Saturday, July 25, 2026

M.079 - நாமறை - ஓத - மடக்கு

2020-05-29

M.079 - நாமறை - ஓத - மடக்கு

-----------------

நாமறை எண்ணமு(ம்) நன்கறியு(ம்) ஞானனுக்கு

நாமறை நாமமகிழ் நாதனுக்கு - நாமறை

ஓத வருமிறைக்(கு) ஓரோடே உண்கலன்

ஓத விடமும் உணவு.


சொற்பொருள்:

நாமறை - 1. நா(ம்) மறை; (மறைத்தல் - ஒளித்தல்); 2. நாம் அறை; (அறைதல் - சொல்தல்); 3. நா மறை; (மறை - வேதம்);

ஓத - 1. பாட; (ஓதுதல் - பாடுதல்); 2. கடல்; (ஓதம் - கடல்);


நா(ம்) மறை எண்ணமும் நன்கு அறியும் ஞானனுக்கு - நாம் வெளிப்படுத்தாமல் மறைக்கும் எண்ணங்களையும் முற்றும் அறியும் ஞானவடிவினனுக்கு;

நாம் அறை நாம(ம்) மகிழ் நாதனுக்கு - நாம் (அன்போடு) சொல்லும் திருநாமங்களையும் புகழையும் கேட்டு மகிழ்ந்து அருளும் தலைவனுக்கு; (நாமம் - பெயர்; புகழ்);

நா மறை ஓத வரும் இறைக்கு - திருநாவால் வேதங்களைப் பாடியவண்ணம் (பிச்சையேற்க) வரும் இறைவனுக்கு;

ஓர் ஓடே உண்கலன் - ஒரு மண்டையோடே பிச்சைப்பாத்திரம்; (ஓடு - மண்டையோடு);

ஓத-விடமும் உணவு - கடல்நஞ்சும் உணவு;


வி. சுப்பிரமணியன்

------------ ------------


M.078 - அடைவார் - பணிபல - மடக்கு

2020-05-29

M.078 - அடைவார் - பணிபல - மடக்கு

-----------------

அடைவார் மதியை அணிந்து நதியை

அடைவார் சடையுடை அண்ணல் - அடைவார்

பணிபல ஏற்றவர் பாவங்கள் தீர்ப்பான்

பணிபல பூண்ட பரன்.


சொற்பொருள்:

அடைவார் - 1. அடைவு ஆர்; 2. அடைத்த வார்; 3. அடைபவர்;

பணி - 1. தொண்டு; 2. நாகம்;


அடைவு ஆர் மதியை அணிந்து, நதியை அடை வார்-சடையுடை அண்ணல் - சரணடைந்த சந்திரனைப் புனைந்து, கங்கையை அடைத்த நீண்ட சடையை உடைய பெருமான்; (வார்தல் - நீள்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.85.7 - "அடைவார் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து");

அடைவார் பணி பல ஏற்று அவர் பாவங்கள் தீர்ப்பான் - தன்னைச் சரணடைந்தவர்கள் (பக்தர்கள்) செய்யும் தொண்டினை ஏற்று மகிழ்ந்து அவர்களது தீவினைகளைத் தீர்ப்பவன்; ("அடைவார் பணி பல ஏற்றவர்" = "அடியார்க்கு அடியார்" என்று பொருள்கொண்டு, "அடியார்க்கு அடியார் ஆனவர்களது பாவங்களைத் தீர்ப்பவன்" என்றும் பொருள்கொள்ளலாம்);

பணி பல பூண்ட பரன் - பல நாகங்களை அணிந்த பரமன்;


வி. சுப்பிரமணியன்

------------ ------------


M.077 - இருமலை - காவும் - மடக்கு

2020-05-21

M.077 - இருமலை - காவும் - மடக்கு

-----------------

இருமலை எய்தாத இன்பருளாய், வில்லா

இருமலை ஏந்திய ஈசா, - இருமலை

காவும் இடும்பனடை கந்தனத்தா, பல்துறையும்

காவும் உறைவாய், கனிந்து.


முற்குறிப்பு : "வில்லா இருமலை ஏந்திய .... உறைவாய் கனிந்து இருமலை எய்தாத இன்பருளாய்" என்று கூட்டிப் பொருள்கொள்க. = "சிவபெருமானே, என்மேல் இரக்கம்கொண்டு எனக்கு நோயற்ற இன்பவாழ்வை அருள்வாயாக".


சொற்பொருள்:

இருமலை - 1. இருமல், ; (- கோழை); 2. பெரிய மலை; (இருமை - பெருமை); 3. இரண்டு மலைகள்;

காவும் - 1. தோளில் சுமக்கும்; (காவுதல் - தோளால் காத்தண்டு சுமத்தல்); 2. கா என்ற பெயருடைய தலங்களிலும்;


இருமல் ஐ எய்தாத இன்பு அருளாய் - இருமலும் கோழையும் அடைந்து நான் வருந்தும் நிலையுறாத இன்பம் அருள்வாயாக; (இன்பு - இன்பம்);

வில்லா இருமலை ஏந்திய ஈசா - வில்லாகப் பெரிய மேருமலையை ஏந்திய ஈசனே;

இருமலை காவும் இடும்பன் அடை கந்தன் அத்தா - இரண்டு மலைகளைத் தண்டில் கட்டிச் சுமந்த இடும்பன் சரணடைந்த முருகனுக்குத் தந்தையே; (அடைதல் - சேர்தல்; சரணடைதல்); (இடும்பன் அடை கந்தன் = "இடும்பன் இருந்த இடத்திற்குச் சென்று அவனுக்கு அருளிய முருகன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (* இடும்பன் சிவனை வழிபட்டதையும் முருகன் அவனோடு விளையாடல் செய்து அருளியதையும் பழனித் தலவரலாற்றில் காண்க);

பல்துறையும் காவும் உறைவாய் கனிந்து - பல துறை, கா என்ற பெயருடைய தலங்களில் உறைகின்றவனே, இரங்கி; (துறை - சோற்றுத்துறை, ஆவடுதுறை, மயிலாடுதுறை முதலியன); (கா - கோலக்கா, நெல்லிக்கா, ஆனைக்கா முதலியன); (சம்பந்தர் தேவாரம் - சேத்திரக்கோவை - 2.39.3 - "அட்டானமென் றோதிய நாலிரண்டும் அழகன்னுறை காவனைத்தும் துறைகள் எட்டாம் திருமூர்த்தியின் காடொன்பதும் குளமூன்றும் களமஞ்சும் பாடிநான்கும்");

இலக்கணக் குறிப்பு: பல்+தொடை = பஃறொடை; அதுபோலப், "பல்+துறை = பஃறுறை" என்று புணரக்கூடும். இவ்விடத்தில் வெண்டளை கருதிக் கூவிளம் என்று அலகிட்டுக்கொள்க;


* பிற்குறிப்புகள்:

* "வருபவர்க ளோலை கொண்டு .... இடும்பன் பழநிதனிலே இருந்த ...... குமரேசா ..." - திருப்புகழ் - கதிர்காமம்;


* இடும்பன் சூரர்களின் போர்ப்பயிற்சிக் குரு. சிவபக்தன். அகத்தியரின் ஆணைப்படி வடக்கே இருந்த சிவகிரி, சக்திகிரி ஆகிய இரண்டு மலைகளையும் காவடியாகத் தூக்கிப் பொதியமலைக்குச் செல்லும்பொழுது முருகனின் லீலையால் திருவாவினன்குடியில் பாரம் தாங்காமல் மலைகளைக் கீழே வைத்தான். முருகன் மலைகளைத் தூக்கமுடியாதபடி செய்து இடும்பனைத் தண்டாயுதத்தால் தாக்கி அவனுக்கு முக்தி அளித்த இடம் பழநிமலை. இதிலிருந்துதான் காவடி எடுத்து இடும்பனை வழிபட்டு முருகனைத் தரிசனம் செய்யும் முறை ஏற்பட்டது.

https://palani.org/dandayudhapani.ciruppu.htm

தண்டாயுதபாணி கோயிலுக்குச் செல்லும் வழியில் இடும்பனுக்குச் சன்னிதி இருக்கிறது. இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகளைச் சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறார். இடும்பனுக்குப் பூஜை செய்தபின்பே, முருகனுக்குப் பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, 5 மணிக்குப் பூஜை செய்வர். அதன்பின்பே மலைக்கோயிலில் முருகனுக்குப் பூஜை நடக்கும். காவடி தூக்கிச்செல்லும் பக்தர்கள் இவரது சன்னிதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய பின்பே செல்கின்றனர்.

(பேட்டை துள்ளல் - குரல் எழுப்பியவாறே குதித்து ஆடுதல். இவ்வாறு ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்லும்போது எருமேலி என்ற இடத்தில் செய்யக் காணலாம்);


வி. சுப்பிரமணியன்

------------ ------------


Sunday, June 28, 2026

M.076 - மானார் - கரவன் - மடக்கு

2020-05-21

M.076 - மானார் - கரவன் - மடக்கு

-----------------

மானார் விழியாள் மணவாளன் ஏறேறு

மானார் தொழினும் வரமருள்வான் - மானார்

கரவன் கமழ்சடையிற் கங்கையினான் நாலும்

கரவன் கரியுரித்தான் காண்.


சொற்பொருள்:

மான் ஆர் - 1. மான் போன்ற; 2. பெரியோன் யார்; 3. மான் பொருந்திய;

மான் - 1. மான் என்ற விலங்கு; 2. பெரியோன்;

ஆர்தல் - 1. ஒத்தல்; 2. பொருந்துதல்;

கரவன் - 1. கையை உடையவன்; 2. (கர வன் =) கரத்தையுடைய வலிய கொடிய;


மான் ஆர் விழியாள் மணவாளன் - மான் போன்ற விழியுடைய உமைக்குக் கணவன்;

ஏறு ஏறு மான் - இடபத்தின்மேல் ஏறுகின்ற பெரியோன்; (சம்பந்தர் தேவாரம் - 1.127.1 - "பிரமபுரத்துறை பெம்மா னெம்மான்")

ஆர் தொழினும் வரம் அருள்வான் - எத்தகையவராயினும் (அன்போடு) வணங்கினால் அவர்களுக்கு வரம் அருள்பவன்; (ஆர் - யார்);

மான் ஆர் கரவன் - கையில் மானை ஏந்தியவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "உழையார் கரவா உமையாள் கணவா");

கமழ்-சடையில் கங்கையினான் - மணம் கமழும் சடையில் கங்கையைத் தரித்தவன்;

நாலும் கர-வன்-கரி உரித்தான் காண் - தொங்கும் கையை உடைய கொடிய யானையின் தோலை உரித்தவன்; (நால்தல் - தொங்குதல்); (காண் - பார்; அறி; முன்னிலை அசைச்சொல்); (அப்பர் தேவாரம் - 6.64.8 - "முடித்தவன்காண் வன்கூற்றை");


வி. சுப்பிரமணியன்

------------ ------------


M.075 - செய்யானை - வண்டார் - மடக்கு

2020-05-21

M.075 - செய்யானை - வண்டார் - மடக்கு

-----------------

செய்யானை நாகமதி சேர்த்தானை வந்துபோர்

செய்யானை செற்றானைத் தீமையொன்றும் - செய்யானை

வண்டார் குழல்மாதை வாம(ம்) மகிழ்ந்தானை

வண்டார் புனைந்தானை வாழ்த்து.


சொற்பொருள்:

செய்யானை - 1. செம்மேனியனை; 2. செய் ஆனை; 3. செய்யாதவனை;

வண்டார் - 1. வண்டு ஆர்; 2. வண் தார்;


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

செய்யானை - செம்மேனியனை; (செய் - செம்மை நிறம்);

நாக(ம்) மதி சேர்த்தானை - (திருமுடிமேல்) நாகத்தையும் சந்திரனையும் ஒன்றாகச் சேர்த்தவனை;

வந்து போர் செய்-ஆனை செற்றானைத் - வந்து போரிட்ட யானையை அழித்தவனை; (செய்தல் - பண்ணுதல்); (செறுதல் - அழித்தல்; வெல்லுதல்);

தீமையொன்றும் செய்யானை - ஒரு தீமையும் செய்யாதவனை - புண்ணியனை; (சங்கரன் - சுகத்தைச் செய்பவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நன்றுடையானைத் தீயதிலானை"); (சம்பந்தர் தேவாரம் - 1.50.6 - "புரிசடையாய் புண்ணியனே");

வண்டு ஆர் குழல் மாதை வாம(ம்) மகிழ்ந்தானை - வண்டுகள் பொருந்திய கூந்தலையுடைய உமையை இடப்பாகமாக விரும்பியவனை; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);

வண்-தார் புனைந்தானை வாழ்த்து - அழகிய (கொன்றை)மாலை அணிந்தவனை வாழ்த்துவாயாக; (வண்மை - அழகு; வளப்பம்); (தார் - மாலை);


வி. சுப்பிரமணியன்

------------ ------------


M.074 - காயாத - அப்பனை - மடக்கு

2020-05-20

M.074 - காயாத - அப்பனை - மடக்கு

-----------------

காயாத வேணியனைக் கல்லெறிந்து போற்றிடினும்

காயாத கண்ணுதலை ஓத்தூரில் - காயாத

அப்பனை எல்லாம் அருங்குலை ஈனவருள்

அப்பனை நெஞ்சே அடை.


சொற்பொருள்:

காயாத - 1. உலராத; 2. கோபித்துக்கொள்ளாத; 3. காய்த்தல் இல்லாத;

காய்தல் - உலர்தல்; கோபித்தல்; எரித்தல்;

காய்த்தல் - மரம் முதலியன காய்களை உண்டாக்குதல்;

அப்பனை - 1. அந்தப் பனைமரங்கள்; 2. தந்தையை;


காயாத வேணியனைக் - வற்றாத கங்கை என்றும் தங்கிய சடையை உடையவனை; (வேணி - சடை; நதி);

கல் எறிந்து போற்றிடினும் காயாத கண்ணுதலை - கல்லை எறிந்து வழிபாடு செய்தாலும் அப்படித் தொழும் அன்பரைக் கோபித்துக்கொள்ளாமல் ( / சுட்டெரித்திட்டாமல்) அன்போடு அருள்கின்ற நெற்றிக்கண்ணனை; (* சாக்கிய நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

ஓத்தூரில் காயாத அப்-பனை எல்லாம் அரும்-குலை ஈன அருள் அப்பனை - திருவோத்தூரில் காய்த்தலற்ற அந்த ஆண்பனைகள் எல்லாம் உடனே அரிய குலைகளை ஈனுமாறு அருள்செய்த தந்தையை; (சம்பந்தர் தேவாரம் - 1.54.11 - "குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர் அரும்பு கொன்றை அடிகளை"; இந்தத் திருவோத்தூர்ப் பதிகத்தின் வரலாற்றைச் சம்பந்தர் புராணத்தில் பெரியபுராணத்தில் காண்க);

நெஞ்சே அடை - மனமே நீ அடைவாயாக;


வி. சுப்பிரமணியன்

------------ ------------


P.504 - வழுவூர் - வானோர்க்கு இரங்கி

2020-05-11

P.504 - வழுவூர்

--------------

(எழுசீர்ச் சந்தவிருத்தம் - தனதான தான, தனதான தான, தனதான தான தனனா - சந்தம்; முதற்சீர் "தானான" என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு")

* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


1)

வானோர்க்கி ரங்கி மலைவில்லை ஏந்தி மதில்மூன்றெ ரித்த ஒருவன்

தேனார்க்கும் வாச மலரோடு பாம்பு திரையாரும் ஆறு புனைவான்

தானோக்கும் அன்பர் வினைதீரு மாறு தயைசெய்யு(ம்) நல்ல தலைவன்

மானோக்கி அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


வானோர்க்கு இரங்கி மலைவில்லை ஏந்தி மதில்-மூன்று எரித்த ஒருவன் - தேவர்களுக்கு இரங்கி, மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை எரித்த ஒப்பற்றவன்;

தேன் ஆர்க்கும் வாச-மலரோடு, பாம்பு, திரை ஆரும் ஆறு புனைவான் - வண்டுகள் ஒலிக்கும் மணம் மிக்க பூக்களோடு, நாகம், அலை மிகுந்த கங்கை இவற்றைச் சூடியவன்; (தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);

தான் நோக்கும் அன்பர் வினை தீருமாறு தயை செய்யும் நல்ல தலைவன் - தன்னைத் தியானிக்கும் பக்தர்களது வினை தீரும்படி அருள்செய்யும் நல்ல தலைவன்; (தான் - அவன்); (நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; விரும்புதல்); (அப்பர் தேவாரம் - 5.49.3 - "தானோக்குந் தன்னடியவர் நாவினில் தேனோக்குந் திருவெண்கா டடைநெஞ்சே");

மான்-நோக்கி அஞ்ச மதமா உரித்து வழுவூரில் நின்ற பரனே - மான் போன்ற பார்வையை உடைய உமை அஞ்சும்படி யானையைத் தோலுரித்து வழுவூரில் உறைகின்ற பரமன்; (சம்பந்தர் தேவாரம் - 3.58.3 - "நூனலந் தங்குமார்பி னுகர் நீறணிந் தேறதேறி மானன நோக்கிதன்னோ டுடனாவது");

(மானோக்கி - முற்பிரயோக உதாரணம் - திருவிளையாடற் புராணம் - பழிஅஞ்சின படலம் - "வலைத்தலைய மானோக்கி வயிறுருவத் தைத்தன்றால்"; / அகநானூறு - 91 - "மடமான் நோக்கிநின் மாணலம் மறந்தே");


2)

மதனாகம் வேவ நுதலால்வி ழித்த மணிகண்டன் ஆறு முகமார்

சுதனாரை நல்கி இமையோர்கள் உற்ற துயர்தீர்த்த நல்ல துணைவன்

கதநாகம் ஆறு தரிசென்னி மீது கடிநாறு கொன்றை புனைவான்

மதவார ணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


மதன் ஆகம் வேவ நுதலால் விழித்த மணிகண்டன் - மன்மதனது உடம்பு வெந்து சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் விழித்த நீலகண்டன்; (நுதல் - நெற்றி; இங்கே, நெற்றிக்கண்ணைச் சுட்டியது);

ஆறுமுகம் ஆர் சுதனாரை நல்கி இமையோர்கள் உற்ற துயர் தீர்த்த நல்ல துணைவன் - ஆறுமுகங்கள் உடைய பிள்ளையை அருளித் தேவர்களது துன்பத்தைத் தீர்த்த நல்ல துணைவன்; (சுதன் - மகன்);

கதநாகம் ஆறு தரி சென்னி மீது கடி நாறு கொன்றை புனைவான் - சீறும் பாம்பையும் கங்கையையும் தரித்த திருமுடிமேல் மணம் கமழும் கொன்றையையும் அணிந்தவன்; (கதம் - கோபம்); (கடி - வாசனை);

மத-வாரணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே - மதயானையை உரித்துத் தோலைப் போர்த்து வழுவூரில் உறைகின்ற பரமன்; (வாரணம் - யானை); (உரிசெய்தல் - தோலை உரித்தல்);


3)

நலியாத வண்ணம் அடியார்க்கு நாளு(ம்) நல(ம்)நல்கு கின்ற பெருமான்

பொலியார மாக அரவம்பு னைந்த புரிநூலன் இண்டை மதியம்

ஒலியார்த ரங்கம் உடையாறு சூடி ஒளிநீறு பூசும் ஒருவன்

வலியார்க ளிற்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


நலியாத வண்ணம் அடியார்க்கு நாளும் நலம் நல்குகின்ற பெருமான் - அடியவர்கள் துன்புறாதபடி அவர்களுக்கு எப்பொழுதும் நலங்களை அருள்கின்ற பெருமான்;

பொலி-ஆரமாக அரவம் புனைந்த புரிநூலன் - திகழ்கின்ற மாலையாகப் பாம்பை அணிந்தவன், மார்பில் முப்புரிநூலை அணிந்தவன்; (ஆரம் - மாலை);

இண்டை-மதியம், ஒலி ஆர் தரங்கம் உடை ஆறு சூடி - தலையில் அணியும் இண்டைமாலை போலத் திங்களையும் ஒலி மிக்க அலைகளையுடைய கங்கையையும் சூடியவன்; (இண்டை - முடிமாலை); (தரங்கம் - அலை);

ஒளிநீறு பூசும் ஒருவன் - ஒளியுடைய திருநீற்றைப் பூசும் ஒப்பற்றவன்;

வலி ஆர் களிற்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே - வலிமை மிக்க யானையை உரித்துத் தோலைப் போர்த்து வழுவூரில் உறைகின்ற பரமன்;


4)

பாதங்கள் ஏத்தி வழிபாடு செய்து பலதேவர் வேண்ட அவர்தம்

ஏதங்கள் தீர வடிவேலை ஏந்தும் இளையோனை நல்கும் இறைவன்

வாதங்கள் செய்த அமண்மாய வைகை நதியேடு நீந்த வருவான்

மாதங்கம் ஒன்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


பாதங்கள் ஏத்தி வழிபாடு செய்து பல தேவர் வேண்ட அவர்தம் ஏதங்கள் தீர வடிவேலை ஏந்தும் இளையோனை நல்கும் இறைவன் - இருதிருவடிகளை ஏத்தி வழிபட்டுப் பல தேவர்கள் வேண்டவும் அவர்களுக்கு இரங்கி, அவர்களுடைய துன்பமெல்லாம் தீரும்படி வடிவேலை ஏந்துகின்ற முருகனை அருளிய இறைவன்; (ஏதம் - துன்பம்);

வாதங்கள் செய்த அமண் மாய வைகை நதி ஏடு நீந்த வருவான் - பலவகை வாதுகள் செய்த சமணர்கள் அழியும்படி வைகைநதியில் சம்பந்தர் இட்ட ஏடு ஆற்றை எதிர்த்து நீந்திச் செல்லும்படி அருள்புரிந்தவன்; (சம்பந்தர் தேவாரம் 3.113.12 - "பருமதில் மதுரைமன் னவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே வருநதி யிடைமிசை வருகரனே");

மாதங்கம் ஒன்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே - யானை ஒன்றை உரித்துத் தோலைப் போர்த்து வழுவூரில் உறைகின்ற பரமன்; (மாதங்கம் - யானை);


5)

கல்லானை முன்பு பலர்முன்க ரும்பு களியோடு தின்ன வருவான்

கொல்லானை முன்னர் உழவார அன்பர் தமைநீங்கி ஓட அருள்வான்

நல்லானை ஏத்து விசயற்கு நாடு படையீந்த நாதன் உமைகோன்

வல்லானை தன்னை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


கல்-ஆனை முன்பு பலர்முன் கரும்பு களியோடு தின்ன வருவான் - முன்னொரு சமயத்தில் பலரும் காணும்படி கல்-யானை கரும்பை மகிழ்ந்து தின்னும்படி சித்தராக வந்தவன்; (திருவிளையாடற் புராணத்தில் "கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்" காண்க);

கொல்-ஆனை முன்னர் உழவார-அன்பர்தமை நீங்கி ஓட அருள்வான் - உழவாரப்பணி செய்த அன்பரான திருநாவுக்கரசரைக் கொல்வதற்காக ஏவப்பட்ட யானை அவரைவிட்டு விலகி ஓடிச்செல்லும்படி அருள்செய்தவன்; (பெரியபுராணத்தில் திருநாவுக்கரசர் வரலாற்றைக் காண்க); (அப்பர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்தும்" - இப்பதிகக் குறிப்பைக் காண்க);

நல்லானை ஏத்து விசயற்கு நாடு படை ஈந்த நாதன் உமைகோன் - நல்லவனான சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்த அர்ஜுனனுக்கு அவன் விரும்பிய பாசுபதாஸ்திரத்தை அளித்த தலைவன், உமாபதி; (படை - ஆயுதம்);

வல்-ஆனைதன்னை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே - வலிய யானையை உரித்துத் தோலைப் போர்த்து வழுவூரில் உறைகின்ற பரமன்;


6)

இனவீயெ டுத்து மணமாலை கட்டி இருதாளில் இட்டு மகிழ்வார்

இன(ம்)மாநி லத்தில் இடரார்பி றப்பில் இளையாத வண்ணம் அருள்வான்

முனமோர்பொ ருப்பை வளைவித்து மூன்று புரம்வேவ நக்க முதல்வன்

வனவார ணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


இன-வீ எடுத்து மண-மாலை கட்டி இருதாளில் இட்டு மகிழ்வார் - சிறந்த மலர்களைத் தேர்ந்தெடுத்து வாசனை மிக்க மாலைகள் கட்டி இருதிருவடியில் இட்டு மகிழும் பக்தர்கள்; (வீ - பூ);

இன(ம்) மாநிலத்தில் இடர் ஆர் பிறப்பில் இளையாத வண்ணம் அருள்வான் - இன்னும் இவ்வுலகில் துன்பம் மிக்க பிறப்புகளில் உழன்று வருந்தாதபடி அருள்பவன்; (இனம் - இன்னம்; இடைக்குறை விகாரம்); (இன்னம் - இன்னும் - மறுபடியும்; மேலும்);

முனம் ஓர் பொருப்பை வளைவித்து மூன்று புரம் வேவ நக்க முதல்வன் - முன்பு ஒரு மலையை வில்லாக வளைத்து முப்புரங்களும் வெந்து அழியும்படி சிரித்த முதல்வன்; (பொருப்பு - மலை); (சம்பந்தர் தேவாரம் - 1.13.2 - "மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன்");

வன-வாரணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே - காட்டில் திரியும் இயல்புடைய யானையை உரித்துத் தோலைப் போர்த்து வழுவூரில் உறைகின்ற பரமன்;


7)

நெய்யார்ந்த தீப(ம்) மணமார்ந்த தூப(ம்) நிறையன்பு கொண்டு மலரும்

கையேந்தி வாழ்த்தும் ஒருமாணி கண்டு கருமேதி யானை முனிவான்

பையார்ந்த பாம்பை அணிமார்பன் எந்தை பனிவெற்பு மங்கை வெருவ

மையார்ந்த மேனி மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


நெய் ஆர்ந்த தீபம், மணம் ஆர்ந்த தூபம், நிறை அன்பு கொண்டு, மலரும் கை ஏந்தி, வாழ்த்தும் ஒரு மாணி கண்டு கருமேதியானை முனிவான் - கையில் நெய்த்தீபம், வாசப்புகை, பூக்கள் இவற்றையெல்லாம் ஏந்தி மிகுந்த அன்போடு வழிபாடு செய்த ஒப்பற்ற மார்க்கண்டேயரது பக்தியைக் கண்டு மகிழ்ந்து, கரிய எருமையை வாகனமாக உடைய காலனைச் சினந்து உதைத்தவன்; (மேதி - எருமை); (முனிதல் - கோபித்தல்);

பை ஆர்ந்த பாம்பை அணி மார்பன் எந்தை - படமுடைய பாம்பை மார்பில் மாலையாக அணிந்தவன், எம் தந்தை; (பை - பாம்பின் படம்);

பனிவெற்பு மங்கை வெருவ, மை ஆர்ந்த மேனி மதமா உரித்து, வழுவூரில் நின்ற பரனே - இமவான் மகளான உமை அஞ்சும்படி, கரிய உடலையுடைய யானையை உரித்து, வழுவூரில் உறைகின்ற பரமன்; (மை - கருநிறம்); (மதமா - யானை);


8)

கரையற்ற கோபம் எழவானில் ஓங்கு கயிலாயம் வீச வருகோன்

நிரையுற்ற பத்து முடிவாய ரற்ற விரலொன்றை ஊன்று நிமலன்

உரையற்ற மோன நிலையுற்று நால்வர் உடனான ஆல நிழலன்

வரையொத்த மேனி மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


கரையற்ற கோபம் எழ, வானில் ஓங்கு கயிலாயம் வீச வரு-கோன் - எல்லையற்ற சினம் பொங்க, வானில் ஓங்கிய கயிலைமலையைப் பெயர்த்து எறிய வந்த இலங்கை மன்னனான இராவணனது; (வீசுதல் - எறிதல்);

நிரை உற்ற பத்துமுடி-வாய் அரற்ற விரல் ஒன்றை ஊன்று நிமலன் - வரிசையாக அமைந்த பத்துத்தலைகளில் இருக்கும் வாய்கள் எல்லாம் ஓலமிட்டு அழும்படி திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி நசுக்கிய தூயன்; (நிரை - வரிசை);

உரை அற்ற மோன நிலை உற்று நால்வர் உடன் ஆன ஆலநிழலன் - பேசாத மௌனநிலையில் இருந்து சனகாதியர்களோடு கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருப்பவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.38.7 - "இருந்து நால்வரொ டானிழல்லறம் உரைத்ததும்");

வரை ஒத்த மேனி மதமா உரித்து வழுவூரில் நின்ற பரனே - மலை போன்ற பெரிய உருவுடைய யானையை உரித்து, வழுவூரில் உறைகின்ற பரமன்; (வரை - மலை);


9)

அலைமேற்கி டந்த திருமாலு(ம்) நாறும் அலர்மேலி னானும் அறியா

உலவாத சோதி உருவோடு யர்ந்த ஒருவன்சி வந்த சடையன்

இலைமூன்று காட்டும் அயில்வேலு(ம்) மானும் எரியுந்த ரித்த இறைவன்

மலைபோலெ திர்ந்த மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


அலைமேல் கிடந்த திருமாலும் நாறும் அலர்மேலினானும் அறியா - பாற்கடல்மேல் பள்ளிகொண்ட திருமாலாலும் மணம் கமழும் தாமரைமேல் இருக்கும் பிரமனாலும் அறியப்படாத; (அலர் - மலர்);

உலவாத சோதி உருவோடு உயர்ந்த ஒருவன் - அழிவற்ற ஒளிப்பிழம்பு வடிவில் ஓங்கிய ஒப்பற்றவன்;

சிவந்த சடையன் - செஞ்சடையை உடையவன்;

இலை மூன்று காட்டும் அயில்வேலும் மானும் எரியும் தரித்த இறைவன் - கூர்மையான திரிசூலம், மான், தீ, இவற்றையெல்லாம் கையில் ஏந்திய இறைவன்; (அயில் - கூர்மை);

மலை போல் எதிர்ந்த மதமா உரித்து வழுவூரில் நின்ற பரனே - மலை போன்ற பெரிய உருவுடையதும் போர் செய்ததுமான யானையை உரித்து, வழுவூரில் உறைகின்ற பரமன்;


10)

பொய்க்கென்று(ம்) நாணம் இலராகி நீறு புனையார்க்கு நன்மை புரியான்

கைக்கின்ற நஞ்சை அமுதாக உண்டு கறையார்ந்த கண்டம் உடையான்

கைக்கொண்ட போது கழலிட்ட அன்பர் கலிதீர நல்கு வரதன்

மைக்கண்ணி அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


பொய்க்கு என்றும் நாணம் இலர் ஆகி நீறு புனையார்க்கு நன்மை புரியான் - என்றும் கூசாமல் பொய் பேசித் திருநீறு பூசாமல் உழல்கின்றவர்களுக்கு அருள் இல்லாதவன்; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");

கைக்கின்ற நஞ்சை அமுதாக உண்டு கறை ஆர்ந்த கண்டம் உடையான் - கசக்கின்ற ஆலகாலத்தை அமுதம் போல உண்டு அருளிய நீலகண்டன்; (கைத்தல் - கசத்தல்);

கைக்கொண்ட போது கழல் இட்ட அன்பர் கலி தீர நல்கு வரதன் - கைகளில் பூக்களை ஏந்தித் திருவடியில் தூவிய பக்தர்களது துன்பம் தீரும்படி வரம் அருள்கின்ற வரதன்; (போது - பூ); (கலி - துன்பம்; தரித்திரம்);

மைக்-கண்ணி அஞ்ச மதமா உரித்து வழுவூரில் நின்ற பரனே - மை அணிந்த கரிய கண்களை உடைய உமை அஞ்சும்படி யானையை உரித்து வழுவூரில் உறைகின்ற பரமன்;


11)

படமஞ்சு கொண்ட அரைநாண ணிந்து பலியட்டு மென்று திரிவான்

கடனஞ்சை உண்டு மணிபோலி லங்கு கறையேற்ற கண்டம் உடையான்

நடனங்கள் ஆட இடுகானை நல்ல இடமென்று நாடும் இறைவன்

மடமங்கை அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


படம் அஞ்சு கொண்ட அரைநாண் அணிந்து, "பலி அட்டும்" என்று திரிவான் - ஐந்து படங்களையுடைய பாம்பை (= ஐந்தலை நாகத்தை) அரைநாணாகக் கட்டிப், "பிச்சை இடுங்கள்" என்று உழல்பவன்; (பலி - பிச்சை); (அட்டுதல் - இடுதல்);

கடல்-நஞ்சை உண்டு மணி போல் இலங்கு கறை ஏற்ற கண்டம் உடையான் - பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டு, நீலமணி போல ஒளிவீசும் கறையைக் கண்டத்தில் உடையவன்;

நடனங்கள் ஆட இடுகானை நல்ல இடமென்று நாடும் இறைவன் - கூத்துகள் ஆடுவதற்குச் சிறந்த இடமாகச் சுடுகாட்டை விரும்பும் இறைவன்;

மடமங்கை அஞ்ச மதமா உரித்து வழுவூரில் நின்ற பரனே - அழகிய இளமையுடைய உமை அஞ்சும்படி யானையை உரித்து வழுவூரில் உறைகின்ற பரமன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------