Tuesday, May 26, 2026

P.491 - கடவூர் - படரும் சடைமேல் பிறை

2019-11-09

P.491 - கடவூர்

-----------------

(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனதானா)

(தனதானன தானன தானன தானா - என்றும் நோக்கலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.32.1 - "ஓடேகல னுண்பது மூரிடு பிச்சை")

(சம்பந்தர் தேவாரம் - 2.37.1 - "சதுரம் மறைதான் துதிசெய் துவணங்கும்")


1)

படருஞ்சடை மேற்பிறை பாம்பணி அத்தன்

இடவெண்டலை ஒன்றினை ஏந்திய பித்தன்

விடையொன்றினை ஊர்திந யந்தவன் ஊராம்

கடனின்றெழு காரடை யும்கட வூரே.


படரும் சடைமேல் பிறை பாம்பு அணி அத்தன் - படர்ந்த சடையின்மேல் சந்திரனையும் பாம்பையும் அணிந்த தந்தை; (அத்தன் - தந்தை);

இட வெண்தலை ஒன்றினை ஏந்திய பித்தன் - மகளிர் பிச்சை இடுவதற்காக மண்டையோட்டினை ஏந்திய பேரருளாளன்;

விடை ஒன்றினை ஊர்தி நயந்தவன் ஊர் ஆம் - இடபவாகனத்தை விரும்பியவன் உறையும் தலம் ஆவது;

கடல்நின்று எழு கார் அடையும் கடவூரே - கடலிலிருந்து எழுந்த மேகம் வந்தடையும் திருக்கடவூர்; (நின்று - ஐந்தாம் வேற்றுமை உருபு); (கார் - மேகம்; மழை);


2)

இலைமாமலர் இட்டவர் இன்னலை நீக்கி

நிலையாகிய வாழ்வருள் நீள்சடை அண்ணல்

தலைமேற்பிறை தாங்கிய தத்துவன் ஊராம்

அலைபோலடி யாரடை யும்கட வூரே.


இலை மாமலர் இட்டவர் இன்னலை நீக்கி - இலைகளையோ அழகிய மலர்களையோ இட்டு வழிபடுபவர்களது துன்பத்தைத் தீர்த்து;

நிலை ஆகிய வாழ்வு அருள் நீள்சடை அண்ணல் - அவர்களுக்கு நிலையான வீட்டின்பத்தை அருளும், நீண்ட சடையுடைய தலைவன்;

தலைமேல் பிறை தாங்கிய தத்துவன் ஊர் ஆம் - சந்திரனைச் சூடிய மெய்ப்பொருளான பெருமான் உறையும் தலம் ஆவது;

அலைபோல் அடியார் அடையும் கடவூரே - கடல்போல அடியவர்கள் திரண்டு அடைகின்ற திருக்கடவூர்;


3)

மழையார்மிட றேத்திய மாணியை மாய்க்க

அழலார்விழி யோடடை கூற்றைய ழித்தான்

சுழலார்நதி தூமதி சூடிதன் ஊராம்

கழல்வாழ்த்திடு நேயர்கள் சேர்கட வூரே.


மழை ர் மிடறு ஏத்திய மாணியை மாய்க்க அழல் ஆர் விழியோடு அடை கூற்றை ழித்தான் - மேகம் போன்ற நீலகண்டத்தைத் துதித்த மார்க்கண்டேயரைக் கொல்லத் தீக் கக்கும் கண்களோடு நெருங்கிய காலனை உதைத்து அழித்தவன்; (மழை - மேகம்); (ஆர்தல் - ஒத்தல்; பொருந்துதல்);

சுல் ஆர் நதி தூ-மதி சூடிதன் ஊர் ஆம் - சுழல்கள் நிறைந்த கங்கையையும் வெண்திங்களையும் சூடியவன் உறையும் தலம் ஆவது; (சூடி - சூடியவன்);

கழல் வாழ்த்திடு நேயர்கள் சேர் கடவூரே - திருவடியை வாழ்த்தும் அன்பர்கள் திரள்கின்ற திருக்கடவூர்;


4)

கூரார்மழு மான்மறி ஏந்திய கோமான்

ஈராறுகை மைந்தனை நல்கிய ஏந்தல்

நீரார்சடை நின்மலன் நின்றருள் ஊராம்

காரார்தரு கோபுர மார்கட வூரே.


கூர் ஆர் மழு மான்மறி ஏந்திய கோமான் - கூரிய மழுவையும் மான்கன்றையும் ஏந்திய அரசன்;

ஈராறுகை மைந்தனை நல்கிய ஏந்தல் - பன்னிருகை முருகனைத் தந்த பெருமையுடையவன்;

நீர் ஆர் சடை நின்மலன் நின்று அருள் ஊர் ஆம் - கங்கையைச் சடையில் உடைய தூயன் நீங்காமல் உறைகின்ற தலம் ஆவது;

கார் ஆர்தரு கோபுரம் ஆர் கடவூரே - மேகம் பொருந்துகின்ற கோபுரம் பொருந்திய திருக்கடவூர்; (ஆர்தல் - பொருந்துதல்); (தருதல் - ஒரு துணைவினை);


5)

மானார்கரன் வாளர வார்மணி மார்பன்

வானார்பிறை வாழ்ந்திட வார்சடை வைத்தான்

ஊனார்தலை யிற்பலி ஏற்பவன் ஊராம்

கானார்மலர் ஆர்பொழில் சூழ்கட வூரே.


மான் ஆர் கரன் - கையில் மானை ஏந்தியவன்;

வாளரவு ஆர் மணி-மார்பன் - கொடிய பாம்பைப் பவளம் போன்ற அழகிய மார்பில் அணிந்தவன்; (வாள் - கொடிய); (ஆர்தல் - அணிதல்; பொருந்துதல்); (மணி - பவளம்; அழகு);

வான் ஆர் பிறை வாழ்ந்திட வார்சடை வைத்தான் - அழகிய பிறை வாழும்படி நீண்ட சடையில் அதனை வைத்தவன்; (வான் - ஆகாயம்; அழகு);

ஊன் ஆர் தலையில் பலி ஏற்பவன் ஊர் ஆம் - மாமிசம் பொருந்திய மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் பெருமான் உறையும் தலம் ஆவது;

கான் ஆர் மலர் ஆர் பொழில் சூழ் கடவூரே - வாசமலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கடவூர்; (கான் - வாசனை);


6)

அவியாவொரு சோதியன் அங்கணன் அன்பால்

புவியோர்மலர் கொண்டடி போற்றிட என்றும்

தவியாநிலை தந்தருள் சங்கரன் ஊராம்

கவினார்பொழில் சூழ்நல மார்கட வூரே;


அவியா ஒரு சோதியன் - என்றும் அழியாத ஒப்பற்ற ஜோதிவடிவினன்;

அங்கணன் - அருள்நோக்கம் உடையவன்;

அன்பால் புவியோர் மலர் கொண்டு அடிபோற்றிட என்றும் தவியா நிலை தந்தருள் சங்கரன் ஊர் ஆம் - அன்போடு நிலவுலகத்தினர் பூவால் திருவடியை வழிபட, அவர்களுக்கு எந்நாளும் துன்பமற்ற நிலையைத் தந்து காக்கின்ற சங்கரன் உறையும் தலம் ஆவது;

கவின் ஆர் பொழில் சூழ் நலம் ஆர் கடவூரே - அழகிய சோலை சூழ்ந்த நன்மை மிக்க திருக்கடவூர்;


7)

கல்லாலதன் நீழலு கந்தக ருத்தன்

பல்லார்தலை யிற்பலி ஏற்றவன் வெற்பு

வில்லால்மதில் வெந்தற எய்தவன் ஊராம்

கல்லார்மதில் சூழணி யார்கட வூரே.


கல்லால்-அதன் நீழல் உகந்த கருத்தன் - கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருக்கும் கர்த்தன்; (கருத்தன் - கர்த்தா - கடவுள்); (சம்பந்தர் தேவாரம் - 1.134.1 - "கருத்தன் கடவுள் கனலேந்தியாடும் நிருத்தன்")

பல் ஆர் தலையில் பலி ஏற்றவன் - பற்கள் பொருந்திய மண்டையோட்டில் பிச்சையை ஏற்பவன்; (அப்பர் தேவாரம் - 6.47.9 - "பல்லார்ந்த வெண்டலை கையில் ஏந்தி");

வெற்பு-வில்லால் மதில் வெந்து அற எய்தவன் ஊர் ஆம் - மேருமலை என்ற வில்லால் முப்புரங்களும் வெந்து அழியும்படி ஒரு கணையை எய்த பெருமான் உறையும் தலம் ஆவது;

கல் ஆர் மதில் சூழ் அணி ஆர் கடவூரே - கருங்கல்லால் ஆன மதிலால் சூழப்பெற்ற திருக்கடவூர்; (சம்பந்தர் தேவாரம் - 1.31.1 - "கல்லார் மதிற்காழியுள் ஞான சம்பந்தன்");


8)

செருவொன்றில னாய்மலை பேர்த்தசெ ருக்கன்

வெருவும்படி ஓர்விர லால்நெரி செய்தான்

பொருவெங்கரி ஈருரி போர்த்தவன் ஊராம்

கருவண்டிசை ஆர்பொழில் சூழ்கட வூரே.


செரு ன்று இலனாய் மலை பேர்த்த செருக்கன் வெருவும்படி ஓர் விரலால் நெரி செய்தான் - எதிர்த்துப் போர்செய்வார் எவரும் இல்லாதவனாகிக், கயிலைமலையைப் பெயர்த்த கர்வம் மிகுந்த இராவணன் அஞ்சும்படி அவனை ஒரு விரலை ஊன்றி நசுக்கியவன்; (செரு - போர்); (ஒன்று - ஒன்றும்; உம் தொக்கது); (செருக்கு - கர்வம்; அகந்தை); (வெருவுதல் - அஞ்சுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.118.8 - "செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்தருள் செய்தவரே");

பொரு-வெங்கரி ஈர்உரி போர்த்தவன் ஊர் ஆம் - போர்செய்த கொடிய யானையின் உரித்த ஈரத்தோலைப் போர்த்த பெருமான் உறையும் தலம் ஆவது; (பொருதல் - போர்செய்தல்);

கருவண்டு இசை ஆர் பொழில் சூழ் கடவூரே - கரிய வண்டுகள் இசை ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருக்கடவூர்;


9)

நெடியானயன் நேடிவ ணங்கிட நின்றான்

கொடிபோலுமை கூறும கிழ்ந்திடு கூத்தன்

பொடிபூசிய புண்ணியன் மேவிய ஊராம்

கடியார்மலர் ஆர்பொழில் சூழ்கட வூரே.


நெடியான் அயன் நேடி வணங்கிட நின்றான் - திருமாலும் பிரமனும் தேடிக் காணாமல் வணங்குமாறு எல்லையற்ற ஜோதியாகி நின்றவன்; (நேடுதல் - தேடுதல்);

கொடிபோல் உமை கூறு மகிழ்ந்திடு கூத்தன் - பூங்கொடி போன்ற உமையை ஒரு பாகமாக விரும்பிய கூத்தன்;

பொடி பூசிய புண்ணியன் மேவிய ஊர் ஆம் - திருநீற்றைப் பூசிய புண்ணியமூர்த்தியான சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

கடி ஆர் மலர் ஆர் பொழில் சூழ் கடவூரே - வாசமலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கடவூர்;


10)

நள்ளாதவர் நாளு(ம்) நவிற்றுரை நஞ்சே

உள்ளோடிய தென்றுணர் வீருமை பங்கன்

வெள்ளேறமர் முக்கணன் மேவிய ஊராம்

கள்ளார்மலர் ஆர்பொழில் சூழ்கட வூரே.


நள்ளாதவர் நாளு(ம்) நவிற்று உரை நஞ்சே உள் ஓடியது என்று உணர்வீர் - அன்பு இல்லாதவர்கள் எந்நாளும் ஓயாமல் பேசும் பேச்செல்லாம் உள்ளே விஷத்தை உடையது என்று உணருங்கள்; (நவிற்றுதல் - சொல்லுதல்); (ஓடுதல் - பொருந்துதல்); (உணர்வீர் - உணருங்கள் என்ற பொருளில்);

உமைபங்கன் - அர்த்தநாரீஸ்வரன்;

வெள்-ஏறு அமர் முக்கணன் மேவிய ஊர் ஆம் - வெள்ளை இடபத்தை வாகனமாக விரும்பிய நெற்றிக்கண்ணன் உறையும் தலம் ஆவது;

கள் ஆர் மலர் ஆர் பொழில் சூழ் கடவூரே - தேன் நிறைந்த மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கடவூர்;


11)

தமிழின்தொடை பாடிடு வார்வினை தன்னில்

அமிழுந்துயர் தீர்ப்பவன் அன்றலை ஆழி

உமிழ்நஞ்சினை உண்டருள் உத்தமன் ஊராம்

கமழும்பொழில் சூழ்நல மார்கட வூரே;


தமிழ் இன்-தொடை பாடிடுவார் வினைதன்னில் அமிழும் துயர் தீர்ப்பவன் - தமிழில் இனிய பாமாலைகளைப் பாடும் பக்தர்கள் வினைக்கடலில் ஆழ்ந்து துன்பப்படாதவாறு அவர்களைக் காத்து அருள்பவன்;

அன்று அலைஆழி உமிழ் நஞ்சினை உண்டு அருள் உத்தமன் ஊர் ஆம் - முன்பு அலைகடலில் எழுந்த விஷத்தை உண்டு அருளிய உத்தமனான சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

கமழும் பொழில் சூழ் நலம் ஆர் கடவூரே - மணம் கமழும் சோலை சூழ்ந்த நன்மை மிக்க திருக்கடவூர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.490 - பொது - ஈடிலாதவன்

2019-11-09

P.490 - பொது - "சொல்லைக் கடந்த சுகம்"

-----------------

(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பு )

(அப்பர் தேவாரம் - 5.2.1 - "பனைக்கை மும்மத வேழம்")

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

ஈடி லாதவன் ஈரச் சடையினன்

வாடி வாழ்த்து மதிதனை வார்சடைச்

சூடி சொல்லைக் கடந்த சுகம்பெற

நாடி நெஞ்சே நினையவன் நாமமே.


டு இலாதவன் - இணையற்றவன்;

ஈரச் சடையினன் - கங்கையைச் சடையில் அணிந்தவன்;

வாடி வாழ்த்து மதிதனை வார்சடைச் சூடி - தேய்ந்து வருந்தி வழிபட்ட சந்திரனை நீள்சடையில் சூடியவன்;

சொல்லைக் கடந்த சுகம் பெற, நாடி நெஞ்சே நினை அவன் நாமமே - பேரின்பத்தைப் பெற, நெஞ்சமே, அவன் திருநாமத்தை விரும்பி எண்ணுவாயாக;


2)

காதில் ஓர்குழை காட்டிய கண்ணுதல்

தீதி லாமறை ஓதி எருதமர்

சோதி சொல்லைக் கடந்த சுகம்பெற

ஆதி நாமம் அதுநினை நெஞ்சமே.


காதில் ஓர் குழை காட்டிய கண்ணுதல் - ஒரு காதில் குழை அணிந்த நெற்றிக்கண்ணன்;

தீது இலா மறை ஓதி - குற்றமற்ற வேதங்களை ஓதியவன்;

எருது அமர் சோதி - இடபவாகனத்தை விரும்பிய ஒளிவடிவினன்;

சொல்லைக் கடந்த சுகம் பெற, ஆதி நாமம் அது நினை நெஞ்சமே - பேரின்பம் பெற, நெஞ்சமே, ஆதிமூர்த்தியான ஈசனது திருநாமத்தை நினைவாயாக;


3)

தாயின் நல்லவன் தன்னடி யார்கட்குத்

தீயின் வண்ணன் திகழ்சடை ஆறணி

தூயன் சொல்லைக் கடந்த சுகம்பெற

நேய மாகி நினையவன் நாமமே.


தாயின் நல்லவன் தன் அடியார்கட்குத் - தன் பக்தர்களுக்குத் தாயைவிட நன்மை செய்பவன்;

தீயின் வண்ணன் - தீப் போன்ற நிறமுடைய திருமேனியன்;

திகழ்-சடை ஆறு அணி தூயன் - விளங்கும் சடையில் கங்கையை அணிந்த பரிசுத்தன்;

சொல்லைக் கடந்த சுகம் பெற, நேயமாகி நினை அவன் நாமமே - பேரின்பம் பெற, நெஞ்சமே, அப்பெருமானது திருநாமத்தை அன்போடு நினைவாயாக;


4)

தக்கன் வேள்வியை அன்று தகர்த்தருள்

முக்கண் மூர்த்தி முடிமிசைப் பாம்பணி

சொக்கன் சொல்லைக் கடந்த சுகம்பெற

நக்கன் நாமத்தை நாளும் நினைநெஞ்சே.


தக்கன் வேள்வியை அன்று தகர்த்தருள் முக்கண் மூர்த்தி - தக்கன் செய்த அவவேள்வியை முன்பு அழித்த முக்கட்பெருமான்;

முடிமிசைப் பாம்பு அணி சொக்கன் - தலைமேல் பாம்பை அணிந்த அழகன்;

சொல்லைக் கடந்த சுகம் பெற, நக்கன் நாமத்தை நாளும் நினை நெஞ்சே - பேரின்பம் பெற, நெஞ்சமே, திகம்பரனான ஈசனது திருநாமத்தைத் தினமும் நினைவாயாக;


5)

பித்தன் என்ற பெயரும் உடையவன்

நித்தன் நெற்றியில் நேத்திரன் நீறணி

சுத்தன் சொல்லைக் கடந்த சுகம்பெற

அத்தன் நாமம் அதுநினை நெஞ்சமே.


பித்தன் என்ற பெயரும் உடையவன் - பித்தன் (பேரருளாளன்) என்ற பெயரும் உடையவன்;

நித்தன் - அழ்விவற்றவன்;

நெற்றியில் நேத்திரன் - நெற்றிக்கண்ணன்;

நீறு அணி சுத்தன் - திருநீற்றைப் பூசிய தூயன்;

சொல்லைக் கடந்த சுகம் பெற, அத்தன் நாமம் அது நினை நெஞ்சமே - பேரின்பம் பெற, நெஞ்சமே, நம் தந்தையான ஈசனது திருநாமத்தை நினைவாயாக;


6)

காலன் மார்பில் கழலால் உதைத்தவன்

வேலன் தாதை விடையினன் மூவிலைச்

சூலன் சொல்லைக் கடந்த சுகம்பெற

ஆலன் நாமம் அதுநினை நெஞ்சமே.


காலன் மார்பில் கழலால் உதைத்தவன் - காலனை மார்பில் திருவடியால் உதைத்தவன்;

வேலன் தாதை - முருகனுக்குத் தந்தை;

விடையினன் - இடபவாகனன்;

மூவிலைச் சூலன் - திரிசூலன்;

சொல்லைக் கடந்த சுகம் பெற, ஆலன் நாமம் அது நினை நெஞ்சமே - பேரின்பம் பெற, நெஞ்சமே, கல்லாலமரத்தின்கீழ் இருக்கும் ஈசனது திருநாமத்தை நினைவாயாக;


7)

வேழந் தன்னை உரித்தவன் விண்ணவர்

வாழ வல்விடம் உண்டவன் வன்றொண்டர்

தோழன் சொல்லைக் கடந்த சுகம்பெற

ஏழை பங்கன்பேர் எண்ணு மடநெஞ்சே.


வேழம்-தன்னை உரித்தவன் - யானையின் தோலை உரித்தவன்;

விண்ணவர் வாழ வல்விடம் உண்டவன் - தேவர்கள் வாழுமாறு கொடிய விஷத்தை உண்டவன்;

வன்-தொண்டர் தோழன் - சுந்தரருக்குத் தன்னைத் தோழனாகத் தந்தவன்;

சொல்லைக் கடந்த சுகம் பெற, ஏழைபங்கன் பேர் எண்ணு மடநெஞ்சே - பேரின்பம் பெற, நெஞ்சமே, உமைபங்கனது திருநாமத்தை நினைவாயாக;


8)

மடமை யால்மலை பேர்த்தவன் சென்னிபத்(து)

அடர ஊன்றிய அண்ணல் அராப்புனை

கடவுள் சொல்லைக் கடந்த சுகம்பெறச்

சுடலை நீற்றன்பேர் சொல்லு மடநெஞ்சே.


மடமையால் மலை பேர்த்தவன் சென்னி பத்து அடர ஊன்றிய அண்ணல் - ஆணவத்தால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்துத்தலைகளும் நெரியும்படி திருப்பாதவிரலை ஊன்றிய தலைவன்; (5.44.11 - "விடலையாய் விலங்கல் எடுத்தான் முடி அடர ஓர்விரல் ஊன்றிய");

அராப்புனை

கடவுள் - இறைவன்;

சொல்லைக் கடந்த சுகம் பெறச், சுடலை-நீற்றன் பேர் சொல்லு மடநெஞ்சே - பேரின்பம் பெற, நெஞ்சமே, சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய ஈசனது திருநாமத்தைச் சொல்வாயாக;


9)

பங்க யத்தினன் பன்னகப் பள்ளியான்

எங்கும் நேடியும் எய்தற் கரியதோர்

துங்கன் சொல்லைக் கடந்த சுகம்பெறச்

சங்க ரன்பேர் தனைநினை நெஞ்சமே.


பங்கயத்தினன் - தாமரைமேல் இருக்கும் பிரமன்;

பன்னகப் பள்ளியான் - பாம்பைப் படுக்கையாக உடைய திருமால்;

எங்கும் நேடியும் எய்தற்கு அரியதோர் துங்கன் - அவ்விருவரும் மண்ணை அகழ்ந்து தேடியும் வானில் பறந்துசென்று தேடியும் அடிமுடி அடைய ஒண்ணாத மேலானவன்; (நேடுதல் - தேடுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.18.4 - "குஞ்சரத் தும்பியது உரிசெய்த துங்கர்");

சொல்லைக் கடந்த சுகம் பெறச், சங்கரன்-பேர்தனை நினை நெஞ்சமே - பேரின்பம் பெற, நெஞ்சமே, சங்கரனது திருநாமத்தை நினைவாயாக;


10)

நாளும் பொய்யுரை நாணிலார்க் கன்பிலான்

வேளை வெண்பொடி செய்த விமலனெண்

தோளன் சொல்லைக் கடந்த சுகம்பெறக்

காள கண்டன்பேர் நீள நினைநெஞ்சே.


நாளும் பொய் உரை நாண் இலார்க்கு அன்பு இலான் - எந்நாளும் பொய்களையே பேசுகின்ற வெட்கமற்றவர்களுக்கு அன்பு இல்லாதவன்;

வேளை வெண்பொடி செய்த விமலன் - மன்மதனைச் சாம்பலாக்கிய தூயன்;

எண்தோளன் - எட்டுப் புஜங்களை உடையவன்;

சொல்லைக் கடந்த சுகம் பெறக், காளகண்டன் பேர் நீள நினை நெஞ்சே - பேரின்பம் பெற, நெஞ்சமே, நீலகண்டனது திருநாமத்தை இடைவிடாமல் நினைவாயாக; (சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "நீள நினைந்தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்");


11)

ஏல வார்குழல் ஏந்திழை பங்கினன்

பால னார்பயம் பாற அருள்கால

காலன் சொல்லைக் கடந்த சுகம்பெற

நீல கண்டன்பேர் நீள நினைநெஞ்சே.


ஏல-வார்-குழல் ஏந்திழை பங்கினன் - மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.61.1 - "ஏல வார்குழலாள் உமைநங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற காலகாலனை");

பாலனார் பயம் பாற அருள் காலகாலன் - மார்க்கண்டேயரது அச்சம் நீங்கும்படி அருளிய காலகாலன்; (பாறுதல் - அழிதல்);

சொல்லைக் கடந்த சுகம் பெற, நீலகண்டன் பேர் நீள நினை நெஞ்சே - பேரின்பம் பெற, நெஞ்சமே, நீலகண்டனது திருநாமத்தை இடைவிடாமல் நினைவாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.489 - வியலூர் - மறியொரு கையில்

2019-10-26

P.489 - வியலூர் (திருவிசநல்லூர்)

---------

(சந்தக் கலிவிருத்தம் - தனதன தான தான தனதானா;

முதற்சீர் தானன என்றும் வரலாம்)

(வடமொழியில் இதனை ஒத்த அமைப்பு - Sanskrit Meter – நவமாலினி / நவமாலிகா - नवमालिनी / नवमालिका - லலல லகுல குலல லகுகு - ललल लगुल गुलल लगुगु )


முற்குறிப்புகள்:

* தமிழில் சந்தப்பாடல்களில் சில இடங்களில் இடையின-ஒற்றோ மெல்லின-ஒற்றோ சந்தம் கெடாது வரக்கூடும். வடமொழியில் அத்தகைய கருத்து இல்லை. இப்பதிகப் பாடல்கள் தமிழ்ச் சந்தப்பாடல்கள்.

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்.


1)

மறியொரு கையில் ஏந்து மழுவாளன்

பொறிதிகழ் நாக மாலை புனைமார்பன்

அறிவுரு வான ஐயன் அமர்கோயில்

வெறிகமழ் சோலை சூழ்ந்த வியலூரே.


மறி ஒரு கையில் ஏந்து மழுவாளன் - மான்கன்றை ஒரு கையில் ஏந்தியவன், மழுவை ஏந்தியவன்; (மறி - மான்கன்று);

பொறி திகழ் நாக-மாலை புனைமார்பன் - புள்ளி திகழும் நாகத்தை மாலையாக மார்பில் அணிந்தவன்; (பொறி - புள்ளி);

அறிவுரு ஆன ஐயன் அமர் கோயில் - சித்ஸ்வரூபியான தலைவன் விரும்பி உறையும் கோயில்;

வெறி கமழ் சோலை சூழ்ந்த வியலூரே - வாசனை கமழும் பொழில் சூழ்ந்த திருவியலூர் ஆகும்; (வெறி - வாசனை);


2)

பெண்ணொரு பங்கன் அன்று பெருவில்லால்

திண்ணிய கோட்டை மூன்று செறுவீரன்

தண்ணியல் ஆற ணிந்த சடையானூர்

விண்ணுயர் சோலை சூழ்ந்த வியலூரே.


பெண் ஒரு பங்கன் - உமைபங்கன்;

அன்று பெருவில்லால் திண்ணிய கோட்டை மூன்று செறு- வீரன் - முன்னம் மேருமலை என்ற பெரிய வில்லால் வலிய முப்புரங்களை அழித்த வீரன்; (செறுதல் - அழித்தல்);

தண் இயல் ஆறு அணிந்த சடையான் ஊர் - குளிர்ந்த கங்கையைச் சடையில் அணிந்தவன் ஊர் ஆவது; (தண் - குளிர்ச்சி);

விண் உயர் சோலை சூழ்ந்த வியலூரே - வானோங்கிய சோலை சூழ்ந்த திருவியலூர்;


3)

மாகயி லாய நாதன் வரியார்ந்த

நாகமி லங்கு மார்பன் நரையேற்றன்

பாக(ம்)ம டந்தை காட்டு பரனூராம்

மேகமு ரிஞ்சு சோலை வியலூரே.


மா-கயிலாய-நாதன் - பெரிய கயிலைமலைமேல் வீற்றிருக்கும் தலைவன்;

வரி ஆர்ந்த நாகம் இலங்கு மார்பன் - வரிகளையுடைய பாம்பு திகழும் மார்பை உடையவன்;

நரை-ஏற்றன் - வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவன்; (நரை - வெண்மை);

பாக(ம்) மடந்தை காட்டு பரன் ஊர் ஆம் - ஒரு பாகமாக உமையைக் காட்டுகின்ற பரமன் ஊர் ஆவது;

மேகம் உரிஞ்சு சோலை வியலூரே - மேகம் உரசும் சோலை சூழ்ந்த திருவியலூர்; (உரிஞ்சுதல் - உரசுதல்; உராய்தல்); (அப்பர் தேவாரம் - 6.35.4 - "மேக முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு");


4)

அரவினை நாண தாக அரையார்த்தான்

விரவிய அன்பர் பண்டை வினைதீர்ப்பான்

திரைகடல் நஞ்சை உண்ட சிவனூராம்

விரைகமழ் சோலை சூழ்ந்த வியலூரே.


அரவினை நாண்அது ஆக அரை ஆர்த்தான் - பாம்பை அரையில் நாணாகக் கட்டியவன்; (நாணது - அது - பகுதிப்பொருள்விகுதி); (ஆர்த்தல் - கட்டுதல்);

விரவிய அன்பர் பண்டை-வினை தீர்ப்பான் - வந்தடைந்த பக்தர்களது பழைய வினைகளைத் தீர்ப்பவன்;

திரைகடல் நஞ்சை உண்ட சிவன் ஊர் ஆம் - அலையெழும் கடலில் தோன்றிய விஷத்தை உண்ட சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

விரை கமழ் சோலை சூழ்ந்த வியலூரே - மணம் கமழும் சோலை சூழ்ந்த திருவியலூர்;


5)

பேரினை ஓதும் அன்பர் பிணிதீர்ப்பான்

ஊரிடும் ஐயம் ஏற்க உழல்பித்தன்

பேரிகள் ஆர்க்க ஆடு பெருமானூர்

வேரி மலிந்த சோலை வியலூரே.


பேரினை ஓதும் அன்பர் பிணி தீர்ப்பான் - திருநாமத்தை ஓதும் பக்தர்களது பிணியைத் தீர்ப்பவன்;

ஊர் இடும் ஐயம் ஏற்க உழல் பித்தன் - ஊரிலுள்ளோர் இடும் பிச்சையை ஏற்கத் திரிகின்ற பேரருளாளன்; (பித்தன் - பேரருளாளன்);

பேரிகள் ஆர்க்க ஆடு பெருமான் ஊர் - பேரிகைகள் (முரசுகள்) முழங்கக் கூத்து ஆடும் பெருமான் உறையும் தலம்; (பேரி - பேரிகை - முரசு; भेरी bherī - kettle-drum); (ஆர்த்தல் - ஒலித்தல்);

வேரி மலிந்த சோலை வியலூரே - வாசனை மல்கும் சோலை சூழ்ந்த திருவியலூர்; (வேரி - தேன்; வாசனை);


6)

புயலன கண்ட என்று புகழ்பாடித்

துயரற வேண்டி நின்று தொழுமன்பர்

பயமற நல்கு கின்ற பரனூராம்

வியனுறும் இஞ்சி சூழ்ந்த வியலூரே.


"புயல் அன கண்ட" என்று புகழ் பாடித் - "மேகம் போன்ற நீலகண்டம் உடையவனே" என்று ஈசன் திருப்புகழைப் பாடி; (புயல் - மேகம்);

துயர் அற வேண்டி-நின்று தொழும் அன்பர் - தம் துயர் நீங்குவதற்காக வழிபடும் பக்தர்களது;

பயம் அற நல்குகின்ற பரன் ஊர் ஆம் - அச்சம் நீங்குமாறு அவர்களுக்கு அருள்கின்ற பரமன் ஊர் ஆவது;

வியன் உறும் இஞ்சி சூழ்ந்த வியலூரே - பெரிய மதில் சூழ்ந்த திருவியலூர்; (வியன் - ஆகாயம்; பெருமை); (உறுதல் - இருத்தல்; அடைதல்); (இஞ்சி - மதில்);


7)

புன்சடை மீது பாம்பு பொலிதிங்கள்

இன்புற வைத்த ஈசன் இணையில்லான்

என்பணி கோலன் நின்ற இடமென்பர்

மென்சிறை வண்ட லம்பு வியலூரே.


புன்சடை மீது பாம்பு, பொலி-திங்கள் இன்புற வைத்த ஈசன் - செஞ்சடைமேல் பாம்பையும் விளங்கும் பிறையையும் சூடி மகிழும் ஈசன்;

இணை இல்லான் - ஒப்பற்றவன்;

என்பு அணி கோலன் நின்ற இடம் என்பர் - எலும்பை அணிந்த கோலத்தை உடைய பெருமான் உறையும் தலம் ஆவது; (என்பு - எலும்பு);

மென்-சிறை வண்டு அலம்பு வியலூரே - மெல்லிய சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற (சோலை சூழ்ந்த) திருவியலூர்; (சிறை - சிறகு); (அலம்புதல் - ஒலித்தல்);


8)

மயலுடை வல்ல ரக்கன் மலையின்கீழ்த்

துயருற ஊன்றி அன்று துதிகேட்டோர்

அயிலுறு வாளும் ஈந்த அரனூராம்

வெயில்நுழை யாத சோலை வியலூரே.


மயலுடை வல்லரக்கன் மலையின்கீழ்த் துயருற ஊன்றி - அறியாமை மிக்க வலிய அரக்கனான இராவணன் கயிலைமலைக்கீழ் வருந்தும்படி திருவடியை ஊன்றி அவனை நசுக்கியவன்; (மயல் - மயக்கம்; அறியாமை); (ஊன்றி - ஊன்றியவன்);

அன்று துதி கேட்டு ஓர் அயிலுறு வாளும் ஈந்த அரன் ஊர் ஆம் - பின்பு இராவணன் அழுது இசைபாடக் கேட்டு இரங்கி, அவனுக்கு (நீண்ட ஆயுளையும், இராவணன் என்ற பெயரையும்,) ஒரு கூரிய வாளையும் வரமருளிய ஹரன் உறையும் தலம் ஆவது; (அயில் - கூர்மை); (வாளும் - உம் - எச்சவும்மை);

வெயில் நுழையாத சோலை வியலூரே - வெயில் நுழையாத அடர்ந்த சோலை சூழ்ந்த திருவியலூர்;


9)

அரியயன் நேடி வாடி அடிபோற்ற

எரியென நின்ற ஈசன் எருதேறி

கரியுரி போர்த்த எந்தை கருதும்மூர்

விரிபொழில் ஆர்ந்தி லங்கு வியலூரே.


அரி அயன் நேடி வாடி அடிபோற்ற எரி என நின்ற ஈசன் - திருமாலும் பிரமனும் அடிமுடி தேடி வாடி வணங்குமாறு எல்லையற்ற ஒளித்தூணாகி நின்ற ஈசன்; (நேடுதல் - தேடுதல்); (எரி - தீ; ஜோதி);

எருதேறி - இடபவாகனன்;

கரியுரி போர்த்த எந்தை கருதும் ஊர் - யானைத்தோலைப் போர்த்த எம் தந்தையான சிவபெருமான் விரும்பி உறையும் தலம்; (கரி - யானை); (உரி - தோல்); (கருதுதல் - விரும்புதல்); (கருதும்மூர் - மகரஒற்று விரித்தல் விகாரம்);

விரிபொழில் ஆர்ந்து இலங்கு வியலூரே - விரிந்த சோலைகள் நிறைந்த திருவியலூர்;


10)

மாமணி கண்டன் நாம(ம்) மருவாநா

ஊமரை நீங்கி வம்மின் ஒருதேவன்

ஆமையின் ஓட ணிந்த அரனூராம்

வீமலி சோலை சூழ்ந்த வியலூரே.


மா-மணிகண்டன் நாம(ம்) மருவா நா- ஊமரை நீங்கி வம்மின் - அழகிய மணிகண்டத்தை உடைய பெருமானது திருநாமத்தைச் சொல்லாத நாக்கை உடைய ஊமைகளை விட்டு நீங்கி வாருங்கள்; (மருவா - மருவாத - தழுவாத); (ஊமர் - ஊமைகள்); (மின் - ஏவற்பன்மை விகுதி);

ஒரு தேவன் - ஒப்பற்ற தேவன்;

ஆமையின் ஓடு அணிந்த அரன் ஊர் ஆம் - ஆமையோட்டை மார்பில் பூண்ட ஹரன் உறையும் ஊர் ஆவது; (சம்பந்தர் தேவாரம் - 2.85.2 - "என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க);

வீ மலி சோலை சூழ்ந்த வியலூரே - பூக்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த திருவியலூர்; (வீ - பூ);


11)

இசையொடு பாடும் அன்பர் இடர்தீர்ப்பான்

அசைவிலன் வேளை ஆகம் அறநோக்கி

திசையவை ஆடை யான சிவனூராம்

மிசையெழு சோலை சூழ்ந்த வியலூரே.


இசையொடு பாடும் அன்பர் இடர் தீர்ப்பான் - தேவாரம் முதலிய பாமாலைகளை இசையோடு பாடி வழிபடும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்;

அசைவு இலன் - சலனமற்றவன்; அசலன்;

வேளை ஆகம் அற நோக்கி - மன்மதனை அவனது உடல் அழியும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவன்; (வேள் - காமன்); (ஆகம் - உடல்); (நோக்கி - நோக்கியவன்);

திசைஅவை ஆடை ஆன சிவன் ஊர் ஆம் - திக்குகளே ஆடையான (திகம்பரன்) சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

மிசை எழு சோலை சூழ்ந்த வியலூரே - மேலோங்கிய பொழில் சூழ்ந்த திருவியலூர்; (மிசை - மேலிடம்; வானம்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

P.488 - அதிகை (திருவதிகை) - தாரணி மார்பினில்

2019-10-25

P.488 - அதிகை (திருவதிகை)

--------------------

(கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா;

தானனா என்பது தனதனா / தானன / தனதன என்றும் சில சீர்களில் வரும்)

(விளம் விளம் விளம் விளம் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.35.1 - "முன்னைநான் மறையவை")

(சுந்தரர் தேவாரம் - 7.37.2 - "பறக்குமெங் கிள்ளைகாள்")

* (x) - புணர்ச்சி பிரித்த வடிவம்;


1)

தாரணி மார்பினில் தையலோர் பங்கினன்

கூரணி மழுவினன் கொல்புலித் தோலினன்

நீரணி சடையினன் நீள்மதில் அவைபட

ஆரழல் மூட்டினான் அதிகைவீ ரட்டனே.


தார் அணி மார்பினில் தையல் ஓர் பங்கினன் - மாலை அணிந்த மார்பில் உமையை ஒரு பங்காக உடையவன்;

கூர் அணி மழுவினன் - கூர்மை பொருந்திய மழுவை உடையவன்;

கொல்புலித் தோலினன் - கொல்லும் புலியின் தோலை ஆடையாக அணிந்தவன்;

நீர் அணி சடையினன் - சடையில் கங்கையை அணிந்தவன்;

நீள்மதில் அவை பட ஆரழல் மூட்டினான் - பெரிய முப்புரங்கள் அழியும்படி அவற்றைத் தீப் புகச் செய்தவன்; (படுதல் - அழிதல்);

அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;


2)

இரண்டென ஒன்றென எட்டென ஆயவன்

சரண்புகும் அடியவர் தம்வினை தீர்ப்பவன்

முரண்படும் அசுரர்கள் மூவரின் கூட்டமார்

அரண்பட எய்தவன் அதிகைவீ ரட்டனே.


இரண்டு என ஒன்று என எட்டு என ஆயவன் - ஏகன், சிவம் சக்தி, அட்டமூர்த்தி என்றெல்லாம் வடிவங்கள் உடையவன்; (அப்பர் தேவாரம் - 5.42.7 - "உமை பங்கனார் எட்டும் ஒன்றும் இரண்டுமூன் றாயினார்");

சரண்புகும் அடியவர்தம் வினை தீர்ப்பவன் - சரண்புகுந்த பக்தர்களது வினைகளைத் தீர்ப்பவன்;

முரண்படும் அசுரர்கள் மூவரின் கூட்டம் ஆர் அரண் பட எய்தவன் - பகைத்த மூன்று அசுரர்களது கூட்டங்கள் பொருந்திய முப்புரங்களும் அழியும்படி ஒரு கணை எய்தவன்;

அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;


3)

வம்பவிழ் மலர்கொடு மலரடி போற்றினார்

வெம்பவ நோய்தனை வீட்டிடும் எம்பிரான்

உம்பர்கள் தலைமகன் ஒன்னலர் புரமெரி

அம்பினை எய்தவன் அதிகைவீ ரட்டனே.


வம்பு அவிழ் மலர்கொடு மலரடி போற்றினார் வெம்-பவநோய்தனை வீட்டிடும் எம்பிரான் - வாசனை கமழும் பூக்களால் மலர்த்திருவடியை வழிபட்ட பக்தர்களது கொடிய பிறவிப்பிணியைத் தீர்க்கும் எம்பெருமான்; (வம்பு - வாசனை);

உம்பர்கள் தலைமகன் - தேவர்கள் தலைவன்;

ஒன்னலர் புரம் எரி அம்பினை எய்தவன் - பகைவர்களது முப்புரங்களை எரித்த கணையை எய்தவன்; (ஒன்னலர் - பகைவர்);

அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;


4)

பரவிய அடியவர் படுதுயர் தீர்ப்பவன்

குரவொடு கூவிளம் குஞ்சியிற் சூடினான்

விரவலர் முப்புரம் வெந்தற வில்லினில்

அரவினை ஆர்த்தவன் அதிகைவீ ரட்டனே.


பரவிய அடியவர் படுதுயர் தீர்ப்பவன் - துதிக்கும் அடியார்களது பெருந்துன்பத்தைத் தீர்ப்பவன்; (படுதுயர் - 1. கொடிய துன்பம்; 2. அனுபவிக்கின்ற துன்பம்);

குரவொடு கூவிளம் குஞ்சியில் சூடினான் - தலையில் குராமலர், வில்வம் இவற்றைச் சூடியவன்;

விரவலர் முப்புரம் வெந்து அற வில்லினில் அரவினை ஆர்த்தவன் - பகைவர்களது முப்புரங்கள் வெந்து அழியும்படி வில்லில் பாம்பை நாணாகக் கட்டியவன்; (விரவலர் - பகைவர்); (ஆர்த்தல் - கட்டுதல்);

அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;


5)

கழலிணை தொழுதவர் கவலைகள் தீர்ப்பவன்

மழவிடை ஊர்தியன் மார்பினில் நூலினன்

குழைதிகழ் காதினன் கூடலர் முப்புரம்

அழல்விழ எய்தவன் அதிகைவீ ரட்டனே.


கழல்இணை தொழுதவர் கவலைகள் தீர்ப்பவன் - இருதிருவடிகளைத் தொழுத அன்பர்களது கவலைகளைத் தீர்ப்பவன்;

மழவிடை ஊர்தியன் - இளைய இடபத்தை வாகனமாகக் கொண்டவன்; (மழ – இளைய);

மார்பினில் நூலினன் - மார்பில் முப்புரிநூலை அணிந்தவன்;

குழை திகழ் காதினன் - காதில் குழையை அணிந்தவன்;

கூடலர் முப்புரம் அழல் விழ எய்தவன் - பகைவர்களது முப்புரங்கள் தீயில் விழும்படி அம்பை எய்தவன்; (கூடலர் - பகைவர்); (அழல் - தீ);

அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;


6)

தொழுதெழும் தொண்டர்தம் துயரினைத் தீர்த்தருள்

தொழிலுடைத் தூயவன் சுடர்மதிச் சடையினன்

உழிதரு முப்புரம் ஒருநொடி அளவினில்

அழிவுற எய்தவன் அதிகைவீ ரட்டனே.


தொழுதெழும் தொண்டர்தம் துயரினைத் தீர்த்தருள் தொழிலுடைத் தூயவன் - தொழும் தொண்டர்களது துயரைத் தீர்த்து அருளும் தொழிலை உடைய தூயன்; (சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "தொழுவாரவர் துயராயின தீர்த்தல் உன தொழிலே");

சுடர்மதிச் சடையினன் - ஒளிவீசும் திங்களைச் சடையில் அணிந்தவன்;

உழிதரு முப்புரம் ஒருநொடி அளவினில் அழிவுற எய்தவன் - எங்கும் அலையும் முப்புரங்கள் ஒருநொடிப்பொழுதில் அழியும்படி கணை எய்தவன்; (உழிதல் - அலைதல்); (தருதல் - ஒரு துணைவினை);

அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;


7)

பத்தரைக் காப்பவன் பழவினை தீர்ப்பவன்

நித்தியன் முத்தியன் நெற்றியில் நேத்திரன்

முத்தலை வேலினன் முப்புரம் வெந்தற

அத்திரம் எய்தவன் அதிகைவீ ரட்டனே.


பத்தரைக் காப்பவன் பழவினை தீர்ப்பவன் - பக்தர்களைக் காத்து அவர்களது பழவினையைத் தீர்ப்பவன்;

நித்தியன் முத்தியன் - அழிவற்றவன், முக்திநிலையில் இருப்பவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.8.2 - "முத்தியர் மூப்பிலர் ஆப்பினுள்ளார்");

நெற்றியில் நேத்திரன் - நெற்றிக்கண்ணன்;

முத்தலை வேலினன் - திரிசூலத்தை ஏந்தியவன்; (பட்டினத்து அடிகள் - திருஏகம்பமுடையார் திருவந்தாதி - 11.29.17 - "பொரு-முத்தலைவேற் படைக்-கம்பர்");

முப்புரம் வெந்து அற அத்திரம் எய்தவன் - முப்புரங்கள் சாம்பலாகும்படி கணை எய்தவன்;

அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;


8)

குன்றன தோள்களால் கோன்மலை பேர்த்திடச்

சென்றவன் அழுதிடத் திருவிரல் ஊன்றினான்

ஒன்றலர் மதில்களை ஒருமலை வில்லினால்

அன்றெரி செய்தவன் அதிகைவீ ரட்டனே.


குன்று அன தோள்களால் கோன்மலை பேர்த்திடச் சென்றவன் அழுதிடத் திருவிரல் ஊன்றினான் - மலை போன்ற பெரிய வலிய புஜங்களால் ஈசனது கயிலைமலையைப் பெயர்க்கச் சென்ற இராவணனை அவன் அழும்படி திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி நசுக்கிய பெருமான்;

ஒன்றலர் மதில்களை ஒரு மலைவில்லினால் அன்று எரி செய்தவன் - பகைவர்களது முப்புரங்களை மேருமலையை வில்லாக ஏந்தி முன்பு எரித்தவன்; (ஒன்றலர் - பகைவர்);

அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;


9)

அம்புயன் அரியிவர் அறிவொணாச் சோதியான்

நம்பிய அன்பரை நண்ணிநின் றருள்பவன்

கொம்பனாள் பங்கினன் கூடலர் புரமெரி

அம்பினை எய்தவன் அதிகைவீ ரட்டனே.


அம்புயன் அரி இவர் அறிவு ஒணாச் சோதியான் - தாமரைமலர்மேல் இருக்கும் பிரமன், திருமால் இவர்களால் அறிவதற்கு அரிய ஜோதி;

நம்பிய அன்பரை நண்ணிநின்று அருள்பவன் - விரும்பி வழிபடும் பக்தர்களை அருகிருந்து காத்தருள்பவன்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்);

கொம்பு அனாள் பங்கினன் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு பங்கில் உடையவன்; (அனாள் - அன்னாள் - போல்பவள்);

கூடலர் புரம் எரி அம்பினை எய்தவன் - பகைவர்களது முப்புரங்களை எரித்த அம்பை எய்தவன்; (கூடலர் - பகைவர்);

அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;


10)

நித்தலும் பொய்யுரை நீசர்சொல் நீங்குமின்

அத்தியின் ஈருரி போர்த்தவன் ஆறணி

வித்தகன் வென்றிவெள் விடையினன் புரமெரி

அத்திரம் எய்தவன் அதிகைவீ ரட்டனே.


நித்தலும் பொய் உரை நீசர் சொல் நீங்குமின் - எந்நாளும் பொய்களையே சொல்லும் கீழோர்களது பேச்சை நீங்குங்கள்; (நீங்குமின் - நீங்குங்கள்);

அத்தியின் ஈர்உரி போர்த்தவன் - யானையின் உரித்த ஈரத்தோலைப் போர்த்தவன்; (ஈர்த்தல் - உரித்தல்); (ஈர் - ஈரம்); (உரி - தோல்);

ஆறு அணி வித்தகன் - கங்கையைச் சடையில் அணிந்த வல்லவன்;

வென்றி வெள்விடையினன் - வெற்றியுடைய வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவன்; (வென்றி - வெற்றி);

புரம் எரி அத்திரம் எய்தவன் - முப்புரங்களை எரித்த கணையை எய்தவன்;

அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;


11)

சுடுபொடி பூசிய சுந்தரன் பூங்கணை

தொடுமதன் உடலறச் சுட்டவன் உலகினில்

இடுபலிக் குழல்பவன் இகலியார் முப்புரம்

அடுசரம் உய்த்தவன் அதிகைவீ ரட்டனே.


சுடுபொடி பூசிய சுந்தரன் - வெந்த வெண்ணீற்றைப் பூசிய அழகன்;

பூங்கணை தொடு மதன் உடல் அறச் சுட்டவன் - மலர்க்கணையை எய்த மன்மதனது உடல் அழியும்படி சுட்டெரித்தவன்;

உலகினில் இடுபலிக்கு உழல்பவன் - உலகில் பிச்சை ஏற்று உழல்பவன்;

இகலியார் முப்புரம் அடு-சரம் உய்த்தவன் - பகைவர்களது முப்புரங்களை எரித்த கணையை எய்தவன்; (இகல்தல் - பகைத்தல்; இகலியார் - பகைவர்); (அடுதல் - அழித்தல்); (உய்த்தல் - ஆயுதம் பிரயோகித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.25.1 – "இகலியார்புரம் எய்தவன்"); (சம்பந்தர் தேவாரம் - 2.24.2 - "சிறவார் புரமூன் றெரியச் சிலையில் உறவார் கணை உய்த்தவனே");

அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------