2019-08-08
T. 229 - வான்மியூர் - ஊனங்கள் தீர
-----------------
(வண்ணவிருத்தம்;
தானந்த தானத்தந் .. தனதான)
(நீலங்கொள் மேகத்தின் - திருப்புகழ் - பொது)
ஊனங்கள் தீரச்செந் .. தமிழ்பாடி
.. ஓர்கின்ற நேயர்க்கன் .. புடையேனாய்
நானைந்து தாளைக்கும் .. பிடுமாறு
.. ஞானங்கொ டாய்நட்டம் .. புரிவோனே
ஆனந்த மாதைப்பங் .. கமர்வோனே
.. ஆர்வங்க வான்மிச்செஞ் .. சடையானே
வானன்று வாடிச்சென் .. றடிவீழ
.. மாநஞ்சை வாயிட்டுண் .. பெருமானே.
பதம் பிரித்து:
ஊனங்கள் தீரச் செந்தமிழ் பாடி
.. ஓர்கின்ற நேயர்க்கு அன்பு உடையேனாய்,
நான் நைந்து தாளைக் கும்பிடுமாறு
.. ஞானங் கொடாய், நட்டம் புரிவோனே;
ஆனந்த; மாதைப் பங்கு அமர்வோனே;
.. ஆர்-வங்க- வான்மிச் செஞ்சடையானே;
வான் அன்று வாடிச் சென்று அடிவீழ,
.. மா-நஞ்சை வாய் இட்டு உண் பெருமானே.
ஊனங்கள் தீரச் செந்தமிழ் பாடி ஓர்கின்ற நேயர்க்கு அன்பு உடையேனாய் - குற்றமெல்லாம் தீரும் பொருட்டுத் தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடி உன்னைத் தியானிக்கின்ற அன்பர்களுக்கு அன்புடையவன் ஆகி; (ஊனம் - குற்றம்); (ஓர்தல் - எண்ணுதல்);
நான் நைந்து தாளைக் கும்பிடுமாறு ஞானம் கொடாய், நட்டம் புரிவோனே - (அவர்கள் போல) நானும் மனம் உருகி உன் திருவடியை வணங்கும்படி ஞானத்தைத் தருவாயாக, கூத்து ஆடுபவனே; (நான் - நானும்; உம்மை தொக்கது); (நைதல் - மனம் உருகுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்"); (நட்டம் - கூத்து);
ஆனந்த; மாதைப் பங்கு அமர்வோனே - இன்பனே; உமாதேவியை ஒரு பங்காக விரும்பியவனே; (ஆனந்த - 1. இன்பனே; 2. இன்பவடிவான); (அமர்தல் - விரும்புதல்);
ஆர்-வங்க- வான்மிச் செஞ்சடையானே - ஒலிக்கின்ற அலையுடைய (= கடலின் அருகே உள்ள) திருவான்மியூரில் உறையும் சிவந்த சடையினனே; (ஆர்த்தல் - ஒலித்தல்); (வங்கம் - அலை); (வான்மி - திருவான்மியூர்); (சம்பந்தர் தேவாரம் - 3.55.4 - "திருவான்மிதன்னில் அன்பா");
வான் அன்று வாடிச் சென்று அடிவீழ, மா-நஞ்சை வாய் இட்டு உண் பெருமானே - தேவர்கள் முன்பு வருந்திச் சென்று உன் திருவடியில் விழுந்து வணங்க, அவர்களுக்கு இரங்கிக், கொடிய ஆலகாலத்தை வாயில் இட்டு உண்டருளிய பெருமானே; (வான் - தேவர்கள்); (அடிவீழ்தல் - தண்டனிடுதல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment