடைய ஹரன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (துடைத்தல் - நீக்குதல்); (பரிவு - அன்பு; இரக்கம்);


9)

தரையகழ் அரியுயர் அயனிவர் தொழுமெரி

அரையினில் உரிவையும் அரவமும் அணியரன்

அரகர எனவனு தின(ம்)நினை பவர்மகிழ்

பரகதி தருமிறை பதிபழ மலையே.


தரை அகழ் அரி, உயர் அயன் இவர் தொழும் எரி - (அடிமுடி தேடி) நிலத்தை அகழ்ந்த திருமால், மேலே உயர்ந்த பிரமண் இவர்கள் இருவரும் வணங்கிய சோதி;

அரையினில் உரிவையும் அரவமும் அணி அரன் - அரையில் தோலும் பாம்பும் அணிந்த ஹரன்; (உரிவை - தோல்); (அரவம் - பாம்பு);

அரகர என அனுதினம் நினைபவர் மகிழ் பரகதி தரும் இறை பதி பழமலையே - அரகர என்று தினமும் நினைந்து வழிபடும் அன்பர்கள் விரும்புகின்ற பரகதியை அளிக்கும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (மகிழ்தல் - விரும்புதல்); (பரகதி - மேலான நிலை - முக்தி); (தினநினை - தினம் நினை; புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும்);


10)

கலிமிகு வழியுரை கசடர்கள் அறிகிலர்

மெலிவுறு மதிதனை முடிமிசை அணியரன்

ஒலிகழல் அடிதொழ உயர்வினை அருளிறை

பலிதிரி பரனுறை பதிபழ மலையே.


கலி மிகு வழி உரை கசடர்கள் அறிகிலர் - துன்பம் மிகுந்த மார்க்கங்களைச் சொல்கின்ற கீழோர் அறியமாட்டார்கள்; (கலி - துன்பம்; வஞ்சகம்); (கசடர் - குற்றமுள்ளவர்);

மெலிவுறு மதிதனை முடிமிசை அணி அரன் - தேய்ந்து வாடிய சந்திரனைத் திருமுடிமேல் அணிந்த ஹரன்; (மெலிதல் - உடல் மெலிதல்; வருந்துதல்);

ஒலி-கழல் அடி தொழ உயர்வினை அருள் இறை - ஒலிக்கும் கழலை அணிந்த திருவடியை வணங்கினால் உயர்வை அருளும் இறைவன்;

பலி திரி பரன் உறை பதி பழமலையே - பிச்சைக்கு உழலும் பரமன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (பலி - பிச்சை);


11)

வகைபல மலர்கொடு வழிபடும் அடியவர்

அகமகிழ் வுறவினை அறவருள் அரனடி

புகைமலர் கொடுசுரர் தொழவொரு நகைகொடு

பகைமதில் எரியிறை பதிபழ மலையே.


வகை பல மலர்கொடு வழிபடும் அடியவர் அகமகிழ்வு உற, வினை அற, அருள் அரன் - பலவகைப் பூக்களால் வழிபடும் அடியவர்கள் மனம் மகிழவும் அவர்கள் வினைகள் அழியவும் அருளும் ஹரன்;

அடி புகை மலர்கொடு சுரர் தொழ, ஒரு நகைகொடு பகை மதில் எரி இறை பதி பழமலையே - திருவடியைத் தூபத்தாலும் பூக்களாலும் தேவர்கள் போற்றவும் அவர்களுக்கு இரங்கி ஒரு சிரிப்பால் பகைவர்களுடைய முப்புரங்களையும் எரித்த இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (புகை - நறும்புகை - தூபம்); (நகை - சிரிப்பு);


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு :

சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" என்ற சந்தம்.

முதற்சீர் "தானன" என்றும் சில பாடல்களில் வரலாம்.

பாடல்தோறும் பாடலின் ஈற்றுச்சீர் "தனனா".

முடுகு ஓசை அமைந்த பாடல்கள். தேவாரத்தில் உள்ள திருவிராகம் ஒத்த அமைப்பு.


2) சம்பந்தர் தேவாரம் - 1.123.5 -

பிடியத னுருவுமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்

கடிகண பதிவர வருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------