Sunday, September 13, 2026

P.512 - நல்லம் (கோனேரிராஜபுரம்) - உம்பர் உய்ய

2020-07-30

P.512 - நல்லம் (கோனேரிராஜபுரம்)

-----------

(அறுசீர்ச் சந்தவிருத்தம் - தான தான தானனா தான தான தானனா - சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி")

(சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன்று")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

* திருநல்லத்தில் (கோனேரிராஜபுரத்தில்) நடராஜமூர்த்தம் விசேஷம்;


1)

உம்பர் உய்ய நஞ்சினை .. உண்டி ருள்மி டற்றினான்

கொம்ப னாளொர் பங்கினன் .. குஞ்சி மீது கூவிளம்

வம்பு நாறு கொன்றையன் .. மார்பில் நூலன் நற்கழல்

நம்பி னார்தம் நற்றுணை .. நல்ல(ம்) மேய கூத்தனே.


உம்பர் உய்ய நஞ்சினை உண்டு இருள்-மிடற்றினான் - தேவர் உய்யுமாறு ஆலகாலத்தை உண்டு கறுத்த கண்டன்; (இருள்தல் - கறுப்பாதல்); (மிடறு - கண்டம்);

கொம்பனாள் ஒர் பங்கினன் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு பங்கில் உடையவன்;

குஞ்சி மீது கூவிளம், வம்பு நாறு கொன்றையன் - தலைமேல் வில்வம், வாசனை கமழும் கொன்றைமலர் இவற்றை அணிந்தவன்; (குஞ்சி - தலை); (கூவிளம் - வில்வம்); (வம்பு - வாசனை);

மார்பில் நூலன் - திருமார்பில் பூணூல் அணிந்தவன்;

நற்கழல் நம்பினார்தம் நற்றுணை - நல்ல திருவடியை விரும்பியவர்களுக்கு நல்ல துணைவன்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


2)

நச்ச ராவை மார்பினில் .. நல்ல ஆரம் ஆக்கினான்

கச்ச தாக மாசுணம் .. கட்டி வந்து வெண்டலைப்

பிச்சை ஏற்று ழல்பவன் .. பேதை பங்கன் நாள்தொறும்

நச்சி வாழ்த்தி னார்துணை .. நல்ல(ம்) மேய கூத்தனே.


நச்சராவை மார்பினில் நல்ல ஆரம் ஆக்கினான் - விஷப்பாம்பை மார்பில் சிறந்த மாலை போல அணிந்தவன்; (ஆரம் - மாலை);

கச்சதாக மாசுணம் கட்டி வந்து வெண்லைப் பிச்சை ஏற்று உழல்பவன் - கச்சாகப் பாம்பை அரையில் கட்டி வந்து வெள்ளை மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிபவன்; (மாசுணம் - பாம்பு);

பேதை-பங்கன் - உமைபங்கன்;

நாள்தொறும் நச்சி வாழ்த்தினார் துணை - தினமும் விரும்பித் துதிப்பவர்களுக்குத் துணைவன்; (நச்சுதல் - விரும்புதல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


3)

நூல்வி ளங்கு மார்பினன் .. நோயு(ம்) மூப்பும் அற்றவன்

சேல்வி ளங்கு கண்ணுமை .. சேர்ந்த செய்ய மேனியன்

பால்வி ரும்பி ஆடினான் .. பண்டை வேதம் ஆல்நிழல்

நால்வ ருக்கு ரைத்தவன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


நூல் விளங்கு மார்பினன் - பூணூல் திகழும் திருமார்பன்;

நோயு(ம்) மூப்பும் அற்றவன் - பிணியும் முதுமையும் இல்லாதவன்;

சேல் விளங்கு கண்-உமை சேர்ந்த செய்ய மேனியன் - சேல்மீன் போன்ற கண்ணுடைய உமை ஒரு பாகமாகச் சேர்ந்த செம்மேனியன்; (செய்ய - சிவந்த);

பால் விரும்பி ஆடினான் - பால்அபிஷேகம் விரும்பியவன்;

பண்டை வேதம் ஆல்நிழல் நால்வருக்கு உரைத்தவன் - தொன்மையான வேதங்களைக் கல்லாலமரத்தின்கீழ்ச் சனகாதியர் நால்வருக்கு உபதேசித்தவன்; (பண்டை - பழமை);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


4)

பொன்செய் கொன்றை மாமலர் .. புற்ற ராவி ளம்பிறை

புன்ச டைப்பு னைந்தவன் .. பூத நாதன் மென்கொடி

மின்செய் நுண்ம ருங்குலாள் .. மேனி பாகம் ஆயினான்

நன்செய் நாற்பு றந்திகழ் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


பொன்-செய் கொன்றை மாமலர், புற்றரா, இளம்பிறை புன்சடைப் புனைந்தவன் - பொன் போன்ற கொன்றைமலரையும், புற்றில் வாழும் இயல்புடைய பாம்பையும், இளந்திங்களையும் செஞ்சடையில் அணிந்தவன்; (செய்தல் - ஒத்தல்); (புன்சடை - செஞ்சடை; புன்மை - புகர்நிறம்)

பூதநாதன் - பூதகணநாதன்;

மென்கொடி மின்-செய் நுண்-மருங்குலாள் மேனி பாகம் ஆயினான் - மென்மையான கொடி போன்றவளும் மின்னல் போன்ற சிற்றிடை உடையவளுமான உமாதேவி தன் திருமேனியில் ஒரு பாகம் ஆனவன்; (மின் - மின்னல்); (மருங்குல் -இடை); (செய் + நுண் = செய்ந்நுண்; இங்கே, ஓசைகருதி ந் மிகாது வந்தது);

நன்செய் நாற்புறம் திகழ் - வளம் மிக்க வயல் புடைசூழ்ந்த;

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


5)

மென்மை மிக்க தாளிணை .. மெச்சு மாணி வாழவே

வன்மை மிக்க கூற்றினை .. மாளு மாறு தைத்தவன்

புன்மை அற்ற நெஞ்சராய்ப் .. போற்றி செய்யில் நாள்தொறும்

நன்மை செய்யு(ம்) நம்பிரான் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


மென்மை மிக்க தாளிணை மெச்சு மாணி வாழவே வன்மை மிக்க கூற்றினை மாளுமாறு உதைத்தவன் - மென்மையான இருதிருவடிகளைப் போற்றிய மார்க்கண்டேயர் சிரஞ்சீவியாக என்றும் உயிர்வாழ வலிய காலனை இறக்கும்படி உதைத்தவன்; (மெச்சுதல் - புகழ்தல்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);

புன்மை அற்ற நெஞ்சராய்ப் போற்றிசெய்யில் நாள்தொறும் நன்மை செய்யு(ம்) நம்பிரான் - தூயநெஞ்சினராகி வழிபாடு செய்தால் எந்நாளும் நன்மையே செய்யும் நம்பெருமான்;

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


6)

வேகம் ஆர்ந்த கங்கையை .. வேணி யிற்க ரந்தவன்

பாகம் ஆர ணங்கமர் .. பற்றி லாத பண்பினன்

மேகம் ஆர்மி டற்றினன் .. வேதம் ஓது நாவினன்

நாகம் ஆரு(ம்) மார்பினன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


வேகம் ஆர்ந்த கங்கையை வேணியில் கரந்தவன் - வேகம் மிகுந்த கங்கையைச் சடையில் ஒளித்தவன்; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (வேணி - சடை); (கரத்தல் - ஒளித்தல்);

பாகம் ஆரணங்கு அமர், பற்று-இலாத பண்பினன் - ஒரு பாகத்தில் உமாதேவியை விரும்பிய, எப்பற்றும் இல்லாதவன்; (அணங்கு - தெய்வம்; தெய்வப்பெண்); (அப்பர் தேவாரம் - 5.18.9 - "ஆரணங்கு ஒருபாலுடை மைந்தனே"); (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);

மேகம் ஆர் மிடற்றினன் - மேகம் போன்ற நீலகண்டம் உடையவன்; (ஆர்தல் - ஒத்தல்);

வேதம் ஓது நாவினன் - வேதங்களைப் பாடியருளியவன்;

நாகம் ஆரு(ம்) மார்பினன் - பாம்பை அணிந்த திருமார்பன்; (ஆர்தல் - அணிதல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


7)

தக்கன் வேள்வி செற்றவன் .. தந்தை தாயி லாதவன்

அக்கி னைப்பு னைந்தவன் .. அங்கம் ஆறும் ஓதினான்

செக்கர் அஞ்ச டைப்பரன் .. தேரில் ஏறி அச்சிற

நக்க ரண்கள் அட்டவன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


தக்கன் வேள்வி செற்றவன் - தக்கன் செய்த அவவேள்வியை அழித்தன்; (செறுதல் - அழித்தல்);;

தந்தை தாய் இலாதவன் - தனக்கு ஒரு தாய்தந்தை இல்லாதவன்;

அக்கினைப் புனைந்தவன் - எலும்பை அணிந்தவன்; (அக்கு - எலும்பு);

அங்கம் ஆறும் ஓதினான் - ஆறங்கங்களைப் பாடியருளியவன்;

செக்கர் அஞ்சடைப்-பரன் - சிவந்த அழகிய சடையுடைய பரமன்; (செக்கர் - சிவப்பு); (அம் - அழகு);

தேரில் ஏறி அச்சு இற, நக்கு அரண்கள் அட்டவன் - (தேவர்கள் செய்த) தேரில் ஏறியதும் அதன் அச்சு முரிந்ததும், சிரித்து முப்புரங்களை எரித்தவன்; (இறுதல் - முரிதல்); (நகுதல் - சிரித்தல்); (அடுதல் - அழித்தல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


8)

வரையி டந்த மூடனார் .. வாய்கள் பத்த ரற்றவே

விரலை வைத்த டர்த்தவன் .. வெற்றி வாளும் ஈந்தவன்

பரவி னார்கள் தீவினை .. பாற்றி இன்ப(ம்) நல்குவான்

நரைவெ ளேறு கந்தவன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


வரை இடந்த மூடனார் வாய்கள் பத்து அரற்றவே விரலை வைத்து அடர்த்தவன் - கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான இராவணனது பத்து வாய்களும் அழுது புலம்பும்படி திருப்பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கியவன்; (வரை - மலை); (இடத்தல் - பெயர்த்தல்); (மூடனார் - அறிவில்லாதவன் - இங்கே, இராவணன்; ஆர் விகுதி இழிவுசிறப்பு); (அரற்றுதல் - புலம்புதல்); (அடர்த்தல் - நசுக்குதல்);

வெற்றி வாளும் ஈந்தவன் - (பிறகு, இராவணன் பாடிய துதிகளைக் கேட்டு இரங்கி) அவனுக்கு (வாழ்நாள், பெயர் இவற்றோடு) சந்திரஹாஸம் என்ற வாளையும் அருளியவன்; (வாளும் - உம் - எச்சவும்மை);

பரவினார்கள் தீவினை பாற்றி இன்ப(ம்) நல்குவான் - போற்றித் துதிக்கும் பக்தர்களது தீவினையை அழித்து அவர்களுக்கு இன்பம் தருபவன்; (பரவுதல் - துதித்தல்); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்);

நரை-வெளேறு உகந்தவன் - மிகவும் வெண்மையான எருதை வாகனமாக மகிழ்ந்தவன்; (நரை - வெண்மை); (வெளேறு - வெள்ளேறு; ஓசைகருதி ள் மிகாது வந்தது); (நரைவெள் - ஒருபொருட்பன்மொழி);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


9)

வெண்ணெய் உண்ட மாலொடு .. வேதன் நேட நீண்டவன்

கண்ணி லங்கு நெற்றியன் .. காம னைச்சி னந்தவன்

பெண்ணி லங்கு மேனியன் .. பெற்றம் ஏறு பெற்றியன்

நண்ணி னார்க்க ருள்பவன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


வெண்ணெய் உண்ட மாலொடு வேதன் நேட நீண்டவன் - (கிருஷ்ணாவதாரத்தில்) வெண்ணெய் உண்டவனான திருமாலும் பிரமனும் அடிமுடி தேட எல்லையின்றி ஓங்கிய ஜோதி; (நேடுதல் - தேடுதல்);

கண் இலங்கு நெற்றியன் - நெற்றியில் கண் உடையவன்;

காமனைச் சினந்தவன் - மன்மதனைக் கோபித்து எரித்தவன்;

பெண் இலங்கு மேனியன் - திருமேனியில் உமையை ஒரு பாகமாக உடையவன்;

பெற்றம் ஏறு பெற்றியன் - இடபவாகனம் ஏறும் பெருமையினன்; (பெற்றம் - எருது); (பெற்றி - தன்மை; பெருமை);

நண்ணினார்க்கு அருள்பவன் - தன்னை அடைந்தவர்களுக்கு அருள்பவன்; (நண்ணுதல் - கிட்டுதல்; பொருந்துதல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


10)

நீறு பூச அஞ்சிடும் .. நீசர் சொல்லை நீங்குமின்

ஆறு சூடி நாமமாம் .. அஞ்செ ழுத்தை நாள்தொறும்

கூறும் அன்பர் நெஞ்சிடம் .. கொள்ளும் எந்தை சங்கரன்

நாறு கொன்றை மாலையான் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


நீறு பூச அஞ்சிடும் நீசர் சொல்லை நீங்குமின் - திருநீற்றைப் பூச அஞ்சுகின்ற கீழோர்களது பேச்சை மதியாமல் நீங்குங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி);

ஆறுசூடி நாமம் ஆம் அஞ்செழுத்தை நாள்தொறும் கூறும் அன்பர் நெஞ்சு இடம் கொள்ளும் எந்தை - கங்காதரனது திருநாமம் ஆகும் திருவைந்தெழுத்தைத் தினமும் சொல்லும் பக்தர்களது நெஞ்சில் குடிகொள்ளும் எம் தந்தை;

சங்கரன் - சங்கரன் (நன்மை செய்பவன்);

நாறு கொன்றை மாலையான் - மணம் கமழும் கொன்றைமாலை அணிந்தவன்;

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


11)

கோளு(ம்) நாளும் என்செயும் .. குன்ற வில்லி தன்னையே

மூளும் அன்பி னால்தினம் .. முன்ப ணிந்து போற்றினால்

நீளும் வேணி தன்னிடை .. நீர்க ரந்த நின்மலன்

நாளும் இன்ப(ம்) நல்குவான் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


கோளு(ம்) நாளும் என் செயும் - நவகிரகங்களும், (நட்சத்திரம், திதி, கிழமை முதலிய) நாள்களும் என்ன செய்யும்? (தீமை செய்யமாட்டா); (செயும் - செய்யும்);

குன்றவில்லி-தன்னையே மூளும் அன்பினால் தினம் முன்-பணிந்து போற்றினால் - மேருவில் ஏந்தியவனையே பொங்கும் அன்பால் தினமும் வணங்கித் துதித்தால்; (குன்றம் - மலை);

நீளும் வேணி-தன்னிடை நீர் கரந்த நின்மலன் - நீளும் சடையில் கங்கையை ஒளித்த பரிசுத்தன்; (வேணி - சடை); (நின்மலன் - நிர்மலன்);

நாளும் இன்ப(ம்) நல்குவான் - எந்நாளும் இன்பம் தருவான்;

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


பிற்குறிப்புகள் :

யாப்புக்குறிப்பு:

  • அறுசீர்ச் சந்தவிருத்தம் - "தான தான தானனா தான தான தானனா" என்ற சந்தம்.

    • 1, 4-ஆம் சீர்களில் தான என்பது தனன என்றும் வரலாம்.

    • 2, 5-ஆம் சீர்களில் தான என்பது ஒரோவழி தனன என்று வரும்.

    • 3, 6-ஆம் சீர்களில் தானனா என்பது ஒரோவழி தனதனா என்று வரலாம்.

  • (சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடைத்")

  • (சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன் றென்று நின்ற விச்சையால்");


வி. சுப்பிரமணியன்

--------- ---------


No comments:

Post a Comment