Sunday, June 28, 2026

M.076 - மானார் - கரவன் - மடக்கு

2020-05-21

M.076 - மானார் - கரவன் - மடக்கு

-----------------

மானார் விழியாள் மணவாளன் ஏறேறு

மானார் தொழினும் வரமருள்வான் - மானார்

கரவன் கமழ்சடையிற் கங்கையினான் நாலும்

கரவன் கரியுரித்தான் காண்.


சொற்பொருள்:

மான் ஆர் - 1. மான் போன்ற; 2. பெரியோன் யார்; 3. மான் பொருந்திய;

மான் - 1. மான் என்ற விலங்கு; 2. பெரியோன்;

ஆர்தல் - 1. ஒத்தல்; 2. பொருந்துதல்;

கரவன் - 1. கையை உடையவன்; 2. (கர வன் =) கரத்தையுடைய வலிய கொடிய;


மான் ஆர் விழியாள் மணவாளன் - மான் போன்ற விழியுடைய உமைக்குக் கணவன்;

ஏறு ஏறு மான் - இடபத்தின்மேல் ஏறுகின்ற பெரியோன்; (சம்பந்தர் தேவாரம் - 1.127.1 - "பிரமபுரத்துறை பெம்மா னெம்மான்")

ஆர் தொழினும் வரம் அருள்வான் - எத்தகையவராயினும் (அன்போடு) வணங்கினால் அவர்களுக்கு வரம் அருள்பவன்; (ஆர் - யார்);

மான் ஆர் கரவன் - கையில் மானை ஏந்தியவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "உழையார் கரவா உமையாள் கணவா");

கமழ்-சடையில் கங்கையினான் - மணம் கமழும் சடையில் கங்கையைத் தரித்தவன்;

நாலும் கர-வன்-கரி உரித்தான் காண் - தொங்கும் கையை உடைய கொடிய யானையின் தோலை உரித்தவன்; (நால்தல் - தொங்குதல்); (காண் - பார்; அறி; முன்னிலை அசைச்சொல்); (அப்பர் தேவாரம் - 6.64.8 - "முடித்தவன்காண் வன்கூற்றை");


வி. சுப்பிரமணியன்

------------ ------------


M.075 - செய்யானை - வண்டார் - மடக்கு

2020-05-21

M.075 - செய்யானை - வண்டார் - மடக்கு

-----------------

செய்யானை நாகமதி சேர்த்தானை வந்துபோர்

செய்யானை செற்றானைத் தீமையொன்றும் - செய்யானை

வண்டார் குழல்மாதை வாம(ம்) மகிழ்ந்தானை

வண்டார் புனைந்தானை வாழ்த்து.


சொற்பொருள்:

செய்யானை - 1. செம்மேனியனை; 2. செய் ஆனை; 3. செய்யாதவனை;

வண்டார் - 1. வண்டு ஆர்; 2. வண் தார்;


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

செய்யானை - செம்மேனியனை; (செய் - செம்மை நிறம்);

நாக(ம்) மதி சேர்த்தானை - (திருமுடிமேல்) நாகத்தையும் சந்திரனையும் ஒன்றாகச் சேர்த்தவனை;

வந்து போர் செய்-ஆனை செற்றானைத் - வந்து போரிட்ட யானையை அழித்தவனை; (செய்தல் - பண்ணுதல்); (செறுதல் - அழித்தல்; வெல்லுதல்);

தீமையொன்றும் செய்யானை - ஒரு தீமையும் செய்யாதவனை - புண்ணியனை; (சங்கரன் - சுகத்தைச் செய்பவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நன்றுடையானைத் தீயதிலானை"); (சம்பந்தர் தேவாரம் - 1.50.6 - "புரிசடையாய் புண்ணியனே");

வண்டு ஆர் குழல் மாதை வாம(ம்) மகிழ்ந்தானை - வண்டுகள் பொருந்திய கூந்தலையுடைய உமையை இடப்பாகமாக விரும்பியவனை; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);

வண்-தார் புனைந்தானை வாழ்த்து - அழகிய (கொன்றை)மாலை அணிந்தவனை வாழ்த்துவாயாக; (வண்மை - அழகு; வளப்பம்); (தார் - மாலை);


வி. சுப்பிரமணியன்

------------ ------------


M.074 - காயாத - அப்பனை - மடக்கு

2020-05-20

M.074 - காயாத - அப்பனை - மடக்கு

-----------------

காயாத வேணியனைக் கல்லெறிந்து போற்றிடினும்

காயாத கண்ணுதலை ஓத்தூரில் - காயாத

அப்பனை எல்லாம் அருங்குலை ஈனவருள்

அப்பனை நெஞ்சே அடை.


சொற்பொருள்:

காயாத - 1. உலராத; 2. கோபித்துக்கொள்ளாத; 3. காய்த்தல் இல்லாத;

காய்தல் - உலர்தல்; கோபித்தல்; எரித்தல்;

காய்த்தல் - மரம் முதலியன காய்களை உண்டாக்குதல்;

அப்பனை - 1. அந்தப் பனைமரங்கள்; 2. தந்தையை;


காயாத வேணியனைக் - வற்றாத கங்கை என்றும் தங்கிய சடையை உடையவனை; (வேணி - சடை; நதி);

கல் எறிந்து போற்றிடினும் காயாத கண்ணுதலை - கல்லை எறிந்து வழிபாடு செய்தாலும் அப்படித் தொழும் அன்பரைக் கோபித்துக்கொள்ளாமல் ( / சுட்டெரித்திட்டாமல்) அன்போடு அருள்கின்ற நெற்றிக்கண்ணனை; (* சாக்கிய நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

ஓத்தூரில் காயாத அப்-பனை எல்லாம் அரும்-குலை ஈன அருள் அப்பனை - திருவோத்தூரில் காய்த்தலற்ற அந்த ஆண்பனைகள் எல்லாம் உடனே அரிய குலைகளை ஈனுமாறு அருள்செய்த தந்தையை; (சம்பந்தர் தேவாரம் - 1.54.11 - "குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர் அரும்பு கொன்றை அடிகளை"; இந்தத் திருவோத்தூர்ப் பதிகத்தின் வரலாற்றைச் சம்பந்தர் புராணத்தில் பெரியபுராணத்தில் காண்க);

நெஞ்சே அடை - மனமே நீ அடைவாயாக;


வி. சுப்பிரமணியன்

------------ ------------


P.504 - வழுவூர் - வானோர்க்கு இரங்கி

2020-05-11

P.504 - வழுவூர்

--------------

(எழுசீர்ச் சந்தவிருத்தம் - தனதான தான, தனதான தான, தனதான தான தனனா - சந்தம்; முதற்சீர் "தானான" என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு")

* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


1)

வானோர்க்கி ரங்கி மலைவில்லை ஏந்தி மதில்மூன்றெ ரித்த ஒருவன்

தேனார்க்கும் வாச மலரோடு பாம்பு திரையாரும் ஆறு புனைவான்

தானோக்கும் அன்பர் வினைதீரு மாறு தயைசெய்யு(ம்) நல்ல தலைவன்

மானோக்கி அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


வானோர்க்கு இரங்கி மலைவில்லை ஏந்தி மதில்-மூன்று எரித்த ஒருவன் - தேவர்களுக்கு இரங்கி, மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை எரித்த ஒப்பற்றவன்;

தேன் ஆர்க்கும் வாச-மலரோடு, பாம்பு, திரை ஆரும் ஆறு புனைவான் - வண்டுகள் ஒலிக்கும் மணம் மிக்க பூக்களோடு, நாகம், அலை மிகுந்த கங்கை இவற்றைச் சூடியவன்; (தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);

தான் நோக்கும் அன்பர் வினை தீருமாறு தயை செய்யும் நல்ல தலைவன் - தன்னைத் தியானிக்கும் பக்தர்களது வினை தீரும்படி அருள்செய்யும் நல்ல தலைவன்; (தான் - அவன்); (நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; விரும்புதல்); (அப்பர் தேவாரம் - 5.49.3 - "தானோக்குந் தன்னடியவர் நாவினில் தேனோக்குந் திருவெண்கா டடைநெஞ்சே");

மான்-நோக்கி அஞ்ச மதமா உரித்து வழுவூரில் நின்ற பரனே - மான் போன்ற பார்வையை உடைய உமை அஞ்சும்படி யானையைத் தோலுரித்து வழுவூரில் உறைகின்ற பரமன்; (சம்பந்தர் தேவாரம் - 3.58.3 - "நூனலந் தங்குமார்பி னுகர் நீறணிந் தேறதேறி மானன நோக்கிதன்னோ டுடனாவது");

(மானோக்கி - முற்பிரயோக உதாரணம் - திருவிளையாடற் புராணம் - பழிஅஞ்சின படலம் - "வலைத்தலைய மானோக்கி வயிறுருவத் தைத்தன்றால்"; / அகநானூறு - 91 - "மடமான் நோக்கிநின் மாணலம் மறந்தே");


2)

மதனாகம் வேவ நுதலால்வி ழித்த மணிகண்டன் ஆறு முகமார்

சுதனாரை நல்கி இமையோர்கள் உற்ற துயர்தீர்த்த நல்ல துணைவன்

கதநாகம் ஆறு தரிசென்னி மீது கடிநாறு கொன்றை புனைவான்

மதவார ணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


மதன் ஆகம் வேவ நுதலால் விழித்த மணிகண்டன் - மன்மதனது உடம்பு வெந்து சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் விழித்த நீலகண்டன்; (நுதல் - நெற்றி; இங்கே, நெற்றிக்கண்ணைச் சுட்டியது);

ஆறுமுகம் ஆர் சுதனாரை நல்கி இமையோர்கள் உற்ற துயர் தீர்த்த நல்ல துணைவன் - ஆறுமுகங்கள் உடைய பிள்ளையை அருளித் தேவர்களது துன்பத்தைத் தீர்த்த நல்ல துணைவன்; (சுதன் - மகன்);

கதநாகம் ஆறு தரி சென்னி மீது கடி நாறு கொன்றை புனைவான் - சீறும் பாம்பையும் கங்கையையும் தரித்த திருமுடிமேல் மணம் கமழும் கொன்றையையும் அணிந்தவன்; (கதம் - கோபம்); (கடி - வாசனை);

மத-வாரணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே - மதயானையை உரித்துத் தோலைப் போர்த்து வழுவூரில் உறைகின்ற பரமன்; (வாரணம் - யானை); (உரிசெய்தல் - தோலை உரித்தல்);


3)

நலியாத வண்ணம் அடியார்க்கு நாளு(ம்) நல(ம்)நல்கு கின்ற பெருமான்

பொலியார மாக அரவம்பு னைந்த புரிநூலன் இண்டை மதியம்

ஒலியார்த ரங்கம் உடையாறு சூடி ஒளிநீறு பூசும் ஒருவன்

வலியார்க ளிற்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


நலியாத வண்ணம் அடியார்க்கு நாளும் நலம் நல்குகின்ற பெருமான் - அடியவர்கள் துன்புறாதபடி அவர்களுக்கு எப்பொழுதும் நலங்களை அருள்கின்ற பெருமான்;

பொலி-ஆரமாக அரவம் புனைந்த புரிநூலன் - திகழ்கின்ற மாலையாகப் பாம்பை அணிந்தவன், மார்பில் முப்புரிநூலை அணிந்தவன்; (ஆரம் - மாலை);

இண்டை-மதியம், ஒலி ஆர் தரங்கம் உடை ஆறு சூடி - தலையில் அணியும் இண்டைமாலை போலத் திங்களையும் ஒலி மிக்க அலைகளையுடைய கங்கையையும் சூடியவன்; (இண்டை - முடிமாலை); (தரங்கம் - அலை);

ஒளிநீறு பூசும் ஒருவன் - ஒளியுடைய திருநீற்றைப் பூசும் ஒப்பற்றவன்;

வலி ஆர் களிற்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே - வலிமை மிக்க யானையை உரித்துத் தோலைப் போர்த்து வழுவூரில் உறைகின்ற பரமன்;


4)

பாதங்கள் ஏத்தி வழிபாடு செய்து பலதேவர் வேண்ட அவர்தம்

ஏதங்கள் தீர வடிவேலை ஏந்தும் இளையோனை நல்கும் இறைவன்

வாதங்கள் செய்த அமண்மாய வைகை நதியேடு நீந்த வருவான்

மாதங்கம் ஒன்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


பாதங்கள் ஏத்தி வழிபாடு செய்து பல தேவர் வேண்ட அவர்தம் ஏதங்கள் தீர வடிவேலை ஏந்தும் இளையோனை நல்கும் இறைவன் - இருதிருவடிகளை ஏத்தி வழிபட்டுப் பல தேவர்கள் வேண்டவும் அவர்களுக்கு இரங்கி, அவர்களுடைய துன்பமெல்லாம் தீரும்படி வடிவேலை ஏந்துகின்ற முருகனை அருளிய இறைவன்; (ஏதம் - துன்பம்);

வாதங்கள் செய்த அமண் மாய வைகை நதி ஏடு நீந்த வருவான் - பலவகை வாதுகள் செய்த சமணர்கள் அழியும்படி வைகைநதியில் சம்பந்தர் இட்ட ஏடு ஆற்றை எதிர்த்து நீந்திச் செல்லும்படி அருள்புரிந்தவன்; (சம்பந்தர் தேவாரம் 3.113.12 - "பருமதில் மதுரைமன் னவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே வருநதி யிடைமிசை வருகரனே");

மாதங்கம் ஒன்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே - யானை ஒன்றை உரித்துத் தோலைப் போர்த்து வழுவூரில் உறைகின்ற பரமன்; (மாதங்கம் - யானை);


5)

கல்லானை முன்பு பலர்முன்க ரும்பு களியோடு தின்ன வருவான்

கொல்லானை முன்னர் உழவார அன்பர் தமைநீங்கி ஓட அருள்வான்

நல்லானை ஏத்து விசயற்கு நாடு படையீந்த நாதன் உமைகோன்

வல்லானை தன்னை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


கல்-ஆனை முன்பு பலர்முன் கரும்பு களியோடு தின்ன வருவான் - முன்னொரு சமயத்தில் பலரும் காணும்படி கல்-யானை கரும்பை மகிழ்ந்து தின்னும்படி சித்தராக வந்தவன்; (திருவிளையாடற் புராணத்தில் "கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்" காண்க);

கொல்-ஆனை முன்னர் உழவார-அன்பர்தமை நீங்கி ஓட அருள்வான் - உழவாரப்பணி செய்த அன்பரான திருநாவுக்கரசரைக் கொல்வதற்காக ஏவப்பட்ட யானை அவரைவிட்டு விலகி ஓடிச்செல்லும்படி அருள்செய்தவன்; (பெரியபுராணத்தில் திருநாவுக்கரசர் வரலாற்றைக் காண்க); (அப்பர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்தும்" - இப்பதிகக் குறிப்பைக் காண்க);

நல்லானை ஏத்து விசயற்கு நாடு படை ஈந்த நாதன் உமைகோன் - நல்லவனான சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்த அர்ஜுனனுக்கு அவன் விரும்பிய பாசுபதாஸ்திரத்தை அளித்த தலைவன், உமாபதி; (படை - ஆயுதம்);

வல்-ஆனைதன்னை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே - வலிய யானையை உரித்துத் தோலைப் போர்த்து வழுவூரில் உறைகின்ற பரமன்;


6)

இனவீயெ டுத்து மணமாலை கட்டி இருதாளில் இட்டு மகிழ்வார்

இன(ம்)மாநி லத்தில் இடரார்பி றப்பில் இளையாத வண்ணம் அருள்வான்

முனமோர்பொ ருப்பை வளைவித்து மூன்று புரம்வேவ நக்க முதல்வன்

வனவார ணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


இன-வீ எடுத்து மண-மாலை கட்டி இருதாளில் இட்டு மகிழ்வார் - சிறந்த மலர்களைத் தேர்ந்தெடுத்து வாசனை மிக்க மாலைகள் கட்டி இருதிருவடியில் இட்டு மகிழும் பக்தர்கள்; (வீ - பூ);

இன(ம்) மாநிலத்தில் இடர் ஆர் பிறப்பில் இளையாத வண்ணம் அருள்வான் - இன்னும் இவ்வுலகில் துன்பம் மிக்க பிறப்புகளில் உழன்று வருந்தாதபடி அருள்பவன்; (இனம் - இன்னம்; இடைக்குறை விகாரம்); (இன்னம் - இன்னும் - மறுபடியும்; மேலும்);

முனம் ஓர் பொருப்பை வளைவித்து மூன்று புரம் வேவ நக்க முதல்வன் - முன்பு ஒரு மலையை வில்லாக வளைத்து முப்புரங்களும் வெந்து அழியும்படி சிரித்த முதல்வன்; (பொருப்பு - மலை); (சம்பந்தர் தேவாரம் - 1.13.2 - "மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன்");

வன-வாரணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே - காட்டில் திரியும் இயல்புடைய யானையை உரித்துத் தோலைப் போர்த்து வழுவூரில் உறைகின்ற பரமன்;


7)

நெய்யார்ந்த தீப(ம்) மணமார்ந்த தூப(ம்) நிறையன்பு கொண்டு மலரும்

கையேந்தி வாழ்த்தும் ஒருமாணி கண்டு கருமேதி யானை முனிவான்

பையார்ந்த பாம்பை அணிமார்பன் எந்தை பனிவெற்பு மங்கை வெருவ

மையார்ந்த மேனி மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


நெய் ஆர்ந்த தீபம், மணம் ஆர்ந்த தூபம், நிறை அன்பு கொண்டு, மலரும் கை ஏந்தி, வாழ்த்தும் ஒரு மாணி கண்டு கருமேதியானை முனிவான் - கையில் நெய்த்தீபம், வாசப்புகை, பூக்கள் இவற்றையெல்லாம் ஏந்தி மிகுந்த அன்போடு வழிபாடு செய்த ஒப்பற்ற மார்க்கண்டேயரது பக்தியைக் கண்டு மகிழ்ந்து, கரிய எருமையை வாகனமாக உடைய காலனைச் சினந்து உதைத்தவன்; (மேதி - எருமை); (முனிதல் - கோபித்தல்);

பை ஆர்ந்த பாம்பை அணி மார்பன் எந்தை - படமுடைய பாம்பை மார்பில் மாலையாக அணிந்தவன், எம் தந்தை; (பை - பாம்பின் படம்);

பனிவெற்பு மங்கை வெருவ, மை ஆர்ந்த மேனி மதமா உரித்து, வழுவூரில் நின்ற பரனே - இமவான் மகளான உமை அஞ்சும்படி, கரிய உடலையுடைய யானையை உரித்து, வழுவூரில் உறைகின்ற பரமன்; (மை - கருநிறம்); (மதமா - யானை);


8)

கரையற்ற கோபம் எழவானில் ஓங்கு கயிலாயம் வீச வருகோன்

நிரையுற்ற பத்து முடிவாய ரற்ற விரலொன்றை ஊன்று நிமலன்

உரையற்ற மோன நிலையுற்று நால்வர் உடனான ஆல நிழலன்

வரையொத்த மேனி மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


கரையற்ற கோபம் எழ, வானில் ஓங்கு கயிலாயம் வீச வரு-கோன் - எல்லையற்ற சினம் பொங்க, வானில் ஓங்கிய கயிலைமலையைப் பெயர்த்து எறிய வந்த இலங்கை மன்னனான இராவணனது; (வீசுதல் - எறிதல்);

நிரை உற்ற பத்துமுடி-வாய் அரற்ற விரல் ஒன்றை ஊன்று நிமலன் - வரிசையாக அமைந்த பத்துத்தலைகளில் இருக்கும் வாய்கள் எல்லாம் ஓலமிட்டு அழும்படி திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி நசுக்கிய தூயன்; (நிரை - வரிசை);

உரை அற்ற மோன நிலை உற்று நால்வர் உடன் ஆன ஆலநிழலன் - பேசாத மௌனநிலையில் இருந்து சனகாதியர்களோடு கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருப்பவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.38.7 - "இருந்து நால்வரொ டானிழல்லறம் உரைத்ததும்");

வரை ஒத்த மேனி மதமா உரித்து வழுவூரில் நின்ற பரனே - மலை போன்ற பெரிய உருவுடைய யானையை உரித்து, வழுவூரில் உறைகின்ற பரமன்; (வரை - மலை);


9)

அலைமேற்கி டந்த திருமாலு(ம்) நாறும் அலர்மேலி னானும் அறியா

உலவாத சோதி உருவோடு யர்ந்த ஒருவன்சி வந்த சடையன்

இலைமூன்று காட்டும் அயில்வேலு(ம்) மானும் எரியுந்த ரித்த இறைவன்

மலைபோலெ திர்ந்த மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


அலைமேல் கிடந்த திருமாலும் நாறும் அலர்மேலினானும் அறியா - பாற்கடல்மேல் பள்ளிகொண்ட திருமாலாலும் மணம் கமழும் தாமரைமேல் இருக்கும் பிரமனாலும் அறியப்படாத; (அலர் - மலர்);

உலவாத சோதி உருவோடு உயர்ந்த ஒருவன் - அழிவற்ற ஒளிப்பிழம்பு வடிவில் ஓங்கிய ஒப்பற்றவன்;

சிவந்த சடையன் - செஞ்சடையை உடையவன்;

இலை மூன்று காட்டும் அயில்வேலும் மானும் எரியும் தரித்த இறைவன் - கூர்மையான திரிசூலம், மான், தீ, இவற்றையெல்லாம் கையில் ஏந்திய இறைவன்; (அயில் - கூர்மை);

மலை போல் எதிர்ந்த மதமா உரித்து வழுவூரில் நின்ற பரனே - மலை போன்ற பெரிய உருவுடையதும் போர் செய்ததுமான யானையை உரித்து, வழுவூரில் உறைகின்ற பரமன்;


10)

பொய்க்கென்று(ம்) நாணம் இலராகி நீறு புனையார்க்கு நன்மை புரியான்

கைக்கின்ற நஞ்சை அமுதாக உண்டு கறையார்ந்த கண்டம் உடையான்

கைக்கொண்ட போது கழலிட்ட அன்பர் கலிதீர நல்கு வரதன்

மைக்கண்ணி அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


பொய்க்கு என்றும் நாணம் இலர் ஆகி நீறு புனையார்க்கு நன்மை புரியான் - என்றும் கூசாமல் பொய் பேசித் திருநீறு பூசாமல் உழல்கின்றவர்களுக்கு அருள் இல்லாதவன்; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");

கைக்கின்ற நஞ்சை அமுதாக உண்டு கறை ஆர்ந்த கண்டம் உடையான் - கசக்கின்ற ஆலகாலத்தை அமுதம் போல உண்டு அருளிய நீலகண்டன்; (கைத்தல் - கசத்தல்);

கைக்கொண்ட போது கழல் இட்ட அன்பர் கலி தீர நல்கு வரதன் - கைகளில் பூக்களை ஏந்தித் திருவடியில் தூவிய பக்தர்களது துன்பம் தீரும்படி வரம் அருள்கின்ற வரதன்; (போது - பூ); (கலி - துன்பம்; தரித்திரம்);

மைக்-கண்ணி அஞ்ச மதமா உரித்து வழுவூரில் நின்ற பரனே - மை அணிந்த கரிய கண்களை உடைய உமை அஞ்சும்படி யானையை உரித்து வழுவூரில் உறைகின்ற பரமன்;


11)

படமஞ்சு கொண்ட அரைநாண ணிந்து பலியட்டு மென்று திரிவான்

கடனஞ்சை உண்டு மணிபோலி லங்கு கறையேற்ற கண்டம் உடையான்

நடனங்கள் ஆட இடுகானை நல்ல இடமென்று நாடும் இறைவன்

மடமங்கை அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


படம் அஞ்சு கொண்ட அரைநாண் அணிந்து, "பலி அட்டும்" என்று திரிவான் - ஐந்து படங்களையுடைய பாம்பை (= ஐந்தலை நாகத்தை) அரைநாணாகக் கட்டிப், "பிச்சை இடுங்கள்" என்று உழல்பவன்; (பலி - பிச்சை); (அட்டுதல் - இடுதல்);

கடல்-நஞ்சை உண்டு மணி போல் இலங்கு கறை ஏற்ற கண்டம் உடையான் - பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டு, நீலமணி போல ஒளிவீசும் கறையைக் கண்டத்தில் உடையவன்;

நடனங்கள் ஆட இடுகானை நல்ல இடமென்று நாடும் இறைவன் - கூத்துகள் ஆடுவதற்குச் சிறந்த இடமாகச் சுடுகாட்டை விரும்பும் இறைவன்;

மடமங்கை அஞ்ச மதமா உரித்து வழுவூரில் நின்ற பரனே - அழகிய இளமையுடைய உமை அஞ்சும்படி யானையை உரித்து வழுவூரில் உறைகின்ற பரமன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


S.152 - சிவன் - சுந்தரர் - சிலேடை

2010-11-02

S.152 - சிவன் - சுந்தரர் - சிலேடை

-------------

பகிரங்க மாகவோர் பாவையிடஞ் சேர

மகிழ மரமடை வாக்குப் - புகலுங்கால்

என்றவர் பார்பரவை யின்றுணைவர் ஒற்றியமர்

குன்றவில்லி நாவலர் கோன்.


சொற்பொருள்:

பகிரங்கம் - 1. வெளிப்படை; 2. பகிர் அங்கம்;

பகிர் - பங்கு; பகிர்தல் - பங்கிடுதல்;

அங்கம் - உடல்;

பாவை - பெண்;

இடம் - 1. ஏழாம்வேற்றுமை உருபு; 2. இடப்பக்கம்;

அடைதல் - சேர்தல்; அடைத்தல் - ஒளித்துவைத்தல் (hide);

வாக்கு - வாக்குத்தத்தம் (Promise);

பார் - 1. அறி; காண்; 2. உலகம்;

பரவை - 1. பரவைநாச்சியார் (சுந்தரரின் முதல்மனைவி); / 2. பரவு ஐ;

பரவுதல் - போற்றுதல்;

- தலைவன்;

இன் - 1. சாரியை / வேற்றுமை உருபு; / 2. இனிய;

துணைவன் - 1. கணவன்; / 2. உதவி செய்பவன்;


சுந்தரர்:

பகிரங்கமாக ஓர் பாவையிடம் சேர, "மகிழமரம் அடை வாக்குப் புகலுங்கால்" என்றவர் பார் - சங்கிலியாரை ஊரறியத் திருமணம் செய்துகொள்ளவேண்டி, "நான் சத்தியம் செய்யும்பொழுது (சிவபெருமானே நீ) மகிழமரத்தில் போய் இரு" என்று சொன்னவர் காண்;

பரவையின் துணைவர் - பரவையாரின் கணவர்;

நாவலர்கோன் - திருநாவலூராளியான சுந்தரர்;


சிவன்:

பகிர்-அங்கமாக ஓர் பாவை இடம் சேர - பகிர்ந்துகொண்ட திருமேனியாகப் பார்வதி இடப்பக்கம் பொருந்த; (சம்பந்தர் தேவாரம் - 1.90.4 - அங்க(ம்) மாதுசேர் பங்கம் ஆயவன்);

(ஓர் பாவையிடம் சேர) மகிழமரம் அடை வாக்குப் புகலுங்கால் என்றவர் = ஓர் பாவையிடம், "மகிழமரம் அடை, சேர வாக்குப் புகலுங்கால்" என்றவர் - சங்கிலியாரிடம் (அவர் கனவில் சென்று), "(சுந்தரர்) உன்னைச் சேரச் சத்தியம் செய்யும்பொழுது மகிழமரத்தை அடை" என்று சொன்னவர்; ("ஓர் பாவையிடம் சேர" - இந்தச் சொற்றொடரை இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இப்படி இயைத்துப் பொருள்கொள்க);

பார் பரவு ஐ - உலகோர் எல்லாம் போற்றும் தலைவர்;

இன் துணைவர் - (அவ்வாறு போற்றும் பக்தர்களுக்கு) இனிய துணையாக இருப்பவர்;

ஒற்றி அமர் குன்றவில்லி - திருவொற்றியூரில் எழுந்தருளிய, மேருமலையை வில்லாக ஏந்திய சிவபெருமானார்; (ஒற்றி - திருவொற்றியூர்); (அமர்தல் - விரும்புதல்; உறைதல்); (குன்றவில்லி - மலையை வில்லாக உடையவன் - சிவபெருமான்);


பிற்குறிப்பு:

* சுந்தரர் தேவாரம் - 7.89.9

பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க் கீழிருவென்று

சொன்னஎனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே

என்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோஎன்ன

ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே.


வி. சுப்பிரமணியன்

------------


Monday, June 15, 2026

T.240 - அன்னியூர் - வெம்மை விரவு

2020-05-10

T. 240 - அன்னியூர் - வெம்மை விரவு

(பொன்னூர்) (மயிலாடுதுறை அருகே உள்ளது)

-----------------

(வண்ணவிருத்தம்;

தன்ன தனன .. தனதான)


வெம்மை விரவு .. வினையாலே

.. விம்மு மிடியின் .. வரவாலே

செம்மை சிறிதும் .. அறியேனும்

.. திண்ண(ம்) நலமும் .. உறுவேனோ

அம்மை எனவும் .. அருளாரும்

.. அண்ணல் எனவும் .. வருவோனே

அம்மை திகழு(ம்) .. மிடறாதென்

.. அன்னி மருவு .. பெருமானே.


பதம் பிரித்து:

வெம்மை விரவு .. வினையாலே,

.. விம்மு மிடியின் .. வரவாலே,

செம்மை சிறிதும் .. அறியேனும்

.. திண்ண(ம்) நலமும் .. உறுவேனோ?

அம்மை எனவும், .. அருள் ஆரும்

.. அண்ணல் எனவும் .. வருவோனே;

அம்-மை திகழு(ம்) .. மிடறா; தென்

.. அன்னி மருவு .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

வெம்மை விரவு வினையாலே - தகிக்கின்ற வினைகளால்; (வெம்மை - சூடு); (விரவுதல் - பொருந்துதல்);

விம்மு மிடியின் வரவாலே - மிகுந்த துன்பங்கள் வந்தடைதலால்; (விம்முதல் - மிகுதல்); (மிடி - துன்பம்; வறுமை);

செம்மை சிறிதும் அறியேனும் - செம்மை சிறிதும் இல்லாத அடியேனும்; (செம்மை - செவ்வை);

திண்ண(ம்) நலமும் உறுவேனோ - நிச்சயம் நற்கதி அடைவேனோ? அருள்வாயாக; (திண்ணம் - நிச்சயம்);

அம்மை எனவும் அருள் ஆரும் அண்ணல் எனவும் வருவோனே - தாயாகவும் அருளுடைய தந்தையாகவும் வருபவனே; (அண்ணல் - தலைவன்; தந்தை);

அம்-மை திகழு(ம்) மிடறா - (ஆலகாலத்தை உண்டு) அந்த அழகிய இருள் (கருநிறம்) திகழும் கண்டம் உடையவனே; (அம் - அழகு); (- பண்டறிசுட்டு); (மை - கருநிறம்; இருள்); (மிடறு - கண்டம்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "மழையார் மிடறா");

தென் அன்னி மருவு பெருமானே - அழகிய திரு-அன்னியூரில் உறைகின்ற பெருமானே; (தென் - அழகிய); (அன்னி - அன்னியூர்; வான்மியூர் "வான்மி" என்று சில சமயம் வருவது போல); (சம்பந்தர் தேவாரம் - 3.55.4 - "திருவான்மிதன்னில் அன்பா"); (சம்பந்தர் தேவாரம் - 1.135.10 - "பராய்த்துறை மருவினான்றனை வாழ்த்துமே"); (சம்பந்தர் தேவாரம் - 1.64.1 - "செம்மையோங்கும் தென்-திருப்பூவணமே")


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.239 - பொது - கட்டுண்டு எய்க்கும்

2020-05-09

T. 239 - பொது - கட்டுண்டு எய்க்கும்

-----------------

(வண்ணவிருத்தம்;

தத்தந் தத்தந் .. தனதான)


கட்டுண் டெய்க்குந் .. தமியேனும்

.. கற்றுன் பற்றென் .. றடைவேனோ

துட்டம் பொக்கம் .. புரிதீயர்

.. துக்கந் துய்க்கும் .. பலனீவாய்

கட்டுங் கச்சும் .. பணியாகும்

.. கட்டங் கத்தொண் .. படையானே

பட்டங் கட்டுந் .. தனிஞானா

.. பைக்கம் பெற்றுண் .. பெருமானே.


பதம் பிரித்து:

கட்டுண்டு எய்க்கும் தமியேனும்

.. கற்று உன் பற்று என்று அடைவேனோ?

துட்டம் பொக்கம் புரி-தீயர்

.. துக்கம் துய்க்கும் பலன் ஈவாய்;

கட்டும் கச்சும் பணி ஆகும்

.. கட்டங்கத்து ஒண்- படையானே;

பட்டம் கட்டும் தனி-ஞானா;

.. பைக்கம் பெற்று உண் பெருமானே.


கட்டுண்டு எய்க்கும் தமியேனும் கற்று உன் பற்று என்று அடைவேனோ - பிணித்துள்ள வினைகளால் வருத்தமுறும் நானும் உன்னை ஓதக் கற்று உன்மேல் அன்பை என்று அடைவேன்? அருள்வாயாக; (எய்த்தல் - வருந்துதல்); (தமியேன் - தனித்திருக்கும் நான்);

துட்டம் பொக்கம் புரி-தீயர் துக்கம் துய்க்கும் பலன் ஈவாய் - தீமைகளையும் வஞ்சனையையும் விரும்பிச் செய்கின்ற தீயவர்கள் துக்கம் அனுபவிக்கும்படி அவர்களுக்கு வினைப்பலனைத் தருபவனே; (புரிதல் - விரும்புதல்; செய்தல்); (துய்த்தல் - அனுபவித்தல்);

கட்டும் கச்சும் பணி ஆகும், கட்டங்கத்து ஒண்-படையானே - (மார்பில் அணியும் மாலையும்) அரையில் கட்டுகின்ற கச்சும் பாம்பே ஆக, ஒளியுடைய கட்வாங்கம் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்தியவனே; (கச்சும் - உம் - எச்சவும்மை; அசை என்றும் கொள்ளலாம்); (பணி - பாம்பு); (கட்டங்கம் - கட்டுவாங்கம் - खट्वाङ्गः khaṭvāṅgaḥ - a club or staff with a skull at the top considered as the weapon of Śiva); (அப்பர் தேவாரம் - 6.9.3 - "கட்டங்கந் தாமொன்று கையில் ஏந்தி"); (சுந்தரர் தேவாரம் - 7.56.7 - "கட்டுவாங்கந் தரித்த பிரானை");

பட்டம் கட்டும் தனி-ஞானா - நெற்றிப்பட்டம் கட்டும் ஒப்பற்ற ஞானனே; (பட்டம் - சிறப்புக்கு அறிகுறியாக நெற்றியில் அணியும் பொற்றகடு); (தனி - ஒப்பற்ற); (சம்பந்தர் தேவாரம் - 3.1.2 - "நுதற் பட்டமே புனைவாய்");

பைக்கம் பெற்றுண் பெருமானே - பிச்சையேற்று உண்ணும் பெருமானே; (பைக்கம் - பயிக்கம் - பிச்சை);


வி. சுப்பிரமணியன்

----------- --------------