Showing posts with label புஜங்கம். Show all posts
Showing posts with label புஜங்கம். Show all posts

Saturday, May 10, 2025

V.042 - சிவாஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

2017-08-06

V.042 - சிவாஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

---------------------------------

(மூவடிமேல் ஓரடி வைப்பு)

(தனானா தனானா தனானா தனானா - சந்தம்; இந்தச் சந்தத்தை வடமொழியில் புஜங்கம் என்பர்)


* முற்குறிப்பு : சிவாஷ்டகங்கள் சில உள்ளன. அவற்றுள் "ப்ரபும் ப்ராணநாதம்" என்று தொடங்கும் சிவாஷ்டகம் பலரும் கேட்டுள்ள / கேள்விப்பட்டுள்ள ஒன்று. பல துதிப்பாடல்களில் நிகழ்வதுபோல இதனிலும் சில பாடபேதங்கள் உள்ளன. இந்தச் சிவாஷ்டகம் வடமொழியில் புஜங்கம் என்ற யாப்பமைப்பில் உள்ளது.

இந்தச் சிவாஷ்டகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாக அதே புஜங்கச் சந்தத்தில் அமைந்த அஷ்டகம் இது.


1)

பிரானெம்மு யிர்க்கோன் அகன்ஞால நாதன்

முராரிக்கு மையன் அறாவின்ப னாகி

இராவிற்கு மப்பால் உளன்பூத நாதன்

.. சிவன்சங்க ரன்சம் புதாள்போற்றி போற்றி.


பதம் பிரித்து:

பிரான்; எம் உயிர்க்-கோன்; அகன் ஞால நாதன்;

முராரிக்கும் ஐயன்; அறா இன்பன் ஆகி,

இராவிற்கும் அப்பால் உளன்; பூத-நாதன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பிரான் - தலைவன்;

எம் உயிர்க்-கோன் - எம் உயிர்க்குத் தலைவன்;

அகன் ஞால நாதன் - அகன்ற உலகங்களுக்குத் தலைவன்; (ஞாலம் - உலகம்);

முராரிக்கும் ஐயன் - திருமாலுக்கும் தலைவன்; (முராரி - முரன் என்ற அசுரனைக் கொன்றவன் - திருமால்);

அறா இன்பன் ஆகி - என்றும் தீராத, அழியாத பேரின்ப வடிவன் ஆகி; (அறுதல் - இல்லாமற் போதல்; தீர்தல்);

இராவிற்கும் அப்பால் உளன் - காலத்தைக் கடந்தவன்; அன்றும் இன்றும் என்றும் உள்ளவன்; (இரா - இரவு - மஹா சம்ஹார காலம்); (அற்புதத் திருவந்தாதி - 11.4.25 - பொங்கிரவில் ஈமவனத் தாடுவதும்");

பூத-நாதன் - பூதகணங்களுத் தலைவன்;

சிவன் சங்கரன் சம்பு - ஈசன் திருநாமங்கள்;

தாள் போற்றி போற்றி - திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


2)

சிரங்கள்பு னைந்தான் அராவார்ந்த ஆகன்

இருங்கூற்று தைத்தான் விசும்போர்ப்பு ரந்தான்

பெருங்கங்கை மோதும் படர்செஞ்ச டைக்கோன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

சிரங்கள் புனைந்தான்; அரா ஆர்ந்த ஆகன்;

இருங்கூற்று உதைத்தான்; விசும்போர்ப் புரந்தான்;

பெருங்கங்கை மோதும் படர்-செஞ்சடைக்-கோன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


சிரங்கள் புனைந்தான் - தலைமாலை அணிந்தவன்; (சிரம் - தலை; கபாலம்); (சம்பந்தர் தேவாரம் - 1.44.2 - "கனல்சுடரால் இவர் கண்கள் தலையணி சென்னியர்");

அரா ஆர்ந்த ஆகன் - பாம்புகளை உடம்பில் அணிந்தவன்; (அரா - பாம்பு); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்; அணிதல்); (ஆகம் - உடம்பு);

இரும்-கூற்று உதைத்தான் - பெரிய கரிய நமனை உதைத்தவன்; (இருமை - பெருமை; கருமை); (அப்பர் தேவாரம் - 6.85.6 - "பெருங்கூற்றைச் சேவடியினால் செற்றவன்காண்"); (அப்பர் தேவாரம் - 4.109.1 - "இருங்கூற்றகல"); (குலோத்துங்க சோழனுலா - "பேழ்வா யிருங்கூற்றுக் கேற்ப வழக்குரைக்குஞ் செங்கோல் வளவன்");

விசும்போர்ப் புரந்தான் - தேவர்களைக் காப்பவன்; (விசும்பு - வானுலகு; விசும்போர் - தேவர்கள்): (புரத்தல் - காத்தல்; பாலனம் செய்தல்; அருள்செய்தல்); (புரந்தான் என்ற இறந்தகாலப் பிரயோகம் - சில பாடல்களில் அது போல இறந்தகாலப் பிரயோகம் வருவதுண்டு. உதாரணம்: அப்பர் தேவாரம் - 6.68.7 - "தொண்டர் வல்வினைவே ரறும்வண்ணம் மருந்துமாகித் தீர்த்தானை"); (இலக்கணக் குறிப்பு - "விசும்போர்ப் புரந்தான்" - உயர்திணையில் இரண்டாம்-வேற்றுமைத்தொகையில் பொருளின் தெளிவு கருதி வல்லொற்று மிகும்);

பெரும்-கங்கை மோதும் படர்-செஞ்சடைக்-கோன் - பெரிய கங்கைநதியின் அலைகள் மோதுகின்ற, படர்ந்த செஞ்சடையை உடைய தலைவன்;

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


3)

மகிழ்ச்சிக்கொ ரூற்றாய் மணிக்குள்மி ளிர்ந்தான்

நிகர்ப்பில்லி அண்டன் பொடிப்பூசு மண்ணல்

தகர்ப்பான்ம யக்கம் வரம்பாதி இல்லான்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

மகிழ்ச்சிக்கொர் ஊற்றாய், மணிக்குள் மிளிர்ந்தான்;

நிகர்ப்பில்லி; அண்டன்; பொடிப்-பூசும் அண்ணல்;

தகர்ப்பான் மயக்கம்; வரம்பு-ஆதி இல்லான்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


மகிழ்ச்சிக்கு ஒர் ஊற்று ஆய் - ஒப்பற்ற இன்ப ஊற்று ஆகி; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்; ஓர் - ஒப்பற்ற);

மணிக்குள் மிளிர்ந்தான் - அழகுக்கு அழகுசெய்து திகழ்பவன்; (மணி - நவரத்தினங்கள்; ஆபரணம்; அழகு); (மிளிர்தல் - பிரகாசித்தல்); ("மணிக்குள் மிளிர்ந்தான்" - மணியுள் மிளிர்ந்தான் என்பது சந்தம் கருதி இப்படி வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 2.6.7 - "சோதியாய் நிறைந்தான் சுடர்ச்-சோதியுட் சோதியான்"); (அபிராமி அந்தாதி - 24 - "மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே, அணியும் அணிக்கு அழகே");

நிகர்ப்பு-இல்லி, அண்டன் - ஒப்பற்றவன், அண்டன்; (நிகர்ப்பு - ஒப்பு); (அண்டன் - பிரபஞ்சத்தின் தலைவன்);

பொடிப் பூசும் அண்ணல் - திருநீற்றைப் பூசிய பெருமான்; (பொடிப்பூசு, பொடிபூசு - என்று இருவகைப் பிரயோகங்களையும் தேவாரத்தில் காணலாம். இவ்விடத்தில் சந்தம் கருதிப், "பொடிப்பூசு" என்ற பிரயோகம்); (சம்பந்தர் தேவாரம் - 1.135.7 - "வெண்பொடிப்பூசுவர்");

தகர்ப்பான் மயக்கம் - அறியாமையை அழிப்பவன்;

வரம்பு ஆதி இல்லான் - எல்லையும் முதலும் அற்றவன்; (வரம்பு - எல்லை);

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


4)

புரம்வேவ நக்கான் அறஞ்சொல்லு மாலன்

அரும்பாவ நாசன் வளம்பொங்கு தேசன்

பெருந்தேவ தேவன் கணம்போற்று வெற்பன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

புரம் வேவ நக்கான்; அறம் சொல்லும் ஆலன்;

அரும் பாவ நாசன்; வளம் பொங்கு தேசன்;

பெருந்தேவ தேவன்; கணம் போற்று வெற்பன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


புரம் வேவ நக்கான் - முப்புரங்கள் எரியும்படி சிரித்தவன்;

அறம் சொல்லும் ஆலன் - மறைப்பொருளைக் கல்லால-மரத்தின்கீழ் உபதேசித்தவன்;

அரும்-பாவ-நாசன் - தீர்த்தற்கு அரிய பாவங்களை எல்லாம் அழிப்பவன்;

வளம் பொங்கு தேசன் - மேன்மை பொங்குகின்ற ஒளிவடிவினன்;

பெரும்-தேவதேவன் - மஹாதேவன், தேவர்களுக்கெல்லாம் தலைவன்;

கணம் போற்று வெற்பன் - பூதகணங்கள் எல்லாம் போற்றுகின்ற கயிலைமலையான்; (வெற்பு - மலை); (அப்பர் தேவாரம் - 4.111.2 - "விஞ்சத் தடவரை வெற்பா");

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


5)

மலைப்பாவை ஆகத் திடப்பாக மானான்

அலைப்புண்ட டைந்தார் அலம்தீர்பொ ருப்பன்

கலைப்பாவை கேள்வன் சுரர்போற்று மேலோன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

மலைப்-பாவை ஆகத்து இடப்-பாகம் ஆனான்;

அலைப்புண்டு அடைந்தார் அலம் தீர் பொருப்பன்;

கலைப்-பாவை கேள்வன், சுரர் போற்று மேலோன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


மலைப்பாவை ஆகத்து இடப்பாகம் ஆனான் - தன் திருமேனியில் இடப்பாகமாக மலைக்கு மகளான உமையை உடையவன்; (ஆகம் - மேனி);

அலைப்புண்டு அடைந்தார் அலம் தீர் பொருப்பன் - மிக-வருந்தி வந்து தன்னைச் சரணடைந்தவர்களது துன்பத்தைத் தீர்த்து அருளும் கயிலாயன்; (அலைப்பு - வருத்தம்); (அலம் - துன்பம்); (பொருப்பு - மலை);

கலைப்பாவை கேள்வன் சுரர் போற்று மேலோன் - சரஸ்வதி கணவனான பிரமனாலும் பிற தேவர்களாலும் வணங்கப்பெறுகின்ற பரம்பொருள்; (கலைப்பாவை - கலைமகள் - சரஸ்வதி); (கேள்வன் - கணவன்); (சுரர் - தேவர்);

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


6)

கரத்திற்க பாலம் சுடர்சூல மேந்தி

வரத்தைக்கொ டுப்பான் மலர்த்தாள்வ ணங்கில்

சுரர்க்கோர்பி ரான்தான் பெரும்பெற்ற மூர்ந்தான்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

கரத்தில் கபாலம், சுடர்-சூலம் ஏந்தி;

வரத்தைக் கொடுப்பான் மலர்த்-தாள் வணங்கில்;

சுரர்க்கோர் பிரான் தான்; பெரும் பெற்றம் ஊர்ந்தான்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


கரத்தில் கபாலம், சுடர் சூலம் ஏந்தி - கையில் கபாலத்தையும், (நெருப்பையும்), ஒளிவீசும் சூலத்தையும் ஏந்தியவன்; (சுடர்தல் - பிரகாசித்தல்); (சுடர் - நெருப்பு);

வரத்தைக் கொடுப்பான் மலர்த்தாள் வணங்கில் - தாமரைத்திருவடியை வணங்கினால் விரும்பிய வரங்களையெல்லாம் தருபவன்;

சுரர்க்கு ஓர் பிரான் தான் - தேவர்களுக்கெல்லாம் ஒரு தலைவன் அவன்; (தான் - அவன்; தேற்றச்சொல்லாகவோ அசைச்சொல்லாகவோ கொண்டும் பொருள்கொள்ளலாம்);

பெரும்-பெற்றம் ஊர்ந்தான் - பெரிய விடையை வாகனமாக உடையவன்; (பெற்றம் - இடபம்); (சம்பந்தர் தேவாரம் - 2.80.1 - "பெரிய விடைமேல் வருவார்"); (சம்பந்தர் தேவாரம் - 1.1.2 - "பெற்றமூர்ந்த பிரமாபுர மேவிய பெம்மானிவனன்றே");

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


7)

சுடர்ச்சோதி ஆகன் கணங்கட்கி னிப்பான்

சுடர்க்கண்ண னீற்றன் குபேரற்கு நண்பன்

மடப்பாவை கேள்வன் திகழ்கின்ற மெய்யன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

சுடர்ச்-சோதி ஆகன்; கணங்கட்கு இனிப்பான்;

சுடர்க்-கண்ணன்; நீற்றன்; குபேரற்கு நண்பன்;

மடப்-பாவை கேள்வன்; திகழ்கின்ற மெய்யன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


சுடர்ச்-சோதி ஆகன் - சந்திரனது ஒளி போலக் குளிர்ந்த ஒளி திகழும் திருமேனியன்; (சுடர் - சந்திரன்); (சோதி - ஒளி; கிரணம்); (ஆகம் - மேனி);

கணங்கட்கு இனிப்பான் - பூதகணங்களுக்கும் அன்பர் கூட்டங்களுக்கும் இன்பம் தருபவன்; (கணம் - பூதகணம்; கூட்டம்); (இனித்தல் - தித்தித்தல்); (அப்பர் தேவாரம் - "பத்திசெய் வித்தகர்க்கு அண்ணித்தாகும் அமுதினை" - அண்ணித்தாகும் - இனிக்கும்);

சுடர்க்கண்ணன் - தீயை (நெற்றிக்) கண்ணில் உடையவன்; சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று சுடர்களை மூன்று கண்களாக உடையவன்; (சுடர் - சூரியன்; சந்திரன்; நெருப்பு); (அப்பர் தேவாரம் - 6.90.1 - "மூன்றுசுடர்க் கண்ணானை"); (அப்பர் தேவாரம் - 6.98.4 - " சுடர்நயனச் சோதியையே தொடர்வுற்றோமே");

நீற்றன் - திருநீற்றைப் பூசியவன்; (திருநீறு - தூய்மையைக் குறிப்பது); (சம்பந்தர் தேவாரம் - 2.66.7 - "சுத்தமதாவது நீறு");

குபேரற்கு நண்பன் - குபேரனுக்குத் தோழன்; (திருவிசைப்பா - 9.1.7 - "தனதன் நற்றோழா சங்கரா" - தனதன் - குபேரன் - धनदः - an epithet of Kubera);

மடப்பாவை கேள்வன் - உமாதேவி மணவாளன்;

திகழ்கின்ற மெய்யன் - என்றும் இருக்கும் மெய்ப்பொருள்; ஒளிவீசும் திருமேனியை உடையவன்; (திகழ்தல் - விளங்குதல்); (மெய் - உண்மை; உடல்);

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


8)

அரன்பாம்ப ணிந்தான் மயானத்தி லாடி

பரன்வேத நாதன் பவன்மாற்ற மில்லான்

கருங்காடு றைந்தான் மதன்தன்னை அட்டான்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

அரன்; பாம்பு அணிந்தான்; மயானத்தில் ஆடி;

பரன்; வேத நாதன்; பவன்; மாற்றம் இல்லான்;

கருங்காடு உறைந்தான்; மதன்-தன்னை அட்டான்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


அரன் - ஹரன்;

பாம்பு அணிந்தான் - நாகத்தை மாலையாகப் பூண்டவன்;

மயானத்தில் ஆடி - மயானத்தில் சஞ்சரிப்பவன்; சுடுகாட்டில் கூத்தன்; (ஆடுதல் - சஞ்சரித்தல்; கூத்தாடுதல்);

பரன் - மேலானவன்;

வேத-நாதன் - வேதத்தலைவன்; வேதப்பொருள் ஆனவன்;

பவன் - என்றும் இருப்பவன்;

மாற்றம் இல்லான் - என்றும் மாறாமல் இருப்பவன் - மெய்ப்பொருள்;

கருங்காடு உறைந்தான் - சுடுகாட்டை வாழும் இடமாக உடையவன்; (கருங்காடு - சுடுகாடு); (சம்பந்தர் தேவாரம் - 2.38.2 - "வெண்டலைக் கருங்காடுறை வேதியன்");

மதன்தன்னை அட்டான் - மன்மதனைச் சுட்டெரித்தவன்; (அடுதல் - எரித்தல்); (அப்பர் தேவாரம் - 6.26.1 - "வன்கருப்புச்-சிலைக் காமன்-உடல் அட்டானை");

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Saturday, November 27, 2021

05.24 – மறைக்காடு (திருமறைக்காடு - வேதாரண்யம்) - (புஜங்கம்)

05.24 – மறைக்காடு (திருமறைக்காடு - வேதாரண்யம்) - (புஜங்கம்)

2015-02-28

மறைக்காடு (திருமறைக்காடு - வேதாரண்யம்) - "புஜங்கம்"

----------------------------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - "புஜங்கம்" - சந்த அமைப்பு; "தனானா தனானா தனானா தனானா"; - இதனைத் "தனாதான தானா தனாதான தானா" என்றும் நோக்கலாம்)


1)

முளைக்கும் பொருட்கோர் முதல்வன் தொழும்பர்

இளைப்பைத் துடைப்பான் இளந்திங் களைத்தான்

வளர்த்தான் மதில்மூன் றெரிக்கப் பொருப்பை

வளைத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


முளைத்தல் - தோன்றுதல்;

பொருட்கோர் - பொருள்+கு+ஓர் - பொருளுக்கு ஒரு;

(அப்பர் தேவாரம் - 4.71.3 - "விளைபொருள் மூல மான கருத்தனை" - தோன்றும் பொருளையெல்லாம் படைப்பவனை);

தொழும்பர் - அடியவர்;

இளைப்பு - சோர்வு; கிலேசம் (distress);

துடைத்தல் - நீக்குதல்; அழித்தல்;

இளந் திங்களைத்தான் வளர்த்தான் - வளர்கின்ற இளம்பிறை சூடியவன்;

மதில் மூன்று எரிக்கப் பொருப்பை வளைத்தான் - முப்புரங்களை எரிக்க மேருமலையை வில்லாக வளைத்தவன்; (பொருப்பு - மலை);

தென் - அழகிய;

மறைக்காடு - இக்காலத்தில் இத்தலம் வேதாரண்யம் என்று வழங்கப்பெறுகின்றது;


2)

தழைக்கும் தமிழ்ப்பா தனைக்கேட் பதற்கா

வழக்கென்று புத்தூர் மணத்தைத் தடுத்தான்

அழைக்கும் சுரர்க்கார் அருள்செய்து நஞ்சுண்

மழைக்கண்ட னூர்தென் மறைக்காடு தானே.


* அடிகள் 1-2: சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு - தடுத்தாட்கொண்டபுராணம். சிவபெருமான் கிழவேதியராக வந்து வழக்கு ஒன்று உள்ளது என்று சொன்னதால் புத்தூரில் நிகழவிருந்த சுந்தரர் திருமணம் நின்றது.

கேட்பதற்கா - கேட்பதற்காக - கடைக்குறை விகாரம்;

சுரர்க்கு ஆரருள்செய்து நஞ்சு உண் - தேவர்களுக்குப் பேரருள் புரிந்து விடத்தை உண்ட;

மழைக்கண்டன் - மேகம் போன்ற நீலகண்டத்தை உடையவன்;


3)

அடுத்தோர் சரத்தைத் தொடுத்தான் படத்தான்

கடுத்தே நுதற்கண் கனன்றான் இராவில்

நடத்தான் திருக்காப் பகற்றத் தமிழ்ப்பா

மடுத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


அடுத்து - நெருங்கி; அணுகி; (அடுத்தல் - சமீபமாதல்);

சரம் - அம்பு;

படுதல் - சாதல்; அழிதல்;

கடுத்தல் - சினத்தல்; கோபித்தல்;

நுதற்கண் - நெற்றிக்கண்;

கனல்தல் - சிவத்தல்; சுடுதல்;

இராவில் நடத்தான் - இரவில் நடம் செய்பவன்;

திருக்காப்பு அகற்றத் தமிழ்ப்பா மடுத்தான் - திருமறைக்காட்டில் கோயிற்கதவம் தாழ் நீக்கவேண்டித் திருநாவுக்கரசர் பாடிய தேவாரத்தைச் செவிமடுத்தவன்; (காப்பு - கதவு; கதவின் தாழ்); (அப்பர் தேவாரம் - 5.10.1 - "பண்ணினேர்மொழியாள்..."); (பெரிய புராணம் - 12.21.266 - "தொல்லை வேதந் திருக்காப்புச் செய்த வாயில் தொடர்வகற்ற");


4)

வலப்பால் தழல்போல் வணத்தான் சிரத்திற்

சலத்தான் சிரிப்பால் தகித்தான் புரங்கள்

நிலத்தார் விசும்பார் நிதம்வாழ்த்தி ஏத்தும்

மலர்ப்பாத னூர்தென் மறைக்காடு தானே.


வலப்பால் தழல்போல் வணத்தான் - வலப்பக்கத்தில் தீப்போல் செவ்வண்ணம் உடையவன்;

சிரத்திற் சலத்தான் - தலைமேல் கங்கையை ஏற்றவன்,

சிரிப்பால் தகித்தான் புரங்கள் - முப்புரங்களைச் சிரித்தே எரித்தவன்;

நிலத்தார் விசும்பார் நிதம் வாழ்த்தி ஏத்தும் மலர்ப்பாதன் - மண்ணோரும் விண்ணோரும் தினமும் வாழ்த்திப் போற்றும் மலர்ப்பாதம் உடையவன்;

ஊர் தென் மறைக்காடு தானே - அப்பெருமான் உறையும் தலம் அழகிய திருமறைக்காடு ஆகும்;


5)

நினைத்தார் பிழைக்கச் சினக்கூற் றுதைத்தான்

வனப்போதி னான்றன் சிரத்தூண் மகிழ்ந்தான்

அனைத்தும் படைப்பான் அழிப்பான் துதிப்பார்

மனத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


நினைத்தார் பிழைக்கச் சினக்கூற்று உதைத்தான் = மிகவும் எண்ணி வழிபட்ட மார்க்கண்டேயர் உயிரைக் காத்துக் கோபம் மிக்க காலனை உதைத்தவன்;

வனப் போதினான்தன் சிரத்து ஊண் மகிழ்ந்தான் - அழகிய தாமரை மலரின்மேல் உறையும் பிரமனது மண்டையோட்டில் உணவை விரும்பியவன்; (வனப்போது - நீரில் உள்ள பூ; அழகிய பூ; - தாமரை); (வனம் - அழகு; நீர்); (போது - பூ); (வனருகம் n. < vana-ruha. தாமரை. ) (ஊண் - உணவு);

அனைத்தும் படைப்பான் அழிப்பான் - எல்லாவற்றையும் தோற்றுவித்து ஒடுக்குபவன்;

துதிப்பார் மனத்தான் இடம் தென் மறைக்காடு தானே - வழிபடுவார் மனத்தில் இருப்பவன் உறியும் தலம் அழகிய திருமறைக்காடு ஆகும்;


6)

அணங்கோர் புறத்தான் அராவும் புனைந்தான்

கணங்கள் கரத்தில் விளக்கேந்த ஆடி

மணங்கொள் புதுப்பூ அடிச்சாத்தி வானோர்

வணங்கும் பிரானூர் மறைக்காடு தானே.


அணங்கு ஓர் புறத்தான் - ஒரு பக்கத்தில் உமையை உடையவன்; (அணங்கு - பெண் - உமை);

அராவும் புனைந்தான் - பாம்பையும் அணிந்தவன்; (அரா - பாம்பு);

கணங்கள் கரத்தில் விளக்கு ஏந்த ஆடி - பூதகணங்கள் கையில் விளக்கை ஏந்தக் கூத்தாடுபவன்; (ஆடி - ஆடுபவன்);

மணங்கொள் புதுப்பூ அடிச்சாத்தி வானோர் வணங்கும் பிரான் ஊர் மறைக்காடுதானே - வாசமிக்க நாண்மலர்களை திருவடியில் இட்டுத் தேவர்கள் வணங்கும் தலைவன் உறையும் தலம் திருமறைக்காடு; (புதுப்பூ - புதிய மலர் - நாண்மலர்); (சாத்துதல் - அணிதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.8.11 - "சந்தமெல்லாம் அடிச் சாத்தவல்ல மறை ஞானசம்பந்தன செந்தமிழ்");

இலக்கணக் குறிப்பு : இரண்டாம் அடியின் ஈற்றில் "ஆடி" என்ற சொல்லில் 'டி' லகு ஆயினும் அஃது அடி ஈற்றில் உள்ளதால் இவ்விடத்தில் பாடலின் வாய்பாடு கருதிக் குரு என்று அலகிடப்படும்;


7)

இதத்தைக் கொடுப்பான் இலாடத்து நீற்றன்

பதத்தைப் பணிந்தார் பவத்தைத் துடைப்பான்

நுதற்கண் திறந்தே சுதன்தந் தவன்மன்

மதற்சுட்ட மானூர் மறைக்காடு தானே.


இதத்தைக் கொடுப்பான் - நன்மை செய்பவன்; (இதம் - ஹிதம் - நன்மை);

இலாடத்து நீற்றன் - நெற்றியில் திருநீறு பூசியவன்; (இலாடம் - lalAta - நெற்றி); (அப்பர் தேவாரம் - 6.61.3 - "எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி");

பதத்தைப் பணிந்தார் பவத்தைத் துடைப்பான் - திருவடியை வழிபடும் பக்தர்கள்து பிறவியை அறுப்பவன்; (பவம் - பிறவி;)

நுதற்கண் திறந்தே சுதன் தந்தவன் மன்மதற் சுட்ட மான் - நெற்றிக்கண்ணைத் திறந்து மகனைத் தந்தவன், தலைவன்; மன்மதனைச் சுட்ட பெரியோன்; (சுதன் - மகன்); (மன் - தலைவன்); (மதன் - காமன்); (மன்மதன் - காமன்); (மான் - பெரியோன்); (பரணதேவர் - சிவபெருமான் திருவந்தாதி - 11.23.86 - "கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின்" - கயிலைமான் = கயிலைப் பெரியோன்);

"மன்மதற்சுட்ட" என்பதை "மன் + மதற் சுட்ட" என்றும், "மன்மதற் சுட்ட" என்றும் இருவிதமாகப் பிரித்துப் பொருள்கொள்ளலாம். (மன் = தலைவன், மதன் = காமன்);

இலக்கணக் குறிப்பு:

மதற் சுட்ட = மதன் + சுட்ட = "மதனைச் சுட்ட" என்ற பொருளில்;

இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருள்மயங்காதிருக்கும் பொருட்டு, முதற்சொல்லின் ஈற்றில் வல்லொற்று மிகுதல், னகர ஒற்று றகர ஒற்றாகத் திரிதல், முதலியன நிகழும்);


8)

பறக்கும் கடுந்தேர் இறங்கப் பதைத்தே

மறத்தால் பொருப்பைப் பெயர்த்தான் சிரந்தோள்

இறத்தான் நெரித்தான் எரிக்கும் விடத்தை

மறைத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


கடுமை - விரைவு (speed);

கடுந்தேர் - விரைவுடைய விமானம்; (அப்பர் தேவாரம் - 6.99.10 - "இலங்கை வேந்தன் கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற பொருவரையாய்");

பதைத்தல் - ஆத்திரப்படுதல் (To be anxious); (அப்பர் தேவாரம் - 5.16.11 - "திரு மாமலைக் கீழ்ப்புக்குப் பதைத்தங் கார்த்தெடுத் தான்");

பறக்கும் கடுந்தேர் இறங்கப் பதைத்தே - வானிற் பறந்து விரைந்து செல்லும் தன் இரதம் பறவாமல் தரையில் இறங்கக் கண்டு சினந்து;

மறம் - வலிமை; சினம்;

பொருப்பு - மலை - கயிலைமலை;

இற - இறும்படி; (இறுதல் - முறிதல்; கெடுதல்);

மறத்தால் பொருப்பைப் பெயர்த்தான் சிரம் தோள் இறத்தான் நெரித்தான் - தன் வலிமையால் கயிலைமலையைப் பெயர்த்த இராவனனது முடிகளும் புயங்களும் முறியும்படி நசுக்கியவன்;

எரிக்கும் விடத்தை மறைத்தான் - ஆலகாலத்தைக் கண்டத்தில் ஒளித்தவன்;


9)

அகழ்ந்தும் பறந்தும் மயன்மா லயர்ந்தார்

புகழ்ந்தும் விழுந்தும் பொலம்பூம் பதங்கள்

உகந்தார் மனத்தே உறைந்தான் இடம்பெண்

மகிழ்ந்தா னிடம்தென் மறைக்காடு தானே.


பிரமனும் திருமாலும் வானிற் பறந்துசென்றும் மண்ணை அகழ்ந்தும் அடிமுடி தேடிக் காணாது தளர்ந்தனர்; பொன் போன்ற மலர்த்திருவடியைப் புகழ்ந்தும் விழுந்து வணங்கியும் விரும்பி வழிபடும் அன்பர்களது மனத்தில் உறைந்தவன்; இடப்பக்கம் உமையை ஒரு கூறாக விரும்பியவன்; அப்பெருமான் உறையும் தலம் அழகிய திருமறைக்காடு;


பறந்தும்மயன் - பறந்தும் அயன் - மகர ஒற்று விரித்தல் விகாரம்;

அகழ்ந்தும் பறந்தும் அயன் மால் - எதிர்நிரனிறையாக வந்தது;

அயர்தல் - தளர்தல்;

விழுதல் - விழுந்து வணங்குதல் (To lie prostrate, as in reverence);

பொலம் - பொன்; அழகு;

பொலம்பூம்பதங்கள் - பொலம்பூவடி; (பட்டினத்து அடிகள் அருளிய கோயில் நான்மணிமாலை - 11.26.40 - "போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே" - பொலம் பூ அடி - பொற்பூப்போலும் திருவடிகள்);

உகத்தல் - விரும்புதல்;


10)

நிதிக்கா நிதம்பல் புறன்சொல் சழக்கர்

சதிச்சேற் றழுந்தேல் தவிப்பைத் தவிர்ப்பான்

நதிச்சென்னி மேலே நறும்போது நாகம்

மதிக்கண்ணி யானூர் மறைக்காடு தானே.


நிதிக்கா நிதம் பல் புறன் சொல் சழக்கர் சதிச்சேற்று அழுந்தேல் - பணத்திற்காகத் தினமும் பல பழிச்சொற்களைப் பேசும் தீயவர்களது வஞ்சனை என்ற சேற்றில் அழுந்தவேண்டா;

(சதி - வஞ்சனை); (சழக்கர் - தீயவர்கள்; சழக்கு - குற்றம்; தீமை);

தவிப்பைத் தவிர்ப்பான் - பக்தர்களது வருத்தத்தை தீர்ப்பவன்;

நதிச்சென்னி மேலே - கங்கையைத் தாங்கிய திருமுடிமேல்;

நறும் போது நாகம் - வாசமலர்கள் பாம்பு இவற்றோடு;

மதிக்கண்ணியான் - கண்ணிமாலைபோல் பிறைச்சந்திரனைச் சூடியவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலை);

ஊர் மறைக்காடு தானே - அப்பெருமான் உறையும் தலம் திருமறைக்காடு;


11)

புரங்கள் கனல்வாய்ப் புகத்தான் சிரித்தான்

கரங்கள் குவித்துக் கழல்போற்று வார்க்கே

வரங்கள் வழங்கும் பரன்மேய ஊராம்

மரங்கள் வளம்சேர் மறைக்காடு தானே.


புரங்கள் கனல்வாய்ப் புகத்தான் சிரித்தான் - முப்புரங்களும் தீயிற் புகும்படி சிரித்தவன்; (கனல் - நெருப்பு); (வாய் - ஏழாம் வேற்றுமை உருபு);

கரங்கள் குவித்துக் கழல்போற்றுவார்க்கே வரங்கள் வழங்கும் பரன் மேய ஊர் ஆம் - கைகூப்பித் திருவடியை வழிபடுபவர்களுக்கு வரங்கள் கொடுக்கும் பரமன் உறைகின்ற தலம் ஆவது;

மரங்கள் வளம்சேர் மறைக்காடுதானே - விருட்சங்களும் படகுகளும் வளம் சேர்க்கின்ற திருமறைக்காடு (வேதாரண்யம்); (மரங்கள், மரக்கலங்கள் முதலிய வளங்கள் நிறைந்த வேதாரண்யம்); (மரம் - விருட்சம்; மரக்கலம் (கப்பல், படகு));


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு:

இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:

புஜங்கம் என்பது சமஸ்கிருத பாடல் அமைப்புகளுள் ஒன்று.

புஜங்க அமைப்பின் இலக்கணம்:

4 அடிகள்; ஓர் அடிக்கு 4 "தனானா" ( = லகு-குரு-குரு) இருக்கும்.

"தனானா தனானா தனானா தனானா" - இதனைத் "தனாதான தானா தனாதான தானா" என்றும் நோக்கலாம்

லகு = குறில்.

குரு = நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று. அடி ஈற்றுக் குறிலும் 'குரு' எனக் கருதப்படும்

இப்பாடல்களில், தமிழ் யாப்பை ஒட்டிச், சொல்லின் இடையிலோ இறுதியிலோ வரும் ''காரக் குறுக்கத்தைக் குறிலாகக் கொண்டுள்ளேன்.