2020-06-20
P.509 - பாவநாசம் (பாபநாசம்)
(தாமிரபரணிக்-கரையில் உள்ள பாபநாசம்)
--------------
(சந்தக் கலிவிருத்தம் - தான தானன தான தானன)
(சம்பந்தர் தேவாரம் - 2.25.1 - "உகலி யாழ்கட லோங்கு பாருளீர்")
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
1)
அரண(ம்) மூன்றையும் அன்றெ ரித்தவன்
கிரண வெண்மதிக் கீற்றன் மேயது
மரணம் தீரமு தன்ன தாமிர
பரணி தாள்தொழு பாவ நாசமே.
அரணம் மூன்றையும் அன்று எரித்தவன் - முப்புரங்களையும் முன்பு எரித்தவன்;
கிரண-வெண்மதிக் கீற்றன் மேயது - கதிர்வீசும் வெண்திங்களை அணிந்தவன் உறையும் தலம்;
மரணம் தீர் அமுது அன்ன தாமிரபரணி தாள் தொழு பாவநாசமே - இறப்பில்லா வாழ்வை அளிக்கும் அமுதம் போன்ற (நீருடைய) தாமிரபரணி-ஆறானது திருவடியை வழிபடுகின்ற பாபநாசம்;
2)
ஆய்ம லர்க்கணை ஐந்து தொட்டவேள்
காய்நு தற்கணன் கங்கை வேணியன்
மாய்வி லாதவன் மன்னும் ஊரது
பாய்பு னற்கரைப் பாவ நாசமே.
ஆய் மலர்க்கணை ஐந்து தொட்ட வேள் காய் நுதற்கணன் - தேர்ந்தெடுத்த மலர்அம்புகள் ஐந்து தொடுக்கும் மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண்ணன்; (ஆய்தல் - தெரிந்தெடுத்தல்);
கங்கை-வேணியன் - சடையில் கங்கையை உடையவன்; (வேணி - சடை);
மாய்வு இலாதவன் மன்னும் ஊர் அது - இறப்பு இல்லாதவனான சிவபெருமான் உறையும் இடம் ஆவது; (மாய்வு - சாவு); (ஊரது - ஊர் - தலம்; அது - பகுதிப்பொருள்விகுதி);
பாய்-புனற்கரைப் பாவநாசமே - பாயும் தாமிரபரணியின் கரையில் உள்ள பாபநாசம்;
3)
வம்பு லா(ம்)மலர் வன்னி சூடினான்
உம்பர் வாழ்ந்திட ஓத நஞ்சுணி
கொம்ப னாளொரு கூறன் ஊரது
பைம்பு னற்கரைப் பாவ நாசமே.
வம்பு உலாம் மலர் வன்னி சூடினான் - வாசனை கமழும் பூக்களையும் வன்னியையும் சூடியவன்; (வம்பு - வாசனை); (உலாம் - உலாவும் - திகழும்);
உம்பர் வாழ்ந்திட ஓத-நஞ்சு உணி - தேவர்கள் உய்யும்படி கடல்விஷத்தை உண்டவன்; (ஓதம் - கடல்); (உணி - உண்ணி - உண்டவன்; இடைக்குறை விகாரம்);
கொம்பு அனாள் ஒரு கூறன் ஊர் அது - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக உடைய சிவபெருமான் உறையும் ஊர் ஆவது;
பைம்புனற்கரைப் பாவநாசமே - அழகிய குளிர்ந்த தாமிரபரணியின் கரையில் உள்ள பாபநாசம்;
4)
காடு வாழ்கணம் காண நள்ளிருள்
ஆடு கொள்கையன் அண்டர் நாயகன்
தோடு சேர்செவித் தூயன் ஊரது
பாடு நீரயல் பாவ நாசமே.
காடு வாழ் கணம் காண நள்ளிருள் ஆடு கொள்கையன் - சுடுகாட்டில் வாழும் பூதகணங்கள் காண நள்ளிருளில் கூத்தாடுபவன்;
அண்டர்-நாயகன் - தேவர்களுக்கெல்லாம் தலைவன்;
தோடு சேர் செவித் தூயன் ஊர் அது - ஒரு காதில் தோடு அணிந்த தூயனான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது;
பாடு நீர் அயல் பாவநாசமே - ஒலிக்கின்ற தாமிரபரணி-ஆற்றின் அருகே உள்ள பாபநாசம்; (சுந்தரர் தேவாரம் - 7.48.6 - "அந்தண் காவிரிப் பாடு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடிச் சேடனே");
5)
மாயு(ம்) நாளென வந்த காலனே
சாயு மாறொரு தாளை வீசினான்
தாயும் ஆயவன் தங்கும் ஊரது
பாயு(ம்) நீரயல் பாவ நாசமே.
மாயும் நாள் என வந்த காலனே சாயுமாறு ஒரு தாளை வீசினான் - மார்க்கண்டேயர் இறக்கும் தினம் என்று அவரைக் கொல்ல நெருங்கிய காலனே இறக்கும்படி ஒரு திருவடியை வீசி அவனை உதைத்தவன்;
தாயும் ஆயவன் தங்கும் ஊர் அது - அம்மையும் (அப்பனும்) ஆன சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (தாயும் - உம் - எச்சவும்மை);
பாயும் நீர் அயல் பாவநாசமே - பாயும் தாமிரபரணி-ஆற்றின் அருகே உள்ள பாபநாசம்;
6)
கறையி லங்கிய கண்டன் நீறணி
அறவன் அங்கணன் ஆல நீழலில்
மறைவி ரித்தவன் மன்னும் ஊரது
பறவை ஆர்பொழிற் பாவ நாசமே.
கறை இலங்கிய கண்டன் - நீலகண்டன்;
நீறு அணி அறவன் - திருநீற்றைப் பூசிய அறவடிவினன்;
அங்கணன் - அருட்கண் உடையவன்;
ஆலநீழலில் மறை விரித்தவன் மன்னும் ஊர் அது - கல்லாலமரத்தின்கீழ்ச் சனகாதியருக்கு வேதப்பொருளை உபதேசித்தவனான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது;
பறவை ஆர் பொழில் பாவநாசமே - பறவைகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த பாபநாசம்; (ஆர்த்தல் - ஒலித்தல்);
7)
மத்த(ம்) மாசுணம் வைத்த செஞ்சடைச்
சுத்த மாநதி சூடும் வித்தகன்
சத்தி பங்கமர் தந்தை ஊரது
பத்தர் சென்றடை பாவ நாசமே.
மத்தம் மாசுணம் வைத்த செஞ்சடைச் சுத்த மாநதி சூடும் வித்தகன் - ஊமத்தமலரையும் பாம்பையும் அணிந்த சிவந்த சடையில் தூய கங்கையையும் சூடிய ஆற்றல் உடையவன்; (மத்தம் - ஊமத்தமலர்); (மாசுணம் - பாம்பு); (வித்தகம் - சாமர்த்தியம்; ஆற்றல்; பெருமை; ஞானம்);
சத்தி பங்கு அமர் தந்தை ஊர் அது - சக்தியை (உமையை) ஒரு பங்காக விரும்பிய நம் தந்தையான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (அமர்தல் - விரும்புதல்);
பத்தர் சென்றடை பாவநாசமே - பக்தர்கள் சென்று சேர்கின்ற பாபநாசம்;
8)
மடமை யால்மலை பேர்த்த வன்றனை
அடர ஊன்றிய அண்ணல் நீரழற்
சடையில் வைத்தவன் தங்கும் ஊரது
படர்பொ ழிற்பதி பாவ நாசமே.
மடமையால் மலை பேர்த்தவன்தனை அடர ஊன்றிய அண்ணல் - பேதைமையால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை நசுக்கப் பாதவிரலை ஊன்றிய பெருமான்; (சம்பந்தர் தேவாரம் - 2.71.8 - "இராவணனை மால்வரைக்கீழ் அடரவூன்றி");
நீர் அழற்சடையில் வைத்தவன் தங்கும் ஊர் அது - கங்கையைத் தீப் போன்ற செஞ்சடையில் வைத்தவனான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (அப்பர் தேவாரம் - 4.57.6 - "நீரழற் சடையுளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்");
படர்-பொழிற்-பதி பாவநாசமே - படர்ந்த சோலைகள் சூழ்ந்த தலமான பாபநாசம்;
9)
நெடிய மாலயன் நேட நின்றவன்
பொடிய ணிந்தடி போற்றி னார்வினை
மடிய நல்கிடும் வள்ளல் ஊரது
படியெ லாந்தொழு பாவ நாசமே.
நெடிய மால் அயன் நேட நின்றவன் - நீண்ட திருமாலும் பிரமனும் தேடும்படி ஓங்கி நின்றவன்; (நேடுதல் - தேடுதல்);
பொடி அணிந்து அடி போற்றினார் வினை மடிய நல்கிடும் வள்ளல் ஊர் அது - திருநீற்றைப் பூசித் திருவடியை வணங்கிய அன்பர்களது வினையெல்லாம் அழியும்படி வரம் அருளும் வள்ளலான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (மடிதல் - அழிதல்);
படியெலாம் தொழு பாவநாசமே - உலகத்தோரெல்லாம் போற்றுகின்ற பாபநாசம்; (படி - பூமி; உலகம்); (சம்பந்தர் தேவாரம் - 3.38.3 - "படியெலாந் தொழுதேத்து கண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்")
10)
மழுங்கு புத்தியர் மாய(ம்) நீங்குமின்
தொழுங்க ரந்திகழ் தொண்டர் வேண்டிய
வழங்கு வார்சடை வள்ளல் ஊரது
பழங்க ளார்பொழிற் பாவ நாசமே.
மழுங்கு புத்தியர் மாயம் நீங்குமின் - மழுங்கிய அறிவை உடையவர்கள் சொல்லும் வஞ்சத்தை நீங்குங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி);
தொழும் கரம் திகழ் தொண்டர் வேண்டிய வழங்கு வார்சடை வள்ளல் ஊர் அது - தொழும் கரங்களை உடைய பக்தர்கள் வேண்டிய வரங்களையெல்லாம் வழங்கும் வள்ளலும் நீண்ட சடையை உடையவனுமான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது;
பழங்கள் ஆர் பொழில் பாவநாசமே - கனிகள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த பாபநாசம்; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);
11)
உரக மாலையன் உண்ப லிக்கெனப்
பிரம னார்தலை ஏந்து பெற்றியன்
கரவி லாதளி கையன் ஊரது
பரவிப் பார்தொழு பாவ நாசமே.
உரக-மாலையன் - பாம்பை மாலையாக அணிந்தவன்; (உரகம் - பாம்பு);
உண்பலிக்கு எனப் பிரமனார் தலை ஏந்து பெற்றியன் - பிச்சையேற்பதற்காகப் பிரமனது மண்டையோட்டை ஏந்துகின்ற பெருமை உடையவன்; (உண்பலி - பிச்சை); (பெற்றி - பெருமை);
கரவு இலாது அளி கையன் ஊர் அது - அடியவர்களுக்கு வஞ்சமின்றி வாரி வழங்கும் அருட்கரம் உடையவனான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (கரவு - மறைத்தல்);
பரவிப் பார் தொழு பாவநாசமே - உலகத்தாரெல்லாம் போற்றிப் பணிகின்ற பாபநாசம்; ("பார் பரவித் தொழு பாவநாசமே" என்று இயைத்துப் பொருள்கொள்க); (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்); (பார் - பூமி; உலகம்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------