Tuesday, May 12, 2026

P.487 - இடையாறு - ஒருமா வரைவில்

2019-10-19

P.487 - இடையாறு

--------------

(சந்த வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")


1)

ஒருமா வரைவில் தனையேந்திக்

கருதார் புரமூன் றெரிசெய்தான்

இருதாள் நினைவார் இடர்தீர்ப்பான்

எருதூர் பரனூர் இடையாறே.


ஒரு மா வரைவில்தனை ஏந்திக் - ஒரு பெரிய மேருமலையால் ஆன வில்லை ஏந்தி; (வரை - மலை);

கருதார் புரம் மூன்று எரிசெய்தான் - பகைத்த அசுரர்களது முப்புரங்களை எரித்தவன்; (கருதார் - பகைவர்);

இருதாள் நினைவார் இடர் தீர்ப்பான் - தனது இரு-திருவடிகளைத் தியானிக்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்;

எருது ஊர் பரன் ஊர் இடையாறே - இடபத்தை வாகனமாக உடைய பரமனது ஊர் திருவிடையாறு ஆகும்; (ஊர்தல் - ஏறுதல்);


2)

மடமா தொருபால் மகிழீசன்

விட(ம்)மா மணியா அணிகண்டன்

படமார் அரவைப் புனைமார்பன்

இடமாம் எழிலார் இடையாறே.


மட-மாது ஒருபால் மகிழ் ஈசன் - அழகிய உமையை ஒருபக்கம் பாகமாக விரும்பிய ஈசன்;

விடம் மா மணியா அணி கண்டன் - ஆலகாலத்தை அழகிய மணியாகக் கண்டத்தில் அணிந்தவன்;

படம் ஆர் அரவைப் புனை மார்பன் - படம் திகழும் பாம்பை மார்பில் புனைந்தவன்; (படம் - பாம்பின் படம்);

இடம் ஆம் எழில் ஆர் இடையாறே - அப்பெருமான் உறையும் இடம் ஆவது அழகிய திருவிடையாறு;


3)

அலையார் கடல்நஞ் சமுதுண்டான்

மலையான் மருகன் மழவேற்றன்

தலைமா லையினான் தலமென்பர்

இலையார் பொழில்சூழ் இடையாறே.


அலை ஆர் கடல்-நஞ்சு அமுது உண்டான் - அலை மிக்க பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை அமுதாக உண்டவன்;

மலையான் மருகன் - இமவான் மகளுக்குக் கணவன்; (அப்பர் தேவாரம் - 6.38.1 - "மலையான் மருகனாய் நின்றாய் நீயே");

மழ-ஏற்றன் - இளைய எருதை வாகனமாக உடையவன்; (மழ - இளைய);

தலைமாலையினான் தலம் என்பர் - மண்டையோட்டு-மாலையை அணிந்த பெருமான் உறையும் தலம் ஆவது;

இலை ஆர் பொழில் சூழ் இடையாறே - இலை மலிந்த சோலை சூழ்ந்த திருவிடையாறு;


4)

நிழலார் மழுவாள் தனையேந்தி

தொழிலைந் துடையான் சுடுநீற்றன்

பழியில் புகழான் பதியென்பர்

எழிலார் பொழில்சூழ் இடையாறே.


நிழல் ஆர் மழுவாள்தனை ஏந்தி - ஒளியுடைய மழுவை ஏந்தியவன்; (நிழல் - ஒளி); (ஏந்தி - ஏந்தியவன்);

தொழில் ஐந்து உடையான் - பஞ்சகிருத்தியம் செய்பவன்; (படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல்);

சுடு-நீற்றன் - வெந்த திருநீற்றைப் பூசியவன்;

பழி இல் புகழான் பதி என்பர் - குற்றமற்ற புகழை உடைய பெருமான் உறையும் தலம்;

எழில் ஆர் பொழில் சூழ் இடையாறே - அழகிய சோலை சூழ்ந்த திருவிடையாறு;


5)

விசையார் நதிபாய் புரிவேணி

மிசைமா மதியம் புனையீசன்

திசையா டையினான் பதிவண்டின்

இசையார் பொழில்சூழ் இடையாறே.


விசை ஆர் நதி பாய் புரி வேணிமிசை மா மதியம் புனை ஈசன் - வேகம் மிக்க கங்கை பாயும் சுருண்ட சடையின்மேல் அழகிய திங்களைப் புனையும் ஈசன்; (விசை - வேகம்); (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்); (வேணி - சடை); (மிசை - மேல்); (பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 12.21.92 - "மின்தயங்கு புரிவேணி வேதியனார்");

திசை ஆடையினான் பதி - திக்குகளையே ஆடையாக உடைய (திகம்பரன் - நக்கன்) பெருமான் உறையும் தலம்;

வண்டின் இசை ஆர் பொழில் சூழ் இடையாறே - வண்டுகள் செய்யும் இசை நிறைந்த சோலை சூழ்ந்த திருவிடையாறு;


6)

சனியான் மரியான் அணிகொவ்வைக்

கனிவாய் உமையாள் ஒருகூறன்

தனியே றுடையான் நமனாரை

முனிவான் இடமாம் இடையாறே.


சனியான் மரியான் - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்; (சனித்தல் - ஜனித்தல் - பிறத்தல்); (மரித்தல் - சாதல்);

அணி கொவ்வைக்கனி-வாய் உமையாள் ஒரு கூறன் - அழகிய கொவ்வைக்கனி போன்ற செவ்வாயை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்;

தனி ஏறு உடையான் - ஒப்பற்ற இடபத்தை வாகனமாக உடையவன்; (தனி - ஒப்பற்ற);

நமனாரை முனிவான் இடம் ஆம் இடையாறே - எமனைச் சினந்து உதைத்த பெருமான் உறையும் தலம் திருவிடையாறு; (நமனார் - இயமன்); (முனிதல் - சினத்தல்);


7)

மறைநான் குரைசெய் திருநாவன்

அறைவண் டணைகொன் றையு(ம்)நாகம்

பிறைவெண் மதியும் புனைகின்ற

இறைவன் பதியாம் இடையாறே.


மறை நான்கு உரைசெய் திருநாவன் - நால்வேதங்களைப் பாடியருளியவன்;

அறை-வண்டு அணை- கொன்றையும் நாகம் பிறை வெண்மதியும் புனைகின்ற - ஒலிக்கின்ற வண்டுகள் அடைகின்ற கொன்றைமலரையும் பாம்பையும் வெண்திங்களையும் சூடுகின்ற; (அறைதல் - ஒலித்தல்); (அணைதல் - சார்தல்);

இறைவன் பதி ஆம் இடையாறே - இறைவன் உறையும் தலம் திருவிடையாறு;


8)

மலைபேர்க் கமுயன் றவரக்கன்

தலைதோள் நெரிசெய் தருளெம்மான்

கலைமான் மறியைக் கரமேந்தி

நிலையா கியவூர் இடையாறே.


மலை பேர்க்க முயன்ற அரக்கன் தலை தோள் நெரிசெய்து அருள் எம்மான் - கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணனது தலைகளையும் புஜங்களையும் நசுக்கி அருள்செய்த எம்பெருமான்; (நெரித்தல் - நசுக்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.75.8 - "வல்லரக்கன் வரை பேர்க்க வந்தவன் தோள்முடி கல்லரக்கி");

கலைமான்-மறியைக் கரம் ஏந்தி - கலைமான்கன்றைக் கையில் ஏந்தியவன்; (மறி - மான்கன்று);

நிலை ஆகிய ஊர் இடையாறே - நீங்காமல் உறையும் தலம் திருவிடையாறு;


9)

அரிநான் முகனார் மிகநேடிப்

பெரியாய் அருளென் றடிபோற்ற

எரியாய் எழுவான் உமையாளைப்

பிரியான் பதியாம் இடையாறே.


அரி நான்முகனார் மிக நேடிப் - திருமாலும் பிரமனும் அடிமுடியை மிகவும் தேடிக் காணாராய்;

"பெரியாய் அருள்" என்று அடிபோற்ற எரியாய் எழுவான் - "பெரியவனே, அருளாய்" என்று திருவடியை வணங்கும்படி எல்லையற்ற ஜோதியாகி ஓங்கியவன்;

உமையாளைப் பிரியான் பதி ஆம் இடையாறே - உமையைப் பிரியாத பெருமான் உறையும் இடம் ஆவது திருவிடையாறு;


10)

பவநோய் அறுநீ றணியாமல்

அவமே தினமும் புரிகின்ற

தவமா உடையார்க் கருளில்லாச்

சிவனார் பதியாம் இடையாறே.


பவநோய் அறு நீறு அணியாமல் - பிறவிப்பிணியைத் தீர்க்கும் திருநீற்றைப் பூசாமல்; (பவம் - பிறவி);

அவமே தினமும் புரிகின்ற தவமா உடையார்க்கு அருள் இல்லாச் - நாள்தோறும் அவச்செயல்களையே செய்யும் தவமாகக் கொண்ட கீழோர்களுக்கு அருள் இல்லாத; (தவமா - தவமாக);

சிவனார் பதியாம் இடையாறே - சிவபெருமானார் உறைகின்ற இடம் ஆவது திருவிடையாறு;


11)

கடியார் கணைதொட் டவனாகம்

பொடியாக் கியகண் ணுதலெந்தை

கொடிமேல் விடையான் குளிர்திங்கள்

முடியான் பதியாம் இடையாறே.


கடி ஆர் கணை தொட்டவன் ஆகம் பொடி ஆக்கிய கண்ணுதல் எந்தை - வாசனை பொருந்திய அம்பை எய்த மன்மதனது உடலைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணுடைய எம் தந்தை; (கடி - வாசனை); (ஆகம் - உடல்); (கண்ணுதல் - நெற்றிக்கண்);

கொடிமேல் விடையான் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவன்;

குளிர்-திங்கள் முடியான் பதி ஆம் இடையாறே - குளிர்ந்த திங்களை முடிமேல் அணிந்த பெருமான் உறையும் தலம் திருவிடையாறு;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.486 - நெல்வேலி - தூயவன் தொழுதவர்

2019-10-18

P.486 - நெல்வேலி (திருநெல்வேலி)

---------------------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")


1)

தூயவன்; தொழுதவர் துன்பம் தீர்த்திடும்

தாயவன்; தேவர்கள் தலைவன்; நீறணி

தீயன மேனியன்; திருநெல் வேலியில்

மேயவன் அடிதொழ வினைகள் வீடுமே.


தூயவன் - பரிசுத்தன்;

தொழுதவர் துன்பம் தீர்த்திடும் தாய்அவன் - வழிபடுபவர்களது துன்பத்தைத் தீர்க்கும் தாய்; (அவன் - பகுதிப்பொருள்விகுதி);

தேவர்கள் தலைவன் - வானோர் பிரான்;

நீறு அணி தீ அன மேனியன் - தீப் போன்ற செம்மேனியில் திருநீற்றைப் பூசியவன்; (நீறு பூத்த நெருப்புப் போன்ற மேனியை உடையவன்);

திருநெல்வேலியில் மேயவன் அடி தொழ வினைகள் வீடுமே - திருநெல்வேலியில் உறைகின்ற சிவபெருமானது திருவடியைத் தொழுதால் நம் வினைகள் அழியும்; (வீடுதல் - நீங்குதல்; அழிதல்);


2)

போர்விடை ஊர்தியன்; பொடிகொள் மேனியன்;

பார்புகழ் தாமிர பரணி பாய்தரச்,

சீர்திகழ் கோபுரத் திருநெல் வேலியில்,

வார்சடை யான்கழல் வாழ்த்தி வாழ்மினே.


போர்விடை ஊர்தியன் - போர் செய்ய வல்ல இடபத்தை வாகனமாக உடையவன்;

பொடிகொள் மேனியன் - திருநீற்றைப் பூசிய மேனியினான்;

பார் புகழ் தாமிரபரணி பாய்தரச் சீர் திகழ் கோபுரத் திருநெல்வேலியில் - உலகம் புகழும் தாமிரபரணிநதி பாய்கின்ற, அழகிய கோபுரம் திகழும் திருநெல்வேலியில் உறைகின்ற; (தருதல் - ஒரு துணைவினை);

வார்சடையான் கழல் வாழ்த்தி வாழ்மினே - நீள்சடை உடைய சிவபெருமானது கழல் அணிந்த திருவடியை வாழ்த்தி நற்கதி அடையுங்கள்; (வார்தல் - நீள்தல்);


3)

கோணுடைப் பிறைதனைக் குஞ்சி ஏற்றினான்;

வாணுதல் மாதினை வாமம் வைத்தவன்;

சேணுயர் கோபுரத் திருநெல் வேலியில்,

தாணுவின் தாள்தொழச் சாரும் இன்பமே.


கோணுடைப் பிறைதனைக் குஞ்சி ஏற்றினான் - வளைந்த பிறையைச் சென்னிமேல் வைத்தவன்; (கோண் - வளைவு); (குஞ்சி - ஆண்களின் தலைமயிர்; தலை); (திருவாசகம் - திருப்பொன்னூசல் - 8.16.5 - "கோணார் பிறைச்சென்னிக் கூத்தன்");

வாள்-நுதல் மாதினை வாமம் வைத்தவன் - ஒளி பொருந்திய நெற்றியையுடைய உமையை இடப்பக்கம் கூறாக உடையவன்; (வாள் - ஒளி); (நுதல் - நெற்றி); (வாமம் - இடப்பக்கம்);

சேண் உயர் கோபுரத் திருநெல்வேலியில் - வானளாவிய கோபுரம் திகழும் திருநெல்வேலியில் உறைகின்ற; (சேண் - ஆகாயம்);

தாணுவின் தாள் தொழச் சாரும் இன்பமே - தாணு என்ற திருநாமம் உடைய சிவபெருமானது கழல் அணிந்த திருவடியைத் தொழுதால் இன்பம் வந்தடையும்; (தாணு - sthāṇuḥ स्थाणुः - சிவன் திருநாமம்);


4)

அண்மையன்; சேய்மையன்; ஆன்ற ஞானியர்

எண்மலர் கொண்டடி ஏத்து முக்கணன்;

திண்மதில் புடையணி திருநெல் வேலியில்,

தண்மதி சூடியைச் சார்ந்து வாழ்மினே.


அண்மையன் சேய்மையன் - (அன்பர்களுக்கு) அருகே இருப்பவன், (அன்பில்லாதவர்களுக்குத்) தொலைவில் இருப்பவன்; (அண்மை - சமீபம்); (சேய்மை - தூரம்);

ஆன்ற ஞானியர் எண்மலர் கொண்டு அடி ஏத்து முக்கணன் - சிறந்த ஞானியர்கள் எட்டுமலர்களால் வழிபாடு செய்கின்ற முக்கண்ணன்; (எண்மலர் - அஷ்டபுஷ்பம் - இவை அகமலர்கள் எட்டு, புறமலர்கள் எட்டு); (அப்பர் தேவாரம் - 5.54.1 - "எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி மட்டலர் இடுவார் வினை மாயுமால்" - எட்டு நாண்மலர் - அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் எண்வகைப் புதிய மலர்கள். அவையாவன - புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை; அகப்பூசைக்குரிய அட்டபுட்பங்கள் - கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு);

திண்மதில் புடை அணி திருநெல்வேலியில் - உறுதியான மதிலால் சூழப்பெற்ற திருநெல்வேலியில் உறைகின்ற;

தண்மதி சூடியைச் சார்ந்து வாழ்மினே - குளிர்ந்த பிறையைச் சூடிய சிவபெருமானைச் சரணடைந்து உய்யுங்கள்;


5)

பாந்தளைப் பால்மதிப் பாங்கர் வைத்தவன்;

காந்திம திக்கிறை; கையில் வேலுடைச்

சேந்தனைப் பெற்றவன்; திருநெல் வேலியில்

சாந்தவெண் ணீற்றனைச் சார்ந்து வாழ்மினே.


பாந்தளைப் பால்மதிப் பாங்கர் வைத்தவன் - பாம்பைப் பால் போன்ற வெண்திங்கள் பக்கத்தில் வைத்தவன்; (பாந்தள் - பாம்பு); (பாங்கர் - பக்கம்);

காந்திமதிக்கு இறை - காந்திமதி என்ற திருநாமத்தை உடைய உமாதேவிக்குக் கணவன்; (* காந்திமதி - இத்தலத்தில் இறைவி திருநாமம்); (காந்தி - kānti - ஒளி; அழகு; காந்திமதி - அழகுள்ளவள்; ஒளியுள்ளவள்);

கையில் வேலுடைச் சேந்தனைப் பெற்றவன் - கையில் வேலை ஏந்திய முருகனுக்குத் தந்தை; (சேந்தன் - முருகன்);

திருநெல்வேலியில் சாந்த-வெண்ணீற்றனைச் சார்ந்து வாழ்மினே - திருநெல்வேலியில் உறைகின்றவனும் சந்தனம் போல வெண்மையான திருநீற்றைப் பூசியவனுமான சிவபெருமானது திருவடியைச் சரணடைந்து உய்யுங்கள்; (சாந்தம் - சந்தனம்);


6)

அருநமன் தனையுதை அடிகள்; நான்மறைப்

பொருளென உள்ளவன்; பூத நாயகன்;

தெருவினில் ஒலிமலி திருநெல் வேலியில்,

கருமிட றுடையவன் கழலை வாழ்த்துமே.


அருநமன்தனை உதை அடிகள் - கொடிய கூற்றுவனை உதைத்த சுவாமி;

நான்மறைப்பொருள் என உள்ளவன் - நால்வேதப்பொருள் ஆனவன்;

பூதநாயகன் - உயிர்கட்கெல்லாம் தலைவன்; பூதகணங்களுக்குத் தலைவன்; (பூதம் - 1. பூதகணம்; 2. உயிர்வர்க்கம்);

தெருவினில் ஒலி மலி திருநெல்வேலியில் - வீதியில் ஒலி மிகுந்த திருநெல்வேலியில் உறைகின்ற;

கருமிடறு உடையவன் கழலை வாழ்த்துமே - நீலகண்டன் திருவடியை வாழ்த்துங்கள்; (மிடறு - கண்டம்);


7)

மழுவினை ஏந்திய மன்னன்; வேணியில்

விழுபுனல் தேக்கிய விமல வித்தகன்;

செழுமதில் புடையணி திருநெல் வேலியில்,

உழுவையின் அதளனை ஓம்பி உய்ம்மினே.


மழுவினை ஏந்திய மன்னன் - கையில் மழுவாயுதத்தை ஏந்திய அரசன்;

வேணியில் விழு-புனல் தேக்கிய விமல வித்தகன் - சடையில் விழுந்த கங்கையைத் தேக்கிய தூயவன், வல்லவன்; (வேணி - சடை);

செழுமதில் புடை அணி திருநெல்வேலியில் - சிறந்த மதில் புடை சூழ்ந்த திருநெல்வேலியில் உறைகின்ற;

உழுவையின் அதளனை ஓம்பி உய்ம்மினே - புலித்தோல் ஆடையனைப் போற்றி உய்யுங்கள்; (உழுவை - புலி); (அதள் - தோல்); (ஓம்புதல் - பேணுதல்);


8)

மலைபெயர் அரக்கனை வாட ஊன்றினான்;

மலைபவர் மும்மதில் மாய அன்றொரு

சிலைவளை வித்தவன்; திருநெல் வேலியில்

தலைவனைத் தாள்தொழச் சாரும் இன்பமே.


மலை பெயர் அரக்கனை வாட ஊன்றினான் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் வாடும்படி அவனைத் திருப்பாதவிரலை ஊன்றி நசுக்கியவன்;

மலைபவர் மும்மதில் மாய அன்று ஒரு சிலை வளைவித்தவன் - பகைத்தவர்களது முப்புரங்கள் அழியும்படி முன்பு ஒரு மலையை வில்லாக வளைத்தவன்; (மலைதல் - பகைத்து மாறுபடுதல்); (மாய்தல் - அழிதல்); (சிலை - வில்; மலை); (சம்பந்தர் தேவாரம் - 2.15.5 - " மலைபவர் மும்மதில் மாய்வித்த சிலையானே");

திருநெல்வேலியில் தலைவனைத் தாள் தொழச் சாரும் இன்பமே - திருநெல்வேலியில் உறைகின்ற தலைவனான சிவபெருமானை அடிபணிந்தால் இன்பம் வந்தடையும்;


9)

பன்றியின் உருவிலும் பறவை ஆகியும்

சென்றவர் அடிமுடி தேடிக் காண்கிலார்;

தென்றமிழ் விருப்பினன்; திருநெல் வேலியில்

நின்றவன் தாள்தொழ நீங்கும் துன்பமே.


பன்றியின் உருவிலும் பறவை ஆகியும் சென்றவர் அடிமுடி தேடிக் காண்கிலார் - திருமால் பிரமன் இருவரும் பன்றி அன்னப்பறவை வடிவங்களில் சென்று தேடியும் அவர்களால் அடிமுடி அறியப்படாதவன்;

தென்-தமிழ் விருப்பினன் - இனிய தமிழ்ப்-பாமாலைகளை விரும்புபவன்; (தென் - இனிமை);

திருநெல்வேலியில் நின்றவன் தாள் தொழ நீங்கும் துன்பமே - திருநெல்வேலியில் நீங்காமல் உறைகின்ற சிவபெருமானை அடிபணிந்தால் துன்பம் தீரும்;


10)

வெந்தவெண் ணீற்றினை மேனிப் பூசிடா

அந்தகர் பொய்ம்மொழி அகன்று வம்மினீர்;

செந்தழல் மேனியன்; திருநெல் வேலியில்

எந்தையை ஏத்திட எய்தும் இன்பமே.


வெந்த வெண்ணீற்றினை மேனிப் பூசிடா அந்தகர் பொய்ம்மொழி அகன்று வம்மினீர் - சுட்ட திருநீற்றை உடம்பின்மேல் பூசாத குருடர்கள் சொல்லும் பொய்களை நீங்கி வாருங்கள்; (அகல்தல் - நீங்குதல்); (வம்மினீர் - வம்மின் நீர்; மின் - ஏவற்பன்மை விகுதி);

செந்தழல் மேனியன் - செந்தீப் போன்ற செம்மேனியன்;

திருநெல்வேலியில் எந்தையை ஏத்திட எய்தும் இன்பமே - திருநெல்வேலியில் உறைகின்ற எம் தந்தையான சிவபெருமானைத் துதித்தால் இன்பம் வந்தடையும்;


11)

மஞ்சடை மலைக்கிறை மருகன்; வாளிகள்

அஞ்சுடைக் காமனை அனங்கன் ஆக்கினான்;

செஞ்சடைப் புண்ணியன்; திருநெல் வேலியில்

நஞ்சடை கண்டனை நண்ணி உய்ம்மினே.


மஞ்சு அடை மலைக்கு இறை மருகன் - மேகம் அடைகின்ற மலைக்கு அரசனான இமவானுக்கு மருகன்; (இறை - அரசன்);

வாளிகள் அஞ்சுடைக் காமனை அனங்கன் ஆக்கினான் - ஐந்து அம்புகளை உடைய மன்மதனது உடலைச் சுட்டெரித்தவன்; (வாளி - அம்பு); (அனங்கன் - உடலற்றவன்);

செஞ்சடைப் புண்ணியன் - சிவந்த சடையை உடைய புண்ணியமூர்த்தி;

திருநெல்வேலியில் நஞ்சு அடை கண்டனை நண்ணி உய்ம்மினே - திருநெல்வேலியில் உறைகின்ற, ஆலகாலத்தைக் கண்டத்தில் ஒளித்த பெருமானை (நீலகண்டனை) அடைந்து உய்யுங்கள்; (அடைத்தல் - ஒளித்துவைத்தல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.485 - முதுகுன்றம் - இனமலராலே இணையடி

2019-10-12

P.485 - முதுகுன்றம் (விருத்தாசலம்)

----------

(சந்தக் கலிவிருத்தம் - தனதன தானா தனதன தானா)

(Sanskrit Meters - "ललल लगुगु ललल लगुगु" என்ற அமைப்பு. வடமொழியில் "குஸுமவிசித்ரா" - कुसुमविचित्रा என்று பெயரிட்டுள்ளனர்)


முற்குறிப்பு: படிப்போர் வசதி கருதிச் சந்தம் கெடாத இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பெற்றுள்ளது. புணர்ச்சியோடு நோக்கிச் சந்த அமைப்பை உணர்க.

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

இனமல ராலே இணையடி போற்றித்

தின(ம்)நினை வார்க்குத் திருவருள் எம்மான்

புனலது பாயும் புரிசடை அண்ணல்

சினவிடை யானூர் திருமுது குன்றே.


இனமலராலே இணையடி போற்றித் தினம் நினைவார்க்குத் திரு அருள்- எம்மான் - சிறந்த பூக்களால் இரு-திருவடிகளைத் தினமும் போற்றித் தியானிக்கும் பக்தர்களுக்குத் எல்லா நலங்களையும் அருளும் எம்பெருமான்; (திரு - செல்வம்); (சம்பந்தர் தேவாரம் - 1.40.5 - "இனமலர் ஏய்ந்தன தூவி எம்பெருமானடி சேர்வோம்");

புனல்-அது பாயும் புரி-சடை அண்ணல் - கங்கை பாயும் சுருண்ட சடையை உடைய தலைவன்; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

சின-விடையான் ஊர் திருமுதுகுன்றே - கோபம் உடைய எருதை வாகனமாக உடையவன் உறையும் தலம் திருமுதுகுன்றம்; (அப்பர் தேவாரம் - 4.68.2 - "சினவிடை யுடையர் போலும்");


2)

நறைமலர் இட்டால் நலிவினை மாய்க்கும்

இறையவன் ஏரார் இளமதி சூடி

கறையணி கண்டன் கருதிய ஊராம்

சிறையளி பாடும் திருமுது குன்றே.


நறைமலர் இட்டால் நலிவினை மாய்க்கும் இறையவன் - வாசமலர்களைத் தூவி வழிபட்டால் நம்மை வருத்தும் வினைகளை அழிக்கும் இறைவன்; (நலிவினை - 1. வருத்தும் வினை; 2. நலிவை); (நலிதல் - வருத்துதல்); (நலிவு - துன்பம்); (மாய்த்தல் - அழித்தல்);

ஏர் ஆர் இளமதி சூடி - அழகிய இளந்திங்களைச் சூடியவன்; (ஏர் - அழகு); (சூடி - சூடியவன்);

கறை அணி-கண்டன் கருதிய ஊர் ஆம் - நீலகண்டனான சிவபெருமான் விரும்பி உறையும் தலம் ஆவது;

சிறை-அளி பாடும் திருமுதுகுன்றே - சிறகுகளையுடைய வண்டுகள் பாடுகின்ற சோலை சூழ்ந்த திருமுதுகுன்றம்; (சிறை - சிறகு); (அளி - வண்டு);


3)

அலைகடல் நஞ்சே அமுதென ஆர்ந்தான்

மலைமகள் நாதன் மறைமொழி நாவன்

தலைமிசை ஆற்றன் தடமதில் எய்யும்

சிலையினன் ஊராம் திருமுது குன்றே.


அலைகடல் நஞ்சே அமுது என ஆர்ந்தான் - அலைக்கும் கடலில் தோன்றிய ஆலகாலத்தை அமுதம் போல உண்டு அணிந்தவன்; (ஆர்தல் - உண்தல்; அணிதல்);

மலைமகள்-நாதன் - உமைமணாளன்;

மறை மொழி-நாவன் - வேதங்களைப் பாடியருளியவன்;

தலைமிசை ஆற்றன் - கங்காதரன்;

தடமதில் எய்யும் சிலையினன் ஊர் ஆம் திருமுதுகுன்றே - பெரிய முப்புரங்களை எய்த வில்லை ஏந்திய சிவபெருமான் உறையும் தலம் ஆவது திருமுதுகுன்றம்; (சிலை - வில்);


4)

தவமுடை அன்பர் தமையக லாதான்

தவறிய தக்கன் தலையைய ரிந்தான்

எவரினு(ம்) மேலான் எருதமர் ஈசன்

சிவனிட மாம்தென் திருமுது குன்றே.


தவமுடை அன்பர்தமை அகலாதான் - தவம் உடைய பக்தர்களை நீங்காதவன்;

தவறிய தக்கன் தலையை அரிந்தான் - பிழை செய்த தக்கனது தலையை வெட்டியவன்; (அரிதல் - வெட்டுதல்);

எவரினும் மேலான் - எல்லாத் தேவர்களினும் மேலானவன் - பரமன்; (மஹாதேவன்);

எருது அமர் ஈசன் - இடபத்தை வாகனமாக விரும்பிய ஈசன்; (அமர்தல் - விரும்புதல்);

சிவன் இடம் ஆம் தென்-திருமுதுகுன்றே - சிவபெருமான் உறையும் தலம் ஆவது அழகிய திருமுதுகுன்றம்; (தென் - அழகு);


5)

கருமணி கண்டன் கணைசிலை ஏந்தி

ஒருநகை யால்முப் பெருமதில் எய்தான்

அருவமு மாய்ப்பல் லுருவமும் ஆகும்

திருவுடை யானூர் திருமுது குன்றே.


கருமணி-கண்டன் - நீலகண்டன்;

கணை சிலை ஏந்தி ஒரு நகையால் முப்பெருமதில் எய்தான் - கையில் ஒரு கணையையும் வில்லையும் ஏந்தி ஒரு சிரிப்பால் மூன்று பெரிய மதில்களை எய்து எரித்தவன்; (சிலை - வில்); (அப்பர் தேவாரம் - 6.94.9 - "பெருமதில்கள் மூன்றினையும் எய்தானாகி");

அருவமும் ஆய்ப், பல்லுருவமும் ஆகும் - உருவம் அற்றவனும் ஆகிப், பல வடிவங்களையும் ஏற்கின்ற;

திரு உடையான் ஊர் திருமுதுகுன்றே - திருவை உடைய சிவபெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்; (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "சென்றடையாத திருவுடையானை");


6)

பரவிய பத்தர் பழவினை தீர்ப்பான்

இரவினில் நட்டம் புரிபவன் எந்தை

அரவரை ஆர்த்தான் அணிசடை தன்னில்

திரையுடை யானூர் திருமுது குன்றே.


பரவிய பத்தர் பழவினை தீர்ப்பான் - துதிக்கின்ற அன்பர்களது பழைய வினைகளைத் தீர்ப்பவன்;

இரவினில் நட்டம் புரிபவன் எந்தை - இருளில் திருக்கூத்து ஆடுபவன், எம் தந்தை; (நட்டம் - கூத்து);

அரவு அரை ஆர்த்தான் - பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

அணிசடைதன்னில் திரை உடையான் ஊர் திருமுதுகுன்றே - அழகிய சடையில் கங்கையை உடைய சிவபெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்; (திரை - அலை; நதி)


7)

அரவமு(ம்) நாறும் குரவமும் ஆறும்

விரவிய வேணிப் பரனடி யார்க்குக்

கரவிலன் ஊண்கொள் கலனென வேதன்

சிரமுடை யானூர் திருமுது குன்றே.


அரவமும் நாறும் குரவமும் ஆறும் விரவிய வேணிப் பரன் - நாகம், மணம் கமழும் குராமலர், கங்கை இவற்றையெல்லாம் சடையில் அணிந்த பரமன்; (நாறுதல் - மணம் கமழ்தல்); (விரவுதல் - பொருந்துதல்); (வேணி - சடை);

அடியார்க்குக் கரவு இலன் - பக்தர்களுக்கு வஞ்சமின்றி வரம் அருள்பவன்; (கரவு - மறைத்தல்; வஞ்சனை);

ஊண் கொள் கலன் என வேதன் சிரம் உடையான் ஊர் திருமுதுகுன்றே - உணவை ஏற்கும் பிச்சைப்பாத்திரமாகப் பிரமனது மண்டையோட்டை ஏந்திய சிவபெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்; (ஊண் - உணவு);


8)

மலையெறி மூடன் வலிகெட வாய்கள்

அலறிட அன்றோர் அடிவிரல் ஊன்றி

அலைபுர(ம்) நீறாய் அழிவுற எய்த

சிலையினன் ஊர்தென் திருமுது குன்றே.


மலைறி- மூடன் வலி கெட, வாய்கள் அலறிட, அன்று ஓர் அடிவிரல் ஊன்றி - கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற அறிவிலியான இராவணனது வலிமை அழியவும், அவனது பத்து வாய்களும் அலறவும் அன்று திருவடி-விரலை ஊன்றியவன்; (வலி - வலிமை); (ஊன்றி - ஊன்றியவன்);

அலைபுர(ம்) நீறாய் அழிவுற எய்த சிலையினன் ஊர் தென்-திருமுதுகுன்றே - எங்கும் திரிந்து எல்லாரையும் துன்புறுத்திய முப்புரங்களும் சாம்பலாகி அழியும்படி கணை எய்த வில்லை ஏந்திய சிவபெருமான் உறையும் தலம் அழகிய திருமுதுகுன்றம்; (அலைதல் - திரிதல்); (அலைத்தல் - வருத்துதல்); (சிலை - வில்); (தென் - அழகிய);


9)

பிரமனு(ம்) மாலும் பரவிட அன்றோர்

வரையில தாம்தீ வடிவொடு நின்றான்

குரைகழ லால்கூற் றுதையிறை கோத்த

சிரமணி வானூர் திருமுது குன்றே.


பிரமனும் மாலும் பரவிட அன்று ஓர் வரை இலது ஆம் தீ வடிவொடு நின்றான் - நான்முகனும் திருமாலும் வணங்குமாறு முன்பு ஓர் எல்லையற்றதான ஜோதிவடிவில் ஓங்கியவன்; (பரவுதல் - துதித்தல்); (வரை - எல்லை);

குரைகழலால் கூற்று உதை- இறை - ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியால் இயமனை உதைத்த இறைவன்;

கோத்த சிரம் அணிவான் ஊர் திருமுதுகுன்றே - கோக்கப்பட்ட மண்டையோட்டு-மாலையை அணிந்த சிவபெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்; (சிரம் - கபாலம்);


10)

புவிதனில் என்றும் புறனுரை செய்யும்

கவியிருள் நெஞ்சக் கயவரை நீங்கும்

தவிநிலை தீர்க்கும் பவனொரு தோடார்

செவியுடை யானூர் திருமுது குன்றே.


புவிதனில் என்றும் புறனுரை செய்யும் - இவ்வுலகில் ஒயாமல் எந்நாளும் பழிச்சொற்களையும் பயனற்றவைகளையுமே பேசுகின்ற;

கவி-இருள் நெஞ்சக் கயவரை நீங்கும் - இருளால் மூடப்பெற்ற நெஞ்சை உடைய கீழோர்களை விட்டு நீங்குங்கள்; (கவிதல் - மூடுதல்); (இருள் - அறியாமை; குற்றம்);

தவி-நிலை தீர்க்கும் பவன் - தவிக்கின்ற நிலையைத் தீர்த்தருளும் பவன் (= பக்தர்களுக்கு இம்மையில் துன்பத்தைத் தீர்த்து இம்மை மறுமை இன்பங்கள் அருள்பவன்); (பவன் - சிவன் திருநாமம் - என்றும் உள்ளவன்);

ஒரு தோடு ஆர் செவி உடையான் ஊர் திருமுதுகுன்றே - ஒரு காதில் தோடு அணிந்த சிவபெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்;


11)

உருமணி கார்போல் ஒருமணி கண்டன்

தருநிழல் நால்வர்க் கருமறை ஓதி

மருமலர் அம்பெய்ம் மதனெரி கண்ணன்

பொருவிடை யானூர் திருமுது குன்றே.


உரும் அணி- கார் போல் ஒரு மணி கண்டன் - இடியுடைய மேகம் போல ஒரு கரிய மணியைக் கண்டத்தில் அணிந்தவன்; (உரும் - இடி); (கார் - மேகம்); (ஒரு - ஒப்பற்ற);

தருநிழல் நால்வர்க்கு அருமறை ஓதி - கல்லாலமரத்தின்கீழ்ச் சனகாதியர்களுக்கு அரிய வேதப்பொருளை உபதேசித்தவன்; (தரு - மரம் - கல்லாலமரம்); (ஓதி - ஓதியவன்);

மருமலர் அம்பு எய்ம் மதன் எரி- கண்ணன் - வாசமலர்க்கணையை எய்த காமனை எரித்த (நெற்றிக்)கண்ணன்; (மரு - வாசனை);

பொரு-விடையான் ஊர் திருமுதுகுன்றே - போர்செய்யவல்ல இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்; (பொருதல் - போர்செய்தல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------