Showing posts with label கலிவிருத்தம். Show all posts
Showing posts with label கலிவிருத்தம். Show all posts

Sunday, August 31, 2025

P.444 - அண்ணாமலை (திருவண்ணாமலை) - சுகத்தைத் தருவோனே

2018-08-16

P.444 - அண்ணாமலை (திருவண்ணாமலை)

-------------------------------

(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")


1)

சுகத்தைத் தருவோனே சூலப் படையானே

பகைத்த புர(ம்)மூன்றும் படர்தீப் படுமாறு

நகைத்த முக்கண்ணா நாளும் உனையெண்ணும்

அகத்தை அருளாயே அண்ணா மலையானே.


சுகத்தைத் தருவோனே - சங்கரனே;

சூலப்-படையானே - சூலபாணியே;

பகைத்த புர(ம்)மூன்றும் படர்-தீப் படுமாறு நகைத்த முக்கண்ணா - தேவர்களைப் பகைத்த முப்புரங்களும் படரும் தீயில் புக்கு அழியும்படி சிரித்த முக்கண்ணனே; (படுதல் - அழிதல்);

நாளும் உனை எண்ணும் அகத்தை அருளாயே - என்றும் உன்னை நினைகின்ற நெஞ்சை எனக்கு அருள்வாயாக;

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


2)

மறியொண் மழுவேந்தீ மழவெள் விடையேறீ

பொறிகொள் அரவூரும் பொன்னார் சடைமீது

வெறிகொள் மலர்சூடீ விரும்பி உனையோதும்

அறிவை அருளாயே அண்ணா மலையானே.


மறி, ஒண் மழு ஏந்தீ - மான்கன்றையும் ஒளி திகழும் மழுவையும் ஏந்தியவனே;

மழ வெள் விடை ஏறீ - இள வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனே;

பொறிகொள் அரவு ஊரும் பொன் ஆர் சடைமீது வெறிகொள் மலர் சூடீ - புள்ளிகள் திகழும் பாம்பு ஊரும் பொற்சடைமேல் மணம் கமழும் மலர்களை அணிந்தவனே; (பொறி - புள்ளி); (ஆர்தல் - ஒத்தல்); (வெறி - மணம்);

விரும்பி உனை ஓதும் அறிவை அருளாயே - அன்போடு உன்னைப் போற்றும் அறிவை எனக்கு அருள்வாயாக;

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


3)

என்பும் புனைகின்ற இறைவா எருதேறீ

துன்பம் தருகின்ற தொல்லை வினைநீக்கி

இன்பம் தரவல்ல எந்தாய் உனையேத்தும்

அன்பை அருளாயே அண்ணா மலையானே.


என்பும் புனைகின்ற இறைவா - எலும்பையும் அணிகின்ற இறைவனே; (என்பு - எலும்பு); (உம் - 1. இழிவுசிறப்பும்மை; எச்சவும்மை);

எருது-ஏறீ - இடபவாகனனே;

துன்பம் தருகின்ற தொல்லை-வினை நீக்கி - துன்பம் தருகின்ற பழைய வினைகளை அழித்து; (தொல்லை - பழைய);

இன்பம் தர-வல்ல எந்தாய் - இன்பம் தருகின்ற எந்தையே;

உனை ஏத்தும் அன்பை அருளாயே - உன்னைப் போற்றி வணங்கும் அன்பை எனக்கு அருள்வாயாக;

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


4)

நாலு மறையோதும் நாவா இலையாரும்

வேலும் மழுவாளும் ஏந்தும் பெருமானே

ஏலும் வகையுன்னை ஏத்தும் மதிநல்காய்

ஆலும் மயிலாரும் அண்ணா மலையானே.


நாலு மறை ஓதும் நாவா - நான்கு வேதங்களைத் திருநாவால் பாடியருளியவனே;

இலை ஆரும் வேலும் மழுவாளும் ஏந்தும் பெருமானே - மூவிலைவேலையும் (= திரிசூலத்தையும்), மழுவையும் ஏந்தும் பெருமானே; (ஆர்தல் - நிறைதல்);

ஏலும் வகை உன்னை ஏத்தும் மதி நல்காய் - இயன்ற வகையில் உன்னைத் தொழுகின்ற அறிவை எனக்கு அருள்வாயாக;

ஆலும் மயில் ஆரும் அண்ணாமலையானே - ஆடும் மயில்கள் பொருந்தும் திருவண்ணாமலையில் உறைகின்ற ஈசனே; (ஆலுதல் - ஆடுதல்); (திருவண்ணாமலையில் ரமணாசிரமம் முதலிய இடங்களில் மயில்கள் உலவுவதைக் காணலாம்);


5)

வஞ்சி இடைமாதை வாமம் மகிழ்வோனே

மஞ்சின் நிறமேறும் மணிபோல் முனமுண்ட

நஞ்சை அணிகண்டா நமனை உதைபாதா

அஞ்சல் அருளாயே அண்ணா மலையானே.


வஞ்சி-இடை மாதை வாமம் மகிழ்வோனே - வஞ்சிக்கொடி போன்ற சிற்றிடையை உடைய உமையை இடப்பாகமாக விரும்பியவனே; (வஞ்சி - வஞ்சிக்கொடி); (வாமம் - இடப்பக்கம்);

மஞ்சின் நிறம் ஏறும் மணி போல், முனம் உண்ட நஞ்சை அணி கண்டா - முன்பு உண்ட விஷத்தை மேகம் போல் நிறம் திகழும் மணியாகக் கண்டத்தில் அணிந்தவனே; (மஞ்சு - மேகம்);

நமனை உதை-பாதா - காலனைத் திருவடியால் உதைத்தவனே;

அஞ்சல் அருளாயே - அஞ்சல் அளித்து என்னைக் காப்பாயாக;

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


6)

கூறும் அடியார்தம் குறைகள் களைவோனே

சீறும் இளநாகம் சேரும் முடிதன்மேல்

ஆறும் அணிவோனே அடியேற் கருளாயே

ஆறு முகனத்தா அண்ணா மலையானே.


கூறும் அடியார்தம் குறைகள் களைவோனே - புகழ்பாடும் பக்தர்களது குறைகளைத் தீர்ப்பவனே;

சீறும் இள-நாகம் சேரும் முடிதன்மேல் ஆறும் அணிவோனே - சீறும் இளம்-பாம்பு திகழும் சென்னிமேல் கங்கையையும் அணிந்தவனே;

அடியேற்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக;

ஆறுமுகன் அத்தா - முருகனுக்கு அப்பனே; (அத்தன் - அப்பன்);

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


7)

காடும் இடமாகக் கருதி நடமாடி

ஓடும் கலனாக ஊரூர் உழல்வோனே

பாடும் அடியேனைப் பாலித் தருளாயே

ஆடும் மயிலாரும் அண்ணா மலையானே.


காடும் இடமாகக் கருதி நடம் ஆடி - சுடுகாட்டையும் நல்ல அரங்கம் என்று விரும்பித் திருநடம் செய்து;

ஓடும் கலனாக ஊர்ஊர் உழல்வோனே - பிரமனது மண்டையோடும் உண்கலன் என்று கொண்டு பல ஊர்களில் பிச்சைக்குத் திரிபவனே;

பாடும் அடியேனைப் பாலித்து அருளாயே - உன் புகழைப் பாடும் என்னைக் காத்து அருள்வாயாக;

ஆடும் மயில் ஆரும் அண்ணாமலையானே - ஆடும் மயில்கள் பொருந்தும் திருவண்ணாமலையில் உறைகின்ற ஈசனே; (ஆர்தல் - பொருந்துதல்); (திருவண்ணாமலையில் ரமணாசிரமம் முதலிய இடங்களில் மயில்கள் உலவுவதைக் காணலாம்);


8)

மலையைப் பெயர்மூடன் வாட விரல்வைத்தாய்

சிலையை வளைவித்துச் சேரார் புரமெய்தாய்

தலைமேல் பிறையானே தமியேற் கருளாயே

அலைபோல் அடியார்சேர் அண்ணா மலையானே;


மலையைப் பெயர் மூடன் வாட விரல் வைத்தாய் - கயிலைமலையைப் பெயர்த்த அறிவற்ற இராவணன் வாடும்படி திருவடி-விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவனே;

சிலையை வளைவித்துச் சேரார் புரம் எய்தாய் - மேருமலையை வில்லாக வளைத்து, அந்த வில்லை வளைத்துப் பகைவர்களது முப்புரங்களை எய்தவனே; (சிலை - மலை; வில்); (சேரார் - பகைவர்); (அப்பர் தேவாரம் - 6.47.4 - "திரிபுரங்கள் தீயில் வேவச் சிலை வளைவித்து");

தலைமேல் பிறையானே - சந்திரசேகரனே;

தமியேற்கு அருளாயே - தனித்து வாடும் அடியேனுக்கு அருள்வாயாக;

அலைபோல் அடியார் சேர் அண்ணாமலையானே - பக்தர்கள் கடல்போல் திரள்கின்ற திருவண்ணாமலையில் உறைகின்ற ஈசனே;


9)

மயலார் அயன்மாலார் வாட வளர்சோதீ

புயல்போல் நிறமாரும் பொருவில் மணிகண்டா

மயிலார் உமைகேள்வா வலிய வினைதீராய்

அயில்மூ விலைவேலா அண்ணா மலையானே;


மயல் ஆர் அயன் மாலார் வாட வளர் சோதீ - ஆணவம் மிகுந்த பிரமனும் திருமாலும் (அடிமுடி தேடிக் காணாராய்) வாடும்படி எல்லையின்றி வளர்ந்த ஜோதியே; (ஆர்தல் - மிகுதல்; பொருந்துதல்);

புயல் போல் நிறம் ஆரும் பொருவில் மணிகண்டா - மேகம் போன்ற நிறம் பொருந்திய ஒப்பற்ற நீலமணி திகழும் கண்டத்தை உடையவனே; (பொருவில் - பொரு இல் - ஒப்பு இல்லாத);

மயில் ஆர் உமை கேள்வா - மயில் போன்ற சாயலை உடைய உமைக்குக் கணவனே; (ஆர்தல் - ஒத்தல்);

வலிய வினை தீராய் - என் வலிய வினையைத் தீர்த்து அருள்வாயாக;

அயில்-மூவிலைவேலா - கூர்மையான திரிசூலத்தை ஏந்தியவனே;

அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;


10)

பண்டை நெறிதன்னைப் பழித்துப் பலபொய்சொல்

மிண்டர் தமைநீங்கும் விரும்பு வரமெல்லாம்

தொண்டர்க் கருள்செய்யும் துணைவன் சுடுநீற்றன்

அண்டர் தொழுதேத்தும் அண்ணா மலையானே;


பண்டை நெறிதன்னைப் பழித்துப் பல பொய் சொல் மிண்டர்தமை நீங்கும் - தொன்மையான வேதநெறியைப் பழித்துத் தினமும் பல பொய்களைச் சொல்லும் கல்நெஞ்சர்களை நீங்குங்கள்; (மிண்டர் - கல்நெஞ்சர்);

விரும்பு வரம்-எல்லாம் தொண்டர்க்கு அருள்செய்யும் துணைவன் - வேண்டிய வரங்களையெல்லாம் பக்தர்களுக்குத் தந்தருளும் துணைவன்;

சுடு-நீற்றன் - வெந்த வெண்ணீற்றைப் பூசியவன்;

அண்டர் தொழுது ஏத்தும் அண்ணாமலையானே - தேவர்களால் வழிபடப்பெறும் திருவண்ணாமலை ஈசன்;


11)

பூதி புனைமேனிப் பூத கணநாதன்

ஓதித் தொழுவார்வான் உறையத் தருவள்ளல்

நீதி வடிவானான் நெய்பால் தயிராடி

ஆதி அழிவில்லா அண்ணா மலையானே.


பூதி புனை-மேனிப் பூதகணநாதன் - திருநீற்றைத் திருமேனிமேல் பூசிய, பூதகணத்தலைவன்; (பூதி - திருநீறு);

ஓதித் தொழுவார் வான் உறையத் தரு-வள்ளல் - துதித்து வணங்கும் பக்தர்களுக்குச் சிவலோக வாழ்வைத் தரும் வள்ளல்;

நீதி வடிவு ஆனான் - அறவடிவினன்;

நெய் பால் தயிர் ஆடி - நெய், பால், தயிர் இவற்றால் அபிஷேகம் பெறுபவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.61.2 - "பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன்");

ஆதி அழிவு இல்லா அண்ணாமலையானே - ஆதியும் அந்தமும் இல்லாத இல்லாத திருவண்ணாமலை ஈசன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.441 - அறையணிநல்லூர் - கண்ணமர் நுதல்காட்டி

2018-07-21

P.441 - அறையணிநல்லூர்

(அரகண்டநல்லூர். இத்தலம் திருக்கோவலூர் அருகுள்ளது)

-------------------------------

(கலிவிருத்தம் - தானன தனதான தானன தனதான)

(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடியுடை மழுவேந்தி")


1)

கண்ணமர் நுதல்காட்டி கானமர் பரமேட்டி

பெண்ணையின் வடபாலோர் பெண்ணை இடங்காட்டும்

அண்ணலின் இடமான அறையணி நல்லூரை

நண்ணிய அடியாரை நலிவினை நணுகாவே.


கண் அமர் நுதல் காட்டி - நெற்றிக்கண்ணன்; (காட்டி - காட்டுபவன்);

கான் அமர் பரமேட்டி - சுடுகாட்டை விரும்புகின்ற பரமன்; (பரமேட்டி - பரமேஷ்டி - பரம்பொருள்);

பெண்ணையின் வடபால் ஓர் பெண்ணை இடம் காட்டும் - பெண்ணையாற்றின் வடக்கே, உமையைத் தன் திருமேனியின் இடப்பாகமாகக் காட்டுகின்ற;

அண்ணலின் இடம் ஆன அறையணிநல்லூரை - சிவபெருமான் உறையும் தலமான அறையணிநல்லூரை;

நண்ணிய அடியாரை நலி-வினை நணுகாவே - அடைந்த அடியவர்களைத் துன்பத்தைத் தரும் தீவினை அணுகமாட்டா; (நலிதல் / நலித்தல் - வருத்துதல்); (நலிவினை - நலிக்கின்ற வினை);


2)

கறையணி மிடறானைக் கமழ்சடை அதன்மீது

பிறையணி பெருமானைப் பெண்ணையின் வடபால்தென்

அறையணி நல்லூரில் அடிகளின் அடிவாழ்த்தி

நறையணி தமிழ்பாட நலிவினை நணுகாவே.


கறை அணி மிடறானைக் - நீலகண்டனை; (மிடறு - கண்டம்);

கமழ்-சடை அதன்மீது பிறை அணி பெருமானைப் - மணம் கமழும் சடைமேல் சந்திரனை அணிந்த பெருமானை;

பெண்ணையின் வடபால் தென் அறையணிநல்லூரில் அடிகளின் அடி வாழ்த்தி - பெண்ணையாற்றின் வடகரையில் இருக்கும் அழகிய அறையணிநல்லூரில் உறைகின்ற கடவுளின் திருவடியைப் போற்றி; (தென் - அழகிய);

நறை அணி தமிழ் பாட நலி-வினை நணுகாவே - மணம் கமழும் தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வழிபாடு செய்தால், துன்பத்தைத் தரும் தீவினைகள் அணுகமாட்டா; (நறை - தேன்; வாசனை); (நலிதல் / நலித்தல் - வருத்துதல்);


3)

மதிலவை விழவெய்த மாமலை வில்லானை

முதலிடை முடிவான மூர்த்தியை வரிவேங்கை

அதளுடை உடையானை அறையணி நல்லூர்க்கண்

ணுதலனை மறவாரை நோய்வினை நலியாவே.


மதில்அவை விழ எய்த மாமலை வில்லானை - முப்புரங்களும் அழியும்படி ஒரு கணை எய்த, மேருமலையை வில்லாக ஏந்தியவனை;

முதல் இடை முடிவு ஆன மூர்த்தியை - முதல், நடு, இறுதி ஆன இறைவனை;

வரி-வேங்கை அதள்-உடை உடையானை - கோடுகள் திகழும் புலித்தோலை உடையாக உடையவனை; (அதள் - தோல்);

அறையணிநல்லூர்க் கண்ணுதலனை மறவாரை நோய் வினை நலியாவே - அறையணிநல்லூரில் உறைகின்ற நெற்றிக்கண்ணனை மறவாமல் வழிபடும் அடியவர்களை நோய்களும் வினைகளும் வருத்தா; (நுதல் - நெற்றி);


4)

ஒப்பனை எனநீறும் உரகமும் அணிவானை

வைப்பனை விடமுண்ட மணிமிட றுடையானை

அப்பணி சடையானை அறையணி நல்லூரில்

அப்பனை அடைவாரை அருவினை அடையாவே.


ஒப்பனை என நீறும் உரகமும் அணிவானை - அலங்காரம் என்று திருநீற்றையும் பாம்பையும் புனைந்தவனை;

வைப்பனை - சேமநிதியாக உள்ளவன்; (வைப்பன் - சேமநிதி போன்றவன்);

விடம் உண்ட மணிமிடறு உடையானை - நஞ்சை உண்ட நீலகண்டனை;

அப்பு அணி சடையானை - சடையில் கங்கையை அணிந்தவனை; (அப்பு - நீர்);

அறையணிநல்லூரில் அப்பனை அடைவாரை அருவினை அடையாவே - அறையணிநல்லூரில் உறைகின்ற தந்தையைச் சரணடைந்த அடியவர்களை வினைகள் அடையா;


5)

பொங்கிள அரவோடு போழ்மதி புனைவானை

மங்கையொர் புடையானை மால்விடை உடையானை

அங்கையில் மழுவானை அறையணி நல்லூரில்

தங்கிய பெருமானைச் சார்ந்தவர் மகிழ்வாரே.


பொங்கு இள-அரவோடு போழ்-மதி புனைவானை - சீறும் இளநாகத்தையும் திங்களின் துண்டத்தையும் அணிந்தவனை; (போழ் - துண்டம்);

மங்கையொர் புடையானை - உமையை ஒரு பக்கத்தில் மகிழ்ந்தவனை;

மால்விடை உடையானை - பெரிய எருதை வாகனமாக உடையவனை; (மால் - பெருமை);

அங்கையில் மழுவானை - கையில் மழுவை ஏந்தியவனை;

அறையணிநல்லூரில் தங்கிய பெருமானைச் சார்ந்தவர் மகிழ்வாரே - அறையணிநல்லூரில் நீங்காமல் உறைகின்ற பெருமானைச் சரணடைந்த அடியவர்கள் இன்புறுவார்கள்;


6)

வெந்துயர் தருகூற்றை விழவுதை கழலானைச்

செந்தழல் உருவானைச் சேவமர் பெருமானை

ஐந்தொழில் உடையானை அறையணி நல்லூரில்

எந்தையை அடைவாரை இருவினை அடையாவே.


வெந்துயர் தரு கூற்றை விழ உதை கழலானைச் - கொடிய துன்பத்தைத் தரவல்ல நமனை விழும்படி திருவடியால் உதைத்தவனை;

செந்தழல் உருவானைச் - செந்தீப் போன்ற செம்மேனி உடையவனை;

சே அமர் பெருமானை - இடபவாகனம் உடைய பெருமானை; (சே - எருது);

ஐந்தொழில் உடையானை - பஞ்சகிருத்தியம் செய்பவனை; (பஞ்சகிருத்தியம் - படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல்);

அறையணிநல்லூரில் எந்தையை அடைவாரை இருவினை அடையாவே - அறையணிநல்லூரில் உறைகின்ற எம் தந்தையைச் சரணடைந்த அடியவர்களைக் கொடுவினை அடையமாட்டா;


7)

நெய்யணி திரிசூலம் நிழல்மழு உடையானை

மெய்யனை மிளிர்கொன்றை வெண்மதி நதிசூடும்

ஐயனை அழகாரும் அறையணி நல்லூரிற்

செய்யனை அடைவாரைச் செய்வினை சேராவே.


நெய் அணி திரிசூலம், நிழல் மழு உடையானை - நெய் பூசப்பெற்ற திரிசூலத்தையும் ஒளி திகழும் மழுவாயுதத்தையும் ஏந்தியவனை; (ஆயுதங்களுக்கு நெய் பூசுவது மரபு);

மெய்யனை - மெய்ப்பொருளாக உள்ளவனை;

மிளிர் கொன்றை வெண்மதி நதி சூடும் ஐயனை - விளங்கும் கொன்றைமலரையும், வெண்பிறையையும் கங்கையையும் அணிந்த தலைவனை;

அழகு ஆரும் அறையணிநல்லூரில் செய்யனை அடைவாரைச் செய்வினை சேராவே - அழகிய அறையணிநல்லூரில் உறைகின்ற செம்மேனிப் பெருமானைச் சரணடைந்த அடியவர்களை முன்செய்த வினைகள் சேரமாட்டா; (செய்யன் - செம்மேனியன்);


8)

வரைபெயர் மதிகேடன் வலிகெட விரலூன்றிச்

சுர(ம்)மலி துதிகேட்டு வரமருள் பெருமானை

அரையினில் அரவார்த்த அறையணி நல்லூரெம்

அரையனை அடைவாரை அருவினை அடையாவே.


வரை பெயர் மதிகேடன் வலி கெட விரல் ஊன்றிச் - கயிலைமலையைப் பெயர்த்த அறிவீனனான இராவணனது வலிமை அழியும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கி; (வரை - மலை); (வலி - வலிமை);

சுரம் மலி துதி கேட்டு வரம் அருள் பெருமானை - பிறகு, அவன் ஏழு சுரங்கள் பொருந்திய இன்னிசையால் துதிகள் பாடக் கேட்டு இரங்கி, அவனுக்கு வரம் அருளிய பெருமானை;

அரையினில் அரவு ஆர்த்த - அரையில் அரைநாணாகப் பாம்பைக் கட்டிய; (ஆர்த்தல் - கட்டுதல்);

அறையணிநல்லூர் எம் அரையனை அடைவாரை அருவினை அடையாவே - அறையணிநல்லூரில் உறைகின்ற எம் அரசனைச் சரணடைந்த அடியவர்களை வினைகள் நெருங்கமாட்டா; (அரையன் - அரசன்);


9)

கத்திடு கடல்மேலான் கடிமலர் அதன்மேலான்

எய்த்தடி தொழுதேத்த எரியென உயர்கோனை

அத்தனை அழகாரும் அறையணி நல்லூரெம்

சித்தனை வழிபாடு செய்பவர் வினைவீடே.


கத்திடு கடல்மேலான், கடிமலர் அதன்மேலான் - ஒலிக்கின்ற கடல்மேல் இருக்கும் திருமாலும், வாசத்தாமரையின்மேல் இருக்கும் பிரமனும்;

எய்த்து அடி தொழுது ஏத்த எரி என உயர் கோனை - அடிமுடி தேடிக் காணாது வருந்தித் திருவடியை வழிபடுமாறு ஜோதியாக உயர்ந்த தலைவனை; (எரி - தீ);

அத்தனை - தந்தையை;

அழகு ஆரும் அறையணிநல்லூர் எம் சித்தனை வழிபாடு செய்பவர் வினை வீடே - அழகிய அறையணிநல்லூரில் உறைகின்றவனும் எம் சித்தத்தில் இருப்பவனுமான சிவபெருமானை வழிபடும் அடியவர்களது வினைகள் அழியும்;


10)

நீற்றினை அணியாத நீசர்கள் உரைசெய்யும்

கூற்றினை மதியேன்மின் குரவணி சடைதன்னில்

ஆற்றனை அழகாரும் அறையணி நல்லூரில்

ஏற்றனை இசைபாடி ஏத்திட வருமின்பே.


நீற்றினை அணியாத நீசர்கள் உரைசெய்யும் கூற்றினை மதியேன்மின் - திருநீற்றைப் பூசாத கீழோர்கள் சொல்கின்ற வார்த்தைகளை நீங்கள் மதிக்கவேண்டா;

குரவு அணி சடைதன்னில் ஆற்றனை - குராமலரை அணிந்த சடையில் கங்கையை உடையவனை;

அழகு ஆரும் அறையணிநல்லூரில் ஏற்றனை இசை பாடி ஏத்திட வரும் இன்பே - அழகிய அறையணிநல்லூரில் உறைகின்ற இடபவாகனனை இசையோடு பாடிப் போற்றி வழிபட்டால் இன்பமே வரும்;


11)

சுறவணி கொடிவேளைச் சுட்டெரி நுதலானை

மறைசொலும் ஒருதேவை மன்னிய புகழானை

அறவனை அழகாரும் அறையணி நல்லூரில்

இறைவனை மறவாமல் எண்ணிட வருமின்பே.


சுறவு அணி கொடி வேளைச் சுட்டு எரி நுதலானை - சுறவக்கொடியை உடைய மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண்ணனை; (சுறவு - சுறா); (சம்பந்தர் தேவாரம் - 2.23.4 - "சுறவக் கொடிகொண்டவன் நீறதுவாய் உற நெற்றிவிழித்த எம் உத்தமனே");

மறை சொலும் ஒரு தேவை - வேதங்கள்-எல்லாம் சொல்கின்ற ஒப்பற்ற தேவனை; வேதங்களைப் பாடியருளிய தேவனை; (சொலும் - சொல்லும்); (தே / தேவு - தெய்வம்);

மன்னிய புகழானை - நிலைபெற்ற புகழை உடையவனை;

அறவனை - அறத்தின் வடிவம் ஆனவனை;

அழகு ஆரும் அறையணிநல்லூரில் இறைவனை மறவாமல் எண்ணிட வரும் இன்பே - அழகிய அறையணிநல்லூரில் உறைகின்ற கடவுளை மறவாமல் எண்ணி வழிபட்டால் இன்பமே வரும்;


பிற்குறிப்பு - யாப்புக்குறிப்பு:

கலிவிருத்தம் - தானன தனதான தானன தனதான - சந்தம்; இதனை "விளம் காய் விளம் காய்" என்ற வாய்பாடு போலவும் கருதலாம்;

  • தானன - என்ற இடங்கள் தனதன என்றும் வரக்கூடும்;

  • தனதான - என்ற இடங்கள் தானதன, தானான, என்றெல்லாம் வரக்கூடும்;

(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடியுடை மழுவேந்தி")


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Saturday, August 30, 2025

P.440 - உத்தரகோசமங்கை - மெலிமதியம் புரிசடைமேல்

2018-06-27

P.440 - உத்தரகோசமங்கை

-------------------------------

(தரவு கொச்சகக் கலிப்பா - தானதானா தானதானா தானன தானதனா)

(சம்பந்தர் தேவாரம் - 1.52.1 - "மறையுடையாய் தோலுடையாய்")


1)

மெலிமதியம் புரிசடைமேல் மிளிர அணிந்தவனே

பலிமகிழும் பாங்குடையாய் பாரொடு விண்பரவும்

ஒலிகழலாய் உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கைப்

புலியதளாய் போற்றிநின்றேன் பொருவினை தீர்த்தருளே.


மெலி-மதியம் புரி-சடைமேல் மிளிர அணிந்தவனே - தேய்ந்து மெலிந்த திங்களை முறுக்குடைய சடையின்மேல் திகழுமாறு அணிந்தவனே; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

பலி மகிழும் பாங்கு உடையாய் - பிச்சையை விரும்புகின்ற பெருமை உடையவனே; (பலி - பிச்சை);

பாரொடு விண் பரவும் ஒலி-கழலாய் - மண்ணுலகும் தேவருலகும் வழிபடும், ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியினனே;

உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கைப் புலி-அதளாய் - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்றவனே, புலித்தோலை ஆடையாக அணிந்தவனே; (அதள் - தோல்);

போற்றிநின்றேன் பொரு-வினை தீர்த்து அருளே - உன்னையே என்றும் துதிக்கும் என்னைத் தாக்கும் வினைகளைத் தீர்த்து அருள்வாயாக; (பொருதல் - தாக்குதல்);


2)

நன்றறியார் எயில்கள்வேவ நக்கவ னேகயிலைக்

குன்றுடையாய் குளிர்மதியாய் கொடியதன் மேலிடபம்

ஒன்றுடையாய் உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை

நின்றவனே வினைகள்நீக்கி நின்னடி யேற்கருளே.


நன்று-அறியார் எயில்கள் வேவ நக்கவனே - தீயவர் முப்புரம் எரியச் சிரித்தவனே; (எயில் - கோட்டை);

கயிலைக்-குன்று உடையாய் - கயிலைமலையானே;

குளிர்-மதியாய் - குளிர்ச்சி பொருந்திய திங்களை அணிந்தவனே;

கொடி அதன்மேல் இடபம் ஒன்று உடையாய் - இடபக்கொடியை உடையவனே;

உயர்மதில்சூழ் உத்தரகோசமங்கை நின்றவனே - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் நிலைத்து உறைகின்றவனே,

வினைகள் நீக்கி நின் அடியேற்கு அருளே - உன் அடியேனான எனது வினைகளைத் தீர்த்து எனக்கு அருள்வாயாக;


3)

வம்புநாறும் வாளியெய்த மதனை எரித்தவனே

கொம்பனாளோர் கூறுகந்தாய் குவலயம் அன்புசெயும்

உம்பரானே உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை

எம்பிரானே ஏத்துமென்றன் இருவினை தீர்த்தருளே.


வம்பு நாறும் வாளி எய்த மதனை எரித்தவனே - மணம் வீசும் மலர்அம்புகளை எய்த மன்மதனை எரித்தவனே; (வம்பு - வாசனை); (வாளி - அம்பு);

கொம்பு அனாள் ஓர் கூறு உகந்தாய் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக விரும்பியவனே; (அனாள் - அன்னாள் - போன்றவள்);

குவலயம் அன்புசெயும் உம்பரானே - உலகோர் போற்றும் தேவனே;

உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கை எம்பிரானே - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்ற எம்பெருமானே,

ஏத்தும் என்றன் இருவினை தீர்த்து அருளே - உன்னைத் துதிக்கும் எனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;


4)

சத்தியனே சத்திதன்னைத் தாங்கிய மெய்யினனே

வித்தகனே விரிசடையில் வெள்ளம் அடைத்தவனே

உத்தமனே உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை

நித்தியனே இன்பம்நல்கி நின்னடி யேற்கருளே.


சத்தியனே - மெய்ப்பொருளே;

சத்திதன்னைத் தாங்கிய மெய்யினனே - உமையைத் திருமேனியில் ஒரு பங்காகத் தாங்கியவனே;

வித்தகனே, விரி-சடையில் வெள்ளம் அடைத்தவனே - ஆற்றலுடையவனே, விரித்த சடையில் கங்கையை அடைத்தவனே;

உத்தமனே - சிரேஷ்டனே;

உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கை நித்தியனே - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்ற அழிவற்றவனே,

இன்பம் நல்கி நின் அடியேற்கு அருளே - உன் அடியேனான எனக்கு இன்பம் தந்து அருள்வாயாக;


5)

கச்சதாக நச்சராவைக் கட்டிய கண்ணுதலாய்

அச்சமிக்குச் சரணடைந்த அம்மதி உய்ந்திடவுன்

உச்சிவைத்தாய் உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை

நச்சிநின்றாய் தொழுமெனக்கும் நன்மை புரிந்தருளே.


கச்சதாக நச்ராவைக் கட்டிய கண்ணுதலாய் - அரையில் கச்சாக விஷப்பாம்பைக் கட்டிய நெற்றிக்கண்ணனே; (கச்சது - கச்சு; அது - பகுதிப்பொருள்விகுதி); (நச்சுஅரா - விஷப்பாம்பு);

அச்சம் மிக்குச் சரணடைந்த அம்-மதி உய்ந்திட உன் உச்சி வைத்தாய் - மிகவும் அஞ்சிவந்து உன்னைச் சரண்புகுந்த அந்தத் திங்கள் உய்யும்படி உன் திருமுடிமேல் வைத்தவனே;

உயர்மதில்சூழ் உத்தரகோசமங்கை நச்சி நின்றாய் - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் விரும்பி உறைகின்றவனே, (நச்சுதல் - விரும்புதல்);

தொழும் எனக்கும் நன்மை புரிந்து அருளே - உன்னை வழிபடும் எனக்கும் நன்மையை விரும்பியருள்வாயாக;


6)

நலந்திகழ்ந்த கண்ணிடந்து நாரணன் போற்றிசெய்யச்

சலந்தரன்றன் உடல்தடிந்த சக்கரம் ஈந்தவனே

உலந்தவோட்டில் ஐயமேற்பாய் உத்தர கோசமங்கைத்

தலந்தயங்கு சோதியேவென் மலவிருள் மாய்த்தருளே.


நலம் திகழ்ந்த கண் இடந்து நாரணன் போற்றிசெய்யச் - அழகிய மலர்க்கண்ணைத் தோண்டிப் பூவாக இட்டு அர்ச்சனை செய்த திருமாலுக்கு;

சலந்தரன்தன் உடல் தடிந்த சக்கரம் ஈந்தவனே - ஜலந்தராசுரனது உடலை வெட்டிய சக்கராயுதத்தைத் தந்தவனே; (* திருமாலுக்குச் சக்கரம் அளித்தது திருவீழிமிழலை வரலாறு);

உலந்த ஓட்டில் ஐயம் ஏற்பாய் - வற்றிய மண்டையோட்டில் பிச்சை ஏற்பவனே;

உத்தரகோசமங்கைத் தலம் தயங்கு சோதியே - உத்தரகோசமங்கை என்ற தலத்தில் ஒளிவீசும் ஜோதியே; (தயங்குதல் - ஒளிவிடுதல்);

என் மலவிருள் மாய்த்து அருளே - என் அறியாமையை அழித்து அருள்வாயாக;


7)

மரகதம்போல் மேனியாளை வாமம் மகிழ்ந்தவனே

அரியநஞ்சை அமுதமாக ஆர்ந்த மிடற்றினனே

உரகநாணா உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கைப்

பெரியதேவா உன்னையென்றும் பேணும் நினைப்பருளே.


மரகதம்போல் மேனியாளை வாமம் மகிழ்ந்தவனே - மரகதம் போன்ற நிறம் உடைய உமையை இடப்பாகமாக விரும்பியவனே: (வாமம் - இடப்பக்கம்);

அரிய நஞ்சை அமுதமாக ஆர்ந்த மிடற்றினனே - உண்ணலாகா ஆலகாலத்தை அமுதம் போல உண்ட நீலகண்டனே; (ஆர்தல் - உண்தல்);

உரக-நாணா - பாம்பை அரைநாணாகக் கட்டியவனே; (உரகம் - பாம்பு);

உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கைப் பெரிய தேவா - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்ற மகாதேவனே;

உன்னை என்றும் பேணும் நினைப்பு அருளே - என்றும் உன்னை வழிபடும் எண்ணத்தைத் தந்து அருள்வாயாக;


8)

ஆதனாகி மலையெடுத்தான் அழவிரல் ஊன்றுமலர்ப்

பாதநாதா படையு(ம்)நல்கும் பரிவின னேமறைகள்

ஓதுநாவா உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை

மாதுபாகா வாழ்த்திநின்றேன் வல்வினை மாய்த்தருளே.


ஆதனாகி மலை எடுத்தான் அழ விரல் ஊன்று மலர்ப்பாத நாதா - அறிவிலான் ஆகிக் கயிலையைப் பெயர்த்த இராவணன் அழும்படி ஒரு விரலை ஊன்றிய மலர்ப்பாதத்தை உடைய தலைவனே;

படையு(ம்) நல்கும் பரிவினனே - பின் (அவன் துதிகள் பாடக் கேட்டு மகிழ்ந்து) அவனுக்கு ஒரு வாளையும் கொடுத்த தயாபரனே;

மறைகள் ஓது நாவா - வேதங்களைத் திருநாவால் பாடியருளியவனே;

உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கை மாது-பாகா - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்ற உமைபங்கனே,

வாழ்த்தி-நின்றேன் வல்வினை மாய்த்து அருளே - உன்னையே என்றும் வாழ்த்தும் எனது வலிய வினைகளை அழித்து அருள்வாயாக;


9)

போதினானும் மாலு(ம்)நேடிப் போற்றிய எல்லையிலாச்

சோதியானே நீறுபூசும் சுந்தர னேசுருளார்

ஓதிமாது பாதியானாய் உத்தர கோசமங்கை

ஆதிமூர்த்தீ அடிபணிந்தேன் அல்லல் அறுத்தருளே.


போதினானும் மாலு(ம்) நேடிப் போற்றிய எல்லை இலாச் சோதியானே - பூமேல் உறையும் பிரமனும் திருமாலும் (அடிமுடி) தேடி வணங்கிய அளவில்லாத தீப்பிழம்பாகி நின்றவனே; (போது - பூ);

நீறு பூசும் சுந்தரனே - திருநீற்றைப் பூசும் அழகனே;

சுருள் ஆர் ஓதி மாது பாதி ஆனாய் - சுருண்ட கூந்தலை உடைய உமை திருமேனியில் ஒரு பாதி ஆனவனே; (ஓதி - பெண்களின் தலைமயிர்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின");

உத்தரகோசமங்கை ஆதிமூர்த்தீ - உத்தரகோசமங்கையில் உறைகின்ற ஆதியே, (ஆதிமூர்த்தி - ஆதி மூர்த்தி - யாவர்க்கும் மூலகாரணமாய் நிற்கும் மூர்த்தி. வாழ்முதலாகிய சிவபெருமான்);

அடிபணிந்தேன் அல்லல் அறுத்து அருளே - உன் திருவடியை வழிபடும் என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


10)

குற்றநெஞ்சர் கொள்கையென்று கூறிடு பொய்யொழிந்து

நெற்றிநீற்றர் ஆனநேயர் நினைவரம் நல்கிடுவாய்

ஒற்றையேற்றாய் உயர்மதில்சூழ் உத்தர கோசமங்கை

நற்றவத்தாய் அடியனேற்கும் நன்மை புரிந்தருளே.


குற்றநெஞ்சர் கொள்கை என்று கூறிடு பொய் ஒழிந்து - நெஞ்சில் வஞ்சம் மிக்கவர்கள் தங்களது கொள்கை என்று சொல்கின்ற பொய்களை நீங்கி;

நெற்றிநீற்றர் ஆன நேயர் நினை-வரம் நல்கிடுவாய் - நெற்றியில் திருநீற்றைப் பூசி வழிபடும் பக்தர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் தருபவனே;

ஒற்றை ஏற்றாய் - ஒப்பற்ற இடபவாகனத்தை உடையவனே; (அப்பர் தேவாரம் - 5.92.10 - "ஒற்றை யேறுடையான் அடியேயலால்");

உயர் மதில்சூழ் உத்தரகோசமங்கை நற்றவத்தாய் - உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற உத்தரகோசமங்கையில் உறைகின்ற நல்ல தவவடிவினனே;

அடியனேற்கும் நன்மை புரிந்து அருளே - உன் அடியேனுக்கும் இன்னருள் புரிவாயாக;


11)

மலைவளைத்து மதில்களெய்தாய் வாளிகள் ஐந்தெறியச்

சிலைவளைத்த மதனையட்டாய் திரைமலி கங்கைநதி

உலவுகின்ற சடையினானே உத்தர கோசமங்கைத்

தலமுறைந்தாய் தாள்பணிந்தேன் அலமரல் தீர்த்தருளே.


மலை வளைத்து மதில்கள் எய்தாய் - மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களை எய்தவனே;

வாளிகள் ஐந்து எறியச் சிலை வளைத்த மதனை அட்டாய் - ஐந்து அம்புகளை ஏவ வில்லை வளைத்த மன்மதனை எரித்தவனே; (வாளி - அம்பு); (சிலை - வில்); (மதன் - காமன்); (அடுதல் - அழித்தல்);

திரை மலி கங்கைநதி உலவுகின்ற சடையினானே - அலை மிகுந்த கங்கை உலவுகின்ற சடையை உடையவனே; (திரை - அலை);

உத்தரகோசமங்கைத் தலம் உறைந்தாய் - உத்தரகோசமங்கை என்ற தலத்தில் உறைகின்றவனே;

தாள் பணிந்தேன் அலமரல் தீர்த்து அருளே - உன் திருவடியை வழிபடும் எனது அச்சத்தைத் தீர்த்து அருள்வாயாக; (அலமரல் - கவலை; அச்சம்);


பிற்குறிப்பு - யாப்புக்குறிப்பு:

இந்தப் பாடல் அமைப்பைக் கலிவிருத்தம் என்றோ தரவு கொச்சகக் கலிப்பா என்றோ கருதலாம்.

  • இப்பாடலின் அடிகளின் அமைப்பைத் - "தானதானா - தானதானா - தானன தானதனா" - என்று மூன்று பகுதிகளாக நோக்கலாம்.

  • 1, 2-ஆம் சீர்கள் - "தானதானா" - என்பது தானதனா, / தனனதானா / தனதனனா என்றெல்லாம் வரக்கூடும்.

  • 3-ஆம் சீர் - "தானன" - என்பது தனதன / தான / தனன என்றெல்லாம் வரக்கூடும். தான / தனன என்று மாச்சீராக வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்; 3-ஆம் 4-ஆம் சீர்களிடையே வெண்டளை;

  • 4-ஆம் சீர் - "தானதனா" - இது தானானா / தனதனனா / தனதானா என்றெல்லாம் வரக்கூடும்.

சம்பந்தர் தேவாரம் 1.47 - 1.53 பதிகங்கள் - இந்த அமைப்பை உடையன. உதாரணமாக - 1.52.3 -

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத

என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற் கூற்றுதைத்த

பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்

நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------