Thursday, May 28, 2026

P.500 - பாவநாசம் - கிரணமதிக்கு அயல்

2020-02-26

P.500 - பாவநாசம் (பாபநாசம்)

(தாமிரபரணிக்-கரையில் உள்ள பாபநாசம்)

--------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")


* (x) - படிப்போர் வசதி கருதிப் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பெற்றுள்ள இடம்;


1)

கிரணம திக்கயல் அரவை வைத்தவன்

சரணடை சுரருயச் சாபம் ஏந்திமூ

அரணெரி அரனிடம் அலம்பு தாமிர

பரணியின் கரையினில் பாவ நாசமே.


கிரண-மதிக்கு அயல் அரவை வைத்தவன் - கதிர்களை உடைய சந்திரன் அருகே பாம்பைத் தன் திருமுடிமேல் அணிந்தவன்; (அயல் - அருகிடம்); (பெரியபுராணம் - 12.10.94 - "குன்றினுக் கயலே ஓடும் குளிர்ந்தபொன் முகலி என்றான்");

சரண் அடை சுரர் உயச் சாபம் ஏந்தி மூ-அரண் எரி அரன் இடம் - தஞ்சமடைந்த தேவர்கள் உய்யும்படி மேருவில்லை ஏந்தி முப்புரங்களை எரித்த ஹரன் உறையும் தலம் ஆவது; (உய - உய்ய; இடைக்குறை விகாரம்); (சாபம் - வில்);

அலம்பு தாமிரபரணியின் கரையினில் பாவநாசமே - ஒலிக்கின்ற நீரையுடைய தாமிரபரணி-நதியின் கரையில் உள்ள பாபநாசம்; (அலம்புதல் - ஒலித்தல்); ("அலம்புதல் = கழுவுதல்" என்று பொருள்கொண்டு, "நம் பாவங்களைக் கழுவும் புண்ணியநதியான தாமிரபரணி" என்றும் பொருள்கொள்ளலாம்);


2)

தனிச்சிலை கொண்டெயில் சாய எய்தவன்

முனிச்சகம் படைத்தவன் முடிவில் முக்கணன்

முனிச்சிறு வருக்கென முன்பு கூற்றுதை

பனிச்சடைப் பரனிடம் பாவ நாசமே.


தனிச்-சிலை கொண்டு எயில் சாய எய்தவன் - ஒப்பற்ற மேருவில்லால் முப்புரங்களும் அழிய ஒரு கணையை எய்தவன்; (தனி - ஒப்பற்ற); (சிலை - வில்); (எயில் - கோட்டை); (சாய்தல் - அழிதல்);

முன் இச்-சகம் படைத்தவன் - முன்பு இவ்வுலகத்தைப் படைத்தவன்; (முனிச்சகம் - முன்னிச்சகம்; தொகுத்தல் விகாரம்); (சகம் - ஜகத் - உலகம்);

முடிவு-இல் முக்கணன் - அழிவின்றி இருப்பவன், நெற்றிக்கண்ணன்;

முனிச்-சிறுவருக்கென முன்பு கூற்று உதை பனிச்சடைப் பரன் இடம் பாவநாசமே - மார்க்கண்டேயருக்காக முன்பு காலனை உதைத்தவனும், சடையில் கங்கையை உடையவனுமான சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்; (முனி - முனிவர்); (கூற்று - காலன்); (பனி - நீர்);


3)

கடலிடைத் தோன்றிய கரிய நஞ்சது

சுடர்விடு மணியெனத் தோன்ற உண்டவன்

அடல்விடை உடையவன் அகத்தி யர்க்கருள்

படர்சடைப் பரனிடம் பாவ நாசமே.


கடலிடைத் தோன்றிய கரிய நஞ்சு-அது சுடர்விடு மணி எனத் தோன்ற உண்டவன் - பாற்கடலில் தோன்றிய கரிய ஆலகாலமானது ஒளிவீசும் நீலமணி போலக் கண்டத்தில் காட்சியளிக்கும்படி அதனை உண்டவன்;

அடல்-விடை உடையவன் - வெற்றியையுடைய வலிய இடபத்தை வாகனமாக உடையவன்; (அடல் - வெற்றி; வலிமை);

அகத்தியர்க்கு அருள் படர்சடைப் பரன் இடம் பாவநாசமே - அகத்திய முனிவருக்கு அருள்புரிந்தவனும் படரும் சடையை உடையவனுமான சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்;

(* அகத்தியருக்குத் தன் திருமணக்-கோலத்தைக் காட்டியருளிய வரலாற்றைத் இத்தலபுராணத்தில் காண்க);


4)

சாம்பலை விரைகமழ் சாந்து போற்புனைந்(து)

ஓம்பிடும் அன்பருக்(கு) உவகை நல்குவான்

காம்பன தோளியைக் கலந்த மேனியன்

பாம்பணி பரனிடம் பாவ நாசமே.


சாம்பலை விரை கமழ் சாந்து போல் புனைந்து ஓம்பிடும் அன்பருக்கு உவகை நல்குவான் - திருநீற்றை மணம் கமழும் சந்தனம் போல் அணிந்து வணங்கும் பக்தர்களுக்கு இன்பம் தருபவன்; (சாம்பல் - திருநீறு); (விரை - வாசனை); (சாந்து - கலவைச் சந்தனம்); (அப்பர் தேவாரம் - 4.102.1 - "ஆரூர் அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச் சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே");

காம்பு அன தோளியைக் கலந்த மேனியன் - மூங்கில் போன்ற புஜத்தை உடைய உமாதேவியைத் திருமேனியில் ஒரு கூறாக உடையவன்; (காம்பு - மூங்கில்); (அன - அன்ன - போன்ற); (சம்பந்தர் தேவாரம் - 1.4.7 - "காம்பன தோளியொடும் கலந்து");

பாம்பு அணி பரன் இடம் பாவநாசமே - நாகாபரணனான சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்;


5)

மதுமலர்க் கணைதொடு மதனைச் சுட்டவன்

புதியவன் பழையன் போற்றித் தாள்தொழும்

மதியணி சடையினன் மன்னு யிர்க்கெலாம்

பதியவன் உறைவிடம் பாவ நாசமே.


மதுமலர்க் கணைதொடு மதனைச் சுட்டவன் - தேன்மலர்களை அம்பாக எய்யும் மன்மதனைச் சுட்டெரித்தவன்; (மதன் - காமன்);

புதியவன் பழையன் - என்றும் புதியவன், மிகத் தொன்மையானவன்;

போற்றித் தாள் தொழும் மதி அணி சடையினன் - திருவடியை வணங்கிய சந்திரனைச் சடைமேல் அணிந்தவன்;

மன்னுயிர்க்கெலாம் பதி அவன் உறைவிடம் பாவநாசமே - எல்லா உயிர்களுக்கும் தலைவனான பசுபதி உறையும் தலம் பாபநாசம்; (மன்னுயிர் - ஜீவாத்மா - பசு);


6)

உடைதலை கலனென உண்ப லிக்குழல்

உடையவன் விடையவன் உலக நாயகி

இட(ம்)மகிழ் இனியவன் இலகு கூர்மழுப்

படையுடைப் பரனிடம் பாவ நாசமே.


உடைதலை கலன் என உண்பலிக்கு உழல் உடையவன் - பிரமனது மண்டையோடே உண்கலன் என்று ஏந்திப் பிச்சைக்கு உழலும் சுவாமி; (உடைதலை - உடைந்த கபாலம்); (பலி - பிச்சை); (உடையவன் - எல்லாம் உடையவன் - சுவாமி); (சம்பந்தர் தேவாரம் - 1.110.3 - "உடைதலை இடுபலி கொண்டுழல்வான்");

விடையவன் - இடபவாகனன்;

உலகநாயகி இடம் மகிழ் இனியவன் - உலகம்மையை இடப்பக்கம் ஒரு பாகமாக விரும்பிய இனிமையுடையவன்; (* உலகநாயகி - உலகம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்);

இலகு கூர் மழுப்படையுடைப் பரன் இடம் பாவநாசமே - பிரகாசிக்கின்ற கூர்மை மிக்க மழுவாயுதத்தை ஏந்திய சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்; (இலகுதல் - திகழ்தல்; ஒளிவீசுதல்);


7)

பொங்கழல் உருவினன் பொருத மும்மத

வெங்கரி உரித்தவன் வெந்த நீறணி

சங்கரன் கானகம் தன்னில் ஆடிய

பைங்கழற் பரனிடம் பாவ நாசமே.


பொங்கு-அழல் உருவினன் - ஓங்கி எரியும் தீப் போன்ற செம்மேனியன்;

பொருத மும்மத வெங்கரி உரித்தவன் - போர் செய்த கொடிய ஆண்யானையின் தோலை உரித்தவன்; (பொருதல் - போர்செய்தல்); (கரி - யானை);

வெந்த நீறு அணி சங்கரன் - சுட்ட திருநீற்றைப் பூசிய சங்கரன்; (சங்கரன் - நன்மை செய்பவன்);

கானகம்-தன்னில் ஆடிய பைங்கழற் பரன் இடம் பாவநாசமே - சுடுகாட்டில் கூத்து ஆடிய அழகிய கழல் அணிந்த திருவடியுடைய சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்; (கானகம் - காடு - சுடுகாடு); (பை - அழகு); (சம்பந்தர் தேவாரம் - 3.34.9 - "ஆடினார் கானகத்து"); (சம்பந்தர் தேவாரம் - 2.55.7 - "அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்ப");


8)

சேடியல் கயிலையைத் திட்டிப் பேர்த்தவன்

வாடிட ஓர்விரல் வைத்த தாளினன்

நீடிய புகழினன் நிமலன் நான்மறை

பாடிய பரனிடம் பாவ நாசமே.


சேடு இயல் கயிலையைத் திட்டிப் பேர்த்தவன் வாடிட ஓர் விரல் வைத்த தாளினன் - பெருமையும் உயரமும் உடைய கயிலைமலையை இகழ்ந்து பேசிப் பெயர்த்த இராவணன் வாடும்படி திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவன்; (சேடு - பெருமை; உயரம்); (இயல்தல் - பொருந்துதல்; தங்குதல்);

நீடிய புகழினன் - எல்லையற்ற புகழுடையவன்; (நீடுதல் - நீள்தல்);

நிமலன் - பரிசுத்தன்;

நான்மறை பாடிய பரன் இடம் பாவநாசமே - நால்வேதங்களைப் பாடியருளிய (/ நால்வேதங்களூம் போற்றிப் பாடுகின்ற) சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்;


9)

அரியயன் அடிமுடி அறியொ ணாததோர்

எரியவன் படைபெற எண்ணிப் பாண்டவன்

புரிதவம் கண்டருள் புனிதன் நஞ்சையுண்

பரிவினன் உறைவிடம் பாவ நாசமே.


அரி அயன் அடிமுடி அறியொணாததோர் எரி-அவன் - அடியையும் முடியையும் தேடிய திருமால் பிரமன் இவர்களால் அறியப்படாத ஒப்பற்ற ஜோதிவடிவினன்; (அறியொணாத - அறிய ஒண்ணாத; தொகுத்தல் விகாரம்); (எரி - தீ); (திருவாசகம் - திருச்சதகம் - 8.5.95 - "வானநாடரும் அறியொணாத நீ");

படை பெற எண்ணிப் பாண்டவன் புரி தவம் கண்டு அருள் புனிதன் - பாசுபதாஸ்திரத்தைப் பெற விரும்பி அர்ஜுனன் செய்த தவத்தைக் கண்டு அவனுக்கு அருளிய தூயன்;

நஞ்சை உண் பரிவினன் உறைவிடம் பாவநாசமே - ஆலகாலத்தை உண்ட இரக்கம் மிக்க சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்;


10)

தூற்றிடும் வாயினர் சொல்லும் புன்னெறிச்

சேற்றினைத் தள்ளுமின் செல்வன் வெண்திரு

நீற்றினைப் பூசிய நேயர் வல்வினை

பாற்றிடும் பரனிடம் பாவ நாசமே.


தூற்றிடும் வாயினர் சொல்லும் புன்னெறிச் சேற்றினைத் தள்ளுமின் - வேதநெறியைத் தூற்றுகின்றவர்கள் சொல்கின்ற புன்மார்க்கச் சேற்றை மதியாமல் விலகுங்கள்; (தள்ளுதல் - விலகுதல்; கைவிடுதல்; நிராகரித்தல்);

செல்வன் - திருவுடையவன்;

வெண்-திருநீற்றினைப் பூசிய நேயர் வல்வினை பாற்றிடும் பரன் இடம் பாவநாசமே - வெண்மையான திருநீற்றைப் பூசிய அன்பர்களது வலிய வினையை அழிக்கும் சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்; (பாற்றுதல் - அழித்தல்);


11)

அணியுமை அவள்பதி ஆல நீழலன்

துணிமதிச் சடையினன் சூல பாணியன்

மணியணி மிடறினன் மார்பில் நூலொடு

பணியணி பரனிடம் பாவ நாசமே.


அணி உமை அவள் பதி - அழகிய உமைக்குக் கணவன் - உமாபதி;

ஆல-நீழலன் - கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி;

துணிமதிச் சடையினன் - துண்டத்-திங்களைச் சடையில் அணிந்தவன்; (துணி - துண்டம்; துணிமதி - நிலாத்துண்டம்);

சூலபாணியன் - திரிசூலத்தைக் கையில் ஏந்தியவன்; (பாணி - கை); (சம்பந்தர் தேவாரம் - 3.112.1 - "பரசுபாணியர்");

மணி அணி மிடறினன் - கண்டத்தில் நீலமணியை அணிந்தவன் - நீலகண்டன்;

மார்பில் நூலொடு பணி அணி பரன் இடம் பாவநாசமே - மார்பில் பூணூலையும் நாகத்தையும் அணிந்த சிவபெருமான் உறையும் தலம் பாபநாசம்; (பணி - நாகம்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.499 - ஓமாம்புலியூர் - கயிறு வீசும் நமனை

2020-02-25

P.499 - ஓமாம்புலியூர்

--------------

(அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா காய் - வாய்பாடு; அடியீற்றுச்சீர் எல்லாம் புளிமாங்காய்ச் சீர்)

(சம்பந்தர் தேவாரம் - 1.67.1 - "வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு");

(சுந்தரர் தேவாரம் - 7.95.1 - "மீளா அடிமை")


1)

கயிறு வீசும் நமனைச் செற்றுக் கருதித் தொழுமாணி

உயிரைக் காத்த ஒப்பில் ஒருவன் உமையாள் ஒருகூறன்

தயிரும் பாலும் ஆடும் எம்மான் தங்கும் இடமென்பர்

உயரும் பொழில்கள் சூழும் அணியார் ஓமாம் புலியூரே.


கயிறு வீசும் நமனைச் செற்றுக் - பாசத்தை வீசிய காலனை உதைத்து அழித்து; (செறுதல் - அழித்தல்);

கருதித் தொழு மாணி உயிரைக் காத்த ஒப்பு-இல் ஒருவன் - விரும்பி வழிபட்ட மார்க்கண்டேயரது உயிரைக் காத்தருளிய ஒப்பற்றவன்; (மாணி - மார்க்கண்டேயர்); (ஒரு - ஒப்பற்ற);

உமையாள் ஒரு கூறன் - உமாதேவியை ஒரு கூறாக உடையவன்;

தயிரும் பாலும் ஆடும் எம்மான் தங்கும் இடம் என்பர் - தயிராலும் பாலாலும் அபிஷேகம் செய்யப்பெறும் எம்பெருமான் உறையும் தலம் ஆவது;

உயரும் பொழில்கள் சூழும் அணி ஆர் ஓமாம்புலியூரே - உயர்ந்த சோலை சூழ்ந்த அழகிய ஓமாம்புலியூர்;


2)

புலியின் தோலாய் புனிதா என்று போற்றும் அடியார்தம்

வலிய வினையை வீட்டி அவரை வானில் திகழ்விப்பான்

பலியை நாடிப் பல்லில் செல்லும் பரமன் இடமென்பர்

ஒலிசெய் தளிகள் உலவும் பொழில்சூழ் ஓமாம் புலியூரே.


"புலியின் தோலாய்; புனிதா" என்று போற்றும் அடியார்தம் - "புலித்தோலை ஆடையாகக் கட்டியவனே; தூயனே" என்று போற்றி வணங்கும் பக்தர்களது;

வலிய வினையை வீட்டி அவரை வானில் திகழ்விப்பான் - வலிய வினையை அழித்து அவர்களை வானுலகில் விளங்கவைப்பவன்; (வீட்டுதல் - அழித்தல்);

பலியை நாடிப் பல்-இல் செல்லும் பரமன் இடம் என்பர் - பிச்சைக்காகப் பல வீடுகளுக்குச் செல்லும் பரமன் உறையும் தலம் ஆவது; (பலி - பிச்சை); (இல் - இல்லம்);

ஒலிசெய்து அளிகள் உலவும் பொழில் சூழ் ஓமாம்புலியூரே - வண்டுகள் ஒலியெழுப்பி உலாவுகின்ற சோலை சூழ்ந்த ஓமாம்புலியூர்; (அளி - வண்டு);


3)

தீங்கு செய்தார் புரங்கள் தீயில் சேர மலைவில்லைத்

தாங்கி நின்ற தன்னேர் இல்லாத் தலைவன் சடைமீது

கோங்கு கொன்றை குரவம் சூடும் குழகன் இடமென்பர்

ஓங்கு தெங்கார் சோலை சூழ்ந்த ஓமாம் புலியூரே.


தீங்கு செய்தார் புரங்கள் தீயில் சேர மலைவில்லைத் தாங்கி நின்ற தன்-நேர் இல்லாத் தலைவன் - தேவர்களுக்குத் தீமை செய்த அசுரர்களது முப்புரங்களும் தீயில் மூழ்கும்படி மேருமலையை வில்லாக ஏந்தி நின்ற ஒப்பற்ற தலைவன்; (நேர் - ஒப்பு);

சடைமீது கோங்கு கொன்றை குரவம் சூடும் குழகன் இடம் என்பர் - சடையின்மேல் கோங்கமலர், கொன்றைமலர், குராமலர் இவற்றைச் சூடிய அழகன் உறையும் தலம் ஆவது; (குழகன் - இளையோன்; அழகன்); (அப்பர் தேவாரம் - 4.86.3 - "குரவ நறுமலர் கோங்கம் அணிந்து குலாயசென்னி");

ஓங்கு தெங்கு ஆர் சோலை சூழ்ந்த ஓமாம்புலியூரே - ஓங்கி வளரும் தென்னைமரங்கள் நிறைந்த சோலை சூழ்ந்த ஓமாம்புலியூர்; (தெங்கு - தென்னை);


4)

நயந்த அமுதம் அடையக் கடைய நஞ்சே கடல்கக்கப்

பயந்த வானோர் பாதம் பரவிப் பணிய அவரெல்லாம்

வியந்து போற்ற விடத்தை உண்ட விமலன் இடமென்பர்

உயர்ந்த சோலை புடைசூழ்ந் திலங்கும் ஓமாம் புலியூரே.


நயந்த அமுதம் அடையக் கடைய நஞ்சே கடல் கக்கப் - விரும்பிய அமுதைப் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடைந்தபொழுது அக்கடலில் ஆலகாலமே தோன்றவும்; (நயத்தல் - விரும்புதல்);

பயந்த வானோர் பாதம் பரவிப் பணிய - அஞ்சிய தேவர்கள் ஈசன் திருவடியை வாழ்த்தி வணங்கவும்;

அவரெல்லாம் வியந்து போற்ற விடத்தை உண்ட விமலன் இடம் என்பர் - அத்தேவர்களெல்லாம் வியப்படைந்து போற்றும்படி அந்த ஆலகாலத்தை உண்டருளிய தூயன் உறையும் தலம் ஆவது;

உயர்ந்த சோலை புடை சூழ்ந்து இலங்கும் ஓமாம்புலியூரே - உயர்ந்த சோலை சூழ்ந்து விளங்குகின்ற ஓமாம்புலியூர்;


5)

போதி னாலும் புனலி னாலும் போற்றும் அடியார்க்குத்

தீதி லாத செல்வம் நல்கும் தேவன் சிவனெம்மான்

பாதி மேனி பாவைக் களித்த பரமன் இடமென்பர்

ஊதி வரிவண் டுலவும் பொழில்சூழ் ஓமாம் புலியூரே.


போதினாலும் புனலினாலும் போற்றும் அடியார்க்குத் - பூக்களாலும் நீராலும் வழிபாடு செய்து வணங்கும் அடியவர்களுக்கு; (போது - பூ);

தீது-இலாத செல்வம் நல்கும் தேவன் சிவன் எம்மான் - குற்றமற்ற செல்வத்தை அருளும் தேவன், சிவன், எம்பெருமான்;

பாதி மேனி பாவைக்கு அளித்த பரமன் இடம் என்பர் - தன் திருமேனியில் ஒரு பாதியை உமைக்குத் தந்த பரமன் உறையும் தலம் ஆவது; (பாவை - பெண்);

ஊதி வரிவண்டு உலவும் பொழில் சூழ் ஓமாம்புலியூரே - வரிகளையுடைய வண்டுகள் ஒலிசெய்து உலாவுகின்ற சோலை சூழ்ந்த ஓமாம்புலியூர்; (ஊதுதல் - வண்டு முதலியன ஒலித்தல்);


6)

தண்ணன் மலரால் தாளைத் தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பான்

விண்முன் பணிந்து மிகவும் இறைஞ்ச மேருச் சிலையேந்தித்

திண்மும் மதில்கள் தம்மை எய்த தீரன் இடமென்பர்

ஒண்வெண் திங்கள் தீண்டும் பொழில்சூழ் ஓமாம் புலியூரே.


தண்-நன்-மலரால் தாளைத் தொழுவார்-தங்கள் துயர் தீர்ப்பான் - குளிர்ந்த சிறந்த பூக்களைத் தூவித் திருவடியைத் தொழும் அன்பர்களது துயரத்தைத் தீர்ப்பவன்; (* துயரந்தீர்த்தநாதர் - ஓமாம்புலியூரில் இறைவன் திருநாமம்);

விண் முன் பணிந்து மிகவும் இறைஞ்ச மேருச்-சிலை ஏந்தித் - முன்பு தேவர்கள் பணிந்து மிகவும் வேண்டி இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி மேருமலையை வில்லாக ஏந்தி; (சிலை - வில்);

திண்-மும்மதில்கள் தம்மை எய்த தீரன் இடம் என்பர் - வலிய முப்புரங்களை எய்து அழித்த வீரன் உறையும் தலம் ஆவது; (தீரன் - மனத்திடமுள்ளவன்);

ஒண்-வெண்-திங்கள் தீண்டும் பொழில் சூழ் ஓமாம்புலியூரே - ஒளியுடைய வெண்மையான சந்திரன் தொடும்படி உயர்ந்த சோலை சூழ்ந்த ஓமாம்புலியூர்; (ஒண்வெண் - ஒருபொருட்பன்மொழி என்றும் கொள்ளலாம்);


7)

வம்பு நாறும் மலர்கள் தூவி வணங்கும் அடியார்தம்

கம்பம் நீக்கி இன்பம் அருளும் கருணைக் கடலெம்மான்

கொம்பன் னாளோர் கூறா மகிழும் கூத்தன் இடமென்பர்

உம்பர்ச் செல்லும் மதிதோய் பொழில்சூழ் ஓமாம் புலியூரே.


வம்பு நாறும் மலர்கள் தூவி வணங்கும் அடியார்தம் கம்பம் நீக்கி இன்பம் அருளும் கருணைக்-கடல் எம்மான் - மணம் கமழும் பூக்களைத் தூவி வணங்கும் அடியவர்களுடைய நடுக்கத்தைப் போக்கி, இன்பம் அருளும் கருணைக்கடல் ஆனவன் எம்பெருமான்; (வம்பு - வாசனை); (கம்பம் - நடுக்கம்; அச்சம்);

கொம்பு அன்னாள் ஓர் கூறா மகிழும் கூத்தன் இடம் என்பர் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக மகிழும் கூத்தன் உறையும் தலம் ஆவது; (கூறா - கூறாக);

உம்பர்ச் செல்லும் மதி தோய் பொழில் சூழ் ஓமாம்புலியூரே - வானில் செல்லும் சந்திரன் தொடுகின்ற சோலை சூழ்ந்த ஓமாம்புலியூர்; (உம்பர் - ஆகாயம்); (தோய்தல் - பொருந்துதல்);


8)

கொச்சை வார்த்தை பலவும் சொல்லிக் குன்றைப் பெயர்மூடன்

அச்சம் கொள்ள விரலை ஊன்றி அடர்த்த அருளாளன்

நச்ச ராவை நாணா வீக்கும் நம்பன் இடமென்பர்

உச்சி திங்கள் தீண்டு பொழில்சூழ் ஓமாம் புலியூரே.


கொச்சை வார்த்தை பலவும் சொல்லிக் குன்றைப் பெயர் மூடன் அச்சம் கொள்ள விரலை ஊன்றி அடர்த்த அருளாளன் - இழிந்த சொற்கள் பல சொல்லிக் கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான இராவணன் அஞ்சும்படி திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கிய அருளாளன்; (கொச்சை - இழிவு); (அடர்த்தல் - நசுக்குதல்);

நச்சுஅராவை நாணா வீக்கும் நம்பன் இடம் என்பர் - விஷப்பாம்பை அரைநாணாகக் கட்டியவனும் நம்பன் என்ற திருநாமம் உடையவனுமான சிவபெருமான் உறையும் தலம் ஆவது; (வீக்குதல் - கட்டுதல்); (நம்பன் - விரும்பத்தக்கவன்);

உச்சி திங்கள் தீண்டு பொழில்சூழ் ஓமாம் புலியூரே - உச்சியைச் சந்திரன் தொடும்படி உயர்ந்த சோலை சூழ்ந்த ஓமாம்புலியூர்;


9)

அகழும் அரியும் உயரும் அயனும் அறியா அழல்வண்ணன்

திகழும் மதியும் சீறும் அரவும் சேரும் சடையண்ணல்

இகழும் தக்கன் வேள்வி செற்ற இறைவன் இடமென்பர்

உகளும் மீன்கள் திகழும் புனலார் ஓமாம் புலியூரே.


அகழும் அரியும் உயரும் அயனும் அறியா அழல்வண்ணன் - பன்றி வடிவில் நிலத்தை அகழ்ந்த திருமால் அன்னப்பறவை வடிவில் மேலே சென்ற பிரமன் இவர்களால் அறிய ஒண்ணாத தீவண்ணன்;

திகழும் மதியும் சீறும் அரவும் சேரும் சடை அண்ணல் - ஒளிவீசும் பிறையையும் சீறுகின்ற பாம்பையும் சடைமேல் ஒன்றாகச் சேர்த்த அண்ணல்;

இகழும் தக்கன் வேள்வி செற்ற இறைவன் இடம் என்பர் - இகழ்ந்த தக்கன் செய்த வேள்வியை அழித்த இறைவன் உறையும் தலம் ஆவது; (செறுதல் - அழித்தல்);

உகளும் மீன்கள் திகழும் புனல் ஆர் ஓமாம்புலியூரே - பாயும் மீன்கள் விளங்குகின்ற நீர் மிக்க ஓமாம்புலியூர்; (உகள்தல் - தாவுதல்; பாய்தல்);


10)

முண்டம் நீறு தரியா மூர்க்கர் மொழியும் நெறிநீங்கும்

கண்டம் கரியன் கையிற் சூலன் காமன் உடல்வேவக்

கண்ட கடவுள் அண்டர் அண்டன் கருதும் இடமென்பர்

உண்ட வண்டு பண்செய் பொழில்சூழ் ஓமாம் புலியூரே.


முண்டம் நீறு தரியா மூர்க்கர் மொழியும் நெறி நீங்கும் - நெற்றியில் திருநீற்றைப் பூசாத மூர்க்கர்கள் சொல்கின்ற மார்க்கம் நீங்குங்கள்; (முண்டம் - நெற்றி);

கண்டம் கரியன், கையில் சூலன் - நீலகண்டன், திரிசூலத்தை ஏந்தியவன்;

காமன் உடல் வேவக் கண்ட கடவுள் - மன்மதனது உடல் வெந்து சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் நோக்கிய கடவுள்;

அண்டர்-அண்டன் கருதும் இடம் என்பர் - தேவதேவன் விரும்பி உறையும் தலம் ஆவது;

உண்ட வண்டு பண்செய் பொழில் சூழ் ஓமாம்புலியூரே - மது உண்ட வண்டு இனிய இசையை ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த ஓமாம்புலியூர்;


11)

பூவால் புனலால் மணமார் புகையால் புகழும் தமிழாரும்

பாவால் போற்றிப் பாதம் பணியும் பத்தர்க் கருளீசன்

சேவார் கொடியன் கல்லால் நீழற் செல்வன் இடமென்பர்

ஓவா தளியின் இசையார் பொழில்சூழ் ஓமாம் புலியூரே.


பூவால், புனலால், மணம் ஆர் புகையால், புகழும் தமிழ் ஆரும் பாவால், போற்றிப் பாதம் பணியும் பத்தர்க்கு அருள் ஈசன் - பூக்கள், நீர், நறும்புகை (தூபம்), தேவாரம் முதலிய தமிழ்ப்பாமாலைகள் இவற்றால் திருவடியைப் போற்றி வணங்கும் பக்தர்களுக்கு அருள்கின்ற ஈசன்;

சே ஆர் கொடியன் - இடபக்கொடியை உடையவன்; (சே - எருது);

கல்லால்நீழல் செல்வன் இடம் என்பர் - கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருக்கும் செல்வன் உறையும் தலம் ஆவது;

ஓவாது அளியின் இசை ஆர் பொழில் சூழ் ஓமாம்புலியூரே - எப்பொழுதும் வண்டுகளின் இசை ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த ஓமாம்புலியூர்; (ஓவுதல் - முடிதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.498 - வைகுண்டம் - கழல் நினைந்த மாணி

2020-02-23

P.498 - வைகுண்டம் (ஸ்ரீவைகுண்டம்)

--------------

(எண்சீர்ச் சந்தவிருத்தம் - தான தானா தான தானா - அரையடிச் சந்தம்);

(சுந்தரர் தேவாரம் - 7.6.1 - "படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்")


முற்குறிப்பு: வைகுண்டம் (ஸ்ரீவைகுண்டம்) - கைலாசநாதர் கோயில் - பாண்டிநாட்டுத் தலம். தாமிரபரணி-ஆற்றின் அருகே உள்ள ஊர்;


1)

கழல்நி னைந்த மாணி தன்னைக்

.. காத்த தேவை உம்பர் ஏத்தும்

மழைநி றத்து மிடறி னானை

.. வன்பு லித்தோல் ஆடை யானை

அழல்நி றத்துச் சடையில் ஆற்றை

.. அணிவல் லானைப் பொருநைப் பாங்கர்க்

கழனி சூழ்ந்த வைகுண் டத்திற்

.. கயிலை மன்னைக் காண லாமே.


கழல் நினைந்த மாணி தன்னைக் காத்த தேவை - திருவடியை எண்ணி வழிபாடு செய்த மார்க்கண்டேயரைக் காத்த கடவுளை; (மாணி - மார்க்கண்டேயர்); (தே - தெய்வம்);

உம்பர் ஏத்தும் மழை நிறத்து மிடறினானை - தேவர்கள் போற்றும் நீலகண்டனை; (உம்பர் - தேவர்); (மழை - மேகம்); (மிடறு - கண்டம்); (மிடறினானை - மிடற்றினானை; சந்தம் கருதி ற் மிகாது வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 2.78.4 - "மாசிலாமணி மிடறினார்");

வன்-புலித்தோல் ஆடையானை - கொடிய புலியின் தோலை ஆடையாக அணிந்தவனை;

அழல் நிறத்துச் சடையில் ஆற்றை அணி வல்லானைப் - தீப் போன்ற செஞ்சடையில் கங்கையை அணிந்த வல்லவனை; (அழல் - தீ);

பொருநைப் பாங்கர்க் கழனி சூழ்ந்த வைகுண்டத்தில் கயிலை-மன்னைக் காணல் ஆமே - தாமிரபரணியின் அருகே வயல் சூழ்ந்த ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் கயிலைநாதனைத் தரிசித்து வழிபடல் ஆம்; (பொருநை - தாமிரபரணியாறு); (பாங்கர் - பக்கம்; அருகு); (கழனி - வயல்); (மன் - தலைவன்; நாதன்; இறைவன்); (ஆம் - ஆகும்); (* கயிலைமன் - கைலாசநாதர் - இத்தலத்து இறைவன் திருநாமம்); (சம்பந்தர் தேவாரம் - 2.24.1 - "நாகேச்சுர நகரின் மன்னே எனவல் வினைமாய்ந் தறுமே");


2)

குறையி ரந்த அன்பர் கட்குக்

.. குறைவி லாது நல்கு வானைக்

கறையி லங்கு மிடறி னானைக்

.. கனலை ஏந்தி ஆடு வானை

நறைமி குந்த கொன்றை மத்தம்

.. நாகம் ஆரும் சென்னி யானை

மறைமொ ழிந்த கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


குறையிரந்த அன்பர்கட்குக் குறைவிலாது நல்குவானைக் - வணங்கி வேண்டுகின்ற பக்தர்களுக்கு வரங்களை அள்ளித் தருபவனை; (குறையிரத்தல் - தன்குறைகூறி வேண்டுதல்);

கறை இலங்கு மிடறினானைக் - நீலகண்டனை; (இலங்குதல் - திகழ்தல்; ஒளிவீசுதல்);

கனலை ஏந்தி ஆடுவானை - கையில் தீயை ஏந்திக் கூத்தாடுபவனை;

நறை மிகுந்த கொன்றை மத்தம் நாகம் ஆரும் சென்னியானை - தேன் மிகுந்த கொன்றைமலர், ஊமத்தமலர், பாம்பு இவற்றைத் திருமுடிமேல் அணிந்தவனை; (நறை - தேன்; வாசனை); (ஆர்தல் - பொருந்துதல்; அணிதல்); (சென்னி - தலை);

மறை மொழிந்த கயிலை-மன்னை - வேதங்களைப் பாடியருளிய கயிலைநாதனை;

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


3)

புதிய பூவின் மாலை கட்டிப்

.. பொன்ன டிக்குச் சூட்டி நாளும்

துதிகள் பாடித் தொழுது நின்ற

.. தொண்டர் துன்பம் தீர்த்த கோனை

நதிக ரந்த சடையின் மீது

.. நறவம் ஆரும் கொன்றை வன்னி

மதிய ணிந்த கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


புதிய பூவின் மாலை கட்டிப் பொன்னடிக்குச் சூட்டி நாளும் துதிகள் பாடித் தொழுது நின்ற தொண்டர் துன்பம் தீர்த்த கோனை - அன்று பூத்த புதிய பூக்களால் மாலை தொடுத்துப் பொன் போன்ற திருவடிக்கு அணிவித்துத் தினமும் பாமாலைகள் பாடி வழிபடும் பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து அருளும் தலைவனை;

நதி கரந்த சடையின் மீது நறவம் ஆரும் கொன்றை வன்னி மதி அணிந்த கயிலை-மன்னை - கங்கையாற்றை மறைத்த சடையின்மேல் தேன் மிக்க கொன்றைமலர், வன்னியிலை, திங்கள் இவற்றையெல்லாம் அணிந்த கயிலைநாதனை; (கரத்தல் - ஒளித்தல்); (நறவம் - தேன்; வாசனை);

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


4)

குதிகொள் மானை ஏந்தி னானைக்

.. குமர னுக்குத் தாதை தன்னைப்

பதியி லானைப் பணியும் அன்பர்

.. பாவ(ம்) நாசம் ஆக்கி னானை

எதிரி லானை உம்பர் செய்த

.. இரதம் ஏறி வாளி ஒன்றால்

மதில்கள் எய்த கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


குதிகொள் மானை ஏந்தினானைக் - தாவும் மான்கன்றைக் கையில் ஏந்தியவனை;

குமரனுக்குத் தாதை-தன்னைப் - முருகனுக்குத் தந்தையை;

பதி இலானைப் - தனக்கு ஒரு தலைவன் இல்லாதவனை;

பணியும் அன்பர் பாவம் நாசம் ஆக்கினானை - வழிபடும் பக்தர்களது பாவங்களை அழிப்பவனை;

எதிர் இலானை - ஒப்பற்றவனை; (எதிர் - ஒப்பு);

உம்பர் செய்த இரதம் ஏறி வாளி ஒன்றால் மதில்கள் எய்த கயிலை-மன்னை - தேவர்கள் செய்த தேரில் ஏறி ஒரு கணையால் முப்புரங்களை எய்து அழித்த கயிலைநாதனை; (உம்பர் - தேவர்); (வாளி - அம்பு);

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


5)

அஞ்செ ழுத்தை நெஞ்சில் வைத்த

.. அன்பி னார்கள் வினைகள் எல்லாம்

எஞ்சல் இன்றி நீக்கு வானை

.. ஏறு காட்டும் கொடியி னானை

வஞ்சி அன்ன இடையி னாளை

.. வாமம் வைத்த மாண்பி னானை

மஞ்சு சூழும் கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


அஞ்செழுத்தை நெஞ்சில் வைத்த அன்பினார்கள் வினைகள் எல்லாம் எஞ்சல் இன்றி நீக்குவானை - பஞ்சாட்சரத்தைத் தியானிக்கும் பக்தர்களது வினையையெல்லாம் அடியோடு தீர்ப்பவனை; (எஞ்சல் - எஞ்சுதல் - மிஞ்சுதல்);

ஏறு காட்டும் கொடியினானை - இடபக்கொடியை உடையவனை;

வஞ்சி அன்ன இடையினாளை வாமம் வைத்த மாண்பினானை - வஞ்சிக்கொடி போன்ற சிற்றிடையை உடைய உமையை இடப்பக்கம் பாகமாக உடைய கொள்கையனை; (வஞ்சி - வஞ்சிக்கொடி); (வாமம் - இடப்பக்கம்); (மாண்பு - பெருமை; அழகு);

மஞ்சு சூழும் கயிலை-மன்னை - மேகம் சூழும் கயிலைமலை நாதனை; (மஞ்சு - மேகம்);

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


6)

அருவி போலக் கண்கள் சோர

.. அலர்கள் தூவித் தமிழ்கள் பாடி

உருகும் அன்பர் எண்ணு கின்ற

.. உருவில் வந்து நல்கு வானைப்

பெருவி லங்கல் வில்லி னானைப்

.. பிரிய(ம்) மிக்க பேதை பாகம்

மருவி னானைக் கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


அருவி போலக் கண்கள் சோர அலர்கள் தூவித் தமிழ்கள் பாடி - அருவிபோல் கண்ணீர் வழியப் பூக்களைத் தூவித் தமிழ்ப்பாமாலைகளைப் பாடி; (தமிழ்கள் - தமிழ்ப்பாடல்கள்); (திருவாசகம் - அச்சப்பத்து - 8.35.10 - "வாணிலாங் கண்கள் சோர வாழ்த்திநின் றேத்த மாட்டா" - "நீர் சோர" என ஒரு சொல் வருவிக்க); (சுந்தரர் தேவாரம் - 7.46.11 - "நாவல் ஆரூரன் சொன்ன அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகு ஆள்பவரே");

உருகும் அன்பர் எண்ணுகின்ற உருவில் வந்து நல்குவானைப் - மனம் உருகி வழிபடும் பக்தர்கள் எந்த வடிவத்தை எண்ணி வழிபடுகின்றார்களோ அந்த வடிவில் வந்து அருள்புரிபவனை;

பெரு-விலங்கல் வில்லினானைப் - மேருமலையை வில்லாக ஏந்தியவனை; (விலங்கல் - மலை);

பிரியம் மிக்க பேதை பாகம் மருவினானைக் - மிகுந்த அன்புடைய உமையை ஒரு பாகமாகக் கலந்தவனை; (பேதை - பெண்); (மருவுதல் - கலந்திருத்தல்);

கயிலை-மன்னை - கயிலைநாதனை;

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


7)

குழுவி னோடு கெழுமி அன்பர்

.. குழக என்றும் கூத்த என்றும்

தொழுது போற்ற இருள கற்றும்

.. சோதி தன்னைக் கவுணி யர்க்குக்

கழும லத்தில் ஞானம் ஊட்டும்

.. கருணை மிக்க கடவுள் தன்னை

மழுவை ஏந்தும் கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


குழுவினோடு கெழுமி அன்பர், "குழக" என்றும் "கூத்த" என்றும் தொழுது போற்ற - தொண்டர்குழாத்தோடு கூடிப் பக்தர்கள் "குழகனே! கூத்தனே" என்று பல திருநாமங்களைக் கூறி வணங்க; (குழகன் - அழகன்; இளையோன்);

இருள் அகற்றும் சோதி தன்னைக் - அவர்களது அறியாமையை நீக்கியருளும் ஜோதி-வடிவினனை;

கவுணியர்க்குக் கழுமலத்தில் ஞானம் ஊட்டும் கருணை மிக்க கடவுள்-தன்னை - கௌண்டின்ய கோத்திரத்தில் உதித்த திருஞான சம்பந்தர்க்குச் சீகாழியில் பாலோடு ஞானத்தை ஊட்டியருளிய பெருங்கருணை உடைய கடவுளை; (கவுணியர் - கௌண்டின்யகோத்திரத்தில் பிறந்தவர்);

மழுவை ஏந்தும் கயிலை-மன்னை - மழுவாயுதத்தை ஏந்திய கயிலைநாதனை;

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


8)

தரையி றங்கு தேர்க டாவ

.. வரையி டந்த தென்னி லங்கை

அரையன் வாட விரலை ஊன்றி

.. அரிய கீதம் கேட்ட கோனைக்

கரவி லாத நெஞ்ச ராகிக்

.. கழலை வாழ்த்தும் அன்பர் வேண்டு

வரம ளிக்கும் கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


தரை இறங்கு தேர் கடாவ வரை இடந்த தென்னிலங்கை அரையன் வாட விரலை ஊன்றி - வானில் செல்லும் தேர் ஓடாமல் தரையில் இறங்கிவிடவும், மிகவும் சினந்து கயிலைமலையைப் பெயர்த்த இலங்கை மன்னனான இராவணன் வாடும்படி திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கி; (கடாவுதல் - ஏறிச் செலுத்துதல்); (வரை - மலை); (இடத்தல் - பெயர்த்தல்);

அரிய கீதம் கேட்ட கோனைக் - இராவணன் பாடிய இனிய கீதத்தைக் கேட்டு அருள்புரிந்த தலைவனை;

கரவு இலாத நெஞ்சர் ஆகிக் கழலை வாழ்த்தும் அன்பர் வேண்டு வரம் அளிக்கும் - வஞ்சம் இல்லாத மனத்தோடு திருவடியை வாழ்த்தும் பக்தர்கள் வேண்டுகின்ற வரங்களை அளிக்கின்ற; (கரவு - வஞ்சனை);

கயிலை-மன்னை - கயிலைநாதனை;

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


9)

கண்ணன் வேதன் கீழு(ம்) மேலும்

.. காண ஏனம் அன்னம் ஆயும்

நண்ண ஒண்ணாச் சோதி யானை

.. நம்பும் அன்பர் நெஞ்சு ளானை

எண்ணி றந்த பேரி னானை

.. எழில்மி குந்த அந்தி வான

வண்ண மேனிக் கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


கண்ணன் வேதன் கீழும் மேலும் காண ஏனம் அன்னம் ஆயும் நண்ண ஒண்ணாச் சோதியானை - திருமாலும் பிரமனும் அடிமுடி காண்பதற்காகப் பன்றியும் அன்னமும் ஆகியும் அறிய ஒண்ணாத ஜோதி-உருவனை; (ஏனம் - பன்றி); (ஆய் - ஆகி);

நம்பும் அன்பர் நெஞ்சு-உளானை - விரும்பும் பக்தர்கள் நெஞ்சில் உள்ளவனை; (நம்புதல் - விரும்புதல்); (அப்பர் தேவாரம் - 5.1.10 - "நாடி நாரணன் நான்முகன் என்றிவர் தேடியும் திரிந்தும் காண வல்லரோ மாட மாளிகை சூழ்தில்லை அம்பலத் தாடி பாதம் என் நெஞ்சு ளிருக்கவே");

எண்-இறந்த பேரினானை - எண்ணற்ற திருநாமங்கள் உடையவனை; (இறத்தல் - கடத்தல்);

எழில் மிகுந்த அந்தி-வான-வண்ண மேனிக் கயிலை-மன்னை - அழகு மிக்க மாலைநேரத்து வானம் போலச் செம்மேனியை உடைய கயிலைநாதனை;

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


10)

கூசி டாமல் பொய்கள் சொல்லும்

.. கொள்கை யாளர் காண மாட்டாத்

தேசி னானைத் திங்கள் ஏறும்

.. சென்னி யானைத் தூய நீறு

பூசி னானை நாண தாகப்

.. புற்ற ராவைக் கட்டி னானை

மாசி லாத கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


கூசிடாமல் பொய்கள் சொல்லும் கொள்கையாளர் காண மாட்டாத் தேசினானைத் - கொஞ்சமும் கூசாமல் பொய்களே பேசும் கொள்கையுடையவர்களால் பார்க்க (/அறிய) முடியாத ஒளிவடிவினனை; (தேசு - ஒளி);

திங்கள் ஏறும் சென்னியானைத் - திருமுடிமேல் சந்திரனைச் சூடியவனை;

தூய நீறு பூசினானை - தூய திருநீற்றைப் பூசியவனை;

நாணதாகப் புற்றராவைக் கட்டினானை - புற்றில் வாழும் இயல்புடைய பாம்பை அரைநாணாகக் கட்டியவனை;

மாசு-இலாத கயிலை-மன்னை - மும்மலமற்ற புனிதனான கயிலைநாதனை;

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


11)

பணிகள் செய்து பத்த ராகிப்

.. பரவி னார்கள் மகிழு மாறு

பிணிகள் தீர்க்கும் தொழிலி னானைப்

.. பெற்றம் ஏறும் பெருமை யானைப்

பணிய ணிந்த மார்பி னானைப்

.. பண்டெ ழுந்த நஞ்சை உண்ட

மணிமி டற்றுக் கயிலை மன்னை

.. வைகுண் டத்திற் காண லாமே.


பணிகள் செய்து பத்தராகிப் பரவினார்கள் மகிழுமாறு பிணிகள் தீர்க்கும் தொழிலினானைப் - தொண்டு செய்து பக்தர்கள் ஆகிப் போற்றி வழிபடுபவர்கள் இன்புறும்படி அவர்களது துன்பங்களையும் பந்தங்களையும் தீர்க்கும் தொழிலுடையவனை; (பிணி - பந்தம்; துன்பம்); (சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே");

பெற்றம் ஏறும் பெருமையானைப் - இடபவாகனத்தை உடைய பெருமை உடையவனை; (பெற்றம் - எருது);

பணி அணிந்த மார்பினானைப் - பாம்பை மாலையாக மார்பில் அணிந்தவனை; (பணி - நாகம்);

பண்டு எழுந்த நஞ்சை உண்ட மணிமிடற்றுக் கயிலை-மன்னை - முற்காலத்தில் பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்ட நீலகண்டத்துக் கயிலைநாதனை; (பண்டு - முன்பு); (மணி - நீலமணி); (மிடறு - கண்டம்);

வைகுண்டத்தில் காணல் ஆமே - ஸ்ரீவைகுண்டம் என்ற தலத்தில் தரிசித்து வழிபடல் ஆம்;


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

எண்சீர்ச் சந்தவிருத்தம் - தான தானா தான தானா தான தானா தான தானா - என்ற சந்தம்.

  • ஒற்றைப்படைச் சீர்களில் - (அதாவது 1-3-5-7-ஆம் சீர்களில்) - தான என்பது தனன என்றும் வரலாம்.

  • தான – குறில் / குறில்+ஒற்று என்ற அமைப்பில் முடியும் மாச்சீர்;

  • தானா - தேமாச்சீர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------