Tuesday, August 11, 2026

T.241 - காழி - அலைமலி ஆழி சூழும்

2020-06-27

T.241 - காழி - அலைமலி ஆழி சூழும்

-------------

(வண்ணவிருத்தம்;

தனதன தான தான

தனதன தான தான

தனதன தான தான .. தனதான)

(வரிவிழி பூசலாட - திருப்புகழ் - பொது)


அலைமலி ஆழி சூழும் .. அவனியில் வாழ்வில் ஆசை

.. .. அளவில தாகி மாடு .. மனைநாடி

.. அனுதினம் ஓடி ஆடி .. அக(ம்)மிக வாடி ஆயுள்

.. .. அதுமுடி வாகி மாயு(ம்) .. மிடிதீராய்

மலர்மலி சோலை நாடி .. மண(ம்)மிகு போதி னோடு

.. .. மகிழ்வுடன் ஏர்கொள் மாலை .. புனைமாணி

.. வழிபடு வேளை காலன் .. வரஅவன் மாளு மாறு

.. .. மலரடி வீசு நேய .. சடையானே

இலைமலி வேலி னோடு .. கனல்மழு வாளு(ம்) மானும்

.. .. இலகிடு தீயும் ஏறும் .. உடையானே

.. எழில்மட மாத ரார்கள் .. அவர்மனை வாயில் ஏகி

.. .. இடுபலி தேரும் ஈச .. திருவாளா

வலைஞனும் வீர வேடன் .. வடிவமும் வேட மாகு(ம்)

.. .. மறைமுத லேப ராவு .. சுரர்வாழ

.. வரிசிலை யாக மேரு .. வரைகொடு போர்செய் தீர

.. .. மதிலணி காழி மேய .. பெருமானே.


பதம் பிரித்து:

அலை மலி ஆழி சூழும் அவனியில் வாழ்வில் ஆசை

.. .. அளவு இலது ஆகி, மாடு மனை நாடி,

.. அனுதினம் ஓடி ஆடி, அக(ம்) மிக வாடி, ஆயுள்

.. .. அது முடிவு ஆகி மாயு(ம்) மிடி தீராய்;

மலர் மலி சோலை நாடி மண(ம்) மிகு போதினோடு

.. .. மகிழ்வுடன் ஏர்கொள் மாலை புனை மாணி

.. வழிபடு வேளை காலன் வர அவன் மாளுமாறு

.. .. மலரடி வீசு நேய; சடையானே;

இலை மலி வேலினோடு கனல்-மழுவாளு(ம்) மானும்

.. .. இலகிடு தீயும் ஏறும் உடையானே;

.. எழில் மட மாதரார்கள் அவர் மனை வாயில் ஏகி

.. .. இடுபலி தேரும் ஈச; திருவாளா;

வலைஞனும் வீர-வேடன் வடிவமும் வேடம் ஆகு(ம்)

.. .. மறைமுதலே; பராவு சுரர் வாழ

.. வரி-சிலையாக மேரு வரைகொடு போர்செய் தீர;

.. .. மதில் அணி காழி மேய பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

அலைமலி ஆழி சூழும் அவனியில் வாழ்வில் ஆசை ளவு இலது ஆகி - அலைகள் மிக்க கடல் சூழ்ந்த இவ்வுலக வாழ்க்கையில் கொண்ட ஆசை அளவற்றதாகி; (ஆழி - கடல்); (அவனி - பூமி); (அவனியில் வாழ்வில் - "அவனி இல்வாழ்வில்" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளலாம்);

மாடு மனை நாடி - பொருள் குடும்பம் இவற்றை விரும்பி; (மாடு - பொன்; செல்வம்); (மனை - வீடு; மனைவி; குடும்பம்);

அனுதினம் ஓடி ஆடி - நாள்தோறும் அலைந்து திரிந்து;

அகம் மிக வாடி - மனம் மிகவும் வாட்டமுற்று;

ஆயுள்அது முடிவு ஆகி மாயும் மிடி தீராய் - வாழ்நாளும் முடிந்து இறந்து அழியும் இத்துன்பத்தை தீர்த்து அருள்வாயாக; (மிடி - துன்பம்);

மலர் மலி சோலை நாடி - மலர்கள் மிக்க சோலையை அடைந்து;

மணம் மிகு போதினோடு மகிழ்வுடன் ஏர்கொள் மாலை புனை மாணி - வாசனை மிகுந்த பூக்களால் மனமகிழ்ந்து அழகிய மாலைகளைத் தொடுத்துத் திருவடியில் புனைந்த மார்க்கண்டேயர்; (போது - பூ); (ஏர் - அழகு); (மாணி - மார்க்கண்டேயர்);

வழிபடு வேளை காலன் வர அவன் மாளுமாறு மலரடி வீசு நேய - வழிபாடு செய்த சமயத்தில் அவரைக் கொல்லக் காலன் வந்தபொழுது அக்காலனே மாளும்படி மலர்ப்பாதத்தால் காலனை உதைத்த அன்பனே; (நேயன் - அன்பன்);

சடையானே - சடையை உடையவனே;

இலை மலி வேலினோடு கனல்-மழுவாளும் மானும் இலகிடு தீயும் ஏறும் உடையானே - திரிசூலம், ஒளிவீசும் மழு, மான், திகழ்கின்ற நெருப்பு, இடபவாகனம் இவற்றையெல்லாம் உடையவனே; (இலகுதல் - விளங்குதல்); (ஏறு - எருது); (சம்பந்தர் தேவாரம் - 1.11.1 - "படையார் மழுவுடையான் பல பூதப்படை யுடையான்");

எழில்-மட-மாதரார்கள் அவர் மனை-வாயில் ஏகி இடுபலி தேரும் ஈச - அழகிய மங்கையர்களது வீட்டு-வாயிலில் சென்று பிச்சையேற்கும் ஈசனே; (ஏகுதல் - போதல்); (இடுபலி - பிச்சை);

திருவாளா - திருவுடையவனே;

வலைஞனும் வீர-வேடன் வடிவமும் வேடம் ஆகும் மறைமுதலே - மீனவன் வடிவமும் வீரமுடைய வேடன் வடிவமும் உன் திருக்கோலமாக ஏற்றவனே, வேதநாயகனே; (வலைஞன் - மீனவன்); (வேடம் - வேஷம் - கோலம்); (* வலைஞன் - திருவிளையாடற்புராணத்தில் 57. வலை வீசின படலம் காண்க); (* வேடன் - அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருளிய சமயத்தில் ஏற்ற கோலம்);

பராவு சுரர் வாழ வரி-சிலையாக மேருவரை-கொடு போர்செய் தீ - போற்றிய தேவர்கள் உய்யும்படி, (நாண்) கட்டிய வில்லாக மேருமலையை ஏந்திப் போர் செய்த வீரனே; (பராவுதல் - புகழ்தல்); (வரித்தல் - கட்டுதல்); (சிலை - வில்); (வரை - மலை); (கொடு - கொண்டு - மூன்றாம்வேற்றுமை உருபு); (தீரன் - வீரன்);

மதில் அணி காழி மேய பெருமானே - மதிலால் சூழப்பெற்ற சீகாழியில் உறைகின்ற பெருமானே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


N.060 - மாணிக்க வாசகர் துதி - கடைபாற் கடலின்

2020-06-22

N.060 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2020

-------------

1) --- (சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனனா) ---

கடைபாற் கடலின் விடமுண் மிடறன்

சடையிற் புனலன் தனையே குருவா

அடையும் புகழார் அருள்வா சக(ம்)நற்

படைநம் பழவல் வினைபாற் றிடுமே.


கடை பாற்கடலின் விடம் உண் மிடறன் - தேவர்கள் கடைந்த பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்ட கண்டன்; (மிடறு - கண்டம்);

சடையில் புனலன்-தனையே குருவா அடையும் புகழார் - சடையில் கங்கையை அணிந்த பெருமானையே குருவாக அடைந்த புகழை உடையவரான மாணிக்கவாசகர்; (புனல் - நீர்); (குருவா - குருவாக);

அருள்-வாசகம் நற்படை நம் பழ-வல்வினை பாற்றிடுமே - அருளிய திருவாசகம் நல்ல ஆயுதமாகி நம் பழைய வலிய வினைகளை அழிக்கும்; (படை - ஆயுதம்); (பாற்றுதல் - அழித்தல்);


2) --- (சந்த வஞ்சித்துறை - தனாதனா தனாதனா) ---

பெருந்துறைக் குருந்தடி

இருந்தரன் புரிந்தருள்

அருந்தவர் மொழிந்தன

மருந்துயிர்க் கருந்துமே.


பெருந்துறைக் குருந்து-அடி - திருப்பெருந்துறையில் குருந்தமரத்தின்கீழ்;

இருந்து அரன் புரிந்து அருள் - வீற்றிருந்து சிவபெருமான் விரும்பி அருளிய;

அரும்-தவர் மொழிந்தன - அரிய தவமுனிவரான மாணிக்கவாசகர் மொழிந்தனவான திருவாசகப் பாடல்கள்;

மருந்து உயிர்க்கு அருந்துமே - நம் உயிருக்கு அமுதம் ஆகும்; அருந்துங்கள் (திருவாசகத்தை ஓதி உய்யுங்கள்); (மருந்து - அமுதம்);


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Friday, August 7, 2026

P.510 - பறியலூர் - கண்ணில் நீர் வார்தரக்

2020-06-20

P.510 - பறியலூர் (பரசலூர்)

--------------

(சந்தக் கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா)

(சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன்")

(இவை தமிழ்ச்சந்த இலக்கணப்படி அமைந்த பாடல்கள். இதனை ஒத்த அமைப்பை வடமொழியில் ஸ்ரக்விணீ (स्रग्विणी - sragviNI) என்று அழைப்பர். அச்யுதாஷ்டகம் இவ்வமைப்பே)


முற்குறிப்பு: படிப்போர் வசதி கருதிச் சில இடங்களில் புணர்ச்சி பிரித்த வடிவம் காட்டப்பட்டுள்ளது. சந்தியோடு நோக்கில் சந்தம் கெடாமையை உணர்க.

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

கண்ணில்நீர் வார்தரக் கைதொழும் பத்தரை

விண்ணிலேற் றும்பரன் வெண்மதிக் கண்ணியான்

வண்ணமார் பூக்களில் மாந்திவண் டூதிடும்

பண்ணறாச் சோலைசூழ் பறியல்வீ ரட்டனே.


கண்ணில் நீர் வார்தரக் கைதொழும் பத்தரை விண்ணில் ஏற்றும் பரன் - கண்களில் நீர் கசியக் கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்கு வானுலக வாழ்வைத் தரும் பரமன்; (கண்ணினீர் - கண்ணின் நீர் / கண்ணில் நீர்); (வார்தல் - ஒழுகுதல்); (தருதல் - ஒரு துணைவினை);

வெண்மதிக் கண்ணியான் - வெண்திங்களைக் கண்ணியாக முடியில் அணிந்தவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

வண்ணம் ஆர் பூக்களில் மாந்தி வண்டு ஊதிடும் - அழகிய பூக்களில் மது உண்டு வண்டுகள் ஒலிக்கின்ற; (வண்ணம் - அழகு); (ஊதுதல் - வண்டு முதலியன ஒலித்தல்);

பண் அறாச் சோலை சூழ் பறியல் வீரட்டனே - இனிய இசை எப்பொழுதும் கேட்கின்ற சோலை சூழ்ந்த திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


2)

காட்டிலா டுங்கழல் கைதொழின் வல்வினை

வீட்டிவான் நல்குவான் வெண்குழைக் காதினன்

நாட்டமோர் மூன்றினான் நாடிவண் டார்த்திடும்

பாட்டறாச் சோலைசூழ் பறியல்வீ ரட்டனே.


காட்டில் ஆடும் கழல் கைதொழின் வல்வினை வீட்டி வான் நல்குவான் - சுடுகாட்டில் ஆடுகின்ற திருவடியைக் கைதொழும் பக்தர்களது வலிய வினைகளை அழித்து அவர்களுக்கு வானுலக வாழ்வைக் கொடுப்பான்; (கைதொழின் - கைதொழுதால்); (வீட்டுதல் - அழித்தல்);

வெண்குழைக் காதினன் - காதில் வெண்குழையை அணிந்தவன்;

நாட்டம் ஓர் மூன்றினான் - மூன்று கண்களை உடையவன்; (நாட்டம் - கண்);

நாடி வண்டு ஆர்த்திடும் பாட்டு அறாச் சோலை சூழ் பறியல் வீரட்டனே - தேனை விரும்பி வண்டுகள் ஒலிக்கும் இன்னிசை எப்பொழுதும் கேட்கின்ற சோலை சூழ்ந்த திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


3)

உம்பரார் வேண்டவே உன்னிடா தைம்மலர்

அம்பினால் தாக்குவேள் அன்றுநீ றாக்கினான்

செம்பிரான் வாளரா திங்கள்சேர் சென்னியன்

பைம்பொழில் சூழ்ந்திடும் பறியல்வீ ரட்டனே.


உம்பரார் வேண்டவே உன்னிடாது ஐம்மலர் அம்பினால் தாக்கு வேள் அன்று நீறு ஆக்கினான் - தேவர்கள் வேண்டிக்கேட்கவும் சிறிதும் யோசியாமல் ஐந்து மலர்ப்பாணங்களால் தாக்கிய மன்மதனை அப்பொழுது சாம்பல் ஆக்கியவன்; (உன்னுதல் - எண்ணுதல்); (வேள் - காமன்);

செம்பிரான் - செம்மேனியன்;

வாள்-அரா திங்கள் சேர் சென்னியன் - கொடிய பாம்பையும் சந்திரனையும் திருமுடிமேல் ஒன்றாகச் சேர்த்தவன்; (வாள் - கொடிய);

பைம்பொழில் சூழ்ந்திடும் பறியல் வீரட்டனே - அழகிய சோலை சூழ்ந்த திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


4)

சங்கரா சம்புவே தாணுவே தாதையே

அங்கணா என்பவர்க் காரருள் செய்பவன்

பொங்கராத் தாரினன் பொற்சடைப் புண்ணியன்

பைங்கணே றேறினான் பறியல்வீ ரட்டனே.


"சங்கரா, சம்புவே, தாணுவே, தாதையே, அங்கணா" என்பவர்க்கு ஆரருள் செய்பவன் - "சங்கரனே, சம்புவே, ஸ்தாணுவே, தந்தையே, அருட்கண்ணனே" என்று பல திருநாமங்களைச் சொல்லி வழிபடும் பக்தர்களுக்கு மிகவும் அருள்செய்பவன்; (சங்கரன் - நன்மை செய்பவன்); (சம்பு - சுகத்தைத் தருபவன்); (தாணு - அசைவற்றவன்); (தாதை - தந்தை); (அங்கணன் - அருள்நோக்கம் உடையவன்);

பொங்கு-அராத் தாரினன் - சீறும் பாம்பை மாலையாக அணிந்தவன்;

பொற்சடைப் புண்ணியன் - பொன் போன்ற சடையை உடைய புண்ணியமூர்த்தி;

பைங்கண் ஏறு ஏறினான் - அழகிய கண்களையுடைய இடபத்தை ஊர்தியாக உடையவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


5)

வேலனைப் பெற்றவன் வேத(ம்)நான் கோதிய

ஆலனக் காரமாம் ஐயன்முக் கண்ணினன்

காலனைக் காலினால் காய்ந்தவன் கைதொழும்

பாலனைக் காத்தவன் பறியல்வீ ரட்டனே.


வேலனைப் பெற்றவன் - முருகனுக்குத் தந்தை;

வேதம் நான்கு ஓதிய ஆலன் - நான்கு வேதங்களையும் ஓதிய தட்சிணாமூர்த்தி; (ஆலன் - கல்லாலமரத்தின்கீழ் இருப்பவன்);

அக்கு ஆரம் ஆம் ஐயன் - எலும்பை மாலையாக அணிந்த தலைவன்; (அக்கு - எலும்பு); (ஆரம் - ஹாரம் - மாலை);

முக்கண்ணினன் - மூன்று கண்களை உடையவன்;

காலனைக் காலினால் காய்ந்தவன் - காலனைக் காலால் உதைத்தவன்;

கைதொழும் பாலனைக் காத்தவன் - வழிபாடு செய்த மார்க்கண்டேயரைக் காத்துஅருளியவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


6)

பேரிடர் தீர்ந்திடப் பேணினார்க் காப்பவன்

போரிடும் வெங்கரித் தோலினைப் போர்த்தவன்

ஊரிடும் பிச்சையே ஊணெனக் கொண்டவன்

பாரிடஞ் சூழ்பரன் பறியல்வீ ரட்டனே.


பேரிடர் தீர்ந்திடப் பேணினார்க் காப்பவன் - பெருந்துன்பம் தீரவேண்டிப் போற்றும் பக்தர்களைக் காப்பவன்; ("பேணிணார்க் காப்பவன்" - இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி வல்லொற்று மிகும்);

போரிடும் வெங்கரித் தோலினைப் போர்த்தவன் - போர் செய்த கொடிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவன்;

ஊர் இடும் பிச்சையே ஊண் எனக் கொண்டவன் - ஊரிலுள்ளோர் இடும் பிச்சையையே உணவாக உடையவன்; (ஊண் - உணவு);

பாரிடம் சூழ் பரன் - பூதகணங்கள் சூழ்ந்துள்ள பரமன்; (பாரிடம் - பூதம்);

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


7)

சேவதே றுஞ்சிவன் தெண்புனல் கொக்கதன்

தூவலார் சென்னியன் தோற்றமும் கேடிலான்

காவலார் முப்புரம் வேவவே நக்கவன்

பாவையோர் பங்கினன் பறியல்வீ ரட்டனே.


சே-அது ஏறும் சிவன் - இடபத்தை வாகனமாக உடைய சிவன்; (சே - எருது);

தெண்புனல் கொக்கு-தன் தூவல் ஆர் சென்னியன் - தெளிந்த நீர்க்கங்கையையும் கொக்கின் இறகையும் முடிமேல் அணிந்தவன்; (தூவல் - இறகு); (கொக்கின் இறகு - 1. கொக்கிறகு என்ற பூ; 2. கொக்குவடிவாய குரண்டாசுரனை அழித்த அடையாளம்);

தோற்றமும் கேடு இலான் - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்; (கேடு - கேடும்; உம் தொக்கது);

காவல் ஆர் முப்புரம் வேவவே நக்கவன் - காவல் மிக்க முப்புரங்கள் வெந்து அழியும்படி சிரித்தவன்; (நகுதல் - சிரித்தல்);

பாவை ஓர் பங்கினன் - உமையை ஒரு பங்கில் உடையவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


8)

தக்கதொன் றோர்கிலான் தான்வரைக் கீழ்மிகத்

துக்கமுற் றார்த்தழத் தூவிரல் வைத்தவன்

திக்கெலாம் ஆடையாம் சீர்த்தியன் மேனியில்

பக்கமோர் பாவையான் பறியல்வீ ரட்டனே.


தக்கது ஒன்று ஓர்கிலான் தான் வரைக்கீழ் மிகத் துக்கமுற்று ஆர்த்து அழத் தூ-விரல் வைத்தவன் - செய்யத்-தக்கது ஒன்றையும் எண்ணாதவனான இராவணன் அவன் கயிலைமலைக்கீழே மிகவும் துக்கமடைந்து கத்தி அழும்படி தூய விரல் ஒன்றை ஊன்றியவன்; (ஓர்தல் - சிந்தித்தல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);

திக்கு-எலாம் ஆடை ஆம் சீர்த்தியன் - திக்குகளே ஆடையாகும் பெருமை உடையவன்; திகம்பரன்; (சீர்த்தி - புகழ்);

மேனியில் பக்கம் ஓர் பாவையான் - திருமேனியில் ஒரு பக்கம் உமையைப் பங்காக உடையவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


9)

கந்தமார் போதனும் கண்ணனும் காண்கிலா

அந்தமில் சோதியான் ஐந்தொழில் செய்பவன்

செந்தமிழ்ப் பாடலைச் செப்பினார்க் கன்பினன்

பந்தமில் பாங்கினான் பறியல்வீ ரட்டனே.


கந்தம் ஆர் போதனும் கண்ணனும் காண்கிலா அந்தம் இல் சோதியான் - மணம் மிக்க தாமரைமலரில் இருக்கும் பிரமன், திருமால் இவர்களால் காண ஒண்ணாத எல்லையற்ற ஒளிவடிவினன்; (போது - பூ);

ஐந்தொழில் செய்பவன் - படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் (ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்ரஹம்) என்ற பஞ்சகிருத்தியம் செய்பவன்;

செந்தமிழ்ப் பாடலைச் செப்பினார்க்கு அன்பினன் - தேவாரம் முதலிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடும் பக்தர்களுக்கு அன்புடையவன்;

பந்தம் இல் பாங்கினான் - எவ்விதப் பந்தமும் இல்லாதவன்; (பாங்கு - இயல்பு);

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


10)

ஆய்தலைச் செய்கிலா அந்தகர் நீறிடாப்

பேய்மனப் பிட்டர்சொல் பேணிடேல் காமனைக்

காய்பவன் தாள்தொழும் பத்தரைக் காப்பவன்

பாய்புலித் தோலினான் பறியல்வீ ரட்டனே.


ஆய்தலைச் செய்கிலா அந்தகர் - ஆராயாத குருடர்கள்; (சம்பந்தர் தேவாரம் - 1.11.5 - "ஆயாதன சமயம்பல அறியாதவன்");

நீறு இடாப் பேய்மனப் பிட்டர் சொல் பேணிடேல் - திருநீற்றைப் பூசாதவர்களும் பேய் போன்ற மனம் உடையவர்களுமான பிரஷ்டர்கள் சொல்லை மதிக்கவேண்டா; (பிட்டர் - பிரஷ்டர் - புறம்பானவர்கள்);

காமனைக் காய் பவன் - மன்மதனை எரித்தவனும் பவன் என்ற திருநாமம் உடையவனுமான சிவபெருமான்; (பவன் - என்றும் உள்ளவன்);

தாள்தொழும் பத்தரைக் காப்பவன் - தன் திருவடியை வணங்கும் பக்தர்களைக் காப்பவன்;

பாய்புலித் தோலினான் - பாயும் புலியின் தோலை அரையில் கட்டியவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


11)

பூத்திரள் கொண்டுதாள் போற்றிடாத் தக்கனார்

தீத்தொழில் செற்றவன் செவ்வணன் மூவரின்

மூத்தவன் முக்கணன் முன்னமோர் அத்திரம்

பார்த்தனுக் கீந்தவன் பறியல்வீ ரட்டனே.


பூத்திரள் கொண்டு தாள் போற்றிடாத் தக்கனார் தீத்தொழில் செற்றவன் - பூக்களால் திருவடியைப் போற்றாத தக்கன் செய்த அவவேள்வியை அழித்தவன்; (தீத்தொழில் - 1. தீய செயல்; 2. அக்கினி காரியம் - ஹோமம்; வேள்வி); (செறுதல் - அழித்தல்); (அப்பர் தேவாரம் - 4.95.4 - "தீத்தொழிலான் தலை தீயிலிட்டுச் செய்த வேள்வி செற்றீர்");

செவ்வணன் - செம்மேனியன்;

மூவரின் மூத்தவன் - மும்மூர்த்திகளினும் முற்பட்டவன்; (இன் - ஐந்தாம்வேற்றுமை உருபு);

முக்கணன் - நெற்றிக்கண்ணன்;

முன்னம் ஓர் அத்திரம் பார்த்தனுக்கு ஈந்தவன் - முன்பு அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருளியவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Saturday, August 1, 2026

P.509 - பாவநாசம் - அரணம் மூன்றையும்

2020-06-20

P.509 - பாவநாசம் (பாபநாசம்)

(தாமிரபரணிக்-கரையில் உள்ள பாபநாசம்)

--------------

(சந்தக் கலிவிருத்தம் - தான தானன தான தானன)

(சம்பந்தர் தேவாரம் - 2.25.1 - "உகலி யாழ்கட லோங்கு பாருளீர்")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

அரண(ம்) மூன்றையும் அன்றெ ரித்தவன்

கிரண வெண்மதிக் கீற்றன் மேயது

மரணம் தீரமு தன்ன தாமிர

பரணி தாள்தொழு பாவ நாசமே.


அரணம் மூன்றையும் அன்று எரித்தவன் - முப்புரங்களையும் முன்பு எரித்தவன்;

கிரண-வெண்மதிக் கீற்றன் மேயது - கதிர்வீசும் வெண்திங்களை அணிந்தவன் உறையும் தலம்;

மரணம் தீர் அமுது அன்ன தாமிரபரணி தாள் தொழு பாவநாசமே - இறப்பில்லா வாழ்வை அளிக்கும் அமுதம் போன்ற (நீருடைய) தாமிரபரணி-ஆறானது திருவடியை வழிபடுகின்ற பாபநாசம்;


2)

ஆய்ம லர்க்கணை ஐந்து தொட்டவேள்

காய்நு தற்கணன் கங்கை வேணியன்

மாய்வி லாதவன் மன்னும் ஊரது

பாய்பு னற்கரைப் பாவ நாசமே.


ஆய் மலர்க்கணை ஐந்து தொட்ட வேள் காய் நுதற்கணன் - தேர்ந்தெடுத்த மலர்அம்புகள் ஐந்து தொடுக்கும் மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண்ணன்; (ஆய்தல் - தெரிந்தெடுத்தல்);

கங்கை-வேணியன் - சடையில் கங்கையை உடையவன்; (வேணி - சடை);

மாய்வு இலாதவன் மன்னும் ஊர் அது - இறப்பு இல்லாதவனான சிவபெருமான் உறையும் இடம் ஆவது; (மாய்வு - சாவு); (ஊரது - ஊர் - தலம்; அது - பகுதிப்பொருள்விகுதி);

பாய்-புனற்கரைப் பாவநாசமே - பாயும் தாமிரபரணியின் கரையில் உள்ள பாபநாசம்;


3)

வம்பு லா(ம்)மலர் வன்னி சூடினான்

உம்பர் வாழ்ந்திட ஓத நஞ்சுணி

கொம்ப னாளொரு கூறன் ஊரது

பைம்பு னற்கரைப் பாவ நாசமே.


வம்பு உலாம் மலர் வன்னி சூடினான் - வாசனை கமழும் பூக்களையும் வன்னியையும் சூடியவன்; (வம்பு - வாசனை); (உலாம் - உலாவும் - திகழும்);

உம்பர் வாழ்ந்திட ஓத-நஞ்சு உணி - தேவர்கள் உய்யும்படி கடல்விஷத்தை உண்டவன்; (ஓதம் - கடல்); (உணி - உண்ணி - உண்டவன்; இடைக்குறை விகாரம்);

கொம்பு அனாள் ஒரு கூறன் ஊர் அது - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக உடைய சிவபெருமான் உறையும் ஊர் ஆவது;

பைம்புனற்கரைப் பாவநாசமே - அழகிய குளிர்ந்த தாமிரபரணியின் கரையில் உள்ள பாபநாசம்;


4)

காடு வாழ்கணம் காண நள்ளிருள்

ஆடு கொள்கையன் அண்டர் நாயகன்

தோடு சேர்செவித் தூயன் ஊரது

பாடு நீரயல் பாவ நாசமே.


காடு வாழ் கணம் காண நள்ளிருள் ஆடு கொள்கையன் - சுடுகாட்டில் வாழும் பூதகணங்கள் காண நள்ளிருளில் கூத்தாடுபவன்;

அண்டர்-நாயகன் - தேவர்களுக்கெல்லாம் தலைவன்;

தோடு சேர் செவித் தூயன் ஊர் அது - ஒரு காதில் தோடு அணிந்த தூயனான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது;

பாடு நீர் அயல் பாவநாசமே - ஒலிக்கின்ற தாமிரபரணி-ஆற்றின் அருகே உள்ள பாபநாசம்; (சுந்தரர் தேவாரம் - 7.48.6 - "அந்தண் காவிரிப் பாடு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடிச் சேடனே");


5)

மாயு(ம்) நாளென வந்த காலனே

சாயு மாறொரு தாளை வீசினான்

தாயும் ஆயவன் தங்கும் ஊரது

பாயு(ம்) நீரயல் பாவ நாசமே.


மாயும் நாள் என வந்த காலனே சாயுமாறு ஒரு தாளை வீசினான் - மார்க்கண்டேயர் இறக்கும் தினம் என்று அவரைக் கொல்ல நெருங்கிய காலனே இறக்கும்படி ஒரு திருவடியை வீசி அவனை உதைத்தவன்;

தாயும் ஆயவன் தங்கும் ஊர் அது - அம்மையும் (அப்பனும்) ஆன சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (தாயும் - உம் - எச்சவும்மை);

பாயும் நீர் அயல் பாவநாசமே - பாயும் தாமிரபரணி-ஆற்றின் அருகே உள்ள பாபநாசம்;


6)

கறையி லங்கிய கண்டன் நீறணி

அறவன் அங்கணன் ஆல நீழலில்

மறைவி ரித்தவன் மன்னும் ஊரது

பறவை ஆர்பொழிற் பாவ நாசமே.


கறை இலங்கிய கண்டன் - நீலகண்டன்;

நீறு அணி அறவன் - திருநீற்றைப் பூசிய அறவடிவினன்;

அங்கணன் - அருட்கண் உடையவன்;

ஆலநீழலில் மறை விரித்தவன் மன்னும் ஊர் அது - கல்லாலமரத்தின்கீழ்ச் சனகாதியருக்கு வேதப்பொருளை உபதேசித்தவனான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது;

பறவை ஆர் பொழில் பாவநாசமே - பறவைகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த பாபநாசம்; (ஆர்த்தல் - ஒலித்தல்);


7)

மத்த(ம்) மாசுணம் வைத்த செஞ்சடைச்

சுத்த மாநதி சூடும் வித்தகன்

சத்தி பங்கமர் தந்தை ஊரது

பத்தர் சென்றடை பாவ நாசமே.


மத்தம் மாசுணம் வைத்த செஞ்சடைச் சுத்த மாநதி சூடும் வித்தகன் - ஊமத்தமலரையும் பாம்பையும் அணிந்த சிவந்த சடையில் தூய கங்கையையும் சூடிய ஆற்றல் உடையவன்; (மத்தம் - ஊமத்தமலர்); (மாசுணம் - பாம்பு); (வித்தகம் - சாமர்த்தியம்; ஆற்றல்; பெருமை; ஞானம்);

சத்தி பங்கு அமர் தந்தை ஊர் அது - சக்தியை (உமையை) ஒரு பங்காக விரும்பிய நம் தந்தையான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (அமர்தல் - விரும்புதல்);

பத்தர் சென்றடை பாவநாசமே - பக்தர்கள் சென்று சேர்கின்ற பாபநாசம்;


8)

மடமை யால்மலை பேர்த்த வன்றனை

அடர ஊன்றிய அண்ணல் நீரழற்

சடையில் வைத்தவன் தங்கும் ஊரது

படர்பொ ழிற்பதி பாவ நாசமே.


மடமையால் மலை பேர்த்தவன்தனை அடர ஊன்றிய அண்ணல் - பேதைமையால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை நசுக்கப் பாதவிரலை ஊன்றிய பெருமான்; (சம்பந்தர் தேவாரம் - 2.71.8 - "இராவணனை மால்வரைக்கீழ் அடரவூன்றி");

நீர் அழற்சடையில் வைத்தவன் தங்கும் ஊர் அது - கங்கையைத் தீப் போன்ற செஞ்சடையில் வைத்தவனான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (அப்பர் தேவாரம் - 4.57.6 - "நீரழற் சடையுளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்");

படர்-பொழிற்-பதி பாவநாசமே - படர்ந்த சோலைகள் சூழ்ந்த தலமான பாபநாசம்;


9)

நெடிய மாலயன் நேட நின்றவன்

பொடிய ணிந்தடி போற்றி னார்வினை

மடிய நல்கிடும் வள்ளல் ஊரது

படியெ லாந்தொழு பாவ நாசமே.


நெடிய மால் அயன் நேட நின்றவன் - நீண்ட திருமாலும் பிரமனும் தேடும்படி ஓங்கி நின்றவன்; (நேடுதல் - தேடுதல்);

பொடி அணிந்து அடி போற்றினார் வினை மடிய நல்கிடும் வள்ளல் ஊர் அது - திருநீற்றைப் பூசித் திருவடியை வணங்கிய அன்பர்களது வினையெல்லாம் அழியும்படி வரம் அருளும் வள்ளலான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (மடிதல் - அழிதல்);

படியெலாம் தொழு பாவநாசமே - உலகத்தோரெல்லாம் போற்றுகின்ற பாபநாசம்; (படி - பூமி; உலகம்); (சம்பந்தர் தேவாரம் - 3.38.3 - "படியெலாந் தொழுதேத்து கண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்")


10)

மழுங்கு புத்தியர் மாய(ம்) நீங்குமின்

தொழுங்க ரந்திகழ் தொண்டர் வேண்டிய

வழங்கு வார்சடை வள்ளல் ஊரது

பழங்க ளார்பொழிற் பாவ நாசமே.


மழுங்கு புத்தியர் மாயம் நீங்குமின் - மழுங்கிய அறிவை உடையவர்கள் சொல்லும் வஞ்சத்தை நீங்குங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி);

தொழும் கரம் திகழ் தொண்டர் வேண்டிய வழங்கு வார்சடை வள்ளல் ஊர் அது - தொழும் கரங்களை உடைய பக்தர்கள் வேண்டிய வரங்களையெல்லாம் வழங்கும் வள்ளலும் நீண்ட சடையை உடையவனுமான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது;

பழங்கள் ஆர் பொழில் பாவநாசமே - கனிகள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த பாபநாசம்; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);


11)

உரக மாலையன் உண்ப லிக்கெனப்

பிரம னார்தலை ஏந்து பெற்றியன்

கரவி லாதளி கையன் ஊரது

பரவிப் பார்தொழு பாவ நாசமே.


உரக-மாலையன் - பாம்பை மாலையாக அணிந்தவன்; (உரகம் - பாம்பு);

உண்பலிக்கு எனப் பிரமனார் தலை ஏந்து பெற்றியன் - பிச்சையேற்பதற்காகப் பிரமனது மண்டையோட்டை ஏந்துகின்ற பெருமை உடையவன்; (உண்பலி - பிச்சை); (பெற்றி - பெருமை);

கரவு இலாது அளி கையன் ஊர் அது - அடியவர்களுக்கு வஞ்சமின்றி வாரி வழங்கும் அருட்கரம் உடையவனான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (கரவு - மறைத்தல்);

பரவிப் பார் தொழு பாவநாசமே - உலகத்தாரெல்லாம் போற்றிப் பணிகின்ற பாபநாசம்; ("பார் பரவித் தொழு பாவநாசமே" என்று இயைத்துப் பொருள்கொள்க); (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்); (பார் - பூமி; உலகம்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------