Wednesday, June 27, 2018

03.06.026 - 03.06.030 - இருவரை - மாவில் - மடக்கு

03.06 – மடக்கு

2007-10-05

3.6.26 - இருவரை - மாவில் - மடக்கு

-------------------------------------------------

இருவரை பேரரக்கன் எய்க்க அடர்த்தாய்

இருவரை ஏற்றாய்என் உள்ளத்(து) இருவரை

மாவில் லெனக்கொண்டு மாற்றார் புரமெரித்தாய்

மாவில் லமைத்தேன் மனத்து.


பதம் பிரித்து:

இரு-வரை பேர் அரக்கன் எய்க்க அடர்த்தாய்!

இருவரை ஏற்றாய்! என் உள்ளத்து இரு; வரை

மா வில் எனக் கொண்டு மாற்றார் புரம் எரித்தாய்!

மா இல் அமைத்தேன் மனத்து!


இரு - 1. பெரிய (இருமை); 2. இரண்டு;

வரை - மலை;

பேர்த்தல் - பெயர்த்தல்;

எய்த்தல் - இளைத்தல்;

அடர்த்தல் - நசுக்குதல்;

ஏற்றல் - சுமத்தல்;

மா - 1. பெரிய; 2. அழகிய; சிறந்த;

மாவில் - 1. மா + வில் (பெரிய வில்) / 2. மா + இல் (அழகிய இல்லம்);

மாற்றார் - பகைவர்;

அடர்த்தாய், ஏற்றாய், எரித்தாய் - இவை, "அடர்த்தவனே", "ஏற்றவனே", "எரித்தவனே" என்ற விளிகள்;

இரு-வரை பேர்- அரக்கன் எய்க்க அடர்த்தாய் - கயிலாய மலையைப் பெயர்த்த இராவணன் வருத்தம் உற, அவனை விரலால் நசுக்கியவனே;

இருவரை ஏற்றாய் - பார்வதி, கங்கை என்ற இருவரைத் தாங்கியவனே;

வரை மா-வில் எனக்கொண்டு மாற்றார் புரம் எரித்தாய் - (மேரு) மலையைப் பெரிய வில்லாகக் கொண்டு பகைவர்களின் முப்புரங்களை எரித்தவனே;

என் உள்ளத்(து) இரு - எனது உள்ளத்தில் உறைவாயாக!

மா-இல் அமைத்தேன் மனத்து - (உனக்கு என்) மனத்தில் சிறந்த இடம் அமைத்தேன்.

---------------------

2007-10-12

3.6.27 - என்பார்க்கும் - கண்மறைக்கும் - மடக்கு

-------------------------------------------------

என்பார்க்கும் ஈசனவன் எங்குளன் காட்டுவாய்

என்பார்க்கும் இங்கே இயம்பலாம் என்பார்க்கும்

கண்மறைக்கும் கட்டிருந்தக் கால்?ஆங்கே ஆணவக்

கண்மறைக்கும் கைதொழார் கண்.


பதம் பிரித்து:

"என்பு ஆர்க்கும் ஈசன் அவன் எங்கு உளன்? காட்டுவாய்!"

என்பார்க்கும் இங்கே இயம்பலாம், "என் பார்க்கும்

கண், மறைக்கும் கட்டு இருந்தக்கால்? ஆங்கே, ஆணவக்

கள் மறைக்கும் கைதொழார் கண்.


என்பு - எலும்பு;

ஆர்த்தல் - அணிதல்;

என் - என்ன;

கண் = விழி; ஞானம்;

கால் - பொழுது;

கண்மறைக்கும் = கள் மறைக்கும்; (கள் - Toddy; மது)

இலக்கணக் குறிப்பு :

(ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம் - 154. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.)


"என்பு ஆர்க்கும் ஈசன் அவன் எங்கு உளன்? காட்டுவாய்!" என்பார்க்கும் இங்கே இயம்பலாம் - "எலும்பை அணியும் ஈசனான சிவபெருமான் எங்கே இருக்கிறான்? எமக்குக் காட்டுவாயாக!" என்று கேட்பவர்க்கும் இங்கே விடை கூறலாம்;

என் பார்க்கும் கண், மறைக்கும் கட்டு இருந்தக்கால்? - கண்ணால் எதனைப் பார்க்க இயலும், அதனை மறைக்கின்ற ஒரு கட்டு இருக்கும்பொழுது?

ஆங்கே, ஆணவக் கள் மறைக்கும் கைதொழார் கண்! - அதுபோல், இறைவனை வணங்காதவரது அகக்கண்ணை (/அறிவை) ஆணவம் என்ற கள்ளானது (அதனால் உண்டாகும் மயக்கத்தினால்) மறைக்கும்.

---------------------

2007-10-13

3.6.28 - திரியும் - நிலைத்துயர் - மடக்கு

-------------------------------------------------

திரியும் மனமே தினமும்சே ஏறித்

திரியும் மகேசன்சீர் செப்பு திரியும்

நிலைத்துயர் நீங்கிடும் நீங்காத அன்பே

நிலைத்துயர் வாழ்வடைவாய் நீ.


திரிதல் - 1. அலைதல்; 2. போதல்; 3. திரும்புதல் (return); / கெடுதல் (perish)

(திருமந்திரம் - முதல் தந்திரம் 5. யாக்கை நிலையாமை: "மன்றத்தே .... சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே" - திரும்பாமலே போய்விட்டான்).

சே - இடபம்; எருது;

சீர் - புகழ்; பெருமை; இயல்பு;

செப்புதல் - சொல்லுதல்;

நிலை - 1. நிலைமை; தன்மை; 2. உறுதி; நிலைத்து இருத்தல்;

நீங்குதல் - பிரிதல்;


திரியும் மனமே - அலைகின்ற (என்) மனமே;

தினமும் - தினந்தோறும்; (தினமும் என்பதை இருபக்கமும் இடைநிலைத் தீவகமாக இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்);

சே ஏறித் திரியும் மகேசன் சீர் செப்பு - இடபத்தின்மேல் ஏறிச் செல்லும் சிவபெருமானது புகழைப் பாடுவாயாக;

திரியும் நிலைத் துயர் நீங்கிடும் - (இவ்வுலகில்) மீண்டும் வரும் (பிறக்கும்) நிலைமை என்ற துயரம் விலகிடும்; (-- அல்லது -- இழிந்து அழியும் நிலைமை என்ற துயரம் விலகிடும்);

நீங்காத அன்பே நிலைத்து உயர் வாழ்வு அடைவாய் நீ - என்றும் மாறாத அன்பே நிலைபெற்றுப், பேரின்ப வாழ்வைப் பெறுவாய் நீ!

---------------------

2007-10-15

3.6.29 - துருத்திக்காற்று - அத்தனையும் - மடக்கு

-------------------------------------------------

துருத்திக்காற் றாக்கும் சுடுகனலை இங்கோ

துருத்திக்காற் றோடஅனல் சூழும் துருத்திக்காற்

றத்தனையும் வீண்என் றறிந்தின்றே நம்மையாற்

றத்தனையும் அம்மையையும் போற்று.


பதம் பிரித்து:

துருத்திக்காற்று ஆக்கும் சுடுகனலை; இங்கோ

துருத்திக்காற்று ஓட, அனல் சூழும்! துருத்திக்கு ஆற்று

அத்தனையும் வீண் என்று அறிந்து, இன்றே நம் ஐயாற்று

அத்தனையும் அம்மையையும் போற்று.


துருத்திக்காற்று - 1. துருத்தி + காற்று / 2. துருத்திக்கு + ஆற்று;

துருத்தி - 1. உலை ஊது கருவி (bellows); 2 & 3. தோற்பை - உடலுக்கு ஆகுபெயர்;

காற்று - 1. வாயு; 2. மூச்சுக்காற்று; சுவாசம்; உயிர்ப்பு;

ஆற்றுதல் - செய்தல்;

ஆக்குதல் - செய்தல்;

கனல் - நெருப்பு;

ஓடுதல் - செல்லுதல்;

அனல் - தீ;

அத்தன் - தந்தை; சிவன்;

அத்தனையும் - 1. அவ்வளவும்; எல்லாமும்; 2. தந்தையாகிய சிவனையும்;

நம்மையாற்று - 1. நம் + ஐயாற்று / 2. நம்மை + ஆற்று;

ஐயாற்று - திருவையாற்றில்;

ஆற்றுதல் - செய்தல்; தாங்குதல்;

அம்மை - தாய்; பார்வதி;


துருத்திக்-காற்று ஆக்கும் சுடு-கனலை - (கொல்லனது) துருத்தியிலிருந்து வரும் காற்றுச், சுடுகின்ற நெருப்பை நன்கு எரியச் செய்யும்;

இங்கோ துருத்திக்-காற்று ஓட, அனல் சூழும் - (ஆனால்), இங்கே, தோற்பை ஆகிய உடலிலுள்ள உயிர்ப்புச் சென்றுவிட, (அதனைச்) சுற்றித் தீ இருக்கும்;

துருத்திக்கு ஆற்று அத்தனையும் வீண் என்று அறிந்து - (எனவே, இந்த) உடலுக்குச் செய்யும் எல்லாம் பயன் அற்றன என்று உணர்ந்து;

இன்றே நம் ஐயாற்று அத்தனையும் அம்மையையும் போற்று - இப்பொழுதே, திருவையாற்றில் எழுந்தருளும் நம் அம்மையப்பனை வணங்குவாயாக! (-- அல்லது -- இப்பொழுதே, நம் அனைவரையும் தாங்கும் அப்பனையும் அன்னையையும் வணங்குவாயாக!)

("மனமே!" என்ற விளி தொக்கு நிற்கின்றது).

---------------------

2007-10-16

3.6.30 - தொடுத்தசரம் - அந்தத்தில் - மடக்கு

-------------------------------------------------

தொடுத்தசரம் ஒன்றால் எயில்மூன்று சுட்டான்,

தொடுத்தசரம் சூடிய தூயன் தொடுத்தசரம்

அந்தத்தில் தன்னுள் அடங்க ஒடுக்குவதும்,

அந்தத்தில் ஆடும் அவன்!


தொடுத்தல் - 1. எய்தல்; 2. பூ முதலியவற்றை இணைத்தல்; 3. உண்டாக்குதல்;

சரம் - 1. அம்பு; 2. மாலை; 3. நடப்பன/அசைவன/இயங்குவன. உயிர்கள்; (அசரம் - நிற்பன; இங்கே தொக்கு நிற்கின்றது).

எயில் - கோட்டை; மதில்;

சூடுதல் - அணிதல்;

அந்தம் - 1. முடிவு; 2. இருட்டு;

ஒடுக்குதல் - லயிக்கச்செய்தல் (to cause to merge one in another);


தொடுத்த சரம் ஒன்றால் எயில் மூன்று சுட்டான் - எய்த ஓர் அம்பினால் முப்புரங்களையும் சுட்டு எரித்தான்;

தொடுத்த சரம் சூடிய தூயன் - தொடுத்த மலர்மாலைகள் அணிந்த புனிதன்;

தொடுத்த சரம் அந்தத்தில் தன்னுள் அடங்க ஒடுக்குவதும் - சிருஷ்டித்த உயிர்கள் முடிவில் தன்னுள்ளே அடங்கும்படி (அவற்றை) ஒடுக்குபவனும்

அந்தத்தில் ஆடும் அவன் - இருட்டில் நடம் ஆடும் அவனே!

("அப்பெருமானை வணங்குவாயாக" என்பது தொக்கு நிற்கின்றது).

---------------

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Thursday, June 21, 2018

03.06.021 - 03.06.025 - அம்மையும் - உண்ணஞ்சால் - மடக்கு

03.06 – மடக்கு

2007-07-19

3.6.21 - அம்மையும் - உண்ணஞ்சால் - மடக்கு

-------------------------------------------------

அம்மையும் அப்பனும் ஆனவன் அன்பர்கட்(கு)

அம்மையும் ஆவான் துணைகண்டத்(து) அம்மையும்

உண்ணஞ்சால் உண்டான(து) ஓயா(து) அடிபோற்றி

உண்ணஞ்சால் உண்டேயிங்(கு) உய்வு!


பதம் பிரித்து:

அம்மையும் அப்பனும் ஆனவன்; அன்பர்கட்கு

அம்மையும் ஆவான் துணை; கண்டத்து அம்-மையும்

உண் நஞ்சால் உண்டானது; ஓயாது அடிபோற்றி

உள் நஞ்சால் உண்டே இங்கு உய்வு!


அம்மை - 1. தாய்; 2. இப்பிறப்பினை அடுத்து வருவது - வருபிறப்பு;

மை - கருநிறம்;

உண்ணஞ்சால் - 1. உண் நஞ்சால்; 2. உள் நஞ்சால்;

உள் - உள்ளம்;

நஞ்சு - 1. விடம்; 2. நைந்து (உருகி); (சம்பந்தர் தேவாரம் - 3.97.5 - "உமைப் பேணிநஞ் சற்றவர் அருவினை இலரே" - நஞ்சு - நைந்து, மனம் குழைந்து. நஞ்சு - போலி)


அம்மையும் அப்பனும் ஆனவன் - அம்மையப்பன்;

அன்பர்கட்கு அம்மையும் ஆவான் துணை - பக்தர்களுக்கு இனி வரும் பிறவியிலும் துணை ஆவான்; (சம்பந்தர் தேவாரம் - 3.22.6 - "அம்மையினும் துணை அஞ்செழுத்துமே");

கண்டத்து அம் மையும் உண் நஞ்சால் உண்டானது - (அவனுடைய) கண்டத்தில் இருக்கும் அந்தக் கருநிறமும் (தேவர்கள் வேண்ட) உண்ட ஆலகால விடத்தால் உண்டானது;

ஓயாது அடி போற்றி உள் நஞ்சால் உண்டே இங்கு உய்வு - சதா அவனது திருவடியைப் போற்றி உள்ளம் உருகினால், உய்வு பெறலாம்.

---------------------

2007-07-24

3.6.22 - கற்பனை - அந்தன் - மடக்கு

-------------------------------------------------

கற்பனை கல்லால்கீழ்க் கற்பிக்கும் முக்கணனைக்

கற்பனை என்றுரைப்பார் காணாரே கற்பனை

அந்தன் எனவாக்கும் ஆணவம்! தாள்தொழ

அந்தன் இடரும்போம் அங்கு.


கற்பனை - 1. போதனை; கல்வி; 2. இல்லாததை இருப்பதாக எண்ணுவது; 3. கற்பன்+

கற்பன் - கல்வியுள்ளவன்;

- இரண்டாம் வேற்றுமை உருபு;

அந்தன் - 1. அறிவில்லாதன்; குருடன்; 2. எமன்;


கற்பனை கல்லால்கீழ்க் கற்பிக்கும் முக்கணனைக் கற்பனை என்று உரைப்பார் காணாரே - சனகாதியருக்கு ஞானத்தைக் கல்லால-மரத்தின்கீழ்ப் போதித்த முக்கண்ணனை இல்லை என்று உரைப்பவர்களால் காண இயலாது.

கற்பனை அந்தன் என ஆக்கும் ஆணவம் - படித்தவனையும் ஆணவம் குருடன் ஆக்கும்;

தாள் தொழ அந்தன் இடரும் போம் அங்கு - ஈசன் திருவடியை வணங்கினால் எமபயமும் நீங்கும்;

---------------------

2007-07-24

3.6.23 - திரையடை - ஒற்றி - மடக்கு

-------------------------------------------------

திரையடை நாள்வரும்ஊர் சேர்ந்தழவுன் ஆட்டத்

திரையடை நாள்வரும்; சிந்தி! திரையடை

ஒற்றி தனில்நெஞ்சே, ஓர்பங்கில் பார்வதி

ஒற்றி உறைஇறையை ஓது!


திரை - 1. தோலின் சுருக்கம்; 2. திரைச்சீலை (curtain); 3. அலை/கடல்;

அடைதல் - எய்துதல்; கிட்டுதல்;

அடைத்தல் - மூடுதல்;

ஒற்றி - 1. திருவொற்றியூர்; 2. ஒற்றி - ஒன்றாகி; ஒன்றுபட்டு;

ஒற்றுதல் - பொருந்துதல்; ஒன்றிற்படும்படி சேர்த்தல்; தழுவுதல்; (அப்பர் தேவாரம் - 5.24.1 - ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை)

ஓதுதல் - பாடுதல்;


திரை அடை நாள் வரும் - தோல்-சுருக்கம் அடையும் காலம் வரும்; (மூப்பு வந்துவிடும்);

ஊர் சேர்ந்து அழ உன் ஆட்டத்-திரை அடை-நாள் வரும் - சுற்றமும் ஊரும் கூடி அழும்படி (இயமன் வரவால் இந்த உலக மேடையில்) உன் ஆட்டம் ஆகித் திரையை மூடும் காலம் வரும்;

சிந்தி நெஞ்சே - மனமே! எண்ணிப் பார்!

திரை அடை- ஒற்றிதனில் ஓர் பங்கில் பார்வதி ஒற்றி உறை இறையை ஓது - கடல்அலை அடைகின்ற திருவொற்றியூரில் ஒரு பங்காக உமையம்மை பொருந்தி இருக்கும் இறைவனைப் பாடு!

---------------------

2007-07-31

3.6.24 - மஞ்சளை - பூசி - மடக்கு

-------------------------------------------------

மஞ்சளை மாகயிலை மன்னனைப் பாடாது

மஞ்சளை மங்கையே! வந்திடுவாய்! மஞ்சளைப்

பூசி மடுவிற் புகுந்தாடிப் பொன்னடியைப்

பூசி! வினைஅற்றுப் போம்.


மஞ்சு - 1. மேகம்; 2. கட்டில்;

அளைதல் - தழுவுதல்; கலத்தல்; துழாவுதல்;

மா - அழகிய; சிறந்த; பெருமை;

பூசுதல் - தடவுதல்;

மடு - நீர்நிலை;

ஆடுதல் - குளித்தல்;

பூசித்தல் - பூசை செய்தல்;


(குறிப்பு: திருவெம்பாவையை ஒட்டிய கருத்து).

மஞ்சு அளை மா கயிலை மன்னனைப் பாடாது மஞ்சு அளை மங்கையே! - மேகம் தழுவும் அழகிய கயிலை மலையில் உறையும் அரசனாகிய சிவபெருமானைப் பாடாமல், கட்டிலைத் தழுவும் (உறங்கும்) பெண்ணே!

மஞ்சளைப் பூசி மடுவில் புகுந்(து) ஆடிப் பொன் அடியைப் பூசி! - மஞ்சளை (உடலில்) பூசி, நீர்நிலையில் குளித்து, (அவனுடைய) பொன் போன்ற திருவடிகளைப் பூசை செய்! (அப்படிச் செய்தால்) வினைகள் அழிந்து போகும்.

---------------------

2007-09-29

3.6.25 - விண்டு - மதுவார் - மடக்கு

-------------------------------------------------

விண்டு தொழநீள் வியன்தழலைப் போற்றவினை

விண்டு விடும்நெஞ்சே மென்மலர்கள் விண்டு

மதுவார் சிறைவண்டு வந்தறையும் தில்லை

மதுவார் சடையன்தாள் வாழ்த்து.


பதம் பிரித்து:

விண்டு தொழ நீள் வியன் தழலைப் போற்ற வினை

விண்டு விடும்! நெஞ்சே! மென் மலர்கள் விண்டு,

மது ஆர் சிறை வண்டு வந்து அறையும் தில்லை

மது, வார் சடையன் தாள் வாழ்த்து.


விண்டு - 1. திருமால்; 2. நீங்கி; 3. மலர்ந்து;

விள்ளுதல் - நீங்குதல்; மலர்தல்; சொல்லுதல்;

மதுவார் - 1. மது + ஆர்; 2. மது + வார்;

மது - 1. தேன்; 2. அமுதம்;

ஆர்தல் - 1. உண்ணுதல்; நிறைதல்; பொருந்துதல்; அணிதல்;

வார்தல் - 1. நெடுமையாதல்; 2. ஒழுகுதல்/சொரிதல்;

சிறை - இறகு;

தில்லை மது - தில்லையில் உள்ள அமுதம்/தேன் - கூத்தப்பிரான். (அப்பர் தேவாரம் - திருமுறை 4.39.1 - "திருவையாறு அமர்ந்த தேனே");

வார் சடை - நீண்ட சடை;

மது ஆர் சடை - தேன் (மலர்கள்) பொருந்திய சடை;

மது வார் சடை - (அப்பர் தேவாரம் 5.85.1 - "மட்டுவார் குழலாள்");

தில்லை மதுவார் சடையன் - தில்லை மது, வார் சடையன் / தில்லை மது ஆர் சடையன்;


விண்டு தொழ நீள் வியன் தழலைப் போற்ற - விஷ்ணு (அடி தேடிக் காணாது) வணங்குமாறு ஓங்கிய பெரிய சோதியைத் துதித்தால்;

வினை விண்டு விடும் - வினை நீங்கிவிடும்;

நெஞ்சே - (அதனால்) மனமே!

மென் மலர்கள் விண்டு - மென்மையான மலர்கள் மலர்ந்து;

மது ஆர் சிறை வண்டு வந்து அறையும் - தேன் உண்ணும், சிறகுகளை உடைய வண்டுகள் வந்து ரீங்காரம் செய்யும்;

தில்லை மது வார் சடையன் தாள் வாழ்த்து - தில்லையில் உறையும் தேன்/அமுதம் ஆன, நீண்ட சடையை உடைய, சிவன் திருவடியை வணங்கு; (--அல்லது-- தில்லையில் உறையும், இன்பத் தேன் சொரியும், சடை உடைய சிவன் திருவடியை வணங்கு) (--அல்லது-- தில்லையில் உறையும், தேன் பொருந்திய மலர்களை அணிந்த சடை உடைய சிவன் திருவடியை வணங்கு);

(பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - திருமுறை 12.242: - "மன்றுள் ஆடு மதுவின் நசையாலே மறைச்சுரும்பு அறை புறத்தின் மருங்கே");

---------------

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Thursday, June 14, 2018

03.04.068 - சிவன் - சாம்பார் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2007-06-06

3.4.68 - சிவன் - சாம்பார் - சிலேடை

-------------------------------------------------------------

தண்ணீரை ஏற்கும் சமயத்தில் தானேயாம்

கண்ணீர் மிகுமாகா ரங்காட்டும் மண்ணோர்க்கு

செம்பொருள் ஆகநெருப் பேறுமுகக் கும்சாம்பார்

உம்பர் பிரானென் றுரை.


சொற்பொருள்:

ஏற்றல் - 1. ஏற்றுக்கொள்ளுதல்; பெறுதல்; / 2. சுமத்தல்;

சமயத்தில் - 1. சில சமயத்தில்; / 2. சைவ சமயத்தில்; ஊழிக்காலத்தில்;

தானே ஆம் - 1. சாம்பாரில் இருக்கும் காய்கறித் துண்டமே மிகும்; / 2. அவன் மட்டுமே ஆவான்;

மிகுமாகாரம் - 1. மிகுமா காரம் = மிகுமாறு காரம்; / 2. மிகும் ஆகாரம்;

ஆகாரம் - 1. உணவு; / 2. உருவம்;

மண்ணோர் - மனிதர்கள்;

செம்பொருள் - செம்மை + பொருள் - 1. சிவந்த வஸ்து; சிறந்த வஸ்து; / 2. கடவுள்; மெய்ப்பொருள்;

ஆகநெருப்பேறுமுகக்கும் -1. ஆக நெருப்பு ஏறும், முகக்கும் / 2. ஆகம் நெருப்பு, ஏறும் உகக்கும்

ஏறு - 1. மேலே ஏறுதல்; ஏற்றிவைக்கப்படுதல்; / 2. எருது;

முகத்தல் - 1. மொள்ளுதல் ; / 2. விரும்புதல்;

உகத்தல் - விரும்புதல்; மகிழ்தல்;

உம்பர் - தேவர்கள்;


சாம்பார்:

தண்ணீரை ஏற்கும் - தண்ணிரை ஏற்றுக்கொள்ளும்,

சமயத்தில் தானே ஆம் - சில சமயத்தில் மிகவும் தான்களே இருக்கும்.

மண்ணோர்க்கு கண்ணீர் மிகுமா காரம் காட்டும் - (சில சமயம்) மனிதர்களுக்குக் கண்ணீர் பெருகும்படி காரத்தைக் கொண்டிருக்கும்;

செம் பொருள் - சிவந்த வஸ்து;

ஆக நெருப்பு ஏறும் - சாம்பார் செய்வதற்காக நெருப்பின் மேல் ஏற்றிவைக்கப்படும்.

முகக்கும் சாம்பார் - (கரண்டியால்) மொள்ளப்படும் சாம்பார்;


சிவன்:

தண்ணீரை ஏற்கும் - கங்கையைத் தாங்குவான்,

சமயத்தில் தானே ஆம் - ஊழிக்காலத்தில் தான் தனியாக இருப்பான்,

ஆகாரம் காட்டும் மண்ணோர்க்குக் கண்ணீர் மிகும் - தன் உருவத்தைக் காட்டும்பொழுது (காட்சி கொடுக்கும்பொழுது) மனிதர்களுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகும்;

செம்பொருள் - கடவுள்; மெய்ப்பொருள்;

ஆகம் நெருப்பு - தீப் போன்ற மேனியன் (அழல்மேனியன் , தீவண்ணன்); சோதி வடிவன்;

ஏறும் உகக்கும் - இடபத்தை ஊர்தியாக விரும்புபவன்;

உம்பர் பிரான் - தேவர்கள் தலைவனான சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.067 - சிவன் - இட்டலி - சிலேடை

 03.04 – சிவன் சிலேடைகள்

2007-06-05

3.4.67 - சிவன் - இட்டலி - சிலேடை

-------------------------------------------------------------

பொடியோடும் சேருமே பொங்குமா மேலும்

வடிவாகும் ஒத்திருக்கும் பூவை அடிமேலே

ஆகுமே ஆவியுள் நிற்குமே இட்டலி

ஆகுலம்தீர் ஈசன் அறி.


சொற்பொருள்:

பொடி - 1. மிளகாய்ப் பொடி; / 2. சாம்பல்; திருநீறு;

ஓடு - 1. உடன்; / 2. மண்டை ஓடு;

பொங்குதல் - 1. மாவு பொங்கி எழுதல்; / 2. சினத்தல்;

மா - 1. மாவு; / 2. விலங்கு - இங்கே எருது;

மேலும் - 1. இன்னும்; / 2. மேலேயும்;

வடிவு - 1. அழகு; / 2. உருவம்;

ஒத்திருத்தல் - 1. போல இருக்கும்; / 2. இசைந்து இருக்கும்;

பூவை - 1. (மல்லிகைப்) பூவை; / 2. பெண் (பார்வதி);

அடி மேலே - 1. தலைகீழே; / 2. திருவடி மேன்மையே; (மேல் - மேலிடம்; மேன்மை);

ஆவி - 1. நீராவி; / 2. ஆன்மா; உயிர்;

ஆகுலம் - மனக்கலக்கம்; துயரம்;


இட்டலி:

பொடியோடும் சேருமே - (சாம்பார், சட்டினி இவை மட்டுமன்றி) மிளகாய்ப்பொடியோடும் சேரும்.

பொங்கு-மா மேலும் வடிவு ஆகும் - பொங்கிய மாவு இன்னும் அழகாகும்.

ஒத்திருக்கும் பூவை - மல்லிகைப் பூவைப் போல் இருக்கும்.

அடி மேலே ஆகுமே - வேகும்போது (உண்ணும் இலையில் இடும்போது இருப்பது போல அன்றித்) தலைகீழாக இருக்கும். (இட்டலித் தட்டில் வேகும்போது இருக்கும் நிலையும் (உருண்டையான பாகம் கீழே) அதனை எடுத்து இலையில் இலையில் இடும்போது இட்டலி இருக்கும் நிலையும் (உருண்டையான பாகம் மேலே) தலைகீழாக இருக்கும்).

ஆவியுள் நிற்குமே - நீராவியுள் இருக்கும்.

இட்டலி - இட்லி;


சிவன்:

பொடி ஓடும் சேருமே - திருநீறும் மண்டையோடும் சேரும்.

பொங்கு-மா மேலும் வடிவு ஆகும் - சினக்கும் இடபத்தின் மேலும் தோன்றும் வடிவம் ஆகும்.

ஒத்து இருக்கும் பூவை - பார்வதி பிரியாமல் சேர்ந்திருப்பாள்.

அடி மேலே ஆகுமே - திருவடி மேன்மையுடையதே ஆகும்.

ஆவியுள் நிற்குமே - ஆன்மாவினுள் கலந்து இருப்பான்.

ஆகுலம் தீர் ஈசன் - துயர் தீர்க்கும் ஈசன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.066 - சிவன் - மஞ்சள் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2007-05-27

3.4.66 - சிவன் - மஞ்சள் - சிலேடை

-------------------------------------------------------------

உண்ணும் உணவிலும் உள்ள ஒருபொருள்

வண்ண மிகவுடைய வான்பொருள் மண்ணை

அகழவைக்கும் அங்குமை யென்றும் பெயரா *

நிகரில் சிவன்மஞ்சள் நேர்.


சொற்பொருள்:

ஒரு - 1. ஒரு; / 2. ஒப்பற்ற; விசேஷமான;

பொருள் - 1. வஸ்து; / 2. (மெய்ப்பொருள்) கடவுள்;

வண்ணம் - 1. நிறம்; / 2. அழகு; குணம்;

வான் - 1. நன்மை; பெருமை; / 2. ஆகாயம்; தேவர் உலகம்;

அங்கு - 1. ஓர் அசைச்சொல்; / 2. அந்த இடத்தில்

* உமையென்றும்பெயராநிகரில் - 1. உமை என்றும் பெயர் ஆம்; நிகர் இல் / 2. உமை என்றும் பெயரா, நிகர் இல்

(இலக்கணக் குறிப்பு: தனிக்குறிலைச் சாராத மகரமெய் ஈற்றில் இருக்கும் சொல்லை அடுத்த சொல் மெல்லினத்தில் தொடங்கினால் முதற்சொல்லின் ஈற்றில் இருக்கும் மகரமெய் கெடும்).

உமை - 1. மஞ்சள்; / 2. உமாதேவி;

என்றும் - 1. எனவும்; / 2. எப்பொழுதும்

பெயரா - பெயராத - நீங்காத; (பெயர்தல் - பிரிதல்; விலகுதல்);

நிகர் - ஒப்பு; சமம்;

நேர் - ஒப்பு; சமம்;


மஞ்சள்:

உண்ணும் உணவிலும் உள்ள ஒரு பொருள் - நாம் சாப்பிடும் உணவிலும் இருக்கும் ஒரு வஸ்து.

வண்ணம் மிக உடைய வான் பொருள் - மிகவும் நிறம் உடைய சிறந்த பொருள்.

மண்ணை அகழ வைக்கும் அங்கு - (பூமிக்கு அடியில் விளைவதால்) நிலத்தை அகழந்து எடுக்க வைக்கும்.

உமை என்றும் பெயர் ஆம் - அதற்கு "உமை" என்றும் ஒரு பெயர் உண்டு.

மஞ்சள்.


சிவன்:

உண்ணும் உணவிலும் உள்ள ஒரு பொருள் - (எல்லாவற்றிலும் கலந்து இருப்பதால்) நாம் உண்ணும் உணவிலும் கலந்து இருப்பவன், ஒப்பற்ற மெய்ப்பொருள்.

வண்ணம் மிக உடைய வான் பொருள் - எல்லாக் குணங்களும் வடிவங்களும் உடையவன், மேலுலகில் உள்ளவன்.

மண்ணை அகழ வைக்கும் அங்கு - திருமாலை நிலத்தை அகழ்ந்து தேட வைத்தவன்.

உமை என்றும் பெயரா - உமாதேவி என்றும் பிரியாத ( = இணைந்து இருக்கின்ற);

நிகர் இல் சிவன் - ஒப்பு இல்லாத சிவன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------