Wednesday, May 6, 2026

T.234 - நாவலூர் - பாரில்நான் வாதைகள்

2019-08-22

T.234 - நாவலூர் - பாரில்நான் வாதைகள்

-----------------

(வண்ணவிருத்தம்;

தானனா தானன .. தந்ததான)

(வாரிமீ தேயெழு திங்களாலே - திருப்புகழ் - பொது)


பாரில்நான் வாதைகள் .. இன்றிவாழப்

.. பாலியாய் நீறணி .. கின்றமார்பா

நீரினாய் வேணியில் .. இண்டைபோல

.. நீணிலா நாகம .. ணிந்ததேவா

காரினார் மாமணி .. கண்டநேயா

.. காலனார் மாளவெ .. குண்டசீலா

நாரியோர் கூறென .. நின்றநாதா

.. நாவலூர் மேவிய .. எம்பிரானே.


பதம் பிரித்து:

பாரில் நான் வாதைகள் இன்றி வாழப்

.. பாலியாய், நீறு அணிகின்ற மார்பா;

நீரினாய் வேணியில், இண்டை போல

.. நீள்நிலா நாகம் அணிந்த தேவா;

காரின் ஆர் மா-மணி கண்ட; நேயா;

.. காலனார் மாள வெகுண்ட சீலா;

நாரி ஓர் கூறு என நின்றநாதா ;

.. நாவலூர் மேவிய எம்பிரானே.


பாரில் நான் வாதைகள் இன்றி வாழப் பாலியாய் - இவ்வுலகில் துன்பமின்றி நான் வாழ்வதற்கு அருள்வாயாக; (வாதை - துன்பம்); (பாலித்தல் - காத்தல்; அனுக்கிரகித்தல்);

நீறு அணிகின்ற மார்பா - மார்பில் திருநீற்றைப் பூசியவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.46.9 - "பொடியாடு மார்பானை");

நீரினாய் வேணியில் - சடையில் கங்கையை அணிந்தவனே; (வேணி - சடை);

(வேணியில்) இண்டை போல நீள்நிலா நாகம் அணிந்த தேவா - (சடையில்) இண்டைமாலை போலப் பிறையையும், பாம்பையும் அணிந்த தேவனே; ("வேணியில்" - இடைநிலைத்தீவகமாக இப்படி இருபக்கமும் இயைக்க நின்றது); (இண்டை - தலையில் அணியும் மாலைவகை);

காரின் ஆர் மா-மணி-கண்ட - கரிய அழகிய மணி திகழும் கண்டத்தை உடையவனே;

நேயா - அன்பனே; ("மணிகண்ட நேயா = நீலகண்டத்தையுடைய அன்பனே" என்று ஒரே சொற்றொடராகச் சேர்த்தும் பொருள்கொள்ளலாம்);

காலனார் மாள வெகுண்ட சீலா - கூற்றுவன் அழியும்படி அவனைச் சினந்து உதைத்த சீலனே;

நாரி ஓர் கூறு என நின்ற நாதா - உமையை ஒரு கூறாக உடைய தலைவனே; (நாரி - பெண்);

நாவலூர் மேவிய எம்பிரானே - திருநாவலூரில் எழுந்தருளிய எம்பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.233 - பொது - மாமணப் பதங்கள்

2019-08-20

T. 233 - பொது - மாமணப் பதங்கள்

-----------------

(வண்ணவிருத்தம்;

தானனத் தனந்த .. தனதான)

(காமியத் தழுந்தி - திருப்புகழ் - சுவாமிமலை)


மாமணப் பதங்கள் .. திகழ்கோல

.. மாலையைப் பகர்ந்து .. பொடிபூசித்

தாமரைப் பதங்கள் .. மறவாது

.. சார்பவர்க் கிரங்கும் .. அருளாளன்

சோமனைப் புனைந்த .. சடைநாதன்

.. தோகையைப் புரைந்த .. உமைபாகன்

காமனைச் சினந்த .. கயிலாயன்

.. காலனைக் கடிந்த .. பெருமானே.


பதம் பிரித்து:

மா-மணப்-பதங்கள் திகழ் கோல-

.. மாலையைப் பகர்ந்து, பொடி பூசித்,

தாமரைப்-பதங்கள் மறவாது

.. சார்பவர்க்கு இரங்கும் அருளாளன்;

சோமனைப் புனைந்த சடை-நாதன்;

.. தோகையைப் புரைந்த உமை-பாகன்;

காமனைச் சினந்த கயிலாயன்;

.. காலனைக் கடிந்த பெருமானே.


மாமணப் பதங்கள் திகழ் கோல- மாலையைப் பகர்ந்து, பொடி பூசித் - மிகவும் மணம் கமழும் சொற்கள் திகழும் அழகிய பாமாலைகளைச் சொல்லித், திருநீற்றை உடல்மேல் பூசி; (பதம் - சொல்); (பகர்தல் - சொல்தல்);

தாமரைப்-பதங்கள் மறவாது சார்பவர்க்கு இரங்கும் அருளாளன் - தாமரைமலர் போன்ற திருவடிகளை எந்நாளும் மறவாமல் புகலடைந்த பக்தர்களுக்கு இரங்கி அருள்பவன்; (பதம் - பாதம்); (சார்தல் - புகலடைதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.113.5 - "சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும்வண்ணம் நேர்ந்தவன்");

சோமனைப் புனைந்த சடை-நாதன் - சந்திரனைச் சடைமேல் சூடிய நாதன்; (சோமன் - சந்திரன்); (புனைதல் - அணிதல்);

தோகையைப் புரைந்த உமை-பாகன் - மயில் போன்ற உமையை ஒரு பாகமாக உடையவன்; (தோகை - மயில்); (புரைதல் - ஒத்தல்);

காமனைச் சினந்த கயிலாயன் - மன்மதனைக் கோபித்து எரித்த கயிலைமலையான்;

காலனைக் கடிந்த பெருமானே - காலனை உதைத்து அழித்த பெருமான்; (கடிதல் - தண்டித்தல்; அழித்தல்); (- ஈற்றசை); (அப்பர் தேவாரம் - 4.63.10 - "காலனைக் கடிந்த எம்மான்");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.232 - வீழிமிழலை - திரைமலி கடலில்

2019-08-15

T. 232 - வீழிமிழலை - திரைமலி கடலில்

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனன தனதன தனன

தனதன தனன .. தனதான)

(எழுகடல் மணலை - திருப்புகழ் - சிதம்பரம்)


திரைமலி கடலில் மறிகலம் அனைய

.. .. செடியது தருவல் .. வினைதீரச்

.. செழுமலர் இனிய தமிழ்கொடு நினது

.. .. திருவடி பணியும் .. அறிவீயாய்

அரையினில் அணிகொள் துகிலென உழுவை

.. .. அதன்வரி அதளை .. உடையானே

.. அடிதொழு(ம்) முனிவர் வெருவிட அடையும்

.. .. அருநமன் உருள .. உதைகாலா

வரையெனும் அரிய சிலைகொடு பெரிய

.. .. மதிலவை எரிசெய் .. ஒருவீரா

.. மலரடி இணையை வழிபடு மதியம்

.. .. வளர்சடை உலவ .. அருள்வோனே

விரைகமழ் தமிழ்சொல் கவுணியர் மகிழ

.. .. விலைபெறு படியை .. அணிவீழி

.. மிழலையில் அருளும் அழகுடை விகிர்த

.. .. விடைதனை உடைய .. பெருமானே.


பதம் பிரித்து:

திரை மலி கடலில் மறி-கலம் அனைய

.. .. செடியது தரு வல்வினை தீரச்,

.. செழுமலர் இனிய தமிழ்கொடு நினது

.. .. திருவடி பணியும் .. அறிவு ஈயாய்;

அரையினில் அணிகொள் துகில் என உழுவை

.. .. அதன் வரி-அதளை .. உடையானே;

.. அடிதொழு(ம்) முனிவர் வெருவிட அடையும்

.. .. அரு-நமன் உருள .. உதை-காலா;

வரையெனும் அரிய சிலைகொடு பெரிய

.. .. மதிலவை எரிசெய் .. ஒரு வீரா;

.. மலரடி-இணையை வழிபடு மதியம்

.. .. வளர்-சடை உலவ .. அருள்வோனே;

விரை கமழ் தமிழ் சொல் கவுணியர் மகிழ

.. .. விலைபெறு படியை .. அணி-வீழி-

.. மிழலையில் அருளும் அழகுடை விகிர்த;

.. .. விடைதனை உடைய .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

திரை மலி கடலில் மறி கலம் அனைய செடியது தரு வல் வினை தீரச் - அலை மிகுந்த கடலில் முழுகின்ற படகுபோல் (= அந்தப் படகில் செல்பவர்கள் படுவது போன்ற) துன்பம் தருகின்ற வலியவினை தீருமாறு; (மறிதல் - கீழ்மேலாதல்);

செழுமலர் இனிய தமிழ்கொடு நினது திருவடி பணியும் அறிவு ஈயாய் - சிறந்த பூக்களாலும், இனிய தமிழ்ப்பாமாலைகளாலும் உன் திருவடியை வழிபடும் அறிவை எனக்கு அருள்வாயாக;

அரையினில் அணிகொள் துகில் என உழுவை அதன் வரி-அதளை உடையானே; - அரையில் அழகிய துகில் போலப் புலியின் வரித்தோலைக் கட்டியவனே; (அணி - அழகு); (துகில் - நல்லாடை); (உழுவை - புலி); (அதள் - தோல்);

அடி தொழு(ம்) முனிவர் வெருவிட அடையும் அருநமன் உருள உதை காலா - உன் திருவடியைத் தொழுத மார்க்கண்டேயர் அஞ்சுமாறு அவரை நெருங்கிய கொடிய கூற்றுவனைத் தரையில் உருளும்படி உதைத்த காலகாலனே; (வெருவுதல் - அஞ்சுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.54.6 - "ஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம் பாடும் எனவும்");

வரைனும் அரிய சிலைகொடு பெரிய மதிலவை எரிசெய் ஒரு வீரா - மேருமலை என்ற அரிய வில்லால் பெரிய முப்புரங்களை எரித்த ஒப்பற்ற வீரனே; (வரை - மலை); (சிலை - வில்); (ஒரு - ஒப்பற்ற);

மலரடி-இணையை வழிபடு மதியம் வளர்சடை உலவ அருள்வோனே - உன் இரு-மலர்த்திருவடிகளை வணங்கிய சந்திரனை வளரும் சடையின்மேல் உலவும்படி அருளியவனே;

விரை கமழ் தமிழ்சொல் கவுணியர் மகிழ விலைபெறு படியை அணி வீழிமிழலையில் அருளும் அழகுடை விகிர்த - மணம் கமழும் தமிழ்ப்பாமாலை பாடிய சம்பந்தர் மகிழும்படி அவருக்கு நல்ல மதிப்புடைய படிக்காசை அழகிய திருவீழிமிழலையில் அருளிய விகிர்தனே; (கவுணியர் - கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தர்); (படி - படிக்காசு); (சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர்");

விடைதனை உடைய பெருமானே - இடபவாகனம் உடைய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.231 - வீழிமிழலை - பெரிய உலகினில்

2019-08-15

T. 231 - வீழிமிழலை - பெரிய உலகினில்

-----------------

(வண்ணவிருத்தம்;

தனன தனதன தனன தனதன

தனன தனதன .. தனதான)

(குமர குருபர முருக சரவண - திருப்புகழ் - சுவாமிமலை)


பெரிய உலகினில் அடையும் இடர்மிகு

.. .. பிறவி அவைமுடி .. விலவாகப்

.. பிழைகள் புரிவது பிரிய மண(ம்)மலி

.. .. பிணையல் உனதடி .. இடுவேனோ

இரியும் இமையவர் அழுது மலரடி

.. .. இணையில் விழவிடம் .. அமுதேபோல்

.. இனிது பருகிய மிடறு தனிலிருள்

.. .. இலகு மணிதனை .. உடையானே

கரிய குழலினில் நறவ மலரணி

.. .. கலவ மயிலன .. உமைபாகா

.. கமல மலரன நயனம் இடுமரி

.. .. கருது திகிரியை .. அருள்வோனே

விரியு(ம்) மலர்மலி பொழிலில் அளியினம்

.. .. விரவும் அணிநகர் .. திருவீழி

.. மிழலை தனிலடி பரவும் அடியவர்

.. .. வினைகள் அறவருள் .. பெருமானே.


பதம் பிரித்து:

பெரிய உலகினில் அடையும் இடர் மிகு

.. .. பிறவி அவை முடிவு .. இல ஆகப்

.. பிழைகள் புரிவது பிரிய, மண(ம்)மலி

.. .. பிணையல் உனது அடி .. இடுவேனோ?

இரியும் இமையவர் அழுது மலரடி

.. .. இணையில் விழ, விடம் .. அமுதே போல்

.. இனிது பருகிய மிடறுதனில் இருள்

.. .. இலகு மணிதனை .. உடையானே;

கரிய குழலினில் நறவ-மலர் அணி

.. .. கலவ-மயில் அன .. உமைபாகா;

.. கமல-மலர் அன நயனம் இடும் அரி

.. .. கருது திகிரியை .. அருள்வோனே;

விரியு(ம்) மலர் மலி பொழிலில் அளியினம்

.. .. விரவும் அணி-நகர் .. திருவீழி-

.. மிழலைதனில் அடி பரவும் அடியவர்

.. .. வினைகள் அற அருள் .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

பெரிய உலகினில் அடையும் இடர் மிகு பிறவி அவை முடிவு இகப் பிழைகள் புரிவது பிரிய - இந்தப் பெரிய நிலவுலகில் அடைகின்ற துன்பம் மிகுந்த பிறவிகள் முடிவின்றித் தொடரும்படி தீவினை செய்வது நீங்க; (பிரிதல் - நீங்குதல்; விட்டுவிலகுதல்);

மண(ம்) மலி பிணையல் உனது அடி இடுவேனோ - வாசமலர்-மாலைகளை உன் திருவடியில் இடுவேனோ? அப்படி வணங்க அருள்வாயாக; (பிணையல் - மலர்மாலை);

இரியும் இமையவர் அழுது மலரடி-இணையில் விழ, விடம் அமுதே போல் இனிது பருகிய மிடறுதனில் இருள் இலகு மணிதனை உடையானே - அஞ்சி ஓடிய தேவர்கள் அழுது உன் மலர்த்திருவடிகள் இரண்டில் விழுந்து இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை அமுதம்போல் உண்டு, கண்டத்தில் கருமை திகழும் மணியை உடையவனே; (சம்பந்தர் தேவாரம் - 3.121.4 - "ஒளிதிகழ் மேனி கருகினாரெல்லாம் கைதொழுதேத்தக் கடலுள் நஞ்சமுதமா வாங்கிப் பருகினார் போலும்");

கரிய குழலினில் நறவ-மலர் அணி கலவ-மயில் அன உமைபாகா - கருங்கூந்தலில் வாசமலர்களை அணிந்த, கலாபமயில் போன்ற உமையை ஒரு பாகமாக உடையவனே; (நறவம் - தேன்; வாசனை); (கலவம் - கலாபம் - தோகை);

கமல-மலர் அன நயனம் இடும் அரி கருது திகிரியை அருள்வோனே - தாமரைமலர் போன்ற கண்ணை இடந்து இட்டு வழிபட்ட திருமால் விரும்பிய சக்கராயுதத்தை அருளியவனே; (திகிரி - சக்கரம்); (* இது திருவீழிமிழலைத் தலவரலாற்றுச் செய்தி);

விரியு(ம்) மலர் மலி பொழிலில் அளியினம் விரவும் அணி நகர் திருவீழிமிழலைதனில் - விரிகின்ற மலர்கள் நிறைந்த சோலையில் வண்டினங்கள் பொருந்துகின்ற அழகிய திருவீழிமிழலையில்; (அளி - வண்டு);

டி பரவும் அடியவர் வினைகள் அறருள் பெருமானே - திருவடியைத் துதிக்கும் பக்தர்களது வினைகள் தீர அருள்கின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.230 - ஏடகம் (திருவேடகம்) - ஆசையே நாடொறும்

2019-08-13

T.230 - ஏடகம் (திருவேடகம்) - ஆசையே நாடொறும்

-----------------

(வண்ணவிருத்தம்;

தானனா தானன .. தந்ததான)

(வாரிமீ தேயெழு திங்களாலே - திருப்புகழ் - பொது)


ஆசையே நாடொறும் .. உந்தஆடி

.. ஆழிசூழ் பூமிசை .. என்றும்வாடிப்

பாசமார் தூதரை .. அஞ்சினேனைப்

.. பாலியாய் மாவிடம் .. உண்டதேவா

வாசமார் ஓதிம .. டந்தைபாகா

.. வானனே வேளைமு .. னிந்தயோகீ

ஈசனே நீள்மதி .. கொன்றைசூடீ

.. ஏடுசேர் ஏடக .. எம்பிரானே.


பதம் பிரித்து:

ஆசையே நாள்தொறும் உந்த ஆடி,

.. ஆழி சூழ் பூமிசை என்றும் வாடிப்,

பாசம் ஆர் தூதரை அஞ்சினேனைப்

.. பாலியாய், மா-விடம் உண்ட தேவா;

வாசம் ஆர் ஓதி மடந்தை-பாகா;

.. வானனே; வேளை முனிந்த யோகீ;

ஈசனே; நீள்மதி கொன்றை சூடீ;

.. ஏடு சேர் ஏடக எம்பிரானே.


ஆசையே நாள்தொறும் உந்த ஆடி - தினமும் ஆசைகளால் உந்தப்பட்டு இயங்கி;

ஆழி சூழ் பூமிசை என்றும் வாடிப் - கடல் சூழ்ந்த பூமியின்மேல் எந்நாளும் வருந்தி; (ஆழி - கடல்); (பூ - பூமி);

பாசம் ஆர் தூதரை அஞ்சினேனைப் - கையில் பாசத்தைப் பிடித்து வரும் (/ பாசத்தால் கட்டுகின்ற) எமதூதர்களை அஞ்சிடும் என்னை; (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்); (ஆர்த்தல் - கட்டுதல்);

பாலியாய், மா-விடம் உண்ட தேவா - காத்தருள்வாயாக, ஆலகாலத்தை உண்ட தேவனே; (பாலித்தல் - காத்தருள்தல்);

வாம் ஆர் ஓதி மடந்தை-பாகா - வாசக்குழல்-மங்கை உமையை ஒரு பாகமாக உடையவனே; (ஓதி - கூந்தல்); (மடந்தை - பெண்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின");

வானனே - சிவலோகனே; ( அப்பர் தேவாரம் - 5.4.2 - "வானனைம் மதி சூடிய மைந்தனை");

வேளை முனிந்த யோகீ - மன்மதனைக் கோபித்து எரித்த யோகியே; (வேள் - காமன்); (முனிதல் - கோபித்தல்);

ஈசனே - இறைவனே;

நீள்மதி கொன்றை சூடீ - பிறையையும் கொன்றைமலரையும் அணிந்தவனே;

டு சேர் ஏடக எம்பிரானே - (புனல்வாதில் சம்பந்தர் வைகையில் இட்ட) தேவார-ஏடு சென்று சேர்ந்த திருவேடகத்தில் உறையும் எம்பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.229 - வான்மியூர் - ஊனங்கள் தீர

2019-08-08

T. 229 - வான்மியூர் - னங்கள் தீர

-----------------

(வண்ணவிருத்தம்;

தானந்த தானத்தந் .. தனதான)

(நீலங்கொள் மேகத்தின் - திருப்புகழ் - பொது)


ஊனங்கள் தீரச்செந் .. தமிழ்பாடி

.. ஓர்கின்ற நேயர்க்கன் .. புடையேனாய்

நானைந்து தாளைக்கும் .. பிடுமாறு

.. ஞானங்கொ டாய்நட்டம் .. புரிவோனே

ஆனந்த மாதைப்பங் .. கமர்வோனே

.. ஆர்வங்க வான்மிச்செஞ் .. சடையானே

வானன்று வாடிச்சென் .. றடிவீழ

.. மாநஞ்சை வாயிட்டுண் .. பெருமானே.


பதம் பிரித்து:

ஊனங்கள் தீரச் செந்தமிழ் பாடி

.. ஓர்கின்ற நேயர்க்கு அன்பு உடையேனாய்,

நான் நைந்து தாளைக் கும்பிடுமாறு

.. ஞானங் கொடாய், நட்டம் புரிவோனே;

ஆனந்த; மாதைப் பங்கு அமர்வோனே;

.. ஆர்-வங்க- வான்மிச் செஞ்சடையானே;

வான் அன்று வாடிச் சென்று அடிவீழ,

.. மா-நஞ்சை வாய் இட்டு உண் பெருமானே.


னங்கள் தீரச் செந்தமிழ் பாடி ஓர்கின்ற நேயர்க்கு அன்புடையேனாய் - குற்றமெல்லாம் தீரும் பொருட்டுத் தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடி உன்னைத் தியானிக்கின்ற அன்பர்களுக்கு அன்புடையவன் ஆகி; (ஊனம் - குற்றம்); (ஓர்தல் - எண்ணுதல்);

நான் நைந்து தாளைக் கும்பிடுமாறு ஞானம் கொடாய், நட்டம் புரிவோனே - (அவர்கள் போல) நானும் மனம் உருகி உன் திருவடியை வணங்கும்படி ஞானத்தைத் தருவாயாக, கூத்து ஆடுபவனே; (நான் - நானும்; உம்மை தொக்கது); (நைதல் - மனம் உருகுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்"); (நட்டம் - கூத்து);

ஆனந்த; மாதைப் பங்கு அமர்வோனே - இன்பனே; உமாதேவியை ஒரு பங்காக விரும்பியவனே; (ஆனந்த - 1. இன்பனே; 2. இன்பவடிவான); (அமர்தல் - விரும்புதல்);

ஆர்-வங்க- வான்மிச் செஞ்சடையானே - ஒலிக்கின்ற அலையுடைய (= கடலின் அருகே உள்ள) திருவான்மியூரில் உறையும் சிவந்த சடையினனே; (ஆர்த்தல் - ஒலித்தல்); (வங்கம் - அலை); (வான்மி - திருவான்மியூர்); (சம்பந்தர் தேவாரம் - 3.55.4 - "திருவான்மிதன்னில் அன்பா");

வான் அன்று வாடிச் சென்று அடிவீழ, மா-நஞ்சை வாய் இட்டு உண் பெருமானே - தேவர்கள் முன்பு வருந்திச் சென்று உன் திருவடியில் விழுந்து வணங்க, அவர்களுக்கு இரங்கிக், கொடிய ஆலகாலத்தை வாயில் இட்டு உண்டருளிய பெருமானே; (வான் - தேவர்கள்); (அடிவீழ்தல் - தண்டனிடுதல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.480 - வெண்ணெய்நல்லூர் - சினவெள் விடையின்

2019-08-07

P.480 - வெண்ணெய்நல்லூர்

--------------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)

(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியை")

(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி")

(சுந்தரர் தேவாரம் - 7.77.1 - "பரவும் பரிசொன் றறியேன்நான்")


1)

சினவெள் விடையின் மீதேறி .. திங்கள் திகழும் திருமுடியான்

வனமென் முலையாள் உமைபங்கன் .. மலரான் தலையே கலனாக

மனைகள் தோறும் பலிக்குழல்வான் .. வணங்கி நிற்கும் அடியார்தம்

வினைகள் தீர்க்கும் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.


சின-வெள்-விடையின் மீது ஏறி - கோபமுடைய வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவன்;

திங்கள் திகழும் திருமுடியான் - சென்னிமேல் சந்திரனைச் சூடியவன்;

வன-மென்-முலையாள் உமை பங்கன் - அழகிய மென்மையான முலைகளை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (வனம் - அழகு);

மலரான்-தலையே கலனாக மனைகள்-தோறும் பலிக்கு உழல்வான் - பிரமனது மண்டையோட்டையே உண்கலனாக ஏந்தி வீடுகள்தோறும் பிச்சைக்குத் திரிபவன்; (பலி - பிச்சை);

வணங்கி-நிற்கும் அடியார்தம் வினைகள் தீர்க்கும் பித்தன் இடம் - தொழும் பக்தர்களது வினையையெல்லாம் தீர்க்கின்ற பேரருளாளன் உறையும் தலம்; (பித்தன் - பேரருளாளன்);

வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;


2)

கொடியின் மீது விடைகாட்டும் .. குழகன் கூரார் மழுவேந்தி

முடியின் மீது மதிசூடி .. முதலும் முடிவும் இல்லாதான்

பொடியைப் பூசி பொன்னடியைப் .. போற்றி நிற்கும் அடியார்தம்

மிடியைத் தீர்க்கும் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.


கொடியின் மீது விடை காட்டும் குழகன் - இடபக்கொடி உடைய அழகன்; (குழகன் - இளையோன்; அழகன்);

கூர் ஆர் மழு ஏந்தி - கூர்மையான மழுவை ஏந்தியவன்;

முடியின் மீது மதிசூடி - தலைமேல் பிறையைச் சூடியவன்;

முதலும் முடிவும் இல்லாதான் - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்; ஆதியும் அந்தமும் இல்லாதவன்;

பொடியைப் பூசி - திருநீற்றைப் பூசியவன்;

பொன்னடியைப் போற்றி-நிற்கும் அடியார்தம் மிடியைத் தீர்க்கும் பித்தன் இடம் - பொற்பாதத்தை வழிபடும் அடியார்களது துன்பத்தையும் வறுமையையும் தீர்க்கின்ற பேரருளாளன் உறையும் தலம்; (மிடி - துன்பம்; வறுமை);

வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;


3)

நெய்யும் பாலும் மகிழ்ந்தாடும் .. நீல கண்டன் நீள்சடையன்

கையில் எரியை ஏந்தியவன் .. கானில் நட்டம் ஆடுமிறை

செய்ய பாதம் இரண்டினையும் .. சிந்தை செய்யும் அடியார்தம்

வெய்ய வினைதீர் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.


நெய்யும் பாலும் மகிழ்ந்தாடும் நீலகண்டன் - நெய் பால் இவற்றால் அபிஷேகம் விரும்பிய நீலகண்டன்;

நீள்சடையன் - நீண்ட சடையினன்;

கையில் எரியை ஏந்தியவன் - கையில் நெருப்பை ஏந்தியவன்;

கானில் நட்டம் ஆடும் இறை - சுடுகாட்டில் கூத்து ஆடும் கடவுள்; (கான் - சுடுகாடு); (நட்டம் - கூத்து);

செய்ய பாதம் இரண்டினையும் சிந்தை செய்யும் அடியார்தம் வெய்ய வினை தீர் பித்தன் இடம் - சிவந்த இரு-திருவடிகளைத் தியானிக்கும் பக்தர்களது கொடிய வினையைத் தீர்க்கின்ற பேரருளாளன் உறையும் தலம்; (செய்ய - சிவந்த); (வெய்ய - கொடிய);

வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;


4)

கருப்புச் சிலையால் கணையெய்த .. காமன் அனங்கன் எனவாக

நெருப்பைக் காட்டும் கண்ணுதலான் .. நீரார் சடையன் கயிலாயப்

பொருப்பன் அடியை நாள்தோறும் .. போற்றி செய்யும் அடியார்தம்

விருப்பம் அருளும் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.


கருப்புச் சிலையால் கணை எய்த காமன் அனங்கன் என ஆக நெருப்பைக் காட்டும் கண்ணுதலான் - கரும்பை வில்லாக ஏந்தி அம்பை எய்த மன்மதனை உருவமற்றவன் என்று ஆக நெருப்பை உமிழ்ந்த நெற்றிக்கண்ணன்; (கருப்புச்-சிலை - கரும்பால் ஆன வில்); (அனங்கன் - உடலற்றவன்); (கண்ணுதல் - நெற்றிக்கண்);

நீர் ஆர் சடையன் - சடையில் கங்கையை உடையவன்;

கயிலாயப் பொருப்பன் - கயிலைமலையான்; (பொருப்பு - மலை);

அடியை நாள்தோறும் போற்றிசெய்யும் அடியார்தம் விருப்பம் அருளும் பித்தன் இடம் - திருவடியைத் தினமும் வணங்கும் பக்தர்கள் விரும்பிய வரங்களை அருளும் பேரருளாளன் உறையும் தலம்;

வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;


5)

ஓலை காட்டி வழக்காடி .. ஒருநா வலர்கோன் தனையாண்டான்

வேலை நஞ்சை அமுதாக .. விரும்பி உண்ட மணிகண்டன்

காலை மாலை கழல்போற்றிக் .. கைகள் கூப்பும் அடியார்தம்

மேலை வினைதீர் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.


ஓலை காட்டி வழக்காடி ஒரு நாவலர்கோன்தனை ஆண்டான் - அடிமைஓலையைக் காட்டி வழக்கிட்டு ஒப்பற்ற சுந்தரரை ஆட்கொண்டவன்; (ஒரு - ஒப்பற்ற);

வேலை-நஞ்சை அமுதாக விரும்பி உண்ட மணிகண்டன் - கடல்-விடத்தை அமுதம் போல் விரும்பி உண்ட நீலகண்டன்; (வேலை - கடல்);

காலை மாலை கழல் போற்றிக் கைகள் கூப்பும் அடியார்தம் மேலைவினை தீர் பித்தன் இடம் - காலையும் மாலையும் திருவடியைப் போற்றிக் கைகூப்பி வணங்கும் பக்தர்களது பழவினையைத் தீர்க்கின்ற பேரருளாளன் உறையும் தலம்;

வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;


6)

இருட்டு மேனிக் கூற்றுவனை .. இணையில் லாமார்க் கண்டேயர்

பொருட்டு முன்பு கடவூரில் .. பொன்னார் கழலை வீசியுதைத்(து)

உருட்டும் பெருமான் திருப்புகழை .. ஓதி வணங்கும் அடியாரை

வெருட்டும் வினைதீர் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.


இருட்டு-மேனிக் கூற்றுவனை இணை இல்லா மார்க்கண்டேயர் பொருட்டு முன்பு கடவூரில் பொன் ஆர் கழலை வீசி உதைத்து உருட்டும் பெருமான் - ஒப்பற்ற பக்தரான மார்கண்டேயரைக் காப்பதற்காக முன்பு கரிய மேனிக் காலனைத் திருக்கடவூரில் பொன் போன்ற திருவடியை வீசி உதைத்துக் கீழே உருட்டிய பெருமான்;

திருப்புகழை ஓதி வணங்கும் அடியாரை வெருட்டும் வினை தீர் பித்தன் இடம் - அப்பெருமானது திருப்புகழைப் பாடி வணங்கும் பக்தர்களை அச்சுறுத்தும் வினைகளைத் தீர்க்கின்ற பேரருளாளன் உறையும் தலம்; (வெருட்டுதல் - பயமுறுத்துதல்);

வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;


7)

உடலில் பாதி உமையாகும் .. ஒருவன் பூத கணஞ்சூழச்

சுடலை தன்னில் நடமாடி .. தொழுத திங்கள் திகழ்முடியன்

கடலில் அமுதம் வருமென்று .. கடைந்த தேவர் தமக்கிரங்கி

விடமுண் டருளும் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.


உடலில் பாதி உமை ஆகும் ஒருவன் - அர்த்தநாரீஸ்வரன்;

பூதகணம் சூழச் சுடலை-தன்னில் நடம் ஆடி - பூதகணங்கள் சூழச் சுடுகாட்டில் கூத்து ஆடுபவன்;

தொழுத திங்கள் திகழ்-முடியன் - இறைஞ்சிய சந்திரன் விளங்குகின்ற திருமுடியினன்;

கடலில் அமுதம் வரும் என்று கடைந்த தேவர்-தமக்கு இரங்கி விடம் உண்டருளும் பித்தன் இடம் - பாற்கடலில் அமுதம் வரும் என்று எண்ணிக் கடைந்த தேவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்டருளிய பேரருளாளன் உறையும் தலம்;

வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;


8)

அற்பம் இதுவென் றருவரையை .. அன்றெ டுத்த அரக்கனழ

நற்ப தத்து விரலொன்றால் .. நசுக்க வல்ல நம்பெருமான்

அற்பு தத்தேர் ஒன்றேறி .. அமர்செய் வதற்கு வில்லாக

வெற்பை ஏந்தும் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.


அற்பம் இது என்று அருவரையை அன்று எடுத்த அரக்கன் அழ - இழித்துப் பேசி அரிய கயிலைமலையை முன்பு பெயர்த்துத் தூக்கிய இராவணன் அழும்படி;

நற்பதத்து விரல் ஒன்றால் நசுக்க-வல்ல நம் பெருமான் - நல்ல திருவடி-விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கிய நம் பெருமான்;

அற்புதத்-தேர் ஒன்று ஏறி அமர்-செய்வதற்கு வில்லாக வெற்பை ஏந்தும் பித்தன் இடம் - தேவர்கள் செய்த அரிய தேரில் ஏறிப் போர் செய்வதற்கு வில்லாக மேருமலையை ஏந்திய பேரருளாளன் உறையும் தலம்;

வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;


9)

கள்ளார் கமலத் துறைவானும் .. கரிய மாலும் அறியாத

ஒள்ளார் நெருப்புத் தூணானான் .. உருகும் அடியார் நெஞ்சத்தின்

உள்ளே கோயில் கொள்ளுமரன் .. உரகத் தாரை அணிமார்பன்

வெள்ளே றேறும் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.


கள் ஆர் கமலத்து உறைவானும் கரிய மாலும் அறியாத ஒள் ஆர் நெருப்புத்-தூண் ஆனான் - வாசம் (& தேன்) மிக்க தாமரையில் உறையும் பிரமனாலும் கரிய நிறம் உடைய திருமாலாலும் அறிய இயலாத ஒளியுடைய தீத்தூணாகி ஓங்கியவன்;

உருகும் அடியார் நெஞ்சத்தின் உள்ளே கோயில் கொள்ளும் அரன் - உருகி வழிபடும் பக்தர்களது உள்ளமே கோயிலாக மகிழ்கின்ற ஹரன்;

உரகத்-தாரை அணி மார்பன் - மார்பில் பாம்பை மாலையாக அணிந்தவன்; (உரகம் - பாம்பு); (தார் - மாலை);

வெள்-ஏறு ஏறும் பித்தன் இடம் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய பேரருளாளன் உறையும் தலம்;

வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;


10)

கேடர் என்றும் பொய்யுரைக்கும் .. கீழோர் பேச்சை ஒழியுங்கள்

ஆடல் புரிவான் அடிபரவும் .. அன்பர் பாண பத்திரர்க்குப்

பாடல் தந்த பரிசுடையான் .. பார்த்த னுக்குப் படைநல்க

வேட னான பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.


கேடர், என்றும் பொய் உரைக்கும் கீழோர் பேச்சை ஒழியுங்கள் - தீயவர்கள், என்றும் பொய்யே சொல்லும் கீழோர்களது பேச்சை நீங்குங்கள்;

ஆடல் புரிவான் அடி பரவும் அன்பர் பாணபத்திரர்க்குப் பாடல் தந்த பரிசு உடையான் - கூத்தனது திருவடியைப் போற்றிய பக்தரான பாணபத்திரர்க்குத் திருமுகப்-பாசுரத்தைத் தந்து அருளிய பண்பு உடையவன்; (இவ்வரலாற்றைத் திருவிளையாடற் புராணத்தில் "திருமுகம் கொடுத்தது" படலத்தில் காண்க); (திருமுகப்-பாசுரம் - 11.1.1 - "மதிமலி புரிசை மாடக் கூடல்");

பார்த்தனுக்குப் படை நல்க வேடன் ஆன பித்தன் இடம் - அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருள வேடன் வடிவில் சென்ற பேரருளாளன் உறையும் தலம்; (படை - ஆயுதம்);

வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;


11)

காடு தன்னில் முழவார்த்துக் .. கணங்கள் சூழ ஆடுமரன்

தோடு திகழும் காதுடையான் .. துணைத்தாள் போற்றிச் செந்தமிழைப்

பாடும் அன்பர் அவர்கட்குப் .. பாரில் இன்பம் பலநல்கி

வீடும் அருளும் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.


காடு-தன்னில் முழவு ஆர்த்துக் கணங்கள் சூழ ஆடும் அரன் - சுடுகாட்டில் முழவுகளை ஒலித்துப் பூதகணங்கள் சூழக் கூத்தாடும் ஹரன்;

தோடு திகழும் காது உடையான் - ஒரு காதில் தோட்டினை அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்;

துணைத்தாள் போற்றிச் செந்தமிழைப் பாடும் அன்பர் அவர்கட்குப் பாரில் இன்பம் பல நல்கி வீடும் அருளும் பித்தன் இடம் - இரு-திருவடிகளைப் போற்றிச் செந்தமிழான தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் பாடும் பக்தர்களுக்கு இப்பிறப்பில் இன்பங்கள் பல அருளி வீடுபேறும் அருள்கின்ற பேரருளாளன் உறையும் தலம்; (துணை - இரண்டு; உதவி; காப்பு); (பார் - பூமி);

வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------