2011-04-12
S.130 - சிவன் - இராமன் - சிலேடை
----------------
மூத்தவனாய் வந்திப்பார் முன்னாண்ட வன்தானாய்க்
காத்தவன் கையால் கயிலைபேர் - தூர்த்த
அரக்கன் அலறவே விட்டவன் ஆறு
கரக்குமரன் தாசரதி காண்.
சொற்பொருள்:
மூத்தவன் - 1. மூத்த மகன்; / 2. காலத்தால் முற்பட்டவன்; உயர்ந்தவன்;
வருதல் - பிறத்தல்;
பார் - உலகம்;
வந்தித்தல் - துதித்தல்;
முன் - 1. முன்பு ஒரு காலத்தில்; 2. எதிரே;
ஆண்டவன் - 1. ஆட்சி புரிந்தவன்; / 2. கடவுள்;
பேர்த்தல் - பெயர்த்தல்;
தூர்த்தன் - காமுகன்; கொடியோன்;
அலறவே விட்டவன் - 1. அலற ஏ விட்டவன்; / 2. அலறவே இட்டவன்/விட்டவன்;
ஏ - அம்பு;
இடுதல் - வைத்தல்; (மலைமேல் விரல் இட்டு இராவணனை நெரித்ததைச் சுட்டியது);
விடுதல் - 1. பிரயோகித்தல்; / 2. போகவிடுதல்;
கரத்தல் - மறைத்தல்; கொடாதிருத்தல்;
காண் - முன்னிலை அசைச்சொல்;
இராமன்:
மூத்தவனாய் வந்து, இப்-பார் முன் ஆண்டவன்தானாய்க்
காத்தவன்; கையால் கயிலை பேர் தூர்த்த
அரக்கன் அலற ஏ விட்டவன்; ஆறு
கரக்குமரன், தாசரதி காண்.
மூத்தவனாய் வந்து - முதல் மகனாகப் பிறந்து;
இப்-பார் முன் ஆண்டவன்தானாய்க் காத்தவன் - இந்தப் பூமியை முன்பு அரசாண்ட மன்னாய்க் காத்தவன்;
கையால் கயிலை பேர் தூர்த்த அரக்கன் அலற ஏ விட்டவன் - தன் கைகளால் கயிலைமலையைப் பெயர்த்த, காமுக அரக்கனான இராவணன் அலறி அழியும்படி அம்பு தொடுத்தவன்;
தாசரதி - தசரதன் மகனான இராமன்;
சிவன்:
மூத்தவனாய், வந்திப்பார் முன் ஆண்டவன்தானாய்க்
காத்தவன்; கையால் கயிலை பேர் தூர்த்த
அரக்கன் அலறவே இட்டவன்; ஆறு
கரக்கும் அரன், தாசரதி காண்.
மூத்தவனாய் - எல்லாரினும் தொன்மையானவன் ஆகி, எல்லாரினும் உயர்ந்தவன் ஆகி;
வந்திப்பார் முன் ஆண்டவன்-தானாய்க் காத்தவன் - வணங்கும் பக்தர்கள் எதிரே காட்சிதரும் கடவுள் ஆகிக் காத்தருள்பவன்;
கையால் கயிலை பேர் தூர்த்த அரக்கன் அலறவே இட்டவன் - தன் கைகளால் கயிலைமலையைப் பெயர்த்த, கொடிய அரக்கனான இராவணன் அலறும்படி (திருப்பாதவிரலை) ஊன்றியவன்;
ஆறு கரக்கும் அரன் - கங்கையைச் சடையுள் ஒளித்த ஹரன்;
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment