Tuesday, March 24, 2026

P.471 - பொது - தீவினை தீர்வழி

2019-05-31

P.471 - பொது

--------------------

(குறள்வெண்பா)


முற்குறிப்பு: அடியீற்றில் இயைபுத்தொடை அமைந்த பாடல்கள்.


1)

தீவினை தீர்வழி சேவமர்ந்தான் பொற்கழல்

பூவினைத் தூவித் தொழல்.


தீவினை தீரும் வழி இடபவாகனனது பொன்னடியைப் பூக்களைத் தூவி வணங்குதல்;

(சே - எருது; அமர்தல் - விரும்புதல்; இருத்தல்; தொழல் - தொழுதல்);


2)

சேமமுற எண்ணில் தினந்தோறும் ஓரணங்கு

வாம(ம்)மகிழ்ந் தானை வணங்கு.


நற்கதி பெறவேண்டில் தினமும் உமைபங்கனை வணங்கு;

(சேமம் - க்ஷேமம்; அணங்கு - பெண்; வாமம் - இடப்பக்கம்);


3)

திண்ணிய தீவினை தீர்ந்துய்யச் செஞ்சடை

அண்ணல் அடியை அடை.


திண்ணிய - வலிய;


4)

கதிபெற வேண்டில் கரந்தை அரவு

மதிபுனைந் தானைப் பரவு.


கரந்தை - சிவகரந்தை என்ற மணமுள்ள பூண்டு; கதி - நற்கதி; பரவுதல் - துதித்தல்; (சுந்தரர் தேவாரம் - 7.76.6 - "கரந்தை கூவிளமாலை கடிமலர்க் கொன்றையும் சூடி");


5)

வாயார வாழ்த்தினார் வல்வினை தீர்ப்பவன்

பாயாறு சூடும் பவன்.


பாய் ஆறு - வானிலிருந்து பாய்ந்த கங்கை; பவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று;


6)

ஆற்றா தழுசுரர்க்கா அம்மிடற்றில் ஓர்கறை

ஏற்றான் எருதூர் இறை.


ஆற்றாது அழு-சுரர்க்கா - (ஆலகாலத்தின் துன்பத்தைத்) தாங்க முடியாமல் அழுத தேவர்களுக்காக; (சுரர்க்கா - சுரர்க்காக; கடைக்குறை விகாரம்);

அம்-மிடற்றில் ஓர் கறை ஏற்றான் எருது ஊர் இறை - அந்த அழகிய கண்டத்தில் ஒப்பற்ற கறையை அணிந்தான் இடபவாகனம் உடைய இறைவன்; (அம் - அழகு); ( - அந்த); (மிடறு - கண்டம்); (ஓர் - ஒரு; ஒப்பற்ற); (ஊர்தல் - ஏறுதல்);


7)

புகழ்பொருள் வேண்டில் புரிசடையன் தோடு

திகழ்செவியன் செவ்வியையே பாடு.


புரி-சடையன் - முறுக்கிய சடையை உடையவன்; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

செவ்வி - அழகு; தகுதி; தன்மை; (சம்பந்தர் தேவாரம் - 3.22.9 - "கார்வணன் நான்முகன் காணுதற்கொணாச் சீர்வணச் சேவடி செவ்வி");


8)

அரக்கன் முடிபத் தடர்த்தவன் ஓர்மான்

கரத்தில் தரித்தபெம் மான்.


அரக்கன் - இராவணன்; அடர்த்தல் - நசுக்குதல்;


9)

மாலயன் நேடி வணங்கிட நின்றபரன்

காலனைக் காய்ந்த அரன்.


காய்தல் - கோபித்தல்; அழித்தல்; நேடுதல் - தேடுதல்; காய்தல் - கோபித்தல்;


10)

நீறணியார் சொல்பொய்கள் நீங்குமின் மெய்ப்பொருள்

ஆறணிந்தான் செய்வான் அருள்.


திருநீற்றைப் பூசாதவர்கள் சொல்லும் பொய்களைப் பொருட்படுத்தாமல் நீங்குங்கள்; மெய்ப்பொருள் ஆனவன், கங்காதரன் அருள்புரிவான்;


11)

வெண்டலை மாலையினான் மேருவில்லோர் வெங்கணை

கொண்டரண்சுட் டான்தாள் துணை.


வெண்-தலை-மாலையினான் - வெண்மையான மண்டையோட்டு-மாலையை அணிந்தவன்;

மேரு-வில் ஓர் வெங்கணை கொண்டு அரண் சுட்டான் தாள் துணை - மேருமலை என்ற வில், ஒரு சுட்டெரிக்கும் அம்பு, இவற்றால் முப்புரங்களை எய்து எரித்து அழித்த சிவபெருமானது திருவடி நம் துணை;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.470 - பொது - வன்னஞ்சை வானுய்ய

2019-05-19

P.470 - பொது

------------------

(ஈரடிமேல் வைப்பு ;

தானான தானான தானா - தான

.. தானான தானான தானான தானா - சந்தம்)

(அப்பய்ய தீக்ஷிதரின் மார்கபந்து ஸ்தோத்திர அமைப்பில்)


முற்குறிப்புகள்:

  • படிப்போர் வசதி கருதிச், சந்தம் கெடாத சில இடங்களில் சீர்கள் / சொற்கள் பிரித்துக் காட்டப்பெற்றுள்ளன. சந்தம் கெடாமையை வாசித்து உணர்க. முதற்பாடல் மட்டும் சீர் பிரித்தும் பதம் பிரித்தும் காட்டப்பட்டுள்ளது.

  • இப்பாடலில், ஒவ்வோர் அடியிலும் தானா என்ற சந்தம் அமையும் இடங்களில் (= 3-ஆம் சீர், 8-ஆம் சீர்) நிறுத்திப் பாடப்பெறும். ஒவ்வோர் அடியிலும் அந்த இடங்களிடையே இயைபுத்தொடை அமைந்த பாடல்கள்.

  • மேல்வைப்பாக உள்ள அடியும் அதே சந்த-அமைப்பே.

  • மேல்வைப்பாக உள்ள அடியின் பொருள் முதற்பாடலில் தரப்பட்டுள்ளது. எல்லாப் பாடல்களிலும் அதே மேல்வைப்பே.

  • * (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்.


1)

வன்னஞ்சை வானுய்ய உண்டான் - கோல

.. மாதைத்த னாகத்தி லோர்கூறு கொண்டான்

முன்னங்கொ டுங்கூற்று தைத்தான் - அந்த

.. முக்கண்ண னாற்றைச்ச டைச்சுற்ற வைத்தான்.

.. .. .. மாதேவ னாமத்தை நாவே - சொல்லு

.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.


பதம் பிரித்து:

வன்-நஞ்சை வான் உய்ய உண்டான்; - கோல

.. மாதைத் தன் ஆகத்தில் ஓர் கூறு கொண்டான்;

முன்னம் கொடும்-கூற்று உதைத்தான்; - அந்த

.. முக்கண்ணன் ஆற்றைச் சடைச்-சுற்ற வைத்தான்;

.. .. .. மாதேவன் நாமத்தை நாவே, - சொல்லு,

.. .. .. .. வந்திப்பவர்க்கு உண்டு பேரின்ப வாழ்வே.


வன்-நஞ்சை வான் உய்ய உண்டான் - கொடிய ஆலகாலத்தை வானோர்கள் உய்ய உண்டருளியவன்;

கோல மாதைத் தன் ஆகத்தில் ஓர் கூறு கொண்டான் - அழகிய உமையைத் தன் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவன்;

முன்னம் கொடுங்-கூற்று உதைத்தான் - முன்பு கொடிய காலனை உதைத்தவன்;

அந்த முக்கண்ணன் ஆற்றைச் சடைச்-சுற்ற வைத்தான் - அந்த நெற்றிக்கண்ணன் கங்கையைச் சடையில் திரிய வைத்தவன்;

மாதேவன் நாமத்தை நாவே, சொல்லு - மகாதேவன் திருநாமத்தை நாக்கே சொல்வாயாக;

வந்திப்பவர்க்கு உண்டு பேரின்ப வாழ்வே - அவனைத் துதிப்பவர்களுக்குப் பேரின்ப வாழ்வு கிட்டும்;


2)

ஆதார(ம்) நீயென்று போற்றும் - தொண்டர்

.. ஆனாத பேரின்ப வானத்தில் ஏற்றும்

போதாரு(ம்) நீள்வேணி ஈசன் - ஆனை

.. போலேறு தானேறு(ம்) மாமங்கை நேசன்

.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு

.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.


"ஆதாரம் நீ" ன்று போற்றும் தொண்டர் ஆனாத பேரின்ப வானத்தில் ஏற்றும் - "நீயே என் பற்றுக்கோடு" என்று வணங்கும் தொண்டர்களை நீங்காத பேரின்ப வானுலகில் (சிவலோகத்தில்) ஏற்றுவான் (/ ஏற்றுகின்ற); (ஆதாரம் - பற்றுக்கோடு); (ஆனுதல் - நீங்குதல்); (பெரியபுராணம் - 12.8.57 - "செஞ்சடையவர் பொற்றாளில் ஆனாத காதல் அன்பர் எறிபத்தர்");

போது ஆரு(ம்) நீள்-வேணி ஈசன் - (கொன்றை முதலிய பல) மலர்களை அணிந்த நீளும் சடையை உடைய ஈசன்; (போது - பூ); (ஆர்தல் - அணிதல்; நிறைதல்; பொருந்துதல்); (வேணி - சடை);

ஆனை போல் ஏறுதான் ஏறு(ம்), மா-மங்கை நேசன் - யானை போல இடபத்தை வாகனமாக (விரும்பி) ஏறுகின்ற, அழகிய உமைக்கு அன்பன்; (ஏறு - இடபம்); (மா - அழகிய); (* எல்லார்க்கும் தலைவனான ஈசன், யானையை வாகனமாகக் கொள்ளாமல், எருதை வாகனமாக மகிழ்ந்தவன்); (ஈசன்னானை - ஈசன் ஆனை; சந்தம் கருதி னகர ஒற்று விரித்தல் விகாரம்);


3)

வம்பார் சரத்தைத் தொடுத்தான் - அந்த

.. வம்பன்றன் ஆகத்தை நோக்காற் கெடுத்தான்

வெம்போரில் ஓர்வாளி தொட்டான் - அன்று

.. மேவார் புரஞ்சாம்பல் ஆமாறு சுட்டான்

.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு

.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.


வம்பு ஆர் சரத்தைத் தொடுத்தான் அந்த வம்பன்-தன் ஆகத்தை நோக்கால் கெடுத்தான் - மணம் மிகுந்த கணையைத் தொடுத்தவனான அந்தக் கலகம் செய்யும் மன்மதனது உடலை நெற்றிக்கண்ணால் நோக்கிச் சாம்பலாக்கியவன்; (வம்பு - வாசனை); (வம்பன் - துஷ்டன்);

வெம்-போரில் ஓர் வாளி தொட்டான் - கொடிய போரில் ஒரு கணையை எய்தவன்; (வாளி - கணை);

அன்று மேவார் புரம் சாம்பல் ஆமாறு சுட்டான் - அன்று, பகைத்த அசுரர்களது முப்புரங்களும் சாம்பலாகும்படி எரித்தவன்; (மேவார் - பகைவர்);


4)

வானஞ்சு மாநஞ்சை ஆர்ந்தான் - நாக(ம்)

.. மார்பேற ஓர்வெள்ளை ஏறேறி ஊர்ந்தான்

ஆனஞ்சின் ஆடல் மகிழ்ந்தான் - மொந்தை

.. ஆர்த்துக் கணஞ்சூழ நட்டம் புரிந்தான்;

.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு

.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.


பதம் பிரித்து:

வான் அஞ்சு மா நஞ்சை ஆர்ந்தான் - நாகம்

.. மார்பு ஏற, ஓர் வெள்ளை ஏறு ஏறி ஊர்ந்தான்;

ஆன்-அஞ்சின் ஆடல் மகிழ்ந்தான் - மொந்தை

.. ஆர்த்துக் கணம் சூழ நட்டம் புரிந்தான்;

.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு

.. .. .. .. வந்திப்பவர்க்கு உண்டு பேரின்ப வாழ்வே.


வான் அஞ்சு மா நஞ்சை ஆர்ந்தான் - தேவர்கள் அஞ்சிய கொடிய விடத்தை உண்டவன்; (ஆர்தல் - உண்தல்);

நாகம் மார்பு ஏ, ஓர் வெள்ளை று ஏறி ஊர்ந்தான் - மார்பில் பாம்பை மாலையாகப் பூண்டு, ஒரு வெள்ளை எருதை வாகனமாக ஏறியவன்;

ன்-அஞ்சின் ஆடல் மகிழ்ந்தான் - பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் விரும்பியவன்; (ஆடல் - ஆடுதல் - அபிஷேகம் பெறுதல்);

மொந்தை ஆர்த்துக் கணம் சூழ நட்டம் புரிந்தான் - மொந்தை முதலிய வாத்தியங்களை வாசித்துப் பூதகணங்கள் சூழத் திருநடம் செய்பவன்; (மொந்தை - ஒருவகைப் பறை); (நட்டம் - கூத்து);


5)

வெற்பொன்றை வில்லாக்க வல்லான் - வெந்த

.. வெண்ணீறு சேர்மார்பன் ஒப்பொன்றும் இல்லான்

நெற்குன்று தோழர்க்க ளித்தான் - அன்பு

.. நீங்காத நெஞ்சத்தில் என்றும்க ளித்தான்;

.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு

.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.


வெற்பு ஒன்றை வில் ஆக்க வல்லான் - மேருமலையை வில்லாக வளைத்தவன்;

வெந்த வெண்ணீறு சேர் மார்பன் - சுட்ட திருநீற்றை மார்பில் பூசியவன்;

ஒப்பு ஒன்றும் இல்லான் - ஒப்பற்றவன்;

நெற்குன்று தோழர்க்கு அளித்தான் - தோழரான சுந்தரருக்கு நெல்மலையை அளித்தவன்; (* சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் குண்டையூரில் நெல்மலை அளித்த வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

அன்பு நீங்காத நெஞ்சத்தில் என்றும் களித்தான் - பக்தி பொங்கும் மனத்தில் மகிழ்ந்து உறைபவன்;


6)

கல்லாலு(ம்) மொத்துண்ட ஈசன் - எந்தை

.. கல்லாலை நாடும் பரன்பாவ நாசன்

அல்லார்ந்த கண்டன் கபாலன் - கங்கை

.. ஆற்றைப் புனைந்தான் அகன்மார்பில் நூலன்;

.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு

.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.


கல்லாலு(ம்) மொத்துண்ட ஈசன் - கல்லாலும் அடியுண்ட ஈசன்; (* சாக்கிய நாயனார் கல்லெறிந்து வழிபாடு செய்ததைச் சுட்டியது); (கல்லாலும் - உம் - எச்சவும்மை; மதுரையில் பாண்டியன் பிரம்பால் மொத்துண்டதையும் குறிப்பால் சுட்டியது);

எந்தை - எம் தந்தை;

கல்லாலை நாடும் பரன் - (சனகாதியர்க்கு உபதேசிக்கக்) கல்லாலமரத்தின்கீழ் விரும்பி வீற்றிருக்கும் பரமன்;

பாவநாசன் - (அடியார்களின்) தீவினையை அழிப்பவன்;

அல் ஆர்ந்த கண்டன் - கரிய கண்டன்; (அல் - இருள்);

கபாலன் - கையில் மண்டையோட்டை ஏந்தியவன்; மண்டையோட்டு மாலை அணிந்தவன்;

கங்கை-ஆற்றைப் புனைந்தான் - சடையில் கங்கையை அணிந்தவன்;

அகன்-மார்பில் நூலன் - விசாலமான மார்பில் பூணூல் அணிந்தவன்;


7)

வெண்டிங்கள் நீர்சூடு தேவன் - மேரு

.. வில்லேந்தி நால்வேத ஆறங்க நாவன்

கண்டத்தில் ஆலங் கரந்தான் - ஓடு

.. கையேந்தி ஏறேறி வந்தூண் இரந்தான்;

.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு

.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.


வெண்-திங்கள் நீர் சூடு தேவன் - வெண்பிறையையும் கங்கையையும் சூடிய தேவன்;

மேரு-வில்ந்தி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்; (ஏந்தி - ஏந்தியவன்);

நால்வேத ஆறங்க நாவன் - நால்வேதத்தையும் ஆறங்கத்தையும் பாடியருளியவன்;

கண்டத்தில் ஆலம் கரந்தான் - ஆலகாலத்தை ஒளித்த நீலகண்டன்;

ஓடு கையேந்தி ஏறு ஏறி வந்து ஊண் இரந்தான் - கையில் கபாலத்தை ஏந்தி, இடபவாகனத்தில் ஏறி வந்து பிச்சை ஏற்பவன்; (ஊண் - பிச்சை);


8)

ஓடிப்பொ ருப்பன்றெ டுத்தான் - கத்த

.. ஊன்றித் தொழச்செய்து நாமங் கொடுத்தான்

பாடிப் பணிந்தார்க்கு நல்லான் - மீண்டு

.. பார்மீது வாராமை தந்தாள வல்லான்;

.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு

.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.


ஓடிப் பொருப்பு அன்று எடுத்தான் கத்த ஊன்றித் தொழச்செய்து நாமம் கொடுத்தான் - கோபத்தோடு ஓடிப்போய்க் கயிலைமலையை பெயர்த்த தசமுகன் கத்தி அழும்படி திருப்பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கி, அவன் மனம் திருந்தி தன்னைத் துதிக்கச்செய்து, அவனுக்கு இராவணன் என்ற பெயரைக் கொடுத்தவன்; (பொருப்பு - மலை);

பாடிப் பணிந்தார்க்கு நல்லான் - பாடி வணங்கும் பக்தர்களுக்கு நன்மை செய்பவன்;

மீண்டு பார்மீது வாராமை தந்து ஆள வல்லான் - அத்தகைய அடியார்கள் உலகில் திரும்பவும் பிறவி அடையாதபடி அவர்களுக்குப் பேரின்பம் தந்து அவர்களை ஆட்கொள்பவன்;


9)

மாலான மாலோடு வேதன் - தேடி

.. வாயார வந்தித்த தீவண்ண நாதன்

வேலாயு தன்போற்று பாதன் - கங்கை

.. வெள்ளஞ் சடைப்பாய்ந்த தோடார்ந்த காதன்;

.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு

.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.


மால்- மாலோடு வேதன் தேடி வாயார வந்தித்த தீவண்ண நாதன் - மதிமயக்கம் உடையவர்களான திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிக் காணாமல் போற்றி வணங்கிய ஜோதி-வடிவினனான தலைவன்; (மால் - அறியாமை; ஆணவம்); (வேதன் - பிரமன்);

வேலாயுதன் போற்று பாதன் - வேலை ஏந்தும் முருகனால் வழிபடப்படும் திருவடியினன்;

கங்கை வெள்ளம் சடைப் பாய்ந்த, தோடு ஆர்ந்த காதன் - கங்கையைச் சடையில் தரித்த, ஒரு காதில் தோடு அணிந்தவன்;


10)

பொய்யர்க்க ருள்செய்ய மாட்டான் - அங்கி

.. போல்வண்ணன் அஞ்சொல் மடப்பாவை வேட்டான்

மெய்யான தேவன் புராணன் - கோல

.. வெண்ணீறு பூசும் பிரான்அண்ட வாணன்;

.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு

.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.


பொய்யர்க்கு அருள்செய்ய மாட்டான் - பொய்யர்களுக்கு அருள்புரியாதவன்;

அங்கி போல் வண்ணன் - தீப் போன்ற செம்மேனியன்; (அங்கி - நெருப்பு);

அஞ்சொல் மடப்பாவை வேட்டான் - இன்மொழி பேசும் அழகிய உமாதேவிக்குக் கணவன்; (அம் - அழகு); (வேட்டல் - மணம்புரிதல்);

மெய்யான தேவன் - மெய்ப்பொருள் ஆனவன், தேவாதிதேவன்;

புராணன் - மிகத் தொன்மையானவன்;

கோல வெண்ணீறு பூசும் பிரான் - அழகிய வெண்ணீற்றைப் பூசும் தலைவன்;

அண்டவாணன் - எங்கும் இருப்பவன்; (அண்டவாணன் - அண்டங்கள் தோறும் ஒன்றாயும் உடனாயுமிருந்து வாழ்பவன்);


11)

பேர்நூறு பத்தான பெம்மான் - சூழ்ந்து

.. பேய்பாட ஆடும் பிரான்செய்யன் எம்மான்

பார்போற்ற ஈகின்ற கையன் - சீறு

.. பாம்பார் புலித்தோலன் என்றென்று(ம்) மெய்யன்;

.. .. .. மாதேவன் நாமத்தை நாவே - சொல்லு

.. .. .. .. வந்திப்ப வர்க்குண்டு பேரின்ப வாழ்வே.


பேர் நூறு-பத்து ஆன பெம்மான் - ஆயிரம் திருநாமங்கள் உடைய பெருமான்;

சூழ்ந்து பேய் பாட ஆடும் பிரான் - பேய்கள் சூழ்ந்து நின்று பாடக் கூத்து ஆடும் தலைவன்;

செய்யன் - செம்மேனியன்; (செய் - சிவப்பு);

எம்மான் - எம் தலைவன்;

பார் போற்ற ஈகின்ற கையன் - உலகு போற்ற வரங்கள் அள்ளி வழங்கும் திருக்கரம் உடையவன்;

சீறு பாம்பு ஆர் புலித்தோலன் - புலித்தோல் ஆடைமேல் சீறும் பாம்பைக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

என்றென்றும் மெய்யன் - என்றும் அழியாத மெய்ப்பொருள்;

மாதேவன் நாமத்தை நாவே சொல்லு - மகாதேவன் திருநாமத்தை நாக்கே சொல்வாயாக;

வந்திப்பவர்க்கு உண்டு பேரின்ப வாழ்வே - அவனைத் துதிப்பவர்களுக்குப் பேரின்ப வாழ்வு கிட்டும்;


பிற்குறிப்பு: மார்கபந்து ஸ்தோத்ரம்:

ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ, ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴


பா²லாவநம்ரத்கிரீடம்ʼ பா²லநேத்ரார்சிஷா த³க்³த⁴பஞ்சேஷுகீடம் .

ஶூலாஹதாராதிகூடம்ʼ, ஶுத்³த⁴மர்தே⁴ந்து³சூட³ம்ʼ ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம்..

இப்பாடலின் சந்த-அமைப்பு - (U - குரு; I - லகு)

UUI UUI UU - UI UUI UUI UUI UU

UUI UUI UU - UI UUI UUI UUI UU


வி. சுப்பிரமணியன்

----------- --------------


N.055 - திருஞான சம்பந்தர் துதி - கழுமல நகரிறை

2019-05-09

N.055 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2019

----------------


1) --- ("கந்த பத்யம்" - அமைப்பில்) ---

கழுமல நகரிறை உமைவர

அழுதவ ரிசையார் தமிழினை அருளிய நாவர்

வழுதியை நீறணி வித்தார்

பழுதில் புகழார் அடியிணை பணிமட நெஞ்சே.


கழுமலநகர் இறை உமை வர அழுதவர் - சீகாழிச் சிவபெருமானும் உமாதேவியும் வரும்படி அழுதவர்;

இசை ஆர் தமிழினை அருளிய நாவர் - இசை பொருந்திய தமிழ்ப்பாமாலைகளைப் பாடி அருளியவர்;

வழுதியை நீறு அணிவித்தார் - பாண்டிய மன்னனைத் திருநீறு பூசிச் சைவன் ஆக்கியவர்;

பழுது-இல் புகழார் - குற்றமற்ற புகழை உடையவர்;

அடியிணை பணி மடநெஞ்சே - அந்தத் திருஞான சம்பந்தரது இருதிருவடிகளை வழிபடு நெஞ்சமே.


* "கந்த பத்யம்" - இந்தப் பாடலின் யாப்புக்குறிப்பை "மதிசூடி துதிபாடி - தொகுதி 1" நூலின் பிற்சேர்க்கைப் பகுதியில் காண்க.


2) --- (சந்தக் கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா" - "sragviNI" ஸ்ரக்விணீ) ---

காலனார் வீடவே காலையோச் செம்பிரான்

ஏலவார் கூந்தலாய் இங்கிவற் கூட்டெனப்

பாலையுண் பாலனார் பைந்தமிழ்ப் பாட்டறாச்

சீலனார் பொற்கழல் சிந்தைசெய் நெஞ்சமே.


காலனார் வீடவே காலை ஓச்சு எம்பிரான் - காலனே மாளும்படி காலை உயர்த்திய எம்பெருமான்; (வீடுதல் - சாதல்); (ஓச்சுதல் - உயர்த்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.103.9 - "வார்கழல் ஓச்சிக் காலனைக் கடந்த பெம்மான்");

"ஏல-வார்-கூந்தலாய்! இங்கு இவற்கு ஊட்டு" எனப் - "மணம் கமழும் நீண்ட கூந்தலை உடையவளே, இங்கு இவனுக்கு ஊட்டுவாயாக" என்று சொல்ல;

பாலை உண் பாலனார் - (அப்படி உமாதேவி ஊட்டிய) திருமுலைப்பாலை உண்ட காழிப்பிள்ளையார் சம்பந்தர்;

பைந்தமிழ்ப் பாட்டு அறாச் சீலனார் - அழகிய தமிழ்ப்பாமாலைகளை எப்பொழுதும் பாடியருளியவர்;

பொற்கழல் சிந்தைசெய் நெஞ்சமே - அந்தத் திருஞான சம்பந்தரது பொன்னடியை, நெஞ்சே நீ எண்ணுவாயாக;


3) --- (சந்தக் கலிவிருத்தம் - "தானன தானன தானன தானா" - "dOdhakam" தோதகம்) ---

பாரின ருய்ந்திட நற்றொடை பாடி

நீரினி லேட்டினை நீந்திட வைத்தார்

நாரிசு ரந்தரு ளின்னமு துண்டார்

ஏரிய லுங்கழ லேத்திடு வோமே.

பதம் பிரித்து:

பாரினர் உய்ந்திட நற்றொடை பாடி

நீரினில் ஏட்டினை நீந்திட வைத்தார்;

நாரி சுரந்தருள் இன்னமுது உண்டார்

ஏர் இயலும் கழல் ஏத்திடுவோமே.


பாரினர் உய்ந்திட நல்-தொடை பாடி நீரினில் ஏட்டினை நீந்திட வைத்தார் - உலகோர் உய்யுமாறு நல்ல தமிழ்ப்-பாமாலை பாடி வைகையாற்றில் தேவாரப்-பதிக ஏட்டினை மேல்நோக்கி நீந்தச்செய்தவர்; (சம்பந்தர் தேவாரம் - 3.54.11 - "தெற்றென்று தெய்வம் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில்");

நாரி சுரந்தருள் இன்னமுது உண்டார் - உமை சுரந்தளித்த திருமுலைப்பாலை உண்டவர்;

ஏர் இயலும் கழல் ஏத்திடுவோமே - அந்தத் திருஞான சம்பந்தரது அழகு பொருந்திய திருவடியைப் போற்றுவோம்; (ஏர் - அழகு); (இயல்தல் - பொருந்துதல்);


4) --- (சந்தக் கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா" - "sragviNI" ஸ்ரக்விணீ) ---

மானையும் தாங்கினான் பங்கினாள் பாலினைப்

போனகம் செய்தவர் பூதியாற் பாண்டியர்

கோனுடல் வெப்பமண் கூட்டறத் தீர்த்தவர்

ஞானசம் பந்தனார் நற்கழல் வாழ்கவே.


மானையும் தாங்கினான் பங்கினாள் பாலினைப் போனகம் செய்தவர் - (மழு, சூலம், உடுக்கை முதலியவற்றோடு) மானையும் கையில் ஏந்திய சிவபெருமான் திருமேனியில் ஒரு பங்கு ஆன உமை தந்த திருமுலைப்பாலை உண்டவர்; (போனகம் - உணவு);

பூதியால் பாண்டியர்-கோன் உடல் வெப்பு, அமண் கூட்டு அறத் தீர்த்தவர் - திருநீற்றினால் பாண்டிய மன்னது உடலில் இருந்த ஜுரமும், சமணர் கூட்டமும் நீங்குமாறு செய்தவர்; (கூட்டு - உறவு; திரள்); (சம்பந்தர் தேவாரம் - 2.66.11 - "தென்னன் உடலுற்ற தீப்பிணி ஆயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும்");

ஞானசம்பந்தனார் நற்கழல் வாழ்கவே - அந்தத் திருஞான சம்பந்தரது நன்மை பொருந்திய திருவடிகள் வாழ்க;


5) --- (கலிவிருத்தம் - "மாங்கனி மாங்கனி மாங்கனி மா" - வாய்பாடு) ---

அன்றாண்பனை குலையீன்றிட அரனாரடி ஏத்திக்

குன்றாத்தமிழ் உரைசெய்தவர் குடநீறது மங்கை

என்றாகிட அருள்செய்தவர் இருளார்நெறி எல்லாம்

வென்றாரவர் தமிழாகரர் விரையார்கழல் போற்றி.


அன்று ஆண்பனை குலை ஈன்றிட அரனார் அடி ஏத்திக் குன்றாத் தமிழ் உரைசெய்தவர் - முன்பு (திருவோத்தூரில்) ஆண்பனைமரங்கள் எல்லாம் (பெண்ணாகி) உடனே குலை ஈனும்படி சிவபெருமானது திருவடியைப் போற்றி என்றும் திருவருள் குன்றாத தமிழ்ப்பாமாலை பாடியவர்;

(சம்பந்தர் தேவாரம் - 1.54.11 - "குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்"); (சம்பந்தர் தேவாரம் - 1.18.11 - "புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன் குன்றாத்தமிழ் சொல்ல")

குடநீறுஅது மங்கை என்று ஆகிட அருள்செய்தவர் - (மயிலாப்பூரில்) குடத்தில் இருந்த சாம்பல் பூம்பாவை ஆகும்படி அருளியவர்;

இருள் ஆர் நெறி-எல்லாம் வென்றார் அவர் - இருள் நிறைந்த புறச்சமயங்களையெல்லாம் வென்றவர்;

தமிழ் ஆகரர் - தமிமிழின் உறைவிடமாகத் திகழ்ந்தவர்; (சம்பந்தர் தேவாரம் - 3.117.11 - மாலைமாற்றுத் திருப்பதிகம் - ".... தமிழாகரனே");

விரை ஆர் கழல் போற்றி - அந்தத் திருஞான சம்பந்தரது வாசமலர்ப் பாதங்களை வணங்குகின்றேன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.469 - வான்மியூர் - நான்மறைப் பாடலார்

2019-05-19

P.469 - வான்மியூர்

------------------

(சந்தக் கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா)

(வடமொழி யாப்பில் - ஸ்ரக்விணீ (sragviNI - स्रग्विणी ) என்ற பெயருடைய சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்")

(அச்யுதாஷ்டகம் - "அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்")


1)

நான்மறைப் பாடலார் நாவினான் நாதியன்

கூன்பிறைச் சென்னியான் கொம்பனாள் கூறமர்

கோன்பெருங் கூட்டமாய்த் தேவரெல் லாந்தொழ

வான்புரம் சுட்டவன் வான்மியூர் ஈசனே.


நான்மறைப் பாடல் ஆர் நாவினான் - நால்வேதங்களைப் பாடியருளியவன்;

நாதியன் - காப்பவன்; தலைவன்; (நாதி - உறவினன்; காப்போன்); (நாதியன் - தலைவன்); (சுந்தரர் தேவாரம் - 7.97.1 - "எவ்வுயிர்க்கும் நாதியன் நம்பெருமான்");

கூன்-பிறைச் சென்னியான் - வளைந்த திங்களைத் தலையில் சூடியவன்; (கூன் - வளைவு);

கொம்பு அனாள் கூறு அமர் கோன் - பூங்கொம்பு போன்ற உமாதேவியை ஒரு பாகமாக விரும்பிய தலைவன்; (அனாள் - அன்னாள் - போன்றவள்); (அமர்தல் - விரும்புதல்);

பெருங்-கூட்டமாய்த் தேவரெல்லாம் தொழ, வான்-புரம் சுட்டவன் - பெரிய கூட்டமாக எல்லாத் தேவர்களும் வந்து வணங்க, இரங்கி, வானில் பறந்து திரிந்த முப்புரங்களை எரித்தவன்;

வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறையும் பெருமான்;


2)

வெங்கனற் கண்ணினால் வேள்படப் பார்த்தவன்

கொங்கலர்க் கொன்றையைக் குஞ்சிமேற் சூடினான்

சங்கரன் தாழ்சடைத் தத்துவன் வெற்புமன்

மங்கையோர் பங்கினன் வான்மியூர் ஈசனே.


வெங்கனற் கண்ணினால் வேள் படப் பார்த்தவன் - சுட்டெரிக்கும் தீயை உமிழும் நெற்றிக்கண்ணால் காமன் அழியுமாறு நோக்கியவன்; (கனல் - தீ); (சம்பந்தர் தேவாரம் - 2.85.8 - "வேள்பட விழிசெய்து அன்று");

கொங்கு-அலர்க்-கொன்றையைக் குஞ்சிமேல் சூடினான் - தேன் நிறைந்த கொன்றைமலரைத் தலைமேல் சூடியவன்; (கொங்கு - வாசனை; தேன்); (அலர் - பூ); (குஞ்சி - தலை);

சங்கரன் - சுகத்தைச் செய்பவன்;

தாழ்சடைத் தத்துவன் - தாழும் சடையை உடைய மெய்ப்பொருள்;

வெற்பு-மன் மங்கை ஓர் பங்கினன் - மலையரசன் மகளை ஒரு பங்கில் உடையவன்; (மன் - அரசன்);

வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறையும் பெருமான்;


3)

வாசமார் பூவினால் வார்கழல் போற்றிடும்

நேசருக் கன்பினான் நெற்றியிற் கண்ணினான்

மாசிலாச் சீரினான் மாமதிக் கண்ணியான்

மாசுணக் கச்சினான் வான்மியூர் ஈசனே.


வாசம் ஆர் பூவினால் வார்-கழல் போற்றிடும் நேசருக்கு அன்பினான் - மணம் மிக்க பூக்களால் நீள்-கழலைப் போற்றும் அன்பர்களுக்கு அன்பு உடையவன்;

நெற்றியில் கண்ணினான் - நெற்றிக்கண்ணன்;

மாசு-இலாச் சீரினான் - குற்றமற்ற தூய புகழ் உடையவன்;

மா-மதிக் கண்ணியான் - அழகிய திங்களைக் கண்ணிமாலை போலச் சூடியவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலை);

மாசுணக் கச்சினான் - பாம்பை அரைக்கச்சாகக் கட்டியவன்; (மாசுணம் - பாம்பு);

வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறையும் பெருமான்;


4)

அங்கமோர் ஆறுடன் வேதமும் பாடினான்

மங்கைமார் தாமிடும் பிச்சைகொள் மாண்பினான்

சங்கமார் முன்கரத் தையலோர் பங்கினன்

வங்கமார் வேலைசூழ் வான்மியூர் ஈசனே.


அங்கம் ஓர் ஆறுடன் வேதமும் பாடினான் - நால்வேதங்களையும் ஆறங்கங்களையும் பாடியருளியவன்;

மங்கைமார் தாம் இடும் பிச்சைகொள் மாண்பினான் - பெண்கள் இடும் பிச்சையை ஏற்கும் பெருமையை உடையவன்;

சங்கம் ஆர் முன்கரத் தையல் ஓர் பங்கினன் - வளையலை அணிந்த முன்கையை உடைய உமையை ஒரு பங்காக உடையவன்; (சங்கம் - கைவளை);

வங்கம் ஆர் வேலை சூழ் வான்மியூர் ஈசனே - அலை (/மரக்கலங்கள்) நிறைந்த கடல் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற ஈசன்; (வங்கம் - அலை; மரக்கலம்); (ஆர்தல் - நிறைதல்; ஆர்த்தல் - ஒலித்தல்);


5)

வெஞ்சினச் சேவினான் விண்ணினார் வாழவே

நஞ்சினைத் துற்றவன் செஞ்சடைச் சேவகன்

அஞ்செழுத் தோதிநின் றன்புசெய் தார்க்கெலாம்

வஞ்சமில் கையினான் வான்மியூர் ஈசனே.


வெஞ்சினச் சேவினான் - கொடிய சினத்தையுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவன்;

விண்ணினார் வாழவே நஞ்சினைத் துற்றவன் - தேவர்கள் உய்யும்படி ஆலகாலத்தை உண்டவன்; (அப்பர் தேவாரம் - 4.17.5 - "துற்றவர் வெண்டலையில்"); (திருத்தொண்டர் அந்தாதி - 11.33.25 - "விடம் அடையார் இட ஒள்ளமுதாத் துற்றவன்");

செஞ்சடைச் சேவகன் - சிவந்த சடையையுடைய வீரன்; (சேவகன் - வீரன்);

அஞ்செழுத்து ஓதிநின்று அன்புசெய்தார்க்கெலாம் வஞ்சம்-இல் கையினான் - நமச்சிவாய மந்திரத்தை ஓதி வழிபடும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்குபவன்;

வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறைகின்ற ஈசன்;


6)

ஆற்றினைச் சூடினான் ஆரழல் மேனிமேல்

நீற்றினைப் பூசினான் நித்தலும் தாள்மலர்

போற்றினார் துன்பெலாம் போக்கிடும் புண்ணியன்

மாற்றிலாப் பொன்னவன் வான்மியூர் ஈசனே.


ஆற்றினைச் சூடினான் - கங்காதரன்;

ஆரழல் மேனிமேல் நீற்றினைப் பூசினான் - அரிய தீப் போன்ற செம்மேனியின்மேல் திருநீற்றைப் பூசியவன்;

நித்தலும் தாள்மலர் போற்றினார் துன்பெலாம் போக்கிடும் புண்ணியன் - தினமும் திருவடித்தாமரையை வணங்கியவர்களது துன்பங்களையெல்லாம் தீர்க்கும் புண்ணியன்; (நித்தலும் - தினமும்; எந்நாளும்); (துன்பு - துன்பம்);

மாற்று-இலாப் பொன்-அவன் - தூய செம்பொன் போன்றவன்; (மாற்று இலா - உரைத்து மாற்றுக் காணுதற்கரிய, மிக உயர்ந்த); (அப்பர் தேவாரம் - 5.60.5 - "மாற்றிலாச் செம்பொன் ஆவர் மாற்பேறரே");

வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறைகின்ற ஈசன்;


7)

ஆழ்கடல் வல்விடம் தான்மருந் தாக்கினான்

தாழ்பவர்க் கன்பனாய்த் தாயினும் காப்பவன்

வீழ்பெருங் கங்கையும் வெண்மதித் துண்டமும்

வாழ்சடைப் பெற்றியான் வான்மியூர் ஈசனே.


ஆழ்கடல் வல்விடம் தான் மருந்து ஆக்கினான் - ஆலகாலத்தை அமுது ஆக்கியவன் அவன்; (தான் - தேற்றச்சொல்; படர்க்கை ஒருமைப் பெயர்);

தாழ்பவர்க்கு அன்பனாய்த் தாயினும் காப்பவன் - வணங்கும் பக்தர்களுக்கு அன்புடையவன் ஆகி அவர்களைத் தாயினும் மேலாகப் பாதுகாப்பவன்;

வீழ் பெருங்-கங்கையும் வெண்மதித்-துண்டமும் வாழ் சடைப் பெற்றியான் - வானிலிருந்து வீழ்ந்த பெரிய கங்கையாறும் வெண்பிறையும் வாழ்கின்ற சடையை உடைய பெருமையை உடையவன்; (பெற்றி - பெருமை);

வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறைகின்ற ஈசன்;


8)

நாமமோ தாதுபோய் நல்லவெற் பேந்தினான்

மாமலைத் தோளெலாம் வாடவே ஊன்றினான்

தாமரைத் தாளினாற் கூற்றினைச் சாய்த்தவன்

வாமமோர் மாதினான் வான்மியூர் ஈசனே.


நாமம் ஓதாது போய் நல்ல-வெற்பு ஏந்தினான் மா-மலைத்-தோளெலாம் வாடவே ஊன்றினான் - திருநாமத்தையும் திருப்புகழையும் பாடி வணங்காது, போய் நல்ல கயிலைமலையைப் பெயர்த்துத் தூக்கிய இராவணனது பெரிய மலை போன்ற புஜங்களெல்லாம் நசுங்கி அழியும்படி திருப்பாதவிரலை ஊன்றியவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.120.8 - "விடைத்த வல்லரக்கன் நல்வெற்பினை எடுத்தலும்"); (அப்பர் தேவாரம் - 5.42.10 - "முடி பத்திற வாட ஊன்றி மலரடி வாங்கிய");

தாமரைத்-தாளினால் கூற்றினைச் சாய்த்தவன் - தாமரைப்-பாதத்தால் காலனை உதைத்து அழித்தவன்;

வாமம் ஓர் மாதினான் - உமாதேவியை இடப்பாகமாக உடையவன்; (வாமம் - இடப்பக்கம்);

வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறைகின்ற ஈசன்;


9)

பூமகன் மாலிவர் போற்றுமா றோங்கினான்

கோமகன் குஞ்சியிற் கூவிளம் சூடினான்

தூமனத் தொண்டருக் கோரரண் சுந்தரன்

வாமமோர் மாதினான் வான்மியூர் ஈசனே.


பூமகன் மால் இவர் போற்றுமாறு ஓங்கினான் - தாமரைப்பூவில் இருக்கும் பிரமனும் திருமாலும் போற்றும்படி ஜோதியாகி நீண்டவன்; (பூமகன் - பிரமன்);

கோமகன் - அரசன்;

குஞ்சியில் கூவிளம் சூடினான் - தலையில் வில்வத்தைச் சூடியவன்; (கூவிளம் - வில்வம்);

தூ-மனத்-தொண்டருக்கு ஓர் அரண் - தூய-மனம் உடைய அடியார்களுக்கு ஒப்பற்ற பாதுகாவல் ஆனவன்;

சுந்தரன் - அழகன்;

வாமம் ஓர் மாதினான் - உமாதேவியை இடப்பாகமாக உடையவன்; (வாமம் - இடப்பக்கம்);

வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறைகின்ற ஈசன்;


10)

பொய்த்தவம் செய்துழல் புன்மையர் வன்கணர்

தத்துவம் தேர்ந்திலார் எத்தினில் வீழ்ந்திடேல்

பத்தருக் கின்னலம் பல்குமா றீபவன்

மைத்தநஞ் சுண்டவன் வான்மியூர் ஈசனே.


பொய்த்தவம் செய்து உழல் புன்மையர், வன்கணர் - பொய்த்தவம் செய்து உழல்கின்ற கீழோர்கள், கொடியவர்கள்; (வன்கணர் - வன்கண்ணர் - கொடுமையுள்ளவர்);

தத்துவம் தேர்ந்திலார் எத்தினில் வீழ்ந்திடேல் - மெய்ப்பொருளை உணராதவர்கள் இவர்களது வஞ்சனையில் மயங்கி விழவேண்டா; (தேர்தல் - ஆராய்தல்; அறிதல்); (எத்து - வஞ்சகம்);

பத்தருக்கு இன்-நலம் பல்குமாறு ஈபவன் - பக்தர்களுக்கு இனிய நலம் பெருகும்படி அருள்பவன்; (பல்குதல் - மிகுதல்);

மைத்த நஞ்சு உண்டவன் - கரிய விடத்தை உண்டருளியவன்; (மை - கருநிறம்);

வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறைகின்ற ஈசன்;


11)

முன்பணிந் தேத்தினார்க் கின்பமே நல்குவான்

என்பணிந் தாடுவான் ஏறதே றும்பரன்

முன்புமாய்ப் பின்புமாம் முக்கணன் மூப்பிலான்

வன்புலித் தோலினான் வான்மியூர் ஈசனே.


முன் பணிந்து ஏத்தினார்க்கு இன்பமே நல்குவான் - வணங்கித் துதிக்கும் அன்பர்களுக்கு இன்பத்தையே தருபவன்;

என்பு அணிந்து ஆடுவான் - எலும்பை அணிந்து கூத்து ஆடுபவன்; (என்பு - எலும்பு);

ஏறுஅது ஏறும் பரன் - இடபவாகனம் உடைய பரமன்;

முன்புமாய்ப் பின்பும் ஆம் முக்கணன், மூப்பு இலான் - காலத்தைக் கடந்தவன், நெற்றிக்கண்ணன், என்றும் இளமையோடு இருப்பவன்;

வன்-புலித் தோலினான் - கொடிய வலிய புலியின் தோலை ஆடையாகக் கட்டியவன்;

வான்மியூர் ஈசனே - திருவான்மியூரில் உறைகின்ற ஈசன்;


பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு:

சந்தக் கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா" என்ற சந்தம்.

வடமொழி யாப்பில் "ஸ்ரக்விணீ" (sragviNI - स्रग्विणी ) என்ற பெயரில் அழைக்கப்பெறும் சந்தம்; அடிதோறும் "குரு-லகு-குரு" என்ற அமைப்பு நான்கு முறை வரும்.

சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்";

சம்பந்தர் தேவாரம் - 3.33.3 - தாமலார் போலவே தக்கனார் வேள்வியை";


வி. சுப்பிரமணியன்

----------- --------------