Showing posts with label தானன தானன தானதனா. Show all posts
Showing posts with label தானன தானன தானதனா. Show all posts

Thursday, January 18, 2024

07.28 – இடைச்சுரம் (திருவடிசூலம்) - வழிபடு மறையவன்

07.28 – இடைச்சுரம் (திருவடிசூலம்)

2016-03-09

இடைச்சுரம் (இக்காலத்தில் - திருவடிசூலம்) (இத்தலம் செங்கல்பட்டு அருகே உள்ளது)

-----------------------

(வஞ்சி விருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.2 - "அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்")

(சம்பந்தர் தேவாரம் - 1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")


1)

வழிபடு மறையவன் வாழ்வுபெறக்

கழல்கொடு கூற்றுதை கருணையினான்

அழலுறு மேனியன் அமர்பதிதான்

எழிலுறு வயலணி இடைச்சுரமே.


வழிபடு மறையவன் வாழ்வு பெறக் - வழிபட்ட மறைச்சிறுவரான மார்க்கண்டேயர் இறவாது உயிர்வாழும்படி;

கழல்கொடு கூற்று உதை கருணையினான் - கழல் அணிந்த திருவடியினால் எமனை உதைத்த அன்பு உடையவன்; (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு);

அழல் உறு மேனியன் அமர் பதிதான் - தீப்போலச் செம்மேனி உடைய சிவபெருமான் விரும்பி உறையும் தலம் ஆவது; (உறுதல் - ஒத்தல்); (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);

எழில் உறு வயல் அணி இடைச்சுரமே - அழகிய வயல்கள் சூழ்ந்த திருவிடைச்சுரம் ஆகும்; (உறுதல் - பொருந்துதல்; மிகுதல்);


2)

ஓரடல் விடையினன் உலகமுய்ய

நீரடை சடையினன் நீள்மதியன்

காரடை மிடறினன் கருதுமிடம்

ஏருடை வயலணி இடைச்சுரமே.


ஓர் அடல் விடையினன் - ஒப்பற்ற வலிய இடபத்தை ஊர்தியாக உடையவன்; (ஓர் - ஒப்பற்ற); (அடல் - வலிமை; வெற்றி);

உலகம் உய்ய நீர் அடை சடையினன் - உலகம் உய்யும்படி கங்கையைச் சடையில் அடைத்தவன்; (திருவாசகம் - திருச்சாழல் - 8.12.7 - "சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ");

நீள்மதியன் - பிறைச்சந்திரனை அணிந்தவன்;

கார் அடை மிடறினன் கருதும் இடம் - கருமை அடைந்த கண்டத்தை உடைய ஈசன் விரும்பும் இடம்; (கார் - கருமை); (கருதுதல் - விரும்புதல்);

ஏர் உடை வயல் அணி இடைச்சுரமே - அழகிய வயல்கள் சூழ்ந்த திருவிடைச்சுரம் ஆகும்; (ஏர் - அழகு; கலப்பை; உழவு);


3)

ஆறிய சிந்தையர் அடிபரவிக்

கூறிய கோமகன் குளிர்மதியன்

மாறிலன் மகிழிடம் மந்திகள்போய்

ஏறிடும் மதிலணி இடைச்சுரமே.


ஆறிய சிந்தையர் அடி பரவிக் கூறிய கோமகன் - தணிந்த மனம் உடைய அடியவர்கள் திருவடியை வாழ்த்திக் கூறிய தலைவன்; (கோமகன் - அரசன்); (சம்பந்தர் தேவாரம் - 1.50.1 - "ஒல்லை ஆறி உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிந்து வெய்ய சொல்லை ஆறித்");

குளிர் மதியன் - குளிர்ந்த திங்களை அணிந்தவன்;

மாறு இலன் மகிழ் இடம் - ஒப்பற்றவனான சிவபெருமான் விரும்பி உறையும் தலம்; (மாறு - ஒப்பு );

மந்திகள் போய் ஏறிடும் மதில் அணி இடைச்சுரமே - குரங்குகள் ஏறுகின்ற மதிலை உடைய திருவிடைச்சுரம் ஆகும்;


4)

அறைகடல் நஞ்சினை ஆர்ந்தழகார்

கறைமிட றுடையவன் கண்ணுதலான்

மறையொரு நான்கையும் வாய்மொழிந்த

இறையவன் உறைபதி இடைச்சுரமே.


அறைகடல் நஞ்சினை ஆர்ந்து அழகு ஆர் கறைமிடறு உடையவன் - ஒலிக்கின்ற கடலில் எழுந்த விடத்தை உண்டு அழகிய நீலகண்டம் உடையவன்; (அறைதல் - ஒலித்தல்); (ஆர்தல் - உண்ணுதல்); (மிடறு - கண்டம்);

கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்; (நுதல் - நெற்றி);

மறை ஒரு நான்கையும் வாய்மொழிந்த இறையவன் உறை பதி இடைச்சுரமே - நால்வேதங்களைப் பாடியருளிய இறைவன் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


5)

நீறமர் மார்பினன் நேரிழையைக்

கூறமர் கொள்கையன் குளிர்மதியம்

ஆறமர் சடையினன் அடலுடைய

ஏறமர் இறைபதி இடைச்சுரமே.


நீறு அமர் மார்பினன் - மார்பில் திருநீற்றைப் பூசியவன்;

நேரிழையைக் கூறு அமர் கொள்கையன் - உமையை ஒரு கூறாக விரும்பியவன்;

குளிர் மதியம் ஆறு அமர் சடையினன் - குளிர்ந்த சந்திரனையும் கங்கையையும் சடையில் உடையவன்;

அடல் உடைய ஏறு அமர் இறை பதி இடைச்சுரமே - வலிய எருதை வாகனமாக விரும்பும் இறைவன் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


6)

காவல அருளெனக் கைதொழுது

பூவலர் கொடுசுரர் போற்றிடவும்

மேவலர் முப்புரம் வேவவெய்த

ஏவலன் உறைபதி இடைச்சுரமே.


"காவல அருள்" எனக் கைதொழுது - "காவலனே! அருள்வாயாக" என்று கைகூப்பி வணங்கி;

பூஅலர் கொடு சுரர் போற்றிடவும் - (அன்று) பூத்த அழகிய மலர்களால் தேவர்கள் துதிக்கவும்; (பூத்தல் - மலர்தல்); (பூ - மலர்; அழகு); (அலர் - மலர்); (சுரர் - தேவர்);

மேவலர் முப்புரம் வேவ எய்த ஏ வலன் - பகைவர்களது முப்புரங்களும் வெந்து அழியும்படி அம்பு எய்தவன்; (மேவலர் - பகைவர்); (ஏ வலன் - அம்பு எய்தலில் வல்லவன்); (சுந்தரர் தேவாரம் - 7.17.1 - "மேவலர் முப்புரம் தீயெழுவித்தவர் ஓரம்பினால் ஏவலனார்");

உறை பதி இடைச்சுரமே - அப்பெருமான் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


7)

அசைவிலன் ஆற்றினை அணிசடையின்

மிசைமதி புனையரன் விரும்புமிடம்

நசையொடு நறைமலர் நாடுவண்டின்

இசைமலி பொழிலணி இடைச்சுரமே.


அசைவு இலன் - அசைவற்றவன்; (அசைவு இலன் - அசலன் - அசைவில்லாதவன்);

ஆற்றினை அணி சடையின்மிசை மதி புனை அரன் விரும்பும் இடம் - கங்கையை அணிந்த சடையின்மேல் சந்திரனைச் சூடிய ஹரன் விரும்பி உறையும் தலம்;

நசையொடு நறைமலர் நாடு வண்டின் இசைமலி பொழில் அணி இடைச்சுரமே - விருப்பத்தோடு தேன்மலர்களை அடைகின்ற வண்டுகளின் இசை மிகுந்த சோலை சூழ்ந்த திருவிடைச்சுரம் ஆகும்; (நசை - விருப்பம்; ஆசை); (நறை - தேன்); (மலிதல் - மிகுதல்)


8)

வைதரு மலையசை வாளரக்கன்

கைதலை நெரித்தவர் கனல்மழுவர்

கொய்தவர் அயன்சிரம் கூடலரூர்

எய்தவர் உறைபதி இடைச்சுரமே.


வைது அரு மலை அசை வாள் அரக்கன் கை தலை நெரித்தவர் - (தன் தேர் ஓடாது கீழே இறங்கியதும்) இகழ்ந்து பேசிக் கயிலைமலையைப் பேர்க்க முயன்ற கொடிய அரக்கனான இராவணனுடைய கைகளையும் தலைகளையும் நசுக்கியவர்;

கனல் மழுவர் - பிரகாசிக்கும் மழுவை ஏந்தியவர்;

கொய்தவர் அயன் சிரம் - பிரமன் தலையைக் கிள்ளிப் பறித்தவர்;

கூடலர் ஊர் எய்தவர் - பகைவர்களது ஊர்களான முப்புரங்களை ஓர் அம்பால் எய்தவர்; (கூடலர் - கூடார் - பகைவர்);

உறை பதி இடைச்சுரமே - அப்பெருமானார் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


9)

செம்மலர்க் கண்ணனும் திசைமுகனும்

அம்மலர் அடிமுடி அறிவரியான்

இம்மையும் அம்மையும் இன்பமருள்

எம்மிறை உறைபதி இடைச்சுரமே.


செம்மலர்க் கண்ணனும் திசைமுகனும் - தாமரை போன்ற கண்களை உடைய திருமாலும் பிரமனும்; (செம்மலர் - தாமரை); (திசைமுகன் - நான்முகன்);

அம் மலர்அடி முடி அறிவு அரியான் - (தேடியும்) அழகிய மலர் போன்ற திருவடியையும் முடியையும் அறிய ஒண்ணாத பெருமான்; (அம் - அழகு; அந்த);

இம்மையும் அம்மையும் இன்பம் அருள் எம் இறை - அடியவர்களுக்கு இகபர சுகங்களை அருளும் எம் கடவுள்; (இம்மை - இப்பிறப்பு); (அம்மை - இப்பிறப்பின் பின் எய்தும் நிலை); (அப்பர் தேவாரம் - 5.14.4 - "இம்மை வானவர் செல்வம் விளைத்திடும் அம்மையேல் பிறவித்துயர் நீத்திடும்");

உறை பதி இடைச்சுரமே - அப்பெருமான் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


10)

வஞ்சக நெஞ்சினர் வாயுரைக்கும்

நஞ்சன சொல்விடும் நன்றறிவீர்

வெஞ்சின விடையினன் வீடருளும்

எஞ்சிவன் உறைபதி இடைச்சுரமே.


வஞ்சக நெஞ்சினர் வாய் உரைக்கும் நஞ்சு அன சொல் விடும் நன்று அறிவீர் - நல்லதை அறிந்தவர்களே! மனத்தில் வஞ்சம் உடையவர்கள் சொல்லும் விஷம் போன்ற சொல்லை நீங்குங்கள்; (அன - அன்ன - போன்ற); (விடும் - விடுங்கள்; நீங்குங்கள்);

வெஞ்சின விடையினன் - மிக்க சினம் உடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவன்;

வீடு அருளும் எம் சிவன் உறை பதி இடைச்சுரமே - வீடுபேறு அருள்கின்ற எம் சிவபெருமான் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


11)

நடமிடச் சுடலையை நாடுமரன்

வடமர நிழலமர் மறைமுதல்வன்

இடமலை மகளமர் எம்பெருமான்

இடமலர்ப் பொழிலணி இடைச்சுரமே.


நடம் இடச் சுடலையை நாடும் அரன் - கூத்தாடச் சுடுகாட்டை விரும்பும் ஹரன்;

வடமர நிழல் அமர் மறைமுதல்வன் - கல்லால மரத்தின் அடியில் அமர்ந்த தட்சிணாமூர்த்தி; (வடமரம் - கல்லால மரம்); (மறைமுதல்வன் - மறைமுதல் - சிவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.20.5 - "அணிபெறு வடமர நிழலினில் அமர்வொடும்");

இடம் மலைமகள் அமர் எம்பெருமான் - இடப்பக்கத்தில் உமாதேவியைப் பங்காக விரும்பிய எம்பெருமான்; (இடம் + மலைமகள் = இடமலைமகள்; இங்கே, புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும்);

இடம் மலர்ப்பொழில் அணி இடைச்சுரமே - அப்பெருமான் உறையும் தலம் மலர்ச்சோலைகள் சூழ்ந்த திருவிடைச்சுரம் ஆகும்;


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு:

  • வஞ்சிவிருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம். ("விளம் விளம் விளங்காய்");

  • தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா / தானதானா / தனனதானா என்றும் வரலாம்;

  • சந்தப்பாடல்களில் இடையின ஒற்றுகள் சில இடங்களில் அலகிடப்படா;

2) சம்பந்தர் தேவாரம் - 1.112.5 -

வீறுநன் குடையவள் மேனிபாகம்

கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்

நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்

தேறலுண் டெழுதரு சிவபுரமே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Saturday, November 11, 2023

07.21 – வேட்களம் (திருவேட்களம்) - இசைமலி தாளிணை

07.21 – வேட்களம் (திருவேட்களம்)

2016-01-19

வேட்களம் (திருவேட்களம்) (சிதம்பரத்தை அடுத்து உள்ள தலம்)

-----------------------

(வஞ்சி விருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம்)

(யாப்புக் குறிப்பைக் கீழே காண்க)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.2 - "அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்")

(சம்பந்தர் தேவாரம் - 1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")


1)

இசைமலி தாளிணை ஏத்துமதி

அசைவறச் சடைமிசை அணியரனூர்

விசைமலி கணைதொடு வேட்டுவனாய்

விசயனுக் கருளிய வேட்களமே.


இசை மலி தாள் இணை ஏத்து மதி - புகழ் மிக்க இரு-திருவடிகளை வணங்கிய சந்திரனுடைய; (இசை - புகழ்);

அசைவு அறச் சடைமிசை அணி அரன் ஊர் - கலக்கம் தீரும்படி சடையின்மேல் அணிந்த சிவபெருமான் உறையும் இடம்; (அசைவு - சலனம்; தளர்ச்சி; வருத்தம்);

விசை மலி கணை தொடு வேட்டுவன் ஆய் - விரைந்து செல்லும் அம்பை ஏவும் வேடன் ஆகி; (விசை - வேகம்);

விசயனுக்கு அருளிய வேட்களமே - அருச்சுனனுக்கு அருளிய திருவேட்களம் ஆகும்;


2)

கானிடை ஆடிடு கழல்தொழுத

கூனிள மதியணி குஞ்சியினான்

மானிணை நோக்குடை மங்கையுறை

மேனியன் ஊர்திரு வேட்களமே.


கானிடை ஆடிடு கழல் தொழுத கூன் இள மதி அணி குஞ்சியினான் - சுடுகாட்டில் திருநடம் செய்யும் திருவடியை வணங்கிய வளைந்த இளம்பிறைச்சந்திரனை அணிந்த சென்னி உடையவன்; (கான் - காடு - சுடுகாடு); (கூன் - வளைவு); (குஞ்சி - தலைமயிர்; தலை);

மான் இணை நோக்குஉடை மங்கை உறை மேனியன் ஊர் திருவேட்களமே - மான் போன்ற பார்வை உடைய உமையை இடப்பக்கம் தாங்கிய திருமேனியன் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்;


3)

இடைமெலி மங்கையை இடமுடையான்

உடையெனக் கொல்புலி உரிவையினான்

சடையிடை ஆறணி சங்கரனோர்

விடையினன் ஊர்திரு வேட்களமே.


இடைமெலி மங்கையை இடம் உடையான் - மெலிந்த இடையுடைய உமையை இடப்பக்கம் உடையவன்;

உடை எனக் கொல்-புலி உரிவையினான் - கொல்லும் தன்மையுடைய புலியின் தோலை உடையாகக் கொண்டவன்; (உரிவை - தோல்);

சடையிடை ஆறு அணி சங்கரன் - கங்காதரன், சங்கரன்;

ர் விடையினன் ஊர் திருவேட்களமே - ஒப்பற்ற இடப வாகனம் உடைய சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்; (ஓர் - ஒப்பற்ற);


4)

கண்ணமர் நெற்றியன் கதிர்மதியக்

கண்ணியன் இடமொரு காரிகையான்

தண்ணதி தங்கிய சடையுடைய

விண்ணவர் கோனிடம் வேட்களமே.


கண் அமர் நெற்றியன் - நெற்றிக்கண்ணன்;

கதிர்-மதியக் கண்ணியன் - கதிர்கள் உடைய திங்களைக் கண்ணி போல முடிமேல் அணிந்தவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

இடம் ஒரு காரிகையான் - அர்த்தநாரீஸ்வரன்; (காரிகை - பெண்);

தண் நதி தங்கிய சடை உடைய விண்ணவர் கோன் இடம் வேட்களமே - குளிர்ந்த கங்கை தங்கிய சடையை உடையவனும் தேவர்கள் தலைவனுமான சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்;


5)

காருரு மாகரி கதறவுரி

சீருறு விறலினன் சீறரவம்

நீருறு சடையினன் நீள்மதிலெய்

மேருவில் லானிடம் வேட்களமே.


கார் உரு மா கரி கதற உரி சீர் உறு விறலினன் - கரிய உருவம் உடைய பெரிய ஆனை கதறும்படி அதன் தோலை உரித்த புகழ் உடைய வெற்றி உடையவன்; (சீர் - புகழ்; பெருமை); (விறல் - வெற்றி; வீரம்; வலிமை);

சீறு அரவம் நீர் உறு சடையினன் - சீறுகின்ற நாகமும் கங்கையும் இருக்கும் சடையை உடையவன்;

நீள் மதில் எய் மேருவில்லான் இடம் வேட்களமே - பெரிய முப்புரங்களையும் எய்த மேருவில்லை ஏந்திய சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்;


6)

பூவன பொன்னடி போற்றியவர்

காவலன் நெற்றியிற் கண்ணுடையான்

தேவருக் கிடர்புரி திரிபுரங்கள்

வேவவெய் தானிடம் வேட்களமே.


பூ அன பொன்னடி போற்றியவர் காவலன் - மலர் போன்ற பொற்பாதத்தை வணங்கிய பக்தர்களைக் காப்பவன்; (அன - அன்ன);

நெற்றியிற் கண் உடையான் - நெற்றிக்கண்ணன்;

தேவருக்கு இடர்புரி திரிபுரங்கள் வேவ எய்தான் இடம் வேட்களமே - தேவர்களுக்கு இன்னல் விளைத்த முப்புரங்களும் வெந்து அழியும்படி ஓர் கணை எய்த சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்;


7)

கொள்ளியை ஏந்திய கூளிபாட

நள்ளிரு ளில்திரு நடமிடுவான்

தெள்ளிய புனலணி செஞ்சடையான்

வெள்விடை யானிடம் வேட்களமே.


கொள்ளியை ஏந்திய கூளி பாட நள்ளிருளில் திருநடம் இடுவான் - கொள்ளியை ஏந்திப் பேய்கள் பாடிச் சூழ்ந்திருக்க, நள்ளிருளில் கூத்தாடுபவன்; (கூளி - பேய்; பூதம்);

தெள்ளிய புனல் அணி செஞ்சடையான் - தெளிந்த நீரை உடைய கங்கையைச் செஞ்சடையில் ஏற்றவன்;

வெள்விடையான் இடம் வேட்களமே - வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்;


8)

வெல்விடை ஊர்தியன் வெற்பிடந்த

வல்லரக் கன்தன வாய்களழ

மெல்விரல் ஊன்றிய விமலனிடம்

வில்விச யற்கருள் வேட்களமே.


வெல்விடை ஊர்தியன் வெற்பு இடந்த வல்-அரக்கன்தன வாய்கள் அழ - வெற்றியுடைய இடபவாகனனது கயிலைமலையைப் பெயர்த்த வலிய அரக்கனான இராவணனுடைய வாய்கள் அழும்படி; (இடத்தல் - பெயர்த்தல்); (தன = தன் + ; - ஆறாம் வேற்றுமை உருபு);

மெல்விரல் ஊன்றிய விமலன் இடம் - மென்மையான திருப்பாத விரலை ஊன்றிய தூயனான சிவபெருமான் உறையும் தலம்;

வில்விசயற்கு அருள் வேட்களமே - வில்லுக்கு விஜயன் என்ற புகழ் உடைய அருச்சுனனுக்கு அருள்புரிந்த திருவேட்களம் ஆகும்;


9)

வாதிடு நான்முகன் மாலறியா

ஆதியில் அந்தமில் ஆரழலன்

மாதிணை மேனியன் மாமறைசொல்

வேதியன் ஊர்திரு வேட்களமே.


வாதிடு நான்முகன் மால் அறியா - வாது செய்த பிரமன் திருமால் இவர்களால் அறியப்படாத;

ஆதி இல் அந்தம் இல் ஆர் அழலன் - ஆதியும் அந்தமும் இல்லாத அரிய சோதி வடிவினன்;

மாது இணை மேனியன் - உமை ஒரு பாகமாக இணைந்த திருமேனியை உடையவன்;

மாமறை சொல் வேதியன் - சிறந்த பெரிய வேதங்களால் சொல்லப்படும் வேதியன்; வேதங்களைப் பாடியருளிய வேதியன்;


10)

மெய்யுரை யாதுழல் வீணர்களின்

பொய்களை நீங்குமின் புந்தியுளீர்

செய்வினை தீரிறை செம்பவள

மெய்யினன் ஊர்திரு வேட்களமே.


மெய் உரையாது உழல் வீணர்களின் பொய்களை நீங்குமின் புந்தி உளீர் - அறிவுடையவர்களே! உண்மையைச் சொல்லாமல் திரிகின்ற துஷ்டர்கள் சொல்லும் பொய்களை நீங்குங்கள்; (வீணன் - பயனற்றவன்; துன்மார்க்கன்); (புந்தி - புத்தி - அறிவு);

செய்வினை தீர் இறை - முன்பு செய்த வினைகளைத் தீர்க்கும் இறைவன்;

செம்பவள மெய்யினன் ஊர் திரு வேட்களமே - செம்பவளம் போல் செம்மேனி உடைய சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்; (மெய் - மேனி); (சம்பந்தர் தேவாரம் - 1.61.7 - "மலைமகளோர் பாகமாம் மெய்யினான்");


11)

சுடலையின் நீறணி தூயனொரு

புடையணி மாதமர் பொற்புடையான்

அடல்விடை ஊர்தியன் ஆலமணி

மிடறுடை யானிடம் வேட்களமே.


சுடலையின் நீறு அணி தூயன் - சுடுகாட்டுச் சாம்பலை அணியும் தூயவன்;

ஒரு புடை அணி மாது அமர் பொற்பு உடையான் - ஒரு பக்கம் அழகிய மங்கை இருக்கும் குணம் உடையவன்; (பொற்பு - அழகு; தன்மை);

அடல் விடை ஊர்தியன் - வலிய எருதை வாகனமாக உடையவன்;

ஆலம் அணி மிடறு உடையான் இடம் வேட்களமே - விடத்தைக் கண்டத்தில் அணிந்த சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்; (ஆலம் - நஞ்சு); (மிடறு - கண்டம்);

(ஆலமணிமிடறு - 1. ஆலம் அணி மிடறு; 2. ஆல மணி மிடறு);


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு:

  • வஞ்சிவிருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம். ('விளம் விளம் விளங்காய்');

  • தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா / தானதானா / தனனதானா என்றும் வரலாம்;

  • சந்தப்பாடல்களில் இடையின ஒற்றுகள் சில இடங்களில் அலகிடப்படா;

2) சம்பந்தர் தேவாரம் - 1.112.5 -

வீறுநன் குடையவள் மேனிபாகம்

கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்

நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்

தேறலுண் டெழுதரு சிவபுரமே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Saturday, March 4, 2023

07.05 – பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)

07.05 – பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)

2015-11-09

பாண்டிக்கொடுமுடி (இக்காலத்தில் - கொடுமுடி)

--------------------------------

(வஞ்சி விருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம்)

(யாப்புக் குறிப்பைக் கீழே காண்க)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.1 - "அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்")


1)

அஞ்சுதல் அற்றிட அடைமனமே

வெஞ்சின மறலியை வீட்டியவன்

நஞ்சினை மணிசெய்த நம்பெருமான்

குஞ்சிவெண் பிறையினன் கொடுமுடியே.


அஞ்சுதல் அற்றிட அடை மனமே - மனமே, அச்சம் நீங்க அடைவாயாக;

வெஞ்சின மறலியை வீட்டியவன் - கொடிய கோபம் உடைய கூற்றுவனை அழித்தவன்; (மறலி - நமன்; இயமன்); (வீட்டுதல் - அழித்தல்; கொல்லுதல்);

நஞ்சினை மணி செய்த நம் பெருமான் - ஆலகாலத்தைக் கண்டத்தில் நீலமணி ஆக்கிய நம் பெருமான்;

குஞ்சி வெண்பிறையினன் கொடுமுடியே - உச்சியில் வெண்பிறையைச் சூடியவன் உறையும் கொடுமுடியை; (குஞ்சி - உச்சிமயிர்; தலை);


2)

மிக்குள பண்டைய வினையகல

அக்கரன் அடிதொழ அடைமனமே

செக்கரஞ் சடையினன் திருமுடிமேல்

கொக்கிற கணிந்தவன் கொடுமுடியே.


மிக்கு உள பண்டைய வினை அகல - மிகுந்திருக்கும் பழைய வினைகள் நீங்க; (மிகுதல் - அதிகமாதல்; மிகுதல் = எஞ்சுதல் என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

அக்கரன் - அக்ஷரன் - அழிவற்றவன் (God, as the indestructible One); ("அக்கினை அணிந்த அரன்" என்று உருபும் பயனும் உடன்தொக்கதொகை என்று கொண்டும் பொருள்கொள்ளல் ஆம். அக்கு = எலும்பு );

செக்கர் அம் சடையினன் - சிவந்த, அழகிய சடையை உடையவன்; (செக்கர் - சிவப்பு);

திருமுடிமேல் கொக்கிறகு அணிந்தவன் - கொக்கு வடிவினனான குரண்டாசுரனை அழித்த அடையாளம்;


3)

களிமிகு வாழ்வினைக் கருதிடில்நீ

அளிகொடு கழல்தொழ அடைமனமே

அளியறை கொன்றையை அணிசடையில்

குளிர்நதி அடையரன் கொடுமுடியே.


களி - இன்பம்;

கருதிடில் - விரும்பினால்;

அளிகொடு - அன்போடு; (அளி - அன்பு);

அளி அறை கொன்றையை அணி சடையில் - வண்டுகள் ரீங்காரம் செய்யும் கொன்றைமலரை அணிந்த சடையில்;

குளிர்நதி அடை அரன் கொடுமுடியே - குளிர்ந்த கங்கையை அடைத்த சிவன் உறையும் கொடுமுடியை;


4)

இன்றெவர் எம்துணை எனவெருவேல்

துன்றிய மலர்கொடு தொழுமனமே

வென்றிகொள் விடையினன் விரிசடையன்

கொன்றையந் தாரினன் கொடுமுடியே.


இன்று எவர் எம் துணை என வெருவேல் - இன்று யார் நமக்குத் துணை என்று அஞ்சாதே; (வெருவுதல் - அஞ்சுதல்);

துன்றிய மலர்கொடு தொழு மனமே - நெருங்கத் தொடுத்த மலர்களால் வணங்கு மனமே; (துன்றுதல் - நெருங்குதல்); (சுந்தரர் தேவாரம் - 7.83.2 - "இருபொழுதும் துன்று மலரிட்டுச்");

வென்றிகொள் விடையினன் விரிசடையன் - வெற்றியை உடைய இடப வாகனன், விரிந்த சடையை உடையவன்;

கொன்றை அம் தாரினன் கொடுமுடியே - அழகிய கொன்றைமாலையை அணிந்த சிவன் உறையும் கொடுமுடியை;


5)

நஞ்சுரம் பிணியற நண்ணுநெஞ்சே

அஞ்சர மதனுடல் அறவிழித்தான்

வெஞ்சரம் மூவெயில் வேவவெய்தான்

குஞ்சரம் உரித்தவன் கொடுமுடியே.


நம் சுரம் பிணி அற நண்ணு நெஞ்சே - நம் நோய்கள், பிணிகள் நீங்க, மனமே அடைவாயாக;

அம் சர மதன் உடல் அற விழித்தான் - அழகிய பூங்கணை ஏவும் மன்மதனின் அழகிய உடல் அழிய நெற்றிக்கண்ணால் பார்த்தவன்;

வெம் சரம் மூஎயில் வேவ எய்தான் - முப்புரங்களும் எரிந்து அழியும்படி தீக்கணையை ஏவியவன்;

குஞ்சரம் உரித்தவன் கொடுமுடியே - எதிர்த்த யானையின் தோலை உரித்தவன், சிவன் உறையும் கொடுமுடியை;


6)

வல்வினை மாய்ந்திட வாழ்த்துநெஞ்சே

வெல்விடைக் கொடியினன் வில்லெனவோர்

கல்வளை கையினன் கருணையினால்

கொல்விடம் உண்டவன் கொடுமுடியே.


வல்வினை மாய்ந்திட வாழ்த்து நெஞ்சே - வலிய வினைகள் அழிய, மனமே வாழ்த்துவாயாக;

வெல் விடைக் கொடியினன் - வெல்லும் இடபக்கொடி உடையவன்;

வில் என ஓர் கல் வளை கையினன் - (முப்புரம் எரித்த சமயத்தில்) வில் என்று ஒரு மலையை வளைத்த திருக்கரம் உடையவன்; (கல் - மலை)

கருணையினால் கொல் விடம் உண்டவன் கொடுமுடியே - மிகுந்த கருணையோடு ஆலகால விஷத்தை உண்ட சிவன் உறையும் கொடுமுடியை;


7)

ஆவிகொள் அந்தகன் அடைவதன்முன்

பூவினை அடியிடப் புகுமனமே

ஆவினில் அஞ்சுகந் தாடுமரன்

கூவிள மாலையன் கொடுமுடியே.


ஆவிகொள் அந்தகன் அடைவதன்முன் - நம் உயிரைக் கொள்ள யமன் வந்துசேர்வதன் முன்னமே;

பூவினை அடி இடப் புகு மனமே - மனமே, பூக்களை ஈசன் திருவடியில் இட்டு வழிபடுவதற்குச் சேர்வாயாக;

ஆவினில் அஞ்சு உகந்து ஆடும் அரன் - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் விரும்பும் ஹரன்;

கூவிள மாலையன் கொடுமுடியே - வில்வமாலை அணியும் சிவன் உறையும் கொடுமுடியை;

(அப்பர் தேவாரம் - 6.3.1 - "வெறிவிரவு கூவிளநல் தொங்கலானை" - நறுமணம் கமழும் வில்வமாலை அணிந்தவனை)


8)

பார்மிசை இன்புறப் பணிமனமே

தேர்விடத் திருமலை அசைத்தவற்குப்

பேர்வர ஓர்விரல் ஊன்றியவன்

கூர்மழு வாளினன் கொடுமுடியே.


பார்மிசை இன்புறப் பணி மனமே - மனமே, இவ்வுலகில் இன்புற்று வாழ வணங்கு;

தேர் விடத் திருமலை அசைத்தவற்குப் - தன் இரதத்தைச் செலுத்துவதற்காகக் கயிலைமலையைப் பேர்க்க எண்ணி அசைத்தவனுக்கு;

பேர் வர ஓர் விரல் ஊன்றியவன் - இராவணன் (அழுதவன்) என்று பெயர் வரும்படி ஒரு பாதவிரலை ஊன்றிய பெருமான்;

கூர் மழு வாளினன் கொடுமுடியே - கூர்மை உடைய மழுவாயுதத்தை ஏந்திய சிவன் உறையும் கொடுமுடியை;


(சந்தக் குறிப்பு: 3-ஆம் சீரில் "அசைத்தவற்கு" என்று வருவதை ஒத்த பிரயோகம் -

சம்பந்தர் தேவாரம் - 1.113.8 - "இகழ்ந்தரு வரையினை யெடுக்கலுற்றாங் ககழ்ந்தவல் லரக்கனை யடர்த்தபாதம்);


9)

மிடியொடு வினைகெட நினைமனமே

அடிமுடி அன்றரி அயனறியா

வடிவினன் வண்டமர் வார்குழலாள்

கொடியிடை பங்கினன் கொடுமுடியே.


மிடியொடு வினை கெட நினை மனமே - மனமே, துன்பமும் வறுமையும் வினைகளும் அழிய, நினைவாயாக;

அடி முடி அன்று அரி அயன் அறியா வடிவினன் - தம்முள் மாறுபட்ட விஷ்ணுவும் பிரமனும் முன்பு தேடி அடியும் முடியும் அறியாத சோதி வடிவினன்; (அன்று - அந்நாள்); (அன்றுதல் - பகைத்தல்);

வண்டு அமர் வார் குழலாள் கொடி இடை பங்கினன் கொடுமுடியே - வண்டுகள் விரும்பும் நீண்ட கூந்தலை உடையவளும் கொடி போன்ற இடையை உடையவளுமான உமாதேவியை ஒரு பங்கில் உடைய சிவன் உறையும் கொடுமுடியை;


10)

மாற்றிவம் எனமறை நெறியையிகழ்

கூற்றுரை கொள்கையர் மொழிமதியேல்

ஆற்றினை அணிசடை அண்ணலடல்

கூற்றுதை கோனிடம் கொடுமுடியே.


மாற்றி வம் என - (உங்கள் நம்பிக்கை, வழிபாட்டு முறை, பழக்கவழக்கங்கள், கொள்கைகள், முதலியனவற்றை) "மாற்றி வாருங்கள்" என்று;

மறைநெறியை இகழ் கூற்று உரை கொள்கையர் மொழி மதியேல் - வேதநெறியைப் பழிக்கின்ற சொற்களைப் பேசும் கொள்கையை உடையவர்களது வார்த்தைகளை மதிக்கவேண்டா;

ஆற்றினை அணி சடை அண்ணல் - கங்கையைச் சடையில் அணிந்த பெருமான்;

அடல் கூற்று உதை கோன் இடம் கொடுமுடியே - வலிய காலனை உதைத்து அழித்த தலைவனான சிவபெருமான் உறையும் தலம் கொடுமுடி ஆகும்; ("அப்பெருமானை வழிபட்டு நலம் பெறுங்கள்" என்பது குறிப்பு);


11)

அமைதியை உற்றிட அடைமனமே

உமையொரு கூறென உடையபிரான்

இமையவர் வந்தடி இணைபரவக்

குமைவிடம் உண்டவன் கொடுமுடியே.


அமைதியை உற்றிட அடை மனமே - மனமே, நிம்மதியைப் பெற்றிட அடைவாயாக;

உமை ஒரு கூறு என உடைய பிரான் - உமாதேவியை ஒரு பங்காக உடைய தலைவன்;

இமையவர் வந்து அடியிணை பரவக் - தேவர்கள் வந்து இரு திருவடிகளைப் போற்றவும்;

குமை விடம் உண்டவன் கொடுமுடியே - கொல்லும் விஷத்தை உண்டு காத்த சிவன் உறையும் கொடுமுடியை;.


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு:

  • வஞ்சிவிருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம். ('விளம் விளம் விளங்காய்');

  • தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா/தானதானா என்றும் வரலாம்;

  • சந்தப்பாடல்களில் இடையின ஒற்றுகள் சில இடங்களில் அலகிடப்படா;

2) சம்பந்தர் தேவாரம் - 1.112.1 -

அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்

பொன்றிட வுதைசெய்த புனிதனகர்

வென்றிகொ ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்

சென்றடி வீழ்தரு சிவபுரமே.

3) பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - மகுடேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=64

4) பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) தலக்குறிப்பு: https://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=806

"திருமுறைத் தலங்கள்" என்ற நூலில் பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதியது:

ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் நடந்த போட்டியில் ஆதிசேஷன் சுற்றிய மேருவின் ஆயிரம் சிகரங்களுள் ஒன்று, ஐந்து மணிகளாக உடைப்பட்டுச் சிதறியது.

அவற்றுள் சிவப்புமணி திருவண்ணாமலையாகவும், மரகதம் ஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் திருவாட்போக்கியாகவும், நீலம் பொதிகையாகவும், வைரம் கொடுமுடியாகவும் ஆயின என்பது தலபுராணம்.

மேருமலையின் ஒரு கொடுமுடி (சிகரம்) இங்கு வீழ்ந்தமையால் இப்பெயர் வந்தது என்பது வரலாறு. அதுவே சிவலிங்கமாக உள்ளது. சிவலிங்கம் மிகவும் குட்டையானது. சிகர வடிவில் உள்ளது. அகத்தியர் தழுவிய விரல் தழும்பு மேலே உள்ளது. சதுரபீடம். பாண்டிய மன்னனின் விரல் வளர்ந்து குறை தீர்ந்த தலமாதலின் "பாண்டிக் கொடுமுடி" என்றாயிற்று (அங்கவர்த்தனபுரம்). பரத்வாசர், அகத்தியர் வழிபட்ட தலம்.

-------------- --------------