Showing posts with label உத்தரகோசமங்கை. Show all posts
Showing posts with label உத்தரகோசமங்கை. Show all posts

Monday, April 27, 2026

P.473 - உத்தரகோசமங்கை - கோங்கு குராமலர்

2019-06-24

P. 473 - உத்தரகோசமங்கை

------------------

(கட்டளைக் கலித்துறை) (திருவிருத்தம் அமைப்பு)

(அப்பர் தேவாரம் - திருவிருத்தம் - 4.96.1 - "கோவாய் முடுகி")

(சம்பந்தர் தேவாரம் - 1.116.1 - "அவ்வினைக் கிவ்வினை")


1)

கோங்கு குராமலர் கூவிளம் சூடிக் குளிர்மதியம்

தாங்கும் சடையினன் உம்பர் தலைவன் தனிவிடையன்

ஓங்கு மதில்புடை சூழ்திரு உத்தர கோசமங்கைத்

தீங்கரும் பைத்தொழத் தீவினை ஆயின தேய்ந்தறுமே.


கோங்கு குராமலர் கூவிளம் சூடிக் குளிர்மதியம் தாங்கும் சடையினன் - கோங்கு, குரவம், வில்வம் இவற்றைச் சூடிக் குளிர்ந்த திங்களையும் சடையில் தாங்கியவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.75.8 - "கோங்கொடு செருந்தி கூவிள(ம்) மத்தம் கொன்றையும் குலாவிய செஞ்சடைச்செல்வர்");

உம்பர் தலைவன் - தேவர்கள் தலைவன்;

தனி விடையன் - ஒப்பற்ற இடபவாகனம் உடையவன்; (தனி - ஒப்பற்ற);

ஓங்கு மதில் புடைசூழ் திரு-உத்தர-கோசமங்கைத் - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;

தீங்கரும்பைத் தொழத் தீவினை ஆயின தேய்ந்து-அறுமே - இனிய கரும்பு போன்ற ஈசனைத் தொழுதால் நம் தீவினைகளெல்லாம் அற நீங்கும்; (சம்பந்தர் தேவாரம் - 2.24.3 - "செல்வா என வல்வினை தேய்ந்தறுமே");


2)

கயலன கண்ணியை வாமம் மகிழ்ந்தவன் கண்ணுதலான்

பெயர்பல ஏற்ற பெயரிலி என்னும் பெருமையினான்

உயர்பொழில் சூழ்ந்தழ கார்திரு உத்தர கோசமங்கைப்

புயலன கண்டனைப் போற்றிசெய் தார்வினை போயறுமே.


கயல் அன கண்ணியை வாமம் மகிழ்ந்தவன் - கயல்மீன் போன்ற கண்களை உடைய உமையை இடப்பாகமாக விரும்பியவன்; (அன - அன்ன - ஒத்த);

கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்; (நுதல் - நெற்றி);

பெயர் பல ஏற்ற பெயரிலி என்னும் பெருமையினான் - எண்ணற்ற திருநாமங்களை உடையவனும் பெயரில்லாதவனும் ஆன பெருமையை உடையவன்; (திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 8.11.1 - "ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி");

உயர்-பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு-உத்தர-கோசமங்கைப் - உயர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற அழகிய திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;

புயல் அன கண்டனைப் போற்றிசெய்தார் வினை போய்-றுமே - மேகம் போன்ற கரிய கண்டத்தை உடையவனை வணங்குபவர்களது வினைகள் தீரும்; (புயல் - மேகம்);


3)

மண்புனல் தீவளி வானென ஆன வடிவுடையான்

திண்மதில் மூன்றினில் தீயெழு வித்த சிலையுடையான்

ஒண்மலர் ஆர்பொழில் சூழ்திரு உத்தர கோசமங்கை

வெண்மதி சூடியைப் போற்றிய அன்பர் வினையறுமே.


மண் புனல் தீ வளி வான் என ஆன வடிவுடையான் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் ஆன திருவுரு உடையவன்; (வளி - காற்று);

திண்-மதில் மூன்றினில் தீ எழுவித்த சிலை உடையான் - வலிய முப்புரங்களில் தீயை மூட்டி அழித்த வில்லை ஏந்தியவன்; (சிலை - வில்);

ஒண்-மலர் ஆர் பொழில் சூழ் திரு-உத்தர-கோசமங்கை - பிரகாசமான மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பெற்ற அழகிய திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;

வெண்மதி சூடியைப் போற்றிய அன்பர் வினை அறுமே - வெண்திங்களை அணிந்த பெருமானை வழிபடும் பக்தர்களது வினைகள் தீரும்.


4)

சலமலை வேணியில் தண்மதி யந்தனைத் தாங்கியவன்

மலைசிலை ஆக்கி ஒருகணை யால்மும் மதிலெரித்தான்

உலகுகள் ஈன்றொடுக் கும்பரன் உத்தர கோசமங்கைத்

தலைவன் அடியிணை தன்னைத் தொழவினை தானறுமே.


சலம் அலை வேணியில் தண்-மதியம்-தனைத் தாங்கியவன் - கங்கை அலைகின்ற (/அலைக்கின்ற) சடையில் குளிர்ந்த சந்திரனைத் தாங்கியவன்;

மலை சிலை ஆக்கி, ஒரு கணையால் மும்மதில் எரித்தான் - மேருமலையை வில்லாக்கி, ஒரு கணையால் முப்புரங்களை எய்து எரித்தவன்; (சிலை - வில்);

உலகுகள் ஈன்று ஒடுக்கும் பரன் - எல்லா உலங்களையும் படைத்து முடிவில் ஒடுக்குபவன்;

உத்தர-கோசமங்கைத் தலைவன் அடியிணை-தன்னைத் தொழ வினை-தான் அறுமே - திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற பெருமானது இரு-திருவடிகளைத் தொழுதால் வினைகள் அறும்; (சம்பந்தர் தேவாரம் - 2.24.5 - "தலைவா என வல்வினை தானறுமே");


5)

மாமுலை மங்கள நாயகி தன்மண வாளனும்பர்

தாமரைத் தாள்தொழ ஓர்கறை கண்டத்தில் தாங்கியவன்

ஓமதன் உட்பொருள் ஆயவன் உத்தர கோசமங்கைக்

கோமகன் நாமங்கள் கூறும் அடியார் குறையறுமே.


மா-முலை மங்கள நாயகி தன் மணவாளன் - அழகிய பெரிய முலைகளை உடையவளும் மங்களநாயகி என்ற திருநாமம் உடையவளுமான உமைக்குக் கணவன்; (* மங்களநாயகி - திருவுத்தர-கோசமங்கை இறைவி திருநாமம்);

உம்பர் தாமரைத்தாள் தொழ ஓர் கறை கண்டத்தில் தாங்கியவன் - தேவர்கள் மலர்ப்பாதத்தை வணங்கி வேண்ட, அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்ட நீலகண்டன்;

ஓம்-அதன் உட்பொருள் ஆயவன் - பிரணவத்தின் உட்பொருளாக விளங்குபவன்;

உத்தர-கோசமங்கைக் கோமகன் நாமங்கள் கூறும் அடியார் குறை அறுமே - திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற பெருமானது திருப்பெயர்களை ஓதும் பக்தர்களது குறைகள் தீரும்;


6)

விண்ணவர் நாதன் மிளிர்மதி சூடிய வேணிதனில்

தண்ணதி தாங்கும் சதுரினன் மேனி தனிலொருபால்

ஒண்ணுதற் பெண்ணை உகந்தவன் உத்தர கோசமங்கைக்

கண்ணுதல் பொன்னடி கைதொழ வல்வினைக் கட்டறுமே.


விண்ணவர் நாதன் - தேவர்கள் தலைவன்;

மிளிர்-மதி சூடிய வேணிதனில் தண்-நதி தாங்கும் சதுரினன் - ஒளிவீசும் சந்திரனைச் சூடிய சடையில் குளிர்ந்த கங்கையைத் தாங்கும் வல்லவன்; (சதுர் - சாமர்த்தியம்; ஆற்றல்);

மேனிதனில் ஒருபால் ஒண்-நுதல் பெண்ணை உகந்தவன் - திருமேனியில் ஒருபக்கம் ஒளியுடைய நெற்றியை உடைய உமையைப் பாகமாக விரும்பியவன்;

உத்தர-கோசமங்கைக் கண்ணுதல் பொன்னடி கைதொழ வல்வினைக்கட்டு அறுமே - திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற நெற்றிக்கண்ணனது பொற்பாதத்தை வணங்கினால் வலிய வினைப்பந்தம் தீரும்; (அப்பர் தேவாரம் - 5.39.11 - "மயிலாடுதுறை தொழும் கரத்தினார் வினைக் கட்டறுங் காண்மினே");


7)

செம்பொற் சடைமிசைத் திங்களைச் சூடும் சிவபெருமான்

அம்பொற் கழலால் அடற்கூற் றுதைத்த அருளுடையான்

உம்பர் தலைவன் உயர்பொழில் உத்தர கோசமங்கை

நம்பன் பெயருரை நாவினர் பாவம் நசிவுறுமே.


செம்பொற்-சடைமிசைத் திங்களைச் சூடும் சிவபெருமான் - செம்பொன் போன்ற சடையின்மேல் சந்திரனை அணிந்த சிவபெருமான்;

அம்-பொற்கழலால் அடற்-கூற்று உதைத்த அருள் உடையான் - மார்க்கண்டேயருக்காக அழகிய பொன்னடியால் கொடிய வலிய கூற்றுவனை உதைத்த அருள்மிக்கவன்; (அம் - அழகு); (அடல் - கொடுமை; வலிமை);

உம்பர் தலைவன் - தேவர்கள் தலைவன்;

உயர்-பொழில் உத்தர-கோசமங்கை - உயர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;

நம்பன் பெயர் உரை நாவினர் பாவம் நசிவுறுமே - நம்பன் என்ற திருநாமத்தை உடைய பெருமானது திருப்பெயர்களை நாக்கால் சொல்லும் அன்பர்களது பாவங்கள் அழியும்; (நம்பன் - விரும்பத்தக்கவன் - சிவன் திருநாமம்); (நசிவு - அழிவு; கேடு);


8)

கற்றைச் சடையன் கயிலையைப் பேர்த்திடக் கைகளினால்

பற்றிய வன்முடி பத்திற ஊன்றிப் பரிந்தபரன்

ஒற்றை விடையன் உயர்பொழில் உத்தர கோசமங்கைக்

கொற்றவன் நாமங்கள் கூறிய அன்பர் குறையறுமே.


கற்றைச்-சடையன் கயிலையைப் பேர்த்திடக் கைகளினால் பற்றியவன் முடி பத்து இற ஊன்றிப் பரிந்த பரன் - கற்றைச்-சடையை உடைய சிவபெருமானது கயிலைமலையைத் தன் கைகளால் பற்றிப் பெயர்க்க முயன்ற இராவணனது பத்துத்-தலைகளையும் ஒரு விரலை ஊன்றி நசுக்கிப், பின் (அவன் அழுது பாடிய பாடல்களைக் கேட்டு) இரங்கிய பரமன்;

ஒற்றை விடையன் - ஒப்பற்ற இடபவாகனத்தை உடையவன்; (ஒற்றை - ஒப்பற்ற);

உயர்-பொழில் உத்தர-கோசமங்கைக் - உயர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;

கொற்றவன் நாமங்கள் கூறிய அன்பர் குறையறுமே - தலைவனது திருப்பெயர்களைச் சொல்லும் அன்பர்களது குறைகள் தீரும்;


9)

கரியவன் வாசக் கமலத் தயனிவர் காண்பரிய

எரியென ஓங்கிய ஈசன் பிறப்பும் இறப்புமிலான்

உரியை உடையென் றுகந்தவன் உத்தர கோசமங்கைப்

புரிசடை யான்கழல் போற்றிசெய் தார்வினை போயறுமே.


கரியவன் வாசக்-கமலத்து அயன் இவர் காண்பரிய எரி என ஓங்கிய ஈசன் - கரிய திருமாலாலும் மணம் மிக்க தாமரைப்பூவில் உறையும் பிரமனாலும் அறிய ஒண்ணாத ஜோதி என நீண்ட ஈசன்;

பிறப்பும் இறப்பும் இலான் - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்;

உரியை உடை என்று உகந்தவன் - தோலை ஆடையாக விரும்பிக் கட்டியவன்; (உரி - தோல்); ( உகத்தல் - மகிழ்தல்; விரும்புதல்);

உத்தர-கோசமங்கைப் - திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;

புரி-சடையான் கழல் போற்றிசெய்தார் வினை போய்-றுமே - சுருண்ட சடையை உடைய பெருமானது திருவடியை வழிபட்டவர்களது வினைகள் தீரும்; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);


10)

நித்தலும் பொய்யுரை நீசர்தம் எத்தினை நீங்கிவம்மின்

மத்தமும் கொன்றையும் வன்னியும் சூடிய வார்சடையன்

உத்தமி பங்கன் உயர்பொழில் உத்தர கோசமங்கை

அத்தன் அடிதொழும் அன்பர் வினைகள் அழிவுறுமே.


நித்தலும் பொய் உரை நீசர்தம் எத்தினை நீங்கி வம்மின் - ஓயாமல் பொய்யே பேசுகின்ற கீழோர்களது வஞ்சத்தை நீங்கி வாருங்கள்; (நித்தலும் - எந்நாளும்); (நீசர் - கீழோர்); (எத்து - வஞ்சகம்);

மத்தமும் கொன்றையும் வன்னியும் சூடிய வார்-சடையன் - ஊமத்தமலர், கொன்றைமலர், வன்னியிலை இவற்றையெல்லாம் நீண்ட சடையில் சூடியவன்; (வார்தல் - நீள்தல்);

உத்தமி பங்கன் - உமையொருபாகன்;

உயர்-பொழில் உத்தர-கோசமங்கை - உயர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;

அத்தன் அடி தொழும் அன்பர் வினைகள் அழிவுறுமே - நம் தந்தையான சிவபெருமானது திருவடியை வணங்கும் அடியார்களது வினைகள் அழியும்.


11)

கண்ணிடந் தப்பிய வேடற் கருளிய காளத்தியான்

எண்ணிடு மார்க்கண்டர் இன்னுயிர் காத்த இருங்கழலான்

உண்விடம் ஓர்மணி செய்தவன் உத்தர கோசமங்கைப்

பெண்ணிடம் வைத்தவன் பேர்கள் நமக்குப் பெருந்துணையே.


கண் இடந்து அப்பிய வேடற்கு அருளிய காளத்தியான் - கண்ணைத் தோண்டி அப்பிய வேடனுக்கு (= கண்ணப்பருக்கு) திருக்காளத்தியில் அருள்செய்தவன்; (வேடற்கு - வேடனுக்கு);

எண்ணிடு மார்க்கண்டர் இன்னுயிர் காத்த இருங்-கழலான் - தியானித்து வழிபட்ட மார்க்கண்டேயரது இனிய உயிரைக் காத்த பெருமைமிக்க திருவடியை உடையவன்; (இருமை - பெருமை);

உண்-விடம் ஓர் மணி செய்தவன் - உண்ட நஞ்சை ஒப்பற்ற நீலமணி ஆக்கியவன்;

உத்தர-கோசமங்கைப் - திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;

பெண் இடம் வைத்தவன் பேர்கள் நமக்குப் பெரும் துணையே - உமைபங்கனது திருநாமங்கள் நமக்குப் பெரிய துணை ஆவன; (அப்பர் தேவாரம் - 4.104.6 - "நற்றுணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே");

(இலக்கணக் குறிப்பு - கட்டளைக் கலித்துறையில் அடியின் ஈற்றுச்சீரில் கனிச்சீர் போல் தோன்றும் சீர்கள் சில சமயம் வரலாம். உதாரணம்: நம்பியாண்டார் நம்பி - திருத்தொண்டர் திருவந்தாதி - 11.33.9 - "ஏர்மலி மாமதில் சூழ்கரு வூரில் எறிபத்தனே");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Saturday, January 17, 2026

P.464 - உத்தரகோசமங்கை - மேவலர் முப்புரமும்

2019-02-14

P.464 - உத்தரகோசமங்கை

-------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தானன தானதனா தனதானன தானதனா;

"தானதனா" என்பது "தானதானா" என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.57.1 - "விடையவன் விண்ணுமண்ணும்")

(சுந்தரர் தேவாரம் - 7.100.1 - "தானெனை முன்படைத்தான்")


1)

மேவலர் முப்புரமும் விழவோர்மலை வில்வளைத்த

காவல கண்ணுதலே கமழ்புன்சடை மேற்பிறையாய்

சேவமர் செம்பெருமான் திருவுத்தர கோசமங்கைச்

சேவக னேஅடிகேள் சிறியேன்வினை தீர்த்தருளே.


மேவலர் முப்புரமும் விழ ஓர் மலை வில் வளைத்த காவல - பகைவர்களது முப்புரங்களும் அழியும்படி ஒரு மலையை வில்லாக வளைத்த அரசனே; (மேவலர் - பகைவர்);

கண்ணுதலே - நெற்றிக்கண்ணனே;

கமழ் புன்சடைமேல் பிறையாய் - கமழும் செஞ்சடைமேல் திங்களை அணிந்தவனே;

சே அமர் செம்பெருமான் - இடபவாகனைத்தை விரும்பிய செம்மேனிப் பெருமானே; (சே - எருது);

திருவுத்தரகோசமங்கைச் சேவகனே - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் வீரனே;

அடிகேள் - சுவாமீ; (அடிகள் என்ற சொல் விளியில் அடிகேள் என்று ஆகும்);

சிறியேன் வினை தீர்த்தருளே - சிறுமைகள் மிக்க அடியேனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;


2)

தீயினும் வெம்மையனே தினமேத்திடும் அன்பருக்குத்

தாயினு(ம்) நல்லவனே தனிவெள்விடை ஊர்தியினாய்

சேயிழை பங்கினனே திருவுத்தர கோசமங்கை

மேயவ னேவிமலா வினையாயின தீர்த்தருளே.


தீயினும் வெம்மையனே - தீயைக்காட்டிலும் வெம்மை மிக்கவனே;

தினம் ஏத்திடும் அன்பருக்குத் தாயினும் நல்லவனே - நாள்தோறும் வழிபடும் பக்தர்களுக்குத் தாயைக்காட்டிலும் நன்மை புரிபவனே;

தனி வெள்விடை ஊர்தியினாய் - ஒப்பற்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனே; (தனி - ஒப்பற்ற);

சேயிழை பங்கினனே - உமைபங்கனே; (சேயிழை - பெண்);

திருவுத்தரகோசமங்கை மேயவனே - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருப்பவனே;

விமலா - தூயவனே;

வினையாயின தீர்த்தருளே - அடியேனது வினைகளையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;


3)

மந்திர நான்மறையாய் மணிமார்பினில் நூலினனே

சந்திர சேகரனே தலைமாலை அணிந்தவனே

செந்தழல் மேனியினாய் திருவுத்தர கோசமங்கை

அந்தண னேஅடிகேள் அடியேன்வினை தீர்த்தருளே.


மந்திர நான்மறையாய் - மந்திரமாக விளங்கும் நால்வேதப்பொருளே;

மணி-மார்பினில் நூலினனே - அழகிய பவளம் போன்ற மார்பில் முப்புரிநூல் அணிந்தவனே; (மணி - அழகு; பவளம்);

சந்திர-சேகரனே - பிறையைச் சூடியவனே;

தலைமாலை அணிந்தவனே - மண்டையோட்டு மாலையை அணிந்தவனே;

செந்தழல் மேனியினாய் - செந்தீப்போல் செம்மேனி உடையவனே;

திருவுத்தரகோசமங்கை அந்தணனே - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் அருளுடையவனே;

அடிகேள் - சுவாமீ;

அடியேன் வினை தீர்த்தருளே - அடியேனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;


4)

ஆலமர் மாமிடற்றாய் அணிமங்கள நாயகியோர்

பாலமர் பண்பினனே படுகானிடை ஆடலினாய்

சேலுகள் வாவிதிகழ் திருவுத்தர கோசமங்கை

நாலு மறைப்பொருளே நலிதீவினை தீர்த்தருளே.


ஆல் அமர் மா-மிடற்றாய் - ஆலகாலத்தை விரும்பி உண்ட அழகிய நீலகண்டனே;

அணி மங்களநாயகி ஓர் பால் அமர் பண்பினனே - அழகிய மங்களநாயகியைத் திருமேனியில் ஒரு பக்கம் பங்காக விரும்பியவனே; (* மங்களநாயகி - இத்தலத்து இறைவி திருநாமம்);

படுகானிடை ஆடலினாய் - சுடுகாட்டில் கூத்தாடுபவனே;

சேல் உகள் வாவி திகழ் திருவுத்தரகோசமங்கை நாலுமறைப்பொருளே - சேல்மீன்கள் பாயும் குளம் திகழும் திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் வேதநாயகனே;

நலி-தீவினை தீர்த்தருளே - அடியேனை வருத்துகின்ற தீவினைகளைத் தீர்த்து அருள்வாயாக;


5)

வெஞ்சினக் காலனுயிர் விடவீசிய பூங்கழலாய்

மஞ்சடை மாகயிலை மலைமேலுறை மன்னவனே

செஞ்சடை மேற்பிறையாய் திருவுத்தர கோசமங்கை

நஞ்சடை நன்மிடற்றாய் நலிவினை தீர்த்தருளே.


வெஞ்சினக் காலன் உயிர் விட வீசிய பூங்கழலாய் - கடுங்கோபமுடைய கூற்றுவனே இறக்கும்படி அவனை அழகிய மென்மையான திருவடியால் உதைத்தவனே;

மஞ்சு அடை மா கயிலைமலைமேல் உறை மன்னவனே - மேகம் அடைகின்ற அழகிய கயிலைமலையின்மேல் வீற்றிருக்கும் மன்னனே;

செஞ்சடைமேல் பிறையாய் - சிவந்த சடையின்மீது சந்திரனை அணிந்தவனே;

திருவுத்தரகோசமங்கை நஞ்சு அடை நன்-மிடற்றாய் - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும், ஆலகாலத்தை உண்டு ஒளித்த நல்ல கண்டம் உடையவனே (நீலகண்டனே);

நலி-வினை தீர்த்தருளே - அடியேனை வருத்துகின்ற தீவினைகளைத் தீர்த்து அருள்வாயாக;


6)

உண்ணரு மாவிடத்தை ஒருநற்கனி போலநுங்கி

எண்ணிய இன்னமுதை இமையோர்க்கருள் செய்தவனே

திண்ணிய மாமதில்சூழ் திருவுத்தர கோசமங்கைப்

பெண்ணொரு பங்கினனே பிணிவல்வினை தீர்த்தருளே.


உண்ணரு மாவிடத்தை ஒரு நற்கனி போல நுங்கி - உண்ணலாகாத பெரிய நஞ்சை ஒரு நல்ல பழம்போல் அள்ளி விழுங்கி; (உண்ணரு - உண்ண அரு - தொகுத்தல் விகாரம்); ( நுங்குதல் - விழுங்குதல்);

எண்ணிய இன்னமுதை இமையோர்க்கு அருள்செய்தவனே - தேவர்கள் விரும்பிய இனிய அமுதினை அவர்களுக்கு அருள்புரிந்தவனே;

திண்ணிய மா-மதில்சூழ் திருவுத்தரகோசமங்கைப் பெண் ஒரு பங்கினனே - வலிய பெரிய மதிலால் சூழப்பெற்ற திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் உமைபங்கனே;

பிணி-வல்வினை தீர்த்தருளே - அடியேனைப் பிணித்துள்ள வலிய வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;


7)

மறைமொழி நாவினனே மதவேளை எரித்தவனே

நறைமலர் நச்சரவம் நளிர்கங்கை அணிந்தவனே

சிறையளி ஆர்பொழில்சூழ் திருவுத்தர கோசமங்கை

உறைதரும் உத்தமனே உறுதீவினை தீர்த்தருளே.


மறைமொழி நாவினனே - வேதங்களைப் பாடியருளியவனே;

மதவேளை எரித்தவனே - மன்மதனை எரித்தவனே;

நறைமலர் நச்சரவம் நளிர்-கங்கை அணிந்தவனே - வாசமலர்கள், விஷப்பாம்பு, குளிர்ந்த கங்கை இவற்றையெல்லாம் அணிந்தவனே;

சிறை-அளி ஆர் பொழில் சூழ் திருவுத்தரகோசமங்கை உறைதரும் உத்தமனே - சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகளால் சூழப்பெற்ற திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் உத்தமனே; (சிறை - சிறகு); (அளி - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (தருதல் - ஒரு துணைவினை);

உறு-தீவினை தீர்த்தருளே - எனது மிகுந்த தீவினையைத் தீர்த்து அருள்வாயாக;


8)

சென்றரு வெற்பிடந்த சிதடன்முடி பத்துமிற

அன்றொரு தாள்விரலால் அடர்செய்திசை கேட்டவனே

தென்றலில் வாசமலி திருவுத்தர கோசமங்கை

நின்ற அருட்கடலே நினைவேன்வினை தீர்த்தருளே.


சென்று அரு-வெற்பு இடந்சிதடன் முடி பத்தும் இ - ஓடிச்சென்று கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான இராவணனது பத்துத்தலைகளும் நொறுங்கும்படி; (சிதடன் - அறிவிலி);

அன்று ஒரு தாள்விரலால் அடர்செய்து இசை கேட்டவனே - அன்று திருப்பாதவிரல் ஒன்றால் அவனை நசுக்கி, அவன் பாடிய இசையைக் கேட்டருளியவனே; (சம்பந்தர் தேவாரம் - 3.88.8 - "இலங்கையர் தலைவனைப் பண்பட வரைதனில் அடர்செய்த பைங்கழல்");

தென்றலில் வாசம் மலி திருஉத்தரகோசமங்கை நின்ற அருட்கடலே - தென்றலில் மணம் கமழும் திருஉத்தரகோசமங்கையில் நீங்காமல் உறைகின்ற பேரருளாளனே;

நினைவேன் வினை தீர்த்தருளே - உன்னையே எண்ணி வழிபடும் என் வினையைத் தீர்த்து அருள்வாயாக;


9)

மாயனு(ம்) நான்முகனும் மயலால்மிக வாதுசெய்து

போயடி மேலறியாப் பொருளாய்நிலம் வான்கடந்த

தீயென நின்றவனே திருவுத்தர கோசமங்கை

மேயவ னேவிமலா வினையாயின தீர்த்தருளே.


மாயனும் நான்முகனும் மயலால் மிக வாதுசெய்து - திருமாலும் பிரமனும் ஆணவத்தால் மிகவும் வாதிட்டு;

போய் அடி மேல் அறியாப் பொருளாய் நிலம் வான் கடந்த தீ என நின்றவனே - தேடிச்சென்று கீழும் மேலும் அறியாத பொருள் ஆகி, மண்ணையும் விண்ணையும் தாண்டி நின்ற ஜோதி ஆனவனே;

திருவுத்தரகோசமங்கை மேயவனே - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருப்பவனே;

விமலா - தூயவனே;

வினையாயின தீர்த்தருளே - அடியேனது வினைகளையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;


10)

நிந்தனை செய்துழல்வார் நிசிபோலிருள் நெஞ்சுடைய

அந்தகர் தாமறியா அறிவேஒளி நீறணிந்த

செந்தழல் மேனியனே திருவுத்தர கோசமங்கை

ஐந்தொழில் ஆற்றவலாய் அடியேன்வினை தீர்த்தருளே.


நிந்தனை செய்து உழல்வார் - வைதிகதர்மத்தைப் பழித்துப் பேசித் திரிகின்றவர்கள்;

நிசிபோல் இருள் நெஞ்சுடைய அந்தகர் தாம் அறியா அறிவே - இரவினைப் போல் நெஞ்சில் இருளை (வஞ்சத்தை) வைத்திருக்கும் அக்-குருடர்களால் அறியப்படாத ஞானவடிவினனே;

ஒளி-நீறு அணிந்த செந்தழல் மேனியனே - ஒளிவீசும் திருநீற்றைப் பூசிய செந்தீப்போல் செம்மேனியனே;

திருவுத்தரகோசமங்கை ஐந்தொழில் ஆற்றவலாய் - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருப்பவனே, பஞ்சகிருத்தியம் செய்பவனே; (ஐந்தொழில் - பஞ்சகிருத்தியம் - சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரஹம்);

அடியேன் வினை தீர்த்தருளே - என் தீவினையைத் தீர்த்து அருள்வாயாக;


11)

பரவிய நஞ்சையுண்ட பரமாசுடு காடிடமா

இரவில் நடம்புரிவாய் இகல்ஆனை உரித்தவனே

திரையணி செஞ்சடையாய் திருவுத்தர கோசமங்கை

அரவரை நாணுடையாய் அடியேன்வினை தீர்த்தருளே.


பரவிய நஞ்சை உண்ட பரமா - எங்கும் பரவிய ஆலகாலத்தை உண்டு காத்த பரமனே;

சுடுகாடு இடமா இரவில் நடம் புரிவாய் - சுடுகாட்டையே இடமாக விரும்பி இருளில் கூத்தாடுபவனே;

இகல்-ஆனை உரித்தவனே - போர்செய்த யானையின் தோலை உரித்தவனே; (இகல்தல் - பகைத்தல்; இகல் - பகை; போர்);

திரை அணி செஞ்சடையாய் - கங்கையைச் செஞ்சடையில் அணிந்தவனே; (திரை - அலை; நதி);

திருவுத்தரகோசமங்கை அரவு அரைநாண் உடையாய் - திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருப்பவனே, பாம்பை அரைநாணாகக் கட்டியவனே;

அடியேன் வினை தீர்த்தருளே - என் தீவினையைத் தீர்த்து அருள்வாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Saturday, August 30, 2025

P.440 - உத்தரகோசமங்கை - மெலிமதியம் புரிசடைமேல்

2018-06-27

P.440 - உத்தரகோசமங்கை

-------------------------------

(தரவு கொச்சகக் கலிப்பா - தானதானா தானதானா தானன தானதனா)

(சம்பந்தர் தேவாரம் - 1.52.1 - "மறையுடையாய் தோலுடையாய்")


1)

மெலிமதியம் புரிசடைமேல் மிளிர அணிந்தவனே

பலிமகிழும் பாங்குடையாய் பாரொடு விண்பரவும்

ஒலிகழலாய் உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கைப்

புலியதளாய் போற்றிநின்றேன் பொருவினை தீர்த்தருளே.


மெலி-மதியம் புரி-சடைமேல் மிளிர அணிந்தவனே - தேய்ந்து மெலிந்த திங்களை முறுக்குடைய சடையின்மேல் திகழுமாறு அணிந்தவனே; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

பலி மகிழும் பாங்கு உடையாய் - பிச்சையை விரும்புகின்ற பெருமை உடையவனே; (பலி - பிச்சை);

பாரொடு விண் பரவும் ஒலி-கழலாய் - மண்ணுலகும் தேவருலகும் வழிபடும், ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியினனே;

உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கைப் புலி-அதளாய் - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்றவனே, புலித்தோலை ஆடையாக அணிந்தவனே; (அதள் - தோல்);

போற்றிநின்றேன் பொரு-வினை தீர்த்து அருளே - உன்னையே என்றும் துதிக்கும் என்னைத் தாக்கும் வினைகளைத் தீர்த்து அருள்வாயாக; (பொருதல் - தாக்குதல்);


2)

நன்றறியார் எயில்கள்வேவ நக்கவ னேகயிலைக்

குன்றுடையாய் குளிர்மதியாய் கொடியதன் மேலிடபம்

ஒன்றுடையாய் உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை

நின்றவனே வினைகள்நீக்கி நின்னடி யேற்கருளே.


நன்று-அறியார் எயில்கள் வேவ நக்கவனே - தீயவர் முப்புரம் எரியச் சிரித்தவனே; (எயில் - கோட்டை);

கயிலைக்-குன்று உடையாய் - கயிலைமலையானே;

குளிர்-மதியாய் - குளிர்ச்சி பொருந்திய திங்களை அணிந்தவனே;

கொடி அதன்மேல் இடபம் ஒன்று உடையாய் - இடபக்கொடியை உடையவனே;

உயர்மதில்சூழ் உத்தரகோசமங்கை நின்றவனே - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் நிலைத்து உறைகின்றவனே,

வினைகள் நீக்கி நின் அடியேற்கு அருளே - உன் அடியேனான எனது வினைகளைத் தீர்த்து எனக்கு அருள்வாயாக;


3)

வம்புநாறும் வாளியெய்த மதனை எரித்தவனே

கொம்பனாளோர் கூறுகந்தாய் குவலயம் அன்புசெயும்

உம்பரானே உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை

எம்பிரானே ஏத்துமென்றன் இருவினை தீர்த்தருளே.


வம்பு நாறும் வாளி எய்த மதனை எரித்தவனே - மணம் வீசும் மலர்அம்புகளை எய்த மன்மதனை எரித்தவனே; (வம்பு - வாசனை); (வாளி - அம்பு);

கொம்பு அனாள் ஓர் கூறு உகந்தாய் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக விரும்பியவனே; (அனாள் - அன்னாள் - போன்றவள்);

குவலயம் அன்புசெயும் உம்பரானே - உலகோர் போற்றும் தேவனே;

உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கை எம்பிரானே - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்ற எம்பெருமானே,

ஏத்தும் என்றன் இருவினை தீர்த்து அருளே - உன்னைத் துதிக்கும் எனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;


4)

சத்தியனே சத்திதன்னைத் தாங்கிய மெய்யினனே

வித்தகனே விரிசடையில் வெள்ளம் அடைத்தவனே

உத்தமனே உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை

நித்தியனே இன்பம்நல்கி நின்னடி யேற்கருளே.


சத்தியனே - மெய்ப்பொருளே;

சத்திதன்னைத் தாங்கிய மெய்யினனே - உமையைத் திருமேனியில் ஒரு பங்காகத் தாங்கியவனே;

வித்தகனே, விரி-சடையில் வெள்ளம் அடைத்தவனே - ஆற்றலுடையவனே, விரித்த சடையில் கங்கையை அடைத்தவனே;

உத்தமனே - சிரேஷ்டனே;

உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கை நித்தியனே - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்ற அழிவற்றவனே,

இன்பம் நல்கி நின் அடியேற்கு அருளே - உன் அடியேனான எனக்கு இன்பம் தந்து அருள்வாயாக;


5)

கச்சதாக நச்சராவைக் கட்டிய கண்ணுதலாய்

அச்சமிக்குச் சரணடைந்த அம்மதி உய்ந்திடவுன்

உச்சிவைத்தாய் உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை

நச்சிநின்றாய் தொழுமெனக்கும் நன்மை புரிந்தருளே.


கச்சதாக நச்ராவைக் கட்டிய கண்ணுதலாய் - அரையில் கச்சாக விஷப்பாம்பைக் கட்டிய நெற்றிக்கண்ணனே; (கச்சது - கச்சு; அது - பகுதிப்பொருள்விகுதி); (நச்சுஅரா - விஷப்பாம்பு);

அச்சம் மிக்குச் சரணடைந்த அம்-மதி உய்ந்திட உன் உச்சி வைத்தாய் - மிகவும் அஞ்சிவந்து உன்னைச் சரண்புகுந்த அந்தத் திங்கள் உய்யும்படி உன் திருமுடிமேல் வைத்தவனே;

உயர்மதில்சூழ் உத்தரகோசமங்கை நச்சி நின்றாய் - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் விரும்பி உறைகின்றவனே, (நச்சுதல் - விரும்புதல்);

தொழும் எனக்கும் நன்மை புரிந்து அருளே - உன்னை வழிபடும் எனக்கும் நன்மையை விரும்பியருள்வாயாக;


6)

நலந்திகழ்ந்த கண்ணிடந்து நாரணன் போற்றிசெய்யச்

சலந்தரன்றன் உடல்தடிந்த சக்கரம் ஈந்தவனே

உலந்தவோட்டில் ஐயமேற்பாய் உத்தர கோசமங்கைத்

தலந்தயங்கு சோதியேவென் மலவிருள் மாய்த்தருளே.


நலம் திகழ்ந்த கண் இடந்து நாரணன் போற்றிசெய்யச் - அழகிய மலர்க்கண்ணைத் தோண்டிப் பூவாக இட்டு அர்ச்சனை செய்த திருமாலுக்கு;

சலந்தரன்தன் உடல் தடிந்த சக்கரம் ஈந்தவனே - ஜலந்தராசுரனது உடலை வெட்டிய சக்கராயுதத்தைத் தந்தவனே; (* திருமாலுக்குச் சக்கரம் அளித்தது திருவீழிமிழலை வரலாறு);

உலந்த ஓட்டில் ஐயம் ஏற்பாய் - வற்றிய மண்டையோட்டில் பிச்சை ஏற்பவனே;

உத்தரகோசமங்கைத் தலம் தயங்கு சோதியே - உத்தரகோசமங்கை என்ற தலத்தில் ஒளிவீசும் ஜோதியே; (தயங்குதல் - ஒளிவிடுதல்);

என் மலவிருள் மாய்த்து அருளே - என் அறியாமையை அழித்து அருள்வாயாக;


7)

மரகதம்போல் மேனியாளை வாமம் மகிழ்ந்தவனே

அரியநஞ்சை அமுதமாக ஆர்ந்த மிடற்றினனே

உரகநாணா உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கைப்

பெரியதேவா உன்னையென்றும் பேணும் நினைப்பருளே.


மரகதம்போல் மேனியாளை வாமம் மகிழ்ந்தவனே - மரகதம் போன்ற நிறம் உடைய உமையை இடப்பாகமாக விரும்பியவனே: (வாமம் - இடப்பக்கம்);

அரிய நஞ்சை அமுதமாக ஆர்ந்த மிடற்றினனே - உண்ணலாகா ஆலகாலத்தை அமுதம் போல உண்ட நீலகண்டனே; (ஆர்தல் - உண்தல்);

உரக-நாணா - பாம்பை அரைநாணாகக் கட்டியவனே; (உரகம் - பாம்பு);

உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கைப் பெரிய தேவா - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்ற மகாதேவனே;

உன்னை என்றும் பேணும் நினைப்பு அருளே - என்றும் உன்னை வழிபடும் எண்ணத்தைத் தந்து அருள்வாயாக;


8)

ஆதனாகி மலையெடுத்தான் அழவிரல் ஊன்றுமலர்ப்

பாதநாதா படையு(ம்)நல்கும் பரிவின னேமறைகள்

ஓதுநாவா உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை

மாதுபாகா வாழ்த்திநின்றேன் வல்வினை மாய்த்தருளே.


ஆதனாகி மலை எடுத்தான் அழ விரல் ஊன்று மலர்ப்பாத நாதா - அறிவிலான் ஆகிக் கயிலையைப் பெயர்த்த இராவணன் அழும்படி ஒரு விரலை ஊன்றிய மலர்ப்பாதத்தை உடைய தலைவனே;

படையு(ம்) நல்கும் பரிவினனே - பின் (அவன் துதிகள் பாடக் கேட்டு மகிழ்ந்து) அவனுக்கு ஒரு வாளையும் கொடுத்த தயாபரனே;

மறைகள் ஓது நாவா - வேதங்களைத் திருநாவால் பாடியருளியவனே;

உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கை மாது-பாகா - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்ற உமைபங்கனே,

வாழ்த்தி-நின்றேன் வல்வினை மாய்த்து அருளே - உன்னையே என்றும் வாழ்த்தும் எனது வலிய வினைகளை அழித்து அருள்வாயாக;


9)

போதினானும் மாலு(ம்)நேடிப் போற்றிய எல்லையிலாச்

சோதியானே நீறுபூசும் சுந்தர னேசுருளார்

ஓதிமாது பாதியானாய் உத்தர கோசமங்கை

ஆதிமூர்த்தீ அடிபணிந்தேன் அல்லல் அறுத்தருளே.


போதினானும் மாலு(ம்) நேடிப் போற்றிய எல்லை இலாச் சோதியானே - பூமேல் உறையும் பிரமனும் திருமாலும் (அடிமுடி) தேடி வணங்கிய அளவில்லாத தீப்பிழம்பாகி நின்றவனே; (போது - பூ);

நீறு பூசும் சுந்தரனே - திருநீற்றைப் பூசும் அழகனே;

சுருள் ஆர் ஓதி மாது பாதி ஆனாய் - சுருண்ட கூந்தலை உடைய உமை திருமேனியில் ஒரு பாதி ஆனவனே; (ஓதி - பெண்களின் தலைமயிர்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின");

உத்தரகோசமங்கை ஆதிமூர்த்தீ - உத்தரகோசமங்கையில் உறைகின்ற ஆதியே, (ஆதிமூர்த்தி - ஆதி மூர்த்தி - யாவர்க்கும் மூலகாரணமாய் நிற்கும் மூர்த்தி. வாழ்முதலாகிய சிவபெருமான்);

அடிபணிந்தேன் அல்லல் அறுத்து அருளே - உன் திருவடியை வழிபடும் என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


10)

குற்றநெஞ்சர் கொள்கையென்று கூறிடு பொய்யொழிந்து

நெற்றிநீற்றர் ஆனநேயர் நினைவரம் நல்கிடுவாய்

ஒற்றையேற்றாய் உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை

நற்றவத்தாய் அடியனேற்கும் நன்மை புரிந்தருளே.


குற்றநெஞ்சர் கொள்கை என்று கூறிடு பொய் ஒழிந்து - நெஞ்சில் வஞ்சம் மிக்கவர்கள் தங்களது கொள்கை என்று சொல்கின்ற பொய்களை நீங்கி;

நெற்றிநீற்றர் ஆன நேயர் நினை-வரம் நல்கிடுவாய் - நெற்றியில் திருநீற்றைப் பூசி வழிபடும் பக்தர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் தருபவனே;

ஒற்றை ஏற்றாய் - ஒப்பற்ற இடபவாகனத்தை உடையவனே; (அப்பர் தேவாரம் - 5.92.10 - "ஒற்றை யேறுடையான் அடியேயலால்");

உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கை நற்றவத்தாய் - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்ற நல்ல தவவடிவினனே;

அடியனேற்கும் நன்மை புரிந்து அருளே - உன் அடியேனுக்கும் இன்னருள் புரிவாயாக;


11)

மலைவளைத்து மதில்களெய்தாய் வாளிகள் ஐந்தெறியச்

சிலைவளைத்த மதனையட்டாய் திரைமலி கங்கைநதி

உலவுகின்ற சடையினானே உத்தர கோசமங்கைத்

தலமுறைந்தாய் தாள்பணிந்தேன் அலமரல் தீர்த்தருளே.


மலை வளைத்து மதில்கள் எய்தாய் - மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களை எய்தவனே;

வாளிகள் ஐந்து எறியச் சிலை வளைத்த மதனை அட்டாய் - ஐந்து அம்புகளை ஏவ வில்லை வளைத்த மன்மதனை எரித்தவனே; (வாளி - அம்பு); (சிலை - வில்); (மதன் - காமன்); (அடுதல் - அழித்தல்);

திரை மலி கங்கைநதி உலவுகின்ற சடையினானே - அலை மிகுந்த கங்கை உலவுகின்ற சடையை உடையவனே; (திரை - அலை);

உத்தரகோசமங்கைத் தலம் உறைந்தாய் - உத்தரகோசமங்கை என்ற தலத்தில் உறைகின்றவனே;

தாள் பணிந்தேன் அலமரல் தீர்த்து அருளே - உன் திருவடியை வழிபடும் எனது அச்சத்தைத் தீர்த்து அருள்வாயாக; (அலமரல் - கவலை; அச்சம்);


பிற்குறிப்பு - யாப்புக்குறிப்பு:

இந்தப் பாடல் அமைப்பைக் கலிவிருத்தம் என்றோ தரவு கொச்சகக் கலிப்பா என்றோ கருதலாம்.

  • இப்பாடலின் அடிகளின் அமைப்பைத் - "தானதானா - தானதானா - தானன தானதனா" - என்று மூன்று பகுதிகளாக நோக்கலாம்.

  • 1, 2-ஆம் சீர்கள் - "தானதானா" - என்பது தானதனா, / தனனதானா / தனதனனா என்றெல்லாம் வரக்கூடும்.

  • 3-ஆம் சீர் - "தானன" - என்பது தனதன / தான / தனன என்றெல்லாம் வரக்கூடும். தான / தனன என்று மாச்சீராக வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்; 3-ஆம் 4-ஆம் சீர்களிடையே வெண்டளை;

  • 4-ஆம் சீர் - "தானதனா" - இது தானானா / தனதனனா / தனதானா என்றெல்லாம் வரக்கூடும்.

சம்பந்தர் தேவாரம் 1.47 - 1.53 பதிகங்கள் - இந்த அமைப்பை உடையன. உதாரணமாக - 1.52.3 -

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத

என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற் கூற்றுதைத்த

பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்

நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------