Monday, May 13, 2024

07.46 - பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - வம்புமலர்க் கணை

07.46 - பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - வம்புமலர்க் கணை

2016-05-19

07.46 - பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)

---------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(மாச்சீர் வந்தால், அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்)

(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்")


1)

வம்புமலர்க் கணையெய்த மன்மதனைப் பொடிசெய்த

எம்பெருமான் ஏந்திழையை இடப்பாகம் அமர்ந்தபிரான்

கம்பமத கரியுரிவை மூடியிடம் காவிரியின்

பைம்புனல்வந் தடிபரவு பாண்டிக் கொடுமுடியே.


வம்பு-மலர்க்கணை எய்த மன்மதனைப் பொடிசெய்த எம்பெருமான் - வாசமலர் அம்பை எய்த மன்மதனைச் சாம்பலாக்கிய எம்பெருமான்; (வம்பு - வாசனை);

ஏந்திழையை இடப்பாகம் அமர்ந்த பிரான் - உமாதேவியை இடப்பாகமாக விரும்பிய தலைவன்; (அமர்தல் - விரும்புதல்);

கம்ப மத-கரி உரிவை மூடி இடம் - அசையும் மதயானையின் தோலைப் போர்த்தவன் உறையும் தலம்; (கம்பம் - அசைவு); (உரிவை - தோல்); (மூடி - மூடியவன்)

காவிரியின் பைம்புனல் வந்து அடி பரவு பாண்டிக் கொடுமுடியே - காவிரியின் குளிர்ந்த நீர் வந்து ஈசன் திருவடியை வழிபடுகின்ற திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்; (பைம்மை - பசுமை; பைம்புனல் என்பதில், பசுமை - புதுமையின் மேலும், குளிர்ச்சியின்மேலும் நின்றது).


2)

மாய்நாளென் றடியார்பால் வந்தடைந்த வன்னமனைக்

காய்பாதன் நெற்றியிலோர் கண்ணுடையான் எவ்வுயிர்க்கும்

தாய்தந்தை ஆகியவன் தங்குமிடம் கயல்மீன்கள்

பாய்பொன்னி அடிபரவு பாண்டிக் கொடுமுடியே.


மாய் நாள் என்று அடியார்பால் வந்து அடைந்த வல் நமனைக் காய் பாதன் - மார்க்கண்டேயரது ஆயுள் முடியும் நாள், அவரைக் கொல்லும் நாள் என்று மார்க்கண்டேயரிடம் வந்துசேர்ந்த கொடிய கூற்றுவனைச் சினந்து உதைத்த திருப்பாதம் உடையவன்; (மாய்த்தல் - கொல்லுதல்); (மாய்தல் - இறத்தல்);

நெற்றியில் ஓர் கண் உடையான் - நெற்றிக்கண்ணன்;

எவ்வுயிர்க்கும் தாய் தந்தை ஆகியவன் தங்கும் இடம் - எல்லா உயிர்களுக்கும் அம்மையும் அப்பனும் ஆகிய சிவபெருமான் உறையும் தலம்;

கயல்மீன்கள் பாய் பொன்னி அடி பரவு பாண்டிக் கொடுமுடியே - கயல்மீன்கள் பாய்கின்ற காவிரி ஈசன் திருவடியை வழிபடுகின்ற திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்;


3)

கரந்தனிலே பிரமன்றன் சிரமேந்தி கரவின்றி

வரந்தருமோர் வள்ளலவன் மலர்தூவு வானவரைப்

புரந்தருளி ஒருகணையால் புரமெரித்த பரமனிடம்

பரந்திழிகா விரிப்பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடியே.


கரம்-தனிலே பிரமன்தன் சிரம் ஏந்தி - கையில் பிரமனுடைய மண்டையோட்டை ஏந்தியவன்; (ஏந்தி - ஏந்தியவன்);

கரவு இன்றி வரம் தரும் ஓர் வள்ளல்அவன் - வஞ்சமின்றி வரங்கள் தரும் வள்ளன்மை உடையவன்; (கரவு - வஞ்சம்; ஒளித்தல்); (வள்ளல்அவன் - அவன் என்றது பகுதிப்பொருள்விகுதி);

மலர் தூவு வானவரைப் புரந்து அருளி ஒரு கணையால் புரம் எரித்த பரமன் இடம் - பூக்கள் தூவி வணங்கிய தேவர்களைக் காத்து, ஓர் அம்பால் முப்புரங்களை எரித்த பரமன் உறையும் தலம்; (புரத்தல் - காத்தல்);

பரந்து இழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடியே - விரிந்து பாய்கின்ற காவிரியின் பக்கத்தில் உள்ள திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்; (பரத்தல் - பரவுதல்); (பாங்கர் - பக்கம்);


4)

ஈங்கெம் துணைநீயே என்றுருகித் தொழுதேத்தில்

தீங்கைப் புரிவினைகள் தீர்க்குமரன் கங்கைதனைத்

தாங்கச் சடைவிரித்த தலைவனிடம் காவிரியின்

பாங்கர்த் திகழ்கின்ற பாண்டிக் கொடுமுடியே.


"ஈங்கு எம் துணை நீயே" என்று உருகித் தொழுது ஏத்தில் தீங்கைப் புரி வினைகள் தீர்க்கும் அரன் - "இங்கு எமக்கு நீயே துணை" என்று உள்ளம் உருகி வணங்கித் துதித்தால், நமக்குத் தீமை செய்யும் வினைகளைத் தீர்த்து அருளும் ஹரன்; (ஈங்கு - இங்கு);

கங்கைதனைத் தாங்கச் சடை விரித்த தலைவன் இடம் - கங்கையைத் தாங்குவதற்காகத் தன் சடையை விரித்த தலைவனான சிவபெருமான் உறையும் தலம்;

காவிரியின் பாங்கர்த் திகழ்கின்ற பாண்டிக் கொடுமுடியே - காவிரியின் பக்கத்தில் விளங்குகின்ற திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்;


5)

கரிகொல்ல வந்தக்கால் நாவரசைக் காத்தபிரான்

நரியெல்லாம் பரியாக்கி நாடகம் ஆடுமிகப்

பரிவுள்ள பரமனுமை பங்கனிடம் காவிரியில்

பரிசல்கள் செல்கின்ற பாண்டிக் கொடுமுடியே.


கரி கொல்ல வந்தக்கால் நாவரசைக் காத்த பிரான் - (சமணர்கள் ஏவிய) யானை கொல்ல வந்தபோது திருநாவுக்கரசரைக் காத்த பெருமான்;

நரி எல்லாம் பரி ஆக்கி நாடகம் ஆடு மிகப் பரிவு உள்ள பரமன் - (மாணிக்கவாசகருக்காக) நரிகளை எல்லாம் குதிரைகள் ஆக்கித் திருவிளையாடல் புரிந்த, மிகவும் கருணையுள்ள பரமன்;

உமை பங்கன் இடம் - அர்த்தநாரீஸ்வரனான சிவபெருமான் உறையும் தலம்;

காவிரியில் பரிசல்கள் செல்கின்ற பாண்டிக் கொடுமுடியே - காவிரியில் பரிசல் என்ற சிறிய ஓடங்கள் செல்கின்ற திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்; (பரிசல் - பரிசில் - Coracle; சிற்றோடம்);


6)

நாதத்தால் கீதத்தால் நாளுமடி தொழுவார்தம்

ஏதத்தைத் தீர்த்தவரை இன்பவான் ஏற்றுமிறை

ஓதத்தில் எழுநஞ்சை உண்டிருண்ட கண்டனிடம்

பாதத்தைப் பொன்னிபணி பாண்டிக் கொடுமுடியே.


நாதத்தால் கீதத்தால் நாளும் அடி தொழுவார்தம் ஏதத்தைத் தீர்த்து அவரை இன்ப வான் ஏற்றும் இறை - இசையாலும் பாட்டாலும் தினந்தோறும் திருவடியைத் தொழும் அன்பர்களுடைய குற்றங்களைத் தீர்த்து அவர்களை இன்பமயமான சிவலோகத்திற்கு உயர்த்தும் இறைவன்; (ஏதம் - குற்றம்; துன்பம்);

ஓதத்தில் எழு நஞ்சை உண்டு இருண்ட கண்டன் இடம் - கடலில் தோன்றிய விடத்தை உண்டு கருமைபெற்ற கண்டத்தை உடைய சிவபெருமான் உறையும் தலம்; (ஓதம் - கடல்);

பாதத்தைப் பொன்னி பணி பாண்டிக் கொடுமுடியே - காவிரியாறு ஈசன் திருவடியைப் பணியும் திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்;


7)

கண்ணிலங்கு நெற்றியினான் கறைக்கண்டன் கயல்போன்ற

கண்ணியொரு கூறுடையான் கனவிடையான் கதிர்மதியக்

கண்ணியணி சென்னியினான் கருதுமிடம் குயிலினங்கள்

பண்ணிசைக்கும் பொழில்சூழ்ந்த பாண்டிக் கொடுமுடியே.


கண் இலங்கு நெற்றியினான் - நெற்றிக்கண்ணன்;

கறைக்கண்டன் - நீலகண்டன்;

கயல் போன்ற கண்ணி ஒரு கூறு உடையான் - கயல்மீன் போன்ற கண் உடைய உமாதேவியை ஒரு கூறாக உடையவன்;

கன விடையான் - பெரிய இடபத்தை வாகனமாக உடையவன்;

கதிர் மதியக் கண்ணி அணி சென்னியினான் கருதும் இடம் - ஒளியுடைய (/கிரணங்களை வீசும்) திங்களைக் கண்ணிமாலை போல முடிமேல் அணிந்தவன் விரும்பி உறையும் தலம்;

குயிலினங்கள் பண் இசைக்கும் பொழில் சூழ்ந்த பாண்டிக் கொடுமுடியே - குயில்கள் இசைபாடும் சோலை சூழ்ந்த திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்;


8)

திக்கெட்டும் செருவென்ற திறலரக்கன் சிலையெடுக்க

நக்குத்தாள் விரலொன்றின் நகமூன்றி நசுக்கியவன்

நெக்குத்தாள் பணிவார்க்கு நேயனிடம் காவிரியின்

பக்கத்தில் திகழ்கின்ற பாண்டிக் கொடுமுடியே.


திக்கு எட்டும் செரு வென்ற திறல் அரக்கன் சிலை எடுக்க - எட்டுத் திக்கிலும் எல்லாரையும் போரில் வென்ற வலிய அரக்கனான இராவணன் கயிலைமலையைப் பெயர்த்தபொழுது; (செரு - போர்); (திறல் - வலிமை; வெற்றி); (சிலை - மலை);

நக்குத் தாள் விரல் ஒன்றின் நகம் ஊன்றி நசுக்கியவன் - சிரித்துத் தன் திருப்பாத விரல் ஒன்றின் நகத்தைச் சிறிதே ஊன்றி அவனை நசுக்கியவன்; (நக்கு - சிரித்து); (சம்பந்தர் தேவாரம் - 1.9.8 - "வரை எடுத்தவ்வலி அரக்கன் தலைதோளவை நெரியச்சரண் உகிர்வைத்தவன்" - சரண் - பாதம்; உகிர் - நகம்;);

நெக்குத் தாள் பணிவார்க்கு நேயன் இடம் - மனம் உருகித் திருவடியை வழிபடும் பக்தர்களுக்கு அன்பு உடையவனான சிவபெருமான் உறையும் தலம்; (நெகுதல் - உருகுதல்);

காவிரியின் பக்கத்தில் திகழ்கின்ற பாண்டிக் கொடுமுடியே - காவிரிக்கரையில் உள்ள திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்;


9)

உயர்பிரமன் அகழ்திருமால் உச்சியடி தேடிமிக

அயர்வுறவே அலகில்லா ஆரழலாய் நின்றபரன்

தயிர்நறுநெய் பாலாடு தலைவனிடம் தரைவாழப்

பயிர்வளர்செய் புடைசூழ்ந்த பாண்டிக் கொடுமுடியே.


உயர் பிரமன் அகழ் திருமால் உச்சி அடி தேடி - அன்னமாகி உயர்ந்த பிரமனும், பன்றியாகி அகழ்ந்த திருமாலும் தன் உச்சியையும் அடியையும் தேடி;

மிக அயர்வு உறவே அலகு இல்லா ஆர் அழல் ஆய் நின்ற பரன் - மிகவும் சோரும்படி அளவில்லாத அரிய ஜோதி ஆகி நின்ற பரமன்; (அயர்வு - சோர்வு; வருத்தம்); (அலகு - அளவு);

தயிர் நறு-நெய் பால் ஆடு தலைவன் இடம் - தயிர், வாச நெய், பால் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறும் தலைவன் உறையும் தலம்;

தரை வாழப் பயிர் வளர் செய் புடை சூழ்ந்த பாண்டிக் கொடுமுடியே - இவ்வுலக மக்கள் வாழப் பயிர் வளரும் வயல் சூழ்ந்த திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்; (செய் - வயல்); (புடை - பக்கம்); (தரை - பூமி - ஆகுபெயராகி உலக மக்களைக் குறித்தது);


10)

பண்டைமறை நெறிதன்னைப் பணத்திற்காப் பழித்துழலும்

மிண்டருரை பொய்ம்மொழிகள் விட்டொழிமின் நீறணிந்த

தொண்டருரை மகிழ்ந்துவரம் சொரியுமரன் தூமதியன்

பண்டரங்கக் கூத்தனிடம் பாண்டிக் கொடுமுடியே.


பண்டை மறைநெறி தன்னைப் பணத்திற்காப் பழித்து உழலும் மிண்டர் உரை பொய்ம்மொழிகள் விட்டு ஒழிமின் - தொன்மையான வைதிக தர்மத்தைப் பணத்திற்காகப் பழித்துப் பேசி உழல்கின்ற கல்நெஞ்சர்கள் சொல்கின்ற பொய்ச்சொற்களை விட்டு நீங்குங்கள்;

நீறு அணிந்த தொண்டர் உரை மகிழ்ந்து வரம் சொரியும் அரன் - திருநீற்றைப் பூசிய பக்தர்கள் சொல்லும் துதிக்கு மகிழ்ந்து வரங்களை வாரி வழங்கும் ஹரன்; (உரை - உரைத்தல்; சொல்);

தூ மதியன் - தூய மதியை அணிந்தவன்;

பண்டரங்கக் கூத்தன் இடம் பாண்டிக் கொடுமுடியே - பண்டரங்கம் என்ற கூத்து ஆடும் சிவபெருமான் உறையும் தலம் திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்; (பண்டரங்கம் - பாண்டரங்கம் - கூத்துப் பதினொன்றனுள் திரிபுரத்தை அழித்த போது சிவபிரான் வெண்ணீறணிந்து ஆடியது);


11)

அடல்விடையாய் அடுபுலித்தோல் ஆடையனே அங்கணனே

இடர்களையாய் எம்பெருமான் என்றேத்தும் அடியார்தம்

தொடர்வினையைத் துடைத்தவர்க்குத் துணையாகி நின்றருளும்

படர்சடைமேற் பிறையனிடம் பாண்டிக் கொடுமுடியே.


அடல் விடையாய் - வெற்றியுடைய வலிய இடபத்தை வாகனமாக உடையவனே; (அடல் - வலிமை; வெற்றி);

அடு புலித்தோல் ஆடையனே - கொல்லும் புலியின் தோலை ஆடையாக அணிந்தவனே; (அடுதல் - கொல்லுதல்);

அங்கணனே - அருட்கண் உடையவனே;

இடர் களையாய் எம்பெருமான் என்று ஏத்தும் அடியார்தம் தொடர்வினையைத் துடைத்து - "துன்பத்தைத் தீராய்! எம் பெருமானே!" என்று துதிக்கும் அடியவர்களுடைய வினைத்தொடரை அழித்து; (தொடர்வினை - பல பிறவிகளாகத் தொடர்கின்ற வினை); (துடைத்தல் - நீக்குதல்; அழித்தல்);

அவர்க்குத் துணை ஆகி நின்று அருளும் - அவர்களுக்குத் துணை ஆகி நின்று அருளும்;

படர்சடைமேல் பிறையன் இடம் பாண்டிக் கொடுமுடியே - படரும் சடைமேல் பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமான் உறையும் தலம் திருப்பாண்டிக்கொடுமுடி ஆகும்;


வி. சுப்பிரமணியன்

--------


07.45 - கோடி - (குழகர் கோயில்) - குளிர்கடற்கரை

07.45 - கோடி - (குழகர் கோயில்) - குளிர்கடற்கரை

2016-05-17

07.45 - கோடி - (குழகர் கோயில்)

(வேதாரண்யத்திற்குத் தெற்கே உள்ள தலம். இக்காலத்தில் "குழகர் கோயில்")

---------------------------------

(கட்டளைக் கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பு)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.10.1 - "பண்ணின்நேர் மொழியாள்")


1)

குளிர்க டற்கரைக் கோடிக் குழகனே

ஒளிர்ம திச்சடை ஐயனே ஒண்கழல்

அளிம னத்தொடு போற்றும் அடியவர்க்(கு)

எளிய னேஎன இல்லை இடர்களே.


குளிர்-கடற்கரைக் கோடிக் குழகனே - குளிர்ந்த கடலின் கரையில் உள்ள திருக்கோடியில் உறைகின்ற அழகனே; (குழகன் - அழகன்);

ஒளிர்-மதிச் சடை ஐயனே - பிரகாசிக்கும் திங்களைச் சூடிய சடையை உடைய தலைவனே;

ஒண்-கழல் அளி மனத்தொடு போற்றும் அடியவர்க்கு எளியனே - ஒளி பொருந்திய அழகிய திருவடியை உருகும் மனத்தோடு வழிபடும் பக்தர்களால் எளிதில் அடையப்படுபவனே; (ஒண்மை - விளக்கம்; அழகு); (அளிதல் - குழைதல்; அன்புகொள்ளுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.128.1 - அடி 6-7: "ஒண்கழல் இரண்டும் முப்பொழு தேத்திய");

என இல்லை இடர்களே - என்று துதித்தால் நம் இடர்கள் நீங்கும்;


2)

குரைக டற்கரைக் கோடிக் குழகனே

அரையிற் பாம்பினை ஆர்த்த அடிகளே

உரைக டந்த ஒருவனே எம்மையாள்

அரைய னேஎன அல்லல்தீர்ந் தின்பமே.


குரைகடற் கரைக் கோடிக் குழகனே - ஒலிக்கின்ற கடலின் கரையில் உள்ள திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

அரையில் பாம்பினை ஆர்த்த அடிகளே - அரையில் பாம்பை அரைநாணாகக் கட்டிய கடவுளே;

உரை கடந்த ஒருவனே - சொல்லைக் கடந்த ஒப்பற்றவனே;

எம்மை ஆள் அரையனே - எம்மை ஆளும் அரசனே;

என அல்லல் தீர்ந்து இன்பமே - என்று துதித்தால் நம் துன்பங்கள் நீங்கி இன்பம் நிலவும்;


3)

கோல வாரிசூழ் கோடிக் குழகனே

நீல கண்டனே நெற்றியிற் கண்ணனே

கால காலனே கையினில் மூவிலை

வேல னேஎன வெவ்வினை வீடுமே.


கோல வாரி சூழ் கோடிக் குழகனே - அழகிய கடல் சூழ்ந்த திருக்கோடியில் உறைகின்ற அழகனே; (கோலம் - அழகு); (வாரி - கடல்);

நீலகண்டனே - கரிய கண்டம் உடையவனே;

நெற்றியிற் கண்ணனே - முக்கண்ணனே;

காலகாலனே - காலனுக்குக் காலன் ஆனவனே;

கையினில் மூவிலை வேலனே - கையில் திரிசூலம் ஏந்தியவனே;

என வெவ்வினை வீடுமே - என்று துதித்தால் நம் கொடிய வினைகள் நீங்கும்; (வெம்மை - கடுமை); (வீடுதல் - நீங்குதல்; அழிதல்);


4)

அமரர் போற்றிடும் அண்ணா அறுமுகக்

குமரன் அத்தனே கோடிக் குழகனே

தமர்க ளுக்கருள் சம்புவே நீறணி

நிமல னேஎன நீங்கும் இடர்களே.


அமரர் போற்றிடும் அண்ணா - தேவர்கள் வழிபடும் அண்ணலே; (அண்ணா - அண்ணல் என்பதன் விளியான அண்ணால் என்பது அண்ணா என்று மருவிற்று);

அறுமுகக் குமரன் அத்தனே - முருகனுக்குத் தந்தையே; (அத்தன் - தந்தை);

கோடிக் குழகனே - திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

தமர்களுக்கு அருள் சம்புவே - தொண்டர்களுக்கு அருளும் சம்புவே; (தமர் - சுற்றமாகிய அடியார்); (சம்பு - சுகத்தைத் தருபவன் - சிவன்); (அப்பர் தேவாரம் - 5.91.5 - "தலைவ னாகிய ஈசன் தமர்களைக் கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே");

நீறு அணி நிமலனே - திருநீற்றைப் பூசிய தூயவனே; (நிமலன் - மலமற்றவன்; மாசில்லாதவன்);

என நீங்கும் இடர்களே - என்று துதித்தால் நம் துன்பங்கள் நீங்கும்;


5)

நிலவும் கங்கையின் நீரும் அரவமும்

குலவு சென்னியாய் கோடிக் குழகனே

நலமெ லாமருள் நம்பனே வானவர்

தலைவ னேஎனத் தங்கா வினைகளே.


நிலவும் கங்கையின் நீரும் அரவமும் குலவு சென்னியாய் - சந்திரனும் கங்கைப்புனலும் பாம்பும் சேர்கின்ற திருமுடி உடையவனே;

கோடிக் குழகனே - திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

நலம் எலாம் அருள் நம்பனே - எல்லா நலங்களையும் அருள்கின்ற நம்பனே; (நம்பன் - விரும்பத்தக்கவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று);

வானவர் தலைவனே - தேவர் கோனே;

எனத் தங்கா வினைகளே - என்று துதித்தால் நம் வினைகள் நீங்கும்;


6)

தஞ்சம் என்றடிச் சார்ந்த மதிதனைக்

குஞ்சிச் சூடினாய் கோடிக் குழகனே

வஞ்சி பங்கனே மாமதில் மூன்றெய்த

மஞ்ச னேஎன மாயும் வினைகளே.


தஞ்சம் என்று அடிச் சார்ந்த மதிதனைக் குஞ்சிச் சூடினாய் - உன் திருவடியில் அடைக்கலம் அடைந்த சந்திரனைத் தலையிற் சூடியவனே; (குஞ்சி - ஆண்களின் தலைமயிர் - ஆகுபெயராகத் தலையைக் குறிப்பது);

கோடிக் குழகனே - திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

வஞ்சி பங்கனே - உமைபங்கனே; (வஞ்சி - பெண்);

மா மதில் மூன்று எய்த மஞ்சனே - பெரிய அழகிய முப்புரங்களையும் ஒரு கணையால் எய்த வீரனே; (மஞ்சன் - மைந்தன் என்பதன் போலி; மைந்தன் - வீரன்);

என மாயும் வினைகளே - என்று துதித்தால் நம் வினைகள் அழியும்;


7)

அல்லில் மாநடம் ஆடிய கூத்தனே

கொல்லை ஏற்றனே கோடிக் குழகனே

செல்வ னேபுனல் செஞ்சடைத் தேக்கிய

வல்ல னேஎன வல்வினை மாயுமே.


அல்லில் மா நடம் ஆடிய கூத்தனே - இருளில் திருநடம் ஆடிய கூத்தனே;

கொல்லை ஏற்றனே - முல்லைநிலம் சார்ந்த எருதை வாகனமாக உடையவனே; (அப்பர் தேவாரம் - 5.33.1 - "கொல்லை ஏற்றினர்");

கோடிக் குழகனே - திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

செல்வனே - செல்வனே; (எல்லாச் செல்வங்களும் உடையவன்);

புனல் செஞ்சடைத் தேக்கிய வல்லனே - கங்கையைச் செஞ்சடையிடைத் தேக்கிய, வல்லவனே; (வல்லன் - வல்லவன்); (அப்பர் தேவாரம் - 5.52.1 - "வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்");

என வல்வினை மாயுமே - என்று துதித்தால் நம் வலிய வினைகள் அழியும்;


8)

குன்றெ டுத்தவன் அன்றழ ஊன்றிய

கொன்றை வேணியாய் கோடிக் குழகனே

மன்றுள் நட்டம தாடிடு மன்னனே

என்று போற்றிட இல்லை இடர்களே.


குன்று எடுத்தவன் அன்று அழ ஊன்றிய, கொன்றை வேணியாய் - முன்னர்க் கயிலைமலையைப் பேர்த்து எடுத்த தசமுகன் (இராவணன்) அழும்படி விரலை ஊன்றி அவனை நசுக்கியவனே, சடையில் கொன்றைமலர் அணிந்தவனே;

கோடிக் குழகனே - திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

மன்றுள் நட்டது ஆடிடு மன்னனே - சபையில் திருநடம் ஆடும் நடராஜனே; (நட்டம் - கூத்து);

என்று போற்றிட இல்லை இடர்களே - என்று துதித்தால் நம் துன்பங்கள் நீங்கும்;


9)

தொக்கு மால்பிர மன்தொழு சோதியே

கொக்கின் தூவலாய் கோடிக் குழகனே

முக்கண் மூர்த்தியே மூவா முதல்வனே

தக்கி ணாஎன வல்வினை சாயுமே.


தொக்கு மால் பிரமன் தொழு சோதியே - (அடிமுடி தேடி வாடித்) திருமாலும் பிரமனும் சேர்ந்து தொழுத சோதியே; (தொகுதல் - சேர்தல்; ஒன்றாதல்; தொக்கு - சேர்ந்து);

கொக்கின் தூவலாய் - கொக்கின் இறகை அணிந்தவனே; (தூவல் - இறகு); (கொக்கின் தூவல் - கொக்கிறகு - 1. கொக்கு வடிவம் உடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்; 2. கொக்கிறகு என்ற பூ); (அப்பர் தேவாரம் - 5.55.4 - "கொக்கின் தூவலும் கூவிளங் கண்ணியும்");

கோடிக் குழகனே - திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

முக்கண் மூர்த்தியே - முக்கட் கடவுளே;

மூவா முதல்வனே - மூப்பு இல்லாத ஆதியே;

தக்கிணா - தட்சிணாமூர்த்தியே; (தக்கிணன் - தட்சிணாமூர்த்தி);

என வல்வினை சாயுமே - என்று துதித்தால் வலியவினை அழியும்; (சாய்தல் - அழிதல்); (அப்பர் தேவாரம் - 5.19.8 - "கையால் தொழுவார் வினை சாயுமே");


10)

மிண்டர் மெய்யறி யார்சொல் விடுமினீர்

கொண்டற் கண்டனே கோடிக் குழகனே

வண்டு சேர்குழல் மாதொரு பங்குடை

அண்ட னேஎன ஆரும் திருவதே


மிண்டர் மெய்-அறியார் சொல் விடுமின் நீர் - கல்நெஞ்சர்களும் உண்மையை அறியாதவர்களும் சொல்லும் வார்த்தைகளை நீங்கள் நீங்குங்கள்;

கொண்டல் கண்டனே - மேகம் போல் கண்டம் உடையவனே - நீலகண்டனே; (கொண்டல் - மேகம்);

கோடிக் குழகனே - திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

வண்டு சேர் குழல் மாது ஒரு பங்குஉடை அண்டனே - வண்டுகள் பொருந்தும் கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே, உலகநாயகனே; (அண்டன் - அண்டங்களுக்கெல்லாம் தலைவன்);

என ஆரும் திருதே - என்று துதித்தால் திரு வந்து பொருந்தும்; திரு மிகும்; (ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்); (திரு - செல்வம்; அழகு; நல்வினை; பாக்கியம்; அது - பகுதிப்பொருள்விகுதி);


11)

உழையை ஏந்தினாய் ஓர்காதிற் சங்கவெண்

குழையி னாய்திருக் கோடிக் குழகனே

இழையி லங்கிய மார்பனே என்றுளம்

குழையும் அன்பருக் கின்பமே கூடுமே.


உழையை ஏந்தினாய் - மானை ஏந்தியவனே; (உழை - மான்);

ஓர் காதில் சங்க வெண் குழையினாய் - ஒரு செவியில் வெண்சங்கக் குழையை அணிந்தவனே;

திருக் கோடிக் குழகனே - திருக்கோடியில் உறைகின்ற அழகனே;

இழை இலங்கிய மார்பனே - முப்புரிநூலை மார்பில் அணிந்தவனே; (இழை - நூல்);

என்று உளம் குழையும் அன்பருக்கு இன்பமே கூடுமே - என்று உள்ளம் உருகித் துதிக்கும் அடியவர்களுக்கு என்றும் இன்பமே மிகும்;


பிற்குறிப்பு : கோடி - தலப்பெயர்க் குறிப்பு:

  • தருமை ஆதீன உரையிற் காண்பது: திருமறைக்காட்டு எல்லையின் கோடியில் இருக்கும் அழகராதல் பற்றி, இங்கு உள்ள பெருமான், "கோடிக் குழகர்" எனப் படுவர். அவரது பெயரே, பின்னர் அத்தலத்திற்கும் ஆயிற்று. அக்கடற்கரையையும், "கோடிக்கரை" என்பர்.

  • சுந்தரர் தேவாரம் - 7.32.5 - "கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண்டாயே";

  • அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - "நீலமுகி லானகுழல் ... குழகர் கோடிநகர் மேவிவளர் பெருமாளே" - குழகர் என்னும் திருநாமத்துடன் சிவபெருமான் வீற்றிருக்கும் கோடி என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே;


வி. சுப்பிரமணியன்

-------------------


Thursday, May 9, 2024

07.44 - சிக்கல் - வானோர் மலர் தூவி

07.44 - சிக்கல் - வானோர் மலர் தூவி

2016-05-17

07.44 - சிக்கல்

----------------------------------

(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய்)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பிக்")


1)

வானோர் மலர்தூவி வாழ்த்தும் கழலானே

கானே இடமாகக் கருதி நடமாடீ

தேனார் பொழில்சூழ்ந்த சிக்கல் உறைவானே

ஆனே றுடையானே அடியேற் கருளாயே.


வானோர் மலர் தூவி வாழ்த்தும் கழலானே - தேவர் பூக்களைத் தூவி வழிபடும் திருவடியை உடையவனே;

கானே இடமாகக் கருதி நடமாடீ - சுடுகாடே இடம் என்று விரும்பி அங்குத் திருநடம் செய்பவனே;

தேன் ஆர் பொழில் சூழ்ந்த சிக்கல் உறைவானே - வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த சிக்கலில் உறைகின்றவனே; (தேன் - வண்டு; தேனீ); (ஆர்தல் - பொருந்துதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.54.1 - "ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே");

ஆனேறு உடையானே அடியேற்கு அருளாயே - இடபவாகனனே, அடியேனுக்கு அருள்வாயாக; (ஆனேறு - எருது);


2)

செய்ய சடைதன்னில் திரையார் நதியேற்றாய்

ஐயம் மகிழ்செல்வா அங்கை மழுவாளா

செய்யிற் கயல்பாயும் சிக்கல் உறைவானே

வெய்ய வினைநீங்கி உய்யற் கருளாயே.


செய்ய சடைதன்னில் திரை ஆர் நதி ஏற்றாய் - செஞ்சடையில் அலை மிக்க கங்கையை ஏற்றவனே; (செய்ய - சிவந்த); (திரை - அலை);

ஐயம் மகிழ் செல்வா - பிச்சை ஏற்று மகிழும் செல்வனே;

அங்கை மழுவாளா - கையில் மழுவாளை ஏந்தியவனே;

செய்யில் கயல் பாயும் சிக்கல் உறைவானே - வயலில் கயல்மீன்கள் பாயும் சிக்கலில் உறைகின்றவனே; (செய் - வயல்);

வெய்ய வினை நீங்கி உய்யற்கு அருளாயே - கொடிய வினைகள் நீங்கி நான் உய்வதற்கு அருள்வாயாக;


3)

பொங்கும் அரவத்தைப் புனையும் மணிமார்பா

கங்கைச் சடையானே கயிலை மலையானே

செங்கண் விடையானே சிக்கல் உறைவானே

அங்கட் பெருமானே அடியேற் கருளாயே.


பொங்கும் அரவத்தைப் புனையும் மணி மார்பா - சீறும் பாம்பை மாலையாகப் பவளம் போன்ற அழகிய மார்பில் அணிந்தவனே; (மணி - பவளம்; அழகு);

கங்கைச் சடையானே - சடையில் கங்கையை உடையவனே;

கயிலை மலையானே - கயிலைமலைமேல் இருப்பவனே;

செங்கண் விடையானே - சினக்கும் இடபத்தை ஊர்தியாக உடையவனே;

சிக்கல் உறைவானே - சிக்கலில் உறைகின்றவனே;

அங்கட் பெருமானே - அருட்கண் உடைய பெருமானே; (அங்கண் - கண்ணோட்டம் - தாட்சிண்யம்);

அடியேற்கு அருளாயே - அடியேனுக்கு அருள்வாயாக;


4)

குன்றைச் சிலையாக்கிக் கூடார் புரமெய்தாய்

பன்றி தனையெய்து பார்த்தற் கருள்செய்தாய்

தென்றல் மணம்வீசும் சிக்கல் உறைவானே

என்றன் இடர்நீக்கி இன்பம் அருளாயே.


குன்றைச் சிலை ஆக்கிக் கூடார் புரம் எய்தாய் - மேருமலையை வில்லாக்கிப் பகைவர்களது முப்புரங்களையும் எய்தவனே; (கூடார் - பகைவர்);

பன்றிதனை எய்து பார்த்தற்கு அருள்செய்தாய் - பன்றியை எய்து அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருளியவனே; (பார்த்தன் + கு = பார்த்தற்கு);

தென்றல் மணம் வீசும் சிக்கல் உறைவானே - தென்றலில் மணம் கமழும் சிக்கலில் உறைகின்றவனே;

என்றன் இடர் நீக்கி இன்பம் அருளாயே - என்னுடைய துன்பங்களைத் தீர்த்து இன்பம் அருள்வாயாக;


5)

பன்னி அடிபோற்று பத்தர் உயிர்கொள்ள

உன்னி வருகூற்றை உதைசெய் பெருமானே

செந்நெல் வயல்சூழ்ந்த சிக்கல் உறைவானே

முன்னை வினையெல்லாம் முடிய அருளாயே.


பன்னி அடிபோற்று பத்தர் உயிர்கொள்ள உன்னி வரு கூற்றை உதைசெய் பெருமானே - பாடித் திருவடியை வழிபட்ட பக்தரான மார்க்கண்டேயர் உயிரைக் கவர்வதற்கு எண்ணி வந்த காலனை உதைத்த பெருமானே; (பன்னுதல் - பாடுதல்; புகழ்தல்); (உன்னுதல் - நினைத்தல்; எண்ணுதல்); (அப்பர் தேவாரம் - 4.107.5 - "மாணிதன் ஆருயிர் கொள்ளவந்த .. .. காலனை");

செந்நெல் வயல் சூழ்ந்த சிக்கல் உறைவானே - சிறந்த வகை நெற்பயிர் வளரும் வயல் சூழ்ந்த சிக்கலில் உறைகின்றவனே;

முன்னை வினை எல்லாம் முடிய அருளாயே - என் பழவினைகள் எல்லாம் தீர அருள்வாயாக; (முடிதல் - அழிதல்; முற்றுப்பெறுதல்);


6)

பால்கொண் டடிபோற்றல் பார்த்துச் சிதைதாதை

கால்கள் தடிசண்டிக் கத்தா கருள்கண்டா

சேல்கள் உகள்செய்சூழ் சிக்கல் உறைவானே

மால்கொள் மதிதன்னை மாற்றி அருளாயே.


பால்கொண்டு அடிபோற்றல் பார்த்துச் சிதை தாதை கால்கள் தடி சண்டிக்கு அத்தா - (ஆற்றுமணலில் இலிங்கம் செய்து) பாலால் அபிஷேகம் செய்து வழிபடுதலைக் கண்டு சினந்து அதனை அழித்த தந்தையின் கால்களை வெட்டிய சண்டேசுர நாயனாருக்கு "இனி நானே உன் அப்பன்" என்று அருளியவனே; (சிதைத்தல் - அழித்தல்; கெடுத்தல்; குலைத்தல்); (தடிதல் - வெட்டுதல்); (அத்தன் - தந்தை); (* பெரியபுராணம் - சண்டேசுர நாயனார புராணம் - 12.20.54 - "அடுத்த தாதை இனியுனக்கு நாம்என் றருள்செய் தணைத்தருளி");

கருள் கண்டா - கரிய கண்டனே; (கருள்தல் - கருநிறம் அடைதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.109.4 - "கருடரு கண்டத்தெங் கயிலையாரும்" - கருள்தரு கண்டத்து - கருமை பொருந்திய கழுத்தை உடைய).

சேல்கள் உகள் செய் சூழ் சிக்கல் உறைவானே - சேல் மீன்கள் பாயும் வயல் சூழ்ந்த சிக்கலில் உறைகின்றவனே; (உகள்தல் - தாவுதல்); (செய் - வயல்);

மால்கொள் மதிதன்னை மாற்றி அருளாயே - மயங்கும் என் மதியை மாற்றி அருள்வாயாக; (மால் - மயக்கம்); (மாற்றுதல் - செம்மைப்படுத்துதல்);


7)

அரையில் அரவார்த்த அடிகேள் சுரரோடு

தரையோர் தொழுதேத்தும் தலைவா நிலையாகத்

திரையார் சடையானே சிக்கல் உறைவானே

அரையா வினைநீக்கி அடியேற் கருளாயே.


அரையில் அரவு ஆர்த்த அடிகேள் - அரையில் அரைநாணாகப் பாம்பைக் கட்டிய கடவுளே; (அடிகேள் - அடிகள் என்பதன் விளி - சுவாமியே; அடிகள் - கடவுள்);

சுரரோடு தரையோர் தொழுது ஏத்தும் தலைவா - தேவர்களும் மண்ணுலகத்தோரும் வழிபடும் தலைவனே;

நிலையாகத் திரை ஆர் சடையானே - கங்கை நிலையாகத் தங்கிய சடையை உடையவனே;

சிக்கல் உறைவானே - சிக்கலில் உறைகின்றவனே;

அரையா - அரசனே; (அரையன் - அரசன்);

வினை நீக்கி அடியேற்கு அருளாயே - வினைகளைத் தீர்த்து அடியேனுக்கு அருள்வாயாக;


8)

மலைபேர்த் திடவந்தான் வாய்பத் தழவைத்தாய்

அலையார் கடல்நஞ்சம் ஆர்ந்த மணிகண்டா

சிலையால் புரமெய்தாய் சிக்கல் உறைவானே

தலைவா வினைநீக்கித் தமியேற் கருளாயே.


மலை பேர்த்திட வந்தான் வாய் பத்து அழவைத்தாய் - கயிலைமலையைப் பெயர்த்து எறிய வந்தவனான இராவணனுடைய பத்து வாய்களையும் அழச்செய்தவனே;

அலை ஆர் கடல் நஞ்சம் ஆர்ந்த மணிகண்டா - அலை பொருந்திய கடலில் எழுந்த விடத்தை உண்ட நீலமணி பொருந்திய கண்டனே; (ஆர்தல் - உண்ணுதல்); (அப்பர் தேவாரம் - 6.55.8 - "அருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி");

சிலையால் புரம் எய்தாய் - மேருமலை வில்லால் முப்புரங்களை எய்தவனே; (சிலை - மலை; வில்);

சிக்கல் உறைவானே - சிக்கலில் உறைகின்றவனே;

தலைவா - தலைவனே;

வினை நீக்கித் தமியேற்கு அருளாயே - வினைகளைத் தீர்த்துத் தமியேனாகிய எனக்கு அருள்வாயாக; (தமியன் - தனித்திருப்பவன்; கதியற்றவன்);


9)

கஞ்சன் அரிநேடிக் காணா எரியானாய்

வஞ்சி இடைமாதை வாமம் மகிழ்தேவா

செஞ்சொல் அடியார்சொல் சிக்கல் உறைவானே

அஞ்சு வினையெல்லாம் அகல அருளாயே.


கஞ்சன் அரி நேடிக் காணா எரி ஆனாய் - பிரமனும் திருமாலும் தேடிக் காணாத ஜோதி ஆனவனே; (கஞ்சன் - பிரமன்; கஞ்சம் - தாமரை); (நேடுதல் - தேடுதல்);

வஞ்சி-இடை மாதை வாமம் மகிழ் தேவா - வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய உமாதேவியை இடப்பக்கம் பாகமாக விரும்பிய தேவனே;

செஞ்சொல் அடியார் சொல் சிக்கல் உறைவானே - தேவாரம் திருவாசகம் முதலியவற்றை அடியவர்கள் பாடும் சிக்கலில் உறைகின்றவனே;

அஞ்சு-வினை எல்லாம் அகல அருளாயே - நான் அஞ்சுகின்ற வினைகள் எல்லாம் நீங்குவதற்கு அருள்வாயாக; (அகல்தல் - நீங்குதல்);


10)

அல்லும் பகலும்பொய் அதனிற் புரள்புல்லர்

சொல்லும் நெறிநீங்கும் சூலப் படையெம்மான்

செல்வ வயல்சூழ்ந்த சிக்கல் உறையீசன்

தொல்லை வினைதீர்த்துத் தொண்டர்க் கருள்வானே.


அல்லும் பகலும் பொய்-அதனில் புரள் புல்லர் சொல்லும் நெறி நீங்கும் - இராப்பகலாகப் பொய்யிலே புரள்கின்ற கீழோர் சொல்லும் மார்க்கங்களை நீங்குங்கள்;

சூலப்படை எம்மான் - சூலாயுதம் ஏந்திய எம்பெருமான்; (படை - ஆயுதம்);

செல்வ வயல் சூழ்ந்த சிக்கல் உறை ஈசன் - வளம் மிக்க வயல் சூழ்ந்த சிக்கலில் உறைகின்ற ஈசன்; ("செல்வச் சிக்கல் & வயல் சூழ்ந்த சிக்கல்" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (சுந்தரர் தேவாரம்- 7.83.4 - "செல்வ வயற்கழனித் தென்திருவாரூர்");

தொல்லை வினை தீர்த்துத் தொண்டர்க்கு அருள்வானே - அவன் பழவினையைத் தீர்த்துத் அடியவர்களுக்கு அருள்புரிவான்; (தொல்லை - பழைமை);


11)

ஒவ்வோர் கலையாக ஒளிதேய் மதியென்றும்

செவ்வே திகழத்தன் சென்னி மிசைவைத்தான்

செவ்வாய் உமைபங்கன் சிக்கல் உறையீசன்

அவ்வான் உலகத்தை அன்பர்க் கருள்வானே.


ஒவ்வோர் கலையாக ஒளி தேய் மதி என்றும் செவ்வே திகழத் தன் சென்னிமிசை வைத்தான் - சாபத்தால் ஒவ்வொரு கலையாக ஒளி மங்கித் தேய்ந்துவந்த சந்திரன் என்றும் நன்றாக விளங்கும்படி தன் திருமுடிமேல் வைத்தவன்; (செவ்வே - நன்றாக); (பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 12.29.310 - "சீத மலர்க்கண் கொடுத்தருளச் செவ்வே விழித்து முகமலர்ந்து");

செவ்வாய் உமைபங்கன் - சிவந்த வாயை உடைய உமாதேவியை ஒரு பங்காக உடையவன்;

சிக்கல் உறை ஈசன் - சிக்கலில் உறைகின்ற ஈசன்;

அவ்வான் உலகத்தை அன்பர்க்கு அருள்வானே - அப்பெருமான் அடியவர்களுக்கு வானுலகத்தை அருள்புரிவான் (/ அருள்புரிபவன்);


பிற்குறிப்பு :

1) யாப்புக்குறிப்பு :

கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - என்ற அமைப்பு.

மாங்காய்ச்சீர் வரும் இடங்களில் பொதுவாக புளிமாங்காய்ச்சீர் வரும்; ஒரோவழி (சில சமயம்) கூவிளமும் வரலாம்.


2) சம்பந்தர் தேவாரம் - 1.80.1 -

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே

செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------