Monday, April 27, 2026

T.216 - பேரூர் - ஈயாக் குணமாறி

2019-06-12

T.216 - பேரூர் - ஈயாக் குண(ம்)மாறி

-----------------

(வண்ணவிருத்தம்;

தானாத் .. தனதான)

(தீராப் பிணிதீர - திருப்புகழ் - பேரூர்)


ஈயாக் குண(ம்)மாறி .. ஏர்வீப் பலதூவி

வாயாற் புகழ்பாடி .. வானோக் கிடுவேனோ

தீயார்க் கிலனானாய் .. தீநேத் திரதேவா

பேயார்த் திடவாடும் .. பேரூர்ப் பெருமானே.


பதம் பிரித்து:

ஈயாக் குண(ம்) மாறி, .. ஏர்-வீப் பல தூவி,

வாயாற் புகழ் பாடி, .. வான் நோக்கிடுவேனோ?

தீயார்க்கு இலன்-ஆனாய்; .. தீ-நேத்திர தேவா;

பேய் ஆர்த்திட ஆடும் .. பேரூர்ப் பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

ஈயாக் குண(ம்) மாறி, ஏர்-வீப் பல தூவி - இரப்போர்களுக்கு ஒன்றும் கொடாத குணம் நீங்கி, அழகிய பூக்கள் பலவற்றைத் (திருவடியில்) தூவி; (ஏர் - அழகு); (வீ - பூ);

வாயால் புகழ் பாடி, வான் நோக்கிடுவேனோ - என் வாயால் உன் திருப்புகழைப் பாடி, உய்யும் எண்ணத்தைப் பெறுமாறு அருள்புரிவாயாக; (அப்பர் தேவாரம் - 5.49.3 - "வானோக்கும் வழியாவது நின்மினோ" - வான் நோக்கும் வழி - பேரின்பவீட்டைக் கருதும்வழி);

தீயார்க்கு இலன் ஆனாய் - தீயவர்களுக்கு அருள் இல்லாதவனே;

தீ-நேத்திர தேவா - நெருப்பை உமிழும் நெற்றிக்கண் உடையவனே, தேவனே; (நேத்திர தேவா - 1. நேத்திரனே, தேவனே; 2. நேத்திரம் உடைய தேவனே; இருசொற்களும் வடமொழிச்சொற்கள் என்றபடியால் வல்லொற்று மிகாது புணரும்);

பேய் ஆர்த்திட ஆடும் - பேய்கள் முழவு முதலியவற்றை வாசிக்க, அங்கே ஆடுகின்ற; (ஆர்த்தல் - ஒலித்தல்);

பேரூர்ப் பெருமானே - பேரூரில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment