Showing posts with label கட்டளைக் கலித்துறை. Show all posts
Showing posts with label கட்டளைக் கலித்துறை. Show all posts

Tuesday, April 1, 2025

P.369 - தெங்கூர் (திருத்தங்கூர்) - திரையார் கடலில்

2016-12-14

P.369 - தெங்கூர் (திருத்தங்கூர்)

(திருவாரூர் திருத்துறைப்பூண்டி இடையே உள்ள தலம்)

---------------------------------

(கட்டளைக் கலித்துறை) (திருவிருத்தம் அமைப்பு)

(அப்பர் தேவாரம் - திருவிருத்தம் - 4.96.1 - "கோவாய் முடுகி");


1)

திரையார் கடலில் திரள்நஞ்சைக் கண்டஞ்சித் தேவரெலாம்

குரையார் கழல்போற்ற உண்டு மிடற்றிருள் கொண்டவனே

விரையார் மலர்ச்சோலை சூழ்ந்த திருத்தெங்கூர் வெள்ளிமலை

அரையா அடிபணிந் தேன்வல் வினையை அழித்தருளே.


திரை ஆர் கடலில் திரள்-நஞ்சைக் கண்டு அஞ்சித் - அலை மிகுந்த பாற்கடலில் திரண்ட ஆலகாலத்தைக் கண்டு பயந்து;

தேவரெலாம் குரை ஆர் கழல் போற்ற உண்டு மிடற்று-இருள் கொண்டவனே - தேவர்களெல்லாம் ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியைப் போற்றி வணங்க, (அவர்களுக்கு இரங்கி) அந்த விடத்தை உண்டருளிக் கண்டத்தில் கருமையை ஏற்றவனே;

விரை ஆர் மலர்ச்சோலை சூழ்ந்த திருத்தெங்கூர் வெள்ளிமலை அரையா - வாச மலர்ப்பொழில் சூழ்ந்த திருத்தெங்கூரில் ரஜதகிரியில் வீற்றிருக்கும் அரசே; (சம்பந்தர் தேவாரம் - 2.93.1 - "விரைசெய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்தாரே");

அடிபணிந்தேன் வல்வினையை அழித்து அருளே - உன் திருவடியை வழிபடும் அடியேனது வலிய வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;


2)

மோகம் விளைக்கவம் பெய்த மதனை முனிந்தனங்கன்

ஆகும் படிநெற்றிக் கண்ணைத் திறந்த அதிசயனே

மேகம் தவழ்சோலை சூழ்ந்த திருத்தெங்கூர் வெள்ளிமலை

நாகம் புனைமார்ப என்வல் வினையை நசித்தருளே.


மோகம் விளைக்க அம்பு எய்த மதனை முனிந்து - மோஹம் உண்டாக்குவதற்காகக் கணை தொடுத்த மன்மதனைக் கோபித்து;

அனங்கன் ஆகும்படி நெற்றிக்கண்ணைத் திறந்த அதிசயனே - அவனை உடல் அற்றவனாகச் செய்ய நெற்றிக்கண்ணைத் திறந்தவனே, அற்புதமானவனே; மிகுந்த வெற்றி உடையவனே; ( அதிசயம் - சிறப்பு; ஆச்சரியம்; அதி+ஜயம் - மிகுந்த வெற்றி);

மேகம் தவழ் சோலை சூழ்ந்த திருத்தெங்கூர் வெள்ளிமலை - வானளாவும் சோலை சூழ்ந்த திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற;

நாகம் புனை மார்ப - மார்பில் பாம்பை மாலையாக அணிந்தவனே;

என் வல்வினையை நசித்து அருளே - என் வலிய வினைகளை அழித்து அருள்வாயாக;


3)

அடையார் புரங்கள் அழல்புக் கழிந்திட அம்புதொட்டாய்

சடைமேல் தவள மதியும் அரவும் தரித்தவனே

விடையார் கொடியுடை நாத திருத்தெங்கூர் வெள்ளிமலை

உடையாய் அடிதொழு தேன்வல் வினையை ஒழித்தருளே.


அடையார் புரங்கள் அழல் புக்கு அழிந்திட அம்பு தொட்டாய் - பகைவர்களது முப்புரங்களும் தீப்பற்றி அழியும்படி ஒரு கணையை எய்தவனே; (அடையார் - பகைவர்); (அழல் - தீ);

சடைமேல் தவள-மதியும் அரவும் தரித்தவனே - சடையின்மேல் வெண்திங்களையும் பாம்பையும் அணிந்தவனே; (தவளம் - வெண்மை);

விடை ஆர் கொடியுடை நாத - இடபக்கொடியை உடைய தலைவனே;

திருத்தெங்கூர் வெள்ளிமலை உடையாய் - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற சுவாமியே; (உடையான் - சுவாமி);

அடிதொழுதேன் வல்வினையை ஒழித்து அருளே - உன் திருவடியை வழிபடும் என் வலிய வினைகளை அழித்து அருள்வாயாக;


4)

பன்றியை எய்து விசயற்குப் பாசு பதமளித்தாய்

கொன்றை குரவம் விரவும் சடைமேற் குளிர்மதியாய்

வென்றி விடைக்கொடி நாத திருத்தெங்கூர் வெள்ளிமலை

நின்ற நிமலவென் வாழ்வினில் இன்பம் நிறைத்தருளே.


பன்றியை எய்து விசயற்குப் பாசுபதம் அளித்தாய் - ஒரு பன்றியை அம்பால் எய்து அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தைத் தந்தவனே;

கொன்றை குரவம் விரவும் சடைமேல் குளிர்-மதியாய் - கொன்றைமலரும் குரவமலரும் பொருந்திய சடைமேல் குளிர்ந்த சந்திரனை அணிந்தவனே;

வென்றி-விடைக்கொடி நாத - வெற்றியுடைய இடபக்கொடியை உடைய நாதனே; (வென்றி - வெற்றி);

திருத்தெங்கூர் வெள்ளிமலை நின்ற நிமல - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற தூயவனே;

என் வாழ்வினில் இன்பம் நிறைத்து அருளே - என் வாழ்க்கையில் இன்பத்தை நிரப்பி அருள்வாயாக;


5)

ஆல நிழலில் முனிவர்கள் நால்வர்க் கறமுரைத்தாய்

ஏலக் குழலி மலைமகள் தன்னை இடமகிழ்ந்தாய்

வேலை விடமணி கண்ட திருத்தெங்கூர் வெள்ளிமலை

சூலப் படையுடை யாய்என் வினையைத் துடைத்தருளே.


ஆலநிழலில் முனிவர்கள் நால்வர்க்கு அறம் உரைத்தாய் - கல்லால-மரத்தின்கீழ்ச் சனகாதியர்களுக்கு வேதப்பொருளை உபதேசித்தவனே;

ஏலக்-குழலி மலைமகள் தன்னை இடம் மகிழ்ந்தாய் - வாசக்குழலாள் உமையை இடப்பக்கம் ஒரு பாகமாக விரும்பியவனே;

வேலை-விடமணி கண்ட - கடல்விஷத்தை அணிந்த மணிகண்டனே; (வேலை - கடல்); (விடமணி - 1. விடம் + அணி; 2. விடம் மணி)

திருத்தெங்கூர் வெள்ளிமலை சூலப்படை உடையாய் - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற சூலாயுதபாணியே; (படை - ஆயுதம்);

என் வினையைத் துடைத்து அருளே - என் வினைகளை அழித்து அருள்வாயாக; (துடைத்தல் - அழித்தல்; நீக்குதல்);


6)

உன்பதம் ஏத்திய உம்பர் துயரம் ஒழிந்திடவே

முன்பெயில் மூன்றும் எரிய நகைசெய்த முக்கணனே

மென்சிறை வண்டுகள் ஆர்க்கும் திருத்தெங்கூர் வெள்ளிமலைப்

புன்சடைப் புண்ணிய னேஅடி யேனைப் புரந்தருளே.


உன் பதம் ஏத்திய உம்பர் துயரம் ஒழிந்திடவே - உன் பாதத்தைப் போற்றிய தேவர்களது துன்பம் அழியும்படி;

முன்பு எயில் மூன்றும் எரிய நகைசெய்த முக்கணனே - முன்பு முப்புரங்களும் எரியும்படி சிரித்த நெற்றிக்கண்ணனே; (எயில் - மதில்);

மென்-சிறை வண்டுகள் ஆர்க்கும் திருத்தெங்கூர் வெள்ளிமலைப் - மெல்லிய இறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கும் திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற; (சிறை - இறகு); (சம்பந்தர் தேவாரம் - 2.78.11 - "மென்சிறைவண்டு யாழ்முரல் விளநகர்");

புன்சடைப் புண்ணியனே - செஞ்சடையை உடைய புண்ணிய வடிவினனே;

அடியேனைப் புரந்து அருளே - என்னைக் காத்து அருள்வாயாக; (புரத்தல் - காத்தல்; அனுக்கிரகித்தல்);


7)

மண்புனல் தீவளி விண்ணிவை ஆகி வருபரனே

பண்பயில் இன்மொழிப் பாவை தனையொரு பால்மகிழ்ந்தாய்

வெண்பிறை சூடு விகிர்த திருத்தெங்கூர் வெள்ளிமலைத்

தெண்புனல் வேணிய னேஎன் வினைகளைத் தீர்த்தருளே.


மண் புனல் தீ வளி விண் இவை ஆகி வரு பரனே - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் ஆகி வருகின்ற மேலானவனே;

பண் பயில் இன்மொழிப் பாவைதனை ஒருபால் மகிழ்ந்தாய் - பண் பொருந்திய இனிய மொழி பேசும் உமையை ஒரு பக்கம் பாகமாக விரும்பியவனே;

வெண்பிறை சூடு விகிர்த - வெண்மையான சந்திரனைச் சூடிய விகிர்தனே; (விகிர்தன் - ஈசன் திருநாமங்களுள் ஒன்று);

திருத்தெங்கூர் வெள்ளிமலைத் தெண்-புனல் வேணியனே - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற, தெளிந்த-நீரான கங்கையைச் சடையில் உடையவனே; (வேணி - சடை);

என் வினைகளைத் தீர்த்து அருளே - என் வினைகளை அழித்து அருள்வாயாக;


8)

பாரொடு நீரெரி காற்றுவிண் ஆய பரம்பொருளே

வேரொடு வெற்பிடந் தானை விரலால் விறலழித்தாய்

மேருவில் ஏந்திய வீர திருத்தெங்கூர் வெள்ளிமலைக்

காருறு கண்டத்தி னாயென் வினையைக் கடிந்தருளே.


பாரொடு நீர் எரி காற்று விண் ஆய பரம்பொருளே - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் ஆகி வருகின்ற மேலான பொருளே;

வேரொடு வெற்பு இடந்தானை விரலால் விறல் அழித்தாய் - கயிலைமலையை அடியோடு பெயர்த்த இராவணனை ஒரு விரலை ஊன்றி நசுக்கி அவன் வலிமையை அழித்தவனே; (இடத்தல் - பெயர்த்தல்); (விறல் - வெற்றி; வலிமை); (அப்பர் தேவாரம் - 6.89.10 - "விலங்கல் எடுத்துகந்த வெற்றியானை விறலழித்து");

மேருவில் ஏந்திய வீர - மேருமலையை வில்லாக ஏந்திய வீரனே;

திருத்தெங்கூர் வெள்ளிமலைக் - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற,

கார் உறு கண்டத்தினாய் - நீலகண்டனே; (கார் - கருமை);

என் வினையைக் கடிந்தருளே - என் வினையை அழித்து அருள்வாயாக; (கடிதல் - அழித்தல்);


9)

நற்பது மத்துறை நான்முகன் மாலிவர் நாணநின்றாய்

பற்பல பேர்கள் உடையவ னேபரி பாலகனே

விற்புரு வத்துமை பங்க திருத்தெங்கூர் வெள்ளிமலைக்

கற்பக மேஅடி யேன்வல் வினையைக் கடிந்தருளே.


நல்-பதுமத்து உறை நான்முகன் மால் இவர் நாண நின்றாய் - நல்ல தாமரைமலரில் உறைகின்ற பிரமனும் திருமாலும் அடிமுடி காணாமல் வெட்கி வணங்கும்படி ஜோதியாகி உயர்ந்தவனே;

பற்பல பேர்கள் உடையவனே - எண்ணற்ற திருநாமங்கள் உடையவனே;

பரிபாலகனே - காப்பவனே; (பரிபாலகன் - இரட்சகன்);

வில்-புருவத்து உமை பங்க - வில் போன்ற புருவத்தை உடைய உமையை ஒரு பங்காக உடையவனே;

திருத்தெங்கூர் வெள்ளிமலைக் கற்பகமே - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற கற்பகமே; (கற்பகம் - கற்பகமரம் போல அடியவர் வேண்டியன வழங்குபவன்);

அடியேன் வல் வினையைக் கடிந்து அருளே - என் வலிய வினையை அழித்து அருள்வாயாக; (கடிதல் - அழித்தல்);


10)

நல்லவர் போல நடிப்பவர்க் கென்றும் நலமருளாய்

அல்லினிற் பூதங்கள் பாடிட ஆடும் அதிர்கழலாய்

மெல்லிடை யாளொரு பங்க திருத்தெங்கூர் வெள்ளிமலை

வல்லவ னேஅடி யேன்வல் வினைகளை மாய்த்தருளே.


நல்லவர் போல நடிப்பவர்க்கு என்றும் நலம் அருளாய் - நல்லவர் போல நடிக்கின்ற நயவஞ்சகர்களுக்கு என்றும் அருளாதவனே;

அல்லினில் பூதங்கள் பாடிட ஆடும் அதிர்கழலாய் - இருளில் பூதகணங்கள் பாட ஆடுகின்றவனே, ஒலிக்கின்ற கழலை அணிந்தவனே; (அதிர்தல் - முழங்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.10.4 - "அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை");

மெல்லிடையாள் ஒரு பங்க - சிற்றிடை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே;

திருத்தெங்கூர் வெள்ளிமலை வல்லவனே - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற வல்லவனே;

அடியேன் வல்வினைகளை மாய்த்து அருளே - என் வலிய வினையை அழித்து அருள்வாயாக; (மாய்த்தல் - அழித்தல்);


11)

அஞ்சிய மார்க்கண்டர்க் காகவெங் காலனை அன்றுதைத்தாய்

மஞ்சு தவழ்கயி லாய மலையுறை மன்னவனே

செஞ்சுடர் வண்ணத்துச் செல்வ திருத்தெங்கூர் வெள்ளிமலை

நஞ்சணி மாமிடற் றாயென் வினையை நசித்தருளே.


அஞ்சிய மார்க்கண்டர்க்காக வெங்-காலனை அன்று உதைத்தாய் - (காலனைக் கண்டு) அச்சமுற்ற மார்க்கண்டேயரைக் காப்பதற்காக அன்று கொடிய காலனை உதைத்தவனே;

மஞ்சு தவழ் கயிலாயமலை உறை மன்னவனே - மேகம் தவழும் கயிலைமலையில் உறைகின்ற தலைவனே;

செஞ்சுடர் வண்ணத்துச் செல்வ - செந்தீப் போன்ற செம்மேனி உடைய செல்வனே;

திருத்தெங்கூர் வெள்ளிமலை - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற;

நஞ்சு அணி மா-மிடற்றாய் - விஷத்தை அணிந்த அழகிய கண்டம் உடையவனே;

என் வினையை நசித்து அருளே - என் வினைகளை அழித்து அருள்வாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Thursday, January 18, 2024

07.29 – கச்சி அனேகதங்காவதம் - பண்ணிற் பொலிதமிழ்

07.29 – கச்சி அனேகதங்காவதம்

2016-03-10

கச்சி அனேகதங்காவதம்

--------------------------------

(கட்டளைக் கலித்துறை) (தேவாரத்தில் "திருவிருத்தம்" என்ற அமைப்பு);

(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.94.1 - "ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய் உடன் தோன்றினராய்")


1)

பண்ணிற் பொலிதமிழ் கொண்டடி போற்றிசெய் பத்தரினி

மண்ணிற் பிறவிகள் இன்றி மகிழ வரமருள்வான்

வண்ணக் கடிமலர் வாளி மதனனை மாய்த்தநுதற்

கண்ணன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


பண்ணிற் பொலி தமிழ் கொண்டு அடி போற்றிசெய் பத்தர் - பண் பொருந்திய தேவாரம் பாடித் திருவடியைத் துதிக்கும் பக்தர்கள்;

இனி மண்ணில் பிறவிகள் இன்றி மகிழ வரம் அருள்வான் - மீண்டும் உலகில் பிறவாமல் இன்புறும்படி வரம் அருள்பவன்;

வண்ணக் கடிமலர் வாளி மதனனை மாய்த்த நுதற்கண்ணன் - அழகிய வாசமலர்களை அம்பாக உடைய மன்மதனை அழித்த நெற்றிக்கண்ணன்; (வண்ணம் - அழகு); (கடி - வாசனை); (வாளி - அம்பு); (மதனன் - மன்மதன்); (மாய்த்தல் - கொல்லுதல்; அழித்தல்);

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


2)

ஏலும் வகையினில் தொண்டுசெய் வாரைவிண் ஏற்றுமரன்

ஆல நிழலமர் ஐயன் அடியை அருச்சனைசெய்

பாலனைக் காத்துப் பரிவில் நமனைப் படவுதைத்த

காலன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


ஏலும் வகையினில் தொண்டு செய்வாரை விண் ஏற்றும் அரன் - இயலும் அளவில் திருத்தொண்டு செய்து திருவடியை வழிபடும் பக்தர்களைச் சிவலோகத்திற்கு உயர்த்தும் ஹரன்; (ஏல்தல் - ஏலுதல் - இயலுதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.31.1 - "அடியார்கள் மற்றவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக் கற்றவன்" - அடியவர்களைத் தேவர்கள் வாழும் வானுலகம் ஏற்றலைச் செய்யும் சிவபிரான்);

ஆல நிழலமர் ஐயன் அடியை அருச்சனைசெய் பாலனைக் காத்துப் - கல்லால மரத்தின்கீழ் விரும்பி வீற்றிருக்கும் ஈசன் திருவடியை அருச்சித்த மார்க்கண்டேயரைக் காத்து; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்); (ஐயன் - குரு; தலைவன்);

பரிவு இல் நமனைப் பட உதைத்த காலன் - இரக்கம் இல்லாத காலனை அழியும்படி உதைத்த காலினன், காலகாலன்; (பரிவில் - பரிவு இல் - இரக்கம் இல்லாத); (படுதல் - சாதல்; அழிதல்);

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


==== line-2x) ஆல நிழலில் அமர்ந்த பிரானை அருச்சனைசெய்


3)

மெய்யினில் நீற்றினைப் பூசி உளங்கசி மெய்யடியார்

வெய்ய வினைத்தொடர் வீட்டி அருள்புரி விண்ணவர்கோன்

ஐயன் அருநடம் ஆடிடும் அண்ணல் அழல்திகழும்

கையன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


மெய்யினில் நீற்றினைப் பூசி உளம் கசி மெய்யடியார் - உடம்பில் திருநீற்றைப் பூசி மனம் உருகி வழிபடும் மெய்யன்பர்களுடைய;

வெய்ய வினைத்தொடர் வீட்டி அருள்புரி விண்ணவர்கோன் - கொடிய வினைத்தொடரை அழித்து அருள்கின்றவன், தேவர்கள் பெருமான்; (வெய்ய - கொடிய); (வீட்டுதல் - அழித்தல்; நீக்குதல்);

ஐயன் அரு-நடம் ஆடிடும் அண்ணல் - தலைவன், அரிய திருநடம் ஆடும் கடவுள்;

அழல் திகழும் கையன் - தீயைக் கையில் ஏந்தியவன்; (அழல் - நெருப்பு);

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


4)

கரையும் மனத்தொடு கைதொழும் அன்பரைக் காத்தருள்வான்

திரைமலி கங்கையைச் செஞ்சடை ஏற்ற சிவபெருமான்

வரையை வளைத்துப் புரமெரி மைந்தன் மதியணிந்த

அரையன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


கரையும் மனத்தொடு கைதொழும் அன்பரைக் காத்தருள்வான் - கசிந்து உருகும் மனத்தோடு கைகூப்பி வணங்கும் பக்தர்களைக் காப்பவன்;

திரை மலி கங்கையைச் செஞ்சடை ஏற்ற சிவபெருமான் - அலை மிகுந்த கங்கையைச் செஞ்சடையில் ஏற்ற சிவன்; (திரை - அலை); (மலிதல் - மிகுதல்);

வரையை வளைத்துப் புரம் எரி மைந்தன் - மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களை எரித்த வீரன்; (வரை - மலை); (மைந்தன் - வீரன்);

மதி அணிந்த அரையன் - சந்திரனை அணிந்த அரசன்; (அரையன் - அரசன்);

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


5)

தெண்ட னிடும்அடி யார்பழ வல்வினை தீர்த்தருள்வான்

பண்டு சுரர்கள் கடைந்த கடலில் படுவிடத்தைக்

கண்டு நடுங்கிக் கழல்தொழு தேத்தக் கரந்தருள்செய்

கண்டன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


தெண்டனிடும் அடியார் பழ-வல்வினை தீர்த்து அருள்வான் - வணங்கும் பக்தர்களின் பழைய வலிய வினைகளைத் தீர்ப்பவன்; (தெண்டனிடுதல் - தண்டனிடுதல் - நமஸ்கரித்தல்);

பண்டு, சுரர்கள் கடைந்த கடலில் படுவிடத்தைக் கண்டு நடுங்கிக் - முன்பு, தேவர்கள் அமுது வேண்டிக் கடைந்த பாற்கடலில் தோன்றிய கொடிய நஞ்சைக் கண்டு அஞ்சி; (பண்டு - முற்காலம்); (சுரர் - தேவர்); (படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; சம்பவித்தல்); (படு - கொடிய);

கழல் தொழுது ஏத்தக் கரந்து அருள்செய் கண்டன் - திருவடியை வழிபடவும் அவர்களுக்கு இரங்கி அதனைக் கண்டத்தில் ஒளித்தவன்;

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


6)

நறைமலி பூக்கொடு போற்றடி யார்க்கு நலமருள்வான்

பிறையையும் பாம்பையும் ஒன்றிட வைத்த பெருமையினான்

அறைகழல் வாழ்த்திய அண்டர்க் கிரங்கி அருள்மிடற்றில்

கறையன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


நறை மலி பூக்கொடு போற்று அடியார்க்கு நலம் அருள்வான் - தேன் மிக்க பூக்களால் வழிபடும் பக்தர்களுக்கு நன்மை அருள்பவன்; (நறை - தேன்; வாசனை); (மலிதல் - மிகுதல்);

பிறையையும் பாம்பையும் ஒன்றிட வைத்த பெருமையினான் - திருமுடிமேல் பிறைச்சந்திரனையும் நாகத்தையும் சேர்ந்து வாழ வைத்த பெருமையுடையவன்;

அறை-கழல் வாழ்த்திய அண்டர்க்கு இரங்கி அருள் மிடற்றில் கறையன் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியைத் துதித்த தேவர்களுக்கு இரங்கி அருளிய கண்டத்தில் கறையை உடையவன்;

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


7)

இயலும் வகையில் இணையடி போற்றில் இனிதருள்வான்

கயலை நிகர்த்தகண் ணாளொரு பங்கன் கனவிடையான்

அயிலுடை மூவிலை வேலினன் நால்வர்க் கறமுரைத்த

கயிலைக் கிறையிடம் கச்சி அனேகதங் காவதமே.


இயலும் வகையில் இணையடி போற்றில் இனிது அருள்வான் - இயன்றவாறு இரு திருவடிகளைப் போற்றினால் இனிய அருளைப் பொழிபவன்; (போற்றில் - போற்றினால்);

கயலை நிகர்த்த கண்ணாள் ஒரு பங்கன் - கயல்மீன் போன்ற கண்களை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்;

கனவிடையான் - பெரிய, பெருமை மிக்க இடபத்தை வாகனமாக உடையவன்; (கனம் - பெருமை; பருமன்); (விடை - எருது); (அப்பர் தேவாரம் - 5.3.9 - "காழியானைக் கனவிடை ஊருமெய் வாழியானை");

அயில்உடை மூவிலை வேலினன் - கூர்மையுடைய திரிசூலம் ஏந்தியவன்; (அயில் - கூர்மை); (மூவிலை வேல் - மூன்று இலை போன்ற முனையுடைய வேல் - திரிசூலம்);

நால்வர்க்கு அறம் உரைத்த கயிலைக்கு இறை - (கல்லால மரத்தின்கீழே) சனகாதியர்கள் நால்வருக்கு மறைப்பொருளை விளக்கிய கயிலாயநாதன்;

இடம் கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


8)

பத்திமை கொண்டு பரவிடு பத்தர் பழவினைதீர்

அத்தன் அரையில் அரவினை நாணென ஆர்த்தபிரான்

பத்துத் தலையனை ஓர்விரல் ஊன்றிப் பனிமலைக்கீழ்க்

கத்தவைத் தானிடம் கச்சி அனேகதங் காவதமே.


பத்திமை கொண்டு பரவிடு பத்தர் பழவினை தீர் அத்தன் - பக்தியால் போற்றித் துதிக்கும் பக்தர்களுடைய பழைய வினைகளைத் தீர்க்கும் தந்தை; (பத்திமை - பக்தி; காதல்); (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்); (அப்பர் தேவாரம் - 6.54.3 - "பத்திமையாற் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித்தானை");

அரையில் அரவினை நாண் என ஆர்த்த பிரான் - அரையினில் பாம்பை அரைநாணாகக் கட்டிய தலைவன்; (ஆர்த்தல் - கட்டுதல்); (பிரான் - தலைவன்);

பத்துத் தலையனை ஓர் விரல் ஊன்றிப் பனிமலைக்கீழ்க் கத்தவைத்தான் - பத்துத்தலை உடைய இராவணனை ஒரு விரலை ஊன்றிக் கயிலைமலையின் கீழே நசுக்கி அவனை அலறச்செய்தவன்; (பனிமலை - இங்கே, பனி பொருந்திய கயிலைமலை);

இடம் கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


9)

சமயங்கள் ஆறென நின்றவன் தாளைத் தலைவணங்கித்

தமிழ்மறை பாடும் அடியவர் தம்வினை சாய்த்தருள்வான்

கமலத் தயனரி காணற் கரிய கனலுருக்கொள்

அமலன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


சமயங்கள் ஆறு என நின்றவன் தாளைத் தலைவணங்கித் - (சைவம், சாக்தம், வைஷ்ணவம், கௌமாரம், காணபத்தியம், சௌரம் என்ற) ஷண்மதங்கள் காட்டும் இறைவனான அவன் திருவடியைத் தலையால் வணங்கித்;

தமிழ்மறை பாடும் அடியவர்தம் வினை சாய்த்தருள்வான் - தமிழ்வேதமாகிய திருமுறைகளைப் பாடுகின்ற பக்தர்களுடைய வினைகள் அழிப்பான்; (சாய்த்தல் - அழித்தல்); (பெரிய புராணம் - சம்பந்தர் புராணம் - 12.28.319 - "பன்னு தமிழ்மறை யாம்பதிகம் பாடித்");

கமலத்து அயன் அரி காணற்கு அரிய கனல்-உருக் கொள் அமலன் - தாமரைப்பூமேல் உறையும் பிரமனும் திருமாலும் தேடியும் காண இயலாத அரிய சோதியின் வடிவம் கொண்டவன், தூயவன்;

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


10)

அருத்தம் இலாததைத் தத்துவம் என்னும் அவர்நெறிகள்

வருத்தத்தை மாற்றகில் லாவினை மாய்த்திட வல்லபிரான்

நிருத்தம் பயிலும் நிமலன் சுடலையின் நீறணிந்த

கருத்தன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


அருத்தம் இலாததைத் தத்துவம் என்னும் அவர் நெறிகள் வருத்தத்தை மாற்றகில்லா - பொருளற்ற வார்த்தைகளைத் தத்துவம் என்று பேசும் அவர்கள் சொல்லும் மார்க்கங்கள் துன்பத்தைத் தீர்க்கமாட்டா; (அருத்தம் - அர்த்தம் - பொருள்); (கில்தல் - இயலுதல்);

வினை மாய்த்திட வல்ல பிரான் - பக்தர்களின் வினையை அழிக்கவல்ல தலைவன்;

நிருத்தம் பயிலும் நிமலன் - இடைவிடாது கூத்தாடுகின்ற தூயன்; (நிருத்தம் - ஆடல்); (பயில்தல் - தொடர்ந்து செய்தல்); (நிமலன் - மலங்கள் அற்றவன்); (திருக்கோவையார் - 6.1 - "நிருத்தம் பயின்றவன் சிற்றம்பலத்து");

சுடலையின் நீறு அணிந்த கருத்தன் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய கடவுள்; (சுடலை - சுடுகாடு); (கருத்தன் - கர்த்தா - கடவுள்); (சம்பந்தர் தேவாரம் - 3.16.1 - நிணம்படு சுடலையின் நீறு பூசி);

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


11)

கடகரி தன்னை உரித்தவன் வானவர் கைதொழவும்

கடல்விடம் உண்டருள் கண்டன் நுதலிடைக் கண்ணுடையான்

அடல்விடை ஊர்தியன் ஆறும் பிறையும் அணிந்தசடைக்

கடவுள் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


கடகரி தன்னை உரித்தவன் - மதயானையின் தோலை உரித்தவன்; (கடகரி - மதம் பொழிகின்ற யானை);

வானவர் கைதொழவும் கடல்விடம் உண்டு அருள் கண்டன் - தேவர்கள் இறைஞ்சவும் அவர்களுக்கு இரங்கிக் கடல்விஷத்தை உண்ட நீலகண்டன்;

நுதலிடைக் கண் உடையான் - நெற்றியில் கண் உடையவன்; (நுதல் - நெற்றி);

அடல்விடை ஊர்தியன் - வலிய, வெற்றி உடைய இடபத்தை ஊர்தியாக உடையவன்; (அடல் - வலிமை; வெற்றி);

ஆறும் பிறையும் அணிந்த சடைக் கடவுள் - கங்கையையும் பிறைச்சந்திரனையும் சடையில் அணிந்த கடவுள்;

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


பிற்குறிப்புகள் :

கச்சி அனேகதங்காவதம் - இத்தலம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலிருந்து சுமார் 1000 அடி தூரத்தில், அதே சாலையில் SSKV பள்ளிக்கூடத்தின் பின்னே உள்ளது.


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


Wednesday, January 17, 2024

07.25 – முதுகுன்றம் (விருத்தாசலம்) - பூவடி இட்டுநிதம்

07.25 – முதுகுன்றம் (விருத்தாசலம்)

2016-03-03

முதுகுன்றம் (திருமுதுகுன்றம் - விருத்தாசலம்)

----------------------

(சந்த விருத்தம் - "தானன தானதனா தன தானன தானதனா" - என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.56.1 - "இறையவன் ஈசனெந்தை இமை யோர்தொழு தேத்தநின்ற")


1)

பூவடி இட்டுநிதம் புகழ் மாணி உயிர்த்துணையாய்ச்

சேவடி யால்நமனைச் செறு காவல னேஅருளாய்

சேவமர் சேவகனே சிறு மான்மறிக் கையினனே

மூவரின் முன்னவனே முது குன்றம் அமர்ந்தவனே.


பூ அடி இட்டு, நிதம் புகழ் மாணி உயிர்த்துணை ஆய்ச் - திருவடியில் பூக்களைத் தூவித் தினமும் துதிக்கும் மார்க்கண்டேயரின் உயிருக்குத் துணை ஆகி; (மாணி - அந்தணச் சிறுவன்);

சேவடியால் நமனைச் செறு காவலனே, அருளாய்; - சிவந்த திருவடியால் காலனை அழித்த காவலனே, அருள்வாயாக; (செறுதல் - அழித்தல்); (காவலன் - பாதுகாப்பவன்; அரசன்);

சே அமர் சேவகனே - இடப வாகனம் விரும்பிய வீரனே; (சேவகன் - வீரன்);

சிறு மான்மறிக் கையினனே - சிறிய மான்கன்றைக் கையில் ஏந்தியவனே; (மறி - ஆடு குதிரை மான் முதலியவற்றின் இளமை);

மூவரின் முன்னவனே - மும்மூர்த்திகளுக்கும் முற்பட்டவனே;

முதுகுன்றம் அமர்ந்தவனே - திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


2)

இப்பெரு மண்மிசையோர் இடர் இன்றி மகிழ்ந்திடவே

அப்ப உனைத்தினமும் அடி வாழ்த்தும் எனக்கருளாய்

ஒப்பரு வில்லெனவே உயர் வெற்பை வளைத்தவுணர்

முப்புரம் எய்தவனே முது குன்றம் அமர்ந்தவனே.


இப்-பெரு-மண்மிசை ஓர் இடர் இன்றி மகிழ்ந்திடவே - இந்தப் பெரிய பூமியில் எவ்விதத் துன்பமும் இல்லாமல் நான் இன்புறும்படி;

அப்ப - அப்பனே - தந்தையே;

உனைத் தினமும் அடி வாழ்த்தும் எனக்கு அருளாய் - உன்னைத் தினமும் வணங்கும் எனக்கு அருள்வாயாக;

ஒப்பரு வில்லெனவே உயர் வெற்பை வளைத்து - உயர்ந்த மலையை ஒப்பற்ற வில்லாக வளைத்து;

அவுணர் முப்புரம் எய்தவனே - அசுரர்களது முப்புரங்களைக் கணையால் எய்தவனே;


3)

பன்னிய செந்தமிழால் பர வும்தமி யேற்கருளாய்

சென்னியில் ஊரரவும் திகழ் மாமதி யும்புனைந்தாய்

கன்னலை ஏந்திமலர்க் கணை எய்த அனங்கனைக்காய்

முந்நய னத்திறைவா முது குன்றம் அமர்ந்தவனே.


பன்னிய செந்தமிழால் பரவும் தமியேற்கு அருளாய் - பெரியோர் பாடியருளிய செந்தமிழ்ப் பாக்களால் உன்னைத் துதிக்கும் தமியேனாகிய எனக்கு அருள்வாயாக; (பன்னுதல் - ஆராய்ந்து செய்தல்; பாடுதல்; புகழ்தல்); (தமியேன் - தனித்து இருக்கும் நான்; கதியற்ற நான்);

(அப்பர் தேவாரம் - 6.91.1 - "பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்" - பன்னிய - தொல்லாசிரியர் ஆராய்ந்து சொல்லிய. "செந்தமிழ்" - செவ்விதாகிய திருத்தமான தமிழ்);

சென்னியில் ஊர் அரவும் திகழ் மா மதியும் புனைந்தாய் - திருமுடிமேல் ஊர்கின்ற பாம்பையும் ஒளிவீசும் அழகிய சந்திரனையும் அணிந்தவனே;

கன்னலை ஏந்தி மலர்க்கணை எய்த அனங்கனைக் காய் முந்நயனத்து இறைவா - கரும்பை வில்லாக ஏந்தி மலர் அம்பை ஏவிய மன்மதனை எரித்த முக்கண் இறைவனே; (கன்னல் - கரும்பு); (அனங்கன் - மன்மதன்); (நயனம் - கண்);

முதுகுன்றம் அமர்ந்தவனே - திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


4)

பாடி அடித்தலமே பணி வேன்வினை தீர்த்தருளாய்

வாடிய வெண்டலையில் மட வாரிடும் உண்பலியை

நாடிய சீருடையாய் நக ரும்மலை போற்கரித்தோல்

மூடிய மார்பினனே முது குன்றம் அமர்ந்தவனே.


பாடி அடித்தலமே பணிவேன் வினை தீர்த்தருளாய் - திருப்புகழைப் பாடி உன் திருவடிகளையே வழிபடும் என் வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;

வாடிய வெண் தலையில் மடவார் இடும் உண்பலியை நாடிய சீர் உடையாய் - உலர்ந்த வெண்மையான மண்டையோட்டில் பெண்கள் இடும் பிச்சையை விரும்பிய பெருமை உடையவனே;

நகரும் மலைபோல் கரித்தோல் மூடிய மார்பினனே - நகர்கின்ற மலை போன்ற பெரிய யானையின் தோலை உரித்துப் போர்வையாக அணிந்தவனே;

முதுகுன்றம் அமர்ந்தவனே - திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


5)

கூப்பிய கையுடையேன் குறை தீர அருள்புரியாய்

நாப்பிணை அஞ்செழுத்தை நவில் நாவர சர்க்கருளி

ஆர்ப்புறும் ஆழியிற்கல் அது வேபுணை ஆக்கிடுவாய்

மூப்படை யாதவனே முது குன்றம் அமர்ந்தவனே.


கூப்பிய கை உடையேன் குறை தீர அருள்புரியாய் - உன்னைக் கைகூப்பி வணங்கும் என் குறைகளைத் தீர்த்து அருள்வாயாக;

நாப் பிணை அஞ்செழுத்தை நவில் நாவரசர்க்கு அருளிக் - நாவில் திருவைந்தெழுத்துப் பொருந்திய திருநாவுக்கரசருக்கு அருள்புரிந்து;

ஆர்ப்பு உறும் ஆழியில் கல் அதுவே புணை ஆக்கிடுவாய் - பேரொலி செய்யும் கடலில் அவரைப் பிணித்த கல்லையே அவருக்குத் தெப்பம் ஆக்கியவனே; (ஆர்ப்பு - பேரொலி); (ஆழி - கடல்); (புணை - தெப்பம்; மரக்கலம்);

மூப்பு அடையாதவனே - என்றும் இளமையோடு இருப்பவனே;

முதுகுன்றம் அமர்ந்தவனே - திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


6)

பக்குவம் உற்றுனையே பணி நெஞ்சை அருள்புரியாய்

செக்கர் நிறச்சடைமேல் திகழ் கொன்றை அணிந்தவனே

அக்கணி மார்பினிலே அர வாரமும் ஏற்றவனே

முக்கண னேகவினார் முது குன்றம் அமர்ந்தவனே.


பக்குவம் உற்று உனையே பணி நெஞ்சை அருள்புரியாய் - கனிந்து உன்னையே பணியும் மனத்தை அருள்வாயாக;

செக்கர் நிறச் சடைமேல் திகழ் கொன்றை அணிந்தவனே - செஞ்சடைமேல் விளங்கும் கொன்றைமலரை அணிந்தவனே; (செக்கர் - சிவப்பு);

அக்கு அணி மார்பினிலே அரவு ஆரமும் ஏற்றவனே - எலும்பை அணிந்த மார்பில் பாம்பையும் மாலையாக அணிந்தவனே; (அக்கு - எலும்பு);

முக்கணனே - மூன்று கண்கள் உடையவனே;

கவின் ஆர் முதுகுன்றம் அமர்ந்தவனே - அழகிய திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


7)

ஐம்மலர் வாளிமதன் அழ காருடல் நீறுசெய்தாய்

கொய்ம்மல ரால்தொழுதார் குறை தீர்த்தருள் கின்றவனே

பெய்கழல் ஆர்த்திடவே பெரு நட்டம் இடும்பரனே

மொய்குழல் மங்கைபங்கா முது குன்றம் அமர்ந்தவனே.


* "எனக்கு அருள்புரிக" என்பது முந்தைய பாடல்களிலிருந்து பெறப்படும் குறிப்பு;


ஐம்மலர் வாளி மதன் அழகு ஆர் உடல் நீறு செய்தாய் - ஐந்து மலர்களை அம்பாக உடைய மன்மதனுடைய அழகிய உடலைச் சாம்பல் ஆக்கியவனே; (வாளி - அம்பு); (மதன் - மன்மதன்);

கொய்ம் மலரால் தொழுதார் குறை தீர்த்து அருள்கின்றவனே - கொய்த பூக்களைத் தூவித் தொழும் பக்தர்களது குறைகளைத் தீர்ப்பவனே; (கொய்ம்மலரால் :- இலக்கணக் குறிப்பு: தனிக்குறிலை அடுத்து ய் வரும் சொற்களை அடுத்து மெல்லினத்தில் தொடங்கும் சொல் வரின் அந்த மெல்லினம் மிகும்);

பெய் கழல் ஆர்த்திடவே பெரு நட்டம் இடும் பரனே - காலில் கட்டிய கழல்கள் ஒலிக்கும்படி பெருங்கூத்து இயற்றுகின்ற பரமனே; (பெய்தல் - கட்டுதல்; அணிதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்); (நட்டம் - நடனம்);

மொய் குழல் மங்கை பங்கா - அடர்ந்த கூந்தலை உடைய உமையை ஒரு பங்காக உடையவனே;

முதுகுன்றம் அமர்ந்தவனே - திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


8)

அத்த உனைப்பரவும் அடி யேனிடர் தீர்த்தருளாய்

மத்த மனத்தினனாய் மலை ஆட்டிய வல்லரக்கற்

கத்திட ஊன்றியொரு கதிர் வாளும் அளித்தவனே

முத்தமிழ் நச்சிறையே முது குன்றம் அமர்ந்தவனே.


அத்த உனைப் பரவும் அடியேன் இடர் தீர்த்து அருளாய் - தந்தையே, உன்னைப் போற்றும் என் துன்பத்தைத் தீர்ப்பாயாக; (அத்த - அத்தனே - தந்தையே);

மத்த மனத்தினனாய் மலை ஆட்டிய வல்லரக்கற் கத்திட ஊன்றி - மதம் பிடித்த மனம் உடையவனாகிக் கயிலைமலையை அசைத்த வலிய அரக்கனான இராவணன் கத்தும்படி அம்மலைமேல் ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கி; (மத்தம் - மயக்கம்; மதம்; செருக்கு; பைத்தியம்); ( வல்லரக்கற் கத்திட = வல்லரக்கன் + கத்திட);

ஒரு கதிர் வாளும் அளித்தவனே - பின் அவன் பாடித் தொழவும், அவனுக்கு இரங்கி ஒளிவீசும் ஒரு வாளையும் அருள்புரிந்தவனே; (கதிர் - ஒளி)

முத்தமிழ் நச்சு இறையே - முத்தமிழை விரும்பும் இறைவனே;

முதுகுன்றம் அமர்ந்தவனே - திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


இலக்கணக் குறிப்பு:

வல்லரக்கற் கத்திட ஊன்றி = (வல் அரக்கன் + கத்திட ஊன்றி) = வல்லரக்கன் கத்திட அவனை ஊன்றி நசுக்கி;

இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணைப் பெயர்கள் வரின், பொருள் தெளிவாக வேண்டி வல்லொற்று மிகுவதும், பெயரின் இறுதியிலுள்ள னகர ஒற்று றகர ஒற்றாகத் திரிவதும் உண்டு;

உதாரணம் - சம்பந்தர் தேவாரம் - 1.114.5 - "கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற மறையவன் வளநகர் மாற்பேறே";


9)

வந்த வணம்தமிழால் வழி பாடுசெய் வேற்கருளாய்

முந்தயன் மாலிவர்கள் முடி சேவடி நேடியுனை

வந்தனை செய்திடவே வளர் சோதிய தானவனே

முந்திய முக்கணனே முது குன்றம் அமர்ந்தவனே.


வந்த வணம் தமிழால் வழிபாடு செய்வேற்கு அருளாய் - இயன்ற அளவில் தமிழ் பாடி உன்னை வணங்கும் எனக்கு அருள்வாயாக;

முந்து அயன் மால் இவர்கள் முடி சேவடி நேடி உனை வந்தனை செய்திடவே வளர் சோதியது ஆனவனே - முன்னர்ப் பிரமனும் திருமாலும் உன் திருமுடியையும் திருவடியையும் தேடி உன்னை வணங்குமாறு வளர்ந்த சோதி உருக் கொண்டவனே; (முந்து - முன்பு);

முந்திய முக்கணனே - முதன்மையான நெற்றிக்கண்ணனே; (முந்துதல் - முதன்மையாதல்);

முதுகுன்றம் அமர்ந்தவனே - திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


10)

குற்ற மனக்கயவர் குறி ஒன்றறி யாக்குருடர்

வெற்றுரை விட்டொழிமின் விரை ஆர்பொடி பூசியடி

பற்றிடும் அன்பரவர் பழ வல்வினை தீர்த்தருள்வான்

முற்றும் அறிந்தபிரான் முது குன்றம் அமர்ந்தவனே.


குற்ற மனக் கயவர், குறி ஒன்று அறியாக் குருடர் - குற்றம் பொருந்திய மனம் உடைய கீழோர்கள், குறியை அறியாத குருட்டுத்தன்மை உடையவர்கள்;

வெற்றுரை விட்டு ஒழிமின் - அவர்கள் பேசும் பொருளற்ற வார்த்தைகளை நீங்குங்கள்;

விரை ஆர் பொடி பூசி அடி பற்றிடும் அன்பர்அவர் பழ வல்வினை தீர்த்து அருள்வான் - மணம் பொருந்திய திருநீற்றைப் பூசித் திருவடியைப் பற்றுக்கோடாகப் பற்றிய அன்பர்களுடைய பழைய வலிய வினைகளைத் தீர்ப்பவன்;

முற்றும் அறிந்த பிரான் - எல்லாம் அறிந்த தலைவன்;

முதுகுன்றம் அமர்ந்தவனே - திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


11)

கோத்த தமிழ்த்தொடைகள் கொடு பொன்னடி போற்றிடுவேன்

பூத்திரள் தூவிநிதம் புகழ் பாடிடும் அன்பர்களைக்

காத்தருள் கண்ணுதலே கடல் நஞ்சணி கண்டமிக

மூத்தவ னேகவினார் முது குன்றம் அமர்ந்தவனே.


கோத்த தமிழ்த்தொடைகள் கொடு பொன்னடி போற்றிடுவேன் - தொடுத்த தமிழ்ப்பாமாலைகளால் உன் பொன் போன்ற திருவடியைப் போற்றுவேன்; (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு);

பூத் திரள் தூவி நிதம் புகழ் பாடிடும் அன்பர்களைக் காத்து அருள் கண்ணுதலே - பல பூக்களைத் தூவி நாள்தோறும் உன் புகழ் பாடும் பக்தர்களைக் காக்கும் நெற்றிக்கண்ணனே;

கடல் நஞ்சு அணி கண்ட - கடல்விடத்தை அணிந்த நீலகண்டனே;

மிக மூத்தவனே - மிகவும் தொன்மையானவனே;

கவின் ஆர் முதுகுன்றம் அமர்ந்தவனே - அழகிய திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு :

  • சந்த விருத்தம் - "தானன தானதனா தன தானன தானதனா" என்ற சந்தம்.

  • அடிகளின் முதற்சீர் - "தானன" என்பது "தனதன" என்றும் வரலாம்.

  • "தானன" என்ற சீர் "தான" என்றும் வரலாம். அப்படி அச்சீர் "தான" என்று வரின், அதை அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும் - (தனதனனா / தனாதனனா

  • இரண்டாம் / நாலாம் சீர் - "தானதனா" என்பது "தானதானா" என்றும் வரலாம்.

  • இச்சந்தத்தைத் “தானன தானதனா தனதானன தானதனா” என்று நோக்கில் சந்தக் கலிவிருத்தம் என்று கருதலாம்.

  • இப்பாடல்கள் கட்டளைக் கலித்துறை இலக்கணத்திற்கும் பொருந்தும் - ("தானன தானன தானன தானன தானதனா" என்று நோக்கினால்).


2) சம்பந்தர் தேவாரம் - 3.61.1 -

ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆரழகன்

பாதியொர் மாதினொடும் பயி லும்பர மாபரமன்

போதிய லும்முடிமேற் புன லோடர வம்புனைந்த

வேதியன் மாதிமையால் விரும் பும்மிடம் வெண்டுறையே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------