Wednesday, September 16, 2026

P.514 - நாரையூர் - ஆடினார் கழல்கள்

2020-08-22

P.514 - நாரையூர்

-----------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு; விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.56.1 - "மாயிரு ஞால மெல்லாம்")

(சுந்தரர் தேவாரம் - 7.8.1 - "இறைகளோ டிசைந்த இன்பம்")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

1)

ஆடினார் கழல்கள் ஏத்தி .. அவருறை தலங்கள் தோறும்

பாடினார் மூவர் அந்தப் .. பாடல்கள் நமக்குக் கிட்டத்

தேடினார் வேண்டக் கேட்ட .. திருச்செவிப் பிள்ளைக் கத்தர்

நாடினார்க் கருள்கள் செய்வார் .. நாரையூர் அழக னாரே


ஆடினார் கழல்கள் ஏத்தி அவர் உறை தலங்கள் தோறும் பாடினார் மூவர் - கூத்தாடும் பெருமானாரது திருவடியைப் போற்றி அவர் உறையும் தலங்கள் பலவும் சென்று தேவார மூவர் பாடினார்கள்;

அந்தப் பாடல்கள் நமக்குக் கிட்டத் தேடினார் வேண்டக் கேட்ட திருச்செவிப் பிள்ளைக்கு அத்தர் - அப்பாடல்கள் எங்கு உள்ளன என்று தேடிய சோழமன்னனுக்கு இரங்கி நம்பியாண்டார் நம்பிகள் வேண்ட அவ்வேண்டுகோளை ஏற்றருளிய திருச்செவியையுடைய விநாயகனுக்குத் தந்தையார்; (அத்தர் - தந்தையார்);

நாடினார்க்கு அருள்கள் செய்வார் - விரும்பி வழிபடும் பக்தர்களுக்கு அருள்பவர்;

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்; (* அழகனார் - இத்தலத்து இறைவன் திருநாமம் சௌந்தரேஸ்வரர்);


2)

உம்பரார் துன்பம் தீர .. ஒன்னலர் புரங்கள் வேவ

அம்பினால் எய்த வீரர் .. அன்பினால் பூசை செய்த

நம்பியாண் டார்நம் பிக்கு .. நன்றருள் பிள்ளைக் கத்தர்

நம்பினார் வினைகள் தீர்ப்பார் .. நாரையூர் அழக னாரே.


உம்பரார் துன்பம் தீர ஒன்னலர் புரங்கள் வேவ அம்பினால் எய்த வீரர் - தேவர்கள் பட்ட துன்பம் தீருமாறு, பகைத்த அசுரர்களது முப்புரங்களும் வெந்து அழிய, அவற்றை ஒரு கணையால் எய்த வீரர்; (ஒன்னலர் - பகைவர்);

அன்பினால் பூசை செய்த நம்பியாண்டார்-நம்பிக்கு நன்று அருள் பிள்ளைக்கு அத்தர் - மிகுந்த பக்தியோடு பூசித்த சிறுவரான நம்பியாண்டார்-நம்பிக்கு இன்னருள் செய்த விநாயகனுக்குத் தந்தையார்; (* நம்பியாண்டார்நம்பி விநாயகரை வழிபாடு செய்த தலம் இது);

நம்பினார் வினைகள் தீர்ப்பார் - விரும்பி வழிபடுபவர்களது தீவினையத் தீர்ப்பவர்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்);

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


3)

மீனினை உண்ணும் நாரை .. விருப்பொடு போற்றி செய்ய

வானினை நல்கும் வள்ளல் .. மான்விழி மங்கை பங்கர்

ஆனிலைந் தாடும் ஐயர் .. அருமறை ஓது நாவர்

ஞானியர் நெஞ்சில் உள்ளார் .. நாரையூர் அழக னாரே.


மீனினை உண்ணும் நாரை விருப்பொடு போற்றி செய்ய வானினை நல்கும் வள்ளல் - மீனை உண்ணும் இயல்புடைய நாரை அன்போடு வழிபடக் கண்டு அருள்புரிந்த வள்ளல்; (* நாரை வழிபாடு செய்த தலம் திருநாரையூர்);

மான்விழி மங்கை பங்கர் - மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமையை ஒரு பங்கில் உடையவர்;

ஆனில்-ஐந்து ஆடும் ஐயர் - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் செய்யப்பெறும் தலைவர்; (ஆனில்ஐந்து - பஞ்சகவ்வியம்);

அருமறை ஓது நாவர் - அரிய வேதங்களைப் பாடியருளியவர்;

ஞானியர் நெஞ்சில் உள்ளார் - ஞானியர் உள்ளத்தில் உறைபவர்;

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


4)

வெற்றியை எண்ணி அம்பு .. விட்டமன் மதனைச் சுட்டார்

கற்றையஞ் சடையில் கங்கை .. கதிர்மதி அரவம் வைத்தார்

ஒற்றைவெள் விடையர் நாளும் .. உள(ம்)நெகிழ்ந் தேத்தும் பத்தர்

நற்றமிழ்க் கிரங்கு(ம்) நம்பர் .. நாரையூர் அழக னாரே.


வெற்றியை எண்ணி அம்பு விட்ட மன்மதனைச் சுட்டார் - வெற்றி நிச்சயம் என்று எண்ணி மலர்க்கணையை ஏவிய மன்மதனைச் சுட்டெரித்தவர்;

கற்றை-ஞ்சடையில் கங்கை கதிர்மதி அரவம் வைத்தார் - அழகிய கற்றைச்சடையில் கங்கை, கிரணங்களையுடைய சந்திரன், பாம்பு இவற்றை அணிந்தவர்; (அஞ்சடை - அம் சடை; அம் - அழகு);

ஒற்றை வெள்விடையர் - ஒப்பற்ற வெள்ளை ஏற்றை வாகனமாக உடையவர்; (ஒற்றை - ஒப்பற்ற);

நாளும் உளம் நெகிழ்ந்து ஏத்தும் பத்தர் நற்றமிழ்க்கு இரங்கும் நம்பர் - தினமும் உள்ளம் நெகிழ்ந்து துதிக்கும் பக்தர்கள் பாடும் நல்ல தமிழ்ப்பாமாலைகளைக் கேட்டு இரங்கி அருளும் பெருமானார்;

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


5)

அஞ்செழுத் தோதி நாளும் .. அடியிணை பரவி னாரை

அஞ்சலென் றருளு(ம்) நாதர் .. அன்றடற் கூற்று தன்னை

நெஞ்சினில் உதைத்த பாதர் .. நிழல்மழு வாளர் நீற்றர்

நஞ்சினை உண்ட கண்டர் .. நாரையூர் அழக னாரே.


அஞ்செழுத்து ஓதி நாளும் அடியிணை பரவினாரை - திருவைந்தெழுத்தை ஓதித் தினமும் இருதிருவடிகளைப் போற்றும் பக்தர்களை;

அஞ்சல் என்று அருளும் நாதர் - "அஞ்சாதே" என்று அருளிக் காக்கும் தலைவர்;

அன்று அடல்-கூற்றுதன்னை நெஞ்சினில் உதைத்த பாதர் - முன்பு, (மார்க்கண்டேயரைக் காத்து), வலிய காலனை மார்பில் உதைத்தவர்; (அடல் - கொலை; வலிமை);

நிழல்-மழுவாளர், நீற்றர் - ஒளி திகழும் மழுவாயுதத்தை ஏந்தியவர், திருநீற்றைப் பூசியவர்; (நிழல் - ஒளி);

நஞ்சினை உண்ட கண்டர் - ஆலகாலத்தை உண்ட நீலகண்டர்;

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


6)

பொறுமையைப் பூண்டு பாதம் .. போற்றினார் தங்கட் கிம்மை

மறுமையின் பங்கள் நல்கும் .. வள்ளலார் தனதன் தோழர்

அறுபதம் பலவும் கூடி .. ஆர்த்திசை பாடு கின்ற

நறுமலர்ச் சோலை சூழ்ந்த .. நாரையூர் அழக னாரே.


பொறுமையைப் பூண்டு பாதம் போற்றினார்-தங்கட்கு - சினத்தைத் துறந்து தணிந்த மனத்தோடு திருவடியை வணங்கும் பக்தர்களுக்கு; (சம்பந்தர் தேவாரம் - 1.50.1 - "ஒல்லை ஆறி உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிந்து வெய்ய சொல்லை ஆறித்");

இம்மை மறுமை இன்பங்கள் நல்கும் வள்ளலார் - இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் இன்பங்களை வழங்கியருளும் வள்ளல்; (அப்பர் தேவாரம் - 5.87.5 - "மணஞ்சேரி எம் வள்ளலார்கழல் வாழ்த்தல் வாழ்வாவதே");

தனதன் தோழர் - குபேரன் தோழர்; (தனதன் - குபேரன்); (திருமாளிகைத்தேவர் - திருவிசைப்பா - 9.1.7 - "தனதன் நற்றோழா சங்கரா");

அறுபதம் பலவும் கூடி ஆர்த்து இசை பாடுகின்ற நறுமலர்ச் சோலை சூழ்ந்த - வண்டுகள் பல திரண்டு ஒலித்து இன்னிசை பாடும் வாசமலர் நிறைந்த சோலை சூழ்ந்த;

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


7)

அரிபணிந் தேத்த முன்னம் .. ஆழியை ஈந்த ஈசர்

திரிபுர சுந்த ரிக்குத் .. திருவுடம் பதனிற் பாதி

பரிவொடு தந்த பண்பர் .. பாய்புலித் தோலர் அல்லில்

நரிதிரி கானிற் கூத்தர் .. நாரையூர் அழக னாரே.


அரி பணிந்து ஏத்த முன்னம் ஆழியை ஈந்த ஈசர் - முன்பு வழிபாடு செய்து வேண்டிய திருமாலுக்குச் சக்கராயுதத்தைத் தந்தருளிய ஈசனார்; (ஆழி - சக்கரம்);

திரிபுரசுந்தரிக்குத் திருவுடம்பு-தனில் பாதி பரிவொடு தந்த பண்பர் - திரிபுரசுந்தரி என்ற திருநாமத்தையுடைய உமைக்குத் திருமேனியில் பாதியை அன்போடு தந்தவர்; (பரிவு - அன்பு); (* திரிபுரசுந்தரி - இத்தலத்து இறைவி திருநாமம்);

பாய்புலித் தோலர் - பாயும் இயல்புடைய புலியின் தோலை ஆடையாகக் கட்டியவர்;

அல்லில் நரி திரி கானில் கூத்தர் - நரிகள் திரியும் சுடுகாட்டில், இரவில் கூத்து ஆடுபவர்; (அல் - இரவு);

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


8)

மடம்பெரி துடையி லங்கை .. மன்னவன் மலையெ டுக்கத்

தடம்புயம் பத்தி ரட்டி .. தலைகள்பத் தடர்த்த ஈசர்

விடம்பெரு மணிபோற் பூணு(ம்) .. மிடறினர் அம்ப லத்தில்

நடம்புரி கின்ற பாதர் .. நாரையூர் அழக னாரே.


மடம் பெரிதுடை இலங்கை-மன்னவன் மலை எடுக்கத் - அறியாமை மிக்க இலங்கை-மன்னனான இராவணன் கயிலைமலையைப் பெயர்த்தபொழுது;

தடம்-புயம் பத்து-இரட்டி தலைகள் பத்து அடர்த்த ஈசர் - அவனுடைய பெரிய இருபது புஜங்களையும் பத்துத் தலைகளையும் நசுக்கிய ஈசனார்; (பத்திரட்டி = 10x2 = 20);

விடம் பெருமணி போல் பூணும் மிடறினர் - ஆலகாலத்தைப் பெரிய மணிபோல் அணியும் கண்டத்தை உடையவர்;

அம்பலத்தில் நடம் புரிகின்ற பாதர் - மன்றில் கூத்தாடும் திருப்பாதர்;

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


9)

அச்சுதன் பன்றி யாகி .. அடிதனை நேட வேதன்

உச்சியை நேட அன்றோர் .. ஒள்ளெரித் தூணாய் நின்றார்

கச்சியில் வன்றொண் டர்க்கோர் .. கண்ணருள் செய்யே கம்பர்

நச்சராப் பூண்ட மார்பர் .. நாரையூர் அழக னாரே.


அச்சுதன் பன்றியாகி அடிதனை நேட - திருமால் பன்றி வடிவில் சென்று திருவடியைத் தேடுமாறும்;

வேதன் உச்சியை நேட - பிரமன் (அன்னப்பறவை வடிவில்) உச்சியைத் தேடுமாறும்;

அன்று ஓர் ஒள்-எரித் தூணாய் நின்றார் - முன்னர் ஒப்பற்ற ஒளித்தூண் ஆகி நின்றவர்;

கச்சியில் வன்தொண்டர்க்கு ஓர் கண் அருள்செய் ஏகம்பர் - கச்சியில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒரு கண்ணில் பார்வையைத் தந்தருளிய ஏகம்பர்;

நச்சு-அராப் பூண்ட மார்பர் - திருமார்பில் விஷப்பாம்பை மாலைபோல் அணிந்தவர்;

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


10)

கொடுமொழி பலவும் கூறிக் .. குழிதனில் வீழ்த்து கின்ற

கெடுமதி யாளர் செய்யும் .. கிறிதனை நீங்கி வாரீர்

தொடுமலர் கொண்டு வாழ்த்தில் .. துயரறுப் பார்கன் றாப்பில்

நடுதறி ஆகி நின்ற .. நாரையூர் அழக னாரே.


கொடுமொழி பலவும் கூறிக் குழிதனில் வீழ்த்துகின்ற - கொடிய வார்த்தைகள் பல பேசிக் குழியில் தள்ளுகின்ற;

கெடுமதியாளர் செய்யும் கிறிதனை நீங்கி வாரீர் - தீயவர்கள் செய்யும் வஞ்சனையை நீங்கி வாருங்கள்; (கிறி - வஞ்சனை; மாயம்);

தொடுமலர் கொண்டு வாழ்த்தில் துயர் அறுப்பார் - தொடுத்த பூக்களைக் கொண்டு (மாலைகளை இட்டு) வழிபாடு செய்தால் நம் துயரத்தைத் தீர்ப்பவர்;

கன்றாப்பில் நடுதறி ஆகி நின்ற - திருக்கன்றாப்பூரில் நடுதறி உருவில் நின்ற பெருமானாரான; (அப்பர் தேவாரம் - 6.79.8 - "கனியைத் தேனைக் கன்றாப்பில் நடுதறியைக்"); (அப்பர் தேவாரம் - 6.61.2 - "கடிமலர்தூய்த் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே"); (கன்றாப்பூர் நடுதறி - திருக்கன்றாப்பூரில் கன்று கட்டுதற்கு நடப்பட்ட தறியே சிவனுரு ஆயிற்று);

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


11)

பொலிவுறத் திங்கள் தன்னைப் .. பொற்சடை மீது வைத்தார்

கலிகடல் உமிழ்ந்த நஞ்சைக் .. கவினுறக் கண்டம் இட்டார்

பலிபெற ஓடொன் றேந்தும் .. பரமனார் பத்தர்க் கென்றும்

நலிவற நல்கு(ம்) நாதர் .. நாரையூர் அழக னாரே.


பொலிவுறத் திங்கள்-தன்னைப் பொற்சடை மீது வைத்தார் - திகழுமாறு பிறையைப் பொன் போன்ற சடையின்மேல் அணிந்தார்;

கலி-கடல் உமிழ்ந்த நஞ்சைக் கவினுறக் கண்டம் இட்டார் - ஒலிக்கின்ற பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை அழகுறக் கண்டத்தில் தாங்கினார்; (கலித்தல் - ஒலித்தல்);

பலி பெற ஓடு ஒன்று ஏந்தும் பரமனார் - பிச்சைக்காகப் பிரமனது மண்டையோட்டை ஏந்தும் பரமர்;

பத்தர்க்கு என்றும் நலிவு அற நல்கும் நாதர் - அடியவர்களுக்கு என்றும் துன்பம் இல்லாதபடி அருள் வழங்கும் தலைவர்;

நாரையூர் அழகனாரே - திருநாரையூரில் எழுந்தருளிய அழகரான சிவபெருமானார்;


வி. சுப்பிரமணியன்

-----------


Sunday, September 13, 2026

S.154 - சிவன் - விநாயகன் - சிலேடை

2020-08-22 (விநாயக-சதுர்த்தி நாள்)

S.154 - சிவன் - விநாயகன் - சிலேடை

-----------

இக்கட் டழிப்பவனை எண்ணில் நலஞ்செய்யும்

அக்கர மைந்தனை மூத்தவனைத் - திக்குடை

நாதனை எம்மானை நல்வடிவா னானைமுக்கட்

போதனைவி நாயகனைப் போற்று.


சொற்பொருள்:

இக்கட்டு - 1. இக்-கட்டு (இந்தப் பந்தம், பாசம்); 2. கஷ்டம்; இடுக்கண்;

எண்ணில் - 1. எண்ணற்ற; அளவற்ற; 2. எண்ணினால்; சிந்தித்தால்;

அக்கரமைந்தனை - 1. அக்கரம் ஐந்தனை (திருவைந்தெழுத்தினனை); அக்கர மைந்தனை (அழிவற்ற வீரனை); 2. அக்-கரம் ஐந்தனை (அந்த ஐங்கரனை);

அக்கரம் - அக்ஷரம் (अक्षर akṣara) - 1. எழுத்து; 2. அழிவின்மை;

மைந்தன் - 1. வீரன்; 2.மகன்;

மூத்தவன் - 1. மேலோன்; 2. அண்ணன்;

திக்குடை - 1. திக்கு உடை (திசைகளே ஆடை - திகம்பரன்); 2. எல்லாத் திசைகளையும் உடைய (= ஆளும்);

திகம்பரன் - (दिगम्बर digambara - a. having only the directions for his clothing, stark naked, unclothed);

எம்மானை நல்வடிவானானை - 1. எம்மானை, நல்-வடிவு ஆனானை; 2. எம் ஆனை நல்-வடிவு ஆனானை (ஆனவனை);

வடிவு - 1. அழகு; 2. உருவம்;

ஆனானை - 1. ஆனவனை; 2. நீங்காதவனை; ஆனுதல் - நீங்குதல்;

போதன் - bōdha - ஞானன்;

விநாயகன் - கணபதி;


விநாயகன்:

இக்கட்டு அழிப்பவனை எண்ணில் - தியானித்தால் இடர்களைத் தீர்ப்பவனை;

நலம் செய்யும் அக்-கரம்-ஐந்தனை - நன்மைசெய்யும் அந்த ஐந்து-கரத்தனை;

மூத்தவனைத் - மூத்த பிள்ளையாரை;

திக்குடை நாதனை - எல்லாத் திசைகளையும் உடைய தலைவனை (= அண்டம் முழுதும் ஆள்பவனை);

எம் ஆனை நல்வடிவு ஆனானை - எங்கள் நல்ல யானை-வடிவத்தை உடையவனை;

விநாயகனைப் போற்று - கணபதியைத் துதி;


சிவன்:

இக்-கட்டு அழிப்பவனை - இந்தப் பந்தங்களைப் பாசங்களைப் போக்குபவனை; (மும்மலக்கட்டை நீக்குபவனை);

எண்-இல் நலம்செய்யும் அக்கரமைந்தனை - 1. அளவற்ற நன்மைசெய்யும் அஞ்செழுத்தனை; 2. அளவற்ற நன்மைசெய்யும் அழிவற்ற வீரனை;

மூத்தவனைத் - மேலானவனை; மிகவும் தொன்மையானவனை;

திக்கு-உடை நாதனை - திசைகளையே ஆடையாக உடைய தலைவனை; (திகம்பரனை);

எம்மானை - எம் தலைவனை;

நல்வடிவு ஆனானை - 1. நல்ல அழகுடையவனை; 2. நல்ல அழகிய வடிவுடைய, என்றும் நீங்காதவனை;

முக்கட் போதனைப் போற்று - முக்கண்ணுடைய ஞானனைத் துதி;


வி. சுப்பிரமணியன்

------------


T.247 - புறவம் (காழி) - குழிவிட்டெழு வழி

2020-08-16

T.247 - புறவம் (காழி) - குழிவிட்டெழு வழி

-----------

(வண்ணவிருத்தம்;

தனனத் தனதன .. தனதான)

(அயிலொத் தெழுமிரு விழியாலே - திருப்புகழ் - மயிலாப்பூர்)


குழிவிட் டெழுவழி .. அறியாத

.. குருடர்க் கிசைவுற .. ஒழுகாமல்

ஒழிவற் றுனதடி .. யிணைபாடும்

.. உணர்வுற் றிடவருள் .. புரியாயே

அழிவைத் தருவிட(ம்) .. மணிபோல

.. அழகைத் தருமிட .. றுடையானே

பொழிலிற் சிறையளி .. இசைபாடும்

.. புறவத் தினிலுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

குழி-விட்டு எழு வழி அறியாத

.. குருடர்க்கு இசைவு உற ஒழுகாமல்,

ஒழிவு-அற்று உனது அடியிணை பாடும்

.. உணர்வு-உற்றிட அருள் புரியாயே;

அழிவைத் தரு விட(ம்) மணி போல

.. அழகைத் தரு மிடறு உடையானே;

பொழிலில் சிறை-அளி இசை பாடும்

.. புறவத்தினில் உறை பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

குழி-விட்டு எழு வழி அறியாத குருடர்க்கு இசைவு-உற ஒழுகாமல் - குழியிலிருந்து நீங்கி உயரும் நெறியை அறியாத அறிவீனர்களோடு பொருந்தி அப்படி அவர்கள்போல் தீயவழியைக் கைக்கொள்ளாமல்; (இசைவு - பொருந்துதல்; உடன்பாடு); (ஒழுகுதல் - நடத்தல்; செயல்படுதல்);

ஒழிவு-அற்று உனது அடியிணை பாடும் உணர்வு உற்றிட அருள் புரியாயே - இடைவிடாமல் உன் திருவடி இரண்டையும் பாடும் அறிவை நான் பெற அருள்வாயாக; (உணர்வு - அறிவு; தெளிவு);

அழிவைத் தரு விட(ம்) மணி போல அழகைத் தரு மிடறு உடையானே - எல்லாவற்றையும் அழிக்கவல்ல ஆலகாலம் ஒரு நீலமணிபோல் அழகு செய்யும் கண்டத்தை உடையவனே; (மிடறு - கண்டம்);

பொழிலில் சிறை-அளி இசை பாடும் புறவத்தினில் உறை பெருமானே - சோலையில் அழகிய சிறகுகளையுடைய வண்டுகள் இனிய இசையெழுப்பும் புறவம் (சீகாழி) என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே; (சிறை - சிறகு); (அளி - வண்டு); (புறவம் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);


வி. சுப்பிரமணியன்

-----------


T.246 - திலதைப்பதி - பரிவற்றடை நமன்

2020-08-16

T.246 - திலதைப்பதி - பரிவற்றடை நமன்

-----------

(வண்ணவிருத்தம்;

தனனத் தனதன .. தனதான)

(அயிலொத் தெழுமிரு விழியாலே - திருப்புகழ் - மயிலாப்பூர்)


பரிவற் றடைநமன் .. அணுகாத

.. படிநற் பெயர்தின(ம்) .. நினைவேனோ

புரிபொற் சடையிடை .. அலையாரும்

.. புனல்வைத் தருளிய .. புகழாளா

அரிவைக் கொருபுறம் .. அளிநேயா

.. அடியைத் தொழுசுரர் .. இடர்தீரத்

திரிமுப் புரமெரி .. சிலையானே

.. திலதைப் பதியுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

பரிவு-அற்று அடை நமன் அணுகாத-

.. படி நற்பெயர் தின(ம்) நினைவேனோ;

புரி-பொற்சடையிடை அலை ஆரும்

.. புனல் வைத்தருளிய புகழாளா;

அரிவைக்கு ஒரு-புறம் அளி-நேயா;

.. அடியைத் தொழு-சுரர் இடர் தீரத்

திரி-முப்புரம் எரி- சிலையானே;

.. திலதைப்பதி உறை பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

பரிவு-ற்று அடை நமன் அணுகாதபடி நற்பெயர் தின(ம்) நினைவேனோ - சிறிதும் இரக்கம் இன்றிக் கொல்ல அடையும் காலன் என்னை நெருங்காதபடி நான் உன் நல்ல நாமத்தைத் தினமும் நினையுமாறு அருள்வாயாக; (பரிவு - இரக்கம்; அன்பு); (அப்பர் தேவாரம் - 5.72.7 - "நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேனன்றே");

புரி-பொற்சடையிடை அலை ஆரும் புனல் வைத்தருளிய புகழாளா - சுருண்ட, பொன் போன்ற சடையில் அலை மிகும் கங்கையை அடைத்து அருளிய புகழாளனே; (புரிதல் - முறுக்குக்கொள்தல்); (ஆர்தல் - மிகுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.37.3 - "எல்லையில் புகழாளனும்");

அரிவைக்கு ஒரு-புறம் அளி நேயா - திருமேனியில் ஒரு பக்கத்தை உமைக்கு அளித்த அன்பனே; (அரிவை - பெண்);

அடியைத் தொழு சுரர் இடர் தீரத் திரி முப்புரம் எரி சிலையானே - திருவடியைத் தொழுத தேவர்களது துன்பம் தீரும்படி, எங்கும் திரிந்த முப்புரங்களை எரித்த வில்லை ஏந்தியவனே; (திரி முப்புரம் - வினைத்தொகை - திரிந்த முப்புரங்கள்); (சிலை - வில்); (சம்பந்தர் தேவாரம் - 2.40.7 - "சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த");

திலதைப்பதி உறை பெருமானே - திலதைப்பதியில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-----------


S.153 - சிவன் - கமலம் - சிலேடை

2020-08-14

S.153 - சிவன் - கமலம் - சிலேடை

-----------

வண்டார் வடிவேற்கும் மாலையிடம் காணலாம்

கண்டார் மனத்திற் களிப்பேறும் - தண்டேன்

சுரக்கும் இலைநீர்மேல் தோன்றும் கமலம்

இரக்கமிகு முக்கண் இறை.


சொற்பொருள்:

வண்டார் - 1. வண் தார்; 2. வண்டு ஆர்;

தார் - மாலை;

ஆர்தல் - பொருந்துதல்;

ஆர்த்தல் - ஒலித்தல்;

வடிவு - உருவம்; மேனி; அழகு;

மாலையிடம் - 1. திருமாலை இடப்பக்கம்; 2. பூமாலையில்;

கண்டார் - 1. தரிசித்தவர்கள், ஆராய்பவர்கள்; 2. பார்த்தவர்கள்;

தண்மை - குளிர்ச்சி;

தண்-தேன் - 1. இனிமை; ஆகுபெயராகி, இன்பம்; 2. குளிர்ந்த தேன்;

சுரத்தல் - 1. ஊறுதல்; 2. சொரிதல்;

மேல் - 1. தலை; 2. ஏழாம்வேற்றுமை உருபு;


கமலம் (தாமரை):

வண்டு ஆர் வடிவு ஏற்கும்; மாலையிடம் காணலாம்;

கண்டார் மனத்தில் களிப்பு ஏறும்; - தண்-தேன்

சுரக்கும்; இலை நீர்மேல் தோன்றும்; கமலம்,

இரக்கம் மிகு முக்கண் இறை.


வண்டுகள் ஒலிக்கும் அழகிய வடிவம் இருக்கும். பூமாலைகளில் இருக்கும். பார்க்கின்றவர்கள் மனத்தில் மகிழ்ச்சி மிகும். குளிர்ந்த தேன் சொரியும். அதன் இலை நீரின்மேல் காட்சி தரும். தாமரை.


சிவன்:

வண்-தார் வடிவு ஏற்கும்; மாலை இடம் காணலாம்;

கண்டார் மனத்தில் களிப்பு ஏறும், தண்-தேன்

சுரக்கும்; இலை நீர் மேல் தோன்றும்; கமலம்,

இரக்கம் மிகு முக்கண் இறை.


வளப்பமான மாலையைத் திருமேனியில் தாங்குபவன். திருமாலை இடப்பக்கம் பாகமாக உடையவன். அவனைத் தரிசிப்போர் மனத்தில் இன்பம் பெருகும், இன்பத்தேன் ஊறும். அவன் திருமுடிமேல் (வில்வம், வன்னி முதலிய) இலைகளும் கங்கையும் இருக்கும். கருணை மிகுந்த முக்கட்பெருமான்.

(அப்பர் தேவாரம் - 6.96.3 - "மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்");


வி. சுப்பிரமணியன்

------------


P.513 - நல்லம் (கோனேரிராஜபுரம்) - அறைகடல் நஞ்சினை

2020-08-04

P.513 - நல்லம் (கோனேரிராஜபுரம்)

-----------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

அறைகடல் நஞ்சினை அமுது செய்தருள்

கறைமலி கண்டனைக் கங்கை கூவிளம்

நறைமலர் சூடியை நல்ல(ம்) மேவிய

இறைவனை ஏத்திட என்றும் இன்பமே.


அறைகடல் நஞ்சினை அமுது செய்தருள் கறை மலி கண்டனைக் - ஒலிக்கின்ற கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டருளிய நீலகண்டனை; (அறைதல் - ஒலித்தல்);

கங்கை கூவிளம் நறைமலர் சூடியை - திருமுடிமேல் கங்கை, வில்வம், வாசமலர்கள் இவற்றையெல்லாம் அணிந்தவனை; (கூவிளம் - வில்வம்); (நறை - வாசனை; தேன்);

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

இறைவனை ஏத்திட என்றும் இன்பமே - இறைவனைத் துதித்து வணங்கினால் எந்நாளும் இன்பமே;


2)

அரையினில் அரவினை ஆர்த்த அண்ணலைத்

திரையணி சடையனைத் தேவ தேவனை

நரைவிடை ஏறியை நல்ல(ம்) மேவிய

அரையனை அடிதொழ அல்லல் இல்லையே.


அரையினில் அரவினை ஆர்த்த அண்ணலைத் - அரையில் கச்சாகப் பாம்பைக் கட்டிய தலைவனை; (ஆர்த்தல் - கட்டுதல்);

திரை அணி சடையனைத் - கங்காதரனை; (திரை - அலை; நதி);

தேவதேவனை - தேவாதிதேவனை;

நரைவிடை ஏறியை - வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனை; (நரை - வெண்மை);

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

அரையனை அடிதொழ அல்லல் இல்லையே - அரசனான சிவபெருமானை வழிபட்டால் துன்பம் தீரும்; (அரையன் - அரசன்);


3)

அங்கையில் அழலனை அஞ்சி வந்தடை

திங்களை வேணியில் திகழச் சூடியை

நங்கையொர் பங்கனை நல்ல(ம்) மேவிய

துங்கனைத் தொழுதெழத் துன்பம் இல்லையே.


அங்கையில் அழலனை - கையில் தீயைத் தாங்கியவனை;

அஞ்சி வந்து-டை திங்களை வேணியில் திகழச் சூடியை - சாபத்தால் தேய்ந்து அழியும் நிலையைக் கண்டு அஞ்சி வந்து சரணடைந்த சந்திரனைச் சடையில் விளங்கும்படி அணிந்தவனை; (வேணி - சடை);

நங்கை ஒர் பங்கனை - உமையை ஒரு பங்காக உடையவனை; (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

துங்கனைத் தொழுதெழத் துன்பம் இல்லையே - உயர்ந்தவனை வழிபட்டால் துன்பம் தீரும்; (துங்கன் - உயர்ந்தோன்);


4)

ஊன்மலி வெண்டலை ஒன்றை ஏந்தியை

வான்மதில் மூன்றெரி வாளி ஏவியை

நான்மறை நாவனை நல்ல(ம்) மேவிய

மான்மறிக் கையனை வாழ்த்தி வாழுமே.


ஊன் மலி வெண்தலை ஒன்றை ஏந்தியை - ஊன் திகழும் வெண்மையான மண்டையோட்டை உண்கலனாகக் கையில் ஏந்தியவனை;

வான்-மதில் மூன்று எரி வாளி ஏவியை - வானில் திரிந்த பெரிய கோட்டைகள் மூன்றையும் எரித்த அம்பை ஏவியவனை; (வான் - ஆகாயம்; பெரிய); (வாளி - அம்பு); (ஏவி - ஏவியவன்);

நான்மறை நாவனை - நால்வேதங்களையும் பாடியருளியவனை;

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

மான்மறிக் கையனை வாழ்த்தி வாழுமே - மான்கன்றைக் கையில் ஏந்திய பெருமானை வாழ்த்தி உய்யுங்கள்; (மறி - மான்கன்று);


5)

குஞ்சியின் மேற்கரம் கூப்பி வானவர்

அஞ்சலி செய்திட அபய(ம்) நல்கிய

நஞ்சணி கண்டனை நல்ல(ம்) மேவிய

மஞ்சனை வாழ்த்திட மல்கும் இன்பமே.


குஞ்சியின்மேல் கரம் கூப்பி வானவர் அஞ்சலி செய்திட அபயம் நல்கிய - தலைமேல் கைகுவித்துத் தேவர்கள் தொழுது இறைஞ்ச, அவர்களுக்கு அபயம் அளித்த; (குஞ்சி - தலை);

நஞ்சு அணி கண்டனை - ஆலகாலத்தை உண்ட நீலகண்டனை;

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

மஞ்சனை வாழ்த்திட மல்கும் இன்பமே - வீரனான சிவபெருமானை வாழ்த்தினால் இன்பம் பெருகும்; (மஞ்சன் - மைந்தன் - வீரன்); (மல்குதல் - மிகுதல்); (அப்பர் தேவாரம் - 4.57.1 - "மஞ்சனே மணியும் ஆனாய்");


6)

செக்கரஞ் சடையனைச் சீலர் சிந்தையில்

புக்குறை புனிதனைப் பூத நாதனை

நக்கனை நளிர்வயல் நல்ல(ம்) மேவிய

சொக்கனைத் தொழுதெழத் துக்கம் இல்லையே.


செக்கர் அஞ்சடையனைச் - சிவந்த அழகிய சடையை உடையவனை; (செக்கர் - சிவப்பு); (அம் - அழகு);

சீலர் சிந்தையில் புக்கு உறை புனிதனைப் - சீலர்களது நெஞ்சில் தங்கும் புனிதனை; (புக்கு - புகுந்து);

பூதநாதனை - பூதகணநாதனை;

நக்கனை - திகம்பரனை;

நளிர்-வயல் நல்லம் மேவிய - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற; (நளிர்தல் - குளிர்தல்);

சொக்கனைத் தொழுதெழத் துக்கம் இல்லையே - அழகனை வழிபட்டால் துக்கம் தீரும்; (சொக்கன் - அழகன்);


7)

கொம்பனை யாளொரு கூறு தாங்கிய

அன்பனை இன்பனை ஆனஞ் சாடியை

நம்பனை நளிர்வயல் நல்ல(ம்) மேவிய

உம்பனை உன்னிட உய்தி திண்ணமே.


கொம்பு-அனையாள் ஒரு கூறு தாங்கிய அன்பனை - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக உடைய அன்பனை; (சுந்தரர் தேவாரம் - 7.33.1 - "மலைப்பாவை ஓர் கூறு தாங்கிய குழகரோ");

இன்பனை - இன்பவடிவினனை;

ஆனஞ்சு ஆடியை - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்துபொருள்களால் அபிஷேகம் ஏற்பவனை; (ஆனஞ்சு - பஞ்சகவ்வியம்);

நம்பனை - எல்லாராலும் விரும்பத்தக்கவனை; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

நளிர்-வயல் நல்லம் மேவிய - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற; (நளிர்தல் - குளிர்தல்);

உம்பனை உன்னிட உய்தி திண்ணமே - தேவனைத் தியானித்தால் உய்வு நிச்சயம்; (உம்பன் - தேவன்); (உன்னுதல் - எண்ணுதல்);


8)

சட்டெனத் தடவரை தன்னைத் தூக்கிய

துட்டன திருபது தோள்நெ ரித்தருள்

நட்டனை நளிர்வயல் நல்ல(ம்) மேவிய

சிட்டனை அடிதொழச் செல்வம் மல்குமே.


சட்டெனத் தடவரை-தன்னைத் தூக்கிய - திடீரென்று பெரிய கயிலைமலையைப் பெயர்த்த; (தடம் - பெரிய); (வரை - மலை);

துட்டனது இருபது-தோள் நெரித்தருள் நட்டனை - துஷ்டனான இராவணனுடைய இருபது புஜங்களையும் நசுக்கியருளிய கூத்தனை; (நட்டன் - நடனம் ஆடுபவன்); (அப்பர் தேவாரம் - 5.81.1 - "பாண்டிக் கொடுமுடி நட்டனைத் தொழ நம்வினை நாசமே");

நளிர்-வயல் நல்லம் மேவிய - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற; (நளிர்தல் - குளிர்தல்);

சிட்டனை அடிதொழச் செல்வம் மல்குமே - உயர்ந்தவனை வணங்கினால் செல்வம் மிகும்; (சிட்டன் - சிஷ்டாசாரமுடையவன் - பெரியோன்);


9)

புள்ளதன் மேலினன் போதி னானிவர்

வெள்கிட ஓங்கிய வியன்நெ ருப்பினை

நள்ளிருள் ஆடியை நல்ல(ம்) மேவிய

வள்ளலை உள்கிட மல்கும் இன்பமே.


புள்-அதன் மேலினன் போதினான் இவர் - கருடவாகனனான திருமால், தாமரைப்பூமேல் இருக்கும் பிரமன் இவர்கள் இருவரும்; (புள் - பறவை); (போது - பூ);

வெள்கிட ஓங்கிய வியன் நெருப்பினை - வெட்கும்படி (நாணுமாறு) எல்லையின்றி ஓங்கிய பெரிய ஜோதியை; (வெள்குதல் - வெட்குதல்); (வியன் - பெரிய); (திருவாசகம் - அருட்பத்து - 8.29.4 - "விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்");

நள்-இருள் ஆடியை - நடு-இரவில் கூத்தாடுபவனை;

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

வள்ளலை உள்கிட மல்கும் இன்பமே - வள்ளலான சிவபெருமானை எண்ணினால் இன்பம் பெருகும்; (உள்குதல் - உள்ளுதல் - நினைதல்);


10)

வாயினில் உண்மையை வைத்தி டாதவர்

பேயினை ஒத்தவர் பேச்சை நீங்குமின்

நாயனை நளிர்வயல் நல்ல(ம்) மேவிய

தூயனைத் தொழுதெழும் தொண்டர்க் கின்பமே.


வாயினில் உண்மையை வைத்திடாதவர் - என்றும் உண்மையைப் பேசாதவர்கள்;

பேயினை ஒத்தவர் பேச்சை நீங்குமின் - பேயை ஒத்தவர்களான அவர்களது பேச்சை மதியாமல் நீங்குங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி); (சம்பந்தர் தேவாரம் - 2.44.2 - "ஆமாத்தூர் அம்மானெம் பெம்மான் என்று ஏத்தாதார் பேயரிற் பேயரே"); (திருமாளிகைத் தேவர் - திருவிசைப்பா - 9.4.2 - "தில்லை வேந்தனைச் சேர்ந்திலாத துட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும் பிட்டரைக் காணா கண் வாய் பேசாது அப்-பேய்களோடே");

நாயனை - தலைவனை; (நாயன் - தலைவன்; கடவுள்);

நளிர்-வயல் நல்லம் மேவிய - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற; (நளிர்தல் - குளிர்தல்);

தூயனைத் தொழுதெழும் தொண்டர்க்கு இன்பமே - பரிசுத்தனான சிவபெருமானை வழிபடும் தொண்டர்களுக்கு என்றும் இன்பமே.


11)

கொல்வினைக் கூற்றினைக் குமைத்த பாதனை

வெல்விடைக் கொடியனை வெந்த நீற்றனை

நல்வயல் சூழ்திரு நல்ல(ம்) மேவிய

செல்வனை அடிதொழச் சேரும் நன்மையே.


கொல்வினைக் கூற்றினைக் குமைத்த பாதனை - கொல்லும் தொழிலையுடைய காலனை உதைத்து அழித்தவனை; (வினை - தொழில்); (குமைத்தல் - அழித்தல்);

வெல்விடைக் கொடியனை - வெற்றியுடைய இடபக்கொடியை உடையவனை;

வெந்த நீற்றனை - சுட்ட திருநீற்றைப் பூசியவனை;

நல்-வயல் சூழ் திரு-நல்லம் மேவிய - நல்ல வயல் சூழ்ந்த திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

செல்வனை அடிதொழச் சேரும் நன்மையே - செல்வனான சிவபெருமானை வழிபட்டால் நம்மை நன்மையே வந்தடையும்;


வி. சுப்பிரமணியன்

--------- ---------