Sunday, July 31, 2022

T.152 - கச்சி ஏகம்பம் - மிகுத்துப்புரி தீவினை

2011-08-06

T.152 - கச்சி ஏகம்பம் - மிகுத்துப்புரி தீவினை

--------------

(வண்ணவிருத்தம்;

தனத்தத்தன தானன தானன

தனத்தத்தன தானன தானன

தனத்தத்தன தானன தானன .. தந்ததான)

(மதப்பட்டவி சாலக போலமு - திருப்புகழ் - திருப்புக்கொளியூர் அவிநாசி)


முற்குறிப்பு: அரையடிகளின் ஆரம்பத்தில் மோனை வரும் இடத்தில் எதுகை வருமாறு அமைந்த பாடல். அதனால் எட்டு அடிகள் உடைய பாடல் போலவும் தோற்றம் தரும்.

இதுபோல அரையடியில் எதுகை அமைந்த ஒரு திருப்புகழ் - கொடாதவனையே புகழ்ந்து - என்று தொடங்கும் விராலிமலைத் திருப்புகழ்.


மிகுத்துப்புரி தீவினை யாயின

.. .. .. வெருட்டிப்பல பேரிடர் நாடொறும்

.. .. விளைத்துத்தொடர் வாழ்விது போயிரு .. கண்களால்நீர்

.. உகுத்துத்தமிழ் மாலைகள் நாவினொ

.. .. .. டுரைத்துத்திகழ் சேவடி யேதொழும்

.. .. உளத்தைத்தமி யேனுற ஆரருள் .. தந்துகாவாய்

சகத்தைப்படை பூமிசை யான்முகில்

.. .. .. நிறத்துத்திரு மாலிவர் தாள்முடி

.. .. தனைச்சற்றறி யாவண(ம்) நீடிவி .. ளங்குசோதீ

.. அகத்திற்பல நாளொரு கோயிலை

.. .. .. அமைத்துத்தொழு பூசலின் ஓர்தளி

.. .. அதிற்புக்கருள் நேய-அ ராவல்குல் .. மங்கைபாகா

நகைத்துத்திரு மாமலை வீசிய

.. .. .. செருக்குத்தலை ஆறொடு நாலனை

.. .. நசுக்கிப்பிற கேழிசை பாடவ .. ரங்களீவாய்

.. பகைத்துத்திரி தானவர் மூவெயில்

.. .. .. எரிக்கத்தழல் ஆர்கணை ஏவிய

.. .. பருப்பொற்சிலை ஓர்கரம் ஏறிய .. வென்றிவீரா

தொகுத்துப்புனை பூவொடு நீரொடு

.. .. .. துதித்துப்பணி மாணியை நாடிய

.. .. சுருக்கைப்பிடி காலனை வார்கழல் .. ஒன்றைவீசிச்

.. செகுத்துப்பரி வோடருள் நாயக

.. .. .. திரைத்துப்புனல் பாய்சடை யாயணி

.. .. திருக்கச்சியை யேயிட மாவுடை .. எம்பிரானே.


பதம் பிரித்து:

மிகுத்துப் புரி தீவினை ஆயின

.. .. .. வெருட்டிப் பல பேரிடர் நாள்தொறும்

.. .. விளைத்துத் தொடர் வாழ்வு இது போய், இருகண்களால் நீர்

.. உகுத்துத், தமிழ்-மாலைகள் நாவினொடு

.. .. .. உரைத்துத், திகழ் சேவடியே தொழும்

.. .. உளத்தைத் தமியேன் உற ஆரருள் தந்து காவாய்;

சகத்தைப் படை- பூமிசையான், முகில்-

.. .. .. நிறத்துத் திருமால் இவர் தாள்-முடி

.. .. தனைச் சற்று அறியாவண(ம்) நீடி விளங்கு-சோதீ;

.. அகத்திற் பல நாள் ஒரு கோயிலை

.. .. .. அமைத்துத் தொழு பூசலின் ஓர் தளி-

.. .. அதிற்-புக்கருள் நேய; அரா-அல்குல் மங்கைபாகா;

நகைத்துத் திரு-மா-மலை வீசிய

.. .. .. செருக்குத்-தலை ஆறொடு நாலனை

.. .. நசுக்கிப், பிறகு ஏழிசை பாட வரங்கள் ஈவாய்;

.. பகைத்துத் திரி தானவர் மூவெயில்

.. .. .. எரிக்கத் தழல் ஆர் கணை ஏவிய

.. .. பருப்-பொற்சிலை ஓர் கரம் ஏறிய வென்றி-வீரா;

தொகுத்துப் புனை பூவொடு நீரொடு

.. .. .. துதித்துப் பணி மாணியை நாடிய,

.. .. சுருக்கைப் பிடி காலனை வார்-கழல் ஒன்றை வீசிச்

.. செகுத்துப், பரிவோடு அருள் நாயக;

.. .. .. திரைத்துப் புனல் பாய் சடையாய்; அணி

.. .. திருக்கச்சியையே இடமா உடை- எம்பிரானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

மிகுத்துப் புரி தீவினை ஆயின வெருட்டிப் பல பேரிடர் நாள்தொறும் விளைத்துத் தொடர் வாழ்வு இது போய் - ஆணவத்தால் செய்த (& செய்கின்ற) தீவினையெல்லாம் என்னை அச்சுறுத்திப் பல பெருந்துன்பங்களைத் தினமும் உண்டாக்கித் தொடர்கின்ற இந்த வாழ்க்கை நீங்கி; (மிகுத்தல் - செருக்குதல்; பெருக்குதல்); (வெருட்டுதல் - அச்சுறுத்துதல்); (இடர் - துன்பம்);

இருகண்களால் நீர் உகுத்துத், தமிழ்மாலைகள் நாவினொடு உரைத்துத் - இருகண்களால் கண்ணீர் சொரிந்து, தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடி; (உகுத்தல் - சிந்துதல்; சொரிதல்);

திகழ் சேவடியே தொழும் உளத்தைத் மியேன் உற ஆரருள் தந்து காவாய் - விளங்கும் உன் சிவந்த திருவடியையே வழிபடும் உள்ளத்தைக் கதியற்ற அடியேன் பெறுமாறு அரிய அருள் புரிந்து என்னைக் காத்தருள்க;

சகத்தைப் படை- பூமிசையான், முகில்-நிறத்துத் திருமால் இவர் தாள்-முடிதனைச் சற்று அறியாவண(ம்) நீடி விளங்கு-சோதீ - உலகத்தைப் படைக்கும் தொழிலுடையவனான தாமரைமேல் இருக்கும் பிரமன், மேகம் போன்ற நிறமுடைய திருமால் என்ற இவ்விருவராலும் அடிமுடியைச் சிறிதும் அறியமுடியாதபடி நீண்டு திகழ்ந்த ஜோதியே; (சகம் - ஜகம் - உலகம்); (பூமிசையான் - பூவின்மேல் இருப்பவன் - பிரமன்); (சற்று - கொஞ்சமும்; உம்மை தொக்கது); (நீடுதல் - நீள்தல்);

அகத்தில் பல நாள் ஒரு கோயிலை அமைத்துத் தொழு பூசலின் ஓர் தளி-அதில் புக்கருள் நேய - மனத்தில் பல நாள்களாக ஒரு கோயிலைக் கட்டி வணங்கிய பூசலார் நாயனாரின் ஒப்பற்ற கோயிலில் எழுந்தருளிய அன்பனே; (அகம் - மனம்); (ஓர் - ஒப்பற்ற); (தளி - கோயில்); (பூசல் - பூசலார் நாயனார்); (நேயன் - அன்பன்); (சுந்தரர் தேவாரம் - 7.39.11 - "நின்றவூர்ப் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்"); (பெரியபுராணம் - பூசலார் புராணம் - 12.65.10 - "நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்று நீடாலயத்து நாளைநாம் புகுவோம்");

அரா-அல்குல் மங்கைபாகா - பாம்பின் படம் போன்ற இடுப்பை உடைய உமையை ஒரு பாகமாக உடையவனே; (அரா - பாம்பு); (அல்குல் - இடுப்பு); (சம்பந்தர் தேவாரம் - 1.40.9 - "வரியரவல்குல் மடந்தையொர் பாகம் ஆயவன்");

நகைத்துத் திரு-மா-மலை வீசிய செருக்குத்-தலை ஆறொடு நாலனை நசுக்கிப், பிறகு ஏழிசை பாட வரங்கள் ஈவாய் - (இகழ்ந்து) சிரித்துக் கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற ஆணவம் நிறைந்த பத்துத்தலை உடைய இராவணனை நசுக்கிப், பின்னர் அவன் (அழுது) இசைபாடி இறைஞ்ச, அவனுக்கு இரங்கி வரங்கள் ஈந்தவனே; (நகைத்தல் - சிரித்தல்; அவமதிப்பைக் காட்டிச் சிரித்தல்); (செருக்கு - ஆணவம்);

பகைத்துத் திரி தானவர் மூவெயில் எரிக்கத் தழல் ஆர் கணை ஏவிய பருப்-பொற்சிலை ஓர் கரம் ஏறிய வென்றி-வீரா - (தேவர்களைப்) பகைத்து எங்கும் திரிந்த அசுரர்களது முப்புரங்களை எரிக்கத் தீப் பொருந்திய கணையை எய்த பெரிய பொன்மலையால் (மேருமலையால்) ஆன வில்லை ஒரு கையில் ஏந்திய வெற்றி மிக்க வீரனே; (தானவர் - அசுரர்); (எயில் - மதில்); (ஆர்தல் - பொருந்துதல்); (பரு - பருத்த; பெரிய); (சம்பந்தர் தேவாரம் - 2.36.8 - "பருக்கை மதவேழம் உரித்து"); (சிலை - மலை; வில்); (வென்றி - வெற்றி);

தொகுத்துப் புனை பூவொடு நீரொடு துதித்துப் பணி மாணியை நாடிய - பல பூக்களைச் சேகரித்து மாலை கட்டிச் சூட்டி, நீரால் அபிஷேகம் செய்து போற்றிப் பணிந்த மார்க்கண்டேயரைக் கொல்ல நெருங்கிய; (தொகுத்தல் - திரட்டுதல்); (புனைதல் - அலங்கரித்தல்; கட்டுதல்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);

சுருக்கைப் பிடி காலனை வார்-கழல் ஒன்றை வீசிச் செகுத்துப், பரிவோடு அருள் நாயக - கையில் சுருக்கினைப் பிடித்த காலனை நீண்ட கழல் அணிந்த திருவடி ஒன்றை வீசி உதைத்து அழித்து, மார்க்கண்டேயருக்கு இரங்கி அருளிய தலைவனே; (சுருக்கு - Noose;) (வார்-கழல் - நீண்ட கழலை அணிந்த திருவடி); (செகுத்தல் - அழித்தல்);

திரைத்துப் புனல் பாய் சடையாய் - அலைமோதிக் கங்கை பாயும் சடையினனே; (திரைத்தல் - அலையெழுதல்);

அணி திருக்கச்சியையே இடமா உடை எம்பிரானே - அழகிய திருக்கச்சி ஏகம்பத்தையே இடமாக உடைய எம்பெருமானே; (அணி - அழகிய); (கச்சி - கச்சி ஏகம்பம்); (இடமா - இடமாக);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

N.018 - சுந்தரர் துதி - வாடும் மனமே

2011-08-05

N.018 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2011

----------------

(வெண்பா)

(10 பாடல்கள் - எல்லாம் ஒரே ஈற்றடி)


1)

வாடும் மனமே வழியறிவாய் மன்றினுள்

ஆடும் பரமன் அடிமையெனத் - தேடியிடம்

வந்து வழக்காடி ஆட்கொண்ட மாபத்தர்

சுந்தரர் சொல்லே துணை.


தேடியிடம் - இடம் தேடி;

மா-பத்தர் - பெரும்பக்தர்;


2)

மனமே மகிழ வழியிது கேளாய்;

வினைதீர்ந்து செல்வம் விளையும்; - புனற்சடையன்

தந்தபொன்னை ஆற்றிலிட்(டு)ஆ ரூர்க்குளத்தில் தானெடுத்த

சுந்தரர் சொல்லே துணை.


3)

காலனுக்(கு) அஞ்சிக் கலங்கும் மனமேஓர்

பாலனுக்கா அன்றவன்மேல் பாய்ந்தவெஞ் - சூலனுக்குச்

சந்ததம் சந்தத் தமிழ்மாலை சாத்திய

சுந்தரர் சொல்லே துணை.


பாய்ந்தவெஞ்சூலன் - பாய்ந்த எம் சூலன்; பாய்ந்த வெம் சூலன்; (வெம்மை - கொடுமை; கோபம்; பராக்கிரமம்);

சந்ததம் - எப்பொழுதும்;

சாத்துதல் - அணிதல்;


4)

முன்பு முதலையுண்ட பாலகனைப் பெற்றவர்கள்

இன்புற இங்(கு)எமனை ஈயச்சொல் - அன்புருவாம்

தந்தையே என்றுதமிழ் பாடித் தருவித்த

சுந்தரர் சொல்லே துணை.


தருவித்தல் - வருவித்தல்;

(* சுந்தரர் தேவாரம் - 7.92.4 - "புக்கொளியூர் அவினாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே");


5)

சங்கிலிக்குச் செய்த சபதத்தை மீறியதால்

தங்கண் இழந்து தடுமாறி - அங்கணன்முன்

நொந்தழு(து) ஆரூரில் நோக்கமடைந்(து) இன்புற்ற

சுந்தரர் சொல்லே துணை.


நோக்கம் - பார்வை;

(* சுந்தரர் தேவாரம் - 7.95.2 - "என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் மற்றைக் கண்தான் தாராதொழிந்தால் வாழ்ந்துபோதீரே");


6)

மனைவியின் கோபத்தை மாற்ற எனக்கிங்

குனையன்றி உற்றார்ஆர் உள்ளார் - எனவிரவில்

நந்தியவன் தூது நடந்துதவும் நல்லடியார்

சுந்தரர் சொல்லே துணை.


பதம் பிரித்து:

"மனைவியின் கோபத்தை மாற்ற, எனக்கு இங்கு

உனை அன்றி உற்றார் ஆர் உள்ளார்?" - என, இரவில்

நந்தி-அவன் தூது நடந்து உதவும் நல்-அடியார்

சுந்தரர் சொல்லே துணை.


என - என்று சொல்ல;

நந்தி - சிவபெருமான்; (7.92.7 - "நந்தி உனை வேண்டிக்கொள்வேன் நரகம் புகாமையே" - "நந்தி" என்னும் வடசொல், "இன்பம் உடையவன்" எனப் பொருள்படும்);


7)

போவாரைக் கொள்ளைகொள் இம்முருகன் பூண்டியில்

மேவாமல் வேறூர் விரும்பாயோ - நாவார

வந்தித்(து) அரனருளால் மாண்பொருளைப் பெற்றுமகிழ்

சுந்தரர் சொல்லே துணை.


"என்று" நாவார வந்தித்து - "என்று" என்ற சொல்லை வருவித்துப் பொருள்கொள்க.

மேவுதல் - உறைதல்;

மாண்பொருள் - மிகுந்த பொருள்;

(* சுந்தரர் தேவாரம் - 7.49.1 - "முருகன்பூண்டி மாநகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கைதன்னொடும் எத்துக் கிங்கிருந்தீர் எம்பிரானீரே");


8)

காவிரி வெள்ளத்தை நீந்திக் கடக்ககில்லேன்

பூவிரிகா ஐயாறா ஓவெனக் - கூவியழை

செந்தமிழால் நீர்விலகிச் செல்வழி நல்கமகிழ்

சுந்தரர் சொல்லே துணை.


கடக்ககில்லேன் - கடக்கும் ஆற்றல் இல்லேன்;

"பூ-விரி-கா ஐயாறா ஓ" எனக் கூவி அழை - பூக்கள் மலரும் சோலை திகழும் திருவையாற்றுப் பெருமானே! ஓலம்" என்று கூவி அழைத்த;

(* சுந்தரர் தேவாரம் - 7.77.9 - "எதிர்த்து நீந்தமாட்டேன் நான் .. .. ஐயாறுடைய அடிகேளோ!");


9)

அந்தமில் ஐயன் அருந்துணைவன் என்றுதனைத்

தந்தருள் செய்த தகைமையினால் - நிந்தையைப்போல்

கந்தமலி பாவால் கழலிணையைப் பாடியருள்

சுந்தரர் சொல்லே துணை.


அந்தம் இல் ஐயன் - முடிவு இல்லாத தலைவன்;

அரும் துணைவன் - அரிய தோழன்;

கந்தமலிபா - கந்தம் மலி பா - மணம் மிகுந்த பாமாலை;


10)

முனிவரெலாம் மால்நான் முகன்வர வேற்கும்

இனியவன்ஆர் என்றுவியப் பெய்தத் - தனிவிடையார்

நந்தமர் ஊரனெனும் நம்பி நலந்திகழும்

சுந்தரர் சொல்லே துணை.


தனி விடையார் - ஒப்பற்ற இடபத்தை ஊர்தியாகக் கொண்டவர்;

நந்தமர் ஊரன் - நம் தமர் ஊரன் - நம் தோழன், "ஆரூரன்" என்னும் பெயரினன்;

நம்பி - ஆணிற் சிறந்தோன்;

(* சுந்தரர் தேவாரம் - 7.100.9 -

இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்

வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயானை அருள்புரிந்து,

மந்திர மாமுனிவர் "இவன் ஆர்" என, எம்பெருமான்

"நந்தமர் ஊரண்" என்றான் நொடித்தான்மலை உத்தமனே.)


வி. சுப்பிரமணியன்

----------- -----------

Saturday, July 30, 2022

T.151 - நின்றியூர் - தெரிகின்ற தீயை

2011-07-16

T.151 - நின்றியூர் - தெரிகின்ற தீயை

(மயிலாடுதுறை அருகே உள்ள தலம்)

--------------

(வண்ணவிருத்தம்;

தனதந்த தானத் தனதந்த தானத்

தனதந்த தானத் .. தனதான)


தெரிகின்ற தீயைத் தொடவென்றும் ஓடித்

.. .. தெளிவின்றி வாடித் .. தவியாமல்

.. சினமின்றி ஆசைப் புயலின்றி மாயத்

.. .. திரைவென்று வாழற் .. கருளாயே

பரிகின்ற தாயிற் பெரிதுன்றன் நேயப்

.. .. பதமென்று பேசப் .. படுவோனே

.. பணிகொண்ட பேருக் கணிநின்று பாவப்

.. .. படைகொன்று வானைத் .. தருவோனே

இரிகின்ற தேவர்க் குயிர்தந்து பாலித்

.. .. தெரிநஞ்சை வாயிட் .. டதனாலே

.. இருள்கண்ட தீயொத் தொளிர்கின்ற ஆகத்

.. .. திணைகின்ற மாதுக் .. கினியானே

திரிகின்ற மாமுப் புரமன்று வேவச்

.. .. சிலையொன்றில் ஏவைப் .. பிணைவீரா

.. சிறைவண்டு பாடித் திரள்கின்ற சோலைத்

.. .. திருநின்றி யூரிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

தெரிகின்ற தீயைத் தொட என்றும் ஓடித்,

.. .. தெளிவு இன்றி வாடித் தவியாமல்,

.. சினம் இன்றி, ஆசைப் புயல் இன்றி, மாயத்

.. .. திரை வென்று வாழற்கு அருளாயே;

பரிகின்ற தாயிற் பெரிது உன்றன் நேயப்

.. .. பதம் என்று பேசப்படுவோனே;

.. பணிகொண்ட பேருக்கு அணி நின்று, பாவப்-

.. .. படை கொன்று, வானைத் தருவோனே;

இரிகின்ற தேவர்க்கு உயிர் தந்து பாலித்து

.. .. எரி-நஞ்சை வாய் இட்டு அதனாலே

.. இருள்-கண்ட; தீ ஒத்து ஒளிர்கின்ற ஆகத்து

.. .. இணைகின்ற மாதுக்கு இனியானே;

திரிகின்ற மா-முப்புரம் அன்று வேவச்

.. .. சிலை ஒன்றில் ஏவைப் பிணை-வீரா;

.. சிறை-வண்டு பாடித் திரள்கின்ற சோலைத்

.. .. திருநின்றியூரிற் பெருமானே.


தெரிகின்ற தீயைத் தொட என்றும் ஓடித், தெளிவு இன்றி வாடித் தவியாமல் - தீ வெளிப்படையாகத் தெரிந்தபோதும், தெளிவில்லாமல் எந்நாளும் சென்று அத்தீயில் விழுந்து வாடி வருந்தாமல்;

சினம் இன்றி, ஆசைப்-புயல் இன்றி, மாயத்-திரை வென்று வாழற்கு அருளாயே - கோபம், ஆசைப்புயல் இவற்றை நீங்கி, மாயக்கடலை வென்று இனிது வாழ்வதற்கு அருள்வாயாக; (திரை - கடல்);

பரிகின்ற தாயிற் பெரிது உன்றன் நேயப்-பதம் என்று பேசப்படுவோனே - அன்புடைய தாயை விடச் சிறந்த அன்பு உடையவன் என்று புகழப்படுபவனே; (தாயிற்பெரிது - தாயினும் சிறந்தது); (நேயப் பதம் - அன்புத் திருவடி; அன்பின் தன்மை); (திருவாசகம் - சிவபுராணம் - 8.1 - "தாயிற் சிறந்த தயாவான தத்துவனே");

பணிகொண்ட பேருக்கு அணி நின்று, பாவப் படை கொன்று, வானைத் தருவோனே - அடியவர்களுக்குப் பக்கத்தில் (காக்கும் படையாக) நின்று, அவர்களைத் தாக்க வரும் பாவப்படையை அழித்துச், சிவலோகத்தைக் கொடுப்பவனே; (பணிகொள்தல் - தொண்டனாக ஏற்றுக்கொள்தல்); (அணி - சமீபத்தில் (அண்ணி); படை); (அண்ணுதல் - கிட்டுதல்);

இரிகின்ற தேவர்க்கு உயிர் தந்து பாலித்து, எரி-நஞ்சை வாய் இட்டு அதனாலே இருள்-கண்ட - (பாற்கடலைக் கடைந்தபோது விளைந்த விஷத்தைக் கண்டு) அஞ்சி ஓடிய தேவர்கள் அழியாதபடி அவர்களைக் காத்து, எரிக்கும் நஞ்சை உண்டு அதனால் கறுத்த கண்டத்தை உடையவனே; (இரிதல் - அஞ்சி ஓடுதல்); (பாலித்தல் - காத்தல்); (இருள்தல் - கறுத்தல்);

தீ ஒத்து ஒளிர்கின்ற ஆகத்து இணைகின்ற மாதுக்கு இனியானே - தீப் போல ஒளிவீசும் செம்மேனியில் ஒரு பாகமாக இணையும் பார்வதிக்கு இனியவனே; (ஆகம் - உடல்);

திரிகின்ற மா-முப்புரம் அன்று வேவச் சிலைன்றில்வைப் பிணை வீரா - எங்கும் திரியும் பெரிய முப்புரங்களும் அன்று வெந்து அழியும்படி ஒரு வில்லில் அம்பைப் பூட்டிய வீரனே; (சிலை - வில்; மலை); (- அம்பு); (பிணைத்தல் - சேர்த்தல்);

சிறை-வண்டு பாடித் திரள்கின்ற சோலைத் திருநின்றியூரிற் பெருமானே - இறகுகளை உடைய வண்டுகள் ரீங்காரம் செய்து திரளும் சோலை சூழ்ந்த திருநின்றியூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே. (சிறை - இறகு);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

T.150 - பொது - மாதைக் காசை

2011-06-15

T.150 - பொது - மாதைக் காசை

--------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான)

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா)


மாதைக் காசைத் .. தின(ம்)நாடி

.. மாயத் தேபுக் .. கழிவேனோ

வேதத் தாயைப் .. பணியாத

.. வீணர்க் கேதப் .. பிணிதீராய்

பாதச் சீரைத் .. தமிழாலே

.. பாடிப் பேணத் .. தவறாத

காதற் சீலர்க் .. கணியானே

.. கானத் தாடற் .. பெருமானே.


பதம் பிரித்து:

மாதைக் காசைத் தினம் நாடி,

.. மாயத்தே புக்கு அழிவேனோ;

வேதத்தாயைப் பணியாத

.. வீணர்க்கு ஏதப்-பிணி தீராய்;

பாதச் சீரைத் தமிழாலே

.. பாடிப் பேணத் தவறாத

காதற் சீலர்க்கு அணியானே;

.. கானத்து ஆடற் பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

மாதைக் காசைத் தின(ம்) நாடி, மாயத்தே புக்கு அழிவேனோ - பெண், பொருள் என்ற ஓயா ஆசைகளால் மாயையுள் அழுந்தி அழியாதவாறு அருள்வாயாக; (மாயம் - மாயை);

வேதத்தாயைப் பணியாத வீணர்க்கு ஏதப்-பிணி தீராய் - வேதத்தில் விளங்கும் உன்னைப் பணியாத வீணர்களுக்குத் துன்பத்தைத் தரும் பிணியை (உடல்நோய் & பிறவிநோய்) நீக்காதவனே; (வேதத்தாய் - வேதங்களில் விளங்கும் நீ); (ஏதம் - துன்பம்); (பிணி - நோய்; பந்தம்; மும்மலக்கட்டு); (அப்பர் தேவாரம் - 6.12.5 - "வேதத்தாய் கீதத்தாய்"); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");

பாதச்-சீரைத் தமிழாலே பாடிப் பேணத் தவறாத காதற்-சீலர்க்கு அணியானே - உன் திருவடிப்-புகழைத் தமிழால் பாடிப் போற்றத் தவறாத அன்புடைய சீலர்களுக்கு அண்மையில் இருப்பவனே; (சீர் - புகழ்); (பேணுதல் - போற்றுதல்); (அணியான் - அணியன் - அருகே இருப்பவன்); (அப்பர் தேவாரம் - 6.57.3 - "வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி");

கானத்து ஆடற்-பெருமானே - சுடுகாட்டில் கூத்தாடலை உடைய பெருமானே; (கானம் - காடு - சுடுகாடு); (அப்பர் தேவாரம் - 6.55.4 - "கானத்தீ யாடல் உகந்தாய் போற்றி");


வி. சுப்பிரமணியன்

----------- -----------

T.149 - புகலி (காழி) - அலையு(ம்) மனமும்

2011-06-11

T.149 - புகலி (காழி) - அலையு(ம்) மனமும்

--------------

(வண்ணவிருத்தம்;

தனன தனன தனன தனன

தனன தனன .. தனதான)

(திமிர உததி - திருப்புகழ் - பழநி)

(கரிய பெரிய - திருப்புகழ் - பழநி)


அலையு(ம்) மனமும் உலகில் நசையும்

.. .. அதிக வினையும் .. அடியேனை

.. அவதி மலியு(ம்) நெறியில் அழிவை

.. .. அடைய விரைய .. உகையாமுன்

இலையு(ம்) மலரும் இயலும் இசையும்

.. .. இசையும் இனிய .. தமிழோடே

.. இயலும் வகையில் உனது சரண

.. .. இணையை அடைய .. அருளாயே

உலவு நதியும் ஒளிரு(ம்) மதியும்

.. .. உரகம் அருகு .. முடிமீதே

.. உடைய ஒருவ மயிலை அனைய

.. .. உமையும் உடலில் .. ஒருபாதி

இலகும் இறைவ புகலி நகரில்

.. .. எழுது மறையை .. மகிழ்வோனே

.. இருவர் பரவு பரம கொடியில்

.. .. எருதை உடைய பெருமானே.


பதம் பிரித்து:

அலையு(ம்) மனமும் உலகில் நசையும்

.. .. அதிக வினையும் அடியேனை

.. அவதி மலியு(ம்) நெறியில் அழிவை

.. .. அடைய விரைய உகையாமுன்,

இலையு(ம்) மலரும் இயலும் இசையும்

.. .. இசையும் இனிய தமிழோடே

.. இயலும் வகையில் உனது சரண

.. .. இணையை அடைய அருளாயே;

உலவு- நதியும் ஒளிரு(ம்) மதியும்

.. .. உரகம் அருகு முடிமீதே

.. உடைய ஒருவ; மயிலை அனைய

.. .. உமையும் உடலில் ஒரு பாதி

இலகும் இறைவ; புகலி நகரில்

.. .. எழுது மறையை மகிழ்வோனே;

.. இருவர் பரவு பரம; கொடியில்

.. .. எருதை உடைய பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

அலையு(ம்) மனமும் உலகில் நசையும் அதிக வினையும் அடியேனை அவதி மலியு(ம்) நெறியில் அழிவை அடைய விரைய உகையாமுன் - அலைபாய்கின்ற மனமும், உலக ஆசைகளும், மிகுந்திருக்கும் பழைய வினைகளும் என்னைத் துன்பம் மிகும் பாதையில் அழிவை அடைய விரையும்படி செலுத்துவதன்முன்னம்; (நசை - ஆசை); (அவதி - துன்பம்); (உகைத்தல் - செலுத்துதல்);

இலையு(ம்), மலரும், இயலும் இசையும் இசையும் இனிய தமிழோடே, இயலும் வகையில் உனது சரண-இணையை அடைய அருளாயே - வில்வ-இலைகளாலும், பலவகை மலர்களாலும், இயல் இசை என்ற இரண்டும் பொருந்திய தமிழ்ப்பாடல்களோடும், இயன்ற வகையில் உன்னைப் போற்றி உன் இணையடியை அடைவதற்கு அருள்வாயாக; (சரணஇணை - இரண்டு திருவடிகள்); (அடைதல் - சரண்புகுதல்; சேர்தல்);

உலவு நதியும், ஒளிரு(ம்) மதியும், உரகம் அருகு முடிமீதே உடைய ஒருவ - உலாவுகின்ற கங்கையையும் ஒளிவீசும் சந்திரனையும் பாம்பின் அருகே தலைமீது அணியும் ஒப்பற்றவனே; (உலவுதல் - உலாவுதல்); (அப்பர் தேவாரம் - 5.56.4 - "உலவும் கங்கையும் திங்களும் ஒண்சடை குலவினான்"); (உரகம் - பாம்பு); (ஒருவன் - ஒப்பற்றவன்);

மயிலை அனைய உமையும் உடலில் ஒரு பாதி இலகும் இறைவ - மயில் போன்ற பார்வதியைத் திருமேனியில் ஒரு கூறாக உடைய இறைவனே;

புகலி-நகரில் எழுது-மறையை மகிழ்வோனே - புகலியில் (சீகாழியில்) (திருஞான சம்பந்தர் பாடியருளிய) எழுதப்பெறும் வேதமாகிய தேவாரத்தை விரும்பியவனே; (எழுது மறை - எழுதப்படும் வேதமாகிய தேவாரம்); (பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 12.21.180 - "வண்டமிழால் எழுதுமறை மொழிந்தபிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார்");

இருவர் பரவு பரம - திருமால் பிரமன் என்ற இருவரும் வணங்கும் பரமனே; (பரவுதல் - துதித்தல்);

கொடியில் எருதை உடைய பெருமானே - இடபக்கொடியை உடைய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- -----------