Monday, April 27, 2026

T.217 - இடையாறு - தடுமாற்றைத் தருபாவ

2019-06-27

T.217 - இடையாறு - தடுமாற்றைத் தருபாவ

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதாத்தத் .. தனதான)


தடுமாற்றைத் .. தருபாவத்

.. தளைநீக்கிப் .. புரவாயே

படுகூற்றைக் .. குமைகாலா

.. பலியேற்றுத் .. திரிவோனே

சுடுநீற்றைப் .. புனைவோனே

.. தொழுவார்க்குத் .. துணையானாய்

இடுகாட்டிற் .. சுழல்பாதா

.. இடையாற்றுப் .. பெருமானே.


பதம் பிரித்து:

தடுமாற்றைத் தரு-பாவத்

.. தளை நீக்கிப் புரவாயே;

படு-கூற்றைக் குமை-காலா;

.. பலியேற்றுத் திரிவோனே;

சுடுநீற்றைப் புனைவோனே;

.. தொழுவார்க்குத் துணை ஆனாய்;

இடுகாட்டிற் சுழல்-பாதா;

.. இடையாற்றுப் பெருமானே.


தடுமாற்றைத் தரு-பாவத் தளை நீக்கிப் புரவாயே - மனக்கலக்கத்தைத் தரும் தீவினை என்ற தளையை அழித்துக் காத்தருள்க; (தடுமாற்று - தடுமாற்றம் - மனக்கலக்கம்); (சம்பந்தர் தேவாரம் - 1.105.6 - "ஆரூர் தம் கையினால் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே"); (புரத்தல் - காத்தல்; அனுக்கிரகித்தல்);

படு-கூற்றைக் குமைகாலா - கொல்லும் கூற்றுவனை உதைத்து அழித்த காலனே; (படுத்தல் - கொல்லுதல்); (படு - கொடிய); (குமைத்தல் - அழித்தல்);

பலி ஏற்றுத் திரிவோனே - பிச்சையேற்றுத் திரிபவனே; (பலி - உணவு; பிச்சை);

சுடுநீற்றைப் புனைவோனே - சுட்ட திருநீற்றைப் பூசியவனே;

தொழுவார்க்குத் துணை ஆனாய் - வணங்கியவர்களுக்குத் துணை ஆனவனே;

இடுகாட்டில் சுழல்-பாதா - சுடுகாட்டில் சுழன்று ஆடும் பாதத்தை உடையவனே;

இடையாற்றுப் பெருமானே - இடையாறு என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment