Saturday, August 1, 2026

P.509 - பாவநாசம் - அரணம் மூன்றையும்

2020-06-20

P.509 - பாவநாசம் (பாபநாசம்)

(தாமிரபரணிக்-கரையில் உள்ள பாபநாசம்)

--------------

(சந்தக் கலிவிருத்தம் - தான தானன தான தானன)

(சம்பந்தர் தேவாரம் - 2.25.1 - "உகலி யாழ்கட லோங்கு பாருளீர்")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

அரண(ம்) மூன்றையும் அன்றெ ரித்தவன்

கிரண வெண்மதிக் கீற்றன் மேயது

மரணம் தீரமு தன்ன தாமிர

பரணி தாள்தொழு பாவ நாசமே.


அரணம் மூன்றையும் அன்று எரித்தவன் - முப்புரங்களையும் முன்பு எரித்தவன்;

கிரண-வெண்மதிக் கீற்றன் மேயது - கதிர்வீசும் வெண்திங்களை அணிந்தவன் உறையும் தலம்;

மரணம் தீர் அமுது அன்ன தாமிரபரணி தாள் தொழு பாவநாசமே - இறப்பில்லா வாழ்வை அளிக்கும் அமுதம் போன்ற (நீருடைய) தாமிரபரணி-ஆறானது திருவடியை வழிபடுகின்ற பாபநாசம்;


2)

ஆய்ம லர்க்கணை ஐந்து தொட்டவேள்

காய்நு தற்கணன் கங்கை வேணியன்

மாய்வி லாதவன் மன்னும் ஊரது

பாய்பு னற்கரைப் பாவ நாசமே.


ஆய் மலர்க்கணை ஐந்து தொட்ட வேள் காய் நுதற்கணன் - தேர்ந்தெடுத்த மலர்அம்புகள் ஐந்து தொடுக்கும் மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண்ணன்; (ஆய்தல் - தெரிந்தெடுத்தல்);

கங்கை-வேணியன் - சடையில் கங்கையை உடையவன்; (வேணி - சடை);

மாய்வு இலாதவன் மன்னும் ஊர் அது - இறப்பு இல்லாதவனான சிவபெருமான் உறையும் இடம் ஆவது; (மாய்வு - சாவு); (ஊரது - ஊர் - தலம்; அது - பகுதிப்பொருள்விகுதி);

பாய்-புனற்கரைப் பாவநாசமே - பாயும் தாமிரபரணியின் கரையில் உள்ள பாபநாசம்;


3)

வம்பு லா(ம்)மலர் வன்னி சூடினான்

உம்பர் வாழ்ந்திட ஓத நஞ்சுணி

கொம்ப னாளொரு கூறன் ஊரது

பைம்பு னற்கரைப் பாவ நாசமே.


வம்பு உலாம் மலர் வன்னி சூடினான் - வாசனை கமழும் பூக்களையும் வன்னியையும் சூடியவன்; (வம்பு - வாசனை); (உலாம் - உலாவும் - திகழும்);

உம்பர் வாழ்ந்திட ஓத-நஞ்சு உணி - தேவர்கள் உய்யும்படி கடல்விஷத்தை உண்டவன்; (ஓதம் - கடல்); (உணி - உண்ணி - உண்டவன்; இடைக்குறை விகாரம்);

கொம்பு அனாள் ஒரு கூறன் ஊர் அது - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக உடைய சிவபெருமான் உறையும் ஊர் ஆவது;

பைம்புனற்கரைப் பாவநாசமே - அழகிய குளிர்ந்த தாமிரபரணியின் கரையில் உள்ள பாபநாசம்;


4)

காடு வாழ்கணம் காண நள்ளிருள்

ஆடு கொள்கையன் அண்டர் நாயகன்

தோடு சேர்செவித் தூயன் ஊரது

பாடு நீரயல் பாவ நாசமே.


காடு வாழ் கணம் காண நள்ளிருள் ஆடு கொள்கையன் - சுடுகாட்டில் வாழும் பூதகணங்கள் காண நள்ளிருளில் கூத்தாடுபவன்;

அண்டர்-நாயகன் - தேவர்களுக்கெல்லாம் தலைவன்;

தோடு சேர் செவித் தூயன் ஊர் அது - ஒரு காதில் தோடு அணிந்த தூயனான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது;

பாடு நீர் அயல் பாவநாசமே - ஒலிக்கின்ற தாமிரபரணி-ஆற்றின் அருகே உள்ள பாபநாசம்; (சுந்தரர் தேவாரம் - 7.48.6 - "அந்தண் காவிரிப் பாடு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடிச் சேடனே");


5)

மாயு(ம்) நாளென வந்த காலனே

சாயு மாறொரு தாளை வீசினான்

தாயும் ஆயவன் தங்கும் ஊரது

பாயு(ம்) நீரயல் பாவ நாசமே.


மாயும் நாள் என வந்த காலனே சாயுமாறு ஒரு தாளை வீசினான் - மார்க்கண்டேயர் இறக்கும் தினம் என்று அவரைக் கொல்ல நெருங்கிய காலனே இறக்கும்படி ஒரு திருவடியை வீசி அவனை உதைத்தவன்;

தாயும் ஆயவன் தங்கும் ஊர் அது - அம்மையும் (அப்பனும்) ஆன சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (தாயும் - உம் - எச்சவும்மை);

பாயும் நீர் அயல் பாவநாசமே - பாயும் தாமிரபரணி-ஆற்றின் அருகே உள்ள பாபநாசம்;


6)

கறையி லங்கிய கண்டன் நீறணி

அறவன் அங்கணன் ஆல நீழலில்

மறைவி ரித்தவன் மன்னும் ஊரது

பறவை ஆர்பொழிற் பாவ நாசமே.


கறை இலங்கிய கண்டன் - நீலகண்டன்;

நீறு அணி அறவன் - திருநீற்றைப் பூசிய அறவடிவினன்;

அங்கணன் - அருட்கண் உடையவன்;

ஆலநீழலில் மறை விரித்தவன் மன்னும் ஊர் அது - கல்லாலமரத்தின்கீழ்ச் சனகாதியருக்கு வேதப்பொருளை உபதேசித்தவனான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது;

பறவை ஆர் பொழில் பாவநாசமே - பறவைகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த பாபநாசம்; (ஆர்த்தல் - ஒலித்தல்);


7)

மத்த(ம்) மாசுணம் வைத்த செஞ்சடைச்

சுத்த மாநதி சூடும் வித்தகன்

சத்தி பங்கமர் தந்தை ஊரது

பத்தர் சென்றடை பாவ நாசமே.


மத்தம் மாசுணம் வைத்த செஞ்சடைச் சுத்த மாநதி சூடும் வித்தகன் - ஊமத்தமலரையும் பாம்பையும் அணிந்த சிவந்த சடையில் தூய கங்கையையும் சூடிய ஆற்றல் உடையவன்; (மத்தம் - ஊமத்தமலர்); (மாசுணம் - பாம்பு); (வித்தகம் - சாமர்த்தியம்; ஆற்றல்; பெருமை; ஞானம்);

சத்தி பங்கு அமர் தந்தை ஊர் அது - சக்தியை (உமையை) ஒரு பங்காக விரும்பிய நம் தந்தையான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (அமர்தல் - விரும்புதல்);

பத்தர் சென்றடை பாவநாசமே - பக்தர்கள் சென்று சேர்கின்ற பாபநாசம்;


8)

மடமை யால்மலை பேர்த்த வன்றனை

அடர ஊன்றிய அண்ணல் நீரழற்

சடையில் வைத்தவன் தங்கும் ஊரது

படர்பொ ழிற்பதி பாவ நாசமே.


மடமையால் மலை பேர்த்தவன்தனை அடர ஊன்றிய அண்ணல் - பேதைமையால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை நசுக்கப் பாதவிரலை ஊன்றிய பெருமான்; (சம்பந்தர் தேவாரம் - 2.71.8 - "இராவணனை மால்வரைக்கீழ் அடரவூன்றி");

நீர் அழற்சடையில் வைத்தவன் தங்கும் ஊர் அது - கங்கையைத் தீப் போன்ற செஞ்சடையில் வைத்தவனான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (அப்பர் தேவாரம் - 4.57.6 - "நீரழற் சடையுளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்");

படர்-பொழிற்-பதி பாவநாசமே - படர்ந்த சோலைகள் சூழ்ந்த தலமான பாபநாசம்;


9)

நெடிய மாலயன் நேட நின்றவன்

பொடிய ணிந்தடி போற்றி னார்வினை

மடிய நல்கிடும் வள்ளல் ஊரது

படியெ லாந்தொழு பாவ நாசமே.


நெடிய மால் அயன் நேட நின்றவன் - நீண்ட திருமாலும் பிரமனும் தேடும்படி ஓங்கி நின்றவன்; (நேடுதல் - தேடுதல்);

பொடி அணிந்து அடி போற்றினார் வினை மடிய நல்கிடும் வள்ளல் ஊர் அது - திருநீற்றைப் பூசித் திருவடியை வணங்கிய அன்பர்களது வினையெல்லாம் அழியும்படி வரம் அருளும் வள்ளலான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (மடிதல் - அழிதல்);

படியெலாம் தொழு பாவநாசமே - உலகத்தோரெல்லாம் போற்றுகின்ற பாபநாசம்; (படி - பூமி; உலகம்); (சம்பந்தர் தேவாரம் - 3.38.3 - "படியெலாந் தொழுதேத்து கண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்")


10)

மழுங்கு புத்தியர் மாய(ம்) நீங்குமின்

தொழுங்க ரந்திகழ் தொண்டர் வேண்டிய

வழங்கு வார்சடை வள்ளல் ஊரது

பழங்க ளார்பொழிற் பாவ நாசமே.


மழுங்கு புத்தியர் மாயம் நீங்குமின் - மழுங்கிய அறிவை உடையவர்கள் சொல்லும் வஞ்சத்தை நீங்குங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி);

தொழும் கரம் திகழ் தொண்டர் வேண்டிய வழங்கு வார்சடை வள்ளல் ஊர் அது - தொழும் கரங்களை உடைய பக்தர்கள் வேண்டிய வரங்களையெல்லாம் வழங்கும் வள்ளலும் நீண்ட சடையை உடையவனுமான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது;

பழங்கள் ஆர் பொழில் பாவநாசமே - கனிகள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த பாபநாசம்; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);


11)

உரக மாலையன் உண்ப லிக்கெனப்

பிரம னார்தலை ஏந்து பெற்றியன்

கரவி லாதளி கையன் ஊரது

பரவிப் பார்தொழு பாவ நாசமே.


உரக-மாலையன் - பாம்பை மாலையாக அணிந்தவன்; (உரகம் - பாம்பு);

உண்பலிக்கு எனப் பிரமனார் தலை ஏந்து பெற்றியன் - பிச்சையேற்பதற்காகப் பிரமனது மண்டையோட்டை ஏந்துகின்ற பெருமை உடையவன்; (உண்பலி - பிச்சை); (பெற்றி - பெருமை);

கரவு இலாது அளி கையன் ஊர் அது - அடியவர்களுக்கு வஞ்சமின்றி வாரி வழங்கும் அருட்கரம் உடையவனான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (கரவு - மறைத்தல்);

பரவிப் பார் தொழு பாவநாசமே - உலகத்தாரெல்லாம் போற்றிப் பணிகின்ற பாபநாசம்; ("பார் பரவித் தொழு பாவநாசமே" என்று இயைத்துப் பொருள்கொள்க); (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்); (பார் - பூமி; உலகம்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.508 - மயிலாடுதுறை - முதிரா மதிசேர்

2020-06-19

P.508 - மயிலாடுதுறை

--------------

(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனனா)

(இச்சந்தத்தை வடமொழியில் "தோடகம்" என்பர்)

(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - "சடையா யெனுமால்")


1)

முதிரா மதிசேர் முடியிற் புனலார்

நதியாய் நரைவெள் விடையூர் தியினாய்

மதில்சூழ்ந் தழகார் மயிலா டுதுறைப்

பதியே பழவல் வினைதீர்த் தருளே.


முதிரா மதி சேர் முடியில் புனல் ஆர் நதியாய் - இளந்திங்களை அணிந்த திருமுடியில் நீர் மிகுந்த கங்கையையும் தரித்தவனே;

நரை-வெள்-விடை ஊர்தியினாய் - மிகவெண்மையான இடபத்தை ஊர்தியாக உடையவனே; (நரை - வெண்மை; நரைவெள் - ஒருபொருட்பன்மொழி); (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நரைவெள்ளேறு ஒன்றுடையானை");

மதில் சூழ்ந்து அழகு ஆர் மயிலாடுதுறைப் பதியே - மதிலால் சூழப்பெற்ற அழகிய மயிலாடுதுறையில் உறைகின்ற தலைவனே;

பழ வல்வினை தீர்த்து அருளே - என் பழைய வலிய வினையைத் தீர்த்து அருள்வாயாக;


2)

அணியா அரவம் புனைவாய் அடியைப்

பணிவா னவருக் கருளும் பரமா

மணிகோ புரமார் மயிலா டுதுறைத்

துணிமா மதியாய் துயர்தீர்த் தருளே.


அணியா அரவம் புனைவாய் - ஆபரணமாகப் பாம்பை அணிந்தவனே; யாரும் அணியாத பாம்பை அணிந்தவனே; (அணியா - 1. அணியாக; 2. அணியாத);

அடியைப் பணி வானவருக்கு அருளும் பரமா - திருவடியை வணங்கிய தேவர்களுக்கு அருளிய பரமனே;

மணி-கோபுரம் ஆர் மயிலாடுதுறைத் - அழகிய கோபுரம் பொருந்திய மயிலாடுதுறையில் உறைகின்ற; (மணி - அழகு); (அப்பர் தேவாரம் - 6.16.5 - "மணிபொழில்சூழ் ஆரூர் உறைகின்றாரும்");

துணி-மா மதியாய் - அழகிய பிறையைச் சூடியவனே; (துணி - துண்டம்);

துயர் தீர்த்து அருளே - என் துயரைத் தீர்த்து அருள்வாயாக;


3)

வளைமே ருவிலால் மதிலெய் தவனே

தளரா முலையாள் தழுவும் தலைவா

வளமார் பொழில்சூழ் மயிலா டுதுறை

இளமால் விடையாய் இடர்தீர்த் தருளே.


வளை-மேரு-விலால் மதில் எய்தவனே - வளைத்த மேருமலை என்ற வில்லால் முப்புரங்களை எய்தவனே; (விலால் - வில்லால்);

தளரா-முலையாள் தழுவும் தலைவா - தளராத முலைகளையுடைய உமாதேவி தழுவும் கணவனே;

வளம் ஆர் பொழில் சூழ் மயிலாடுதுறை - வளம் மிக்க சோலை சூழ்ந்த மயிலாடுதுறையில் உறைகின்ற;

இள-மால்-விடையாய் - இளைய பெரிய இடபத்தை வாகனமாக உடையவனே; (மால் - பெரிய);

இடர் தீர்த்து அருளே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


4)

அழலார் சடையாய் அதளா டையினாய்

குழையார் செவியாய் கொடிமேல் விடையாய்

மழைசேர் பொழில்சூழ் மயிலா டுதுறைக்

குழகா தொழுதேன் குறைதீர்த் தருளே.


அழல் ஆர் சடையாய் - தீப் போலும் செஞ்சடையை உடையவனே; (ஆர்தல் - ஒத்தல்);

அதள்-ஆடையினாய் - தோலை ஆடையாக உடையவனே; (அதள் - தோல்);

குழை ஆர் செவியாய் - காதில் குழையை அணிந்தவனே;

கொடிமேல் விடையாய் - இடபக்கொடியை உடையவனே;

மழை சேர் பொழில் சூழ் மயிலாடுதுறைக் குழகா - மேகம் பொருந்தும் சோலை சூழ்ந்த மயிலாடுதுறையில் உறைகின்ற குழகனே; (மழை - மேகம்); (குழகன் - இளையோன்; அழகன்);

தொழுதேன் குறை தீர்த்து அருளே - உன்னை வணங்கும் என் குறைகளைத் தீர்த்து அருள்வாயாக;


5)

பெண்டங் கியமே னியுடைப் பெருமான்

அண்டம் பலவாக் கியொடுக் கிடுவாய்

வண்டின் னிசைசெய்ம் மயிலா டுதுறைக்

கண்டங் கரியாய் கலிதீர்த் தருளே.


பெண் தங்கிய மேனியுடைப் பெருமான் - உமை ஒருபக்கத்தில் தங்கிய திருமேனியை உடைய பெருமானே; (பெண்டங்கிய - பெண் தங்கிய);

அண்டம் பல ஆக்கி ஒடுக்கிடுவாய் - பல அண்டங்களையும் படைத்து ஒடுக்குபவனே;

வண்டு இன்னிசைசெய்ம் மயிலாடுதுறைக் - வண்டுகள் இன்னிசை பாடுகின்ற மயிலாடுதுறையில் உறைகின்ற;

கண்டம் கரியாய் - நீலகண்டனே;

கலி தீர்த்து அருளே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (கலி - துன்பம்);


6)

திரியும் புரமூன் றெரிசெய் தவனே

எரிவன் கருநஞ் சமுதுண் டவனே

வரிவண் டறையும் மயிலா டுதுறைப்

புரிசெஞ் சடையாய் புகல்தந் தருளே.


திரியும் புரம் மூன்று எரிசெய்தவனே - திரிந்த முப்புரங்களை எரித்தவனே;

எரி-வன்-கருநஞ்சு அமுது உண்டவனே - கொதிக்கின்ற (/ சுட்டெரிக்கும்) கொடிய கரிய ஆலகாலத்தை அமுதாக உண்டவனே;

வரிவண்டு அறையும் மயிலாடுதுறைப் - வரியுடைய வண்டுகள் ஒலிக்கின்ற மயிலாடுதுறையில் உறைகின்ற; (அறைதல் - ஒலித்தல்);

புரி-செஞ்சடையாய் - முறுக்கிய சிவந்த சடையை உடையவனே; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

புகல் தந்து அருளே - எனக்கு அடைக்கலம் தந்து அருள்வாயாக;


7)

நறையார் மலர்தூ வியமா ணிநலம்

உறவே நமன்மார் பிலுதைத் தவனே

மறைநா வினனே மயிலா டுதுறை

இறைவா அடியேன் இடர்தீர்த் தருளே.


நறை ஆர் மலர் தூவிய மாணி நலம் உறவே நமன் மார்பில் உதைத்தவனே - வாசமலர்களைத் தூவி வழிபடு செய்த மார்க்கண்டேயர் எமபயம் நீங்கி இன்புறும்படி காலனை மார்பில் உதைத்தவனே; (நறை - வாசனை; தேன்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);

மறை-நாவினனே - வேதங்களைப் பாடியருளியவனே; (வேதநாவா);

மயிலாடுதுறை இறைவா - மயிலாடுதுறையில் உறைகின்ற இறைவனே;

அடியேன் இடர் தீர்த்து அருளே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


8)

மலைபேர் தசமா முகனார்த் தழவே

மலரார் கழலோர் விரலூன் றியருள்

மலையான் மருகா மயிலா டுதுறைத்

தலைவா துணைவா தமியேற் கருளே.


மலை பேர் தசமாமுகன் ஆர்த்து அழவே - கயிலைமலையைப் பெயர்த்த பத்துத்தலை இராவணன் அலறி அழும்படி; (ஆர்த்தல் - ஒலித்தல்);

மலர் ஆர் கழல் ஓர் விரல் ஊன்றியருள் - மலர் போன்ற திருப்பாதத்தின் விரல் ஒன்றை ஊன்றி நசுக்கியருளிய; (ஆர்தல் - ஒத்தல்);

மலையான் மருகா - இமவானுக்கு மருகனே;

மயிலாடுதுறைத் தலைவா துணைவா - மயிலாடுதுறையில் உறைகின்ற தலைவனே, துணைவனே;

தமியேற்கு அருளே - கதியற்ற எனக்கு அருள்வாயாக;


9)

செழுமா மலரான் திருமாற் கரிதாய்

எழுசோ தியனே இடுமூண் மகிழ்வாய்

மழுவாட் படையாய் மயிலா டுதுறைத்

தொழுவார்க் கினியாய் துயர்தீர்த் தருளே.


செழு-மா-மலரான் திருமாற்கு அரிது-ஆய் எழு சோதியனே - செழுமையான தாமரைமலரில் இருக்கு பிரமனுக்கும் திருமாலுக்குக் காண அரியதான ஜோதிவடிவில் உயர்ந்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.120.9 - "கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய அண்ணல்");

இடும் ஊண் மகிழ்வாய் - (பிச்சையாக) இடும் உணவை விரும்பியவனே;

மழுவாட் படையாய் - மழுவாளை ஏந்தியவனே; (படை - ஆயுதம்);

மயிலாடுதுறைத் தொழுவார்க்கு இனியாய் - மயிலாடுதுறையில் உறைகின்றவனும் அன்பர்க்கு அன்பனும் ஆனவனே;

துயர் தீர்த்து அருளே - என் துயரைத் தீர்த்து அருள்வாயாக;


10)

இதமற் றதைநன் றெனவந் துரைசெய்

அதமர்க் கருளா தவனே அரனே

மதமா உரியாய் மயிலா டுதுறை

முதல்வா முனைவல் வினைதீர்த் தருளே.


இதம் அற்றதை நன்று என வந்து உரைசெய் அதமர்க்கு அருளாதவனே - நன்மையற்றதை நல்ல நெறி என்று வீடுவீடாகச் சென்று உரைக்கின்ற கீழோர்க்கு அருள் இல்லாதவனே;

அரனே - ஹரனே;

மதமா உரியாய் - யானைத்தோலைப் போர்த்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.50.6 - "கரியுரியாய் காலகாலா");

மயிலாடுதுறை முதல்வா - மயிலாடுதுறையில் உறைகின்ற முதல்வனே;

முனை வல்வினை தீர்த்து அருளே - என் பழைய வலிய வினையைத் தீர்த்து அருள்வாயாக; (முனை - முன்னை);


11)

நஞ்சார் மிடறா நசியா முதலே

பஞ்சேர் அடியாள் பிரியாப் பரமா

மஞ்சார் பொழில்சூழ் மயிலா டுதுறை

மஞ்சா பழவல் வினைமாய்த் தருளே.


நஞ்சு ஆர் மிடறா - ஆலகாலத்தை உண்டு அணிந்த கண்டனே; (ஆர்தல் - உண்ணுதல்; அணிதல்);

சியா முதலே - அழிவு இல்லாத முதற்பொருளே; (நசித்தல் - அழிதல்; சாதல்);

பஞ்சு ஏர் அடியாள் பிரியாப் பரமா - பஞ்சு போன்ற மென்மையான பாதம் உடைய உமை பிரியாத பரமனே; (ஏர்தல் - ஒத்தல்); (திருவாசகம் - ஆசைப்பத்து - 8.25.10 - "பஞ்சேர் அடியாள் பாகத் தொருவா"); (திருவாசகம் - வாழாப்பத்து - 8.28.6 - "பஞ்சின் மெல்லடியாள் பங்க");

மஞ்சு ஆர் பொழில் சூழ் மயிலாடுதுறை மஞ்சா - மேகம் பொருந்தும் சோலை சூழ்ந்த மயிலாடுதுறையில் உறைகின்ற வீரனே; (மஞ்சன் - மைந்தன் - வீரன்); (திருவாசகம்-போற்றித் திருவகவல் - 8.4 - அடி-183- "மஞ்சா போற்றி மணாளா போற்றி");

பழ-வல்வினை மாய்த்து அருளே - என் பழைய வலிய வினையை அழித்து அருள்வாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.507 - காழி - அவமலி வேள்வியை

2020-06-18

P.507 - காழி (சீகாழி)

--------------

(சந்த வஞ்சிவிருத்தம் - தானன தானன தானதனா)

(தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா/தானதானா என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.1 - "இன்குரல் இசைகெழும் யாழ்முரலத்")


1)

அவ(ம்)மலி வேள்வியை அன்றுசெய்து

தவறிழை தக்கனைத் தலையரிந்தான்

கவுணியர்க் கமுதருள் காழிநகர்ச்

சிவனடி இணைதனைச் சிந்திநெஞ்சே.


அவம் மலி வேள்வியை அன்று செய்து தவறு இழை தக்கனைத் தலை அரிந்தான் - முன்பு அவவேள்வி செய்து குற்றம் செய்த தக்கனது தலையை வெட்டித் தண்டித்தவன்; (அரிதல் - அறுத்தல்);

கவுணியர்க்கு அமுது அருள் காழிநகர்ச் சிவனடி இணைதனைச் சிந்தி நெஞ்சே - கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தருக்கு ஞானப்பாலை அளித்து அருளியவனும் சீகாழியில் உறைபவனுமான சிவபெருமானது இரு-திருவடிகளை, மனமே நீ எண்ணுவாயாக;


2)

வனமலர் வாளிவன் மதனழிய

அனலுமிழ் கண்ணனை அதிசயனைக்

கனலெரி ஏந்தியைக் காழிநகர்ப்

புனலணி சடையனைப் போற்றுநெஞ்சே.


வன-மலர் வாளி வன்-மதன் அழிய அனல் உமிழ் கண்ணனை - அழகிய மலரம்பை ஏவுகின்ற வலிய மன்மதன் அழியும்படி தீயை உமிழ்ந்த நெற்றிக்கண்ணனை; (வனம் - அழகு); (வாளி - அம்பு); (மதன் - காமன்);

அதிசயனை - அற்புதனை;

கனல்-எரி ஏந்தியைக் - கனல்கின்ற தீயைக் கையில் ஏந்தியவனை;

காழிநகர்ப் புனல் அணி சடையனைப் போற்று நெஞ்சே - சீகாழியில் உறைகின்றவனும் சடையில் கங்கையை அணிந்தவனுமான சிவபெருமானை, மனமே நீ போற்றுவாயாக;


3)

பொடியணி மேனியன் போர்விடையன்

கொடியிடை கூறமர் கொள்கையினான்

கடிமல ரான்தொழு காழிநகர்

அடிகளை அடிதொழ அறுமிடரே.


பொடி அணி மேனியன் - திருநீற்றை மேனிமேல் பூசியவன்;

போர்-விடையன் - போர்செய்யவல்ல இடபத்தை ஊர்தியாக உடையவன்;

கொடியிடை கூறு அமர் கொள்கையினான் - கொடி போன்ற இடையை உடைய உமையை ஒரு கூறாக விரும்பியவன்;

கடி-மலரான் தொழு காழிநகர் அடிகளை அடிதொழ அறும் இடரே - மணம் மிக்க தாமரைமேல் இருக்கும் பிரமனால் வழிபடப்பட்டவனும் சீகாழியில் உறைகின்றவனுமான சிவபெருமானை வணங்கினால் துன்பம் தீரும்; (கடி - வாசனை);


4)

இமையவர் அமுதுண இருள்மிடறன்

அமலையை ஒருபுறம் அமர்பெருமான்

கமலனுக் கருளிய காழிநகர்

விமலனைத் தொழுதெழ வினையறுமே.


இமையவர் அமுது உண இருள்-மிடறன் - தேவர்கள் அமுதம் உண்பதற்காக (நஞ்சை உண்ட) நீலகண்டம் உடையவன்; (இருள்தல் - கறுப்பாதல்); (மிடறு - கண்டம்);

அமலையை ஒருபுறம் அமர் பெருமான் - தூயவளான உமையை இடப்பக்கம் பாகமாக விரும்பிய பெருமான்; (அமர்தல் - விரும்புதல்);

கமலனுக்கு அருளிய காழிநகர் விமலனைத் தொழுதெழ வினை அறுமே - தாமரைமலர்மேல் இருக்கும் பிரமனுக்கு அருளியவனும் சீகாழியில் உறைகின்ற தூயனுமான சிவபெருமானை வணங்கினால் வினைகள் தீரும்; (கமலன் - பிரமன்); (விமலன் - பரிசுத்தன்);


5)

விண்ணவர் தலைவனை வெண்மதியம்

தண்ணதி தாங்கிய சடையிறையைக்

கண்ணமர் நுதலனைக் காழிநகர்

அண்ணலை அடிதொழ அறுமிடரே.


விண்ணவர் தலைவனை - தேவர்கள் தலைவனை;

வெண்மதியம் தண்-தி தாங்கிய சடை இறையைக் - வெண்மையான சந்திரனையும் குளிர்ந்த கங்கையாற்றையும் சடையில் தாங்கிய இறைவனை;

கண் அமர் நுதலனைக் - நெற்றிக்கண்ணனை; (அமர்தல் -இருத்தல்); (நுதல் - நெற்றி);

காழிநகர் அண்ணலை அடிதொழ அறும் இடரே - சீகாழியில் உறைகின்ற சிவபெருமானை வணங்கினால் துன்பம் தீரும்;


6)

வாரணம் உரிசெய்த மைந்தனருள்

காரணம் கொண்டுருக் காட்டிடுவான்

காரிகை பங்கனைக் காழிநகர்ச்

சீரனை ஏத்திடத் திருவருமே.


வாரணம் உரிசெய்த மைந்தன் - யானையைத் தோலுரித்த வீரன்; (வாரணம் - யானை); (மைந்தன் - வீரன்);

அருள்-காரணம் கொண்டு உருக் காட்டிடுவான் - அருளே காரணமாக பல வடிவங்களை ஏற்று அன்பர்களுக்குக் காட்சிதருபவன்; (அப்பர் தேவாரம் - 4.8.2 - "அரிதரு கண்ணியாளை ஒருபாகமாக அருள்காரணத்தில் வருவார்" - அருள் காரணம் - உயிர்கட்கு இம்மை மறுமை வீடுபேறு எய்த அருளும் காரணம்);

காரிகை-பங்கனைக் - (அந்த) உமைபங்கனை; (காரிகை - பெண்);

காழிநகர்ச் சீரனை ஏத்திடத் திரு வருமே - சீகாழியில் உறைகின்றவனும் புகழ்உடையவனுமான சிவபெருமானைப் போற்றினால் திரு வந்தடையும்; (சீரன் - புகழுடையவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.94.10 - "ஆர(ம்) நாகமாம் சீரன் ஆலவாய்த்");


7)

மறையணி நாவனை வாளரவம்

பிறையணி சடையுடைப் பிஞ்ஞகனைக்

கறையணி கண்டனைக் காழிநகர்

இறைவனை ஏத்திட இடர்கெடுமே.


மறை அணி நாவனை - வேதங்களைப் பாடியருளியவனை;

வாள்-அரவம் பிறை அணி சடையுடைப் பிஞ்ஞகனைக் - கொடிய பாம்பையும் பிறையையும் சடையில் அணிந்த, பிஞ்ஞகன் என்ற திருநாமம் உடையவனை; (வாள் - கொடிய); (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்);

கறை அணி கண்டனைக் - நீலகண்டனை;

காழிநகர் இறைவனை ஏத்திட இடர் கெடுமே - சீகாழியில் உறைகின்ற சிவபெருமானைப் போற்றினால் துன்பம் தீரும்;


8)

தடவரை ஏந்திய தசமுகனைப்

படவிரல் ஊன்றிய படர்சடையன்

கடல்விடம் உண்ணியைக் காழிநகர்க்

கடவுளைக் கைதொழ இடர்கெடுமே.


தட-வரை ஏந்திய தசமுகனைப் பட விரல் ஊன்றிய படர்-சடையன் - பெரிய கயிலைமலையைப் பெயர்த்துத் தூக்கிய இராவணனை அவன் வருந்தும்படி திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி நசுக்கிய, படர்ந்த சடையை உடைய பெருமானை; (படுதல் - அழிதல்; வாடுதல்; துன்பமடைதல்); (அப்பர் தேவாரம் - 5.56.10 - "மடுத்து மாமலை ஏந்தலுற்றான்றனை அடர்த்து");

கடல்-விடம் உண்ணியைக் - பாற்கடலில் எழுந்த ஆலகாலத்தை உண்டவனை; (உண்ணி - உண்பவன்);

காழிநகர்க் கடவுளைக் கைதொழ இடர் கெடுமே - சீகாழியில் உறைகின்ற சிவபெருமானைப் போற்றினால் துன்பம் தீரும்;


9)

வேதனும் விண்டுவு(ம்) நண்ணரிய

பாதனை ஒண்மழுப் படையினனைக்

காதணி தோடனைக் காழிநகர்

நாதனை வாழ்த்திட நலிவறுமே.


வேதனும் விண்டுவும் நண்ணரிய பாதனை - பிரமன் திருமால் இவர்களால் அணுக ஒண்ணாத திருப்பாதம் உடையவனை; (வேதன் - பிரமன்); (விண்டு - விஷ்ணு); (11.32.49 - "விளவைத் தளர்வித்த விண்டுவுந் தாமரை மேலயனும் அளவிற்கு அறியா வகைநின்ற");

ஒண்மழுப் படையினனைக் - ஒளியுடைய மழுவாயுதத்தை ஏந்தியவனை;

காது அணி தோடனைக் - காதில் அழகிய தோடு அணிந்தவனை; (தோடு அணிந்த செவியனை); (=அர்த்தநாரீசனை); (அணி - அழகிய);

காழிநகர் நாதனை வாழ்த்திட நலிவு அறுமே - சீகாழியில் உறைகின்ற சிவபெருமானைப் போற்றினால் துன்பம் தீரும்; (நலிவு - துன்பம்);


10)

பொய்யர்கள் மொழியவை பொருளலவே

மெய்யனை வெண்பொடி மேனியனைக்

கையினில் தீயனைக் காழிநகர்

ஐயனை அடிதொழ அறுமிடரே.


பொய்யர்கள் மொழி-அவை பொருள் அலவே - பொய்யுரைக்கும் புன்னெறியாளர் பேச்சுகள் பொருளற்றவை;

மெய்யனை - மெய்ப்பொருள் ஆனவனை;

வெண்பொடி மேனியனைக் - வெண்ணீற்றைப் பூசிய திருமேனி உடையவனை;

கையினில் தீயனைக் - கையில் தீயை ஏந்தியவனை;

காழிநகர் ஐயனை அடிதொழ அறும் இடரே - சீகாழியில் உறைகின்ற தலைவனான சிவபெருமானை வழிபட்டால் துன்பம் தீரும்;


11)

பவனவன் அடியவர் பரவுவணம்

அவனியில் வருபவன் அன்புருவன்

கவினுறு பொழிலணி காழிநகர்ச்

சிவனடி தொழுதெழத் திருவருமே.


பவன்-அவன் - பவன் என்ற திருநாமம் உடையவன்; (அவன் - பகுதிப்பொருள்விகுதி);

அடியவர் பரவு-வணம் அவனியில் வருபவன் - பக்தர்கள் எப்படி வழிபடுகின்றார்களோ அப்படித் தோன்றி அருள்பவன்; (அவனி - பூமி); (வணம் - வண்ணம் - விதம்; வகை);

அன்பு-உருவன் - அன்பே வடிவானவன்;

கவினுறு பொழில் அணி காழிநகர்ச் சிவன் அடி தொழுதெழத் திரு வருமே - அழகிய சோலை சூழ்ந்த சீகாழியில் உறைகின்ற சிவபெருமான் திருவடியை வழிபட்டால் திரு வந்தடையும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------