2020-06-20
P.510 - பறியலூர்
(பரசலூர்)
--------------
(சந்தக்
கலிவிருத்தம் - தானனா
தானனா தானனா தானனா)
(சம்பந்தர்
தேவாரம் - 3.35.7 - "கானலைக்
கும்மவன்")
(இவை
தமிழ்ச்சந்த இலக்கணப்படி
அமைந்த பாடல்கள்.
இதனை
ஒத்த அமைப்பை வடமொழியில்
ஸ்ரக்விணீ (स्रग्विणी
- sragviNI) என்று
அழைப்பர். அச்யுதாஷ்டகம்
இவ்வமைப்பே)
முற்குறிப்பு:
படிப்போர்
வசதி கருதிச் சில இடங்களில்
புணர்ச்சி பிரித்த வடிவம்
காட்டப்பட்டுள்ளது.
சந்தியோடு
நோக்கில் சந்தம் கெடாமையை
உணர்க.
* (ம்)
- புணர்ச்சியில்
மகர-ஒற்றுக்
கெடும் இடம்;
1)
கண்ணில்நீர்
வார்தரக் கைதொழும் பத்தரை
விண்ணிலேற்
றும்பரன் வெண்மதிக் கண்ணியான்
வண்ணமார்
பூக்களில் மாந்திவண் டூதிடும்
பண்ணறாச்
சோலைசூழ் பறியல்வீ ரட்டனே.
கண்ணில்
நீர் வார்தரக் கைதொழும் பத்தரை
விண்ணில் ஏற்றும் பரன் -
கண்களில்
நீர் கசியக் கைகூப்பி வணங்கும்
பக்தர்களுக்கு வானுலக வாழ்வைத்
தரும் பரமன்; (கண்ணினீர்
- கண்ணின்
நீர் / கண்ணில்
நீர்); (வார்தல்
- ஒழுகுதல்);
(தருதல்
- ஒரு
துணைவினை);
வெண்மதிக்
கண்ணியான் - வெண்திங்களைக்
கண்ணியாக முடியில் அணிந்தவன்;
(கண்ணி
- தலையில்
அணியும் மாலைவகை);
வண்ணம்
ஆர் பூக்களில் மாந்தி வண்டு
ஊதிடும் - அழகிய
பூக்களில் மது உண்டு வண்டுகள்
ஒலிக்கின்ற; (வண்ணம்
- அழகு);
(ஊதுதல்
- வண்டு
முதலியன ஒலித்தல்);
பண்
அறாச் சோலை சூழ் பறியல் வீரட்டனே
- இனிய
இசை எப்பொழுதும் கேட்கின்ற
சோலை சூழ்ந்த திருப்பறியல்
வீரட்டத்தில் உறைகின்ற
பெருமான்;
2)
காட்டிலா
டுங்கழல் கைதொழின் வல்வினை
வீட்டிவான்
நல்குவான் வெண்குழைக் காதினன்
நாட்டமோர்
மூன்றினான் நாடிவண் டார்த்திடும்
பாட்டறாச்
சோலைசூழ் பறியல்வீ ரட்டனே.
காட்டில்
ஆடும் கழல் கைதொழின் வல்வினை
வீட்டி வான் நல்குவான் -
சுடுகாட்டில்
ஆடுகின்ற திருவடியைக் கைதொழும்
பக்தர்களது வலிய வினைகளை
அழித்து அவர்களுக்கு வானுலக
வாழ்வைக் கொடுப்பான்;
(கைதொழின்
- கைதொழுதால்);
(வீட்டுதல்
- அழித்தல்);
வெண்குழைக்
காதினன் - காதில்
வெண்குழையை அணிந்தவன்;
நாட்டம்
ஓர் மூன்றினான் -
மூன்று
கண்களை உடையவன்;
(நாட்டம்
- கண்);
நாடி
வண்டு ஆர்த்திடும் பாட்டு
அறாச் சோலை சூழ் பறியல் வீரட்டனே
- தேனை
விரும்பி வண்டுகள் ஒலிக்கும்
இன்னிசை எப்பொழுதும் கேட்கின்ற
சோலை சூழ்ந்த திருப்பறியல்
வீரட்டத்தில் உறைகின்ற
பெருமான்;
3)
உம்பரார்
வேண்டவே உன்னிடா தைம்மலர்
அம்பினால்
தாக்குவேள் அன்றுநீ றாக்கினான்
செம்பிரான்
வாளரா திங்கள்சேர் சென்னியன்
பைம்பொழில்
சூழ்ந்திடும் பறியல்வீ ரட்டனே.
உம்பரார்
வேண்டவே உன்னிடாது ஐம்மலர்
அம்பினால் தாக்கு வேள் அன்று
நீறு ஆக்கினான் -
தேவர்கள்
வேண்டிக்கேட்கவும் சிறிதும்
யோசியாமல் ஐந்து மலர்ப்பாணங்களால்
தாக்கிய மன்மதனை அப்பொழுது
சாம்பல் ஆக்கியவன்;
(உன்னுதல்
- எண்ணுதல்);
(வேள்
- காமன்);
செம்பிரான்
- செம்மேனியன்;
வாள்-அரா
திங்கள் சேர் சென்னியன் -
கொடிய
பாம்பையும் சந்திரனையும்
திருமுடிமேல் ஒன்றாகச்
சேர்த்தவன்; (வாள்
- கொடிய);
பைம்பொழில்
சூழ்ந்திடும் பறியல் வீரட்டனே
- அழகிய
சோலை சூழ்ந்த திருப்பறியல்
வீரட்டத்தில் உறைகின்ற
பெருமான்;
4)
சங்கரா
சம்புவே தாணுவே தாதையே
அங்கணா
என்பவர்க் காரருள் செய்பவன்
பொங்கராத்
தாரினன் பொற்சடைப் புண்ணியன்
பைங்கணே
றேறினான் பறியல்வீ ரட்டனே.
"சங்கரா,
சம்புவே,
தாணுவே,
தாதையே,
அங்கணா"
என்பவர்க்கு
ஆரருள் செய்பவன் -
"சங்கரனே,
சம்புவே,
ஸ்தாணுவே,
தந்தையே,
அருட்கண்ணனே"
என்று
பல திருநாமங்களைச் சொல்லி
வழிபடும் பக்தர்களுக்கு
மிகவும் அருள்செய்பவன்;
(சங்கரன்
- நன்மை
செய்பவன்); (சம்பு
- சுகத்தைத்
தருபவன்); (தாணு
- அசைவற்றவன்);
(தாதை
- தந்தை);
(அங்கணன்
- அருள்நோக்கம்
உடையவன்);
பொங்கு-அராத்
தாரினன் - சீறும்
பாம்பை மாலையாக அணிந்தவன்;
பொற்சடைப்
புண்ணியன் - பொன்
போன்ற சடையை உடைய புண்ணியமூர்த்தி;
பைங்கண்
ஏறு ஏறினான் - அழகிய
கண்களையுடைய இடபத்தை ஊர்தியாக
உடையவன்;
பறியல்
வீரட்டனே - திருப்பறியல்
வீரட்டத்தில் உறைகின்ற
பெருமான்;
5)
வேலனைப்
பெற்றவன் வேத(ம்)நான்
கோதிய
ஆலனக்
காரமாம் ஐயன்முக் கண்ணினன்
காலனைக்
காலினால் காய்ந்தவன் கைதொழும்
பாலனைக்
காத்தவன் பறியல்வீ ரட்டனே.
வேலனைப்
பெற்றவன் - முருகனுக்குத்
தந்தை;
வேதம்
நான்கு ஓதிய ஆலன் -
நான்கு
வேதங்களையும் ஓதிய தட்சிணாமூர்த்தி;
(ஆலன்
- கல்லாலமரத்தின்கீழ்
இருப்பவன்);
அக்கு
ஆரம் ஆம் ஐயன் -
எலும்பை
மாலையாக அணிந்த தலைவன்;
(அக்கு
- எலும்பு);
(ஆரம்
- ஹாரம்
- மாலை);
முக்கண்ணினன்
- மூன்று
கண்களை உடையவன்;
காலனைக்
காலினால் காய்ந்தவன் -
காலனைக்
காலால் உதைத்தவன்;
கைதொழும்
பாலனைக் காத்தவன் -
வழிபாடு
செய்த மார்க்கண்டேயரைக்
காத்துஅருளியவன்;
பறியல்
வீரட்டனே - திருப்பறியல்
வீரட்டத்தில் உறைகின்ற
பெருமான்;
6)
பேரிடர்
தீர்ந்திடப் பேணினார்க்
காப்பவன்
போரிடும்
வெங்கரித் தோலினைப் போர்த்தவன்
ஊரிடும்
பிச்சையே ஊணெனக் கொண்டவன்
பாரிடஞ்
சூழ்பரன் பறியல்வீ ரட்டனே.
பேரிடர்
தீர்ந்திடப் பேணினார்க்
காப்பவன் - பெருந்துன்பம்
தீரவேண்டிப் போற்றும்
பக்தர்களைக் காப்பவன்;
("பேணிணார்க்
காப்பவன்" - இரண்டாம்
வேற்றுமைத்தொகையில் உயர்திணையில்
பொருளின் தெளிவு கருதி வல்லொற்று
மிகும்);
போரிடும்
வெங்கரித் தோலினைப் போர்த்தவன்
- போர்
செய்த கொடிய யானையின் தோலை
உரித்துப் போர்த்தவன்;
ஊர்
இடும் பிச்சையே ஊண் எனக்
கொண்டவன் - ஊரிலுள்ளோர்
இடும் பிச்சையையே உணவாக
உடையவன்; (ஊண்
- உணவு);
பாரிடம்
சூழ் பரன் - பூதகணங்கள்
சூழ்ந்துள்ள பரமன்;
(பாரிடம்
- பூதம்);
பறியல்
வீரட்டனே - திருப்பறியல்
வீரட்டத்தில் உறைகின்ற
பெருமான்;
7)
சேவதே
றுஞ்சிவன் தெண்புனல் கொக்கதன்
தூவலார்
சென்னியன் தோற்றமும் கேடிலான்
காவலார்
முப்புரம் வேவவே நக்கவன்
பாவையோர்
பங்கினன் பறியல்வீ ரட்டனே.
சே-அது
ஏறும் சிவன் - இடபத்தை
வாகனமாக உடைய சிவன்;
(சே
- எருது);
தெண்புனல்
கொக்கு-அதன்
தூவல் ஆர் சென்னியன் -
தெளிந்த
நீர்க்கங்கையையும் கொக்கின்
இறகையும் முடிமேல் அணிந்தவன்;
(தூவல்
- இறகு);
(கொக்கின்
இறகு - 1. கொக்கிறகு
என்ற பூ; 2. கொக்குவடிவாய
குரண்டாசுரனை அழித்த அடையாளம்);
தோற்றமும்
கேடு இலான் - பிறப்பும்
இறப்பும் இல்லாதவன்;
(கேடு
- கேடும்;
உம்
தொக்கது);
காவல்
ஆர் முப்புரம் வேவவே நக்கவன்
- காவல்
மிக்க முப்புரங்கள் வெந்து
அழியும்படி சிரித்தவன்;
(நகுதல்
- சிரித்தல்);
பாவை
ஓர் பங்கினன் - உமையை
ஒரு பங்கில் உடையவன்;
பறியல்
வீரட்டனே - திருப்பறியல்
வீரட்டத்தில் உறைகின்ற
பெருமான்;
8)
தக்கதொன்
றோர்கிலான் தான்வரைக் கீழ்மிகத்
துக்கமுற்
றார்த்தழத் தூவிரல் வைத்தவன்
திக்கெலாம்
ஆடையாம் சீர்த்தியன் மேனியில்
பக்கமோர்
பாவையான் பறியல்வீ ரட்டனே.
தக்கது
ஒன்று ஓர்கிலான் தான் வரைக்கீழ்
மிகத் துக்கமுற்று ஆர்த்து
அழத் தூ-விரல்
வைத்தவன் - செய்யத்-தக்கது
ஒன்றையும் எண்ணாதவனான இராவணன்
அவன் கயிலைமலைக்கீழே மிகவும்
துக்கமடைந்து கத்தி அழும்படி
தூய விரல் ஒன்றை ஊன்றியவன்;
(ஓர்தல்
- சிந்தித்தல்);
(ஆர்த்தல்
- ஒலித்தல்);
திக்கு-எலாம்
ஆடை ஆம் சீர்த்தியன் -
திக்குகளே
ஆடையாகும் பெருமை உடையவன்;
திகம்பரன்;
(சீர்த்தி
- புகழ்);
மேனியில்
பக்கம் ஓர் பாவையான் -
திருமேனியில்
ஒரு பக்கம் உமையைப் பங்காக
உடையவன்;
பறியல்
வீரட்டனே - திருப்பறியல்
வீரட்டத்தில் உறைகின்ற
பெருமான்;
9)
கந்தமார்
போதனும் கண்ணனும் காண்கிலா
அந்தமில்
சோதியான் ஐந்தொழில் செய்பவன்
செந்தமிழ்ப்
பாடலைச் செப்பினார்க் கன்பினன்
பந்தமில்
பாங்கினான் பறியல்வீ ரட்டனே.
கந்தம்
ஆர் போதனும் கண்ணனும் காண்கிலா
அந்தம் இல் சோதியான் -
மணம்
மிக்க தாமரைமலரில் இருக்கும்
பிரமன், திருமால்
இவர்களால் காண ஒண்ணாத எல்லையற்ற
ஒளிவடிவினன்; (போது
- பூ);
ஐந்தொழில்
செய்பவன் - படைத்தல்,
காத்தல்,
ஒடுக்குதல்,
மறைத்தல்,
அருளல்
(ஸ்ருஷ்டி,
ஸ்திதி,
சம்ஹாரம்,
திரோபவம்,
அனுக்ரஹம்)
என்ற
பஞ்சகிருத்தியம் செய்பவன்;
செந்தமிழ்ப்
பாடலைச் செப்பினார்க்கு
அன்பினன் - தேவாரம்
முதலிய தமிழ்ப்பாமாலைகளைப்
பாடும் பக்தர்களுக்கு
அன்புடையவன்;
பந்தம்
இல் பாங்கினான் -
எவ்விதப்
பந்தமும் இல்லாதவன்;
(பாங்கு
- இயல்பு);
பறியல்
வீரட்டனே - திருப்பறியல்
வீரட்டத்தில் உறைகின்ற
பெருமான்;
10)
ஆய்தலைச்
செய்கிலா அந்தகர் நீறிடாப்
பேய்மனப்
பிட்டர்சொல் பேணிடேல் காமனைக்
காய்பவன்
தாள்தொழும் பத்தரைக் காப்பவன்
பாய்புலித்
தோலினான் பறியல்வீ ரட்டனே.
ஆய்தலைச்
செய்கிலா அந்தகர் -
ஆராயாத
குருடர்கள்; (சம்பந்தர்
தேவாரம் - 1.11.5 - "ஆயாதன
சமயம்பல அறியாதவன்");
நீறு
இடாப் பேய்மனப் பிட்டர் சொல்
பேணிடேல் - திருநீற்றைப்
பூசாதவர்களும் பேய் போன்ற
மனம் உடையவர்களுமான பிரஷ்டர்கள்
சொல்லை மதிக்கவேண்டா;
(பிட்டர்
- பிரஷ்டர்
- புறம்பானவர்கள்);
காமனைக்
காய் பவன் - மன்மதனை
எரித்தவனும் பவன் என்ற திருநாமம்
உடையவனுமான சிவபெருமான்;
(பவன்
- என்றும்
உள்ளவன்);
தாள்தொழும்
பத்தரைக் காப்பவன் -
தன்
திருவடியை வணங்கும் பக்தர்களைக்
காப்பவன்;
பாய்புலித்
தோலினான் - பாயும்
புலியின் தோலை அரையில்
கட்டியவன்;
பறியல்
வீரட்டனே - திருப்பறியல்
வீரட்டத்தில் உறைகின்ற
பெருமான்;
11)
பூத்திரள்
கொண்டுதாள் போற்றிடாத்
தக்கனார்
தீத்தொழில்
செற்றவன் செவ்வணன் மூவரின்
மூத்தவன்
முக்கணன் முன்னமோர் அத்திரம்
பார்த்தனுக்
கீந்தவன் பறியல்வீ ரட்டனே.
பூத்திரள்
கொண்டு தாள் போற்றிடாத்
தக்கனார் தீத்தொழில் செற்றவன்
- பூக்களால்
திருவடியைப் போற்றாத தக்கன்
செய்த அவவேள்வியை அழித்தவன்;
(தீத்தொழில்
- 1. தீய
செயல்; 2. அக்கினி
காரியம் - ஹோமம்;
வேள்வி);
(செறுதல்
- அழித்தல்);
(அப்பர்
தேவாரம் - 4.95.4 - "தீத்தொழிலான்
தலை தீயிலிட்டுச் செய்த வேள்வி
செற்றீர்");
செவ்வணன்
- செம்மேனியன்;
மூவரின்
மூத்தவன் -
மும்மூர்த்திகளினும்
முற்பட்டவன்; (இன்
- ஐந்தாம்வேற்றுமை
உருபு);
முக்கணன்
- நெற்றிக்கண்ணன்;
முன்னம்
ஓர் அத்திரம் பார்த்தனுக்கு
ஈந்தவன் - முன்பு
அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை
அருளியவன்;
பறியல்
வீரட்டனே - திருப்பறியல்
வீரட்டத்தில் உறைகின்ற
பெருமான்;
வி.
சுப்பிரமணியன்
-----------
--------------