2019-06-24
P. 473 - உத்தரகோசமங்கை
------------------
(கட்டளைக் கலித்துறை) (திருவிருத்தம் அமைப்பு)
(அப்பர் தேவாரம் - திருவிருத்தம் - 4.96.1 - "கோவாய் முடுகி")
(சம்பந்தர் தேவாரம் - 1.116.1 - "அவ்வினைக் கிவ்வினை")
1)
கோங்கு குராமலர் கூவிளம் சூடிக் குளிர்மதியம்
தாங்கும் சடையினன் உம்பர் தலைவன் தனிவிடையன்
ஓங்கு மதில்புடை சூழ்திரு உத்தர கோசமங்கைத்
தீங்கரும் பைத்தொழத் தீவினை ஆயின தேய்ந்தறுமே.
கோங்கு குராமலர் கூவிளம் சூடிக் குளிர்மதியம் தாங்கும் சடையினன் - கோங்கு, குரவம், வில்வம் இவற்றைச் சூடிக் குளிர்ந்த திங்களையும் சடையில் தாங்கியவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.75.8 - "கோங்கொடு செருந்தி கூவிள(ம்) மத்தம் கொன்றையும் குலாவிய செஞ்சடைச்செல்வர்");
உம்பர் தலைவன் - தேவர்கள் தலைவன்;
தனி விடையன் - ஒப்பற்ற இடபவாகனம் உடையவன்; (தனி - ஒப்பற்ற);
ஓங்கு மதில் புடைசூழ் திரு-உத்தர-கோசமங்கைத் - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;
தீங்கரும்பைத் தொழத் தீவினை ஆயின தேய்ந்து-அறுமே - இனிய கரும்பு போன்ற ஈசனைத் தொழுதால் நம் தீவினைகளெல்லாம் அற நீங்கும்; (சம்பந்தர் தேவாரம் - 2.24.3 - "செல்வா என வல்வினை தேய்ந்தறுமே");
2)
கயலன கண்ணியை வாமம் மகிழ்ந்தவன் கண்ணுதலான்
பெயர்பல ஏற்ற பெயரிலி என்னும் பெருமையினான்
உயர்பொழில் சூழ்ந்தழ கார்திரு உத்தர கோசமங்கைப்
புயலன கண்டனைப் போற்றிசெய் தார்வினை போயறுமே.
கயல் அன கண்ணியை வாமம் மகிழ்ந்தவன் - கயல்மீன் போன்ற கண்களை உடைய உமையை இடப்பாகமாக விரும்பியவன்; (அன - அன்ன - ஒத்த);
கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்; (நுதல் - நெற்றி);
பெயர் பல ஏற்ற பெயரிலி என்னும் பெருமையினான் - எண்ணற்ற திருநாமங்களை உடையவனும் பெயரில்லாதவனும் ஆன பெருமையை உடையவன்; (திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 8.11.1 - "ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி");
உயர்-பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு-உத்தர-கோசமங்கைப் - உயர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற அழகிய திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;
புயல் அன கண்டனைப் போற்றிசெய்தார் வினை போய்-அறுமே - மேகம் போன்ற கரிய கண்டத்தை உடையவனை வணங்குபவர்களது வினைகள் தீரும்; (புயல் - மேகம்);
3)
மண்புனல் தீவளி வானென ஆன வடிவுடையான்
திண்மதில் மூன்றினில் தீயெழு வித்த சிலையுடையான்
ஒண்மலர் ஆர்பொழில் சூழ்திரு உத்தர கோசமங்கை
வெண்மதி சூடியைப் போற்றிய அன்பர் வினையறுமே.
மண் புனல் தீ வளி வான் என ஆன வடிவுடையான் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் ஆன திருவுரு உடையவன்; (வளி - காற்று);
திண்-மதில் மூன்றினில் தீ எழுவித்த சிலை உடையான் - வலிய முப்புரங்களில் தீயை மூட்டி அழித்த வில்லை ஏந்தியவன்; (சிலை - வில்);
ஒண்-மலர் ஆர் பொழில் சூழ் திரு-உத்தர-கோசமங்கை - பிரகாசமான மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பெற்ற அழகிய திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;
வெண்மதி சூடியைப் போற்றிய அன்பர் வினை அறுமே - வெண்திங்களை அணிந்த பெருமானை வழிபடும் பக்தர்களது வினைகள் தீரும்.
4)
சலமலை வேணியில் தண்மதி யந்தனைத் தாங்கியவன்
மலைசிலை ஆக்கி ஒருகணை யால்மும் மதிலெரித்தான்
உலகுகள் ஈன்றொடுக் கும்பரன் உத்தர கோசமங்கைத்
தலைவன் அடியிணை தன்னைத் தொழவினை தானறுமே.
சலம் அலை வேணியில் தண்-மதியம்-தனைத் தாங்கியவன் - கங்கை அலைகின்ற (/அலைக்கின்ற) சடையில் குளிர்ந்த சந்திரனைத் தாங்கியவன்;
மலை சிலை ஆக்கி, ஒரு கணையால் மும்மதில் எரித்தான் - மேருமலையை வில்லாக்கி, ஒரு கணையால் முப்புரங்களை எய்து எரித்தவன்; (சிலை - வில்);
உலகுகள் ஈன்று ஒடுக்கும் பரன் - எல்லா உலங்களையும் படைத்து முடிவில் ஒடுக்குபவன்;
உத்தர-கோசமங்கைத் தலைவன் அடியிணை-தன்னைத் தொழ வினை-தான் அறுமே - திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற பெருமானது இரு-திருவடிகளைத் தொழுதால் வினைகள் அறும்; (சம்பந்தர் தேவாரம் - 2.24.5 - "தலைவா என வல்வினை தானறுமே");
5)
மாமுலை மங்கள நாயகி தன்மண வாளனும்பர்
தாமரைத் தாள்தொழ ஓர்கறை கண்டத்தில் தாங்கியவன்
ஓமதன் உட்பொருள் ஆயவன் உத்தர கோசமங்கைக்
கோமகன் நாமங்கள் கூறும் அடியார் குறையறுமே.
மா-முலை மங்கள நாயகி தன் மணவாளன் - அழகிய பெரிய முலைகளை உடையவளும் மங்களநாயகி என்ற திருநாமம் உடையவளுமான உமைக்குக் கணவன்; (* மங்களநாயகி - திருவுத்தர-கோசமங்கை இறைவி திருநாமம்);
உம்பர் தாமரைத்தாள் தொழ ஓர் கறை கண்டத்தில் தாங்கியவன் - தேவர்கள் மலர்ப்பாதத்தை வணங்கி வேண்ட, அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்ட நீலகண்டன்;
ஓம்-அதன் உட்பொருள் ஆயவன் - பிரணவத்தின் உட்பொருளாக விளங்குபவன்;
உத்தர-கோசமங்கைக் கோமகன் நாமங்கள் கூறும் அடியார் குறை அறுமே - திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற பெருமானது திருப்பெயர்களை ஓதும் பக்தர்களது குறைகள் தீரும்;
6)
விண்ணவர் நாதன் மிளிர்மதி சூடிய வேணிதனில்
தண்ணதி தாங்கும் சதுரினன் மேனி தனிலொருபால்
ஒண்ணுதற் பெண்ணை உகந்தவன் உத்தர கோசமங்கைக்
கண்ணுதல் பொன்னடி கைதொழ வல்வினைக் கட்டறுமே.
விண்ணவர் நாதன் - தேவர்கள் தலைவன்;
மிளிர்-மதி சூடிய வேணிதனில் தண்-நதி தாங்கும் சதுரினன் - ஒளிவீசும் சந்திரனைச் சூடிய சடையில் குளிர்ந்த கங்கையைத் தாங்கும் வல்லவன்; (சதுர் - சாமர்த்தியம்; ஆற்றல்);
மேனிதனில் ஒருபால் ஒண்-நுதல் பெண்ணை உகந்தவன் - திருமேனியில் ஒருபக்கம் ஒளியுடைய நெற்றியை உடைய உமையைப் பாகமாக விரும்பியவன்;
உத்தர-கோசமங்கைக் கண்ணுதல் பொன்னடி கைதொழ வல்வினைக்கட்டு அறுமே - திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற நெற்றிக்கண்ணனது பொற்பாதத்தை வணங்கினால் வலிய வினைப்பந்தம் தீரும்; (அப்பர் தேவாரம் - 5.39.11 - "மயிலாடுதுறை தொழும் கரத்தினார் வினைக் கட்டறுங் காண்மினே");
7)
செம்பொற் சடைமிசைத் திங்களைச் சூடும் சிவபெருமான்
அம்பொற் கழலால் அடற்கூற் றுதைத்த அருளுடையான்
உம்பர் தலைவன் உயர்பொழில் உத்தர கோசமங்கை
நம்பன் பெயருரை நாவினர் பாவம் நசிவுறுமே.
செம்பொற்-சடைமிசைத் திங்களைச் சூடும் சிவபெருமான் - செம்பொன் போன்ற சடையின்மேல் சந்திரனை அணிந்த சிவபெருமான்;
அம்-பொற்கழலால் அடற்-கூற்று உதைத்த அருள் உடையான் - மார்க்கண்டேயருக்காக அழகிய பொன்னடியால் கொடிய வலிய கூற்றுவனை உதைத்த அருள்மிக்கவன்; (அம் - அழகு); (அடல் - கொடுமை; வலிமை);
உம்பர் தலைவன் - தேவர்கள் தலைவன்;
உயர்-பொழில் உத்தர-கோசமங்கை - உயர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;
நம்பன் பெயர் உரை நாவினர் பாவம் நசிவுறுமே - நம்பன் என்ற திருநாமத்தை உடைய பெருமானது திருப்பெயர்களை நாக்கால் சொல்லும் அன்பர்களது பாவங்கள் அழியும்; (நம்பன் - விரும்பத்தக்கவன் - சிவன் திருநாமம்); (நசிவு - அழிவு; கேடு);
8)
கற்றைச் சடையன் கயிலையைப் பேர்த்திடக் கைகளினால்
பற்றிய வன்முடி பத்திற ஊன்றிப் பரிந்தபரன்
ஒற்றை விடையன் உயர்பொழில் உத்தர கோசமங்கைக்
கொற்றவன் நாமங்கள் கூறிய அன்பர் குறையறுமே.
கற்றைச்-சடையன் கயிலையைப் பேர்த்திடக் கைகளினால் பற்றியவன் முடி பத்து இற ஊன்றிப் பரிந்த பரன் - கற்றைச்-சடையை உடைய சிவபெருமானது கயிலைமலையைத் தன் கைகளால் பற்றிப் பெயர்க்க முயன்ற இராவணனது பத்துத்-தலைகளையும் ஒரு விரலை ஊன்றி நசுக்கிப், பின் (அவன் அழுது பாடிய பாடல்களைக் கேட்டு) இரங்கிய பரமன்;
ஒற்றை விடையன் - ஒப்பற்ற இடபவாகனத்தை உடையவன்; (ஒற்றை - ஒப்பற்ற);
உயர்-பொழில் உத்தர-கோசமங்கைக் - உயர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;
கொற்றவன் நாமங்கள் கூறிய அன்பர் குறையறுமே - தலைவனது திருப்பெயர்களைச் சொல்லும் அன்பர்களது குறைகள் தீரும்;
9)
கரியவன் வாசக் கமலத் தயனிவர் காண்பரிய
எரியென ஓங்கிய ஈசன் பிறப்பும் இறப்புமிலான்
உரியை உடையென் றுகந்தவன் உத்தர கோசமங்கைப்
புரிசடை யான்கழல் போற்றிசெய் தார்வினை போயறுமே.
கரியவன் வாசக்-கமலத்து அயன் இவர் காண்பரிய எரி என ஓங்கிய ஈசன் - கரிய திருமாலாலும் மணம் மிக்க தாமரைப்பூவில் உறையும் பிரமனாலும் அறிய ஒண்ணாத ஜோதி என நீண்ட ஈசன்;
பிறப்பும் இறப்பும் இலான் - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்;
உரியை உடை என்று உகந்தவன் - தோலை ஆடையாக விரும்பிக் கட்டியவன்; (உரி - தோல்); ( உகத்தல் - மகிழ்தல்; விரும்புதல்);
உத்தர-கோசமங்கைப் - திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;
புரி-சடையான் கழல் போற்றிசெய்தார் வினை போய்-அறுமே - சுருண்ட சடையை உடைய பெருமானது திருவடியை வழிபட்டவர்களது வினைகள் தீரும்; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);
10)
நித்தலும் பொய்யுரை நீசர்தம் எத்தினை நீங்கிவம்மின்
மத்தமும் கொன்றையும் வன்னியும் சூடிய வார்சடையன்
உத்தமி பங்கன் உயர்பொழில் உத்தர கோசமங்கை
அத்தன் அடிதொழும் அன்பர் வினைகள் அழிவுறுமே.
நித்தலும் பொய் உரை நீசர்தம் எத்தினை நீங்கி வம்மின் - ஓயாமல் பொய்யே பேசுகின்ற கீழோர்களது வஞ்சத்தை நீங்கி வாருங்கள்; (நித்தலும் - எந்நாளும்); (நீசர் - கீழோர்); (எத்து - வஞ்சகம்);
மத்தமும் கொன்றையும் வன்னியும் சூடிய வார்-சடையன் - ஊமத்தமலர், கொன்றைமலர், வன்னியிலை இவற்றையெல்லாம் நீண்ட சடையில் சூடியவன்; (வார்தல் - நீள்தல்);
உத்தமி பங்கன் - உமையொருபாகன்;
உயர்-பொழில் உத்தர-கோசமங்கை - உயர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;
அத்தன் அடி தொழும் அன்பர் வினைகள் அழிவுறுமே - நம் தந்தையான சிவபெருமானது திருவடியை வணங்கும் அடியார்களது வினைகள் அழியும்.
11)
கண்ணிடந் தப்பிய வேடற் கருளிய காளத்தியான்
எண்ணிடு மார்க்கண்டர் இன்னுயிர் காத்த இருங்கழலான்
உண்விடம் ஓர்மணி செய்தவன் உத்தர கோசமங்கைப்
பெண்ணிடம் வைத்தவன் பேர்கள் நமக்குப் பெருந்துணையே.
கண் இடந்து அப்பிய வேடற்கு அருளிய காளத்தியான் - கண்ணைத் தோண்டி அப்பிய வேடனுக்கு (= கண்ணப்பருக்கு) திருக்காளத்தியில் அருள்செய்தவன்; (வேடற்கு - வேடனுக்கு);
எண்ணிடு மார்க்கண்டர் இன்னுயிர் காத்த இருங்-கழலான் - தியானித்து வழிபட்ட மார்க்கண்டேயரது இனிய உயிரைக் காத்த பெருமைமிக்க திருவடியை உடையவன்; (இருமை - பெருமை);
உண்-விடம் ஓர் மணி செய்தவன் - உண்ட நஞ்சை ஒப்பற்ற நீலமணி ஆக்கியவன்;
உத்தர-கோசமங்கைப் - திருவுத்தர-கோசமங்கையில் உறைகின்ற;
பெண் இடம் வைத்தவன் பேர்கள் நமக்குப் பெரும் துணையே - உமைபங்கனது திருநாமங்கள் நமக்குப் பெரிய துணை ஆவன; (அப்பர் தேவாரம் - 4.104.6 - "நற்றுணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே");
(இலக்கணக் குறிப்பு - கட்டளைக் கலித்துறையில் அடியின் ஈற்றுச்சீரில் கனிச்சீர் போல் தோன்றும் சீர்கள் சில சமயம் வரலாம். உதாரணம்: நம்பியாண்டார் நம்பி - திருத்தொண்டர் திருவந்தாதி - 11.33.9 - "ஏர்மலி மாமதில் சூழ்கரு வூரில் எறிபத்தனே");
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment