Sunday, August 23, 2026

N.061 - சுந்தரர் துதி - முக்கணுடை ஆதி

2020-07-27

N.061 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2020

-------------

(வண்ணவிருத்தம்;

தத்ததன தானத் .. தனதான)

(இத்தரணி மீதிற் பிறவாதே - திருப்புகழ் - பொது)


முக்கணுடை ஆதிப் .. பெருமானே

.. முப்புரமும் வேவப் .. பொருதோனே

அக்கரவ மாலைத் .. திருமார்பா

.. அக்கமரு ளாஅப் .. பழிசேரும்

சொக்கவென வாடிப் .. புகழ்கூறும்

.. சொற்றமிழை ஓதிக் .. குறைதீர்வார்

அக்கயிலை நாதற் .. கொருதோழர்

.. அப்புனிதர் தாளைப் .. பணிவோமே.


பதம் பிரித்து:

"முக்கணுடை ஆதிப் பெருமானே;

.. முப்புரமும் வேவப் பொருதோனே;

அக்கு அரவ மாலைத் திருமார்பா;

.. அக்கம் அருளா அப்-பழி சேரும்

சொக்க" என வாடிப் புகழ் கூறும்

.. சொற்றமிழை ஓதிக் குறை தீர்வார்;

அக்-கயிலை நாதற்கு ஒரு தோழர்;

.. அப்-புனிதர் தாளைப் பணிவோமே.


"முக்கணுடை ஆதிப் பெருமானே - முக்கண்ணனே, ஆதியான பெருமானே;

முப்புரமும் வேவப் பொருதோனே - முப்புரங்களும் வெந்து சாம்பலாகும்படி போர்செய்தவனே; (பொருதல் - போர்செய்தல்);

அக்கு அரவ மாலைத் திருமார்பா - எலும்பு, பாம்பு இவற்றை மாலையாக மார்பில் அணிந்தவனே; (அக்கு - எலும்பு); (அரவம் - பாம்பு);

அக்கம் அருளா அப்-பழி சேரும் சொக்க" என - (என் வலக்)கண்ணை அருளாத அந்தப் பழி உன்னைச் சேரும் அழகனே" என்று; (அக்கம் - அக்ஷம் - கண்); (சொக்கன் - அழகன்; சிவன்); (சுந்தரர் தேவாரம் - 7.95.2 - "எற்றுக்கு அடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்"); (சுந்தரர் தேவாரம் - 7.95.11 - "பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்");

வாடிப் புகழ் கூறும் சொற்றமிழை ஓதிக் குறை தீர்வார் - மனம் வருந்தி, ஈசன் புகழைப் பாடும் சொல்மாலையான தேவாரம் பாடி, (இறைவன் அருளால்) தமது குறை நீங்கப்பெற்றவர்; (சொற்றமிழ் - சொல்+தமிழ் - சொற்களால் ஆன தமிழ்ப்பாமாலை);

அக்-கயிலை நாதற்கு ஒரு தோழர் - கயிலைநாதனுக்கு ஒப்பற்ற தோழர்; (- பண்டறிசுட்டு); (ஒரு - ஒப்பற்ற);

அப்-புனிதர் தாளைப் பணிவோமே - அந்தத் தூயவரான சுந்தரரது திருவடியை வணங்குவோம்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


T.244 - முட்டம் - எப்பற்றும் ஏறி

2020-07-19

T.244 - முட்டம் - எப்பற்றும் ஏறி

(கோயம்புத்தூரின் மேற்கே 25 கிமீ தொலைவில் உள்ளது)

-------------

(வண்ணவிருத்தம்;

தத்தத்த தான .. தனதான)

(தத்தத் தனான தனதான - என்ற சந்தத்தை ஒத்தது. - பட்டுப் படாத மதனாலும் - திருப்புகழ் - பொது)


எப்பற்றும் ஏறி .. வரைமீறும்

.. இச்சைக்கு நாளும் .. உழலாமல்

பொய்ப்பற்று மாறி .. உனையோதும்

.. பொற்புற்று வாழ .. அருளாயே

எய்ப்புற்ற தேவர் .. அமுதார

.. இட்டத்தொ டாலம் .. அயில்நாதா

முப்பத்து மூவர் .. முதலானாய்

.. முட்டத்து மேய .. பெருமானே.


பதம் பிரித்து:

எப்பற்றும் ஏறி வரை மீறும்

.. இச்சைக்கு நாளும் உழலாமல்,

பொய்ப்பற்று மாறி, உனை ஓதும்

.. பொற்பு உற்று வாழ அருளாயே;

எய்ப்பு உற்ற தேவர் அமுது ஆர,

.. இட்டத்தொடு ஆலம் அயில்-நாதா;

முப்பத்துமூவர் முதல் ஆனாய்;

.. முட்டத்து மேய பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

எப்பற்றும் ஏறி வரை மீறும் இச்சைக்கு நாளும் உழலாமல் - எல்லாவிதமான பற்றுகளும் கூடி, எல்லையற்ற ஆசைகளைப் பூர்த்திசெய்வதற்காகத் தினமும் உழன்று வருந்தாமல்; (பற்று - அபிமானம்; பந்தம்); (வரை - எல்லை; அளவு);

பொய்ப்பற்று மாறி, உனை ஓதும் பொற்பு உற்று வாழ அருளாயே - (விஷய-சுகங்களின்மேல் வைத்த பற்றான) இந்தப் பொய்ப்பற்றுகளெல்லாம் நீங்கி, உன்னை வழிபடும் பண்பு பெற்று வாழுமாறு எனக்கு அருள்வாயாக; (பொய்ப்பற்று - விஷய-சுகங்களின்மேல் வைத்த பற்று); (மாறுதல் - நீங்குதல்; இல்லையாதல்); (பொற்பு - தன்மை; அழகு); (உறுதல் - அடைதல்);

எய்ப்புற்ற தேவர் அமுது ஆர, ட்டத்தொடு ஆலம் அயில்-நாதா - மிகவும் வருந்திய தேவர்கள் அமுதை உண்ண, ஆலகாலத்தை விரும்பி உண்டருளிய தலைவனே; (எய்ப்பு - இளைப்பு; வருந்துதல்); (ஆர்தல் - உண்ணுதல்); (இட்டம் - இஷ்டம் - விருப்பம்); (ஆலம் - ஆலகாலம்); (அயில்தல் - உண்தல்); (அப்பர் தேவாரம் - 6.1.7 - "அலைகடல்நஞ் சயின்றான் தன்னை");

முப்பத்துமூவர் முதல் ஆனாய் - முப்பத்துமுக்கோடி தேவர்களுக்கும் முதல்வனே; (முதல் - ஆதி; முதல்வன்);

முட்டத்து மேய பெருமானே - முட்டம் என்ற தலத்தில் எழுந்தருளிய பெருமானே; (முட்டம் - தலத்தின் பெயர்); ("முட்டத்து மேய" - இதனை ஒத்த பிரயோகம் - அப்பர் தேவாரம் - 6.85.1 - "திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன்");


பிற்குறிப்பு - தலக்குறிப்பு:

முட்டம் - முத்துவாளி அம்மன் சமேத நாகேஸ்வரர் கோயில். இத்தலம் கோயம்புத்தூரிலிருந்து மேற்கே 25 கிமீ தூரத்தில், செம்மேடு என்ற ஊரின் அருகே உள்ளது. வெள்ளியங்கிரிமலை அடிவாரத்தில் இத்தலம் உள்ளது.

https://temple.dinamalar.com/New.php?id=2061 )


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Saturday, August 22, 2026

T.243 - ஒற்றியூர் - செற்றக் குற்ற

2020-07-17

T.243 - ஒற்றியூர் - செற்றக் குற்ற

-------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் தத்தத் .. தனதான)

(முட்டுப் பட்டுக் கதிதோறும் - திருப்புகழ் - கச்சி - காஞ்சிபுரம்)


செற்றக் குற்றக் .. குணனாகித்

.. திட்டித் துக்கித் .. துழலாமல்

அற்றைப் புட்பத் .. தொடுநாளும்

.. அர்ச்சிக் கக்கற் .. றிடுவேனோ

வெற்றுச் சொற்கட் .. டுரைவீணர்

.. விட்டுப் பத்தர்க் .. கருள்நேயா

ஒற்றிச் செக்கர்ச் .. சடையானே

.. ஒற்றைப் பெற்றப் .. பெருமானே.


பதம் பிரித்து:

செற்றக் குற்றக் குணன் ஆகித்

.. திட்டித் துக்கித்து உழலாமல்,

அற்றைப் புட்பத்தொடு நாளும்

.. அர்ச்சிக்கக் கற்றிடுவேனோ;

வெற்றுச்சொற் கட்டுரை வீணர்

.. விட்டுப் பத்தர்க்கு அருள் நேயா;

ஒற்றிச் செக்கர்ச் சடையானே;

.. ஒற்றைப் பெற்றப் பெருமானே.


செற்றக் குற்றக் குணன் ஆகித் - கோபம் என்ற குற்றம் உடைய குணத்தை உடையவன் ஆகி; (செற்றம் - சினம்); (குற்றம் - பிழை; பழி); (குணன் - குணமுடையன்);

திட்டித் துக்கித்து உழலாமல் - அதனால் எப்பொழுதும் பிறரை ஏசித் துக்கமுற்று வாடாமல்; (துக்கித்தல் - துக்கப்படுதல்; மனம் வருந்துதல்);

அற்றைப் புட்பத்தொடு நாளும் அர்ச்சிக்கக் கற்றிடுவேனோ - அன்று பூத்த புதுமலர்களால் (நாண்மலரால்) தினமும் உன் திருவடியை அருச்சித்து வழிபடக் கற்பேனோ; அருள்வாயாக; (அற்றை - அன்று); (புட்பம் - புஷ்பம் - பூ); (அப்பர் தேவாரம் - 4.107.1 - "மருட்டுயர் தீர அன்றர்ச்சித்த மாணி");

வெற்றுச்சொற்-கட்டுரை வீணர் விட்டுப் பத்தர்க்கு அருள் நேயா - பொருளற்ற சொற்களால் ஆன பொய்களைப் பேசும் வீணர்களுக்கு அருளாமல் பக்தர்களுக்கு அருள்கின்ற அன்பனே; (வெற்றுச்சொற் கட்டுரை வீணர் - வெற்றுச்சொல் வீணர் & கட்டுரை வீணர் என்று தனித்தனியேவும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்); (வெற்றுச்சொல் - பொருளற்ற சொல்); (கட்டுரை - பொய்); (விடுதல் - நீங்குதல்; தவிர்தல்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால்

நலமிலன் நாள்தொறும் நல்குவான் நலன்");

ஒற்றிச் செக்கர்ச் சடையானே - திருவொற்றியூரில் உறைகின்ற செஞ்சடையானே; (செக்கர் - சிவப்பு); (பெரியபுராணம் - மூர்த்திநாயனார் புராணம் - 12.15.15 - "செக்கர்ச் சடையார் விடையார்");

ஒற்றைப் பெற்றப் பெருமானே - ஒப்பற்ற இடபத்தை வாகனமாக உடைய பெருமானே; (ஒற்றை - ஒப்பின்மை); (பெற்றம் - எருது);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.242 - சிக்கல் - பொத்தற்கட்டு

2020-07-16

T.242 - சிக்கல் - பொத்தற்கட்டு

-------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் தத்தத் .. தனதான)

(முட்டுப் பட்டுக் கதிதோறும் - திருப்புகழ் - கச்சி - காஞ்சிபுரம்)


பொத்தற் கட்டிக் .. குடிலாசைப்

.. பொக்கத் திற்பட் .. டழியாமல்

பத்திப் பொற்புற் .. றுனையோதிப்

.. பற்றைச் செற்றுச் .. சுகியேனோ

எத்தர்க் கெட்டற் .. கரியானே

.. இட்டர்க் கிச்சித் .. தனவீவாய்

முத்துப் பற்சத் .. தியொர்கூறா

.. முக்கட் சிக்கற் .. பெருமானே.


பதம் பிரித்து:

பொத்தற்-கட்டு இக் குடில்-ஆசைப்

.. பொக்கத்திற் பட்டு அழியாமல்

பத்திப் பொற்பு உற்று உனை ஓதிப்

.. பற்றைச் செற்றுச் சுகியேனோ;

எத்தர்க்கு எட்டற்கு அரியானே;

.. இட்டர்க்கு இச்சித்தன ஈவாய்;

முத்துப்பற்-சத்தி ஒர் கூறா;

.. முக்கட்-சிக்கற் பெருமானே.


பொத்தற்-கட்டு இக்-குடில்-ஆசைப் பொக்கத்திற் பட்டு அழியாமல் - ஓட்டை மாடமான இந்த உடம்பின்மேல் ஆசை என்ற பொய்யில் சிக்கி அழியாமுன்; (பொத்தல் - துவாரம்; ஓட்டை); (கட்டு - கட்டடம்); (குடில் - குடிசை - ஆகுபெயராக உடம்பைக் குறித்தது); (பொக்கம் - பொய்; வஞ்சகம்); (படுதல் - அகப்படுதல்; புகுதல்; துன்புறுதல்);

பத்திப்-பொற்பு உற்று உனை ஓதிப் பற்றைச் செற்றுச் சுகியேனோ - பக்திப்பண்பை அடைந்து உன்னைப் பாடி வழிபட்டு, என் பந்தங்களை வென்று இன்புற அருள்வாயாக; (பொற்பு - தன்மை); (பற்று - பந்தம்; அகப்பற்றும் புறப்பற்றும்); (செறுதல் - அழித்தல்; வெல்லுதல்); (சுகித்தல் - உன்புறுதல்);

எத்தர்க்கு எட்டற்கு அரியானே - வஞ்சகர்களால் அடையப்படாதவனே; (எத்தர் - வஞ்சகர்);

இட்டர்க்கு இச்சித்தன ஈவாய் - அன்பர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் கொடுப்பவனே; (இட்டர் - இஷ்டர் - அன்பர்; பக்தர்); (இச்சித்தல் - விரும்புதல்); (அப்பர் தேவாரம் - 6.23.1 - "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்");

முத்துப்பற்-சத்தி ஒர் கூறா - முத்துப் போன்ற பற்களையுடைய உமையை ஒரு கூறாக உடையவனே; (சத்தி - சக்தி - உமை); (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - 2.72.5 - "முத்தேர் நகையாள் இடமாக"); ("முத்துப்பற்-சத்தி ஒர் கூறு ஆம் முக்கட்-சிக்கற் பெருமானே" - என்றும் பொருள்கொள்ளலாம்);

முக்கட்-சிக்கற் பெருமானே - முக்கட்பெருமானே (முக்கண்ணனே) & சிக்கல் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Tuesday, August 11, 2026

T.241 - காழி - அலைமலி ஆழி சூழும்

2020-06-27

T.241 - காழி - அலைமலி ஆழி சூழும்

-------------

(வண்ணவிருத்தம்;

தனதன தான தான

தனதன தான தான

தனதன தான தான .. தனதான)

(வரிவிழி பூசலாட - திருப்புகழ் - பொது)


அலைமலி ஆழி சூழும் .. அவனியில் வாழ்வில் ஆசை

.. .. அளவில தாகி மாடு .. மனைநாடி

.. அனுதினம் ஓடி ஆடி .. அக(ம்)மிக வாடி ஆயுள்

.. .. அதுமுடி வாகி மாயு(ம்) .. மிடிதீராய்

மலர்மலி சோலை நாடி .. மண(ம்)மிகு போதி னோடு

.. .. மகிழ்வுடன் ஏர்கொள் மாலை .. புனைமாணி

.. வழிபடு வேளை காலன் .. வரஅவன் மாளு மாறு

.. .. மலரடி வீசு நேய .. சடையானே

இலைமலி வேலி னோடு .. கனல்மழு வாளு(ம்) மானும்

.. .. இலகிடு தீயும் ஏறும் .. உடையானே

.. எழில்மட மாத ரார்கள் .. அவர்மனை வாயில் ஏகி

.. .. இடுபலி தேரும் ஈச .. திருவாளா

வலைஞனும் வீர வேடன் .. வடிவமும் வேட மாகு(ம்)

.. .. மறைமுத லேப ராவு .. சுரர்வாழ

.. வரிசிலை யாக மேரு .. வரைகொடு போர்செய் தீர

.. .. மதிலணி காழி மேய .. பெருமானே.


பதம் பிரித்து:

அலை மலி ஆழி சூழும் அவனியில் வாழ்வில் ஆசை

.. .. அளவு இலது ஆகி, மாடு மனை நாடி,

.. அனுதினம் ஓடி ஆடி, அக(ம்) மிக வாடி, ஆயுள்

.. .. அது முடிவு ஆகி மாயு(ம்) மிடி தீராய்;

மலர் மலி சோலை நாடி மண(ம்) மிகு போதினோடு

.. .. மகிழ்வுடன் ஏர்கொள் மாலை புனை மாணி

.. வழிபடு வேளை காலன் வர அவன் மாளுமாறு

.. .. மலரடி வீசு நேய; சடையானே;

இலை மலி வேலினோடு கனல்-மழுவாளு(ம்) மானும்

.. .. இலகிடு தீயும் ஏறும் உடையானே;

.. எழில் மட மாதரார்கள் அவர் மனை வாயில் ஏகி

.. .. இடுபலி தேரும் ஈச; திருவாளா;

வலைஞனும் வீர-வேடன் வடிவமும் வேடம் ஆகு(ம்)

.. .. மறைமுதலே; பராவு சுரர் வாழ

.. வரி-சிலையாக மேரு வரைகொடு போர்செய் தீர;

.. .. மதில் அணி காழி மேய பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

அலைமலி ஆழி சூழும் அவனியில் வாழ்வில் ஆசை ளவு இலது ஆகி - அலைகள் மிக்க கடல் சூழ்ந்த இவ்வுலக வாழ்க்கையில் கொண்ட ஆசை அளவற்றதாகி; (ஆழி - கடல்); (அவனி - பூமி); (அவனியில் வாழ்வில் - "அவனி இல்வாழ்வில்" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளலாம்);

மாடு மனை நாடி - பொருள் குடும்பம் இவற்றை விரும்பி; (மாடு - பொன்; செல்வம்); (மனை - வீடு; மனைவி; குடும்பம்);

அனுதினம் ஓடி ஆடி - நாள்தோறும் அலைந்து திரிந்து;

அகம் மிக வாடி - மனம் மிகவும் வாட்டமுற்று;

ஆயுள்அது முடிவு ஆகி மாயும் மிடி தீராய் - வாழ்நாளும் முடிந்து இறந்து அழியும் இத்துன்பத்தை தீர்த்து அருள்வாயாக; (மிடி - துன்பம்);

மலர் மலி சோலை நாடி - மலர்கள் மிக்க சோலையை அடைந்து;

மணம் மிகு போதினோடு மகிழ்வுடன் ஏர்கொள் மாலை புனை மாணி - வாசனை மிகுந்த பூக்களால் மனமகிழ்ந்து அழகிய மாலைகளைத் தொடுத்துத் திருவடியில் புனைந்த மார்க்கண்டேயர்; (போது - பூ); (ஏர் - அழகு); (மாணி - மார்க்கண்டேயர்);

வழிபடு வேளை காலன் வர அவன் மாளுமாறு மலரடி வீசு நேய - வழிபாடு செய்த சமயத்தில் அவரைக் கொல்லக் காலன் வந்தபொழுது அக்காலனே மாளும்படி மலர்ப்பாதத்தால் காலனை உதைத்த அன்பனே; (நேயன் - அன்பன்);

சடையானே - சடையை உடையவனே;

இலை மலி வேலினோடு கனல்-மழுவாளும் மானும் இலகிடு தீயும் ஏறும் உடையானே - திரிசூலம், ஒளிவீசும் மழு, மான், திகழ்கின்ற நெருப்பு, இடபவாகனம் இவற்றையெல்லாம் உடையவனே; (இலகுதல் - விளங்குதல்); (ஏறு - எருது); (சம்பந்தர் தேவாரம் - 1.11.1 - "படையார் மழுவுடையான் பல பூதப்படை யுடையான்");

எழில்-மட-மாதரார்கள் அவர் மனை-வாயில் ஏகி இடுபலி தேரும் ஈச - அழகிய மங்கையர்களது வீட்டு-வாயிலில் சென்று பிச்சையேற்கும் ஈசனே; (ஏகுதல் - போதல்); (இடுபலி - பிச்சை);

திருவாளா - திருவுடையவனே;

வலைஞனும் வீர-வேடன் வடிவமும் வேடம் ஆகும் மறைமுதலே - மீனவன் வடிவமும் வீரமுடைய வேடன் வடிவமும் உன் திருக்கோலமாக ஏற்றவனே, வேதநாயகனே; (வலைஞன் - மீனவன்); (வேடம் - வேஷம் - கோலம்); (* வலைஞன் - திருவிளையாடற்புராணத்தில் 57. வலை வீசின படலம் காண்க); (* வேடன் - அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருளிய சமயத்தில் ஏற்ற கோலம்);

பராவு சுரர் வாழ வரி-சிலையாக மேருவரை-கொடு போர்செய் தீ - போற்றிய தேவர்கள் உய்யும்படி, (நாண்) கட்டிய வில்லாக மேருமலையை ஏந்திப் போர் செய்த வீரனே; (பராவுதல் - புகழ்தல்); (வரித்தல் - கட்டுதல்); (சிலை - வில்); (வரை - மலை); (கொடு - கொண்டு - மூன்றாம்வேற்றுமை உருபு); (தீரன் - வீரன்);

மதில் அணி காழி மேய பெருமானே - மதிலால் சூழப்பெற்ற சீகாழியில் உறைகின்ற பெருமானே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


N.060 - மாணிக்க வாசகர் துதி - கடைபாற் கடலின்

2020-06-22

N.060 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2020

-------------

1) --- (சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனனா) ---

கடைபாற் கடலின் விடமுண் மிடறன்

சடையிற் புனலன் தனையே குருவா

அடையும் புகழார் அருள்வா சக(ம்)நற்

படைநம் பழவல் வினைபாற் றிடுமே.


கடை பாற்கடலின் விடம் உண் மிடறன் - தேவர்கள் கடைந்த பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்ட கண்டன்; (மிடறு - கண்டம்);

சடையில் புனலன்-தனையே குருவா அடையும் புகழார் - சடையில் கங்கையை அணிந்த பெருமானையே குருவாக அடைந்த புகழை உடையவரான மாணிக்கவாசகர்; (புனல் - நீர்); (குருவா - குருவாக);

அருள்-வாசகம் நற்படை நம் பழ-வல்வினை பாற்றிடுமே - அருளிய திருவாசகம் நல்ல ஆயுதமாகி நம் பழைய வலிய வினைகளை அழிக்கும்; (படை - ஆயுதம்); (பாற்றுதல் - அழித்தல்);


2) --- (சந்த வஞ்சித்துறை - தனாதனா தனாதனா) ---

பெருந்துறைக் குருந்தடி

இருந்தரன் புரிந்தருள்

அருந்தவர் மொழிந்தன

மருந்துயிர்க் கருந்துமே.


பெருந்துறைக் குருந்து-அடி - திருப்பெருந்துறையில் குருந்தமரத்தின்கீழ்;

இருந்து அரன் புரிந்து அருள் - வீற்றிருந்து சிவபெருமான் விரும்பி அருளிய;

அரும்-தவர் மொழிந்தன - அரிய தவமுனிவரான மாணிக்கவாசகர் மொழிந்தனவான திருவாசகப் பாடல்கள்;

மருந்து உயிர்க்கு அருந்துமே - நம் உயிருக்கு அமுதம் ஆகும்; அருந்துங்கள் (திருவாசகத்தை ஓதி உய்யுங்கள்); (மருந்து - அமுதம்);


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Friday, August 7, 2026

P.510 - பறியலூர் - கண்ணில் நீர் வார்தரக்

2020-06-20

P.510 - பறியலூர் (பரசலூர்)

--------------

(சந்தக் கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா)

(சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன்")

(இவை தமிழ்ச்சந்த இலக்கணப்படி அமைந்த பாடல்கள். இதனை ஒத்த அமைப்பை வடமொழியில் ஸ்ரக்விணீ (स्रग्विणी - sragviNI) என்று அழைப்பர். அச்யுதாஷ்டகம் இவ்வமைப்பே)


முற்குறிப்பு: படிப்போர் வசதி கருதிச் சில இடங்களில் புணர்ச்சி பிரித்த வடிவம் காட்டப்பட்டுள்ளது. சந்தியோடு நோக்கில் சந்தம் கெடாமையை உணர்க.

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

கண்ணில்நீர் வார்தரக் கைதொழும் பத்தரை

விண்ணிலேற் றும்பரன் வெண்மதிக் கண்ணியான்

வண்ணமார் பூக்களில் மாந்திவண் டூதிடும்

பண்ணறாச் சோலைசூழ் பறியல்வீ ரட்டனே.


கண்ணில் நீர் வார்தரக் கைதொழும் பத்தரை விண்ணில் ஏற்றும் பரன் - கண்களில் நீர் கசியக் கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்கு வானுலக வாழ்வைத் தரும் பரமன்; (கண்ணினீர் - கண்ணின் நீர் / கண்ணில் நீர்); (வார்தல் - ஒழுகுதல்); (தருதல் - ஒரு துணைவினை);

வெண்மதிக் கண்ணியான் - வெண்திங்களைக் கண்ணியாக முடியில் அணிந்தவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

வண்ணம் ஆர் பூக்களில் மாந்தி வண்டு ஊதிடும் - அழகிய பூக்களில் மது உண்டு வண்டுகள் ஒலிக்கின்ற; (வண்ணம் - அழகு); (ஊதுதல் - வண்டு முதலியன ஒலித்தல்);

பண் அறாச் சோலை சூழ் பறியல் வீரட்டனே - இனிய இசை எப்பொழுதும் கேட்கின்ற சோலை சூழ்ந்த திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


2)

காட்டிலா டுங்கழல் கைதொழின் வல்வினை

வீட்டிவான் நல்குவான் வெண்குழைக் காதினன்

நாட்டமோர் மூன்றினான் நாடிவண் டார்த்திடும்

பாட்டறாச் சோலைசூழ் பறியல்வீ ரட்டனே.


காட்டில் ஆடும் கழல் கைதொழின் வல்வினை வீட்டி வான் நல்குவான் - சுடுகாட்டில் ஆடுகின்ற திருவடியைக் கைதொழும் பக்தர்களது வலிய வினைகளை அழித்து அவர்களுக்கு வானுலக வாழ்வைக் கொடுப்பான்; (கைதொழின் - கைதொழுதால்); (வீட்டுதல் - அழித்தல்);

வெண்குழைக் காதினன் - காதில் வெண்குழையை அணிந்தவன்;

நாட்டம் ஓர் மூன்றினான் - மூன்று கண்களை உடையவன்; (நாட்டம் - கண்);

நாடி வண்டு ஆர்த்திடும் பாட்டு அறாச் சோலை சூழ் பறியல் வீரட்டனே - தேனை விரும்பி வண்டுகள் ஒலிக்கும் இன்னிசை எப்பொழுதும் கேட்கின்ற சோலை சூழ்ந்த திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


3)

உம்பரார் வேண்டவே உன்னிடா தைம்மலர்

அம்பினால் தாக்குவேள் அன்றுநீ றாக்கினான்

செம்பிரான் வாளரா திங்கள்சேர் சென்னியன்

பைம்பொழில் சூழ்ந்திடும் பறியல்வீ ரட்டனே.


உம்பரார் வேண்டவே உன்னிடாது ஐம்மலர் அம்பினால் தாக்கு வேள் அன்று நீறு ஆக்கினான் - தேவர்கள் வேண்டிக்கேட்கவும் சிறிதும் யோசியாமல் ஐந்து மலர்ப்பாணங்களால் தாக்கிய மன்மதனை அப்பொழுது சாம்பல் ஆக்கியவன்; (உன்னுதல் - எண்ணுதல்); (வேள் - காமன்);

செம்பிரான் - செம்மேனியன்;

வாள்-அரா திங்கள் சேர் சென்னியன் - கொடிய பாம்பையும் சந்திரனையும் திருமுடிமேல் ஒன்றாகச் சேர்த்தவன்; (வாள் - கொடிய);

பைம்பொழில் சூழ்ந்திடும் பறியல் வீரட்டனே - அழகிய சோலை சூழ்ந்த திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


4)

சங்கரா சம்புவே தாணுவே தாதையே

அங்கணா என்பவர்க் காரருள் செய்பவன்

பொங்கராத் தாரினன் பொற்சடைப் புண்ணியன்

பைங்கணே றேறினான் பறியல்வீ ரட்டனே.


"சங்கரா, சம்புவே, தாணுவே, தாதையே, அங்கணா" என்பவர்க்கு ஆரருள் செய்பவன் - "சங்கரனே, சம்புவே, ஸ்தாணுவே, தந்தையே, அருட்கண்ணனே" என்று பல திருநாமங்களைச் சொல்லி வழிபடும் பக்தர்களுக்கு மிகவும் அருள்செய்பவன்; (சங்கரன் - நன்மை செய்பவன்); (சம்பு - சுகத்தைத் தருபவன்); (தாணு - அசைவற்றவன்); (தாதை - தந்தை); (அங்கணன் - அருள்நோக்கம் உடையவன்);

பொங்கு-அராத் தாரினன் - சீறும் பாம்பை மாலையாக அணிந்தவன்;

பொற்சடைப் புண்ணியன் - பொன் போன்ற சடையை உடைய புண்ணியமூர்த்தி;

பைங்கண் ஏறு ஏறினான் - அழகிய கண்களையுடைய இடபத்தை ஊர்தியாக உடையவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


5)

வேலனைப் பெற்றவன் வேத(ம்)நான் கோதிய

ஆலனக் காரமாம் ஐயன்முக் கண்ணினன்

காலனைக் காலினால் காய்ந்தவன் கைதொழும்

பாலனைக் காத்தவன் பறியல்வீ ரட்டனே.


வேலனைப் பெற்றவன் - முருகனுக்குத் தந்தை;

வேதம் நான்கு ஓதிய ஆலன் - நான்கு வேதங்களையும் ஓதிய தட்சிணாமூர்த்தி; (ஆலன் - கல்லாலமரத்தின்கீழ் இருப்பவன்);

அக்கு ஆரம் ஆம் ஐயன் - எலும்பை மாலையாக அணிந்த தலைவன்; (அக்கு - எலும்பு); (ஆரம் - ஹாரம் - மாலை);

முக்கண்ணினன் - மூன்று கண்களை உடையவன்;

காலனைக் காலினால் காய்ந்தவன் - காலனைக் காலால் உதைத்தவன்;

கைதொழும் பாலனைக் காத்தவன் - வழிபாடு செய்த மார்க்கண்டேயரைக் காத்துஅருளியவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


6)

பேரிடர் தீர்ந்திடப் பேணினார்க் காப்பவன்

போரிடும் வெங்கரித் தோலினைப் போர்த்தவன்

ஊரிடும் பிச்சையே ஊணெனக் கொண்டவன்

பாரிடஞ் சூழ்பரன் பறியல்வீ ரட்டனே.


பேரிடர் தீர்ந்திடப் பேணினார்க் காப்பவன் - பெருந்துன்பம் தீரவேண்டிப் போற்றும் பக்தர்களைக் காப்பவன்; ("பேணிணார்க் காப்பவன்" - இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி வல்லொற்று மிகும்);

போரிடும் வெங்கரித் தோலினைப் போர்த்தவன் - போர் செய்த கொடிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவன்;

ஊர் இடும் பிச்சையே ஊண் எனக் கொண்டவன் - ஊரிலுள்ளோர் இடும் பிச்சையையே உணவாக உடையவன்; (ஊண் - உணவு);

பாரிடம் சூழ் பரன் - பூதகணங்கள் சூழ்ந்துள்ள பரமன்; (பாரிடம் - பூதம்);

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


7)

சேவதே றுஞ்சிவன் தெண்புனல் கொக்கதன்

தூவலார் சென்னியன் தோற்றமும் கேடிலான்

காவலார் முப்புரம் வேவவே நக்கவன்

பாவையோர் பங்கினன் பறியல்வீ ரட்டனே.


சே-அது ஏறும் சிவன் - இடபத்தை வாகனமாக உடைய சிவன்; (சே - எருது);

தெண்புனல் கொக்கு-தன் தூவல் ஆர் சென்னியன் - தெளிந்த நீர்க்கங்கையையும் கொக்கின் இறகையும் முடிமேல் அணிந்தவன்; (தூவல் - இறகு); (கொக்கின் இறகு - 1. கொக்கிறகு என்ற பூ; 2. கொக்குவடிவாய குரண்டாசுரனை அழித்த அடையாளம்);

தோற்றமும் கேடு இலான் - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்; (கேடு - கேடும்; உம் தொக்கது);

காவல் ஆர் முப்புரம் வேவவே நக்கவன் - காவல் மிக்க முப்புரங்கள் வெந்து அழியும்படி சிரித்தவன்; (நகுதல் - சிரித்தல்);

பாவை ஓர் பங்கினன் - உமையை ஒரு பங்கில் உடையவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


8)

தக்கதொன் றோர்கிலான் தான்வரைக் கீழ்மிகத்

துக்கமுற் றார்த்தழத் தூவிரல் வைத்தவன்

திக்கெலாம் ஆடையாம் சீர்த்தியன் மேனியில்

பக்கமோர் பாவையான் பறியல்வீ ரட்டனே.


தக்கது ஒன்று ஓர்கிலான் தான் வரைக்கீழ் மிகத் துக்கமுற்று ஆர்த்து அழத் தூ-விரல் வைத்தவன் - செய்யத்-தக்கது ஒன்றையும் எண்ணாதவனான இராவணன் அவன் கயிலைமலைக்கீழே மிகவும் துக்கமடைந்து கத்தி அழும்படி தூய விரல் ஒன்றை ஊன்றியவன்; (ஓர்தல் - சிந்தித்தல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);

திக்கு-எலாம் ஆடை ஆம் சீர்த்தியன் - திக்குகளே ஆடையாகும் பெருமை உடையவன்; திகம்பரன்; (சீர்த்தி - புகழ்);

மேனியில் பக்கம் ஓர் பாவையான் - திருமேனியில் ஒரு பக்கம் உமையைப் பங்காக உடையவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


9)

கந்தமார் போதனும் கண்ணனும் காண்கிலா

அந்தமில் சோதியான் ஐந்தொழில் செய்பவன்

செந்தமிழ்ப் பாடலைச் செப்பினார்க் கன்பினன்

பந்தமில் பாங்கினான் பறியல்வீ ரட்டனே.


கந்தம் ஆர் போதனும் கண்ணனும் காண்கிலா அந்தம் இல் சோதியான் - மணம் மிக்க தாமரைமலரில் இருக்கும் பிரமன், திருமால் இவர்களால் காண ஒண்ணாத எல்லையற்ற ஒளிவடிவினன்; (போது - பூ);

ஐந்தொழில் செய்பவன் - படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் (ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்ரஹம்) என்ற பஞ்சகிருத்தியம் செய்பவன்;

செந்தமிழ்ப் பாடலைச் செப்பினார்க்கு அன்பினன் - தேவாரம் முதலிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடும் பக்தர்களுக்கு அன்புடையவன்;

பந்தம் இல் பாங்கினான் - எவ்விதப் பந்தமும் இல்லாதவன்; (பாங்கு - இயல்பு);

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


10)

ஆய்தலைச் செய்கிலா அந்தகர் நீறிடாப்

பேய்மனப் பிட்டர்சொல் பேணிடேல் காமனைக்

காய்பவன் தாள்தொழும் பத்தரைக் காப்பவன்

பாய்புலித் தோலினான் பறியல்வீ ரட்டனே.


ஆய்தலைச் செய்கிலா அந்தகர் - ஆராயாத குருடர்கள்; (சம்பந்தர் தேவாரம் - 1.11.5 - "ஆயாதன சமயம்பல அறியாதவன்");

நீறு இடாப் பேய்மனப் பிட்டர் சொல் பேணிடேல் - திருநீற்றைப் பூசாதவர்களும் பேய் போன்ற மனம் உடையவர்களுமான பிரஷ்டர்கள் சொல்லை மதிக்கவேண்டா; (பிட்டர் - பிரஷ்டர் - புறம்பானவர்கள்);

காமனைக் காய் பவன் - மன்மதனை எரித்தவனும் பவன் என்ற திருநாமம் உடையவனுமான சிவபெருமான்; (பவன் - என்றும் உள்ளவன்);

தாள்தொழும் பத்தரைக் காப்பவன் - தன் திருவடியை வணங்கும் பக்தர்களைக் காப்பவன்;

பாய்புலித் தோலினான் - பாயும் புலியின் தோலை அரையில் கட்டியவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


11)

பூத்திரள் கொண்டுதாள் போற்றிடாத் தக்கனார்

தீத்தொழில் செற்றவன் செவ்வணன் மூவரின்

மூத்தவன் முக்கணன் முன்னமோர் அத்திரம்

பார்த்தனுக் கீந்தவன் பறியல்வீ ரட்டனே.


பூத்திரள் கொண்டு தாள் போற்றிடாத் தக்கனார் தீத்தொழில் செற்றவன் - பூக்களால் திருவடியைப் போற்றாத தக்கன் செய்த அவவேள்வியை அழித்தவன்; (தீத்தொழில் - 1. தீய செயல்; 2. அக்கினி காரியம் - ஹோமம்; வேள்வி); (செறுதல் - அழித்தல்); (அப்பர் தேவாரம் - 4.95.4 - "தீத்தொழிலான் தலை தீயிலிட்டுச் செய்த வேள்வி செற்றீர்");

செவ்வணன் - செம்மேனியன்;

மூவரின் மூத்தவன் - மும்மூர்த்திகளினும் முற்பட்டவன்; (இன் - ஐந்தாம்வேற்றுமை உருபு);

முக்கணன் - நெற்றிக்கண்ணன்;

முன்னம் ஓர் அத்திரம் பார்த்தனுக்கு ஈந்தவன் - முன்பு அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருளியவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------