Tuesday, May 5, 2026

T.221 - வீழிமிழலை - நீதிநெறி அறியாது

2019-07-11

T. 221 - வீழிமிழலை - நீதிநெறிறியாது

-----------------

(வண்ணவிருத்தம்;

தான தனதன தான தனதன

தான தனதன .. தனதான)

(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)


நீதி நெறியறி யாது நில(ம்)மிசை

.. .. நீடு துயரிடை .. உழல்வேனும்

.. நேயர் குழுவினை நாடி வழிபடு

.. .. நீர்மை பெறவருள் .. புரியாயே

ஆதி யினிலரி போது விழியிட

.. .. ஆழி அருளிய .. அழகாநின்

.. ஆக(ம்) மிசையொளி நீறு திகழ்தர

.. .. ஆடை எனவதள் .. உடையானே

மேதி மிசைவரு கால னவனுயிர்

.. .. வீட உதைதரு .. கழலானே

.. மேகம் அணவிடு சோலை வயலணி

.. .. வீழி மிழலையில் .. உறைவோனே

காதில் ஒருகுழை காண இட(ம்)மிகு

.. .. காதல் மலைமகள் .. மகிழ்வோனே

.. காழி மகனுனை ஓத உயர்வுறு

.. .. காசு தினமருள் .. பெருமானே.


பதம் பிரித்து:

நீதி-நெறி அறியாது நில(ம்)மிசை

.. .. நீடு துயரிடை .. உழல்வேனும்,

.. நேயர் குழுவினை நாடி வழிபடு

.. .. நீர்மை பெறவருள் .. புரியாயே;

ஆதியினில் அரி போது-விழி இட

.. .. ஆழி அருளிய .. அழகா; நின்

.. ஆக(ம்)மிசை ஒளி-நீறு திகழ்தர

.. .. ஆடை என அதள் .. உடையானே;

மேதிமிசை வரு காலனவன் உயிர்

.. .. வீட உதைதரு .. கழலானே;

.. மேகம் அணவிடு சோலை வயல் அணி

.. .. வீழிமிழலையில் .. உறைவோனே;

காதில் ஒருகுழை காண, இட(ம்) மிகு

.. .. காதல் மலைமகள் .. மகிழ்வோனே;

.. காழி-மகன் உனை ஓத, உயர்வுறு

.. .. காசு தினம் அருள் .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

நீதி-நெறிறியாது நில(ம்)மிசை நீடு துயரிடை உழல்வேனும் - நல்ல வழியை அறியாமல் இம்மண்ணின்மேல் நெடுந்துன்பத்தில் உழல்கின்ற நானும்; (நீடு - நெடுங்காலம்);

நேயர்-குழுவினை நாடி வழிபடு நீர்மை பெறருள்புரியாயே - அன்பர்-குழாத்தை அடைந்து வழிபடுகின்ற குணத்தை அடைய அருள்வாயாக; (நேயர் - பக்தர்);

ஆதியினில் அரி போது-விழி ஆழி அருளிய அழகா - முன்பு திருமால் தன் மலர் போன்ற கண்ணைத் தோண்டி ஒரு தாமரைப்பூவாக உன் திருவடியில் இட்டு வழிபாடு செய்யவும் திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்த அழகனே; (போது - பூ); (* திருமாலுக்குச் சக்கரம் அளித்ததைத் திருவீழிமிழலைத் தலவரலாற்றில் காண்க);

நின் ஆக(ம்)மிசை ஒளி-நீறு திகழ்தர ஆடை என அதள் உடையானே; - உன் திருமேனிமேல் ஒளியுடைய திருநீறு விளங்க, ஆடை என்று தோலை அணிந்தவனே; (ஆகம் - மேனி); (தருதல் - ஒரு துணைவினை); (அதள் - தோல்);

மேதிமிசை வரு காலனவன் உயிர் வீட உதைதரு கழலானே - எருமைவாகனத்தின்மேல் வரும் காலனது உயிர் அழியும்படி அவனை உதைத்த திருவடியானே; (மேதி - எருமை); (வீடுதல் - கெடுதல்; ஒழிதல்; சாதல்);

மேகம் அணவிடு சோலை வயல் அணி வீழிமிழலையில் உறைவோனே - மேகத்தை நெருங்கும் உயர்ந்த சோலையும் வயலும் சூழ்ந்த திருவீழிமிழலையில் உறைகின்றவனே; (அணவுதல் - அணுகுதல்);

காதில் ஒரு குழை காண இட(ம்) மிகு காதல் மலைமகள் மகிழ்வோனே - ஒரு காதில் குழை திகழ, இடப்பக்கம் மிகுந்த அன்புடைய உமையைக் கூறாக விரும்பியவனே;

காழிமகன் உனை ஓத உயர்வுறு காசு தினம் அருள் பெருமானே - சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் உன்னைப் பாடிப் பரவ அவருக்கு வாசி இல்லாத சிறந்த பொற்காசைத் தினமும் தந்த பெருமானே; (சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர்" - பதிகவரலாற்றைக் காண்க);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment