Thursday, May 28, 2026

P.497 - வழுவூர் - இளங்கிளை நாயகி

2020-02-12

P.497 - வழுவூர்

--------------

(சந்த வஞ்சிவிருத்தம் - தானன தானன தனதான - சந்தம்;

விளம் விளம் புளிமாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.1 - "இன்குரல் இசைகெழும் யாழ்முரலத்")


முற்குறிப்பு: இந்தப் பதிகத்தில் அடியீற்றுச்சீர் "தனதான" என்ற சந்தம். (மேலே சுட்டிய சம்பந்தர் தேவாரத்தில் அடியீற்றுச்சீர் "தானதனா" என்ற சந்தம்).

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

இளங்கிளை நாயகி இடமானான்

களங்கறை திகழிறை கழல்பேணி

உளங்குளிர் அடியவர் உறுமூராம்

வளங்கிளர் குளமணி வழுவூரே.


இளங்கிளை நாயகி இடம் ஆனான் - இளங்கிளை நாயகி என்ற திருநாமத்தை உடைய உமையை இடப்பாகமாக உடையவன்; (* இளங்கிளை நாயகி - இத்தலத்து இறைவி திருநாமம்);

களம் கறை திகழ் இறை கழல் பேணி உளம் குளிர் அடியவர் உறும் ஊர் ஆம் - கண்டத்தில் கறை திகழும் இறைவனது திருவடியைப் போற்றி உள்ளம் மகிழும் பக்தர்கள் அடையும் ஊர் ஆவது; (களம் - கழுத்து); (உறுதல் - அடைதல்);

வளம் கிளர் குளம் அணி வழுவூரே - வளமும் அழகும் மிகுந்த குளம் திகழும் வழுவூர்; (கிளர்தல் - மிகுதல்; விளங்குதல்);


2)

மானையும் ஏந்திய மணிகண்டன்

தேனலர் சூடிய சிவனெம்மான்

ஆனையை உரிசெய்த அரனூராம்

வானணை கோபுர வழுவூரே.


மானையும் ஏந்திய மணிகண்டன் - (மழு, சூலம், உடுக்கை முதலியவற்றோடு) மானையும் கையில் ஏந்திய நீலகண்டன்; (மானையும் - உம் - எச்சவும்மை);

தேன்-அலர் சூடிய சிவன் எம்மான் - தேன்மலர்களைச் சூடிய சிவன், எம் தலைவன்;

ஆனையை உரிசெய்த அரன் ஊர் ஆம் - யானையைத் தோலுரித்த ஹரன் உறையும் ஊர் ஆவது;

வான் அணை கோபுர வழுவூரே - வானத்தைச் சென்றடையுமாறு உயர்ந்த (/ மேகம் அடைகின்ற உயர்ந்த) கோபுரம் திகழும் வழுவூர்; (வான் - ஆகாயம்; மேகம்);


3)

உணவிடும் எனமிக உழல்தேவன்

கணைதொடு மதனுடல் பொடிசெய்தான்

பண(ம்)மதி சூடிய பரனூராம்

மண(ம்)மலி பொழிலணி வழுவூரே.


"உணவு இடும்" என மிக உழல் தேவன் - (கையில் மண்டையோட்டை ஏந்தி) "உணவு இடுங்கள்" என்று பிச்சைக்குத் திரியும் தேவன்;

கணை தொடு மதன் உடல் பொடிசெய்தான் - மலர்க்கணையை ஏவிய மன்மதனது உடலைச் சாம்பலாக்கியவன்; (மதன் - காமன்);

பணம் மதி சூடிய பரன் ஊர் ஆம் - நாகத்தையும் சந்திரனையும் சூடிய பரமன் உறையும் ஊர் ஆவது; (பணம் - பாம்பின் படம்; நாகம்);

மண(ம்)மலி பொழில் அணி வழுவூரே - மணம் கமழும் சோலை திகழும் வழுவூர்;


4)

எரியன நிறமணி எழில்மேனிப்

பெரியவன் இணையிலி பிணியில்லான்

கரியதன் அதளுரி கரனூராம்

வரியளி அறைபொழில் வழுவூரே.


எரி அன நிறம் அணி எழில் மேனிப் பெரியவன் - தீப் போன்ற நிறம் திகழும் அழகிய திருமேனியை உடைய பெரியவன்; (எரி - நெருப்பு); (அன - அன்ன - போன்ற);

இணையிலி - ஒப்பற்றவன்;

பிணி இல்லான் - பந்தங்களும் நோய்களும் இல்லாதவன்;

கரியதன் அதள் உரிரன் ஊர் ஆம் - யானையின் தோலை உரித்த கையினன் உறையும் தலம் ஆவது; (கரி - யானை); (அதள் - தோல்); (சம்பந்தர் தேவாரம் - 1.20.4 - "பெருவலியினன் நலமலிதரு கரன்");

வரி-அளி அறை பொழில் வழுவூரே - வரிவண்டுகள் ஒலிக்கின்ற சோலை திகழும் வழுவூர்; (அளி - வண்டு); (அறைதல் - ஒலித்தல்);


5)

புயலன மணியது புனைகண்டன்

அயிலுறு வேலினன் அடையாதார்

எயிலெரி சிலைவளை இறையூராம்

வயலிடைக் கயலுகள் வழுவூரே.


புயல் அமணியது புனை-கண்டன் - மேகம் போன்ற கரிய மணியைக் கண்டத்தில் அணிந்தவன்; (புயல் - மேகம்); (அன - அன்ன - போன்ற);(மணியது - மணி; அது - பகுதிப்பொருள்விகுதி); (புனைதல் - அணிதல்);

அயில் உறு வேலினன் - கூர்மை மிக்க சூலத்தை ஏந்தியவன்; (அயில் - கூர்மை);

அடையாதார் எயில் எரி சிலை வளை இறை ஊர் ஆம் - பகைவர்களது முப்புரங்களை எரித்த வில்லை வளைத்த இறைவன் உறையும் தலம் ஆவது; (அடையாதார் - பகைவர்); (எயில் - கோட்டை); (சிலை - மலை; வில்);

வயலிடைக் கயல் உகள் வழுவூரே - வயலில் கயல்மீன்கள் பாய்கின்ற வழுவூர்; (உகளுதல் - தாவுதல்; ஓடித்திரிதல்);


6)

வெண்மழு வாளினன் விடையேறி

உண்மையில் உள்ளவன் ஒளிர்திங்கள்

அண்மையில் அரவணி அரனூராம்

வண்வயல் சூழ்தரு வழுவூரே.


வெண்மழு வாளினன் - ஒளிவீசும் மழுவை ஏந்தியவன்;

விடையேறி - இடபவாகனன்;

உண்மையில் உள்ளவன் - என்றும் இருப்பவன்; மெய்ப்பொருள்;

ஒளிர்-திங்கள் அண்மையில் அரவு அணி அரன் ஊர் ஆம் - ஒளிர்கின்ற சந்திரனுக்குப் பக்கத்தில் பாம்பை அணிந்த ஹரன் உறையும் தலம் ஆவது; (அண்மை - சமீபம்);

வண்வயல் சூழ்தரு வழுவூரே - வளம் மிக்க வயல் சூழ்ந்த வழுவூர்; (வண்மை - வளம்);


7)

மழவிடை ஊர்தியன் மணிநீரை

அழலன சடையிடை அடையண்ணல்

அழகிய மிடறுடை அரனூராம்

மழைநுழை பொழிலணி வழுவூரே.


மழவிடை ஊர்தியன் - இளைய எருதினை வாகனமாக உடையவன்;

மணிநீரை அழல் அன சடையிடை அடை அண்ணல் - தெளிந்த கங்கையாற்றைத் தீப் போன்ற செஞ்சடையில் அடைத்த பெருமான்; (மணிநீர் - பளிங்கு போலத் தெளிந்த நீர்); (அழல் - தீ);

அழகிய மிடறுடை அரன் ஊர் ஆம் - அழகிய நீலகண்டத்தை உடைய ஹரன் உறையும் தலம் ஆவது; (மிடறு - கண்டம்);

மழை நுழை பொழில் அணி வழுவூரே - மேகம் நுழைகின்ற சோலை சூழ்ந்த வழுவூர்; (மழை - மேகம்);


8)

கண்டிகழ் நெற்றியன் கயிலாயம்

பண்டிகழ் தசமுகன் படவூன்றிப்

பண்டிகழ் இசைமகிழ் பரனூராம்

வண்டறை பொழிலணி வழுவூரே.


கண் திகழ் நெற்றியன் கயிலாயம் - நெற்றிக்கண்ணனது கயிலைமலையை; (கண் + திகழ் = கண்டிகழ்);

பண்டு இகழ் தசமுகன் பட ஊன்றிப் - முன்பு இகழ்ந்து பேசிப் பெயர்த்து எறிய முயன்ற பத்துத்தலை இராவணனை அவன் மிகவும் வருந்தும்படி ஒரு விரலை ஊன்றி நசுக்கி; (பண்டு - பண்டை - முன்னாள்); (தசமுகற் பட ஊன்றிப் - தசமுகனைப் பட ஊன்றி; இரண்டாம்வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் ஈற்று ன் ஒற்று ற் என்று திரியும்);

பண் திகழ் இசை மகிழ் பரன் ஊர் ஆம் - (பின் இராவணன் பாடிய) பண் பொருந்திய இனிய கீதத்தை விரும்பிக் கேட்ட பரமன் உறையும் தலம் ஆவது; (பண் + திகழ் = பண்டிகழ்);

வண்டு அறை பொழில் அணி வழுவூரே - வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த வழுவூர்;


9)

பதியென அயனரி பகர்நாள்தாம்

துதிசெய ஓங்கிய சுடர்வண்ணன்

அதிசயன் நதிபுனை அரனூராம்

மதிதொடு பொழிலணி வழுவூரே.


"பதி" ன அயன் அரி பகர்-நாள் தாம் துதிசெய ஓங்கிய சுடர்வண்ணன் - "நானே தலைவன்" என்று பிரமனும் திருமாலும் சொல்லி வாதுசெய்த அன்று அவர்கள் இருவரும் துதிக்கும்படி எல்லையின்றி ஓங்கிய ஜோதி-வடிவினன்; (பகர்தல் - சொல்தல்); (தாம் - அவர்);

அதிசயன், நதி புனை அரன் ஊர் ஆம் - அதிசயனும் கங்கையைச் சடையில் அணிந்தவனுமான ஹரன் உறையும் தலம் ஆவது; (சம்பந்தர் தேவாரம் - 3.23.3 - "ஐயன்நல் லதிசயன்");

மதி தொடு பொழில் அணி வழுவூரே - சந்திரன் தொடுமாறு உயர்ந்த சோலை சூழ்ந்த வழுவூர்;


10)

வஞ்சகர் சொல்நெறி மதியேன்மின்

நெஞ்சினில் அன்பொடு நினைவார்க்கே

அஞ்சல ளித்தருள் அரனூராம்

மஞ்சடை பொழிலணி வழுவூரே.


வஞ்சகர் சொல் நெறி மதியேன்மின் - வஞ்சகர்கள் சொல்லும் மார்க்கங்களை நீங்கள் மதிக்கவேண்டா; (சொன்னெறி - சொல் நெறி); (மின் - ஏவற்பன்மை விகுதி);

நெஞ்சினில் அன்பொடு நினைவார்க்கே அஞ்சல் அளித்தருள் அரன் ஊர் ஆம் - மனத்தில் அன்போடு நினைக்கின்ற பக்தர்களுக்கு அபயம் அளித்தருளும் ஹரன் உறையும் தலம் ஆவது;

மஞ்சு அடை பொழில் அணி வழுவூரே - மேகம் அடைகின்ற சோலை சூழ்ந்த வழுவூர்; (மஞ்சு - மேகம்);


11)

காமனைக் காய்ந்தவன் கழல்போற்றித்

தூமலர் இட்டவர் துயர்தீர்த்துச்

சேமம ளித்தருள் சிவனூராம்

மாமதில் சூழ்தரு வழுவூரே.


காமனைக் காய்ந்தவன் கழல் போற்றித் - மன்மதனைச் சுட்டெரித்தவனது திருவடியைப் போற்றித்;

தூ-மலர் இட்டவர் துயர் தீர்த்துச் - தூய மலர்களை இட்டு வணங்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து;

சேமம் அளித்தருள் சிவன் ஊர் ஆம் - அவர்களைக் காக்கின்ற சிவன் உறையும் தலம் ஆவது; (சேமம் - க்ஷேமம் - நல்வாழ்வு; இன்பம்; காவல்);

மா மதில் சூழ்தரு வழுவூரே - பெரிய மதிலால் சூழப்பெற்ற வழுவூர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.496 - வீரவநல்லூர் - பூ மிடைந்த நன்மாலைகள்

2020-01-30

P.496 - வீரவநல்லூர்

(தாமிரபரணிக்-கரையில் உள்ள ஊர்)

-----------------

(அறுசீர் விருத்தம் - மா கூவிளம் விளம் விளம் விளம் மாங்காய் - வாய்பாடு;

முதற்சீர் ஈற்றில் குறில் / குறில்+ஒற்று)

(சம்பந்தர் தேவாரம் - 2.106.1 - "என்ன புண்ணியம் செய்தனை");

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

பூமி டைந்தநன் மாலைகள் புனைந்தவர் புகழ்மலி திருநாமம்

நாமி டைந்திட நாள்தொறும் தொழுதெழ நம்வினை அவைதீர்ப்பார்

பூமி நாதனார் மரகதக் கொடியுடன் புரிந்துறை பதியென்பர்

வீமி கும்பொழில் தனிற்சிறை வண்டறை வீரவ நல்லூரே.


பூ மிடைந்த நன்மாலைகள் புனைந்து, அவர் புகழ் மலி திருநாமம் நா மிடைந்திட - பூக்கள் செறிந்த நல்ல மாலைகளைத் தொடுத்துச் சூட்டி, அவரது புகழ் மிக்க திருப்பெயரை நாவில் அணிந்து; (மிடைதல் - செறிதல்; நிறைதல்; கலத்தல்);

நாள்தொறும் தொழுதெழ நம் வினை-அவை தீர்ப்பார் - தினமும் வழிபட்டால் நம் வினைகளையெல்லாம் தீர்ப்பவரான;

பூமிநாதனார் மரகதக்கொடியுடன் புரிந்து உறை பதி என்பர் - பூமிநாதர் மரகதவல்லியுடன் விரும்பி உறைகின்ற தலம் என்பர்; (புரிதல் - விரும்புதல்); (கொடி - கொடி போன்ற பெண்); (* பூமிநாதர், மரகதாம்பிகை - வீரவநல்லூரில் இறைவன் இறைவி திருநாமங்கள்); (பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 12.21.379 - "மரகதக் கொடியுடன் விளங்கும் தெள்ளு பேரொளிப் பவளவெற்பென இடப்பாகம் கொள்ளு மாமலையாளுடன்"); (சம்பந்தர் தேவாரம் - 2.9.6 - "மழபாடியைப் புரிந்து கைதொழுமின்");

வீ மிகும் பொழில்தனில் சிறைவண்டு அறை வீரவநல்லூரே - மலர்கள் நிறைந்த சோலையில் அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற வீரவநல்லூர்; (வீ - மலர்; பூ); (சிறை - சிறகு); (அறைதல் - ஒலித்தல்);


2)

தீதி லாமலர் மாலைகள் இட்டவர் சேவடிப் புகழ்நாமம்

ஓதி நாள்தொறும் உருகிடும் அன்பருக் குறுதுணை எனநிற்பார்

காதி னிற்குழை தோடணி சுந்தரர் கருதிடும் பதியென்பர்

மேதி னிப்பசி தீர்வயல் புடையணி வீரவ நல்லூரே.


தீது இலா மலர்மாலைகள் இட்டு, அவர் சேவடிப்-புகழ் நாமம் ஓதி நாள்தொறும் உருகிடும் அன்பருக்கு உறுதுணை என நிற்பார் - சிறந்த பூமாலைகளைச் சூட்டி, அவரது சிவந்த திருவடிப் புகழையும் திருநாமத்தையும் தினமும் ஓதி மனம் உருகுகின்ற பக்தர்களுக்கு உற்ற துணையாகிக் காப்பவர்; (புகழ்நாமம் - புகழும் நாமமும் - உம்மைத்தொகை);

காதினில் குழை தோடு அணி சுந்தரர் கருதிடும் பதி என்பர் - ஒரு காதில் குழையும், ஒரு காதில் தோடும் அணிந்த அழகரான சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் என்பர்;

மேதினிப்-பசி தீர் வயல் புடை அணி வீரவநல்லூரே - உலகின் பசியைத் தீர்க்கின்ற வயல்கள் சூழ்ந்த வீரவநல்லூர்; (மேதினி - பூமி);


3)

பறிம லர்த்தொடை பதமலர் இட்டவர் பழவினை அவைதீர்ப்பார்

மறியை வன்னியை ஏந்திய மாண்பினர் மலைமகள் ஒருபங்கர்

பொறிய ராவினைப் புலியதள் மிசையசை புகழினர் பதியென்பர்

வெறிக மழ்ந்திடும் பொழில்புடை சூழ்தரும் வீரவ நல்லூரே.


பறி-மலர்த்தொடை பதமலர் இட்டவர் பழவினை-அவை தீர்ப்பார் - அன்று பறித்த புதிய மலர்களால் தொடுத்த மாலையைத் திருவடித்தாமரையில் சூட்டியவர்களது பழைய வினையைத் தீர்ப்பவர்; (பறிமலர் - பறித்த மலர்; வினைத்தொகை);

மறியை வன்னியை ஏந்திய மாண்பினர் - மான்கன்றையும் நெருப்பையும் கையில் ஏந்தியவர்; (மறி - மான் முதலியவற்றின் கன்று); (வன்னி - தீ);

மலைமகள் ஒரு பங்கர் - உமையை ஒரு பாகமாக உடையவர்;

பொறி-அராவினைப் புலி-அதள்மிசை அசை புகழினர் பதி என்பர் - புள்ளிகளையுடைய பாம்பைப் புலித்தோல் ஆடையின்மேல் கட்டிய புகழுடைய சிவபெருமானார் உறையும் தலம் என்பர்; (பொறி - புள்ளி); (அரா - பாம்பு); (அதள் - தோல்); (அசைத்தல் - கட்டுதல்); (அப்பர் தேவாரம் - 4.35.6 - "பொறியர வரையில் ஆர்த்து");

வெறி கமழ்ந்திடும் பொழில் புடை சூழ்தரும் வீரவநல்லூரே - மணம் கமழும் சோலைகளால் சூழப்பெற்ற வீரவநல்லூர்; (வெறி - வாசனை); (தருதல் - ஒரு துணைவினை);


4)

அக(ம்)ம கிழ்ந்தடி தொழுதெழும் அடியவர் அருவினை அவைதீர்ப்பார்

உகளு(ம்) மான்மறி ஒண்மழு ஏந்தினார் உம்பர்கள் இடர்தீர

இகலி யார்புர(ம்) மூன்றையும் எய்தவர் இனிதுறை பதியென்பர்

மிகுவ ளந்தரும் பொருநையின் தென்கரை வீரவ நல்லூரே.


அக(ம்)மகிழ்ந்து அடி தொழுதெழும் அடியவர் அருவினைஅவை தீர்ப்பார் - உளம் மகிழ்ந்து திருவடியை வழிபடும் பக்தர்களது அரிய வினைகளையெல்லாம் தீர்ப்பவர்;

உகளும் மான்மறி ஒண்-மழு ஏந்தினார் - தாவுகின்ற மான்கன்றையும் ஒளியுடைய மழுவையும் ஏந்தியவர்; (உகள்தல் - தாவுதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.109.4 - "நீள்வயற் கயலுகள் கோட்டூர்");

உம்பர்கள் இடர் தீர இகலியார் புரம் மூன்றையும் எய்தவர் இனிது உறை பதி என்பர் - தேவர்களது துன்பம் தீரும்படி, அவர்களைப் பகைத்த அசுரர்களது முப்புரங்களையும் ஒரு கணையால் எய்து அழித்தவரான சிவபெருமானார் இனிதே உறையும் தலம் என்பர்; (உம்பர் - தேவர்); (இகலியார் - பகைவர்);

மிகுவளம் தரும் பொருநையின் தென்கரை வீரவநல்லூரே - மிகுந்த வளத்தைத் தருகின்ற தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ள வீரவநல்லூர்;


5)

கரவி லாதடி கைதொழு காதலர் கருதிய வரமீவார்

அரவை நாணென வில்லினில் ஆர்த்தவர் அணிகழல் அவையார்ப்ப

இரவில் ஆடிடும் எல்லையில் கூத்தினர் இனிதுறை பதியென்பர்

விரைக மழ்ந்திடும் பொழில்புடை சூழ்தரும் வீரவ நல்லூரே.


கரவு இலாது அடி கைதொழு காதலர் கருதிய வரம் ஈவார் - வஞ்சம் இன்றித் திருவடியை வணங்கும் அன்பர்கள் விரும்பிய வரங்களை அருள்பவர்; (கரவு - வஞ்சம்); (காதலர் - அன்பர்);

அரவை நாண் என வில்லினில் ஆர்த்தவர் - முப்புரத்தை எரித்த நாளில், மேருமலை என்ற வில்லில் வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டியவர்;

அணிகழல்அவை ஆர்ப்ப இரவில் ஆடிடும் எல்லை-ல் கூத்தினர் இனிது உறை பதி என்பர் - அணிந்த அழகிய கழல்கள் ஒலிசெய்ய நள்ளிருளில் அளவில்லாத திருநடம் செய்யும் சிவபெருமானார் இனிதே உறையும் தலம் என்பர்; (அணி - அழகு; அணிதல் - பூண்தல்); (ஆர்த்தல் - ஒலித்தல்); (எல்லை - அளவு; முடிவு);

விரை கமழ்ந்திடும் பொழில் புடை சூழ்தரும் வீரவநல்லூரே - மணம் கமழும் சோலைகளால் சூழப்பெற்ற வீரவநல்லூர்; (விரை - வாசனை);


6)

களையி ழந்துகண் குழிவதன் முன்னமே கழல்தொழும் அடியார்தம்

தளையை மாய்த்துயர் செல்வமும் தருபவர் சடைமிசை மதிசூடி

இளைய வெள்விடை ஏறிய இறையவர் இனிதுறை பதியென்பர்

விளையு(ம்) நெல்திகழ் வயல்புடை சூழ்தரும் வீரவ நல்லூரே.


களை இழந்து கண் குழிவதன் முன்னமே கழல் தொழும் அடியார்தம் தளையை மாய்த்து உயர் செல்வமும் தருபவர் - தங்கள் உடல் பொலிவிழந்து கண்கள் குழியும் முதுமைக்காலம் வருவதன் முன்னரே திருவடியை வழிபடுகின்ற அடியவர்களுடைய பந்தங்களை அழித்து உயர்ந்த செல்வத்தையும் தருபவர்;

சடைமிசை மதிசூடி - சடையின்மேல் பிறைச்சந்திரனைச் சூடியவர்;

இளைய வெள்விடை ஏறிய இறையவர் இனிது உறை பதி என்பர் - இளைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமானார் இனிதே உறையும் தலம் என்பர்; (சம்பந்தர் தேவாரம் - 3.18.6 - "நீள்சடை இறையவர்");

விளையும் நெல் திகழ் வயல் புடை சூழ்தரும் வீரவநல்லூரே - நெற்பயிர் செழித்து வளரும் வயல்களால் சூழப்பெற்ற வீரவநல்லூர்;


7)

தங்க ரங்களைக் கூப்பிய அடியவர் தாழ்வற அருள்செய்வார்

மங்கை மாரிடும் உண்பலி தேர்ந்துழல் மாசுண அரைநாணார்

கங்கை நுங்கிய சடையினர் விடையினர் கருதிடும் பதியென்பர்

வெங்க ளைச்சிறை வண்டுகள் உண்டறை வீரவ நல்லூரே.


தம் கரங்களைக் கூப்பிய அடியவர் தாழ்வு அற அருள்செய்வார் - தம் கைகளைக் குவித்து வணங்கிய அடியவர்களது குறைகளெல்லாம் தீர அருள்செய்பவர்;

மங்கைமார் இடும் உண்பலி தேர்ந்துழல் மாசுண அரைநாணார் - பெண்கள் இடும் பிச்சையை ஏற்று உழலும், பாம்பை அரைநாணாகக் கட்டியவர்; ("பிச்சையேற்று உழலும், திகம்பரராகிப் பாம்பை அரையில் கட்டிய, நாணமற்றவர்" என்றும் பொருள்கொள்ள நின்றது); (பலி - பிச்சை); (மாசுணம் - பாம்பு); (நாணார் - 1. நாணாக உடையவர்; 2. வெட்கப்படாதவர்);

கங்கை நுங்கிய சடையினர் - கங்கையை விழுங்கிய சடையை உடையவர்; (நுங்குதல் - விழுங்குதல்; ஆரப் பருகுதல்);

விடையினர் கருதிடும் பதி என்பர் - இடபவாகனரான சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் என்பர்;

வெங்களைச் சிறைவண்டுகள் உண்டு அறை வீரவநல்லூரே - விரும்பத்தக்க தேனை அழகிய சிறகுகளையுடைய வண்டுகள் உண்டு ஒலிக்கின்ற (சோலை சூழ்ந்த) வீரவநல்லூர்; (வெம்மை - விருப்பம்); (களை - கள்ளை - இடைக்குறை; கள் - பூவிலிருக்கும் தேன்); (சம்பந்தர் தேவாரம் - 1.26.1 - "வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலை");


8)

வேக மாய்மலை பேர்த்தவன் வீரிட விரல்கொடு நெரிபாதர்

நாக(ம்) மாமதி செஞ்சடை வைத்தவர் நான்மறை மொழிநாவர்

பாக(ம்) மாதமர் பண்பினர் வெண்மழுப் படையினர் பதியென்பர்

மேக(ம்) நல்கிய புனலடை வயலணி வீரவ நல்லூரே.


வேகமாய் மலை பேர்த்தவன் வீரிட விரல்கொடு நெரி-பாதர் - சினம் உடையவனாகிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் பெரிதும் கத்தி அழும்படி திருப்பாதவிரலால் அவனை நசுக்கியவர்; (வேகம் - கோபம்); (வீரிடுதல் - திடீரென்று கத்துதல்); (கொடு - மூன்றாம்வேற்றுமை உருபு); (நெரித்தல் - நசுக்குதல்);

நாகம் மாமதி செஞ்சடை வைத்தவர் - பாம்பையும் அழகிய திங்களையும் சிவந்த சடையின்மேல் ஒன்றாக வைத்தவர்;

நான்மறை மொழி நாவர் - நால்வேதங்களைப் பாடியருளியவர்;

பாகம் மாது அமர் பண்பினர் - ஒரு பாகத்தில் உமாதேவியை விரும்பியவர்; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);

வெண்மழுப் படையினர் பதி என்பர் - வெண்மையான மழுவாயுதத்தை ஏந்திய சிவபெருமானார் உறையும் தலம் என்பர்;

மேகம் நல்கிய புனல் அடை வயல் அணி வீரவநல்லூரே - மேகம் பொழிந்த நீர் அடைகின்ற வயல்கள் நிறைந்த வீரவநல்லூர்;


9)

முன்ம யக்கொடு மாலயன் நேடிட மூளெரி எனநீண்டார்

தென்மொ ழித்தொடை கொண்டடி போற்றிடும் சீலர்தம் வினைதீர்ப்பார்

புன்ச டைப்பிறை புற்றர வம்புனை புண்ணியர் பதியென்பர்

மென்சி றைக்கரு வண்டறை பொழிலணி வீரவ நல்லூரே.


முன் மயக்கொடு மால் அயன் நேடிட மூள் எரி என நீண்டார் - முன்னொருநாள் அறிவின் மயக்கத்தால் திருமாலும் பிரமனும் தேடும்படி மூண்டெழுந்த ஜோதிப்பிழம்பாகி ஓங்கியவர்; (நேடுதல் - தேடுதல்);

தென்மொழித்தொடை-கொண்டு அடி போற்றிடும் சீலர்தம் வினை தீர்ப்பார் - இனிய தமிழ்ப்பாமாலைகளால் திருவடியை வழிபடும் சீலர்களது வினையைத் தீர்ப்பவர்; (தென் - இனிமை; தெற்கு); (தென்மொழி - தமிழ்); (தொடை - செய்யுள்; மாலை);

புன்சடைப் பிறை புற்றரவம் புனை புண்ணியர் பதி என்பர் - செஞ்சடையில் பிறையையும் புற்றில் வாழும் இயல்புடைய பாம்பையும் அணிந்த புண்ணியமூர்த்தியான சிவபெருமானார் உறையும் தலம் என்பர்; (புன்மை - புகர் நிறம்); (புனைதல் - அணிதல்);

மென்சிறைக்- கருவண்டு அறை பொழில் அணி வீரவநல்லூரே - மெல்லிய சிறகுகளையுடைய கரிய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த வீரவநல்லூர்; (சிறை - சிறகு); (சம்பந்தர் தேவாரம் - 2.78.11 - "மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய");


10)

மிண்டு நெஞ்சினர் வெற்றுரை பேசிடும் வீணர்சொல் விடுவீரே

மண்டும் அன்புடை மாணியைக் காத்திட மறலியை உதைபாதர்

அண்ட நாயகர் அடியவர் இடர்களை அங்கணர் பதியென்பர்

விண்ட போதமர் வண்டறை பொழிலணி வீரவ நல்லூரே.


மிண்டு-நெஞ்சினர் வெற்றுரை பேசிடும் வீணர் சொல் விடுவீரே - கல்நெஞ்சர்களும் பொருளற்ற சொற்களைப் பேசுபவர்களுமான வீணர்களது பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (மிண்டு - திண்மை; குற்றம்); (விடுவீர் - இங்கே, விடுமின் - விடுங்கள் - என்ற பொருளில்);

மண்டும் அன்புடை மாணியைக் காத்திட மறலியை உதை-பாதர் - மிகுகின்ற அன்புடைய மார்க்கண்டேயரைக் காப்பதற்காகக் காலனை உதைத்த திருப்பாதர்; (மண்டுதல் - அதிகமாதல்); (மறலி - இயமன்); (அப்பர் தேவாரம் - 6.74.10 - "வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான்தன்னை");

அண்ட-நாயகர் - அண்டங்களுக்கெல்லாம் தலைவர்; (சம்பந்தர் தேவாரம் - 3.120.10 - "அண்டநாயகன் தான் அமர்ந்து வீற்றிருந்த");

அடியவர் இடர் களை அங்கணர் பதி என்பர் - அடியார்களது துன்பத்தைத் தீர்க்கும் அருட்கண்ணுடைய சிவபெருமானார் உறையும் தலம் என்பர்; (அங்கணன் - அருட்கண்ணுடையவன் - சிவன்);

விண்ட போது அமர் வண்டு அறை பொழில் அணி வீரவநல்லூரே - மலர்ந்த பூக்களை விரும்பும் வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த வீரவநல்லூர்; (விள்ளுதல் - மலர்தல்); (போது - பூ); (அமர்தல் - விரும்புதல்);


11)

வேலை ஏந்திய மைந்தனைப் பெற்றவர் விண்ணவர் தொழுதேத்த

வேலை நஞ்சணி மிடறினர் வேள்பட நோக்கிய பெருமானார்

காலை ஞாயிறு காட்டிய மேனியர் கருதிடும் பதியென்பர்

மேலை வெற்பினில் வீழ்புனல் அடைவயல் வீரவ நல்லூரே.


வேலை ஏந்திய மைந்தனைப் பெற்றவர் - வேலை ஏந்திய முருகனை மகனாகப் பெற்றவர்;

விண்ணவர் தொழுதேத்த வேலை-நஞ்சு அணி மிடறினர் - தேவர்கள் வணங்கி ஏத்தப் பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டு கண்டத்தில் அணிந்தவர்; (வேலை - கடல்); (மிடறு - கண்டம்);

(இலக்கணக் குறிப்பு : "விண்ணவர் தொழுதேத்த" என்ற சொற்றொடரை இடைநிலைத்-தீவகமாக இருபுறமும் இயைத்தும் பொருள்கொள்ளலாம்; விண்ணவர் தொழுதேத்த வேலை ஏந்திய மைந்தனைப் பெற்றவர் & விண்ணவர் தொழுதேத்த வேலை-நஞ்சு அணி மிடறினர்);

வேள் பட நோக்கிய பெருமானார் - மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணால் பார்த்த பெருமானார்; (சம்பந்தர் தேவாரம் - 2.85.8 - "வேள்பட விழிசெய்தன்று");

காலை-ஞாயிறு காட்டிய மேனியர் கருதிடும் பதி என்பர் - விடியற்காலத்து இளஞ்சூரியன் போன்ற செம்மேனியரான சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் என்பர்; (காலை - விடியற்காலம்); (அப்பர் தேவாரம் - 6.97.2 - "எரிகின்ற இளஞாயி றன்ன மேனி");

மேலை-வெற்பினில் வீழ்-புனல் அடை-வயல் வீரவநல்லூரே - மேற்கே உள்ள மலையில் விழுந்த மழைநீர் (தாமிரபரணி ஆறாகி) வந்து அடைகின்ற வயல் சூழ்ந்த வீரவநல்லூர்; (மேலை - மேற்கில் உள்ள); (வெற்பு - மலை); (வீழ்தல் - விழுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


Tuesday, May 26, 2026

P.495 - சேத்திரக்கோவை - வண்டிரைகள் வந்தெறியும்

2020-01-27

P. 495 - சேத்திரக்கோவை

-----------------

(2019 டிசம்பர் மாதத்தில் தரிசித்த தலங்கள் இப்பாடல்களில் இடம்பெறுகின்றன)

(எண்சீர் விருத்தம் - காய் காய் மா தேமா - அரையடி வாய்பாடு)

(திருத்தாண்டகம் ஒத்த அமைப்பு)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 6.41.1 - "வகையெலா முடையாயும் நீயே யென்றும்")


1)

வண்டிரைகள் வந்தெறியும் மயிலாப் பூரில்,

.. வான்புறவார் வலிதாயம் தன்னில், பாடிக்

கண்டருக எனப்பரவை கேள்வர் வேண்டிக்

.. கைதொழுத திருமுல்லை வாயில் தன்னில்,

மண்டியஅன் பால்மனத்திற் கோயில் செய்து

.. மகிழ்பூச லார்வாழ்ந்த நின்ற வூரில்,

அண்டியவர் வினைதீர்க்கும் ஆலங் காட்டில்,

.. அங்கணனைக் கண்டுதொழச் சிந்தி நெஞ்சே.


* மயிலாப்பூர், திருவலிதாயம் (பாடி), (வட)திருமுல்லைவாயில், திருநின்றவூர், திருவாலங்காடு - (இவை தொண்டைநாட்டுத் தலங்கள்);


வண்-திரைகள் வந்து எறியும் மயிலாப்பூரில் - வளம் மிக்க அலைகள் மோதுகின்ற மயிலாப்பூரில்; (வண் + திரைகள் = வண்டிரைகள்);

வான் புறவு ஆர் வலிதாயம்-தன்னில் - அழகிய புறாக்கள் நிறைந்த திருவலிதாயத்தில்; (வான் - வானம்; அழகு); (புறவு - புறா); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);

பாடிக், "கண் தருக" எனப் பரவை-கேள்வர் வேண்டிக் கைதொழுத திருமுல்லைவாயில்-தன்னில் - "கண்ணில் பார்வையைத் தந்தருள்க" என்று பரவையார் கணவரான சுந்தரர் பதிகம் பாடி வழிபட்ட வடதிருமுல்லைவாயிலில்; (கண் + தருக = கண்டருக); (சுந்தரர் தேவாரம் - 7.69.3 - "சங்கிலிக்கா என் கண் கொண்ட பண்ப நின் அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே");

மண்டிய அன்பால் மனத்தில் கோயில் செய்து மகிழ் பூசலார் வாழ்ந்த நின்றவூரில் - பேரன்பால் மனத்தில் ஈசனுக்குக் கோயில் கட்டிய பூசலார் நாயனார் வாழ்ந்த திருநின்றவூரில்;

அண்டியவர் வினை தீர்க்கும் ஆலங்காட்டில் - சரணடைந்தவர்களுடைய வினையைத் தீர்க்கும் திருவாலங்காட்டில்;

அங்கணனைக் கண்டு தொழச் சிந்தி நெஞ்சே - (மேற்சொன்ன தலங்களிலெல்லாம்) அருள்நோக்கமுடைய சிவபெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ நினைவாயாக;


2)

கடிபொழில்சூழ் வேற்காட்டில், குன்றத் தூரில்,

.. கழுக்குன்றத் துருத்திர கோடி தன்னில்

நெடியமலை உச்சிதனில், தமிழ்ப்பா மாலை

.. நித்தலொலி திருவான்மி யூரில், இந்தப்

படிமிசைவாழ் மாந்தருய்ய ஞானப் பாலைப்

.. பருகியவர் வாழ்ந்ததிருக் கழும லத்தில்,

முடிவிலின்பம் அருள்நல்லூர்ப் பெரும ணத்தில்,

.. முக்கணனைக் கண்டுதொழக் கருது நெஞ்சே.


* திருவேற்காடு, குன்றத்தூர் (கந்தழீஸ்வரர் கோயில்), திருக்கழுக்குன்றம் (ருத்ரகோடீஸ்வரர் கோயில், மலைக்கோயில், தாழக்கோயில்), திருவான்மியூர் - (இவை தொண்டைநாட்டுத் தலங்கள்);

* கழுமலம் (சீர்காழி), நல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள்புரம்) - (இவை காவிரி வடகரைத் தலங்கள்);


கடிபொழில் சூழ் வேற்காட்டில் குன்றத்தூரில் - மணம் கமழும் சோலை சூழ்ந்த திருவேற்காட்டில், குன்றத்தூரில் கந்தழீஸ்வரர் கோயிலில்; (கடி - வாசனை);

கழுக்குன்றத்து உருத்திரகோடி-தன்னில் நெடியமலை உச்சிதனில் - திருக்கழுக்குன்றத்தில் ருத்ரகோடீஸ்வரர் கோயிலில், திருக்கழுக்குன்றத்தில் உயர்ந்த மலையின்மேல் இருக்கும் கோயிலில்;

தமிழ்ப்-பாமாலை நித்தல் ஒலி திருவான்மியூரில் - நாள்தோறும் தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப்-பாமாலைகள் ஒலிக்கின்ற திருவான்மியூரில்; (நித்தல் - எந்நாளும்); (அப்பர் தேவாரம் - 5.57.9 - "நீலகண்டனை நித்தல் நினைமினே");

இந்தப் படிமிசை வாழ் மாந்தர் உய்ய ஞானப்பாலைப் பருகியவர் வாழ்ந்த திருக்கழுமலத்தில் - இவ்வுலகில் வாழும் மக்களெல்லாம் உய்யும்படி உமாதேவி ஊட்டிய ஞானப்பாலை உண்டருளிய திருஞானசம்பந்தர் வாழ்ந்த சீகாழியில்; (படி - பூமி);

முடிவு இல் இன்பம் அருள் நல்லூர்ப்-பெருமணத்தில் - எல்லையில்லாத பேரின்பத்தை அருளும் நல்லூர்ப்-பெருமணத்தில் (ஆச்சாள்புரத்தில்);

முக்கணனைக் கண்டுதொழக் கருது நெஞ்சே - முக்கட் பெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ விரும்புவாயாக;


3)

சீலர்தொழும் தில்லைச்சிற் றம்ப லத்தில்,

.. சிறைவண்டின் அறையோவா நாரை யூரில்,

கோலமிகு பொழில்சூழ்ந்த கடம்பூர் தன்னில்,

.. குறைதீர்க்கும் திருவோமாம் புலியூர் தன்னில்,

காலைமுதல் மாலைவரை பலர்வந் தேத்தும்

.. கங்கைகொண்ட சோழபுரம் தன்னில், ஓர்பால்

சேலனைய கண்ணுமையைப் பாகம் வைத்த

.. தீவணனைக் கண்டுதொழச் சிந்தி நெஞ்சே.


* கோயில் (சிதம்பரம்), திருநாரையூர், கடம்பூர் (மேலக்-கடம்பூர்), ஓமாம்புலியூர், கங்கைகொண்ட சோழபுரம்; - (இவை சோழநாட்டுத் தலங்கள்);


சீலர் தொழும் தில்லைச் சிற்றம்பலத்தில் - ஒழுக்கம் மிக்க தில்லைவாழ் அந்தணர்கள் வழிபாடு செய்யும் சிதம்பரத்தில்;

சிறைவண்டின் அறை ஓவா நாரையூரில் - அழகிய சிறகுகளை உடைய வண்டுகளின் ரீங்காரம் எப்பொழுதும் கேட்கும் திருநாரையூரில்; (சிறை - சிறகு); (ஓவுதல் - நீங்குதல்; முடிதல்);

கோலம் மிகு பொழில் சூழ்ந்த கடம்பூர்-தன்னில் - அழகு மிக்க சோலை சூழ்ந்த (மேலக்) கடம்பூரில்;

குறை தீர்க்கும் திருஓமாம்புலியூர்-தன்னில் - குறைகளைத் தீர்க்கும் திருஓமாம்புலியூரில்;

காலைமுதல் மாலைவரை பலர் வந்து ஏத்தும் கங்கைகொண்ட சோழபுரம் தன்னில் - நாள்முழுதும் பலர் வந்து போற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில்;

ஓர்பால் சேல் அனைய கண் உமையைப் பாகம் வைத்த - சேல்மீன் போன்ற அழகிய கண்களையுடைய உமாதேவியை திருமேனியின் ஒரு பக்கம் பாகமாக வைத்த;

தீவணனைக் கண்டு தொழச் சிந்தி நெஞ்சே - தீப் போன்ற நிறம் திகழும் செம்மேனிச் சிவபெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ நினைவாயாக;


4)

அழகாரும் கயம்சூழ்ந்த வழுவூர் தன்னில்,

.. அடைகின்ற வழிகாட்டும் மூவ லூரில்,

தழையாரும் பொழில்சூழ்ந்த பேர ளத்தில்,

.. சார்ந்தார்க்கு வானருளும் மீயச் சூரில்,

பிழையேசெய் தக்கன்செய் வேள்வி செற்ற

.. பீடுடைய பறியல்வீ ரட்டம் தன்னில்,

கழல்போற்றும் மாணிதனைக் காத்துக் கூற்றைக்

.. காய்ந்தானைக் கண்டுதொழக் கருது நெஞ்சே.


* வழுவூர், மூவலூர், பேரளம், திருமீயச்சூர், பறியலூர் வீரட்டம் (பரசலூர்); - (இவை சோழநாட்டுத் தலங்கள்);


அழகு ஆரும் கயம் சூழ்ந்த வழுவூர்-தன்னில் - அழகிய குளம் சூழ்ந்த வழுவூரில்; (கயம் - குளம், ஏரி முதலிய நீர்நிலை);

அடைகின்ற வழிகாட்டும் மூவலூரில் - செல்லும் நெறியைக் காட்டும் மூவலூரில்; (* வழித்துணைநாதர் - மூவலூரில் ஈசன் திருநாமம்);

தழை ஆரும் பொழில் சூழ்ந்த பேரளத்தில் - இலைகள் மிக்க சோலை சூழ்ந்த பேரளத்தில்;

சார்ந்தார்க்கு வான் அருளும் மீயச்சூரில் - அடைந்தவர்களுக்கு வானுலகை அருளும் திருமீயச்சூரில்;

பிழையே செய் தக்கன் செய் வேள்வி செற்ற பீடு உடைய பறியல் வீரட்டம்-தன்னில் - குற்றமே செய்த தக்கன் செய்த வேள்வியை அழித்த பெருமையை உடைய திருப்பறியலூர் வீரட்டத்தில் (பரசலூரில்);

கழல் போற்றும் மாணிதனைக் காத்துக் கூற்றைக் காய்ந்தானைக் கண்டு தொழக் கருது நெஞ்சே - திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரைக் காத்துக் காலனை உதைத்த பெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ விரும்புவாயாக;


5)

திருவாரும் திருச்செம்பொன் பள்ளி தன்னில்,

.. செவ்வழிவண் டிசைக்கு(ம்)நனி பள்ளி தன்னில்,

வருவார்க்கு வரையின்றித் தந்து கந்த

.. வள்ளல்சிறப் புலிவாழ்ந்த ஆக்கூர் தன்னில்,

ஒருவாளை ஏந்தியுடன் சென்று காத்த

.. ஒப்பிலியற் பகைக்கருள்செய் திருச்சாய்க் காட்டில்,

அருளால்வல் விடந்தன்னை அமுது செய்த

.. அம்மானைக் கண்டுதொழச் சிந்தி நெஞ்சே.


* திருச்செம்பொன்பள்ளி (செம்பொனார் கோயில்), திருநனிபள்ளி (புஞ்சை), ஆக்கூர், சாய்க்காடு (சாயாவனம்); - (இவை சோழநாட்டுத் தலங்கள்);


திரு ஆரும் திருச்செம்பொன்பள்ளி-தன்னில் - திரு மிக்க திருச்செம்பொன்பள்ளியில் (செம்பொனார் கோயிலில்);

செவ்வழி வண்டு இசைக்கு(ம்) நனிபள்ளி-தன்னில் - வண்டுகள் செவ்வழி என்ற பண்ணை ஒலிக்கின்ற திருநனிபள்ளியில் (புஞ்சையில்); (செவ்வழி - ஒரு பண்ணின் பெயர்);

வருவார்க்கு வரை இன்றித் தந்து உகந்த வள்ளல் சிறப்புலி வாழ்ந்த ஆக்கூர்-தன்னில் - வந்தார்க்கெல்லாம் வாரி வழங்கி மகிழ்ந்த வள்ளலான சிறப்புலி நாயனார் வாழ்ந்த ஆக்கூரில்; (வரை - எல்லை; அளவு);

ஒரு வாளை ஏந்தி உடன் சென்று காத்த ஒப்பு-இல் இயற்பகைக்கு அருள்செய் திருச்சாய்க்காட்டில் - மறையவர் வேடத்தில் வந்த சிவபெருமானுக்குத் துணையாகக் கையில் ஒரு வாளை ஏந்திச் சென்று அவரைக் காத்த இயற்பகை நாயனாருக்கு அவன் அருள்செய்த திருச்சாய்க்காட்டில் (சாயாவனத்தில்);

அருளால் வல்விடந்தன்னை அமுது செய்த அம்மானைக் கண்டு தொழச் சிந்தி நெஞ்சே - வலிய நஞ்சை அருளால் உண்டு காத்த பெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ நினைவாயாக;


6)

பைம்பொழில்சூழ் பல்லவ னீச்ச ரத்தில்,

.. பணிந்தவர்தம் வினைதீர்க்கும் நீடூர் தன்னில்,

வம்புலவு மலர்நாடி வண்டு பாடும்

.. மயிலாடு துறைதன்னில், அயனும் மாலும்

எம்பெருமான் என்றேத்த எல்லை யில்லா

.. எரியாகி நின்றவண்ணா மலையில், தேவர்

கம்பலைதீர்த் தரண்மூன்றைச் சிரித்தெ ரித்த

.. கண்ணுதலைக் கண்டுதொழக் கருது நெஞ்சே.


* பல்லவனீச்சரம் (சாயாவனத்தின் அருகே உள்ள தலம்), நீடூர், மயிலாடுதுறை - (இவை சோழநாட்டுத் தலங்கள்);

* திருவண்ணாமலை - (நடுநாட்டுத் தலம்);


பைம்பொழில் சூழ் பல்லவனீச்சரத்தில் - அழகிய சோலை சூழ்ந்த பல்லவனீச்சரத்தில்;

பணிந்தவர்தம் வினை தீர்க்கும் நீடூர்-தன்னில் - வணங்கியவர்களது வினையைத் தீர்க்கும் நீடூரில்;

வம்பு உலவு மலர் நாடி வண்டு பாடும் மயிலாடுதுறை-தன்னில் - வாசமலர்களை நாடி வண்டுகள் ஒலிக்கின்ற மயிலாடுதுறையில்; (வம்பு - வாசனை);

அயனும் மாலும் எம்பெருமான் என்று ஏத்த எல்லை இல்லா எரி ஆகி நின்ற அண்ணாமலையில் - பிரமனும் திருமாலும் "எம்பெருமானே" என்று போற்றும்படி அளவற்ற ஜோதியாகி நின்ற திருவண்ணாமலையில்;

தேவர் கம்பலை தீர்த்து அரண் மூன்றைச் சிரித்து எரித்த கண்ணுதலைக் கண்டு தொழக் கருது நெஞ்சே - தேவர்களது துன்பத்தைத் தீர்த்து முப்புரங்களைச் சிரித்தே எரித்த நெற்றிக்கண்ணனைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ விரும்புவாயாக; (கம்பலை - அச்சம்; துன்பம்);


7)

அந்தகனைச் சூலத்தால் அழுத்திச் செற்ற

.. அணியாரும் திருக்கோவல் வீரட் டத்தில்,

சுந்தரரை ஆவணத்தால் அடிமை கொண்ட

.. சோலைபுடை சூழ்வெண்ணெய் நல்லூர் தன்னில்,

அந்த(ம்)மலி வயலணிந்த ஆமாத் தூரில்,

.. அண்டனவன் கண்டம்போல் மேகம் சூழ்ந்து

வந்துபொழி வீரவநல் லூரில், துண்ட

.. மதியானைக் கண்டுதொழச் சிந்தி நெஞ்சே.


* திருக்கோவலூர் வீரட்டம் (திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயில்), திருவெண்ணெய்நல்லூர், திருவாமாத்தூர் - (இவை நடுநாட்டுத் தலங்கள்);

* வீரவநல்லூர் - (பாண்டிநாட்டுத் தலம்);


அந்தகனைச் சூலத்தால் அழுத்திச் செற்ற அணி ஆரும் திருக்கோவல் வீரட்டத்தில் - அந்தகாசுரனைச் சூலத்தால் குத்தி அழித்த அழகிய திருக்கோவல் வீரட்டத்தில் (திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில்);

சுந்தரரை ஆவணத்தால் அடிமை-கொண்ட சோலை புடைசூழ் வெண்ணெய்நல்லூர்-தன்னில் - நம்பி-ஆரூரரை அடிமைஓலை காட்டி ஆட்கொண்ட, சோலை சூழ்ந்த திருவெண்ணெய்நல்லூரில்;

அந்த(ம்) மலி வயல் அணிந்த ஆமாத்தூரில் - அழகு மிக்க வயல் திகழும் திருவாமாத்தூரில்; (அந்தம் - அழகு);

அண்டன்அவன் கண்டம் போல் மேகம் சூழ்ந்து வந்து பொழி வீரவநல்லூரில் - இறைவனது கண்டத்தைப் போலக் கறுத்த மேகம் சூழ்ந்துவந்து மழை பொழியும் வீரவநல்லூரில்;

துண்ட-மதியானைக் கண்டு தொழச் சிந்தி நெஞ்சே - பிறையைச் சூடிய பெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ நினைவாயாக;


8)

வானத்து மதிதீண்டு கோபு ரஞ்சூழ்

.. மாபிரம்ம தேசத்தில், ஆடி னார்தம்

ஊனத்தைத் தீர்பொருநை ஆற்றின் பாங்கர்

.. உயர்பாவ நாசத்தில், தென்னி லங்கைக்

கோனைத்தன் பாதவிரல் ஒன்றை ஊன்றிக்

.. கூக்குரலிட் டழவைத்த தேவ தேவை,

ஏனத்தின் எயிறணிந்த கண்டத் தானை,

.. எம்மானைக் கண்டுதொழ எண்ணு நெஞ்சே.


* பிரம்மதேசம் (அம்பாசமுத்திரம் அருகே உள்ள தலம்), பாவநாசம் (பாபநாசம் - தாமிரபரணிக்கரைத் தலம்); - (இவை பாண்டிநாட்டுத் தலங்கள்);


வானத்து மதி தீண்டு கோபுரம் சூழ் மா பிரம்மதேசத்தில் - வானில் செல்லும் சந்திரன் தீண்டுமாறு ஓங்கிய கோபுரம் சூழ்ந்த அழகிய பிரம்மதேசத்தில்; (பிரம்மதேசம் - அம்பாசமுத்திரம் அருகே உள்ள தலம்);

ஆடினார்தம் ஊனத்தைத் தீர் பொருநை-ஆற்றின் பாங்கர் உயர் பாவநாசத்தில் - குளித்தவர்களது குற்றங்களைப் போக்கும் தாமிரபரணி நதியின் அருகே உயர்ந்த பாபநாசத்தில்; (பொருநை - தாமிரபரணிஆறு); (பாங்கர் - பாங்கு - பக்கம்);

தென்னிலங்கைக்கோனைத் தன் பாதவிரல் ஒன்றை ஊன்றிக் கூக்குரலிட்டு அழவைத்த தேவதேவை - அழகிய இலங்கைக்கு அரசனான இராவணனைத் தன் திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி நசுக்கி அவனைக் கூக்குரலிட்டு அழச்செய்த தேவதேவனை;

ஏனத்தின் எயிறு அணிந்த கண்டத்தானை - பன்றிக்கொம்பைக் கழுத்தில் அணிந்தவனை; (ஏனம் - பன்றி); (எயிறு - பல்; தந்தம்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.80.6 - "கண்டத்து இலங்கும் ஏனத்து எயிறு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே");

எம்மானைக் கண்டு தொழ எண்ணு நெஞ்சே - எம்பெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ நினைவாயாக;


9)

கரியானும் நான்முகனும் எங்கும் நேடிக்

.. காணொண்ணா வண்ணமொரு தழல தான

பெரியானை, நவகயி லாயத் தொன்றாப்

.. பேணுதிரு வைகுந்தம் தன்னில், அன்பர்

விரிபோதிட் டடிபரவு பேரூர் தன்னில்,

.. வெள்ளியங் கிரிதன்னில், காசூழ் முட்டம்

திருநாகேச் சரந்தன்னில், நீற ணிந்த

.. தீவணனைக் கண்டுதொழச் சிந்தி நெஞ்சே.


* ஸ்ரீவைகுண்டம் (தாமிரபரணிக் கரையிலுள்ள நவகயிலாயக் கோயில்களுள் ஒன்று); - (பாண்டிநாட்டுத் தலம்);

* பேருர், வெள்ளியங்கிரி, முட்டத்து நாகேஸ்வரர் கோயில்; - (இவை கொங்குநாட்டுத் தலங்கள்);


கரியானும் நான்முகனும் எங்கும் நேடிக் காணொண்ணா வண்ணம் ஒரு தழலது ஆன பெரியானை - திருமால் பிரமன் இவர்கள் மேலும் கீழும் தேடியும் அவர்களால் அறிய ஒண்ணாத ஒப்பற்ற ஜோதியாகிய பெரியவனை;

நவகயிலாயத்து ஒன்றாப் பேணு திருவைகுந்தம்-தன்னில் - (தாமிரபரணிக் கரையிலுள்ள) நவகயிலாயக் கோயில்களுள் ஒன்றாகப் போற்றப்படுகின்ற ஸ்ரீவைகுண்டத்தில்;

அன்பர் விரி-போது இட்டு அடி பரவு பேரூர்-தன்னில் - பக்தர்கள் மலர்கின்ற பூக்களைத் தூவித் திருவடியை வணங்கும் பேரூரில்;

வெள்ளியங்கிரி-தன்னில் - வெள்ளியங்கிரியில்;

கா சூழ் முட்டம் திருநாகேச்சரம்-தன்னில் - சோலை சூழ்ந்த முட்டம் என்ற இடத்தில் உள்ள திருநாகேஸ்வரர் கோயிலில்;

நீறு அணிந்த தீவணனைக் கண்டுதொழச் சிந்தி நெஞ்சே - திருநீற்றைப் பூசிய செந்தீ-வண்ணனான சிவபெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ நினைவாயாக;


10)

மறைநெறியை எந்நாளும் பழித்து ரைக்கும்

.. வன்னெஞ்சர் கண்ணிருந்தும் குருடர் ஆனார்;

நறைமலரை நாடிவந்து வண்டி னங்கள்

.. நல்லிசைசெய் திருமுருகன் பூண்டி தன்னில்,

பிறையணிந்தான் தோழரால் முதலை உண்ட

.. பிள்ளையுயிர் பெற்றஅவி நாசி தன்னில்,

கறைதிகழும் மிடற்றானைக், காமன் வேவக்

.. கண்டானைக், கண்டுதொழக் கருது நெஞ்சே.


* திருமுருகன்பூண்டி, அவிநாசி; - (இவை கொங்குநாட்டுத் தலங்கள்);


மறைநெறியை எந்நாளும் பழித்து உரைக்கும் வன்னெஞ்சர் கண் இருந்தும் குருடர் ஆனார் - வைதிக-சமயத்தை எப்பொழுதும் பழித்துப் பேசுகின்ற கொடியவர்கள் கண் இருந்தும் குருடர்களே;

நறைமலரை நாடிவந்து வண்டினங்கள் நல்லிசைசெய் திருமுருகன்பூண்டி-தன்னில் - தேன்மலர்களைத் தேடிவந்து வண்டுகள் இணிய இசையை ஒலிக்கின்ற திருமுருகன்பூண்டியில்;

பிறை அணிந்தான் தோழரால் முதலை உண்ட பிள்ளை உயிர் பெற்ற அவிநாசி-தன்னில் - முன்பு முதலை உண்ட பாலகனைத் தம்பிரான் தோழரான சுந்தரர் பதிகம் பாடி உயிர்ப்பித்த அவிநாசியில்;

கறை திகழும் மிடற்றானைக் - நீலகண்டனை;

காமன் வேவக் கண்டானைக் கண்டுதொழக் கருது நெஞ்சே - காமனை நெற்றிக்கண்ணால் எரித்த சிவபெருமானைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ நினைவாயாக;


11)

கூவிளம்பூங் கொன்றைவன்னி குரவம் சூடும்

.. குஞ்சிமிசைக் குளிர்திங்கட் கண்ணி யானோர்

சேவினையே ஊர்தியென விரும்பும் ஈசன்,

.. தேவரெலாம் அமுதுண்ண நஞ்சை உண்டான்,

பூவினையிட் டனுதினமும் போற்றி செய்து

.. புகழ்பாடி உருகுகின்ற அடியார் தங்கள்

தீவினையைத் தீர்த்தருளும் செல்வன் மேய

.. திருத்தலங்கள் கண்டுதொழச் சிந்தி நெஞ்சே.


கூவிளம், பூங்கொன்றை, வன்னி, குரவம் சூடும் குஞ்சிமிசைக் குளிர்திங்கட்-கண்ணியான் - வில்வம், அழகிய கொன்றைமலர், வன்னியிலை, குராமலர் இவற்றை அணிந்த திருமுடிமேல் குளிர்ச்சி பொருந்திய சந்திரனைக் கண்ணிமாலை போல் அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்); (குரவம் - குராமலர்); (கண்ணி - தலையில் அணியும் ஒருவகை மாலை);

ஓர் சேவினையே ஊர்தி என விரும்பும் ஈசன் - ஒப்பற்ற எருதினையே வாகனமாக விரும்பிய ஈசன்; (சே - எருது);

தேவரெலாம் அமுது உண்ண நஞ்சை உண்டான் - தேவர்களெல்லாம் அமுதத்தை உண்ணத் தான் ஆலகாலத்தை உண்டவன்;

பூவினை இட்டு அனுதினமும் போற்றிசெய்து புகழ் பாடி உருகுகின்ற அடியார்-தங்கள் தீவினையைத் தீர்த்தருளும் செல்வன் மேய - பூக்களைத் தூவித், தினமும் வணங்கி, ஈசன் புகழைப் பாடி, மனம் கசியும் பக்தர்களது பாவங்களைத் தீர்த்து அருளும் செல்வனான சிவபெருமான் உறைகின்ற;

திருத்தலங்கள் கண்டு தொழச் சிந்தி நெஞ்சே - திருத்தலங்களைத் தரிசித்து வழிபட, நெஞ்சே, நீ நினைவாயாக;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------