Showing posts with label தத்ததன தத்ததன தத்ததன x3 தந்ததான. Show all posts
Showing posts with label தத்ததன தத்ததன தத்ததன x3 தந்ததான. Show all posts

Saturday, July 9, 2022

T.143 - நின்றவூர் (திருநின்றவூர்) - மற்றெவர் எனக்கிணை

2011-02-25

T.143 - நின்றவூர் (திருநின்றவூர்) - மற்றெவர் எனக்கிணை

-----------------

(வண்ணவிருத்தம்;

தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன .. தந்ததான)


(Somewhat similar to the syllabic pattern - சுத்திய நரப்புடன் - திருப்புகழ் - சுவாமிமலை - but with 9 தத்ததன instead of 12 தத்ததன in the pattern)


மற்றெவரெ னக்கிணையெ னப்புகலு(ம்)

.. நச்சரவ மெத்தைமகிழ் அச்சுதனு(ம்)

.. மட்டுமலி நற்கமலம் உற்றவனும் .. அஞ்சுமாறே

அற்றையள வற்றுயரு(ம்) மெய்த்தலைவன்

.. அத்தியுரி சுற்றுமக லத்திறைவன்

.. அக்குமணி அப்பனொரு பக்க(ம்)மலை .. மங்கைபாகன்

துற்றுவிட(ம்) நிற்கமுகில் ஒத்தகறை

.. பெற்றகளன் அக்கரன்அ லைக்கு(ம்)நதி

.. சுற்றிவரு பொற்சடையன் நெக்குருகி .. அன்பினோடு

சொற்றமிழி சைத்துவழி பட்டவரின்

.. நற்றுணைவன் முப்புரமெ ரித்தகணை

.. தொட்டவனி ருப்பதுதி ருப்பொலியு(ம்) .. நின்றவூரே.


பதம் பிரித்து:

"மற்று எவர் எனக்கு இணை" எனப் புகலு(ம்)

.. நச்சரவ-மெத்தை மகிழ் அச்சுதனு(ம்)

.. மட்டு மலி நற்கமலம் உற்றவனும் அஞ்சுமாறே

அற்றை அளவற்று உயரு(ம்) மெய்த்தலைவன்;

.. அத்தியுரி சுற்றும் அகலத்து-இறைவன்;

.. அக்கும் அணி அப்பன்; ஒரு பக்க(ம்) மலைமங்கை-பாகன்;

துற்று-விட(ம்) நிற்க, முகில் ஒத்த கறை

.. பெற்ற களன்; அக்கரன்; அலைக்கு(ம்) நதி

.. சுற்றிவரு பொற்சடையன்; நெக்குருகி அன்பினோடு

சொற்றமிழ் இசைத்து வழிபட்டவரின்

.. நற்றுணைவன்; முப்புரம் எரித்த கணை

.. தொட்டவன் இருப்பது திருப்-பொலியு(ம்) நின்றவூரே.


"மற்று எவர் எனக்கு இணை" எனப் புகலு(ம்) நச்சரவ-மெத்தை மகிழ் அச்சுதனு(ம்) ட்டு மலி நற்கமலம் உற்றவனும் அஞ்சுமாறே அற்றைளவற்றுயரு(ம்) மெய்த்தலைவன் - தானே பரம் என்று வாது செய்த நாகப்படுக்கையை மகிழும் திருமாலும், தேன் நிறைந்த நல்ல தாமரைமலர்மேல் இருக்கும் பிரமனும் அஞ்சும்படி, அன்று எல்லையின்றி ஓங்கிய உண்மையான தலைவன்; (அச்சுதன் - திருமால்); (மட்டு - தேன்; வாசனை); (அற்றை - அன்று);

அத்தியுரி சுற்றும் அகலத்து-இறைவன் - யானைத்தோலை மார்பு சூழப் போர்த்த இறைவன்; (அத்தி - யானை); (உரி - தோல்); (சுற்றுதல் - சூழ்ந்திருத்தல்); (அகலம் - மார்பு);

அக்கும் அணி அப்பன் - எலும்பையும் அணிந்த அப்பன்; (அக்கு - எலும்பு)

ஒரு பக்க(ம்) மலைமங்கை-பாகன் - திருமேனியில் ஒரு பக்கத்தில் மலைமகளைப் பாகமாக உடையவன்;

துற்று-விடம் நிற்க, முகில் ஒத்த கறை பெற்ற களன் - உண்ட ஆலகாலம் தங்க, அதனால் மேகம் போன்ற கறையை அடைந்த கண்டத்தை உடையவன்; (துற்றுதல் - உண்தல்); (களன் - கண்டன்; களம் - கண்டம்); (சம்பந்தர் தேவாரம் - 3.113.9 - "கடல்விடம் உண்ட கருங்களனே"); (நிற்றல் - தங்குதல்);

அக்கரன் - அக்ஷரன் - அழிவற்றவன்; (अक्षर akṣara - a. 1 Imperishable, indestructible);

அலைக்கு(ம்) நதி சுற்றிவரு பொற்சடையன் - அலைமோதுகின்ற கங்கை சுற்றித் திரிகின்ற பொற்சடையை உடையவன்; (அலைத்தல் - அலைமோதுதல்);

நெக்குருகி அன்பினோடு சொற்றமிழ் இசைத்து வழிபட்டவரின் நற்றுணைவன் - உள்ளம் உருகிப் பக்தியோடு தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வணங்குபவர்களுக்கு நல்ல துணைவன்; (சொற்றமிழ் - புகழ்தமிழ்; சொல்தல் - புகழ்தல்); (பெரியபுராணம் - "மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார்); (துணைவன் - தோழன்; உதவுபவன்); (அப்பர் தேவாரம் - 4.11.1 - "நற்றுணையாவது நமச்சிவாயவே");

முப்புரம் எரித்த கணை தொட்டவன் இருப்பது திருப்-பொலியு(ம்) நின்றவூரே - முப்புரங்களையும் எரித்த அம்பைச் செலுத்திய சிவபெருமான் உறையும் இடம் திரு விளங்குகின்ற திருநின்றவூர் ஆகும். (தொடுதல் - செலுத்துதல்);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

Friday, July 8, 2022

T.142 - நின்றவூர் (திருநின்றவூர்) - மத்திடு சுரர்க்கு

2011-02-25

T.142 - நின்றவூர் (திருநின்றவூர்) - மத்திடு சுரர்க்கு

-----------------

(வண்ணவிருத்தம்;

தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன .. தந்ததான)


(Somewhat similar to the syllabic pattern - சுத்திய நரப்புடன் - திருப்புகழ் - சுவாமிமலை - but with 9 தத்ததன instead of 12 தத்ததன in the pattern)


மத்திடுசு ரர்க்கிடர்த விர்த்தருவி

.. டத்தினைம டுத்திருள்மி டற்றனறு

.. மத்தமல ரைச்சடையி னிற்புனையும் .. உம்பர்நாதன்

உத்தமியை முத்தனைய பற்றிகழு(ம்)

.. மட்டவிழ்ம லர்க்குழலி யைப்பிரியம்

.. உற்றவளை நச்சியிடம் வைத்தவிறை .. கங்கைசூடி

முத்தமிழின் நித்தமடி யைத்துதிசெய்

.. பத்தர்அவர் இப்புவியி னிப்பிறவில்

.. முத்திநிலை பெற்றிடவ ரத்தையளி .. அங்கணாளன்

கத்திமலை யைப்பெயர ரக்கனழ

.. ஒற்றைவிரல் வைத்தவன ரைக்கணொரு

.. கட்செவிய சைத்தவனி ருக்குமிட(ம்) .. நின்றவூரே.


பதம் பிரித்து:

மத்திடு சுரர்க்கு இடர் தவிர்த்து, அரு

.. விடத்தினை மடுத்து இருள்-மிடற்றன்; நறு

.. மத்த-மலரைச் சடையினிற் புனையும் உம்பர்-நாதன்;

உத்தமியை, முத்து அனைய பல்-திகழு(ம்)

.. மட்டு அவிழ் மலர்க்குழலியைப், பிரியம்

.. உற்றவளை, நச்சி இடம் வைத்த இறை; கங்கைசூடி;

முத்தமிழின் நித்தம் அடியைத் துதிசெய்

.. பத்தர்அவர் இப்-புவி இனிப் பிறவு-இல்

.. முத்திநிலை பெற்றிட வரத்தை அளி அங்கணாளன்;

கத்தி மலையைப் பெயர் அரக்கன் அழ

.. ஒற்றை-விரல் வைத்தவன்; அரைக்கண் ஒரு

.. கட்செவி அசைத்தவன் இருக்கும் இட(ம்) நின்றவூரே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

மத்திடு சுரர்க்கு இடர் தவிர்த்து, ருவிடத்தினை மடுத்து இருள்-மிடற்றன் - பாற்கடலைக் கடைந்த தேவர்களுக்குத் துன்பத்தைத் தீர்த்துக், கொடிய விஷத்தை உண்டு கறுத்த கண்டத்தன்; (மத்து இடுதல் - கடைதல்); (தவிர்த்தல் - நீக்குதல்); (மடுத்தல் - உண்ணுதல்);

நறுமத்த-மலரைச் சடையினிற் புனையும் உம்பர்-நாதன் - மணம் வீசும் ஊமத்த மலர்ரைச் சடையில் அணிந்த தேவர் தலைவன்;

உத்தமியை - உத்தமியை;

முத்து அனைய பல்-திகழு(ம்) மட்டு அவிழ் மலர்க்குழலியைப் - முத்துப் போன்ற பற்கள் உடையவளும், வாசம் கமழும் மலர்களை அணிந்த கூந்தலை உடையவளுமான உமாதேவியை; (மட்டு - தேன்; வாசனை);

பிரியம் உற்றவளை - அன்பு உடையவளை;

நச்சி இடம் வைத்த இறை - விரும்பித் திருமேனியில் இடப்பக்கம் பாகமாக வைத்த இறைவன்; (நச்சுதல் - விரும்புதல்);

கங்கை-சூடி - கங்காதரன்;

முத்தமிழின் நித்தம் அடியைத் துதிசெய் பத்தர்அவர் இப்-புவி இனிப் பிறவு-இல் முத்திநிலை பெற்றிட வரத்தை அளி அங்கணாளன் - முத்தமிழினால் நாள்தோறும் திருவடியைத் துதிக்கும் பக்தர்கள் இந்த நிலவுலகில் இனிமேல் பிறவி இல்லாத முக்திநிலை பெற வரம் அருளும் பெருங்கருணையாளன்; (முத்தமிழின் - முத்தமிழினால்); (அப்பர் தேவாரம் - 4.11.4 - "அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாம் உற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே"); (பிறவு - பிறவி); (சம்பந்தர் தேவாரம் - 1.110.1 - "பெருந்தகை பிறவினொ டிறவுமானான்" - பிறவு இறவு - பிறப்பு, இறப்பு. 'வு' விகுதிபெற்ற தொழிற்பெயர்); (அங்கணாளன் - பெருங்கருணையாளன்; கண்ணோட்டமுடையவன்);

கத்தி மலையைப் பெயர் அரக்கன் அழ ஒற்றை-விரல் வைத்தவன் - மிகவும் ஆரவாரம் செய்துகொண்டு கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அழுமாறு ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கியவன்;

அரைக்கண் ஒரு கட்செவி அசைத்தவன் - அரையில் ஒரு பாம்பைக் கட்டியவன்; (அரைக்கண் - அரையில்; கண் - ஏழாம்வேற்றுமை உருபு); (கட்செவி - பாம்பு); (அசைத்தல் - கட்டுதல்);

இருக்கும் இட(ம்) நின்றவூரே - அப்பெருமான் உறையும் தலம் திருநின்றவூர்.


வி. சுப்பிரமணியன்

----------- -----------

T.141 - நின்றவூர் (திருநின்றவூர்) - ஒற்றையென நிற்குமிறை

2011-02-24

T.141 - நின்றவூர் (திருநின்றவூர்) - ஒற்றையென நிற்குமிறை

-----------------

(வண்ணவிருத்தம்;

தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன .. தந்ததான)


(Somewhat similar to the syllabic pattern - சுத்திய நரப்புடன் - திருப்புகழ் - சுவாமிமலை - but with 9 தத்ததன instead of 12 தத்ததன in the pattern)


ஒற்றையென நிற்குமிறை அற்றவரின்

.. உற்றதுணை பொற்கொடியை ஒத்தவுமை

.. ஒட்டியுறை முக்கணன்வி டத்தையணி .. கண்டநேயன்

சுற்றுமெரி மிக்கெழநி ருத்தமிடு

.. சொக்கனிடு பிச்சைமகிழ் பிச்சனொரு

.. துக்கமிலன் நச்சரவன் நற்பெயரை .. என்றுமோதும்

நற்றவர கத்தளித னைக்கருதி

.. நச்சியவர் உச்சியுறை அத்தன்முன(ம்)

.. நக்குமதில் அட்டவன திச்சடையன் .. அண்டவாணன்

சிற்றிடையர் மட்டலர்தொ டுத்துநிறை

.. சித்தமொடு சுற்றிவர இட்டமருள்

.. சிற்பரனி ருப்பதுதி ருப்பொலியு(ம்) .. நின்றவூரே.


பதம் பிரித்து:

ஒற்றை என நிற்கும் இறை; அற்றவரின்

.. உற்ற துணை; பொற்கொடியை ஒத்த உமை

.. ஒட்டி உறை முக்கணன்; விடத்தை அணி கண்ட நேயன்;

சுற்றும் எரி மிக்கு எழ நிருத்தம் இடு

.. சொக்கன்; இடு பிச்சை மகிழ் பிச்சன்; ஒரு

.. துக்கம் இலன்; நச்சரவன்; நற்பெயரை என்றும் ஓதும்

நற்றவர் அகத்-தளிதனைக் கருதி;

.. நச்சியவர் உச்சி உறை அத்தன்; முன(ம்)

.. நக்கு மதில் அட்டவன்; நதிச்-சடையன்; அண்டவாணன்;

சிற்றிடையர் மட்டு-அலர் தொடுத்து, நிறை

.. சித்தமொடு சுற்றிவர, இட்டம் அருள்

.. சிற்பரன், இருப்பது திருப்-பொலியு(ம்) நின்றவூரே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

ஒற்றை என நிற்கும் இறை - தனியன் ஆனவன்; ஒப்பற்றவன்; ஏகன்; இறைவன்; (ஒற்றை - ஒன்று; தனிமை; ஒப்பின்மை);

அற்றவரின் உற்ற துணை - அன்பர்க்கு அன்பன்; வேறு பற்றின்றித் தன்னை அடைந்தவர்களைக் காப்பவன்; (அறுதல் - அன்புகொள்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.120.2 - "அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய்");

பொற்கொடியை ஒத்த உமை ஒட்டி உறை முக்கணன் - அழகிய கொடி போன்ற உமாதேவி திருமேனியில் சேர்ந்து இருக்கின்ற முக்கண்ணன்;

விடத்தைணி ண்ட நேயன் - ஆலகாலத்தைக் கண்டத்தில் அணிந்த அன்பன்;

சுற்றும் எரி மிக்கு எழ நிருத்தம் இடு சொக்கன் - சுற்றிலும் தீ மிகுந்து எழும் சுடுகாட்டில் கூத்து ஆடுகின்ற சொக்கன்; (சுற்றும் - சூழ); (சொக்கன் - சொக்கம் என்ற தாண்டவம் ஆடுபவன்; அழகன்; சிவன்);

இடு பிச்சை மகிழ் பிச்சன் - பிச்சையை விரும்பும் பேரருளாளன்; (பிச்சன் - பித்தன்); (பித்தன் - பேரருளாளன் என்ற பொருள்); (அப்பர் தேவாரம் - 4.80.4 - "தில்லை அம்பலத் தாடுகின்ற பிச்சன் பிறப்பிலி");

ஒரு துக்கம் இலன் - எந்தத் துக்கமும் இல்லாதவன் - இன்பவடிவினன்;

நச்சரவன் - விஷப்பாம்பை அணிந்தவன்;

நற்பெயரை என்றும் ஓதும் நற்றவர் அகத்-தளிதனைக் கருதி - நல்ல திருநாமத்தை எப்பொழுதும் ஓதிய நல்ல தவம் உடையவரான பூசலார் நாயனாரது மனக்கோயிலை விரும்பியவன்; (அகத் தளி - மனக்கோயில்); (கருதுதல் - விரும்புதல்; மதித்தல்); (கருதி - கருதியவன்; ஏறி, சூடி, முதலான பெயர்ச்சொற்கள் ஒத்த அமைப்பு); (* திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்); (பெரியபுராணம் - பூசலார் புராணம் - 12.65.10 - "நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டாலயத்து நாளை நாம் புகுவோம்");

நச்சியவர் உச்சி உறை அத்தன் - தன்னை விரும்பியவர்களது உச்சிமேல் உறையும் தந்தை; (நச்சுதல் - விரும்புதல்); (அத்தன் - தந்தை); (சம்பந்தர் தேவாரம் - 1.76.4 - "உளங்கொள்வார் உச்சியார் கச்சியேகம்பன்");

முன(ம்) நக்கு மதில் அட்டவன் - முன்பு சிரித்தே முப்புரங்கள் அழித்தவன்; (நகுதல் - சிரித்தல்); (அடுதல் - அழித்தல்);

நதிச்-சடையன் - சடையில் கங்கையை அணிந்தவன்;

அண்டவாணன் - எங்கும் நிறைந்தவன்; சர்வவியாபி; (அண்டவாணன் - அண்டம் முழுதும் வாழ்நன். வாணன் மரூஉமொழி);

சிற்றிடையர் மட்டு-அலர் தொடுத்து, நிறை சித்தமொடு சுற்றிவர, இட்டம் அருள் சிற்பரன் - சிறிய இடையை உடைய பெண்கள் வாசமலர்களைத் தொடுத்து, அன்பு நிறைந்த மனத்தோடு வலம்செய்து வழிபாடு செய்ய, அவர்களுக்கு இரங்கி அவர்களது விருப்பங்களை (விரும்பிய வரங்களை) அருள்கின்றவன், அறிவுக்கு எட்டாதவன்; (மட்டு - தேன்; வாசனை); (நிறை சித்தம் - அன்பு நிறைந்த மனம்); (இட்டம் - இஷ்டம் - விருப்பம்); (சிற்பரன் - சித் பரன் - அறிவிற்கு எட்டாதவன்; ஞானத்தால் மேலானவன்);

இருப்பது திருப்-பொலியும் நின்றவூரே - அப்பெருமான் உறையும் தலம் திரு விளங்குகின்ற திருநின்றவூர்;


வி. சுப்பிரமணியன்

----------- -----------