2019-08-15
T. 232 - வீழிமிழலை - திரைமலி கடலில்
-----------------
(வண்ணவிருத்தம்;
தனதன தனன தனதன தனன
தனதன தனன .. தனதான)
(எழுகடல் மணலை - திருப்புகழ் - சிதம்பரம்)
திரைமலி கடலில் மறிகலம் அனைய
.. .. செடியது தருவல் .. வினைதீரச்
.. செழுமலர் இனிய தமிழ்கொடு நினது
.. .. திருவடி பணியும் .. அறிவீயாய்
அரையினில் அணிகொள் துகிலென உழுவை
.. .. அதன்வரி அதளை .. உடையானே
.. அடிதொழு(ம்) முனிவர் வெருவிட அடையும்
.. .. அருநமன் உருள .. உதைகாலா
வரையெனும் அரிய சிலைகொடு பெரிய
.. .. மதிலவை எரிசெய் .. ஒருவீரா
.. மலரடி இணையை வழிபடு மதியம்
.. .. வளர்சடை உலவ .. அருள்வோனே
விரைகமழ் தமிழ்சொல் கவுணியர் மகிழ
.. .. விலைபெறு படியை .. அணிவீழி
.. மிழலையில் அருளும் அழகுடை விகிர்த
.. .. விடைதனை உடைய .. பெருமானே.
பதம் பிரித்து:
திரை மலி கடலில் மறி-கலம் அனைய
.. .. செடியது தரு வல்வினை தீரச்,
.. செழுமலர் இனிய தமிழ்கொடு நினது
.. .. திருவடி பணியும் .. அறிவு ஈயாய்;
அரையினில் அணிகொள் துகில் என உழுவை
.. .. அதன் வரி-அதளை .. உடையானே;
.. அடிதொழு(ம்) முனிவர் வெருவிட அடையும்
.. .. அரு-நமன் உருள .. உதை-காலா;
வரையெனும் அரிய சிலைகொடு பெரிய
.. .. மதிலவை எரிசெய் .. ஒரு வீரா;
.. மலரடி-இணையை வழிபடு மதியம்
.. .. வளர்-சடை உலவ .. அருள்வோனே;
விரை கமழ் தமிழ் சொல் கவுணியர் மகிழ
.. .. விலைபெறு படியை .. அணி-வீழி-
.. மிழலையில் அருளும் அழகுடை விகிர்த;
.. .. விடைதனை உடைய .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;
திரை மலி கடலில் மறி கலம் அனைய செடியது தரு வல் வினை தீரச் - அலை மிகுந்த கடலில் முழுகின்ற படகுபோல் (= அந்தப் படகில் செல்பவர்கள் படுவது போன்ற) துன்பம் தருகின்ற வலியவினை தீருமாறு; (மறிதல் - கீழ்மேலாதல்);
செழுமலர் இனிய தமிழ்கொடு நினது திருவடி பணியும் அறிவு ஈயாய் - சிறந்த பூக்களாலும், இனிய தமிழ்ப்பாமாலைகளாலும் உன் திருவடியை வழிபடும் அறிவை எனக்கு அருள்வாயாக;
அரையினில் அணிகொள் துகில் என உழுவை அதன் வரி-அதளை உடையானே; - அரையில் அழகிய துகில் போலப் புலியின் வரித்தோலைக் கட்டியவனே; (அணி - அழகு); (துகில் - நல்லாடை); (உழுவை - புலி); (அதள் - தோல்);
அடி தொழு(ம்) முனிவர் வெருவிட அடையும் அருநமன் உருள உதை காலா - உன் திருவடியைத் தொழுத மார்க்கண்டேயர் அஞ்சுமாறு அவரை நெருங்கிய கொடிய கூற்றுவனைத் தரையில் உருளும்படி உதைத்த காலகாலனே; (வெருவுதல் - அஞ்சுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.54.6 - "ஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம் பாடும் எனவும்");
வரை எனும் அரிய சிலைகொடு பெரிய மதிலவை எரிசெய் ஒரு வீரா - மேருமலை என்ற அரிய வில்லால் பெரிய முப்புரங்களை எரித்த ஒப்பற்ற வீரனே; (வரை - மலை); (சிலை - வில்); (ஒரு - ஒப்பற்ற);
மலரடி-இணையை வழிபடு மதியம் வளர்சடை உலவ அருள்வோனே - உன் இரு-மலர்த்திருவடிகளை வணங்கிய சந்திரனை வளரும் சடையின்மேல் உலவும்படி அருளியவனே;
விரை கமழ் தமிழ்சொல் கவுணியர் மகிழ விலைபெறு படியை அணி வீழிமிழலையில் அருளும் அழகுடை விகிர்த - மணம் கமழும் தமிழ்ப்பாமாலை பாடிய சம்பந்தர் மகிழும்படி அவருக்கு நல்ல மதிப்புடைய படிக்காசை அழகிய திருவீழிமிழலையில் அருளிய விகிர்தனே; (கவுணியர் - கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தர்); (படி - படிக்காசு); (சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர்");
விடைதனை உடைய பெருமானே - இடபவாகனம் உடைய பெருமானே;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment