Friday, August 7, 2026

P.510 - பறியலூர் - கண்ணில் நீர் வார்தரக்

2020-06-20

P.510 - பறியலூர் (பரசலூர்)

--------------

(சந்தக் கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா)

(சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன்")

(இவை தமிழ்ச்சந்த இலக்கணப்படி அமைந்த பாடல்கள். இதனை ஒத்த அமைப்பை வடமொழியில் ஸ்ரக்விணீ (स्रग्विणी - sragviNI) என்று அழைப்பர். அச்யுதாஷ்டகம் இவ்வமைப்பே)


முற்குறிப்பு: படிப்போர் வசதி கருதிச் சில இடங்களில் புணர்ச்சி பிரித்த வடிவம் காட்டப்பட்டுள்ளது. சந்தியோடு நோக்கில் சந்தம் கெடாமையை உணர்க.

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

கண்ணில்நீர் வார்தரக் கைதொழும் பத்தரை

விண்ணிலேற் றும்பரன் வெண்மதிக் கண்ணியான்

வண்ணமார் பூக்களில் மாந்திவண் டூதிடும்

பண்ணறாச் சோலைசூழ் பறியல்வீ ரட்டனே.


கண்ணில் நீர் வார்தரக் கைதொழும் பத்தரை விண்ணில் ஏற்றும் பரன் - கண்களில் நீர் கசியக் கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்கு வானுலக வாழ்வைத் தரும் பரமன்; (கண்ணினீர் - கண்ணின் நீர் / கண்ணில் நீர்); (வார்தல் - ஒழுகுதல்); (தருதல் - ஒரு துணைவினை);

வெண்மதிக் கண்ணியான் - வெண்திங்களைக் கண்ணியாக முடியில் அணிந்தவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

வண்ணம் ஆர் பூக்களில் மாந்தி வண்டு ஊதிடும் - அழகிய பூக்களில் மது உண்டு வண்டுகள் ஒலிக்கின்ற; (வண்ணம் - அழகு); (ஊதுதல் - வண்டு முதலியன ஒலித்தல்);

பண் அறாச் சோலை சூழ் பறியல் வீரட்டனே - இனிய இசை எப்பொழுதும் கேட்கின்ற சோலை சூழ்ந்த திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


2)

காட்டிலா டுங்கழல் கைதொழின் வல்வினை

வீட்டிவான் நல்குவான் வெண்குழைக் காதினன்

நாட்டமோர் மூன்றினான் நாடிவண் டார்த்திடும்

பாட்டறாச் சோலைசூழ் பறியல்வீ ரட்டனே.


காட்டில் ஆடும் கழல் கைதொழின் வல்வினை வீட்டி வான் நல்குவான் - சுடுகாட்டில் ஆடுகின்ற திருவடியைக் கைதொழும் பக்தர்களது வலிய வினைகளை அழித்து அவர்களுக்கு வானுலக வாழ்வைக் கொடுப்பான்; (கைதொழின் - கைதொழுதால்); (வீட்டுதல் - அழித்தல்);

வெண்குழைக் காதினன் - காதில் வெண்குழையை அணிந்தவன்;

நாட்டம் ஓர் மூன்றினான் - மூன்று கண்களை உடையவன்; (நாட்டம் - கண்);

நாடி வண்டு ஆர்த்திடும் பாட்டு அறாச் சோலை சூழ் பறியல் வீரட்டனே - தேனை விரும்பி வண்டுகள் ஒலிக்கும் இன்னிசை எப்பொழுதும் கேட்கின்ற சோலை சூழ்ந்த திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


3)

உம்பரார் வேண்டவே உன்னிடா தைம்மலர்

அம்பினால் தாக்குவேள் அன்றுநீ றாக்கினான்

செம்பிரான் வாளரா திங்கள்சேர் சென்னியன்

பைம்பொழில் சூழ்ந்திடும் பறியல்வீ ரட்டனே.


உம்பரார் வேண்டவே உன்னிடாது ஐம்மலர் அம்பினால் தாக்கு வேள் அன்று நீறு ஆக்கினான் - தேவர்கள் வேண்டிக்கேட்கவும் சிறிதும் யோசியாமல் ஐந்து மலர்ப்பாணங்களால் தாக்கிய மன்மதனை அப்பொழுது சாம்பல் ஆக்கியவன்; (உன்னுதல் - எண்ணுதல்); (வேள் - காமன்);

செம்பிரான் - செம்மேனியன்;

வாள்-அரா திங்கள் சேர் சென்னியன் - கொடிய பாம்பையும் சந்திரனையும் திருமுடிமேல் ஒன்றாகச் சேர்த்தவன்; (வாள் - கொடிய);

பைம்பொழில் சூழ்ந்திடும் பறியல் வீரட்டனே - அழகிய சோலை சூழ்ந்த திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


4)

சங்கரா சம்புவே தாணுவே தாதையே

அங்கணா என்பவர்க் காரருள் செய்பவன்

பொங்கராத் தாரினன் பொற்சடைப் புண்ணியன்

பைங்கணே றேறினான் பறியல்வீ ரட்டனே.


"சங்கரா, சம்புவே, தாணுவே, தாதையே, அங்கணா" என்பவர்க்கு ஆரருள் செய்பவன் - "சங்கரனே, சம்புவே, ஸ்தாணுவே, தந்தையே, அருட்கண்ணனே" என்று பல திருநாமங்களைச் சொல்லி வழிபடும் பக்தர்களுக்கு மிகவும் அருள்செய்பவன்; (சங்கரன் - நன்மை செய்பவன்); (சம்பு - சுகத்தைத் தருபவன்); (தாணு - அசைவற்றவன்); (தாதை - தந்தை); (அங்கணன் - அருள்நோக்கம் உடையவன்);

பொங்கு-அராத் தாரினன் - சீறும் பாம்பை மாலையாக அணிந்தவன்;

பொற்சடைப் புண்ணியன் - பொன் போன்ற சடையை உடைய புண்ணியமூர்த்தி;

பைங்கண் ஏறு ஏறினான் - அழகிய கண்களையுடைய இடபத்தை ஊர்தியாக உடையவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


5)

வேலனைப் பெற்றவன் வேத(ம்)நான் கோதிய

ஆலனக் காரமாம் ஐயன்முக் கண்ணினன்

காலனைக் காலினால் காய்ந்தவன் கைதொழும்

பாலனைக் காத்தவன் பறியல்வீ ரட்டனே.


வேலனைப் பெற்றவன் - முருகனுக்குத் தந்தை;

வேதம் நான்கு ஓதிய ஆலன் - நான்கு வேதங்களையும் ஓதிய தட்சிணாமூர்த்தி; (ஆலன் - கல்லாலமரத்தின்கீழ் இருப்பவன்);

அக்கு ஆரம் ஆம் ஐயன் - எலும்பை மாலையாக அணிந்த தலைவன்; (அக்கு - எலும்பு); (ஆரம் - ஹாரம் - மாலை);

முக்கண்ணினன் - மூன்று கண்களை உடையவன்;

காலனைக் காலினால் காய்ந்தவன் - காலனைக் காலால் உதைத்தவன்;

கைதொழும் பாலனைக் காத்தவன் - வழிபாடு செய்த மார்க்கண்டேயரைக் காத்துஅருளியவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


6)

பேரிடர் தீர்ந்திடப் பேணினார்க் காப்பவன்

போரிடும் வெங்கரித் தோலினைப் போர்த்தவன்

ஊரிடும் பிச்சையே ஊணெனக் கொண்டவன்

பாரிடஞ் சூழ்பரன் பறியல்வீ ரட்டனே.


பேரிடர் தீர்ந்திடப் பேணினார்க் காப்பவன் - பெருந்துன்பம் தீரவேண்டிப் போற்றும் பக்தர்களைக் காப்பவன்; ("பேணிணார்க் காப்பவன்" - இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி வல்லொற்று மிகும்);

போரிடும் வெங்கரித் தோலினைப் போர்த்தவன் - போர் செய்த கொடிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவன்;

ஊர் இடும் பிச்சையே ஊண் எனக் கொண்டவன் - ஊரிலுள்ளோர் இடும் பிச்சையையே உணவாக உடையவன்; (ஊண் - உணவு);

பாரிடம் சூழ் பரன் - பூதகணங்கள் சூழ்ந்துள்ள பரமன்; (பாரிடம் - பூதம்);

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


7)

சேவதே றுஞ்சிவன் தெண்புனல் கொக்கதன்

தூவலார் சென்னியன் தோற்றமும் கேடிலான்

காவலார் முப்புரம் வேவவே நக்கவன்

பாவையோர் பங்கினன் பறியல்வீ ரட்டனே.


சே-அது ஏறும் சிவன் - இடபத்தை வாகனமாக உடைய சிவன்; (சே - எருது);

தெண்புனல் கொக்கு-தன் தூவல் ஆர் சென்னியன் - தெளிந்த நீர்க்கங்கையையும் கொக்கின் இறகையும் முடிமேல் அணிந்தவன்; (தூவல் - இறகு); (கொக்கின் இறகு - 1. கொக்கிறகு என்ற பூ; 2. கொக்குவடிவாய குரண்டாசுரனை அழித்த அடையாளம்);

தோற்றமும் கேடு இலான் - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்; (கேடு - கேடும்; உம் தொக்கது);

காவல் ஆர் முப்புரம் வேவவே நக்கவன் - காவல் மிக்க முப்புரங்கள் வெந்து அழியும்படி சிரித்தவன்; (நகுதல் - சிரித்தல்);

பாவை ஓர் பங்கினன் - உமையை ஒரு பங்கில் உடையவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


8)

தக்கதொன் றோர்கிலான் தான்வரைக் கீழ்மிகத்

துக்கமுற் றார்த்தழத் தூவிரல் வைத்தவன்

திக்கெலாம் ஆடையாம் சீர்த்தியன் மேனியில்

பக்கமோர் பாவையான் பறியல்வீ ரட்டனே.


தக்கது ஒன்று ஓர்கிலான் தான் வரைக்கீழ் மிகத் துக்கமுற்று ஆர்த்து அழத் தூ-விரல் வைத்தவன் - செய்யத்-தக்கது ஒன்றையும் எண்ணாதவனான இராவணன் அவன் கயிலைமலைக்கீழே மிகவும் துக்கமடைந்து கத்தி அழும்படி தூய விரல் ஒன்றை ஊன்றியவன்; (ஓர்தல் - சிந்தித்தல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);

திக்கு-எலாம் ஆடை ஆம் சீர்த்தியன் - திக்குகளே ஆடையாகும் பெருமை உடையவன்; திகம்பரன்; (சீர்த்தி - புகழ்);

மேனியில் பக்கம் ஓர் பாவையான் - திருமேனியில் ஒரு பக்கம் உமையைப் பங்காக உடையவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


9)

கந்தமார் போதனும் கண்ணனும் காண்கிலா

அந்தமில் சோதியான் ஐந்தொழில் செய்பவன்

செந்தமிழ்ப் பாடலைச் செப்பினார்க் கன்பினன்

பந்தமில் பாங்கினான் பறியல்வீ ரட்டனே.


கந்தம் ஆர் போதனும் கண்ணனும் காண்கிலா அந்தம் இல் சோதியான் - மணம் மிக்க தாமரைமலரில் இருக்கும் பிரமன், திருமால் இவர்களால் காண ஒண்ணாத எல்லையற்ற ஒளிவடிவினன்; (போது - பூ);

ஐந்தொழில் செய்பவன் - படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் (ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்ரஹம்) என்ற பஞ்சகிருத்தியம் செய்பவன்;

செந்தமிழ்ப் பாடலைச் செப்பினார்க்கு அன்பினன் - தேவாரம் முதலிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடும் பக்தர்களுக்கு அன்புடையவன்;

பந்தம் இல் பாங்கினான் - எவ்விதப் பந்தமும் இல்லாதவன்; (பாங்கு - இயல்பு);

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


10)

ஆய்தலைச் செய்கிலா அந்தகர் நீறிடாப்

பேய்மனப் பிட்டர்சொல் பேணிடேல் காமனைக்

காய்பவன் தாள்தொழும் பத்தரைக் காப்பவன்

பாய்புலித் தோலினான் பறியல்வீ ரட்டனே.


ஆய்தலைச் செய்கிலா அந்தகர் - ஆராயாத குருடர்கள்; (சம்பந்தர் தேவாரம் - 1.11.5 - "ஆயாதன சமயம்பல அறியாதவன்");

நீறு இடாப் பேய்மனப் பிட்டர் சொல் பேணிடேல் - திருநீற்றைப் பூசாதவர்களும் பேய் போன்ற மனம் உடையவர்களுமான பிரஷ்டர்கள் சொல்லை மதிக்கவேண்டா; (பிட்டர் - பிரஷ்டர் - புறம்பானவர்கள்);

காமனைக் காய் பவன் - மன்மதனை எரித்தவனும் பவன் என்ற திருநாமம் உடையவனுமான சிவபெருமான்; (பவன் - என்றும் உள்ளவன்);

தாள்தொழும் பத்தரைக் காப்பவன் - தன் திருவடியை வணங்கும் பக்தர்களைக் காப்பவன்;

பாய்புலித் தோலினான் - பாயும் புலியின் தோலை அரையில் கட்டியவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


11)

பூத்திரள் கொண்டுதாள் போற்றிடாத் தக்கனார்

தீத்தொழில் செற்றவன் செவ்வணன் மூவரின்

மூத்தவன் முக்கணன் முன்னமோர் அத்திரம்

பார்த்தனுக் கீந்தவன் பறியல்வீ ரட்டனே.


பூத்திரள் கொண்டு தாள் போற்றிடாத் தக்கனார் தீத்தொழில் செற்றவன் - பூக்களால் திருவடியைப் போற்றாத தக்கன் செய்த அவவேள்வியை அழித்தவன்; (தீத்தொழில் - 1. தீய செயல்; 2. அக்கினி காரியம் - ஹோமம்; வேள்வி); (செறுதல் - அழித்தல்); (அப்பர் தேவாரம் - 4.95.4 - "தீத்தொழிலான் தலை தீயிலிட்டுச் செய்த வேள்வி செற்றீர்");

செவ்வணன் - செம்மேனியன்;

மூவரின் மூத்தவன் - மும்மூர்த்திகளினும் முற்பட்டவன்; (இன் - ஐந்தாம்வேற்றுமை உருபு);

முக்கணன் - நெற்றிக்கண்ணன்;

முன்னம் ஓர் அத்திரம் பார்த்தனுக்கு ஈந்தவன் - முன்பு அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருளியவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Saturday, August 1, 2026

P.509 - பாவநாசம் - அரணம் மூன்றையும்

2020-06-20

P.509 - பாவநாசம் (பாபநாசம்)

(தாமிரபரணிக்-கரையில் உள்ள பாபநாசம்)

--------------

(சந்தக் கலிவிருத்தம் - தான தானன தான தானன)

(சம்பந்தர் தேவாரம் - 2.25.1 - "உகலி யாழ்கட லோங்கு பாருளீர்")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

அரண(ம்) மூன்றையும் அன்றெ ரித்தவன்

கிரண வெண்மதிக் கீற்றன் மேயது

மரணம் தீரமு தன்ன தாமிர

பரணி தாள்தொழு பாவ நாசமே.


அரணம் மூன்றையும் அன்று எரித்தவன் - முப்புரங்களையும் முன்பு எரித்தவன்;

கிரண-வெண்மதிக் கீற்றன் மேயது - கதிர்வீசும் வெண்திங்களை அணிந்தவன் உறையும் தலம்;

மரணம் தீர் அமுது அன்ன தாமிரபரணி தாள் தொழு பாவநாசமே - இறப்பில்லா வாழ்வை அளிக்கும் அமுதம் போன்ற (நீருடைய) தாமிரபரணி-ஆறானது திருவடியை வழிபடுகின்ற பாபநாசம்;


2)

ஆய்ம லர்க்கணை ஐந்து தொட்டவேள்

காய்நு தற்கணன் கங்கை வேணியன்

மாய்வி லாதவன் மன்னும் ஊரது

பாய்பு னற்கரைப் பாவ நாசமே.


ஆய் மலர்க்கணை ஐந்து தொட்ட வேள் காய் நுதற்கணன் - தேர்ந்தெடுத்த மலர்அம்புகள் ஐந்து தொடுக்கும் மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண்ணன்; (ஆய்தல் - தெரிந்தெடுத்தல்);

கங்கை-வேணியன் - சடையில் கங்கையை உடையவன்; (வேணி - சடை);

மாய்வு இலாதவன் மன்னும் ஊர் அது - இறப்பு இல்லாதவனான சிவபெருமான் உறையும் இடம் ஆவது; (மாய்வு - சாவு); (ஊரது - ஊர் - தலம்; அது - பகுதிப்பொருள்விகுதி);

பாய்-புனற்கரைப் பாவநாசமே - பாயும் தாமிரபரணியின் கரையில் உள்ள பாபநாசம்;


3)

வம்பு லா(ம்)மலர் வன்னி சூடினான்

உம்பர் வாழ்ந்திட ஓத நஞ்சுணி

கொம்ப னாளொரு கூறன் ஊரது

பைம்பு னற்கரைப் பாவ நாசமே.


வம்பு உலாம் மலர் வன்னி சூடினான் - வாசனை கமழும் பூக்களையும் வன்னியையும் சூடியவன்; (வம்பு - வாசனை); (உலாம் - உலாவும் - திகழும்);

உம்பர் வாழ்ந்திட ஓத-நஞ்சு உணி - தேவர்கள் உய்யும்படி கடல்விஷத்தை உண்டவன்; (ஓதம் - கடல்); (உணி - உண்ணி - உண்டவன்; இடைக்குறை விகாரம்);

கொம்பு அனாள் ஒரு கூறன் ஊர் அது - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக உடைய சிவபெருமான் உறையும் ஊர் ஆவது;

பைம்புனற்கரைப் பாவநாசமே - அழகிய குளிர்ந்த தாமிரபரணியின் கரையில் உள்ள பாபநாசம்;


4)

காடு வாழ்கணம் காண நள்ளிருள்

ஆடு கொள்கையன் அண்டர் நாயகன்

தோடு சேர்செவித் தூயன் ஊரது

பாடு நீரயல் பாவ நாசமே.


காடு வாழ் கணம் காண நள்ளிருள் ஆடு கொள்கையன் - சுடுகாட்டில் வாழும் பூதகணங்கள் காண நள்ளிருளில் கூத்தாடுபவன்;

அண்டர்-நாயகன் - தேவர்களுக்கெல்லாம் தலைவன்;

தோடு சேர் செவித் தூயன் ஊர் அது - ஒரு காதில் தோடு அணிந்த தூயனான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது;

பாடு நீர் அயல் பாவநாசமே - ஒலிக்கின்ற தாமிரபரணி-ஆற்றின் அருகே உள்ள பாபநாசம்; (சுந்தரர் தேவாரம் - 7.48.6 - "அந்தண் காவிரிப் பாடு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடிச் சேடனே");


5)

மாயு(ம்) நாளென வந்த காலனே

சாயு மாறொரு தாளை வீசினான்

தாயும் ஆயவன் தங்கும் ஊரது

பாயு(ம்) நீரயல் பாவ நாசமே.


மாயும் நாள் என வந்த காலனே சாயுமாறு ஒரு தாளை வீசினான் - மார்க்கண்டேயர் இறக்கும் தினம் என்று அவரைக் கொல்ல நெருங்கிய காலனே இறக்கும்படி ஒரு திருவடியை வீசி அவனை உதைத்தவன்;

தாயும் ஆயவன் தங்கும் ஊர் அது - அம்மையும் (அப்பனும்) ஆன சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (தாயும் - உம் - எச்சவும்மை);

பாயும் நீர் அயல் பாவநாசமே - பாயும் தாமிரபரணி-ஆற்றின் அருகே உள்ள பாபநாசம்;


6)

கறையி லங்கிய கண்டன் நீறணி

அறவன் அங்கணன் ஆல நீழலில்

மறைவி ரித்தவன் மன்னும் ஊரது

பறவை ஆர்பொழிற் பாவ நாசமே.


கறை இலங்கிய கண்டன் - நீலகண்டன்;

நீறு அணி அறவன் - திருநீற்றைப் பூசிய அறவடிவினன்;

அங்கணன் - அருட்கண் உடையவன்;

ஆலநீழலில் மறை விரித்தவன் மன்னும் ஊர் அது - கல்லாலமரத்தின்கீழ்ச் சனகாதியருக்கு வேதப்பொருளை உபதேசித்தவனான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது;

பறவை ஆர் பொழில் பாவநாசமே - பறவைகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த பாபநாசம்; (ஆர்த்தல் - ஒலித்தல்);


7)

மத்த(ம்) மாசுணம் வைத்த செஞ்சடைச்

சுத்த மாநதி சூடும் வித்தகன்

சத்தி பங்கமர் தந்தை ஊரது

பத்தர் சென்றடை பாவ நாசமே.


மத்தம் மாசுணம் வைத்த செஞ்சடைச் சுத்த மாநதி சூடும் வித்தகன் - ஊமத்தமலரையும் பாம்பையும் அணிந்த சிவந்த சடையில் தூய கங்கையையும் சூடிய ஆற்றல் உடையவன்; (மத்தம் - ஊமத்தமலர்); (மாசுணம் - பாம்பு); (வித்தகம் - சாமர்த்தியம்; ஆற்றல்; பெருமை; ஞானம்);

சத்தி பங்கு அமர் தந்தை ஊர் அது - சக்தியை (உமையை) ஒரு பங்காக விரும்பிய நம் தந்தையான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (அமர்தல் - விரும்புதல்);

பத்தர் சென்றடை பாவநாசமே - பக்தர்கள் சென்று சேர்கின்ற பாபநாசம்;


8)

மடமை யால்மலை பேர்த்த வன்றனை

அடர ஊன்றிய அண்ணல் நீரழற்

சடையில் வைத்தவன் தங்கும் ஊரது

படர்பொ ழிற்பதி பாவ நாசமே.


மடமையால் மலை பேர்த்தவன்தனை அடர ஊன்றிய அண்ணல் - பேதைமையால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை நசுக்கப் பாதவிரலை ஊன்றிய பெருமான்; (சம்பந்தர் தேவாரம் - 2.71.8 - "இராவணனை மால்வரைக்கீழ் அடரவூன்றி");

நீர் அழற்சடையில் வைத்தவன் தங்கும் ஊர் அது - கங்கையைத் தீப் போன்ற செஞ்சடையில் வைத்தவனான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (அப்பர் தேவாரம் - 4.57.6 - "நீரழற் சடையுளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்");

படர்-பொழிற்-பதி பாவநாசமே - படர்ந்த சோலைகள் சூழ்ந்த தலமான பாபநாசம்;


9)

நெடிய மாலயன் நேட நின்றவன்

பொடிய ணிந்தடி போற்றி னார்வினை

மடிய நல்கிடும் வள்ளல் ஊரது

படியெ லாந்தொழு பாவ நாசமே.


நெடிய மால் அயன் நேட நின்றவன் - நீண்ட திருமாலும் பிரமனும் தேடும்படி ஓங்கி நின்றவன்; (நேடுதல் - தேடுதல்);

பொடி அணிந்து அடி போற்றினார் வினை மடிய நல்கிடும் வள்ளல் ஊர் அது - திருநீற்றைப் பூசித் திருவடியை வணங்கிய அன்பர்களது வினையெல்லாம் அழியும்படி வரம் அருளும் வள்ளலான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (மடிதல் - அழிதல்);

படியெலாம் தொழு பாவநாசமே - உலகத்தோரெல்லாம் போற்றுகின்ற பாபநாசம்; (படி - பூமி; உலகம்); (சம்பந்தர் தேவாரம் - 3.38.3 - "படியெலாந் தொழுதேத்து கண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்")


10)

மழுங்கு புத்தியர் மாய(ம்) நீங்குமின்

தொழுங்க ரந்திகழ் தொண்டர் வேண்டிய

வழங்கு வார்சடை வள்ளல் ஊரது

பழங்க ளார்பொழிற் பாவ நாசமே.


மழுங்கு புத்தியர் மாயம் நீங்குமின் - மழுங்கிய அறிவை உடையவர்கள் சொல்லும் வஞ்சத்தை நீங்குங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி);

தொழும் கரம் திகழ் தொண்டர் வேண்டிய வழங்கு வார்சடை வள்ளல் ஊர் அது - தொழும் கரங்களை உடைய பக்தர்கள் வேண்டிய வரங்களையெல்லாம் வழங்கும் வள்ளலும் நீண்ட சடையை உடையவனுமான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது;

பழங்கள் ஆர் பொழில் பாவநாசமே - கனிகள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த பாபநாசம்; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);


11)

உரக மாலையன் உண்ப லிக்கெனப்

பிரம னார்தலை ஏந்து பெற்றியன்

கரவி லாதளி கையன் ஊரது

பரவிப் பார்தொழு பாவ நாசமே.


உரக-மாலையன் - பாம்பை மாலையாக அணிந்தவன்; (உரகம் - பாம்பு);

உண்பலிக்கு எனப் பிரமனார் தலை ஏந்து பெற்றியன் - பிச்சையேற்பதற்காகப் பிரமனது மண்டையோட்டை ஏந்துகின்ற பெருமை உடையவன்; (உண்பலி - பிச்சை); (பெற்றி - பெருமை);

கரவு இலாது அளி கையன் ஊர் அது - அடியவர்களுக்கு வஞ்சமின்றி வாரி வழங்கும் அருட்கரம் உடையவனான சிவபெருமான் உறையும் ஊர் ஆவது; (கரவு - மறைத்தல்);

பரவிப் பார் தொழு பாவநாசமே - உலகத்தாரெல்லாம் போற்றிப் பணிகின்ற பாபநாசம்; ("பார் பரவித் தொழு பாவநாசமே" என்று இயைத்துப் பொருள்கொள்க); (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்); (பார் - பூமி; உலகம்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.508 - மயிலாடுதுறை - முதிரா மதிசேர்

2020-06-19

P.508 - மயிலாடுதுறை

--------------

(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனனா)

(இச்சந்தத்தை வடமொழியில் "தோடகம்" என்பர்)

(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - "சடையா யெனுமால்")


1)

முதிரா மதிசேர் முடியிற் புனலார்

நதியாய் நரைவெள் விடையூர் தியினாய்

மதில்சூழ்ந் தழகார் மயிலா டுதுறைப்

பதியே பழவல் வினைதீர்த் தருளே.


முதிரா மதி சேர் முடியில் புனல் ஆர் நதியாய் - இளந்திங்களை அணிந்த திருமுடியில் நீர் மிகுந்த கங்கையையும் தரித்தவனே;

நரை-வெள்-விடை ஊர்தியினாய் - மிகவெண்மையான இடபத்தை ஊர்தியாக உடையவனே; (நரை - வெண்மை; நரைவெள் - ஒருபொருட்பன்மொழி); (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நரைவெள்ளேறு ஒன்றுடையானை");

மதில் சூழ்ந்து அழகு ஆர் மயிலாடுதுறைப் பதியே - மதிலால் சூழப்பெற்ற அழகிய மயிலாடுதுறையில் உறைகின்ற தலைவனே;

பழ வல்வினை தீர்த்து அருளே - என் பழைய வலிய வினையைத் தீர்த்து அருள்வாயாக;


2)

அணியா அரவம் புனைவாய் அடியைப்

பணிவா னவருக் கருளும் பரமா

மணிகோ புரமார் மயிலா டுதுறைத்

துணிமா மதியாய் துயர்தீர்த் தருளே.


அணியா அரவம் புனைவாய் - ஆபரணமாகப் பாம்பை அணிந்தவனே; யாரும் அணியாத பாம்பை அணிந்தவனே; (அணியா - 1. அணியாக; 2. அணியாத);

அடியைப் பணி வானவருக்கு அருளும் பரமா - திருவடியை வணங்கிய தேவர்களுக்கு அருளிய பரமனே;

மணி-கோபுரம் ஆர் மயிலாடுதுறைத் - அழகிய கோபுரம் பொருந்திய மயிலாடுதுறையில் உறைகின்ற; (மணி - அழகு); (அப்பர் தேவாரம் - 6.16.5 - "மணிபொழில்சூழ் ஆரூர் உறைகின்றாரும்");

துணி-மா மதியாய் - அழகிய பிறையைச் சூடியவனே; (துணி - துண்டம்);

துயர் தீர்த்து அருளே - என் துயரைத் தீர்த்து அருள்வாயாக;


3)

வளைமே ருவிலால் மதிலெய் தவனே

தளரா முலையாள் தழுவும் தலைவா

வளமார் பொழில்சூழ் மயிலா டுதுறை

இளமால் விடையாய் இடர்தீர்த் தருளே.


வளை-மேரு-விலால் மதில் எய்தவனே - வளைத்த மேருமலை என்ற வில்லால் முப்புரங்களை எய்தவனே; (விலால் - வில்லால்);

தளரா-முலையாள் தழுவும் தலைவா - தளராத முலைகளையுடைய உமாதேவி தழுவும் கணவனே;

வளம் ஆர் பொழில் சூழ் மயிலாடுதுறை - வளம் மிக்க சோலை சூழ்ந்த மயிலாடுதுறையில் உறைகின்ற;

இள-மால்-விடையாய் - இளைய பெரிய இடபத்தை வாகனமாக உடையவனே; (மால் - பெரிய);

இடர் தீர்த்து அருளே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


4)

அழலார் சடையாய் அதளா டையினாய்

குழையார் செவியாய் கொடிமேல் விடையாய்

மழைசேர் பொழில்சூழ் மயிலா டுதுறைக்

குழகா தொழுதேன் குறைதீர்த் தருளே.


அழல் ஆர் சடையாய் - தீப் போலும் செஞ்சடையை உடையவனே; (ஆர்தல் - ஒத்தல்);

அதள்-ஆடையினாய் - தோலை ஆடையாக உடையவனே; (அதள் - தோல்);

குழை ஆர் செவியாய் - காதில் குழையை அணிந்தவனே;

கொடிமேல் விடையாய் - இடபக்கொடியை உடையவனே;

மழை சேர் பொழில் சூழ் மயிலாடுதுறைக் குழகா - மேகம் பொருந்தும் சோலை சூழ்ந்த மயிலாடுதுறையில் உறைகின்ற குழகனே; (மழை - மேகம்); (குழகன் - இளையோன்; அழகன்);

தொழுதேன் குறை தீர்த்து அருளே - உன்னை வணங்கும் என் குறைகளைத் தீர்த்து அருள்வாயாக;


5)

பெண்டங் கியமே னியுடைப் பெருமான்

அண்டம் பலவாக் கியொடுக் கிடுவாய்

வண்டின் னிசைசெய்ம் மயிலா டுதுறைக்

கண்டங் கரியாய் கலிதீர்த் தருளே.


பெண் தங்கிய மேனியுடைப் பெருமான் - உமை ஒருபக்கத்தில் தங்கிய திருமேனியை உடைய பெருமானே; (பெண்டங்கிய - பெண் தங்கிய);

அண்டம் பல ஆக்கி ஒடுக்கிடுவாய் - பல அண்டங்களையும் படைத்து ஒடுக்குபவனே;

வண்டு இன்னிசைசெய்ம் மயிலாடுதுறைக் - வண்டுகள் இன்னிசை பாடுகின்ற மயிலாடுதுறையில் உறைகின்ற;

கண்டம் கரியாய் - நீலகண்டனே;

கலி தீர்த்து அருளே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (கலி - துன்பம்);


6)

திரியும் புரமூன் றெரிசெய் தவனே

எரிவன் கருநஞ் சமுதுண் டவனே

வரிவண் டறையும் மயிலா டுதுறைப்

புரிசெஞ் சடையாய் புகல்தந் தருளே.


திரியும் புரம் மூன்று எரிசெய்தவனே - திரிந்த முப்புரங்களை எரித்தவனே;

எரி-வன்-கருநஞ்சு அமுது உண்டவனே - கொதிக்கின்ற (/ சுட்டெரிக்கும்) கொடிய கரிய ஆலகாலத்தை அமுதாக உண்டவனே;

வரிவண்டு அறையும் மயிலாடுதுறைப் - வரியுடைய வண்டுகள் ஒலிக்கின்ற மயிலாடுதுறையில் உறைகின்ற; (அறைதல் - ஒலித்தல்);

புரி-செஞ்சடையாய் - முறுக்கிய சிவந்த சடையை உடையவனே; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

புகல் தந்து அருளே - எனக்கு அடைக்கலம் தந்து அருள்வாயாக;


7)

நறையார் மலர்தூ வியமா ணிநலம்

உறவே நமன்மார் பிலுதைத் தவனே

மறைநா வினனே மயிலா டுதுறை

இறைவா அடியேன் இடர்தீர்த் தருளே.


நறை ஆர் மலர் தூவிய மாணி நலம் உறவே நமன் மார்பில் உதைத்தவனே - வாசமலர்களைத் தூவி வழிபடு செய்த மார்க்கண்டேயர் எமபயம் நீங்கி இன்புறும்படி காலனை மார்பில் உதைத்தவனே; (நறை - வாசனை; தேன்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);

மறை-நாவினனே - வேதங்களைப் பாடியருளியவனே; (வேதநாவா);

மயிலாடுதுறை இறைவா - மயிலாடுதுறையில் உறைகின்ற இறைவனே;

அடியேன் இடர் தீர்த்து அருளே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


8)

மலைபேர் தசமா முகனார்த் தழவே

மலரார் கழலோர் விரலூன் றியருள்

மலையான் மருகா மயிலா டுதுறைத்

தலைவா துணைவா தமியேற் கருளே.


மலை பேர் தசமாமுகன் ஆர்த்து அழவே - கயிலைமலையைப் பெயர்த்த பத்துத்தலை இராவணன் அலறி அழும்படி; (ஆர்த்தல் - ஒலித்தல்);

மலர் ஆர் கழல் ஓர் விரல் ஊன்றியருள் - மலர் போன்ற திருப்பாதத்தின் விரல் ஒன்றை ஊன்றி நசுக்கியருளிய; (ஆர்தல் - ஒத்தல்);

மலையான் மருகா - இமவானுக்கு மருகனே;

மயிலாடுதுறைத் தலைவா துணைவா - மயிலாடுதுறையில் உறைகின்ற தலைவனே, துணைவனே;

தமியேற்கு அருளே - கதியற்ற எனக்கு அருள்வாயாக;


9)

செழுமா மலரான் திருமாற் கரிதாய்

எழுசோ தியனே இடுமூண் மகிழ்வாய்

மழுவாட் படையாய் மயிலா டுதுறைத்

தொழுவார்க் கினியாய் துயர்தீர்த் தருளே.


செழு-மா-மலரான் திருமாற்கு அரிது-ஆய் எழு சோதியனே - செழுமையான தாமரைமலரில் இருக்கு பிரமனுக்கும் திருமாலுக்குக் காண அரியதான ஜோதிவடிவில் உயர்ந்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.120.9 - "கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய அண்ணல்");

இடும் ஊண் மகிழ்வாய் - (பிச்சையாக) இடும் உணவை விரும்பியவனே;

மழுவாட் படையாய் - மழுவாளை ஏந்தியவனே; (படை - ஆயுதம்);

மயிலாடுதுறைத் தொழுவார்க்கு இனியாய் - மயிலாடுதுறையில் உறைகின்றவனும் அன்பர்க்கு அன்பனும் ஆனவனே;

துயர் தீர்த்து அருளே - என் துயரைத் தீர்த்து அருள்வாயாக;


10)

இதமற் றதைநன் றெனவந் துரைசெய்

அதமர்க் கருளா தவனே அரனே

மதமா உரியாய் மயிலா டுதுறை

முதல்வா முனைவல் வினைதீர்த் தருளே.


இதம் அற்றதை நன்று என வந்து உரைசெய் அதமர்க்கு அருளாதவனே - நன்மையற்றதை நல்ல நெறி என்று வீடுவீடாகச் சென்று உரைக்கின்ற கீழோர்க்கு அருள் இல்லாதவனே;

அரனே - ஹரனே;

மதமா உரியாய் - யானைத்தோலைப் போர்த்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.50.6 - "கரியுரியாய் காலகாலா");

மயிலாடுதுறை முதல்வா - மயிலாடுதுறையில் உறைகின்ற முதல்வனே;

முனை வல்வினை தீர்த்து அருளே - என் பழைய வலிய வினையைத் தீர்த்து அருள்வாயாக; (முனை - முன்னை);


11)

நஞ்சார் மிடறா நசியா முதலே

பஞ்சேர் அடியாள் பிரியாப் பரமா

மஞ்சார் பொழில்சூழ் மயிலா டுதுறை

மஞ்சா பழவல் வினைமாய்த் தருளே.


நஞ்சு ஆர் மிடறா - ஆலகாலத்தை உண்டு அணிந்த கண்டனே; (ஆர்தல் - உண்ணுதல்; அணிதல்);

சியா முதலே - அழிவு இல்லாத முதற்பொருளே; (நசித்தல் - அழிதல்; சாதல்);

பஞ்சு ஏர் அடியாள் பிரியாப் பரமா - பஞ்சு போன்ற மென்மையான பாதம் உடைய உமை பிரியாத பரமனே; (ஏர்தல் - ஒத்தல்); (திருவாசகம் - ஆசைப்பத்து - 8.25.10 - "பஞ்சேர் அடியாள் பாகத் தொருவா"); (திருவாசகம் - வாழாப்பத்து - 8.28.6 - "பஞ்சின் மெல்லடியாள் பங்க");

மஞ்சு ஆர் பொழில் சூழ் மயிலாடுதுறை மஞ்சா - மேகம் பொருந்தும் சோலை சூழ்ந்த மயிலாடுதுறையில் உறைகின்ற வீரனே; (மஞ்சன் - மைந்தன் - வீரன்); (திருவாசகம்-போற்றித் திருவகவல் - 8.4 - அடி-183- "மஞ்சா போற்றி மணாளா போற்றி");

பழ-வல்வினை மாய்த்து அருளே - என் பழைய வலிய வினையை அழித்து அருள்வாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------