Showing posts with label திருநேரிசை. Show all posts
Showing posts with label திருநேரிசை. Show all posts

Tuesday, August 5, 2025

P.432 - ஆமாத்தூர் - ஓர்மழ விடையதேறி

2018-04-19

P.432 - ஆமாத்தூர் (திருவாமாத்தூர்)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு; விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - வேதியா வேத கீதா)


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

ஓர்மழ விடைய தேறி ஊர்ப்பலிக் குழலும் செல்வர்

ஆர்கழல் போற்றி நின்ற அடியவன் பகீர தற்கா

நீரழற் சடையி லேற்ற நின்மலர் நீற ணிந்த

ஆரழல் மேனி ஐயர் ஆமாத்தூர் அழக னாரே.


ஓர் மழ-விடையது ஏறி ஊர்ப்பலிக்கு உழலும் செல்வர் - ஓர் இளைய எருதின்மீது ஏறி ஊரார் இடும் பிச்சைக்குத் திரியும் செல்வர்;

ஆர்-கழல் போற்றி நின்ற அடியவன் பகீரதற்கா நீர் அழற்-சடையில் ஏற்ற நின்மலர் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை வழிபட்ட பக்தன் பகீரதனுக்காகக் கங்கையைத் தீப் போன்ற செஞ்சடையில் ஏற்றவர்;

நீறு அணிந்த ஆரழல் மேனி ஐயர் - நீறு பூத்த நெருப்புப் போலத் திருநீற்றைப் பூசிய செம்மேனியை உடைய தலைவர்;

ஆமாத்தூர் அழகனாரே - திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்; (* அழகியநாதர் / அபிராமேஸ்வரர் - இத்தலத்து ஈசன் திருநாமம்);


2)

மெல்லியல் மாது தன்னை மேனியில் வாம பாகம்

புல்லிய நாதர் சாம்பற் பூச்சினர் தவம்பு ரிந்த

வில்வல விசய னுக்கு விரும்பிய படைய ளித்த

அல்லன மேனி வேடர் ஆமாத்தூர் அழக னாரே.


மெல்-இயல் மாது-தன்னை மேனியில் வாம-பாகம் புல்லிய நாதர் - மென்மையான உமையைத் திருமேனியில் இடப்பக்கம் வைத்த தலைவர்; (புல்லுதல் - தழுவுதல்);

சாம்பல் பூச்சினர் - திருநீற்றைப் பூசியவர்;

தவம் புரிந்த வில்-வல விசயனுக்கு விரும்பிய படை அளித்த அல் அன மேனி வேடர் - காட்டில் தவம் செய்தவனும் வில்வித்தையில் வல்லவனுமான அர்ஜுனனுக்கு அவன் விரும்பிய பாசுபதாஸ்திரத்தை அளித்த, இருள் போன்ற கரிய மேனியை உடைய வேடர்; (அல் - இரவு; இருள்);

ஆமாத்தூர் அழகனாரே - திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்;


3)

இருவரை மத்த தாக எறிகடல் கடைந்த போது

கருவிடம் தோன்றக் கண்டு கலங்கிய உம்பர் ஏத்தத்

திருமிடற் றிட்ட வள்ளல் செஞ்சுடர் வண்ணர் அங்கம்

அருமறை ஓது நாவர் ஆமாத்தூர் அழக னாரே.


இரு-வரை மத்து-அது ஆக எறி-கடல் கடைந்த போது - பெரிய மலையை மத்தாகக்கொண்டு அலைவீசும் கடலைக் கடைந்தபோது; (இருமை - பெருமை); (வரை - மலை);

கரு-விடம் தோன்றக் கண்டு கலங்கிய உம்பர் ஏத்தத் - அங்கே கரிய நஞ்சு எழவும் அதனைக் கண்டு மனம்வருந்திய தேவர்கள் ஈசனைத் துதிக்க;

திருமிடற்று இட்ட வள்ளல் - அவர்களுக்கு இரங்கி அந்த விஷத்தைக் கண்டத்தில் வைத்த வள்ளல்;

செஞ்சுடர் வண்ணர் - செந்தீப் போன்ற செம்மேனியர்;

அங்கம் அருமறை ஓது நாவர் - அரிய வேதங்களையும் ஆறு-அங்கங்களையும் ஓதியவர்;

ஆமாத்தூர் அழகனாரே - திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்;


4)

எண்ணிரு குருடர் நாளும் இன்-தமிழ்ப் பதிக மாலை

பண்ணொடு பாடிப் பாதம் பரவிட நின்ற ஈசர்

விண்ணவர் போற்று முக்கண் விகிர்தனார் விடைய தேறும்

அண்ணலார் மதிலி லங்கும் ஆமாத்தூர் அழக னாரே.


எண்ணிரு-குருடர் நாளும் இன்-தமிழ்ப் பதிக-மாலை பண்ணொடு பாடிப் பாதம் பரவிட நின்ற ஈசர் - பதினாறு குருடர்கள் தினமும் தேவாரத் திருப்பதிகங்கள் பாடி வழிபாடு செய்த ஈசர்; (* இத்திருக்கோயிலில் திருப்பதிகம் பாடிவருவதற்குக் குருடர்கள் பதினாறு பேர்களும், அவர்களுக்குக் கண்காட்டுவார் இருவரும் ஆகப் பதினெண்மர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். - இது இத்தலத்தில் உள்ள கல்வெட்டுச் செய்தி - தருமை ஆதீன உரைநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது);

விண்ணவர் போற்று முக்கண் விகிர்தனார் - தேவர்கள் எல்லாம் போற்றும் முக்கண்ணர், "விகிர்தன்" என்ற திருநாமம் உடையவர்;

விடைஅது ஏறும் அண்ணலார் - இடப-வாகனம் உடைய தலைவர்;

மதில் இலங்கும் ஆமாத்தூர் அழகனாரே - மதில் சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்;


5)

நித்தியர் சுடலை நீற்றர் நீள்மதி யோடு பாம்பை

வைத்தவர் மலரம் பெய்த மாரனைச் சுட்ட கண்ணர்

முத்தன நகையாள் பாகர் மூவிலை வேலர் போர்செய்

அத்தியின் உரிவை போர்த்த ஆமாத்தூர் அழக னாரே.


நித்தியர் சுடலை-நீற்றர் - அழிவற்றவர்; அதன் அடையாளமாகச் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியவர்;

நீள்-மதியோடு பாம்பை வைத்தவர் - திருமுடிமேல் பிறையோடு பாம்பையும் சேர்த்து வைத்தவர்;

மலரம்பு எய்த மாரனைச் சுட்ட கண்ணர் - மலர்க்கணை தொடுத்த மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணர்; (மாரன் - மன்மதன்);

முத்து அன நகையாள் பாகர் - முத்துப் போன்ற பற்களையுடைய உமையை ஒரு பாகமாக உடையவர்; (* முத்தாம்பிகை - இத்தலத்து இறைவி திருநாமம்);

மூவிலை-வேலர் - திரிசூலம் ஏந்தியவர்;

போர்செய் அத்தியின் உரிவை போர்த்த - போர் செய்த யானையின் தோலை உரித்துப் போர்த்த; (அத்தி - ஹஸ்தி - யானை); (உரிவை - தோல்);

ஆமாத்தூர் அழகனாரே - திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்;


6)

சக்கரம் தரைமேற் கீறிச் சலந்தரன் தனைய ழித்தார்

அக்கடல் வண்ணன் வேண்ட ஆழியை அவனுக் கீந்தார்

கொக்கிற கேறு கோலக் குஞ்சியர் ஆர மாக

அக்கினைப் பூணு கின்ற ஆமாத்தூர் அழக னாரே.


சக்கரம் தரைமேல் கீறிச் சலந்தரன்-தனை அழித்தார் - நிலத்தின்மேல் ஒரு சக்கரத்தை வரைந்து அதுகொண்டு சலந்தராசுரனை அழித்தவர்;

அக்-கடல்வண்ணன் வேண்ட ஆழியை அவனுக்கு ஈந்தார் - நீலவண்ணத் திருமால் வேண்டவும், அந்தச் சக்கராயுதத்தை அவனுக்கு அருள்செய்தவர்;

கொக்கிறகு ஏறு கோலக் குஞ்சியர் - கொக்கிறகு என்ற பூவைச் சூடியவர்; கொக்கு வடிவாய குரண்டாசுரனை அழித்த அடையாளமாகக் கொக்கின் இறகைச் சென்னியில் சூடியவர்;

ஆரமாக அக்கினைப் பூணுகின்ற - மாலையாக எலும்பை அணிந்த; (ஆரம் - மாலை); (அக்கு - எலும்பு);

ஆமாத்தூர் அழகனாரே - திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்;


7)

துணிமதி குரவம் கொன்றை சூடிய சடையின் மீது

பணியையும் வாழ வைத்தார் பாய்புலித் தோலர் நீல

மணிதிகழ் கண்டர் அன்பர் வல்வினை தீர்க்கும் நல்லர்

அணிவயல் புடைய ணிந்த ஆமாத்தூர் அழக னாரே.


துணி-மதி, குரவம், கொன்றை சூடிய சடையின் மீது பணியையும் வாழ வைத்தார் - நிலாத்துண்டம், குரவமலர், கொன்றைமலர் இவற்றைச் சூடிய சடையின்மேல் பாம்பையும் தங்க வைத்தவர்; (துணி - துண்டம்); (பணி - பாம்பு);

பாய்-புலித் தோலர் - பாய்கின்ற புலியின் தோலை ஆடையாக அணிந்தவர்;

நீலமணி திகழ் கண்டர் - ஆலகாலத்தைக் கரிய மணிபோலக் கண்டத்தில் இட்டவர்;

அன்பர் வல்வினை தீர்க்கும் நல்லர் - அடியவர்களது வலிய வினைகளையெல்லாம் தீர்க்கின்ற நல்லவர்;

அணி வயல் புடை அணிந்த ஆமாத்தூர் அழகனாரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்;


8)

வெற்பெறி இலங்கை வேந்தை விரல்நுதி இட்ட டர்த்துப்

பற்பல கீதம் கேட்டுப் பரிந்தொரு வாளும் ஈந்த

பொற்பினர் பூத நாதர் போனக மாக நஞ்சுண்

அற்புதர் கழனி சூழ்ந்த ஆமாத்தூர் அழக னாரே.


வெற்பு எறி- இலங்கை வேந்தை விரல்-நுதி இட்டு அடர்த்துப் - கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இலங்கை மன்னன் இராவணனைத் திருப்-பாதவிரலின் நுனியை ஊன்றி நசுக்கி; (வேந்து - அரசன்); (நுதி - நுனி); (அடர்த்தல் - நசுக்குதல்);

பற்பல கீதம் கேட்டுப் பரிந்து ஒரு வாளும் ஈந்த பொற்பினர் - (பின் அவன் அழுது பாடிய) பல கீதங்களைக் கேட்டு இரங்கி, அவனுக்கு ஒரு வாளையும் அருளிய பண்பு உடையவர்; (பொற்பு - தன்மை);

பூதநாதர் - பூதப்படையை உடையவர்;

போனகமாக நஞ்சு உண் அற்புதர் - உணவாக விடத்தை உண்ட அதிசயர்; (போனகம் - உணவு);

கழனி சூழ்ந்த ஆமாத்தூர் அழகனாரே - வயல்களால் சூழப்பெற்ற திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்; (கழனி - வயல்);


9)

துடியிடை மங்கை பங்கர் தோற்றமும் முடிவும் இல்லார்

முடியடி நேடிச் சென்ற முராரியும் அயனும் காணா

நெடியதோர் சோதி ஆனார் நித்தலு(ம்) மறவா தேத்தும்

அடியவர்க் கினியர் தேனார் ஆமாத்தூர் அழக னாரே.


துடி-இடை மங்கை பங்கர் - உடுக்குப் போன்ற சிற்றிடை உடைய உமையை ஒரு பங்கில் உடையவர்;

தோற்றமும் முடிவும் இல்லார் - பிறப்பும் இறப்பும் இல்லாதவர்;

முடி அடி நேடிச் சென்ற முராரியும் அயனும் காணா நெடியது ஓர் சோதி ஆனார் - அடியையும் முடியையும் தேடிய திருமால் பிரமன் இவர்களால் காண ஒண்ணாத எல்லையற்றதான ஜோதி ஆனவர்; (நேடுதல் - தேடுதல்); (முராரி - திருமால்);

நித்தலும் மறவாது ஏத்தும் அடியவர்க்கு இனியர் - தினமும் மறத்தல் இன்றி வணங்கும் பக்தர்களுக்கு இன்பம் அளிப்பவர்; (* அடியவர்க்கு இனியர் - அபிராமேஸ்வரர் என்ற திருநாமத்தையும் சுட்டியது);

தேன் ஆர் ஆமாத்தூர் அழகனாரே - வண்டுகள் ஒலிக்கின்ற திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்; (ஆர்த்தல் -ஒலித்தல்);


10)

வம்பர்கள் விரிக்கு(ம்) மாய வலையினிற் சிக்கி டாதீர்

உம்பர்கள் தமக்கு நாதர் உள்கசி அன்பர்க் கெல்லாம்

இம்பரில் நல்கி ஈறில் இன்பமும் புரக்கும் ஈசர்

அம்பொழில் புடைய ணிந்த ஆமாத்தூர் அழக னாரே.


வம்பர்கள் விரிக்கும் மாய-வலையினில் சிக்கிடாதீர் - துஷ்டர்கள் விரிக்கின்ற வஞ்சவலையில் நீங்கள் விழவேண்டா;

உம்பர்கள்-தமக்கு நாதர் - தேவர்களுக்குத் தலைவர்;

உள் கசி அன்பர்க்கு எல்லாம் இம்பரில் நல்கி, ஈறு இல் இன்பமும் புரக்கும் ஈசர் - உள்ளம் உருகி வழிபடும் பக்தர்களுக்கு இவ்வுலகில் வேண்டுவன எல்லாம் அளித்து, அந்தம் இல்லாத பேரின்பமும் அருளும் ஈசர்;

அம்-பொழில் புடை அணிந்த ஆமாத்தூர் அழகனாரே - அழகிய சோலை சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்;


11)

வேகமார் கங்கை தன்னை விரிசடைத் தரிக்க வல்லார்

மேகமார் நீல கண்டர் வெண்மழு சூலம் ஏந்தி

நாகநாண் ஆர்த்த ஐயர் நம்பினார்க் கின்பம் ஈவார்

ஆகமம் அருளிச் செய்த ஆமாத்தூர் அழக னாரே.


வேகம் ஆர் கங்கை-தன்னை விரிசடைத் தரிக்க வல்லார் - விரைவு மிக்க கங்கையாற்றை விரித்த சடையில் தரித்தவர்; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);

மேகம் ஆர் நீலகண்டர் - மேகம் போல் கருமை திகழும் கண்டத்தை உடையவர்; (ஆர்தல் - ஒத்தல்);

வெண்மழு சூலம் ஏந்தி - ஒளி வீசும் மழுவையும் சூலத்தையும் ஏந்தியவர்;

நாகநாண் ஆர்த்த ஐயர் - பாம்பை அரைநாணாகக் கட்டிய தலைவர்;

நம்பினார்க்கு இன்பம் ஈவார் - விரும்பி வழிபடும் பக்தர்களுக்கு இன்பம் அளிப்பவர்; (நம்புதல் - விரும்புதல்);

ஆகமம் அருளிச் செய்த ஆமாத்தூர் அழகனாரே - ஆகமங்களை அருளியவரான, திருவாமாத்தூரில் உறைகின்ற அழகர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Tuesday, July 15, 2025

P.425 - செங்கோடு (திருச்செங்கோடு) - பூவினால் நறுந்தூபத்தால்

2018-02-28

P.425 - செங்கோடு (திருச்செங்கோடு)

(தேவாரத்தில் - கொடிமாடச் செங்குன்றூர்)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - வேதியா வேத கீதா)


முற்குறிப்பு - இப்பதிகத்தில் எல்லாப் பாடல்களிலும் அர்த்தநாரீஸ்வர வடிவம் கூறப்பெறுகின்றது.


1)

பூவினால் நறுந்தூ பத்தால் .. புனலினால் புரைதீர் செஞ்சொற்

பாவினால் போற்றும் அன்பர் .. பழவினை தீர்க்கும் பண்பன்

ஏவினால் முப்பு ரங்கள் .. எய்தவன் ஏற தேறி

தேவியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


பூவினால், றுந்-தூபத்தால், புனலினால், - பூக்களாலும் நறும்புகையினாலும், நீராலும்;

புரை தீர் செஞ்சொல் பாவினால் போற்றும் அன்பர் பழவினை தீர்க்கும் பண்பன் - குற்றமற்ற செந்தமிழ்ப் பாமாலைகளாலும் வழிபடும் அடியவர்களது பழைய வினைகளைத் தீர்க்கின்ற பண்பு உடையவன்; (புரை - குற்றம்);

ஏவினால் முப்புரங்கள் எய்தவன் - ஓர் அம்பினால் முப்புரங்களை எய்தவன்; (ஏ – அம்பு);

து ஏறி - இடபவாகனன்; (ஏறு - எருது; அது - பகுதிப்பொருள்விகுதி);

தேவி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (சேண் - உயரம்; ஆகாயம்);


2)

கல்வியின் பயன றிந்து .. கற்றவர் போற்றும் ஈசன்

சொல்விர(வு) இன்த மிழ்ப்பாச் .. சொல்லிய தொண்டர் தம்மை

வல்வினை தொடரா வண்ணம் .. மகிழ்ந்தருள் செய்ம்மா தேவன்

செல்வியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


கல்வியின் பயன் அறிந்து கற்றவர் போற்றும் ஈசன் - ;

சொல் விரவு இன்-தமிழ்ப்-பாச் சொல்லிய தொண்டர்-தம்மை - செஞ்சொற்கள் பொருந்திய இனிய தமிழ்ப்-பாமாலைகளைப் பாடி வழிபடும் தொண்டர்களை;

வல்வினை தொடரா-வண்ணம் மகிழ்ந்துஅருள் செய்ம் மாதேவன் - வலிய வினைகள் தொடராதபடி இன்னருள் செய்யும் மகாதேவன்; (செய்ம்மாதேவன் - புணர்ச்சியில் மகரஒற்று மிகும்);

செல்வி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


3)

வாயினில் நூலைக் கொண்டு .. வலையொரு சிலந்தி பின்ன

மாயிரு ஞாலம் ஆளும் .. மன்னவன் ஆக்கும் எந்தை

தாயினும் நல்லன் கையில் .. தழல்மழு சூலம் ஏந்தி

சேயிழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


வாயினில் நூலைக் கொண்டு வலை ஒரு சிலந்தி பின்ன(திருவானைக்காவில்) ஒரு சிலந்தி தன் வாய்நூலால் வலை பின்னி ஈசனை வழிபடவும்;

மாயிருஞாலம் ஆளும் மன்னவன் ஆக்கும் எந்தை - இந்தப் பெரிய நிலவுலகை ஆளும் சோழமன்னன் ஆக்கிய எம் தந்தை; (அப்பர் தேவாரம் - 4.56.1 - "மாயிரு ஞாலமெல்லா(ம்) மலரடி வணங்கும்"); (* கோச்செங்கட்சோழ நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

தாயினும் நல்லன் - தாயைவிட நல்லவன்;

கையில் தழல் மழு சூலம் ஏந்தி - கையில் தீ, மழு, சூலாயுதம் இவற்றையெல்லாம் ஏந்தியவன்;

சேயிழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


4)

வருந்திய வானோர் வந்து .. மலரடி வாழ்த்த நஞ்சை

அருந்திய கண்டன் நால்வர்க்(கு) .. அருமறை விரிக்க ஆல்கீழ்

இருந்தவன் ஓடொன் றேந்தி .. இரந்தவன் இமவான் பெற்ற

திருந்திழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


வருந்திய வானோர் வந்து மலரடி வாழ்த்த நஞ்சை அருந்திய கண்டன் - வருந்தி வந்து திருவடியை வழிபட்ட தேவர்கள் உய்ய ஆலகாலத்தை உண்ட நீலகண்டன்;

நால்வர்க்கு அருமறை விரிக்க ஆல்கீழ் இருந்தவன் - சனகாதியர்களுக்கு மறைப்பொருளை உபதேசிக்கக் கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருந்தவன்;

ஓடு ஒன்று ஏந்தி இரந்தவன் - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சை ஏற்றவன்;

இமவான் பெற்ற திருந்திழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலையரசன் பெண்ணான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


5)

மலைதனை ஒருவில் லாக்கி .. மாற்றலர் புர(ம்)மூன் றெய்தான்

தலைமலி மாலை தன்னைத் .. தலைக்கணி தலைவன் ஆர்க்கும்

அலைமலி கங்கை தன்னை .. அஞ்சடை அடைத்த அண்ணல்

சிலைமகள் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


மலைதனை ஒரு வில் ஆக்கி, மாற்றலர் புரம்-மூன்று எய்தான் - மேருமலையை வில்லாக வளைத்துப் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (மாற்றலர் - பகைவர்);

தலை மலி மாலைதன்னைத் தலைக்கு அணி தலைவன் - தலைக்குத் தலைமாலை அணிந்த தலைவன்;

ஆர்க்கும் அலை மலி கங்கைதன்னை அஞ்சடை அடைத்த அண்ணல் - ஒலிக்கின்ற அலைகள் மிக்க கங்கையை அழகிய சடையில் அடைத்த அண்ணல்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (அஞ்சடை - அம் சடை - அழகிய சடை);

சிலைமகள் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலைமகளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (சிலை - மலை); (திருப்புகழ் - திருத்தணிகை - "கலைமடவார்தம் .. .. சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்");


6)

வாவியார் பங்க யம்போல் .. மலர்விழி மாலிட் டேத்த

ஓவிலா வென்றி ஆழி .. உகந்தருள் பெம்மான் கொக்கின்

தூவியார் சென்னித் தூயன் .. சுரும்பினம் அமரும் ஓதித்

தேவியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


வாவி ஆர் பங்கயம்போல் மலர்விழி மால் இட்டு ஏத்த - குளத்தில் திகழும் தாமரைப்பூப் போலத் தன் மலர்க்கண்ணை இடந்து பூவாகத் திருவடியில் இட்டுத் திருமால் வழிபாடு செய்ய;

ஓவு இலா வென்றி ஆழி உகந்துஅருள் பெம்மான் - நீங்குதல் இல்லாத வெற்றியுடைய சக்கராயுதத்தை அருளிய பெருமான்; (ஓவு - நீங்குதல்; முடிதல்); (வென்றி - வெற்றி); (சம்பந்தர் தேவாரம் - 3.116.5 - "ஓவிலாதிடுங் கரணமே");

கொக்கின் தூவி ஆர் சென்னித் தூயன் - கொக்கின் இறகைத் திருமுடிமேல் சூடிய தூயவன்; (தூவி - இறகு); (கொக்கிறகு - ஒரு பூ; குரண்டாசுரனை அழித்த அடையாளம்);

சுரும்பு-இனம் அமரும் ஓதித் தேவி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - வண்டுகள் விரும்பும் கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (ஓதி - பெண்களின் கூந்தல்; ஓதித் தேவி - ஓதியை உடைய தேவி); (சம்பந்தர் தேவாரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின"); (பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 12.28.669 - "தெள்ளு நீர்விழித் தெரிவையார்")


7)

வில்விச யனுக்கு நல்க .. வேடனாய்ச் சென்ற வேந்தன்

வெல்விடை யான்வன் தொண்டர் .. வேண்டவும் ஆரூர் தன்னில்

நெல்விசும்(பு) அணாவத் தந்த .. நீர்மையன் மலையான் பெற்ற

செல்வியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


வில்விசயனுக்கு நல்க வேடனாய்ச் சென்ற வேந்தன் - வில்வித்தையில் சிறந்த அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருள்வதற்கு ஒரு வேடன் உருவில் சென்ற வேந்தன்;

வெல்விடையான் - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடையவன்;

வன்தொண்டர் வேண்டவும் ஆரூர் தன்னில் நெல் விசும்பு அணாவத் தந்த நீர்மையன் - வன்தொண்டர் (சுந்தரர்) வேண்டியபடி திருவாரூரில் வானளாவ நெல்லைத் தந்தருளியவன்; (அணாவுதல் - கிட்டுதல்; நெருங்குதல்); (நீர்மை - தன்மை; சௌலப்பியம்); (* சுந்தரருக்குக் குண்டையூரில் நெல்மலை அளித்துப் பின் அவர் வேண்டியபடி ஈசன் அந்த நெல்மலையைத் திருவாரூரில் ஈந்த வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

மலையான் பெற்ற செல்வி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலையரசன் மகளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


8)

போயிரு வரையி டந்தான் .. பொன்முடி பத்த டர்த்து

வாயிரும் புகழைப் பாட .. வாளொடு நாளும் ஈந்தான்

ஆயிரம் பெயர்கள் உள்ளான் .. அரையினிற் புலியின் தோலன்

சேயிழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


போய் இரு-வரை இடந்தான் பொன்முடி பத்து அடர்த்து - சென்று பெரிய கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது கிரீடம் அணிந்த பத்துத்-தலைகளையும் நசுக்கி; (இருமை - பெருமை); (இடத்தல் - பெயர்த்தல்);

வாய் இரும்-புகழைப் பாட, வாளொடு நாளும் ஈந்தான் - (பின் இராவணனது) வாய்கள் ஈசனது பெரும்புகழைப் பாடவும் கேட்டு இரங்கி, அவனுக்கு வாளும் நீண்ட ஆயுளும் கொடுத்தவன்;

ஆயிரம் பெயர்கள் உள்ளான் - ஆயிரம் திருநாமங்கள் உடையவன்;

அரையினில் புலியின் தோலன் - அரையில் புலித்தோலைக் கட்டியவன்;

சேயிழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


9)

பெருந்தொடர் வாது செய்த .. பிரமனு(ம்) மாலு(ம்) நேட

அருந்தழல் ஆனான் போற்றி .. அடைமணி வாச கர்க்குக்

குருந்தமர் குரவன் ஆனான் .. கொடியன மென்ம ருங்குல்

திருந்திழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


பெரும்-தொடர்-வாது செய்த பிரமனும் மாலும் நேட அரும் தழல் ஆனான் - தொடர்ந்து மிகவும் வாது செய்த பிரமனும் திருமாலும் தேடுமாறு, அவர்களால் அறிவதற்கு அரிய ஜோதி ஆனவன்; (நேடுதல் - தேடுதல்);

போற்றி அடை மணிவாசகர்க்குக் குருந்து அமர் குரவன் ஆனான் - வணங்கி அடைந்த மாணிக்கவாசகருக்குக் குருந்தமரத்தின்கீழ்க் குரு ஆனவன்; (குரவன் - குரு);

கொடி அன மென் மருங்குல் திருந்திழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - கொடி போன்ற மெல்லிய இடையை உடைய உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (அன – அன்ன – ஒத்த); (மருங்குல் - இடை);


10)

பலபல பொய்கள் சொல்லிப் .. படுகுழித் தள்ளப் பார்க்கும்

கலதிகட் கெட்டா எந்தை .. கண்ணுதல் கழலை வாழ்த்தி

வலம்வரும் அன்பர்க் கின்பம் .. மல்கிட அருளும் வள்ளல்

சிலைமகள் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


பலபல பொய்கள் சொல்லிப், டுகுழித் தள்ளப் பார்க்கும் கலதிகட்கு எட்டா எந்தை கண்ணுதல் - பல பொய்களைச் சொல்லிப், (புன்னெறி என்ற) படுகுழியில் மக்களைத் தள்ள முயல்கின்ற தீயோருக்கு எட்டாதவன் நெற்றிக்கண்ணனான எம் தந்தை; (கலதி - தீக்குணம் உடையவன்);

கழலை வாழ்த்தி வலம்வரும் அன்பர்க்கு இன்பம் மல்கிட அருளும் வள்ளல் - திருவடியைப் போற்றிப் பிரதட்சிணம் செய்து வழிபடும் பக்தர்களுக்கு இன்பம் பொங்குமாறு அருள்கின்ற வள்ளல் அவன்;

சிலைமகள் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலைமகளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (சிலை - மலை);


11)

நாவினால் அஞ்செ ழுத்தை .. நாள்தொறும் நவிலும் அன்பர்

தீவினை ஆன தீர்த்துத் .. திருவருள் செய்யும் தேவன்

சேவினை விரும்பி ஏறி .. செங்கயல் அன்ன கண்ணி

தேவியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


நாவினால் அஞ்செழுத்தை நாள்தொறும் நவிலும் அன்பர் தீவினை ஆன தீர்த்துத் திருவருள் செய்யும் தேவன் - தங்கள் நாக்கால் திருவைந்தெழுத்தைத் தினமும் சொல்லும் அடியவர்களது பாவங்களையெல்லாம் தீர்த்து இன்னருள் செய்யும் இறைவன்; (நவில்தல் - சொல்லுதல்);

சேவினை விரும்பி ஏறி - இடபவாகனத்தை விரும்பியவன்; (ஏறி - ஏறுபவன்);

செங்கயல் அன்ன கண்ணி தேவி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - செங்கயல்மீன் போன்ற கண்களை உடையவளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.424 - நணா (பவானி) - விற்படை ஏந்தி

2018-02-28

P.424 - நணா (பவானி)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - வேதியா வேத கீதா)


1)

விற்படை ஏந்திச் சென்று விசயனுக் கருள்செய் வேடர்

கற்சிலை கையில் ஏந்திக் கடியரண் மூன்றும் எய்தார்

பொற்சடை மீது திங்கள் புனைந்தவர் புலியின் தோலர்

நற்புனற் பொன்னிப் பாங்கர் நணாவுறை நாத னாரே.


விற்படை ஏந்திச் சென்று விசயனுக்கு அருள்செய் வேடர் - வேடன் உருவில் வில்லை ஏந்திப் போய் அர்ஜுனனுக்கு அருளியவர்; (படை - ஆயுதம்);

கற்சிலை கையில் ஏந்திக் கடி-அரண் மூன்றும் எய்தார் - மலையை வில்லாக ஏந்திக் காவல் மிக்க முப்புரங்களையும் எய்தவர்; (கல் - மலை); (சிலை - வில்); (கடி - காவல்);

பொற்சடை மீது திங்கள் புனைந்தவர் - பொன் போன்ற அழகிய சடையின்மேல் சந்திரனைச் சூடியவர்;

புலியின் தோலர் - புலித்தோலை ஆடையாக அணிந்தவர்;

நற்புனற்-பொன்னிப் பாங்கர் நணா உறை நாதனாரே - நல்ல நீர் மிக்க காவிரியின் பக்கத்தில் திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


2)

குறும்புசெய் நெஞ்ச னாகிக் குறுகிய மதன தாகம்

வெறும்பொடி ஆகு மாறு விழித்தருள் நெற்றிக் கண்ணர்

உறும்பிணி நீக்கி அன்பர்க் குறுதுணை ஆகி நிற்பார்

நறும்பொழில் புடைய ணிந்த நணாவுறை நாத னாரே.


குறும்பு செய் நெஞ்சனாகிக் குறுகிய மதனது ஆகம் வெறும்-பொடி ஆகுமாறு விழித்தருள் நெற்றிக்கண்ணர் - மலர்க்கணையை எய்து விஷமம் செய்ய வந்தடைந்த மன்மதனது உடல் முற்றும் எரிந்து வெறும்-சாம்பல் ஆகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவர்; (வெறுமை - கலப்பின்மை);

உறும் பிணி நீக்கி அன்பர்க்கு உறுதுணை ஆகி நிற்பார் - உற்ற பிணியைத் தீர்த்து அடியவர்களுக்கு நல்ல துணை ஆவார்;

நறும்-பொழில் புடை அணிந்த நணா உறை நாதனாரே - வாசமலர்ச் சோலை சூழ்ந்த திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


3)

புதியவர் ஆயின் சாலப் புராதனர் மலர்கள் தூவித்

துதிசெயும் அன்பர்க் கன்பர் சுடலையில் ஆடும் பாதர்

மதியுடன் நாகப் பாம்பு வாழ்சடை உடையார் பொன்னி

நதியுடன் பவானி கூடும் நணாவுறை நாத னாரே.


புதியவர், ஆயின் சாலப் புராதனர் - புதியவர், ஆனால் மிகப் பழையவர்;

மலர்கள் தூவித் துதிசெயும் அன்பர்க்கு அன்பர் - பூக்கள் தூவி வழிபடும் பக்தர்களுக்கு அன்பர்;

சுடலையில் ஆடும் பாதர் - சுடுகாட்டில் கூத்தாடும் திருப்பாதம் உடையவர்;

மதியுடன் நாகப்பாம்பு வாழ்சடை உடையார் - சந்திரனோடு நாகப்பாம்பும் வாழும் சடையை உடையவர்;

பொன்னி-நதியுடன் பவானி கூடும் நணா உறை நாதனாரே - காவிரியாறும் பவானி-நதியும் சங்கமிக்கும் திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


4)

ஆரியம் தமிழ்கொண் டேத்தி அடியிணை போற்றி னார்கள்

கோரிய வரங்க ளெல்லாம் கொடுத்தருள் செய்யும் வள்ளல்

ஏரியல் ஆலின் கீழே இருந்தறம் சொன்ன மூர்த்தி

நாரியைப் பங்கு கந்து நணாவுறை நாத னாரே.


ஆரியம் தமிழ்கொண்டு ஏத்தி அடியிணை போற்றினார்கள் கோரிய வரங்களெல்லாம் கொடுத்து அருள்செய்யும் வள்ளல் - வேதமந்திரங்களாலும் தேவாரம் முதலிய தமிழ்ப்-பாமாலைகளாலும் போற்றி இரு-திருவடிகளை வழிபட்டவர்கள் வேண்டிய எல்லா வரங்களையும் அளிக்கும் வள்ளல்;

ஏர் இயல் ஆலின் கீழே இருந்து அறம் சொன்ன மூர்த்தி - அழகிய கல்லால-மரத்தின்கீழ் இருந்து வேதப்பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தி; (ஏர் - அழகு; எழுச்சி);

நாரியைப் பங்கு உகந்து, நணா உறை நாதனாரே - உமையை ஒரு பாகமாக விரும்பித், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


5)

அஞ்செழுத் தோது மாணி ஆருயிர் தன்னைக் காத்து

வெஞ்சினக் கூற்று தைத்த விரைகமழ் கமல பாதர்

அஞ்சிய உம்பர் உய்ய அமுதினை அருள்பு ரிந்து

நஞ்சினை உண்ட கண்டர் நணாவுறை நாத னாரே.


அஞ்செழுத்து ஓது மாணி ஆருயிர் தன்னைக் காத்து - திருவைந்தெழுத்தை ஓதிய மார்க்கண்டேயரது அரிய உயிரைக் காத்து;

வெஞ்சினக் கூற்று உதைத்த விரைகமழ் கமல-பாதர் - கொடிய சினம் மிக்க நமனை மணம் கமழும் தாமரை போன்ற பாதத்தால் உதைத்தவர்;

அஞ்சிய உம்பர் உய்ய அமுதினை அருள்புரிந்து - பயந்த தேவர்கள் உய்யும்படி அமுதத்தை அவர்களுக்கு அருள்புரிந்து;

நஞ்சினை உண்ட கண்டர் நணா உறை நாதனாரே - விடத்தை உண்ட நீலகண்டர், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


6)

தரையினில் ஆழி கீறிச் சலந்தரன் தனைத்த டிந்தார்

அரையினில் அரவ நாணர் அழகிய திங்கள் கொன்றை

திரைமத மத்தம் நாகம் செஞ்சடைச் சூடும் செல்வர்

நரைவிடைப் பாகர் நன்னீர் நணாவுறை நாத னாரே.


தரையினில் ஆழி கீறிச் சலந்தரன்தனைத் தடிந்தார் - நிலத்தில் ஒரு சக்கரத்தைக் வரைந்து அதுகொண்டு சலந்தரனை அழித்தவர்;

அரையினில் அரவ-நாணர் - அரைநாணாகப் பாம்பைக் கட்டியவர்;

அழகிய திங்கள், கொன்றை, திரை, மதமத்தம், நாகம் செஞ்சடைச் சூடும் செல்வர் - அழகிய சந்திரன், கொன்றைமலர், கங்கை, ஊமத்தமலர், பாம்பு இவற்றைச் செஞ்சடையில் செஞ்சடையில் அணிந்த செல்வர்; (திரை - அலை; நதி);

நரைவிடைப் பாகர் நன்னீர் நணா உறை நாதனாரே - வெள்ளை-இடபத்தை ஊர்தியாக உடையவர், நல்ல நீர் மிக்க திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்; (நரை - வெண்மை);


7)

செங்கையில் ஓடொன் றேந்திச் சில்பலிக் குழலும் செல்வர்

கங்குலிற் பூதம் சூழக் கானிடை ஆடும் கூத்தர்

சங்கரர் சீறும் பாம்பைத் தாரெனப் பூண்ட மார்பர்

நங்கையைப் பங்கு கந்து நணாவுறை நாத னாரே.


செங்கையில் ஓடு-ஒன்று ஏந்திச் சில்பலிக்கு உழலும் செல்வர் - சிவந்த கரத்தில் பிரமனது மண்டையோட்டை ஏந்திச் சிறிய அளவில் இடும் உணவை ஏற்கத் திரியும் செல்வர்; (சுந்தரர் தேவாரம் - 7.45.5 - "சென்றவன் சில்பலிக்கென்று தெருவிடை");

கங்குலில் பூதம் சூழக் கானிடை ஆடும் கூத்தர் - இருளில் பூதகணங்கள் சூழச் சுடுகாட்டில் கூத்தாடுபவர்;

சங்கரர் - நன்மையைச் செய்பவர்;

சீறும் பாம்பைத் தார் எனப் பூண்ட மார்பர் - சீறும் நாகத்தை மாலையாக மார்பில் அணிந்தவர்;

நங்கையைப் பங்கு உகந்து, நணா உறை நாதனாரே - உமையை ஒரு பாகமாக விரும்பித், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


8)

முக்கணர் மலையைப் பத்து முடியுடை அரக்கன் பேர்த்த

அக்கணம் விரலொன் றூன்றி அடர்த்தழ வைத்த ஈசர்

மிக்கிகழ் தக்கன் செய்த வேள்வியைச் செற்ற வீரர்

நக்கெயில் மூன்றெ ரித்து நணாவுறை நாத னாரே.


முக்கணர் மலையைப் பத்து-முடியுடை அரக்கன் பேர்த்த அக்கணம் விரல்-ஒன்று ஊன்றி அடர்த்து அழவைத்த ஈசர் - முக்கண்ணரான சிவபெருமானார் உறையும் கயிலைமலையைப் பத்துத்தலை அரக்கனான இராவணன் பெயர்த்த அச்சமயத்தில் பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கி அழவைத்த ஈசனார்;

மிக்கு இகழ் தக்கன் செய்த வேள்வியைச் செற்ற வீரர் - செருக்குற்றுச் சிவனாரை இகழ்ந்த தக்கன் செய்த அவவேள்வியை அழித்த வீரர்; (மிகுதல் - செருக்குறுதல்);

நக்கு எயில் மூன்று எரித்து, நணா உறை நாதனாரே - சிரித்து முப்புரங்களை எரித்துத், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


9)

ஆனிரை மேய்த்தான் பூமேல் அயனிவர் மண்ண கழ்ந்தும்

வானிலு யர்ந்தும் நேடி வாடிட ஓங்கு சோதி

மானிகர் நோக்கி பங்கர் மார்பினில் நூலர் என்றும்

ஞானியர் நெஞ்சை நீங்கார் நணாவுறை நாத னாரே.


ஆனிரை மேய்த்தான், பூமேல் அயன் இவர் மண் அகழ்ந்தும் வானில் உயர்ந்தும் நேடி வாடிட ஓங்கு சோதி - (கிருஷ்ணாவதாரத்தில்) பசுக்கூட்டத்தை மேய்த்த திருமாலும் தாமரைமேல் உறையும் பிரமனும் நிலத்தை அகழ்ந்தும் வானில் பறந்து சென்றும் அடிமுடி தேடி வாடும்படி எல்லையின்றி ஓங்கிய ஒளித்தூண் ஆனவர்; (ஆனிரை - ஆன் நிரை - பசுக்கூட்டம்); (நேடுதல் - தேடுதல்);

மான் நிகர் நோக்கி பங்கர் - மான் போன்ற மருண்ட பார்வையையுடைய உமையைப் பங்கில் உடையவர்;

மார்பினில் நூலர் - மார்பில் பூணூல் அணிந்தவர்;

என்றும் ஞானியர் நெஞ்சை நீங்கார், நணா உறை நாதனாரே - எப்பொழுதும் ஞானியர் நெஞ்சில் நிலைத்தவர், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


10)

புன்னெறி வீணர் சொல்லும் பொய்களில் மதிம யங்கேல்

முன்னறி வாளர் சென்று முத்திய டைந்த அந்தச்

செந்நெறி சிந்தை செய்து சிவசிவ என்பார் கட்கு

நன்னெறி காட்டும் நம்பர் நணாவுறை நாத னாரே.


புன்னெறி வீணர் சொல்லும் பொய்களில் மதி மயங்கேல் - சிறுநெறிகளில் செல்லும் வீணர்கள் சொல்லும் பொய்களைக் கேட்டு மயங்கவேண்டா; (வீணர் - பயனற்றோர்);

முன் அறிவாளர் சென்று முத்தி அடைந்த அந்தச் செந்நெறி சிந்தை செய்து சிவசிவ என்பார்கட்கு - ஞானம் மிக்க முன்னோர் சென்று முக்தி பெற்றதான சிறந்த வேதநெறியைக் கருதிச், "சிவசிவ" என்று சொல்லி வழிபடும் பக்தர்களுக்கு;

நன்னெறி காட்டும் நம்பர் நணா உறை நாதனாரே - நற்கதி கொடுக்கும் பெருமானார், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்; (அப்பர் தேவாரம் - 5.90.2 - "நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே");


11)

பெண்ணினார் ஒருபால் போற்றிப் பெருந்துயர் தீரீர் என்ற

விண்ணினார்க் கிரங்கி அன்று வியன்புரம் மூன்றை நாசம்

பண்ணினார் உள்நெ கிழ்ந்து பண்ணினார் தமிழ்கள் பாடி

நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நணாவுறை நாத னாரே.


பெண்ணினார் ஒருபால் - உமையை இடப்பக்கம் ஒரு பாகமாக உடையவர்;

போற்றிப், "பெருந்-துயர் தீரீர்" என்ற விண்ணினார்க்கு இரங்கி அன்று வியன்-புரம்-மூன்றை நாசம் பண்ணினார் - "பெருந்-துன்பத்தைத் தீர்த்து அருளுங்கள்" என்று போற்றி வணங்கிய தேவர்களுக்கு இரங்கி முன்பு பெரிய முப்புரங்களையும் அழித்தவர்; (வியன் - பெருமை);

உள் நெகிழ்ந்து பண்ணின் ஆர் தமிழ்கள் பாடி நண்ணினார் வினைகள் தீர்ப்பார் - மனம் உருகிப் பண்கள் பொருந்திய தேவாரப் பாடல்கள் பாடித் திருவடியைச் சரணடைந்தவர்களது வினைகளைத் தீர்ப்பவர்;

நணா உறை நாதனாரே - திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------