2019-11-09
P.491 - கடவூர்
-----------------
(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனதானா)
(தனதானன தானன தானன தானா - என்றும் நோக்கலாம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.32.1 - "ஓடேகல னுண்பது மூரிடு பிச்சை")
(சம்பந்தர் தேவாரம் - 2.37.1 - "சதுரம் மறைதான் துதிசெய் துவணங்கும்")
1)
படருஞ்சடை மேற்பிறை பாம்பணி அத்தன்
இடவெண்டலை ஒன்றினை ஏந்திய பித்தன்
விடையொன்றினை ஊர்திந யந்தவன் ஊராம்
கடனின்றெழு காரடை யும்கட வூரே.
படரும் சடைமேல் பிறை பாம்பு அணி அத்தன் - படர்ந்த சடையின்மேல் சந்திரனையும் பாம்பையும் அணிந்த தந்தை; (அத்தன் - தந்தை);
இட வெண்தலை ஒன்றினை ஏந்திய பித்தன் - மகளிர் பிச்சை இடுவதற்காக மண்டையோட்டினை ஏந்திய பேரருளாளன்;
விடை ஒன்றினை ஊர்தி நயந்தவன் ஊர் ஆம் - இடபவாகனத்தை விரும்பியவன் உறையும் தலம் ஆவது;
கடல்நின்று எழு கார் அடையும் கடவூரே - கடலிலிருந்து எழுந்த மேகம் வந்தடையும் திருக்கடவூர்; (நின்று - ஐந்தாம் வேற்றுமை உருபு); (கார் - மேகம்; மழை);
2)
இலைமாமலர் இட்டவர் இன்னலை நீக்கி
நிலையாகிய வாழ்வருள் நீள்சடை அண்ணல்
தலைமேற்பிறை தாங்கிய தத்துவன் ஊராம்
அலைபோலடி யாரடை யும்கட வூரே.
இலை மாமலர் இட்டவர் இன்னலை நீக்கி - இலைகளையோ அழகிய மலர்களையோ இட்டு வழிபடுபவர்களது துன்பத்தைத் தீர்த்து;
நிலை ஆகிய வாழ்வு அருள் நீள்சடை அண்ணல் - அவர்களுக்கு நிலையான வீட்டின்பத்தை அருளும், நீண்ட சடையுடைய தலைவன்;
தலைமேல் பிறை தாங்கிய தத்துவன் ஊர் ஆம் - சந்திரனைச் சூடிய மெய்ப்பொருளான பெருமான் உறையும் தலம் ஆவது;
அலைபோல் அடியார் அடையும் கடவூரே - கடல்போல அடியவர்கள் திரண்டு அடைகின்ற திருக்கடவூர்;
3)
மழையார்மிட றேத்திய மாணியை மாய்க்க
அழலார்விழி யோடடை கூற்றைய ழித்தான்
சுழலார்நதி தூமதி சூடிதன் ஊராம்
கழல்வாழ்த்திடு நேயர்கள் சேர்கட வூரே.
மழை ஆர் மிடறு ஏத்திய மாணியை மாய்க்க அழல் ஆர் விழியோடு அடை கூற்றை அழித்தான் - மேகம் போன்ற நீலகண்டத்தைத் துதித்த மார்க்கண்டேயரைக் கொல்லத் தீக் கக்கும் கண்களோடு நெருங்கிய காலனை உதைத்து அழித்தவன்; (மழை - மேகம்); (ஆர்தல் - ஒத்தல்; பொருந்துதல்);
சுழல் ஆர் நதி தூ-மதி சூடிதன் ஊர் ஆம் - சுழல்கள் நிறைந்த கங்கையையும் வெண்திங்களையும் சூடியவன் உறையும் தலம் ஆவது; (சூடி - சூடியவன்);
கழல் வாழ்த்திடு நேயர்கள் சேர் கடவூரே - திருவடியை வாழ்த்தும் அன்பர்கள் திரள்கின்ற திருக்கடவூர்;
4)
கூரார்மழு மான்மறி ஏந்திய கோமான்
ஈராறுகை மைந்தனை நல்கிய ஏந்தல்
நீரார்சடை நின்மலன் நின்றருள் ஊராம்
காரார்தரு கோபுர மார்கட வூரே.
கூர் ஆர் மழு மான்மறி ஏந்திய கோமான் - கூரிய மழுவையும் மான்கன்றையும் ஏந்திய அரசன்;
ஈராறுகை மைந்தனை நல்கிய ஏந்தல் - பன்னிருகை முருகனைத் தந்த பெருமையுடையவன்;
நீர் ஆர் சடை நின்மலன் நின்று அருள் ஊர் ஆம் - கங்கையைச் சடையில் உடைய தூயன் நீங்காமல் உறைகின்ற தலம் ஆவது;
கார் ஆர்தரு கோபுரம் ஆர் கடவூரே - மேகம் பொருந்துகின்ற கோபுரம் பொருந்திய திருக்கடவூர்; (ஆர்தல் - பொருந்துதல்); (தருதல் - ஒரு துணைவினை);
5)
மானார்கரன் வாளர வார்மணி மார்பன்
வானார்பிறை வாழ்ந்திட வார்சடை வைத்தான்
ஊனார்தலை யிற்பலி ஏற்பவன் ஊராம்
கானார்மலர் ஆர்பொழில் சூழ்கட வூரே.
மான் ஆர் கரன் - கையில் மானை ஏந்தியவன்;
வாளரவு ஆர் மணி-மார்பன் - கொடிய பாம்பைப் பவளம் போன்ற அழகிய மார்பில் அணிந்தவன்; (வாள் - கொடிய); (ஆர்தல் - அணிதல்; பொருந்துதல்); (மணி - பவளம்; அழகு);
வான் ஆர் பிறை வாழ்ந்திட வார்சடை வைத்தான் - அழகிய பிறை வாழும்படி நீண்ட சடையில் அதனை வைத்தவன்; (வான் - ஆகாயம்; அழகு);
ஊன் ஆர் தலையில் பலி ஏற்பவன் ஊர் ஆம் - மாமிசம் பொருந்திய மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் பெருமான் உறையும் தலம் ஆவது;
கான் ஆர் மலர் ஆர் பொழில் சூழ் கடவூரே - வாசமலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கடவூர்; (கான் - வாசனை);
6)
அவியாவொரு சோதியன் அங்கணன் அன்பால்
புவியோர்மலர் கொண்டடி போற்றிட என்றும்
தவியாநிலை தந்தருள் சங்கரன் ஊராம்
கவினார்பொழில் சூழ்நல மார்கட வூரே;
அவியா ஒரு சோதியன் - என்றும் அழியாத ஒப்பற்ற ஜோதிவடிவினன்;
அங்கணன் - அருள்நோக்கம் உடையவன்;
அன்பால் புவியோர் மலர் கொண்டு அடிபோற்றிட என்றும் தவியா நிலை தந்தருள் சங்கரன் ஊர் ஆம் - அன்போடு நிலவுலகத்தினர் பூவால் திருவடியை வழிபட, அவர்களுக்கு எந்நாளும் துன்பமற்ற நிலையைத் தந்து காக்கின்ற சங்கரன் உறையும் தலம் ஆவது;
கவின் ஆர் பொழில் சூழ் நலம் ஆர் கடவூரே - அழகிய சோலை சூழ்ந்த நன்மை மிக்க திருக்கடவூர்;
7)
கல்லாலதன் நீழலு கந்தக ருத்தன்
பல்லார்தலை யிற்பலி ஏற்றவன் வெற்பு
வில்லால்மதில் வெந்தற எய்தவன் ஊராம்
கல்லார்மதில் சூழணி யார்கட வூரே.
கல்லால்-அதன் நீழல் உகந்த கருத்தன் - கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருக்கும் கர்த்தன்; (கருத்தன் - கர்த்தா - கடவுள்); (சம்பந்தர் தேவாரம் - 1.134.1 - "கருத்தன் கடவுள் கனலேந்தியாடும் நிருத்தன்")
பல் ஆர் தலையில் பலி ஏற்றவன் - பற்கள் பொருந்திய மண்டையோட்டில் பிச்சையை ஏற்பவன்; (அப்பர் தேவாரம் - 6.47.9 - "பல்லார்ந்த வெண்டலை கையில் ஏந்தி");
வெற்பு-வில்லால் மதில் வெந்து அற எய்தவன் ஊர் ஆம் - மேருமலை என்ற வில்லால் முப்புரங்களும் வெந்து அழியும்படி ஒரு கணையை எய்த பெருமான் உறையும் தலம் ஆவது;
கல் ஆர் மதில் சூழ் அணி ஆர் கடவூரே - கருங்கல்லால் ஆன மதிலால் சூழப்பெற்ற திருக்கடவூர்; (சம்பந்தர் தேவாரம் - 1.31.1 - "கல்லார் மதிற்காழியுள் ஞான சம்பந்தன்");
8)
செருவொன்றில னாய்மலை பேர்த்தசெ ருக்கன்
வெருவும்படி ஓர்விர லால்நெரி செய்தான்
பொருவெங்கரி ஈருரி போர்த்தவன் ஊராம்
கருவண்டிசை ஆர்பொழில் சூழ்கட வூரே.
செரு ஒன்று இலனாய் மலை பேர்த்த செருக்கன் வெருவும்படி ஓர் விரலால் நெரி செய்தான் - எதிர்த்துப் போர்செய்வார் எவரும் இல்லாதவனாகிக், கயிலைமலையைப் பெயர்த்த கர்வம் மிகுந்த இராவணன் அஞ்சும்படி அவனை ஒரு விரலை ஊன்றி நசுக்கியவன்; (செரு - போர்); (ஒன்று - ஒன்றும்; உம் தொக்கது); (செருக்கு - கர்வம்; அகந்தை); (வெருவுதல் - அஞ்சுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.118.8 - "செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்தருள் செய்தவரே");
பொரு-வெங்கரி ஈர்உரி போர்த்தவன் ஊர் ஆம் - போர்செய்த கொடிய யானையின் உரித்த ஈரத்தோலைப் போர்த்த பெருமான் உறையும் தலம் ஆவது; (பொருதல் - போர்செய்தல்);
கருவண்டு இசை ஆர் பொழில் சூழ் கடவூரே - கரிய வண்டுகள் இசை ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருக்கடவூர்;
9)
நெடியானயன் நேடிவ ணங்கிட நின்றான்
கொடிபோலுமை கூறும கிழ்ந்திடு கூத்தன்
பொடிபூசிய புண்ணியன் மேவிய ஊராம்
கடியார்மலர் ஆர்பொழில் சூழ்கட வூரே.
நெடியான் அயன் நேடி வணங்கிட நின்றான் - திருமாலும் பிரமனும் தேடிக் காணாமல் வணங்குமாறு எல்லையற்ற ஜோதியாகி நின்றவன்; (நேடுதல் - தேடுதல்);
கொடிபோல் உமை கூறு மகிழ்ந்திடு கூத்தன் - பூங்கொடி போன்ற உமையை ஒரு பாகமாக விரும்பிய கூத்தன்;
பொடி பூசிய புண்ணியன் மேவிய ஊர் ஆம் - திருநீற்றைப் பூசிய புண்ணியமூர்த்தியான சிவபெருமான் உறையும் தலம் ஆவது;
கடி ஆர் மலர் ஆர் பொழில் சூழ் கடவூரே - வாசமலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கடவூர்;
10)
நள்ளாதவர் நாளு(ம்) நவிற்றுரை நஞ்சே
உள்ளோடிய தென்றுணர் வீருமை பங்கன்
வெள்ளேறமர் முக்கணன் மேவிய ஊராம்
கள்ளார்மலர் ஆர்பொழில் சூழ்கட வூரே.
நள்ளாதவர் நாளு(ம்) நவிற்று உரை நஞ்சே உள் ஓடியது என்று உணர்வீர் - அன்பு இல்லாதவர்கள் எந்நாளும் ஓயாமல் பேசும் பேச்செல்லாம் உள்ளே விஷத்தை உடையது என்று உணருங்கள்; (நவிற்றுதல் - சொல்லுதல்); (ஓடுதல் - பொருந்துதல்); (உணர்வீர் - உணருங்கள் என்ற பொருளில்);
உமைபங்கன் - அர்த்தநாரீஸ்வரன்;
வெள்-ஏறு அமர் முக்கணன் மேவிய ஊர் ஆம் - வெள்ளை இடபத்தை வாகனமாக விரும்பிய நெற்றிக்கண்ணன் உறையும் தலம் ஆவது;
கள் ஆர் மலர் ஆர் பொழில் சூழ் கடவூரே - தேன் நிறைந்த மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கடவூர்;
11)
தமிழின்தொடை பாடிடு வார்வினை தன்னில்
அமிழுந்துயர் தீர்ப்பவன் அன்றலை ஆழி
உமிழ்நஞ்சினை உண்டருள் உத்தமன் ஊராம்
கமழும்பொழில் சூழ்நல மார்கட வூரே;
தமிழ் இன்-தொடை பாடிடுவார் வினைதன்னில் அமிழும் துயர் தீர்ப்பவன் - தமிழில் இனிய பாமாலைகளைப் பாடும் பக்தர்கள் வினைக்கடலில் ஆழ்ந்து துன்பப்படாதவாறு அவர்களைக் காத்து அருள்பவன்;
அன்று அலைஆழி உமிழ் நஞ்சினை உண்டு அருள் உத்தமன் ஊர் ஆம் - முன்பு அலைகடலில் எழுந்த விஷத்தை உண்டு அருளிய உத்தமனான சிவபெருமான் உறையும் தலம் ஆவது;
கமழும் பொழில் சூழ் நலம் ஆர் கடவூரே - மணம் கமழும் சோலை சூழ்ந்த நன்மை மிக்க திருக்கடவூர்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------