Wednesday, March 4, 2026

P.468 - பொது - விடையை விரும்பும்

2019-04-16

P.468 - பொது

------------------

(வஞ்சித்துறை - தனதன தானா) (திருவிருக்குக்குறள் அமைப்பு)

(வடமொழியில் - ஶஶிவதனா - शशिवदना )


முற்குறிப்புகள் -

1. இப்பாடல்களில் 4 சிறிய அடிகள். அடியின் சிறுமை கருதி, இங்கே, ஒவ்வொரு வரியிலும் 2 அடிகள் இடப்பட்டுள்ளன.

2. படிப்போர் வசதி கருதிச், சந்தம் கெடாத இடங்களில் சொற்களை ஒட்டிச் சீர்பிரித்துக் காட்டப்பட்டுளது. புணர்ச்சியும் அவ்வாறே பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.


1)

விடையை விரும்பும் .. கடவுள் அவற்குச்

சுடலை அரங்கம் .. விடமு(ம்) மருந்தே.


விடையை விரும்பும் கடவுள் அவற்குச் - இடபவாகனான சிவபெருமானுக்கு; (அவற்கு = அவன் + கு = அவனுக்கு);

சுடலை அரங்கம் - சுடுகாடே கூத்தாடும் சபை;

விடமும் மருந்தே = நஞ்சும் அமுது ஆகும்;


2)

பரவிய மாணிக்(கு) .. அரணென நின்றான்

குரவணி குஞ்சிப் .. பரமனை வாழ்த்தே.


பரவிய மாணிக்கு அரண் என நின்றான் - வழிபாடு செய்த மார்க்கண்டேயருக்குக் காவல் ஆனவன்;

குரவு அணி குஞ்சிப் பரமனை வாழ்த்தே - குராமலரைத் திருமுடிமேல் அணிந்த சிவபெருமானை வாழ்த்து; (குரவு - குராமலர்); (குஞ்சி - சென்னி);


3)

தருநிழல் நால்வர்க்(கு) .. அருமறை ஓதும்

குருபரன் அன்பர்க்(கு) .. இருவினை தீர்வே


தரு-நிழல் நால்வர்க்கு அருமறை ஓதும் குருபரன் - கல்லால-மரத்தின்கீழ்ச் சனகாதி முனிவர்களுக்கு வேதப்பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தி;

அன்பர்க்கு இருவினை தீர்வே - அவனை வழிபடும் பக்தர்களுக்கு இருவினை நீக்கம் ஆகும்;


4)

கரியுரி போர்த்தான் .. வரியர வார்த்தான்

பெரியவன் நாமம் .. தரிமட நெஞ்சே.


கரியுரி போர்த்தான் - யானைத்தோலைப் போர்த்தவன்; (கரி - யானை); (உரி - தோல்);

வரியரவு ஆர்த்தான் - வரிகளையுடைய பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;

பெரியவன் நாமம் தரி மட-நெஞ்சே - மகாதேவன் அவன் திருநாமத்தைப், பேதைமனமே, நீ எண்ணு;


5)

கடிமலர் அம்பற் .. பொடிபட நோக்கும்

அடிகளை வாழ்த்தச் .. செடிவினை வீடே.


கடிமலர் அம்பற் பொடிபட நோக்கும் - வாசமலரை அம்பாக உடைய மன்மதனைச் சாம்பலாகும்படி பார்த்த; (கடி - வாசனை); (அம்பற் பொடிபட - அம்பனைப் பொடிபட; இலக்கணக் குறிப்பு: இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவிற்காக முதற்சொல்லின் ஈற்றில் ன் - ற் என்று திரியும்);

அடிகளை வாழ்த்தச் செடிவினை வீடே - பெருமானை வாழ்த்தினால் தீவினைகள் நீங்கும்; (செடி - துன்பம்; தீமை);


6)

மறைமொழி நாவன் .. கறையணி கண்டன்

இறைவன் அளிப்பான் .. குறைகள் அறுத்தே.


மறைமொழி நாவன் - வேதங்களைப் பாடியருளியவன்;

கறைணி கண்டன் - நீலகண்டன்;

இறைவன் அளிப்பான் குறைகள் அறுத்தே - இறைவனான சிவபெருமான் பக்தர்களது குறைகளைத் தீர்த்து அருள்வான்;


7)

முடிவிலி அண்ணல் .. பொடியணி பெம்மான்

அடியை அடைந்தோர் .. படியடை யாரே.


முடிவு-இலி அண்ணல் - நித்தியன் (சாவாது என்றும் இருப்பவன்), தலைவன்;

பொடி அணி பெம்மான் - திருநீற்றைப் பூசிய பெருமான்;

அடியை அடைந்தோர் படி அடையாரே - அவனது திருவடியைச் சரணடைந்தவர்கள் மீண்டும் பூமியில் பிறக்கமாட்டார்கள்; (படி - பூமி);


8)

வரையது பேர்த்தான் .. அழவிரல் ஊன்றும்

வரதனை முக்கட் .. பரமனை வாழ்த்தே.


வரையது பேர்த்தான் அழ விரல் ஊன்றும் வரதனை - கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அழும்படி திருவடி விரலை ஊன்றி அவனை நசுக்கிய, (பின்னர் அவன் பாடிய இசையைக் கேட்டு) வரம் அருள்பவனை; (வரை - மலை; அது - பகுதிப்பொருள்விகுதி);

முக்கட் பரமனை வாழ்த்தே - முக்கண்ணனைப், பரமனை வாழ்த்துவாயாக;


9)

அயனரி காணா .. வியனெரி ஆனான்

பெயருரை செய்தால் .. துயரற லாமே.


அயன் அரி காணா வியன்-எரி ஆனான் - பிரமன் விஷ்ணு இவர்களால் தேடிக் காண இயலாத பெரிய ஜோதிப்பிழம்பு ஆனவன்; (வியன் - பெரிய); (எரி - தீ);

பெயர் உரை-செய்தால் துயர் அறல் ஆமே - அப்பெருமானது திருநாமத்தைச் சொன்னால் துன்பம் நீங்கும்;


10)

வழியறி யார்சொல் .. மொழிகளை நாடேல்

மழுவனை வாழ்த்தப் .. பழவினை வீடே.


வழி-அறியார் சொல் மொழிகளை நாடேல் - நல்ல நெறியை அறியாதவர்கள் சொல்லும் பேச்சைக் கேட்டு மயங்காதே; (நாடுதல் - விரும்புதல்; நினைத்தல்);

மழுவனை வாழ்த்தப் பழவினை வீடே - மழுவை ஏந்திய சிவபெருமானை வாழ்த்தினால் பழவினைகள் நீங்கும்;


11)

கருமணி கண்டன் .. பொருவிடை ஏறும்

பெருமையி னான்றன் .. திருவடி போற்றி.


கருமணி கண்டன் - நீலமணியைக் கண்டத்தில் உடையவன்;

பொரு-விடை ஏறும் பெருமையினான்-தன் திருவடி போற்றி - போர்செய்ய வல்ல இடபத்தின்மேல் ஏறும் பெருமையை உடையவனது திருவடிகளுக்கு வணக்கம்; (பொருதல் - போர்செய்தல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.215 - புறம்பயம் - இனலே மிகும்

2019-04-22

T.215 - புறம்பயம் - இனலே மிகும்

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதான தந்தனத் .. தனதான)

(அபகார நிந்தைபட் டுழலாதே - திருப்புகழ் - பழநி)


இனலேமி கும்பவப் .. பிணியாலே

.. இருஞாலம் வந்திளைத் .. துழலாதே

உனைநாளும் இன்தமிழ்த் .. தொடைபாடி

.. உலவாத இன்பமுற் .. றிடுவேனோ

சினமார்ந மன்றனைச் .. செறுகாலா

.. திரிமூவ ரண்களைச் .. சுடுவீரா

புனலோடு குஞ்சியிற் .. பிறையானே

.. பொழிலார்பு றம்பயப் .. பெருமானே.


பதம் பிரித்து:

இனலே மிகும் பவப்-பிணியாலே

.. இரு-ஞாலம் வந்து இளைத்து உழலாதே,

உனை நாளும் இன்தமிழ்த்-தொடை பாடி,

.. உலவாத இன்பம் உற்றிடுவேனோ?

சினம் ஆர் நமன்றனைச் செறு-காலா;

.. திரி-மூவரண்களைச் சுடு-வீரா;

புனலோடு குஞ்சியிற் பிறையானே;

.. பொழில் ஆர் புறம்பயப் பெருமானே.


இனலே மிகும் பவப்-பிணியாலே இரு-ஞாலம் வந்து இளைத்து ழலாதே - துன்பமே மிகும் பிறவிப்பிணியால் இந்தப் பெரிய பூமியில் வந்து (=பிறந்து) வருந்தி உழலாமல்; (இனலே - இன்னலே; இடைக்குறை விகாரம்); (பவம் - பிறவி); (இருமை - பெருமை); (ஞாலம் - பூமி);

உனை நாளும் இன்தமிழ்த்-தொடை பாடி, உலவாத இன்பம் உற்றிடுவேனோ - உன்னைத் தினமும் இனிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடிப் போற்றி வணங்கிப் பேரின்பத்தை அடைய அருள்வாயாக; (தொடை - மாலை); (உலத்தல் - அழிதல்);

சினம் ஆர் நமன்-தனைச் செறு காலா - கோபம் மிக்க கூற்றுவனை உதைத்து அழித்த காலகாலா;

திரி-மூ-அரண்களைச் சுடு வீரா - எங்கும் பறந்து திரிந்த முப்புரங்களை எரித்து அழித்த வீரனே;

புனல் ஓடு குஞ்சியில் பிறையானே - கங்கையாறு ஓடுகின்ற தலையின்மேல் பிறையைச் சூடியவனே;

பொழில் ஆர் புறம்பயப் பெருமானே - சோலைகள் நிறைந்த திருப்புறம்பயத்தில் எழுந்தருளிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.467 - வெண்ணெய்நல்லூர் - பால்போல் நீற்றை

2019-04-10

P.467 - வெண்ணெய்நல்லூர்

-------------------------------

(எழுசீர் ஆசிரிய விருத்தம் - மா மா மா மா மா மா புளிமாங்காய் - வாய்பாடு; ஈற்றுச்சீர் ஒரோவழி தேமாங்காய்)

(சுந்தரர் தேவாரம் - 7.41.1 - முதுவாய் ஓரி கதற)


1)

பால்போல் நீற்றைப் பூசி மார்பில் .. பாம்பின் ஆரம் புனைவானே

நால்வே தத்தின் பொருளா னவனே .. நரைவெள் விடையொன் றுடையானே

நால்வாய் உரித்த நம்பா என்று .. நானும் தொழுதேன் அருளாயே

வேல்போல் நெடுங்கண் உமையாள் கணவா .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.


பால்போல் நீற்றைப் பூசி மார்பில் பாம்பின் ஆரம் புனைவானே - பால் போன்ற வெண்-திருநீற்றைப் பூசி, மார்பில் பாம்பை மாலையாக அணிந்தவனே;

நால்வேதத்தின் பொருள் ஆனவனே - நான்மறைப்பொருள் ஆனவனே;

நரை-வெள்-விடை ஒன்று உடையானே - மிக வெண்மையான இடபத்தை ஊர்தியாக உடையவனே; (நரை - வெண்மை; நரை வெள் - ஒருபொருட்பன்மொழி); (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நரைவெள்ளேறு ஒன்றுடையானை");

நால்வாய் உரித்த நம்பா என்று நானும் தொழுதேன் அருளாயே - யானையை உரித்த நம்பனே என்று உன்னை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக; (நானும் - 1. இழிவுசிறப்பும்மை; 2. எச்சுவும்மை; அடியார்கள் தொழக்கண்டு நானும் தொழுதேன்). (அப்பர் தேவாரம் - 5.91.3 - "ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு ஞானத்தாய் உனை நானும் தொழுவனே");

வேல்போல் நெடுங்கண் உமையாள் கணவா - வேல் போன்ற நீண்ட கண்ணை உடைய உமைக்குக் கணவனே; (* வேற்கண்ணியம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்);

வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;


2)

மானை மழுவை ஏந்தும் ஐயா .. மதியம் வாழும் முடியானே

கானை இடமாக் கருதும் கூத்தா .. கரிய மலைபோல் பொரவந்த

ஆனை உரித்தாய் அணிசே வடியை .. யானும் தொழுதேன் அருளாயே

மீனை ஒத்த கண்ணி பங்கா .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.


மானை மழுவை ஏந்தும் ஐயா - மானையும் மழுவையும் கையில் ஏந்தியவனே;

மதியம் வாழும் முடியானே - திங்களைத் திருமுடிமேல் வைத்தவனே;

கானை இடமாக் கருதும் கூத்தா - சுடுகாட்டில் திருநடம் செய்பவனே; (இடமா - இடமாக);

கரிய மலைபோல் பொரவந்த ஆனை உரித்தாய் - போர்செய்ய வந்த கரிய பெரிய யானையை உரித்தவனே; (பொருதல் - போர்செய்தல்);

அணி சேவடியை யானும் தொழுதேன் அருளாயே - உன் அழகிய சிவந்த திருவடியை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக;

மீனை ஒத்த கண்ணி பங்கா - மீன் போன்ற கண்ணை உடைய உமையை ஒரு பங்காக உடையவனே;

வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;


3)

ஓலை ஒன்று காட்டி நாவ .. லூரர் தம்மை ஆட்கொண்டாய்

வேலை நஞ்சை அமுத மாக .. விரும்பி உண்ட மணிகண்டா

ஆல நீழல் அமர்ந்தாய் உன்னை .. யானும் தொழுதேன் அருளாயே

வேலை ஒத்த கண்ணி பங்கா .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.


ஓலை ஒன்று காட்டி நாவலூரர் தம்மை ஆட்கொண்டாய் - அடிமையோலையைக் காட்டிச் சுந்தரரை ஆட்கொண்டவனே; (நாவலூரர் - திருநாவலூரில் அவதரித்த சுந்தரமூர்த்தி நாயனார்);

வேலை நஞ்சை அமுதமாக விரும்பி உண்ட மணிகண்டா - கடல்விடத்தை அமுதம்போல் விரும்பி உண்ட நீலகண்டனே; (வேலை - கடல்);

ஆலநீழல் அமர்ந்தாய் - கல்லால-மரத்தின்கீழ் இருந்தவனே;

உன்னை யானும் தொழுதேன் அருளாயே - உன்னை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக;

வேலை ஒத்த கண்ணி பங்கா - வேல் போன்ற கண்ணை உடைய உமையை ஒரு பங்காக உடையவனே;

வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;


4)

திரையார் கடலின் நஞ்சைக் கண்டு .. தேவ ரெல்லாம் மிகவஞ்சி

அரையா ஓலம் என்றி றைஞ்ச .. அவரைக் காத்த இறையோனே

நரையார் விடையை உடையாய் உன்னை .. நானும் தொழுதேன் அருளாயே

விரையார் சோலை புடைசூழ்ந் தழகார் .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.


திரை ஆர் கடலின் நஞ்சைக் கண்டு தேவரெல்லாம் மிக அஞ்சி - அலை மிக்க கடலின் விடத்தைக் கண்டு வானவர்களெல்லாம் மிகவும் நடுங்கி; (திரை - அலை)

அரையா ஓலம் என்று இறைஞ்ச - "அரசே! ஓலம்!" என்று தொழுது போற்றவும்; (அரையன் - அரசன்);

அவரைக் காத்த இறையோனே - அவர்களைக் காத்த இறைவனே;

நரை ஆர் விடையை உடையாய் - வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவனே;

உன்னை நானும் தொழுதேன் அருளாயே - உன்னை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக;

விரை ஆர் சோலை புடைசூழ்ந்து அழகு ஆர் - வாசம் மிக்க பொழில்களால் சூழப்பெற்ற அழகிய; (விரை - வாசனை);

வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;


5)

பந்தம் இன்றிச் சிந்தை ஒன்றிப் .. பகலும் இரவும் ஒழியாமல்

மந்தி ரத்தால் வாழ்த்து மாணி .. வாழக் காலன் தனைச்செற்றாய்

நந்தி என்ற நாமம் உடையாய் .. நானும் தொழுதேன் அருளாயே

வெந்த நீறு பூசும் விகிர்தா .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.


பந்தம் இன்றிச் சிந்தை ஒன்றிப் பகலும் இரவும் ஒழியாமல் - பற்றுகளை நீங்கி மனம் ஒன்றி இரவுபகல் எப்பொழுதும்;

மந்திரத்தால் வாழ்த்து மாணி வாழக் காலன்தனைச் செற்றாய் - வேதமந்திரங்களை ஓதி வழிபட்ட மார்க்கண்டேயர் இறவாமல் வாழும்படி கூற்றுவனை உதைத்தவனே; (செறுதல் - கோபித்தல்; அழித்தல்);

நந்தி என்ற நாமம் உடையாய் - நந்தி என்ற திருப்பெயரையும் உடையவனே; (நந்தி - சிவபெருமான் திருநாமங்களுள் ஒன்று; ) (சம்பந்தர் தேவாரம் - 3.49.11 - "நந்தி நாமம் நமச்சிவாய எனும்"); (नन्दिः - Joy, pleasure, delight; - An epithet of Śiva);

நானும் தொழுதேன் அருளாயே - உன்னை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக;

வெந்த நீறு பூசும் விகிர்தா - சுட்ட திருநீற்றைப் பூசிய விகிர்தனே; (விகிர்தன் - மாறுபட்ட செயலினன்);

வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;


6)

சொன்ன வண்ணம் நாடி வந்து .. துரிசில் நம்பி ஆரூரன்

தன்னை அடிமை கொண்டு நாளும் .. தமிழைக் கேட்ட தனிநாதா

அன்ன நடையாள் உமையோர் பாகா .. யானும் தொழுதேன் அருளாயே

மின்னற் புரிநூல் விரவும் மார்பா .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.


சொன்ன-வண்ணம் நாடி வந்து, துரிசு-ல் நம்பி ஆரூரன்-தன்னை அடிமை கொண்டு - (முன்னம் கயிலையில்) சொன்னபடி தானே விரும்பித் தேடி வந்து, குற்றமற்ற சுந்தரரை அடிமையாக ஏற்றருளி; (துரிசு - குற்றம்);

நாளும் தமிழைக் கேட்ட தனி-நாதா - தினமும் இனிய தமிழைச் செவிமடுத்த ஒப்பற்ற தலைவனே; (தனி - ஒப்பற்ற);

அன்ன-நடையாள் உமை ஓர் பாகா - அன்னம் போல் நடையை உடைய உமையை ஒரு பாகமாக உடையவனே;

யானும் தொழுதேன் அருளாயே - உன்னை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக;

மின்னற் புரிநூல் விரவும் மார்பா - மின்னல்போல ஒளிவீசும் பூணூலை மார்பில் அணிந்தவனே;

வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;


7)

ஆரும் உண்ண லாகா நஞ்சம் .. அரிய நீல மணியாகச்

சேரும் கண்டம் உடைய சிவனே .. சிவந்த சடைமேற் பிறையானே

ஆர மாக அரவம் பூண்டாய் .. யானும் தொழுதேன் அருளாயே

மேரு வில்லாற் புரமூன் றெய்தாய் .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.


ஆரும் உண்ணல் ஆகா நஞ்சம் அரிய நீல-மணியாகச் சேரும் கண்டம் உடைய சிவனே - எவராலும் உண்ண ஒண்ணாத ஆலகாலம் அரிய நீலமணி போலப் பொருந்தும் கண்டத்தை உடைய சிவனே;

சிவந்த சடைமேல் பிறையானே - செஞ்சடைமேல் பிறையை அணிந்தவனே;

ஆரமாக அரவம் பூண்டாய் - மாலை போலப் பாம்பை அணிந்தவனே; (ஆரம் - மாலை);

யானும் தொழுதேன் அருளாயே - உன்னை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக;

மேரு-வில்லால் புரம் மூன்று எய்தாய் - மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை எய்தவனே;

வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;


8)

எண்ணா தோடி மலையைப் பேர்த்த .. இலங்கைக் கோனை நெரிசெய்து

பண்ணார் இசையைப் பாடக் கேட்டாய் .. பத்தர் தம்மைப் பழிபாவம்

நண்ணா வண்ணம் காக்கும் தலைவா .. நானும் தொழுதேன் அருளாயே

வெண்ணீ றணிந்த செந்தீ வண்ணா .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.


எண்ணாது ஓடி மலையைப் பேர்த்த இலங்கைக்கோனை நெரிசெய்து - சற்றும் யோசியாமல் ஓடிப்போய்க் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை நசுக்கி; (நெரிசெய்தல் - நெரித்தல் - நசுக்குதல்);

பண் ஆர் இசையைப் பாடக் கேட்டாய் - பிறகு, அவன் பண் பொருந்திய இசையைப் பாடி வழிபட, அதனைக் கேட்டு மகிழ்ந்தவனே;

பத்தர்-தம்மைப் பழி பாவம் நண்ணா-வண்ணம் காக்கும் தலைவா - அடியார்களைப் பழி பாவம் முதலியன அடையாதபடி அவர்களைக் காத்தருளும் தலைவனே;

நானும் தொழுதேன் அருளாயே - உன்னை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக;

வெண்ணீறு அணிந்த செந்தீ வண்ணா - திருநீற்றை அணிந்த செந்தீப் போன்ற செம்மேனியனே;

வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;


9)

கடல்மேல் துயில்மால் கமழ்தா மரையான் .. காணா தேத்த உயர்சோதீ

படமார் நாகம் அரைநா ணாகப் .. பதிகம் பாடிப் பலிதேர்வாய்

அடலே றுடையாய் அவிர்செஞ் சடையாய் .. யானும் தொழுதேன் அருளாயே

விடமே அமுதா விரும்பி உண்டாய் .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.


கடல்மேல் துயில் மால் கமழ்-தாமரையான் காணாது ஏத்த உயர் சோதீ - பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலும் வாசத்தாமரைமலர்மேல் உறையும் பிரமனும் அடிமுடி காணாமல் வணங்கும்படி உயர்ந்த ஜோதியே;

படம் ஆர் நாகம் அரைநாணாகப் பதிகம் பாடிப் பலிதேர்வாய் - படமுடைய நாகப்பாம்பை அரைநாணாகக் கட்டிப், பாமாலைகளைப் பாடிப் பிச்சையேற்பவனே; (படம் - பாம்பின் படம்); (பதிகம் - பதியம் - பாட்டு); (சுந்தரர் தேவாரம் - 7.46.1 - "பத்தூர்புக்கு இரந்துண்டு பலபதிகம் பாடி");

அடல்-ஏறு உடையாய் - வலிய இடபத்தை ஊர்தியாக உடையவனே; (அடல் - வலிமை; வெற்றி);

அவிர்-செஞ்சடையாய் - ஒளிவீசும் செஞ்சடையை உடையவனே; (அவிர்தல் - பிரகாசித்தல்);

யானும் தொழுதேன் அருளாயே - உன்னை அடியேனும் போற்றி வழிபட்டேன்; அருள்வாயாக;

விடமே அமுதா விரும்பி உண்டாய் - ஆலகாலத்தையே அமுதம்போல் விரும்பி உண்டவனே; (அமுதா - அமுதாக);

வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;


10)

உண்மை தன்னை ஒளித்துப் பொய்யே .. உரைத்துத் திரிவார் தமைநீங்கும்

வண்மை மிக்க தமிழைப் பாடி .. வழுத்தும் அன்பர்க் கருள்செய்வான்

பெண்மை ஒருபால் உடைய ஒருவன் .. பேய்கள் சூழ நடமாடி

வெண்மை திகழும் நீறு பூசி .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.


உண்மை-தன்னை ஒளித்துப், பொய்யே உரைத்துத் திரிவார்தமை நீங்கும் - உண்மையை மறைத்துப் பொய்யே பேசித் திரிகின்றவர்களை விட்டு நீங்குங்கள்;

வண்மை மிக்க தமிழைப் பாடி வழுத்தும் அன்பர்க்கு அருள்செய்வான் - வளம் மிக்க தமிழான தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் பாடி வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிபவன்;

பெண்மை ஒருபால் உடைய ஒருவன் - திருமேனியில் ஒரு பக்கம் பெண்மையை உடைய ஒப்பற்றவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.1.5 - "ஒருமை பெண்மையுடையன்");

பேய்கள் சூழ நடமாடி - பேய்க்கணங்கள் சூழக் கூத்தாடுபவன்;

வெண்மை திகழும் நீறு-பூசி - வெண்ணீற்றைப் பூசியவன்;

வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;


11)

நீள எண்ணி நாளும் ஏத்தும் .. நேயர் விரும்பு வரமீவான்

தாளை அடைந்த மதியம் தன்னைச் .. சடையின் மீது திகழ்வித்தான்

காள கண்டன் கால காலன் .. கருப்பு வில்லாற் கணையெய்த

வேளை நீறு செய்த விமலன் .. வெண்ணெய் நல்லூர்ப் பெருமானே.


நீள எண்ணி நாளும் ஏத்தும் நேயர் விரும்பு வரம் ஈவான் - மறவாமல் எப்போதும் நினைந்து தினமும் போற்றும் அன்பர்கள் விரும்பிய வரங்களைத் தருபவன்;

தாளை அடைந்த மதியம்-தன்னைச் சடையின் மீது திகழ்வித்தான் - திருவடியைச் சரண்புகுந்த திங்களைச் சடையின்மேல் ஒளிவீச வைத்தவன்;

காளகண்டன் - நீலகண்டன்;

காலகாலன் - காலனுக்கே காலன் ஆனவன்;

கருப்பு-வில்லால் கணை எய்த வேளை நீறு செய்த விமலன் - கரும்பை வில்லாக ஏந்தி அம்பு எய்த மன்மதனைச் சாம்பலாக்கிய தூயன்;

வெண்ணெய்நல்லூர்ப் பெருமானே - திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


S.150 - சிவன் - பஜ்ஜி - சிலேடை

2016-03-26

S.150 - சிவன் - பஜ்ஜி - சிலேடை

----------------------------

நெய்யாடும் நீர்மையினால் நேயர்கண் மாந்திடும்

செய்யாரும் மேனியினாற் பண்ணினால் - வையா(து)

உலகார் அமுதென் றுரைத்தலால் பஜ்ஜி

இலைமூன் றுடைவேல் இறை.


சொற்பொருள்:

நெய் - 1. பசுவின் பாலிலிருந்து பெறப்படும் நெய்; / 2. எண்ணெய்;

ஆடுதல் - 1. அபிஷேகம் செய்யப்பெறுதல்; / 2. கூத்தாடுதல்; அசைதல்; குளித்தல்;

நீர்மை - தன்மை; குணம்;

நேயர்கண்மாந்திடும் - 1. நேயர் கண் மாந்திடும்; / 2. நேயர்கள் மாந்திடும்;

மாந்துதல் - அனுபவித்தல்; உண்ணுதல்;

செய் - செம்மை;

பண்ணினால் - 1. இசையால்; / 2. செய்தால்;

வையாது - 1. திட்டாமல்; (வைதல்); / 2. கொஞ்சமும் மீதி இல்லாமல்; (வைத்தல்);

ஆர் அமுது - 1. அரிய அமுது; 2. உண்ணும் அமுது (ஆர்தல் - உண்தல்);

இலை மூன்றுடை வேல் - திரிசூலம்;


பஜ்ஜி:

நெய் ஆடும் நீர்மையினால் - எண்ணெயில் குளித்துக் குதித்து ஆடுகின்ற தன்மையால்;

நேயர்கள் மாந்திடும் செய் ஆரும் மேனியினால் - அன்பர்கள் உண்கின்ற செம்மை மிக்க வடிவத்தினால்;

பண்ணினால் வையாது உலகு ஆர் அமுது என்று உரைத்தலால் - செய்தால் கொஞ்சமும் மீதி வைத்தல் இன்றி மக்கள் உண்ணும் அமுதம் போன்றது என்று சொல்வதனால்;

பஜ்ஜி - பஜ்ஜி என்ற பணியாரவகை;


சிவன்:

நெய் ஆடும் நீர்மையினால் - பசுவின் பாலிலிருந்து பெறப்படும் நெய்யால் அபிஷேகம் செய்யப்பெறுவதால்;

நேயர் கண் மாந்திடும் செய் ஆரும் மேனியினால் - பக்தர்கள் தம் கண்களால் கண்டு அனுபவிக்கும் செம்மேனியன் ஆவதால்;

பண்ணினால் வையாது உலகு ஆர் அமுது என்று உரைத்தலால் - திட்டாமல் உலகத்தினர் (இங்கே பக்தர்கள் என்ற பொருளில்) இசையால் (புகழ்ந்து பாடி) அரிய அமுதம் ஒத்தவன் என்று சொல்வதனால்;

இலை-மூன்றுடை-வேல் இறை - திரிசூலத்தை ஏந்திய இறைவனான சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

------------


Tuesday, February 17, 2026

P.466 - அவிநாசி - மானன நோக்கி

2019-03-14

P.466 - அவிநாசி

-------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு; விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.38.1 - "கங்கையைச் சடையுள் வைத்தார்")

* தேவாரத்தில் - புக்கொளியூர் அவிநாசி;


1)

மானன நோக்கி தன்னை .. மகிழ்ந்தொரு பாகம் வைத்தார்

தேனலர்க் கொன்றை வன்னி .. செஞ்சடை மீது வைத்தார்

கானையும் அரங்காக் கொண்டார் .. கடுஞ்சினத் தோடெ திர்ந்த

ஆனையின் உரிவை போர்த்தார் .. அவிநாசி அப்ப னாரே.


மான் அன நோக்கி-தன்னை மகிழ்ந்து ஒரு பாகம் வைத்தார் - மான் போன்ற பார்வையுடைய உமையை விரும்பி ஒரு பாகமாக உடையவர்; (அன - அன்ன - ஒத்த);

தேன் அலர்க்-கொன்றை வன்னி செஞ்சடைமீது வைத்தார் - தேன் நிறைந்த கொன்றைமலரையும் வன்னி-இலையையும் சிவந்த சடையின்மேல் அணிந்தவர்;

கானையும் அரங்காக் கொண்டார் - சுடுகாட்டையும் கூத்தாடும் அரங்காக உடையவர்; (கான் - காடு - சுடுகாடு);

கடுஞ்சினத்தோடு எதிர்ந்த ஆனையின் உரிவை போர்த்தார் - மிகுந்த கோபத்தோடு எதிர்த்துப் போரிட்ட யானையின் தோலைப் போர்வையாகப் போர்த்வர்; (எதிர்தல் - எதிர்த்தல்); (உரிவை - தோல்);

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


2)

நாரியைப் பாகம் வைத்தார் .. நஞ்சினைக் கண்டம் வைத்தார்

ஏரியில் முதலை உண்ட .. இளமறைச் சிறுவன் தன்னை

ஊரினர் காணு மாறே .. ஒண்டமிழ் கேட்டி ரங்கி

ஆருயிர் பிழைக்க வைத்தார் .. அவிநாசி அப்ப னாரே.


நாரியைப் பாகம் வைத்தார் - உமையை ஒரு பங்காக உடையவர்;

நஞ்சினைக் கண்டம் வைத்தார் - ஆலகாலத்தைக் கண்டத்தில் அணிந்தவர் - நீலகண்டர்;

ஏரியில் முதலை உண்ட இள-மறைச்-சிறுவன் தன்னை - முன்பு ஒரு நாள் ஏரியில் இருந்த முதலை உண்ட அந்தணச் சிறுவனை;

ஊரினர் காணுமாறே ஒண்-தமிழ் கேட்டு இரங்கி ஆருயிர் பிழைக்கவைத்தார் - ஊர்மக்கள் காணும்படி, சுந்தரர் பாடிய தமிழ்ப்பாமாலையைக் கேட்டு இரங்கி, மீண்டும் உயிர்பெற்று வர அருளினார்; (* சுந்தரர் தேவாரம் - 7.92.4 - "கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே");

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


3)

கம்பலை செய்து வந்து .. கழலிணை போற்றி நின்ற

உம்பருக் கிரங்கி நஞ்சை .. உண்டவர் ஆடை யாக

வெம்புலித் தோலை வைத்தார் .. விரிசடை மேல்வி ளங்க

அம்புலிக் கீற்றை வைத்தார் .. அவிநாசி அப்ப னாரே.


கம்பலை செய்து வந்து கழலிணை போற்றி நின்ற - அஞ்சி நடுங்கிப் பேரொலிசெய்து வந்து அடியிணையை வழிபட்ட; (கம்பலை - அச்சம்; பேரொலி);

உம்பருக்கு இரங்கி நஞ்சை உண்டவர் - தேவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்டவர்; (உம்பர் - தேவர்);

ஆடையாக வெம்புலித்தோலை வைத்தார் - கொடிய புலியின் தோலை ஆடையாக அணிந்தவர்;

விரிசடைமேல் விளங்க அம்புலிக் கீற்றை வைத்தார் - பிறையை விரிந்த சடையின் மீது ஒளிவீச வைத்தவர்;

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


4)

தரையினில் ஆழி கீறிச் .. சலந்தரன் தனைத்த டிந்தார்

விரைமலி பூக்கள் தூவி .. வேண்டிய சுரர்க்கி ரங்கிப்

புரமொரு மூன்றெ ரிக்கப் .. பொன்மலை வில்லில் நாணா

அரவினை ஆர்த்த வீரர் .. அவிநாசி அப்ப னாரே.


தரையினில் ஆழி கீறிச் சலந்தரன்தனைத் தடிந்தார் - நிலத்தில் ஒரு சக்கரத்தை வரைந்து அதனைக்கொண்டு ஜலந்தராசுரனை அழித்தவர்; (ஆழி - சக்கரம்); (தடிதல் - வெட்டுதல்; அழித்தல்);

விரை மலி பூக்கள் தூவி வேண்டிய சுரர்க்கு இரங்கிப் - மணம் மிக்க மலர்களைத் தூவி வழிபட்ட தேவர்களுக்கு இரங்கி; (விரை - வாசனை); (சுரர் - தேவர்);

புரம் ஒரு மூன்று எரிக்கப் - முப்புரங்களை எரிப்பதற்காகப்;

பொன்மலை-வில்லில் நாணா அரவினை ஆர்த்த வீரர் - பொன்மயமான மேருமலையை வில்லாக்கி அதனில் நாணாகப் பாம்பைக் கட்டிய வீரர்; (நாணா - நாணாக); (சம்பந்தர் தேவாரம் - 1.82.1 - "இரும்பொன் மலைவில்லா எரியம்பா நாணில்");

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


5)

ஓரழல் வண்ண மேனி .. உடையவர் பாக மாகப்

பேரெழில் மாதை வைத்தார் .. பேய்க்கணம் சூழ வைத்தார்

நீருழல் சடையின் மீது .. நிரைமலர்க் கொன்றை வைத்தார்

ஆரழல் அங்கை வைத்தார் .. அவிநாசி அப்ப னாரே.


ஓர் அழல் வண்ண மேனி உடையவர் - ஒப்பற்ற தீவண்ண மேனியை உடையவர்;

பாகமாகப் பேரெழில் மாதை வைத்தார் - பேரழகுடைய உமையைப் பாகமாக ஏற்றவர்;

பேய்க்கணம் சூழ வைத்தார் - பூதகணங்கள் சூழ்ந்தவர்;

நீர் உழல் சடையின் மீது நிரை-மலர்க்-கொன்றை வைத்தார் - கங்கை திரிகின்ற சடைமேல் தொடுத்த கொன்றைமலரை அணிந்தவர்; (நிரை - வரிசை; நிரைத்தல் - கோத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.27.7 - "நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந் தாரினார்");

ஆரழல் அங்கை வைத்தார் - கையில் நெருப்பை ஏந்தியவர்;

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


6)

வன்புலித் தோலைச் சுற்றி .. மாசுணக் கச்சு வைத்தார்

மின்புரை இடையி னாளை .. மேனியிற் பாகம் வைத்தார்

என்பினை ஆரம் வைத்தார் .. இருங்கழல் மறவா தேத்தும்

அன்பருக் கின்பம் வைத்தார் .. அவிநாசி அப்ப னாரே.


வன்-புலித்தோலைச் சுற்றி மாசுணக் கச்சு வைத்தார் - கொடிய புலியின் தோலை ஆடையாகக் கட்டி, அதனைச் சுற்றிப் பாம்பைக் கச்சாகக் கட்டியவர்; (சுற்றுதல் - 1. உடுத்துதல்; 2. சூழ்ந்திருத்தல்);

மின் புரை இடையினாளை மேனியில் பாகம் வைத்தார் - மின்னல் போன்ற இடையை உடைய உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாக உடையவர்; (மின் - மின்னல்); (புரைத்தல் - ஒத்தல்);

என்பினை ஆரம் வைத்தார் - எலும்பை மாலையாக அணிந்தவர்; (என்பு - எலும்பு); (ஆரம் - மாலை);

இருங்கழல் மறவாது ஏத்தும் அன்பருக்கு இன்பம் வைத்தார் - பெருமை மிக்க திருவடியை என்றும் மறவாமல் வழிபடும் பக்தர்களுக்கு இன்பம் அருள்பவர்; (இருமை - பெருமை); (திருவாசகம் - போற்றித் திருவகவல் - 8.4 - அடி 129-130 - "என்னையும் ஒருவன் ஆக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி");

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


7)

அருகணைந் தம்பெய் வேளை .. அங்கமி லானா வைத்தார்

பெருகிய நஞ்சைப் பார்விண் .. பேசிடு மணியா வைத்தார்

உருகிய மனத்த ராகி .. ஓதிடும் அன்பர்க் கெல்லாம்

அருவினை தீர வைத்தார் .. அவிநாசி அப்ப னாரே.


அருகு அணைந்து அம்பு எய்- வேளை அங்கம் இலானா வைத்தார் - நெருங்கி வந்து மலர்க்கணையை எய்த மன்மதனை உடலற்றவன் ஆக்கினார்; (அருகு - பக்கம்); (அணைதல் - நெருங்குதல்; சார்தல்); (வேள் - காமன்); (அங்கம் - உடல்); (இலானா - இல்லானாக);

பெருகிய நஞ்சைப் பார் விண் பேசிடு மணியா வைத்தார் - பொங்கியெழுந்த ஆலகாலத்தை மண்ணோரும் விண்ணோரும் போற்றும் கண்டத்தில் கரிய மணியாக வைத்தவர்; (பார் - பூமி); (பேசுதல் - துதித்தல்); (மணியா - மணியாக)

உருகிய மனத்தராகி ஓதிடும் அன்பர்க்கெல்லாம் அருவினை தீர வைத்தார் - மனம் உருகி வழிபாடு செய்யும் பக்தர்களுக்கெல்லாம் பழவினை தீர அருள்பவர்;

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


8)

கரத்தினில் மழுவாள் சூலம் .. கனலெரி உடுக்கை வைத்தார்

சிரத்தினைக் கலனா வைத்தார் .. திசைகளை ஆடை வைத்தார்

உரத்தினை உன்னி ஓடி .. உயர்கயி லாயம் பேர்த்த

அரக்கனை அலற வைத்தார் .. அவிநாசி அப்ப னாரே.


கரத்தினில் மழுவாள் சூலம் கனல்-ரி உடுக்கை வைத்தார் - கையில் மழுவாயுதத்தையும் சூலத்தையும் கனல்கின்ற தீயையும் உடுக்கையையும் ஏந்தியவர்;

சிரத்தினைக் கலனா வைத்தார் - பிரமனது மண்டையோட்டை உண்கலனாக ஏந்தியவர்; (கலனா - கலனாக);

திசைகளை ஆடை வைத்தார் - திசைகளையே ஆடையாகக் கட்டியவர் (=திகம்பரர்);

உரத்தினை உன்னி ஓடி உயர்-கயிலாயம் பேர்த்த அரக்கனை அலறவைத்தார் - தன் வலிமையை எண்ணி ஓடிப்போய்க் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை (நசுக்கி) அலறச்செய்தவர்; (உரம் - வலிமை); (உன்னுதல் - எண்ணுதல்);

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


9)

கரியவன் மலரின் மேலான் .. கைதொழு தேத்த நின்ற

எரியவர் இளவெள் ளேற்றர் .. ஏந்திழை காண நட்டம்

புரிபவர் பூநீர் கொண்டு .. போற்றிசெய் அன்பர் பாவம்

அரிபவர் என்றும் இன்பர் .. அவிநாசி அப்ப னாரே.


கரியவன் மலரின்-மேலான் கைதொழுது ஏத்த நின்ற எரியவர் - திருமாலும் தாமரைமலர்மேல் இருக்கும் பிரமனும் கைகூப்பி வணங்கும்படி எல்லையின்றி ஓங்கி நின்ற ஜோதி-வடிவினர்; (எரி - தீ; அவர் - பகுதிப்பொருள்விகுதி);

இள-வெள்-ஏற்றர் - இளைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர்;

ஏந்திழை காண நட்டம் புரிபவர் - உமாதேவி காணத் திருக்கூத்து ஆடுபவர்; (ஏந்திழை - பெண்); (நட்டம் - கூத்து);

பூ நீர் கொண்டு போற்றிசெய் அன்பர் பாவம் அரிபவர் - பூவாலும் நீராலும் வழிபாடு செய்யும் பக்தர்களது வினையை நீக்குபவர்; (அரிதல் - அறுத்தல்);

என்றும் இன்பர் - பேரின்ப வடிவினர்;

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


10)

மாசினை நெஞ்சில் வைத்து .. வாயினிற் பொய்யை வைத்துப்

பேசிடும் பேயர் பேச்சைப் .. பேணிட வேண்டா நம்பி

மாசின விடையர் பாதம் .. வழிபடும் பத்தர்க் கென்றும்

ஆசிர யங்கொ டுப்பார் .. அவிநாசி அப்ப னாரே.


மாசினை நெஞ்சில் வைத்து வாயினில் பொய்யை வைத்துப் பேசிடும் - மனத்தில் வஞ்சத்தையும் வாயில் பொய்யையும் வைத்துப் பேசுகின்ற;

பேயர் பேச்சைப் பேணிட வேண்டா நம்பி - பேயர்களது பேச்சை உண்மையென்று நம்பி மதிக்கவேண்டா;

நம்பி மா-சின-விடையர் பாதம் வழிபடும் பத்தர்க்கு என்றும் ஆசிரயம் கொடுப்பார் - பெரிய, சினம் மிக்க இடபத்தை வாகனமாக உடைய ஈசனார் தம் திருவடியை விரும்பி வழிபடும் பக்தர்களுக்கு அடைக்கலம் அளிப்பவர்; (குறிப்பு : "நம்பி" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்); (நம்புதல் - 1. நம்பிக்கைவைத்தல்; 2. விரும்புதல்); (ஆசிரயம் - புகலிடம்; அடைக்கலம்);

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


11)

உண்மையர் உம்பர் நாதர் .. ஒலிகழல் புனைந்த பாதர்

வெண்மையி லங்கு நீற்றை .. மேனியிற் பூசி நாளும்

பண்மலி பாடல் பாடிப் .. பணிந்தெழு பத்தர் தம்மை

அண்மைய ராகிக் காப்பார் .. அவிநாசி அப்ப னாரே.


உண்மையர், உம்பர் நாதர் - மெய்ப்பொருள் ஆனவர், தேவர்களுக்கெல்லாம் தலைவர்; (உம்பர் - தேவர்);

ஒலி-கழல் புனைந்த பாதர் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியினர்;

வெண்மை இலங்கு நீற்றை மேனியில் பூசி நாளும் பண் மலி பாடல் பாடிப் பணிந்தெழு - வெண்மை திகழும் திருநீற்றை உடம்பில் பூசித் தினமும் இசையோடு தேவாரம் முதலிய பாடல்களைப் பாடி வழிபடுகின்ற;

பத்தர் தம்மை அண்மையர் ஆகிக் காப்பார் - பக்தர்களுக்கு அருகே உள்ளவர் ஆகி அவர்களைக் காப்பவர்; (அண்மை - சமீபம்)

அவிநாசி அப்பனாரே - அழிவற்றவரும் அவிநாசி என்ற தலத்தில் உறைகின்றவருமான சிவபெருமானார்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------