Saturday, May 2, 2026

P.478 - ஆமாத்தூர் - கரதலம் இரண்டையும்

2019-07-05

P.478 - ஆமாத்தூர் (திருவாமாத்தூர்)

-----------------

(எண்சீர் விருத்தம் - விளம் விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)

(காரைக்கால் அம்மையார் - மூத்த திருப்பதிகம் - 11.2.9 - "துத்தம்கைக் கிள்ளை விளரி தாரம்" )

(சம்பந்தர் தேவாரம் - 1.8.1 - "புண்ணியர் பூதியர் பூத நாதர்")


1)

கரதலம் இரண்டையும் கூப்பி நின்று .. கழலிணைக் குருகிய நெஞ்சி னோடு

பரவிய மாணியைக் கொல்ல வந்த .. படுநமன் தனையுதை செய்த பாதன்

குரவொடு கூவிளம் கொன்றை சூடி .. கூளிகள் சூழ்தர நட்டம் ஆடி

அரவினை ஆர்த்தவன் அமரும் ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.


கரதலம் இரண்டையும் கூப்பி நின்று கழலிணைக்கு உருகிய நெஞ்சினோடு - இரு-கைகளைக் கூப்பி இரு-திருவடிகளுக்கு அன்பால் உருகும் நெஞ்சினர் ஆகி; (கரதலம் - கை);

பரவிய மாணியைக் கொல்ல வந்த படுநமன்தனை உதைசெய்த பாதன் - போற்றிய மார்க்கண்டேயரைக் கொல்ல வந்த கொடிய கூற்றுவனை உதைத்த திருப்பாதன்;

குரவொடு கூவிளம் கொன்றை சூடி - குராமலரோடு, வில்வம், கொன்றைமலர் இவற்றைச் சூடியவன்;

கூளிகள் சூழ்தர நட்டம் ஆடி - பேய்கள் சூழக் கூத்து ஆடுபவன்; (கூளி - பேய்; பூதம்);

அரவினை ஆர்த்தவன் அமரும் ஊர் ஆம் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன் விரும்பி உறையும் தலம்; (ஆர்த்தல் - கட்டுதல்);

அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;


2)

கடலிடை மத்தென மலையை நாட்டிக் .. கடைந்தவர் அலறிடு மாறெ ழுந்த

விடமொரு மணியெனப் பூண்ட கண்டன் .. மென்முலை மங்கையை வாம பாகம்

உடையவன் மூவிலை வேலும் மானும் .. உடுக்கையும் கையினில் ஏந்தும் ஈசன்

அடல்விடை ஏறிய அண்ணல் ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.


கடலிடை மத்து என மலையை நாட்டிக் கடைந்தவர் அலறிடுமாறு எழுந்த - பாற்கடலில் ஒரு மலையை மத்தாக ஊன்றிக் கடைந்தவர்கள் அஞ்சி ஓலமிடும்படி தோன்றிய; (சுந்தரர் தேவாரம் - 7.55.5 - "மால்வரை மத்தென நாட்டி");

விடம் ஒரு மணி எனப் பூண்ட கண்டன் - ஆலகாலத்தை ஒப்பற்ற மணி போலக் கண்டத்தில் அணிந்தவன்; (ஒரு - ஒப்பற்ற);

மென்முலை மங்கையை வாம-பாகம் உடையவன் - மென்மையான முலையையுடைய உமையை இடப்பக்கம் ஒரு கூறாக உடையவன்;

மூவிலை-வேலும் மானும் உடுக்கையும் கையினில் ஏந்தும் ஈசன் - திரிசூலம், மான்கன்று, உடுக்கை இவற்றையெல்லாம் கையில் ஏந்திய ஈசன்;

அடல்விடை ஏறிய அண்ணல் ஊர் ஆம் - வலிய வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடைய பெருமான் உறையும் தலம்;

அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;


3)

பூவினை இட்டடி போற்றும் அன்பர் .. பொருவினை தீர்த்தருள் பரமன் வேத

நாவினன் ஆலமர் ஞான மூர்த்தி .. நாரியர் இடுபலி ஏற்ற வள்ளல்

சேவினைக் கொடியினில் வைத்த தேவன் .. செஞ்சடை மேல்மிளிர் கொன்றை சூடி

ஆவினில் அஞ்சுகந் தாடி ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.


பூவினை இட்டு அடி போற்றும் அன்பர் பொரு-வினை தீர்த்தருள் பரமன் - பூக்களைத் தூவித் திருவடியை வழிபடும் பக்தர்களது தாக்கும் வினைகளைத் தீர்த்து அருளும் பரமன்; (பொருதல் - போர்செய்தல்); (அப்பர் தேவாரம் - 4.88.4 - "சென்றடைந்தேனுடைய பொருவினை யெல்லாம் துரந்தனை");

வேத-நாவினன் - நான்மறையைப் பாடியருளியவன்;

ஆல் அமர் ஞானமூர்த்தி - கல்லாலின்கீழ் வீற்றிருக்கும் ஞானகுரு;

நாரியர் இடுபலி ஏற்ற வள்ளல் - பெண்கள் இடும் பிச்சையை ஏற்கும் வள்ளல்;

சேவினைக் கொடியினில் வைத்த தேவன் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவன்; (சே - எருது);

செஞ்சடைமேல் மிளிர்-கொன்றை சூடி - சிவந்த சடைமேல் அழகிய கொன்றையை அணிந்தவன்;

ஆவினில் அஞ்சு உகந்து ஆடி ஊர் ஆம் - பசுவிடமிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் செய்யப்பெறுபவன் உறையும் தலம்;

அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;


4)

பொங்கிய செருக்குடைத் தக்கன் முன்பு .. புரியவ வேள்வியைச் செற்ற வீரன்

அங்கியைத் திங்களைத் தேவர் கோனை .. அன்றொறுத் தருளிய முக்கண் மூர்த்தி

வெங்கரி உரிதனைப் போர்த்த மார்பன் .. வெந்தவெண் பொடியணி மேனி எம்மான்

அங்கமும் வேதமும் ஓதி ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.


பொங்கிய செருக்குடைத் தக்கன் முன்பு புரி அவ-வேள்வியைச் செற்ற வீரன் - சிவனை மதியாமல் மிகுந்த ஆணவத்தோடு தக்கன் செய்த இழிந்த யாகத்தை அழித்த வீரன்;

அங்கியைத் திங்களைத் தேவர்கோனை அன்று ஒறுத்தருளிய முக்கண் மூர்த்தி - அவ்வேள்வியில் பங்கேற்ற அக்கினி, சோமன், இந்திரன் முதலான தேவர்களையெல்லாம் தண்டித்த முக்கட்கடவுள்; (தக்ஷவேள்வியை அழித்த வரலாற்றைக் கந்தபுராணத்தில் காண்க); (திருவாசகம் - திருத்தோணோக்கம் - 8.15.11 - "காமன் உடலுயிர் காலன்பல் காய்கதிரோன் நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச் சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையும் தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ"); (அப்பர் தேவாரம் - 6.52.9 - "சந்திரனைத் திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண்டான் காண் இந்திரனைத் தோள்முரிவித் தருள்செய்தான் காண்");

வெங்கரி உரிதனைப் போர்த்த மார்பன் - கொடிய யானையின் தோலை மார்பில் போர்த்தவன்;

வெந்த வெண்பொடி அணி மேனி எம்மான் - சுட்ட வெண்திருநீற்றை மேனியில் பூசிய எம் இறைவன்;

அங்கமும் வேதமும் ஓதி ஊர் ஆம் - நால்வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதியவன் உறையும் தலம்;

அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;


5)

பெருகிய விடமது கண்ட தேவர் .. பிணைமலர் கொண்டடி போற்ற உண்டு

கருகிய மிடறினன் சூல பாணி .. கழல்தொழும் முனிவர்கள் நால்வர் வேண்டத்

தருநிழல் மறைவிரி செய்த ஐயன் .. தரியலர் முப்புரம் தீயில் மூழ்க

அருவரை வில்லினை ஏந்தி ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.


பெருகிய விடம்அது கண்ட தேவர் பிணைமலர்கொண்டு அடி போற்ற உண்டு கருகிய மிடறினன் - பெருகிய ஆலகாலத்தைக் கண்டு அஞ்சித் தேவர்கள் தொடுத்த மலர்களால் திருவடியை வழிபட அவர்களுக்கு இரங்கி அவ்விடத்தை உண்டு கறுத்த கண்டத்தை உடையவன்;

சூலபாணி - திரிசூலத்தை ஏந்தியவன்;

கழல் தொழும் முனிவர்கள் நால்வர் வேண்டத் தருநிழல் மறை விரிசெய்த ஐயன் - திருவடியைத் தொழுத சனகாதியர்களுக்குக் கல்லால-மரத்தின்கீழ் வேதப்பொருளை உபதேசித்த குரு; (தரு - மரம்; இங்கே, கல்லாலமரம்);

தரியலர் முப்புரம் தீயில் மூழ்க அருவரை வில்லினை ஏந்தி ஊர் ஆம் - பகைவர்களது முப்புரங்களும் தீப்பற்றி அழியும்படி அரிய மலையை வில்லாக ஏந்தியவன் உறையும் தலம்; (தரியலர் - பகைவர்);

அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;


6)

தாயினும் நல்லவன் தந்தை என்று .. தமிழ்மறை துதிசெயும் தலைவன் கண்ணில்

தீயினன் சீறிள நாக நாணன் .. சேலன கண்ணியர் மனைகள் தோறும்

போயிரந் துண்பலி தேரும் செல்வன் .. பொன்னடி போற்றிடும் அன்பர் சொல்ல

ஆயிரம் பெயருடை அடிகள் ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.


"தாயினும் நல்லவன், தந்தை" என்று தமிழ்மறை துதிசெயும் தலைவன் - "தாயைவிட நல்லவன், தந்தை" என்று தேவாரப் பாடல்கள் துதிக்கின்ற தலைவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.123.5 - "தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்");

கண்ணில் தீயினன் - நெற்றிக்கண்ணில் நெருப்பை உடையவன்;

சீறு-இளநாக நாணன் - சீறுகின்ற இளம்பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;

சேல் அன கண்ணியர் மனைகள்தோறும் போய் இரந்து உண்பலி தேரும் செல்வன் - சேல்மீன் போன்ற கண்களை உடைய பெண்களது வீடுகளை நாடிச் சென்று யாசித்துப் பிச்சையை ஏற்கும் செல்வன்;

பொன்னடி போற்றிடும் அன்பர் சொல்ல ஆயிரம் பெயருடை அடிகள் ஊர் ஆம் - அழகிய திருவடியை வழிபடும் பக்தர்கள் சொல்ல ஆயிரம் திருநாமங்கள் உடைய இறைவன் உறையும் தலம்;

அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;


7)

அம்மலர்க் கணைதொடு மதனை நோக்கி .. அவனழ குடல்தனை நீறு செய்தாய்

எம்மிறை நீயென ஏத்தி நாளும் .. இணையடி தொழுதெழும் அன்பர் தங்கள்

மும்மலம் அறுத்தருள் செய்யும் முத்தன் .. முதலிலி முடிவிலி உலகை ஈன்ற

அம்மையும் அப்பனும் ஆனான் ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.


"அம்-மலர்க்கணைதொடு மதனை நோக்கி அவன் அழகு உடல்தனை நீறு செய்தாய் - "அழகிய மலரம்பை ஏவிய மன்மதனை நெற்றிக்கண்ணால் பார்த்து அவனது அழகிய உடலைச் சாம்பலாக்கியவனே;

எம் இறை நீ" என ஏத்தி நாளும் இணையடி தொழுதெழும் அன்பர் தங்கள் - எம் இறைவன் நீ" என்று துதித்துத் தினமும் இரு-திருவடிகளை வணங்கும் பக்தர்களுடைய;

மும்மலம் அறுத்தருள் செய்யும் முத்தன் - மும்மலங்களையும் நீக்கி முக்தி அருள்பவன்;

முதலிலி முடிவிலி - முதலும் முடிவும் இல்லாதவன்;

உலகை ஈன்ற அம்மையும் அப்பனும் ஆனான் ஊர் ஆம் - எல்லா உலகங்களையும் ஈன்றெடுத்த தாயும் தந்தையும் ஆன பெருமான் உறையும் தலம்;

அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;


8)

தலையொரு பத்தினன் தேர்செ லுத்தத் .. தருக்கொடு கயிலையைப் பேர்த்த போது

மலைமிசைத் தாள்விரல் ஒன்றை ஊன்றி .. வலியழித் தின்னிசை கேட்ட நாதன்

இலைமலர் எதனையும் அன்பொ டிட்ட .. அடியவர் இருவினை தீர்க்கும் ஏந்தல்

அலைகடல் நஞ்சணி கண்டன் ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.


தலை ஒரு பத்தினன் தேர் செலுத்தத் தருக்கொடு கயிலையைப் பேர்த்த போது - பத்துத்தலைகளையுடைய இராவணன் தரையில் இறங்கிய தன் தேரைச் செலுத்தவேண்டி ஆணவத்தோடு கயிலைமலையைப் பெயர்த்தபொழுது;

மலைமிசைத் தாள்விரல் ஒன்றை ஊன்றி வலி அழித்து இன்னிசை கேட்ட நாதன் - கயிலைமலைமேல் திருப்பாத-விரல் ஒன்றை ஊன்றி அவனது வலிமையை அழித்துப் பின் அவன் பாடிய இனிய கீதத்தைக் கேட்ட தலைவன்;

இலை மலர் எதனையும் அன்பொடு இட்ட அடியவர் இருவினை தீர்க்கும் ஏந்தல் - அடியவர்கள் அன்போடு இட்ட எந்த இலையையும் மலரையும் ஏற்று அவர்களுக்கு இரங்கி அவர்களது வலிய வினையைத் தீர்க்கும் தலைவன்; (சுந்தரர் தேவாரம் - 7.94.9 - "இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்");

அலைகடல் நஞ்சு அணி கண்டன் ஊர் ஆம் - கடலில் தோன்றிய ஆலகாலத்தைக் கண்டத்தில் அணிந்தவன் உறையும் தலம்;

அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;


9)

முந்தொரு மூவடி இரந்த மாலும் .. முளரியின் மேலுறை அயனும் ஏத்தும்

செந்தழல் வடிவினன் தேவ தேவன் .. தேனினும் இன்மொழி மங்கை பங்கன்

அந்தகன் அழிவுறு மாறு சூலம் .. அவனது மார்பினில் பாய்ச்ச வல்லான்

அந்தரர் போற்றிடும் அடிகள் ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.


முந்து ஒரு மூவடி இரந்த மாலும் முளரியின்மேல் உறை அயனும் ஏத்தும் செந்தழல் வடிவினன் - முன்பு (வாமனனாகி) ஒரு மூன்றடி மண்ணை யாசித்த திருமாலும் தாமரையின்மேல் உறைகின்ற பிரமனும் ஏத்துகின்ற ஜோதி வடிவினன்;

தேவதேவன் - தேவாதிதேவன்;

தேனினும் இன்மொழி மங்கை பங்கன் - தேனைவிட இனிய மொழி பேசுகின்ற உமையை ஒரு பங்காக உடையவன்;

அந்தகன் அழிவுறுமாறு சூலம் அவனது மார்பினில் பாய்ச்ச வல்லான் - அந்தகாசுரன் அழியும்படி அவன் மார்பில் சூலத்தைக் குத்தியவன்; (பாய்ச்சுதல் - குத்துதல்);

அந்தரர் போற்றிடும் அடிகள் ஊர் ஆம் - தேவர்கள் போற்றும் இறைவன் உறையும் தலம்;

அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;


10)

சத்தியம் தனையுரை செய்ய மாட்டார் .. தவமென அவம்புரி சழக்கர் நாளும்

கத்திடும் கத்தலை நீங்கி வாரும் .. கைதொழும் அன்பரைக் காக்கும் இன்பன்

முத்தன நகையுமை கூற மர்ந்த .. முக்கணன் உக்கிரப் போர்பு ரிந்த

அத்தியின் உரிபுனை அத்தன் ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.


சத்தியம்தனை உரைசெய்ய மாட்டார் - உண்மையைப் பேசமாட்டார்கள்;

தவம் என அவம் புரி சழக்கர் நாளும் - தவம் என்று தினமும் இழிசெயல்களே செய்யும் தீயோர்கள்; ("நாளும்" என்ற சொல்லை இடைநிலைத் தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்);

நாளும் கத்திடும் கத்தலை நீங்கி வாரும் - அவர்கள் தினமும் கத்தும் கத்தலை நீங்கி வாருங்கள்;

கைதொழும் அன்பரைக் காக்கும் இன்பன் - கைகூப்பி வழிபடும் பக்தர்களைக் காப்பவன், இன்பவடிவினன்;

முத்து அன நகை உமை கூறு அமர்ந்த முக்கணன் - முத்துப் போன்ற பல்லை உடைய உமையை ஒரு பாகமாக விரும்பிய முக்கட்பெருமான்;

உக்கிரப்-போர் புரிந்த அத்தியின் உரி புனை அத்தன் ஊர் ஆம் - மிகுந்த சினத்தோடு போரிட்ட யானையின் தோலை அணிந்த எம் தந்தை உறையும் தலம்; (அத்தி - யானை); (உரி - தோல்);

அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;


11)

முடிமிசை வெண்பிறை சூடும் மன்னன் .. மூவிலை வேலினன் வேட னாகிப்

படிமிசைக் கானிடைப் பன்றி எய்து .. பார்த்தனுக் கொருபடை தந்த பண்பன்

துடிபறை முழவொலி செய்ய அல்லில் .. சுடலையில் பெருநடம் ஆடு கூத்தன்

அடிதொழும் அன்பருக் கன்பன் ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.


முடிமிசை வெண்பிறை சூடும் மன்னன் - தலைமேல் வெண்திங்களைச் சூடிய மன்னன்;

மூவிலை-வேலினன் - திரிசூலத்தை ஏந்தியவன்;

வேடன் ஆகிப் படிமிசைக் கானிடைப் பன்றி எய்து பார்த்தனுக்கு ஒரு படை தந்த பண்பன் - வேடன் வடிவில் இப்பூமியில் ஒரு காட்டில் சென்று ஒரு பன்றியை எய்து அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருளிய பண்பன்; (படி - பூமி); (படை - ஆயுதம்);

துடி, பறை, முழவு, ஒலி செய்ய அல்லில் சுடலையில் பெருநடம் ஆடு கூத்தன் - உடுக்கை, பறை, முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க இருளில் சுடுகாட்டில் பெருங்கூத்து ஆடுபவன்;

அடி தொழும் அன்பருக்கு அன்பன் ஊர் ஆம் - திருவடியை வழிபடும் பக்தர்களுக்கு அன்பு உடையவன்;

அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.477 - ஒற்றியூர் - காம்பன தோளிதன்

2019-07-04

P.477 - ஒற்றியூர்

--------------------

(கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா;

தானனா என்பது தனதனா / தானன / தனதன என்றும் சில சீர்களில் வரும்)

(விளம் விளம் விளம் விளம் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.35.1 - "முன்னைநான் மறையவை")

* (x) - புணர்ச்சி பிரித்த வடிவம்;


1)

காம்பன தோளிதன் காதலன் கொன்றையை

ஆம்பலைத் திங்களை அஞ்சடைச் சூடினான்

பாம்பரை ஆர்த்தவன் பால்தயிர் ஆடினான்

ஓம்பினார்க் கன்பினான் ஒற்றியூர்ப் புற்றனே.


காம்பு அன தோளிதன் காதலன் - மூங்கில் போன்ற புஜம் உடைய உமைக்குக் கணவன்; (காம்பு - மூங்கில்);

கொன்றையை ஆம்பலைத் திங்களை அஞ்சடைச் சூடினான் - அழகிய சடைமேல் கொன்றைமலர், அல்லிமலர், சந்திரன் இவற்றையெல்லாம் அணிந்தவன்; (ஆம்பல் - அல்லி); (அம் - அழகு);

பாம்பு அரை ஆர்த்தவன் - பாம்பை அரையில் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

பால் தயிர் ஆடினான் - பாலாலும் தயிராலும் அபிஷேகம் செய்யப்பெறுபவன்;

ஓம்பினார்க்கு அன்பினான் - விரும்பி வணங்கும் பக்தர்களுக்கு அன்பு உடையவன்;

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்; (சம்பந்தர் தேவாரம் - 2.11.4 - "புற்றானைப் புற்றரவம் அரையின்மிசைச் சுற்றானை");


2)

ஒருமலை மத்தினால் ஒண்கடல் கடைசுரர்

வெருவுறப் பெருகிய வெவ்விடம் அமுதெனப்

பருகிய பண்பினான் பதமலர்க் கன்பராய்

உருகினார்க் கருள்பவன் ஒற்றியூர்ப் புற்றனே.


ஒரு மலை-மத்தினால் ஒண்-கடல் கடை-சுரர் - மேருமலையை மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்த தேவர்கள்; (சம்பந்தர் தேவாரம் - 3.81.3 - "அரவ ஒண்கடலின் நஞ்சம் அமுதுண்ட கடவுள்");

வெருவுறப் பெருகிய வெவ்விடம் அமுதெனப் பருகிய பண்பினான் - அஞ்சும்படி பெருகிய கொடிய நஞ்சை அமுதம்போல் உண்ட பண்பன்; (வெரு - அச்சம்);

பதமலர்க்கு அன்பராய் உருகினார்க்கு அருள்பவன் - அவன் திருவடித்தாமரைக்கு அன்பர்கள் ஆகி உருகுகின்றவர்களுக்கு அருள்புரிபவன்;

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


3)

கள்ளுகும் கொன்றையும் கதிர்மதித் துண்டமும்

வெள்ளமும் சூடிய விரிசடை வேதியன்

கள்ளமொன் றின்றியே கழலிணை அனுதினம்

உள்கினார்க் குள்ளவன் ஒற்றியூர்ப் புற்றனே.


கள்கும் கொன்றையும் கதிர்மதித் துண்டமும் வெள்ளமும் சூடிய விரிசடை வேதியன் - தேன் சொரியும் கொன்றைமலரையும் கதிர் வீசும் பிறையையும் கங்கையையும் சூடிய விரிந்த சடையை உடைய வேதியன்; (வேதியன் - வேத முதல்வன்);

கள்ளம் ஒன்று இன்றியே கழலிணை அனுதினம் உள்கினார்க்கு உள்ளவன் - நெஞ்சில் வஞ்சம் இல்லாமல் இரு-திருவடிகளைத் தினமும் எண்ணி வழிபடும் அன்பர்களுக்கு அருள் உள்ளவன்; (உள்குதல் - எண்ணுதல்);

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


4)

ஆதியாய் அந்தமாம் அளவிலாப் பெருமையன்

பாதிமா தாயவன் பாய்புலித் தோலினன்

தீதிலா நெஞ்சராய்த் திருப்புகழ் நாள்தொறும்

ஓதினார்க் குள்ளவன் ஒற்றியூர்ப் புற்றனே.


ஆதியாய் அந்தம் ஆம் அளவு இலாப் பெருமையன் - முதலும் முடிவுமாக விளங்குகின்ற அளவில்லாத பெருமை உடையவன்;

பாதி மாது ஆயவன் - உமைபங்கன்;

பாய்-புலித் தோலினன் - பாயும் புலியின் தோலை ஆடையாக அணிந்தவன்;

தீது இலா நெஞ்சராய்த் திருப்புகழ் நாள்தொறும் ஓதினார்க்கு உள்ளவன் - குற்றமற்ற நெஞ்சர்கள் ஆகித் தினமும் பெருமானது புகழைப் பாடும் பக்தர்களுக்கு அருள் உள்ளவன்; (சுந்தரர் தேவாரம் - 7.69.4 - "திருப்புகழ் விருப்பால் பன்னலந் தமிழாற் பாடுவேற்கு அருளாய்");

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


5)

கன்னலோர் வில்லெனக் கையினில் ஏந்துவேள்

தன்னுடல் பொடிசெய்த சங்கரன் பொங்கழல்

அன்னசெம் மேனியன் அடியிணை அன்பினால்

உன்னினார்க் குள்ளவன் ஒற்றியூர்ப் புற்றனே.


கன்னல் ஓர் வில்னக் கையினில் ஏந்து வேள்தன் உடல் பொடிசெய்த சங்கரன் - கரும்பை ஓர் வில்லாகக் கையில் ஏந்தும் மன்மதனது உடலைச் சாம்பலாக்கிய சங்கரன்; (கன்னல் - கரும்பு); (வேள் - காமன்);

பொங்கு-அழல் அன்ன செம்மேனியன் - பொங்கியெழும் தீப் போன்ற செம்மேனியை உடையவன்;

அடியிணை அன்பினால் உன்னினார்க்கு உள்ளவன் - இரு-திருவடிகளை அன்போடு எண்ணும் பக்தர்களுக்கு அருள் உள்ளவன்; (உன்னுதல் - எண்ணுதல்);

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


6)

கயலன கண்ணுமை காதலன் இமையவர்

துயர்கெட முப்புரம் சுடுசரம் தொட்டவன்

பெயர்பல உடையவன் பேணிடும் பத்தருக்(கு)

உயர்வினை நல்குவான் ஒற்றியூர்ப் புற்றனே.


கயல் அன கண்-மை காதலன் - கயல்மீன் போன்ற கண்களை உடைய உமைக்குக் கணவன்;

இமையவர் துயர் கெட முப்புரம் சுடுசரம் தொட்டவன் - தேவர்களது துன்பம் தீர முப்புரங்களை எரித்த கணையை எய்தவன்; (சரம் - அம்பு);

பெயர் பல உடையவன் - எண்ணற்ற திருநாமங்கள் உடையவன்;

பேணிடும் பத்தருக்கு உயர்வினை நல்குவான் - போற்றும் பக்தர்களுக்கு நற்கதியை அளிப்பவன்;

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


7)

கம்பமா கரியுரி கண்டனே காரணா

செம்பொனார் மேனியாய் தீவினை தீரென

வம்புநாண் மலர்கொடு வழிபடும் அன்பரை

உம்பரில் வைப்பவன் ஒற்றியூர்ப் புற்றனே.


"கம்ப-மா-கரி உரி-கண்டனே - "அசையும் இயல்புடைய பெரிய யானையைத் தோலுரித்த வீரனே; (கம்பம் - அசைவு); (கண்டன் - வீரன்); (சம்பந்தர் தேவாரம் - 2.40.1 - "கம்பமா கரியுரித்த காபாலி");

காரணா - எல்லாவற்றிற்கும் முதற்காரணம் ஆனவனே; (அப்பர் தேவாரம் - 5.65.10 - "பூவனூர் மேவிய காரணன்");

செம்பொன் ஆர் மேனியாய் - செம்பொன் போன்ற திருமேனியனே; (ஆர்தல் - ஒத்தல்);

தீவினை தீர்" என - தீவினையைத் தீர்த்தருள்க" என்று;

வம்பு நாண்மலர்கொடு வழிபடும் அன்பரை உம்பரில் வைப்பவன் - வாசம் மிக்க புதுமலர்களால் வழிபடும் பக்தர்களைச் சிவலோகத்தில் இருத்துபவன்; (வம்பு - வாசனை); (உம்பர் - வானுலகு);

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


8)

கருவனாய்க் கயிலையைக் கைகளால் பேர்த்தவன்

குருதியா றோடவே ஒருவிரல் ஊன்றினான்

கருதிமா மலர்களால் கழல்தொழும் பத்தருக்(கு)

ஒருதுணை ஆனவன் ஒற்றியூர்ப் புற்றனே.


கருவனாய்க் கயிலையைக் கைகளால் பேர்த்தவன் - கர்வத்தோடு கயிலைமலையை இருபது கைகளால் பேர்த்த இராவணனது; (கருவன் - கர்வன் - கர்வம் உடையவன்);

குருதி-ஆறு ஓடவே ஒரு விரல் ஊன்றினான் - இரத்தவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி திருப்-பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவன்;

கருதி மா-மலர்களால் கழல் தொழும் பத்தருக்கு ஒரு துணை ஆனவன் - சிறந்த பூக்களால் திருவடியை விரும்பித் தொழும் பக்தர்களுக்கு ஒப்பற்ற துணைவன் ஆனவன்; (ஒரு - ஒப்பற்ற);

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


9)

நறுமலர் மேலினான் நாரணன் காண்கிலார்

அறுமுகத் தழகனை அருளிய முக்கணன்

செறுவினை தீர்த்தருள் செய்யெனும் அன்பருக்(கு)

உறுதுணை ஆனவன் ஒற்றியூர்ப் புற்றனே.


நறுமலர் மேலினான் நாரணன் காண்கிலார் - வாசனை மிக்க தாமரைமலர்மேல் உறையும் பிரமனாலும் திருமாலாலும் அறிய ஒண்ணாதவன்;

அறுமுகத்து அழகனை அருளிய முக்கணன் - முருகனை அருளிய நெற்றிக்கண்ணன்;

செறு-வினை தீர்த்து-ருள்செய் எனும் அன்பருக்கு உறுதுணை ஆனவன் - "வருத்துகின்ற வினைகளையெல்லாம் தீர்த்து அருள்புரிக" என்று தொழும் பக்தர்களுக்கு உற்ற துணை ஆனவன்; (செறுதல் - சினத்தல்; வருத்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.7.9 - "செறு தீவினை கடிய கூற்றமும் கண்டகலும்");

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


10)

பொய்திகழ் நாவுடைப் புல்லர்சொல் போற்றிடேல்

மைதிகழ் மிடறினன் மார்பினில் நூலினன்

நெய்திகழ் வேலினன் நீறணி நேயருக்(கு)

உய்தியை நல்குவான் ஒற்றியூர்ப் புற்றனே.


பொய் திகழ் நாவுடைப் புல்லர் சொல் போற்றிடேல் - பொய்களையே பேசும் கீழோர்களது சொற்களை மதிக்கவேண்டா;

மை திகழ் மிடறினன் - நீலகண்டன்; (மை - கருமை); (மிடறு - கண்டம்);

மார்பினில் நூலினன் - மார்பில் பூணூல் அணிந்தவன்;

நெய் திகழ் வேலினன் - நெய் பூசப்பெற்ற சூலத்தை ஏந்தியவன்; (ஆயுதங்கள் துருப்பிடித்தலைத் தடுக்க எண்ணெய் பூசி வைப்பது மரபு); (சம்பந்தர் தேவாரம் - 1.106.4 - "நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழுவும்");

நீறு அணி நேயருக்கு உய்தியை நல்குவான் - திருநீற்றைப் பூசி வழிபடும் பக்தர்களுக்கு நற்கதியைக் கொடுப்பவன்;

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


11)

மறைபுகழ் வான்பொருள் மாதவர் ஏத்திடும்

கறைதிகழ் மிடறினன் கரியுரி போர்த்தவன்

அறைகழல் போற்றிடும் அடியவர் நெஞ்சகம்

உறைவிடம் ஆனவன் ஒற்றியூர்ப் புற்றனே.


மறை புகழ் வான்பொருள் - வேதங்கள் துதிக்கும் சிறந்த மேலான பொருள் ஆனவன்;

மா-தவர் ஏத்திடும் கறை திகழ் மிடறினன் - சிறந்த தவம் உடையவர்கள் போற்றும் நீலகண்டன்; (மிடறு - கண்டம்);

கரி-உரி போர்த்தவன் - யானைத்தோலைப் போர்த்தவன்; (கரி - யானை); (உரி - தோல்);

அறை-கழல் போற்றிடும் அடியவர் நெஞ்சகம் உறைவிடம் ஆனவன் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியைப் போற்றும் அடியார்களது மனமே தங்கும் இடம் ஆனவன்; (அறைதல் - ஒலித்தல்); (நெஞ்சகம் - மனம்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்");

ஒற்றியூர்ப் புற்றனே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்ட பெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


N.056 - மாணிக்க வாசகர் துதி - குருவாய் நால்வர்க்கு

2019-07-04

N.056 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2019

-------------

1) ---- ("கந்த பத்யம்" - அமைப்பில்) ----

குருவாய் நால்வர்க் கருளும்

பெருமான் கையா லெழுதிய பீடுடை நூலாம்

திருவா சகமது பாடிய

அருமணி வாசக ரிருமல ரடிகள் போற்றி.


பதம் பிரித்து:

குருவாய் நால்வர்க்கு அருளும்

பெருமான் கையால் எழுதிய பீடுடை நூலாம்

திருவாசகம்-அது பாடிய

அரு-மணிவாசகர் இரு-மலரடிகள் போற்றி.


பீடு - பெருமை;


2) ----- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ------

குருந்தடியில் வீற்றிருந்த குருபரன்முன் மதுரைநின்று

வருந்தமிழ்நாட் டமைச்சரென வணங்கிநின்று மறைப்பொருள்கேட்

டருந்தமிழை நாமுய்ய அளித்ததிரு வாதவூர்ப்

பெருந்தகையார் மலரனைய திருந்துகழல் இணைபோற்றி.


பதம் பிரித்து:

குருந்து-அடியில் வீற்றிருந்த குருபரன்முன் மதுரைநின்று

வரும் தமிழ்நாட்டு அமைச்சர் என வணங்கிநின்று மறைப்பொருள் கேட்டு

அரும்-தமிழை நாம் உய்ய அளித்த திரு-வாதவூர்ப்

பெருந்தகையார் மலர் அனைய திருந்து-கழல்இணை போற்றி.


குருந்து-டியில் வீற்றிருந்த குருபரன்முன் "மதுரைநின்று வரும் தமிழ்நாட்டு அமைச்சர்" ன வணங்கிநின்று மறைப்பொருள் கேட்டு - குருந்தமரத்தின்கீழ் இருந்த மேலான குருவின்முன் "மதுரையிலிருந்து வரும் பாண்டியநாட்டு மந்திரி" என்று வணங்கி ஞானோபதேசம் பெற்று; (நின்று - ஐந்தாம்வேற்றுமை உருபு);

ரும்-தமிழை நாம் உய்ய அளித்த திரு-வாதவூர்ப் பெருந்தகையார் - நாம் உய்யும்படி அரிய தமிழான திருவாசகத்தைப் பாடியருளிய, திருவாதவூரில் அவதரித்த அண்ணலார் மாணிக்கவாசகரது;

மலர் அனைய திருந்து-கழல்இணை போற்றி - மலர் போன்ற அழகிய இரு-திருவடிகளுக்கு வணக்கம்; (குறிப்பு - "திருந்தடி" என்பதுபோல் "திருந்துகழல்"; திருந்துதல் - அழகாதல்; கழல் - ஆகுபெயராய்ப் பாதத்தைக் குறித்தது);


வி. சுப்பிரமணியன்

------------- -------------


T.219 - ஆமாத்தூர் - பரியாநமன் வருநாள்

2019-07-03

T.219 - ஆமாத்தூர் - பரியாநமன் வருநாள்

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதானன தனனா தாத்தா .. தனதான)


பரியாநமன் வருநா ளாய்க்கூ .. டழியாமுன்

.. பதமேபணி அடியார் கூட்டே .. அருளாயே

கரிகாடது மகிழ்மா கூத்தா .. மதன்வேவக்

.. கணையேவிய உடனே பார்த்தாய் .. நுதலாலே

அரியோடயன் அறியா மூர்த்தீ .. மதிசூடீ

.. அழகார்வயல் அணியா மாத்தூர் .. உறைவோனே

எரிமாவிடம் அமுதா ஏற்றாய் .. உமைபாகா

.. எருதூர்பவ தொழுவா னாட்டார் .. பெருமானே.


பதம் பிரித்து:

பரியா-நமன் வரு-நாளாய்க், கூடு .. அழியாமுன்,

.. பதமே பணி அடியார் கூட்டே .. அருளாயே;

கரிகாடது மகிழ்-மா கூத்தா; .. மதன் வேவக்

.. கணை ஏவிய உடனே பார்த்தாய் .. நுதலாலே;

அரியோடு அயன் அறியா மூர்த்தீ; .. மதிசூடீ;

.. அழகு ஆர் வயல் அணி ஆமாத்தூர் .. உறைவோனே;

எரி-மா-விடம் அமுதா ஏற்றாய்; .. உமைபாகா;

.. எருது-ஊர்-பவ; தொழு-வான்-நாட்டார் .. பெருமானே.


பரியா-நமன் வரு-நாளாய்க் கூடு அழியாமுன் - இரங்காத கூற்றுவன் என்னை நெருங்கி வரும் அந்திமதினம் வந்து, நான் இறந்து, இந்த உடம்பு அழிவதன் முன்பே; (பரிதல் - இரங்குதல்; அன்புகொள்தல்); (கூடு - உயிருக்குக் கூடு போன்ற உடம்பு); (சுந்தரர் தேவாரம் - 7.99.3 - "பாலன தாருயிர்மேற் பரியாது பகைத்தெழுந்த காலனை வீடுவித்து"); (அப்பர் தேவாரம் - 5.84.2 - "கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே");

பதமே பணிடியார் கூட்டே அருளாயே - உன் திருவடிகளையே வணங்குகின்ற அடியார்-குழாத்தில் சேரும்படி அருள்வாயாக; (கூட்டு - சினேகம்; உறவு; கூட்டம்);

கரிகாடுஅது மகிழ் மா-கூத்தா - சுடுகாட்டை இடமாக விரும்பி ஆடுகின்ற பெருங்கூத்தனே;

மதன் வேவக் கணை ஏவிய உடனே பார்த்தாய் நுதலாலே - மன்மதன் மலரம்பை ஏவியவுடன் அவன் வெந்து சாம்பலாகும்படி அவனை நெற்றிக்கண்ணால் பார்த்தவனே;

அரியோடு அயன் அறியா மூர்த்தீ - திருமால் பிரமன் இருவராலும் அறிய ஒண்ணாத இறைவனே;

மதிசூடீ - சந்திரனைச் சூடியவனே;

அழகு ஆர் வயல் அணி ஆமாத்தூர் உறைவோனே - அழகிய வயல்களால் சூழப்பெற்ற திருவாமாத்தூரில் உறையும் பெருமானே;

எரி-மா-விடம் அமுதா ஏற்றாய் - சுட்டெரித்த ஆலகாலத்தை அமுது போல உண்டருளியவனே; (அமுதா - அமுதாக);

உமைபாகா - உமைபங்கனே;

எருது-ர்-பவ - இடபவாகனம் உடைய பவனே; (ஊர்தல் - ஏறுதல்); (பவன் - சிவன் திருநாமம் - என்றும் உள்ளவன்);

தொழு-வான்-நாட்டார் பெருமானே - வணங்கும் தேவர்கள் பெருமானே; (வானாட்டார் - வான் நாட்டார் - வானுலகில் வாழ்வோர் - தேவர்); ("வானாட்டார் தொழு பெருமானே" - என்றும் இயைக்கலாம்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------