Sunday, September 13, 2026

P.513 - நல்லம் (கோனேரிராஜபுரம்) - அறைகடல் நஞ்சினை

2020-08-04

P.513 - நல்லம் (கோனேரிராஜபுரம்)

-----------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

அறைகடல் நஞ்சினை அமுது செய்தருள்

கறைமலி கண்டனைக் கங்கை கூவிளம்

நறைமலர் சூடியை நல்ல(ம்) மேவிய

இறைவனை ஏத்திட என்றும் இன்பமே.


அறைகடல் நஞ்சினை அமுது செய்தருள் கறை மலி கண்டனைக் - ஒலிக்கின்ற கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டருளிய நீலகண்டனை; (அறைதல் - ஒலித்தல்);

கங்கை கூவிளம் நறைமலர் சூடியை - திருமுடிமேல் கங்கை, வில்வம், வாசமலர்கள் இவற்றையெல்லாம் அணிந்தவனை; (கூவிளம் - வில்வம்); (நறை - வாசனை; தேன்);

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

இறைவனை ஏத்திட என்றும் இன்பமே - இறைவனைத் துதித்து வணங்கினால் எந்நாளும் இன்பமே;


2)

அரையினில் அரவினை ஆர்த்த அண்ணலைத்

திரையணி சடையனைத் தேவ தேவனை

நரைவிடை ஏறியை நல்ல(ம்) மேவிய

அரையனை அடிதொழ அல்லல் இல்லையே.


அரையினில் அரவினை ஆர்த்த அண்ணலைத் - அரையில் கச்சாகப் பாம்பைக் கட்டிய தலைவனை; (ஆர்த்தல் - கட்டுதல்);

திரை அணி சடையனைத் - கங்காதரனை; (திரை - அலை; நதி);

தேவதேவனை - தேவாதிதேவனை;

நரைவிடை ஏறியை - வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனை; (நரை - வெண்மை);

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

அரையனை அடிதொழ அல்லல் இல்லையே - அரசனான சிவபெருமானை வழிபட்டால் துன்பம் தீரும்; (அரையன் - அரசன்);


3)

அங்கையில் அழலனை அஞ்சி வந்தடை

திங்களை வேணியில் திகழச் சூடியை

நங்கையொர் பங்கனை நல்ல(ம்) மேவிய

துங்கனைத் தொழுதெழத் துன்பம் இல்லையே.


அங்கையில் அழலனை - கையில் தீயைத் தாங்கியவனை;

அஞ்சி வந்து-டை திங்களை வேணியில் திகழச் சூடியை - சாபத்தால் தேய்ந்து அழியும் நிலையைக் கண்டு அஞ்சி வந்து சரணடைந்த சந்திரனைச் சடையில் விளங்கும்படி அணிந்தவனை; (வேணி - சடை);

நங்கை ஒர் பங்கனை - உமையை ஒரு பங்காக உடையவனை; (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

துங்கனைத் தொழுதெழத் துன்பம் இல்லையே - உயர்ந்தவனை வழிபட்டால் துன்பம் தீரும்; (துங்கன் - உயர்ந்தோன்);


4)

ஊன்மலி வெண்டலை ஒன்றை ஏந்தியை

வான்மதில் மூன்றெரி வாளி ஏவியை

நான்மறை நாவனை நல்ல(ம்) மேவிய

மான்மறிக் கையனை வாழ்த்தி வாழுமே.


ஊன் மலி வெண்தலை ஒன்றை ஏந்தியை - ஊன் திகழும் வெண்மையான மண்டையோட்டை உண்கலனாகக் கையில் ஏந்தியவனை;

வான்-மதில் மூன்று எரி வாளி ஏவியை - வானில் திரிந்த பெரிய கோட்டைகள் மூன்றையும் எரித்த அம்பை ஏவியவனை; (வான் - ஆகாயம்; பெரிய); (வாளி - அம்பு); (ஏவி - ஏவியவன்);

நான்மறை நாவனை - நால்வேதங்களையும் பாடியருளியவனை;

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

மான்மறிக் கையனை வாழ்த்தி வாழுமே - மான்கன்றைக் கையில் ஏந்திய பெருமானை வாழ்த்தி உய்யுங்கள்; (மறி - மான்கன்று);


5)

குஞ்சியின் மேற்கரம் கூப்பி வானவர்

அஞ்சலி செய்திட அபய(ம்) நல்கிய

நஞ்சணி கண்டனை நல்ல(ம்) மேவிய

மஞ்சனை வாழ்த்திட மல்கும் இன்பமே.


குஞ்சியின்மேல் கரம் கூப்பி வானவர் அஞ்சலி செய்திட அபயம் நல்கிய - தலைமேல் கைகுவித்துத் தேவர்கள் தொழுது இறைஞ்ச, அவர்களுக்கு அபயம் அளித்த; (குஞ்சி - தலை);

நஞ்சு அணி கண்டனை - ஆலகாலத்தை உண்ட நீலகண்டனை;

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

மஞ்சனை வாழ்த்திட மல்கும் இன்பமே - வீரனான சிவபெருமானை வாழ்த்தினால் இன்பம் பெருகும்; (மஞ்சன் - மைந்தன் - வீரன்); (மல்குதல் - மிகுதல்); (அப்பர் தேவாரம் - 4.57.1 - "மஞ்சனே மணியும் ஆனாய்");


6)

செக்கரஞ் சடையனைச் சீலர் சிந்தையில்

புக்குறை புனிதனைப் பூத நாதனை

நக்கனை நளிர்வயல் நல்ல(ம்) மேவிய

சொக்கனைத் தொழுதெழத் துக்கம் இல்லையே.


செக்கர் அஞ்சடையனைச் - சிவந்த அழகிய சடையை உடையவனை; (செக்கர் - சிவப்பு); (அம் - அழகு);

சீலர் சிந்தையில் புக்கு உறை புனிதனைப் - சீலர்களது நெஞ்சில் தங்கும் புனிதனை; (புக்கு - புகுந்து);

பூதநாதனை - பூதகணநாதனை;

நக்கனை - திகம்பரனை;

நளிர்-வயல் நல்லம் மேவிய - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற; (நளிர்தல் - குளிர்தல்);

சொக்கனைத் தொழுதெழத் துக்கம் இல்லையே - அழகனை வழிபட்டால் துக்கம் தீரும்; (சொக்கன் - அழகன்);


7)

கொம்பனை யாளொரு கூறு தாங்கிய

அன்பனை இன்பனை ஆனஞ் சாடியை

நம்பனை நளிர்வயல் நல்ல(ம்) மேவிய

உம்பனை உன்னிட உய்தி திண்ணமே.


கொம்பு-அனையாள் ஒரு கூறு தாங்கிய அன்பனை - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக உடைய அன்பனை; (சுந்தரர் தேவாரம் - 7.33.1 - "மலைப்பாவை ஓர் கூறு தாங்கிய குழகரோ");

இன்பனை - இன்பவடிவினனை;

ஆனஞ்சு ஆடியை - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்துபொருள்களால் அபிஷேகம் ஏற்பவனை; (ஆனஞ்சு - பஞ்சகவ்வியம்);

நம்பனை - எல்லாராலும் விரும்பத்தக்கவனை; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

நளிர்-வயல் நல்லம் மேவிய - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற; (நளிர்தல் - குளிர்தல்);

உம்பனை உன்னிட உய்தி திண்ணமே - தேவனைத் தியானித்தால் உய்வு நிச்சயம்; (உம்பன் - தேவன்); (உன்னுதல் - எண்ணுதல்);


8)

சட்டெனத் தடவரை தன்னைத் தூக்கிய

துட்டன திருபது தோள்நெ ரித்தருள்

நட்டனை நளிர்வயல் நல்ல(ம்) மேவிய

சிட்டனை அடிதொழச் செல்வம் மல்குமே.


சட்டெனத் தடவரை-தன்னைத் தூக்கிய - திடீரென்று பெரிய கயிலைமலையைப் பெயர்த்த; (தடம் - பெரிய); (வரை - மலை);

துட்டனது இருபது-தோள் நெரித்தருள் நட்டனை - துஷ்டனான இராவணனுடைய இருபது புஜங்களையும் நசுக்கியருளிய கூத்தனை; (நட்டன் - நடனம் ஆடுபவன்); (அப்பர் தேவாரம் - 5.81.1 - "பாண்டிக் கொடுமுடி நட்டனைத் தொழ நம்வினை நாசமே");

நளிர்-வயல் நல்லம் மேவிய - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற; (நளிர்தல் - குளிர்தல்);

சிட்டனை அடிதொழச் செல்வம் மல்குமே - உயர்ந்தவனை வணங்கினால் செல்வம் மிகும்; (சிட்டன் - சிஷ்டாசாரமுடையவன் - பெரியோன்);


9)

புள்ளதன் மேலினன் போதி னானிவர்

வெள்கிட ஓங்கிய வியன்நெ ருப்பினை

நள்ளிருள் ஆடியை நல்ல(ம்) மேவிய

வள்ளலை உள்கிட மல்கும் இன்பமே.


புள்-அதன் மேலினன் போதினான் இவர் - கருடவாகனனான திருமால், தாமரைப்பூமேல் இருக்கும் பிரமன் இவர்கள் இருவரும்; (புள் - பறவை); (போது - பூ);

வெள்கிட ஓங்கிய வியன் நெருப்பினை - வெட்கும்படி (நாணுமாறு) எல்லையின்றி ஓங்கிய பெரிய ஜோதியை; (வெள்குதல் - வெட்குதல்); (வியன் - பெரிய); (திருவாசகம் - அருட்பத்து - 8.29.4 - "விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்");

நள்-இருள் ஆடியை - நடு-இரவில் கூத்தாடுபவனை;

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

வள்ளலை உள்கிட மல்கும் இன்பமே - வள்ளலான சிவபெருமானை எண்ணினால் இன்பம் பெருகும்; (உள்குதல் - உள்ளுதல் - நினைதல்);


10)

வாயினில் உண்மையை வைத்தி டாதவர்

பேயினை ஒத்தவர் பேச்சை நீங்குமின்

நாயனை நளிர்வயல் நல்ல(ம்) மேவிய

தூயனைத் தொழுதெழும் தொண்டர்க் கின்பமே.


வாயினில் உண்மையை வைத்திடாதவர் - என்றும் உண்மையைப் பேசாதவர்கள்;

பேயினை ஒத்தவர் பேச்சை நீங்குமின் - பேயை ஒத்தவர்களான அவர்களது பேச்சை மதியாமல் நீங்குங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி); (சம்பந்தர் தேவாரம் - 2.44.2 - "ஆமாத்தூர் அம்மானெம் பெம்மான் என்று ஏத்தாதார் பேயரிற் பேயரே"); (திருமாளிகைத் தேவர் - திருவிசைப்பா - 9.4.2 - "தில்லை வேந்தனைச் சேர்ந்திலாத துட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும் பிட்டரைக் காணா கண் வாய் பேசாது அப்-பேய்களோடே");

நாயனை - தலைவனை; (நாயன் - தலைவன்; கடவுள்);

நளிர்-வயல் நல்லம் மேவிய - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற; (நளிர்தல் - குளிர்தல்);

தூயனைத் தொழுதெழும் தொண்டர்க்கு இன்பமே - பரிசுத்தனான சிவபெருமானை வழிபடும் தொண்டர்களுக்கு என்றும் இன்பமே.


11)

கொல்வினைக் கூற்றினைக் குமைத்த பாதனை

வெல்விடைக் கொடியனை வெந்த நீற்றனை

நல்வயல் சூழ்திரு நல்ல(ம்) மேவிய

செல்வனை அடிதொழச் சேரும் நன்மையே.


கொல்வினைக் கூற்றினைக் குமைத்த பாதனை - கொல்லும் தொழிலையுடைய காலனை உதைத்து அழித்தவனை; (வினை - தொழில்); (குமைத்தல் - அழித்தல்);

வெல்விடைக் கொடியனை - வெற்றியுடைய இடபக்கொடியை உடையவனை;

வெந்த நீற்றனை - சுட்ட திருநீற்றைப் பூசியவனை;

நல்-வயல் சூழ் திரு-நல்லம் மேவிய - நல்ல வயல் சூழ்ந்த திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

செல்வனை அடிதொழச் சேரும் நன்மையே - செல்வனான சிவபெருமானை வழிபட்டால் நம்மை நன்மையே வந்தடையும்;


வி. சுப்பிரமணியன்

--------- ---------


No comments:

Post a Comment