2019-10-18
P.486 - நெல்வேலி (திருநெல்வேலி)
---------------------------------
(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)
(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")
(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")
1)
தூயவன்; தொழுதவர் துன்பம் தீர்த்திடும்
தாயவன்; தேவர்கள் தலைவன்; நீறணி
தீயன மேனியன்; திருநெல் வேலியில்
மேயவன் அடிதொழ வினைகள் வீடுமே.
தூயவன் - பரிசுத்தன்;
தொழுதவர் துன்பம் தீர்த்திடும் தாய்அவன் - வழிபடுபவர்களது துன்பத்தைத் தீர்க்கும் தாய்; (அவன் - பகுதிப்பொருள்விகுதி);
தேவர்கள் தலைவன் - வானோர் பிரான்;
நீறு அணி தீ அன மேனியன் - தீப் போன்ற செம்மேனியில் திருநீற்றைப் பூசியவன்; (நீறு பூத்த நெருப்புப் போன்ற மேனியை உடையவன்);
திருநெல்வேலியில் மேயவன் அடி தொழ வினைகள் வீடுமே - திருநெல்வேலியில் உறைகின்ற சிவபெருமானது திருவடியைத் தொழுதால் நம் வினைகள் அழியும்; (வீடுதல் - நீங்குதல்; அழிதல்);
2)
போர்விடை ஊர்தியன்; பொடிகொள் மேனியன்;
பார்புகழ் தாமிர பரணி பாய்தரச்,
சீர்திகழ் கோபுரத் திருநெல் வேலியில்,
வார்சடை யான்கழல் வாழ்த்தி வாழ்மினே.
போர்விடை ஊர்தியன் - போர் செய்ய வல்ல இடபத்தை வாகனமாக உடையவன்;
பொடிகொள் மேனியன் - திருநீற்றைப் பூசிய மேனியினான்;
பார் புகழ் தாமிரபரணி பாய்தரச் சீர் திகழ் கோபுரத் திருநெல்வேலியில் - உலகம் புகழும் தாமிரபரணிநதி பாய்கின்ற, அழகிய கோபுரம் திகழும் திருநெல்வேலியில் உறைகின்ற; (தருதல் - ஒரு துணைவினை);
வார்சடையான் கழல் வாழ்த்தி வாழ்மினே - நீள்சடை உடைய சிவபெருமானது கழல் அணிந்த திருவடியை வாழ்த்தி நற்கதி அடையுங்கள்; (வார்தல் - நீள்தல்);
3)
கோணுடைப் பிறைதனைக் குஞ்சி ஏற்றினான்;
வாணுதல் மாதினை வாமம் வைத்தவன்;
சேணுயர் கோபுரத் திருநெல் வேலியில்,
தாணுவின் தாள்தொழச் சாரும் இன்பமே.
கோணுடைப் பிறைதனைக் குஞ்சி ஏற்றினான் - வளைந்த பிறையைச் சென்னிமேல் வைத்தவன்; (கோண் - வளைவு); (குஞ்சி - ஆண்களின் தலைமயிர்; தலை); (திருவாசகம் - திருப்பொன்னூசல் - 8.16.5 - "கோணார் பிறைச்சென்னிக் கூத்தன்");
வாள்-நுதல் மாதினை வாமம் வைத்தவன் - ஒளி பொருந்திய நெற்றியையுடைய உமையை இடப்பக்கம் கூறாக உடையவன்; (வாள் - ஒளி); (நுதல் - நெற்றி); (வாமம் - இடப்பக்கம்);
சேண் உயர் கோபுரத் திருநெல்வேலியில் - வானளாவிய கோபுரம் திகழும் திருநெல்வேலியில் உறைகின்ற; (சேண் - ஆகாயம்);
தாணுவின் தாள் தொழச் சாரும் இன்பமே - தாணு என்ற திருநாமம் உடைய சிவபெருமானது கழல் அணிந்த திருவடியைத் தொழுதால் இன்பம் வந்தடையும்; (தாணு - sthāṇuḥ स्थाणुः - சிவன் திருநாமம்);
4)
அண்மையன்; சேய்மையன்; ஆன்ற ஞானியர்
எண்மலர் கொண்டடி ஏத்து முக்கணன்;
திண்மதில் புடையணி திருநெல் வேலியில்,
தண்மதி சூடியைச் சார்ந்து வாழ்மினே.
அண்மையன் சேய்மையன் - (அன்பர்களுக்கு) அருகே இருப்பவன், (அன்பில்லாதவர்களுக்குத்) தொலைவில் இருப்பவன்; (அண்மை - சமீபம்); (சேய்மை - தூரம்);
ஆன்ற ஞானியர் எண்மலர் கொண்டு அடி ஏத்து முக்கணன் - சிறந்த ஞானியர்கள் எட்டுமலர்களால் வழிபாடு செய்கின்ற முக்கண்ணன்; (எண்மலர் - அஷ்டபுஷ்பம் - இவை அகமலர்கள் எட்டு, புறமலர்கள் எட்டு); (அப்பர் தேவாரம் - 5.54.1 - "எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி மட்டலர் இடுவார் வினை மாயுமால்" - எட்டு நாண்மலர் - அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் எண்வகைப் புதிய மலர்கள். அவையாவன - புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை; அகப்பூசைக்குரிய அட்டபுட்பங்கள் - கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு);
திண்மதில் புடை அணி திருநெல்வேலியில் - உறுதியான மதிலால் சூழப்பெற்ற திருநெல்வேலியில் உறைகின்ற;
தண்மதி சூடியைச் சார்ந்து வாழ்மினே - குளிர்ந்த பிறையைச் சூடிய சிவபெருமானைச் சரணடைந்து உய்யுங்கள்;
5)
பாந்தளைப் பால்மதிப் பாங்கர் வைத்தவன்;
காந்திம திக்கிறை; கையில் வேலுடைச்
சேந்தனைப் பெற்றவன்; திருநெல் வேலியில்
சாந்தவெண் ணீற்றனைச் சார்ந்து வாழ்மினே.
பாந்தளைப் பால்மதிப் பாங்கர் வைத்தவன் - பாம்பைப் பால் போன்ற வெண்திங்கள் பக்கத்தில் வைத்தவன்; (பாந்தள் - பாம்பு); (பாங்கர் - பக்கம்);
காந்திமதிக்கு இறை - காந்திமதி என்ற திருநாமத்தை உடைய உமாதேவிக்குக் கணவன்; (* காந்திமதி - இத்தலத்தில் இறைவி திருநாமம்); (காந்தி - kānti - ஒளி; அழகு; காந்திமதி - அழகுள்ளவள்; ஒளியுள்ளவள்);
கையில் வேலுடைச் சேந்தனைப் பெற்றவன் - கையில் வேலை ஏந்திய முருகனுக்குத் தந்தை; (சேந்தன் - முருகன்);
திருநெல்வேலியில் சாந்த-வெண்ணீற்றனைச் சார்ந்து வாழ்மினே - திருநெல்வேலியில் உறைகின்றவனும் சந்தனம் போல வெண்மையான திருநீற்றைப் பூசியவனுமான சிவபெருமானது திருவடியைச் சரணடைந்து உய்யுங்கள்; (சாந்தம் - சந்தனம்);
6)
அருநமன் தனையுதை அடிகள்; நான்மறைப்
பொருளென உள்ளவன்; பூத நாயகன்;
தெருவினில் ஒலிமலி திருநெல் வேலியில்,
கருமிட றுடையவன் கழலை வாழ்த்துமே.
அருநமன்தனை உதை அடிகள் - கொடிய கூற்றுவனை உதைத்த சுவாமி;
நான்மறைப்பொருள் என உள்ளவன் - நால்வேதப்பொருள் ஆனவன்;
பூதநாயகன் - உயிர்கட்கெல்லாம் தலைவன்; பூதகணங்களுக்குத் தலைவன்; (பூதம் - 1. பூதகணம்; 2. உயிர்வர்க்கம்);
தெருவினில் ஒலி மலி திருநெல்வேலியில் - வீதியில் ஒலி மிகுந்த திருநெல்வேலியில் உறைகின்ற;
கருமிடறு உடையவன் கழலை வாழ்த்துமே - நீலகண்டன் திருவடியை வாழ்த்துங்கள்; (மிடறு - கண்டம்);
7)
மழுவினை ஏந்திய மன்னன்; வேணியில்
விழுபுனல் தேக்கிய விமல வித்தகன்;
செழுமதில் புடையணி திருநெல் வேலியில்,
உழுவையின் அதளனை ஓம்பி உய்ம்மினே.
மழுவினை ஏந்திய மன்னன் - கையில் மழுவாயுதத்தை ஏந்திய அரசன்;
வேணியில் விழு-புனல் தேக்கிய விமல வித்தகன் - சடையில் விழுந்த கங்கையைத் தேக்கிய தூயவன், வல்லவன்; (வேணி - சடை);
செழுமதில் புடை அணி திருநெல்வேலியில் - சிறந்த மதில் புடை சூழ்ந்த திருநெல்வேலியில் உறைகின்ற;
உழுவையின் அதளனை ஓம்பி உய்ம்மினே - புலித்தோல் ஆடையனைப் போற்றி உய்யுங்கள்; (உழுவை - புலி); (அதள் - தோல்); (ஓம்புதல் - பேணுதல்);
8)
மலைபெயர் அரக்கனை வாட ஊன்றினான்;
மலைபவர் மும்மதில் மாய அன்றொரு
சிலைவளை வித்தவன்; திருநெல் வேலியில்
தலைவனைத் தாள்தொழச் சாரும் இன்பமே.
மலை பெயர் அரக்கனை வாட ஊன்றினான் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் வாடும்படி அவனைத் திருப்பாதவிரலை ஊன்றி நசுக்கியவன்;
மலைபவர் மும்மதில் மாய அன்று ஒரு சிலை வளைவித்தவன் - பகைத்தவர்களது முப்புரங்கள் அழியும்படி முன்பு ஒரு மலையை வில்லாக வளைத்தவன்; (மலைதல் - பகைத்து மாறுபடுதல்); (மாய்தல் - அழிதல்); (சிலை - வில்; மலை); (சம்பந்தர் தேவாரம் - 2.15.5 - " மலைபவர் மும்மதில் மாய்வித்த சிலையானே");
திருநெல்வேலியில் தலைவனைத் தாள் தொழச் சாரும் இன்பமே - திருநெல்வேலியில் உறைகின்ற தலைவனான சிவபெருமானை அடிபணிந்தால் இன்பம் வந்தடையும்;
9)
பன்றியின் உருவிலும் பறவை ஆகியும்
சென்றவர் அடிமுடி தேடிக் காண்கிலார்;
தென்றமிழ் விருப்பினன்; திருநெல் வேலியில்
நின்றவன் தாள்தொழ நீங்கும் துன்பமே.
பன்றியின் உருவிலும் பறவை ஆகியும் சென்றவர் அடிமுடி தேடிக் காண்கிலார் - திருமால் பிரமன் இருவரும் பன்றி அன்னப்பறவை வடிவங்களில் சென்று தேடியும் அவர்களால் அடிமுடி அறியப்படாதவன்;
தென்-தமிழ் விருப்பினன் - இனிய தமிழ்ப்-பாமாலைகளை விரும்புபவன்; (தென் - இனிமை);
திருநெல்வேலியில் நின்றவன் தாள் தொழ நீங்கும் துன்பமே - திருநெல்வேலியில் நீங்காமல் உறைகின்ற சிவபெருமானை அடிபணிந்தால் துன்பம் தீரும்;
10)
வெந்தவெண் ணீற்றினை மேனிப் பூசிடா
அந்தகர் பொய்ம்மொழி அகன்று வம்மினீர்;
செந்தழல் மேனியன்; திருநெல் வேலியில்
எந்தையை ஏத்திட எய்தும் இன்பமே.
வெந்த வெண்ணீற்றினை மேனிப் பூசிடா அந்தகர் பொய்ம்மொழி அகன்று வம்மினீர் - சுட்ட திருநீற்றை உடம்பின்மேல் பூசாத குருடர்கள் சொல்லும் பொய்களை நீங்கி வாருங்கள்; (அகல்தல் - நீங்குதல்); (வம்மினீர் - வம்மின் நீர்; மின் - ஏவற்பன்மை விகுதி);
செந்தழல் மேனியன் - செந்தீப் போன்ற செம்மேனியன்;
திருநெல்வேலியில் எந்தையை ஏத்திட எய்தும் இன்பமே - திருநெல்வேலியில் உறைகின்ற எம் தந்தையான சிவபெருமானைத் துதித்தால் இன்பம் வந்தடையும்;
11)
மஞ்சடை மலைக்கிறை மருகன்; வாளிகள்
அஞ்சுடைக் காமனை அனங்கன் ஆக்கினான்;
செஞ்சடைப் புண்ணியன்; திருநெல் வேலியில்
நஞ்சடை கண்டனை நண்ணி உய்ம்மினே.
மஞ்சு அடை மலைக்கு இறை மருகன் - மேகம் அடைகின்ற மலைக்கு அரசனான இமவானுக்கு மருகன்; (இறை - அரசன்);
வாளிகள் அஞ்சுடைக் காமனை அனங்கன் ஆக்கினான் - ஐந்து அம்புகளை உடைய மன்மதனது உடலைச் சுட்டெரித்தவன்; (வாளி - அம்பு); (அனங்கன் - உடலற்றவன்);
செஞ்சடைப் புண்ணியன் - சிவந்த சடையை உடைய புண்ணியமூர்த்தி;
திருநெல்வேலியில் நஞ்சு அடை கண்டனை நண்ணி உய்ம்மினே - திருநெல்வேலியில் உறைகின்ற, ஆலகாலத்தைக் கண்டத்தில் ஒளித்த பெருமானை (நீலகண்டனை) அடைந்து உய்யுங்கள்; (அடைத்தல் - ஒளித்துவைத்தல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment