2016-12-14
P.369 - தெங்கூர் (திருத்தங்கூர்)
(திருவாரூர் திருத்துறைப்பூண்டி இடையே உள்ள தலம்)
---------------------------------
(கட்டளைக் கலித்துறை) (திருவிருத்தம் அமைப்பு)
(அப்பர் தேவாரம் - திருவிருத்தம் - 4.96.1 - "கோவாய் முடுகி");
1)
திரையார் கடலில் திரள்நஞ்சைக் கண்டஞ்சித் தேவரெலாம்
குரையார் கழல்போற்ற உண்டு மிடற்றிருள் கொண்டவனே
விரையார் மலர்ச்சோலை சூழ்ந்த திருத்தெங்கூர் வெள்ளிமலை
அரையா அடிபணிந் தேன்வல் வினையை அழித்தருளே.
திரை ஆர் கடலில் திரள்-நஞ்சைக் கண்டு அஞ்சித் - அலை மிகுந்த பாற்கடலில் திரண்ட ஆலகாலத்தைக் கண்டு பயந்து;
தேவரெலாம் குரை ஆர் கழல் போற்ற உண்டு மிடற்று-இருள் கொண்டவனே - தேவர்களெல்லாம் ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியைப் போற்றி வணங்க, (அவர்களுக்கு இரங்கி) அந்த விடத்தை உண்டருளிக் கண்டத்தில் கருமையை ஏற்றவனே;
விரை ஆர் மலர்ச்சோலை சூழ்ந்த திருத்தெங்கூர் வெள்ளிமலை அரையா - வாச மலர்ப்பொழில் சூழ்ந்த திருத்தெங்கூரில் ரஜதகிரியில் வீற்றிருக்கும் அரசே; (சம்பந்தர் தேவாரம் - 2.93.1 - "விரைசெய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்தாரே");
அடிபணிந்தேன் வல்வினையை அழித்து அருளே - உன் திருவடியை வழிபடும் அடியேனது வலிய வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;
2)
மோகம் விளைக்கவம் பெய்த மதனை முனிந்தனங்கன்
ஆகும் படிநெற்றிக் கண்ணைத் திறந்த அதிசயனே
மேகம் தவழ்சோலை சூழ்ந்த திருத்தெங்கூர் வெள்ளிமலை
நாகம் புனைமார்ப என்வல் வினையை நசித்தருளே.
மோகம் விளைக்க அம்பு எய்த மதனை முனிந்து - மோஹம் உண்டாக்குவதற்காகக் கணை தொடுத்த மன்மதனைக் கோபித்து;
அனங்கன் ஆகும்படி நெற்றிக்கண்ணைத் திறந்த அதிசயனே - அவனை உடல் அற்றவனாகச் செய்ய நெற்றிக்கண்ணைத் திறந்தவனே, அற்புதமானவனே; மிகுந்த வெற்றி உடையவனே; ( அதிசயம் - சிறப்பு; ஆச்சரியம்; அதி+ஜயம் - மிகுந்த வெற்றி);
மேகம் தவழ் சோலை சூழ்ந்த திருத்தெங்கூர் வெள்ளிமலை - வானளாவும் சோலை சூழ்ந்த திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற;
நாகம் புனை மார்ப - மார்பில் பாம்பை மாலையாக அணிந்தவனே;
என் வல்வினையை நசித்து அருளே - என் வலிய வினைகளை அழித்து அருள்வாயாக;
3)
அடையார் புரங்கள் அழல்புக் கழிந்திட அம்புதொட்டாய்
சடைமேல் தவள மதியும் அரவும் தரித்தவனே
விடையார் கொடியுடை நாத திருத்தெங்கூர் வெள்ளிமலை
உடையாய் அடிதொழு தேன்வல் வினையை ஒழித்தருளே.
அடையார் புரங்கள் அழல் புக்கு அழிந்திட அம்பு தொட்டாய் - பகைவர்களது முப்புரங்களும் தீப்பற்றி அழியும்படி ஒரு கணையை எய்தவனே; (அடையார் - பகைவர்); (அழல் - தீ);
சடைமேல் தவள-மதியும் அரவும் தரித்தவனே - சடையின்மேல் வெண்திங்களையும் பாம்பையும் அணிந்தவனே; (தவளம் - வெண்மை);
விடை ஆர் கொடியுடை நாத - இடபக்கொடியை உடைய தலைவனே;
திருத்தெங்கூர் வெள்ளிமலை உடையாய் - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற சுவாமியே; (உடையான் - சுவாமி);
அடிதொழுதேன் வல்வினையை ஒழித்து அருளே - உன் திருவடியை வழிபடும் என் வலிய வினைகளை அழித்து அருள்வாயாக;
4)
பன்றியை எய்து விசயற்குப் பாசு பதமளித்தாய்
கொன்றை குரவம் விரவும் சடைமேற் குளிர்மதியாய்
வென்றி விடைக்கொடி நாத திருத்தெங்கூர் வெள்ளிமலை
நின்ற நிமலவென் வாழ்வினில் இன்பம் நிறைத்தருளே.
பன்றியை எய்து விசயற்குப் பாசுபதம் அளித்தாய் - ஒரு பன்றியை அம்பால் எய்து அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தைத் தந்தவனே;
கொன்றை குரவம் விரவும் சடைமேல் குளிர்-மதியாய் - கொன்றைமலரும் குரவமலரும் பொருந்திய சடைமேல் குளிர்ந்த சந்திரனை அணிந்தவனே;
வென்றி-விடைக்கொடி நாத - வெற்றியுடைய இடபக்கொடியை உடைய நாதனே; (வென்றி - வெற்றி);
திருத்தெங்கூர் வெள்ளிமலை நின்ற நிமல - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற தூயவனே;
என் வாழ்வினில் இன்பம் நிறைத்து அருளே - என் வாழ்க்கையில் இன்பத்தை நிரப்பி அருள்வாயாக;
5)
ஆல நிழலில் முனிவர்கள் நால்வர்க் கறமுரைத்தாய்
ஏலக் குழலி மலைமகள் தன்னை இடமகிழ்ந்தாய்
வேலை விடமணி கண்ட திருத்தெங்கூர் வெள்ளிமலை
சூலப் படையுடை யாய்என் வினையைத் துடைத்தருளே.
ஆலநிழலில் முனிவர்கள் நால்வர்க்கு அறம் உரைத்தாய் - கல்லால-மரத்தின்கீழ்ச் சனகாதியர்களுக்கு வேதப்பொருளை உபதேசித்தவனே;
ஏலக்-குழலி மலைமகள் தன்னை இடம் மகிழ்ந்தாய் - வாசக்குழலாள் உமையை இடப்பக்கம் ஒரு பாகமாக விரும்பியவனே;
வேலை-விடமணி கண்ட - கடல்விஷத்தை அணிந்த மணிகண்டனே; (வேலை - கடல்); (விடமணி - 1. விடம் + அணி; 2. விடம் மணி)
திருத்தெங்கூர் வெள்ளிமலை சூலப்படை உடையாய் - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற சூலாயுதபாணியே; (படை - ஆயுதம்);
என் வினையைத் துடைத்து அருளே - என் வினைகளை அழித்து அருள்வாயாக; (துடைத்தல் - அழித்தல்; நீக்குதல்);
6)
உன்பதம் ஏத்திய உம்பர் துயரம் ஒழிந்திடவே
முன்பெயில் மூன்றும் எரிய நகைசெய்த முக்கணனே
மென்சிறை வண்டுகள் ஆர்க்கும் திருத்தெங்கூர் வெள்ளிமலைப்
புன்சடைப் புண்ணிய னேஅடி யேனைப் புரந்தருளே.
உன் பதம் ஏத்திய உம்பர் துயரம் ஒழிந்திடவே - உன் பாதத்தைப் போற்றிய தேவர்களது துன்பம் அழியும்படி;
முன்பு எயில் மூன்றும் எரிய நகைசெய்த முக்கணனே - முன்பு முப்புரங்களும் எரியும்படி சிரித்த நெற்றிக்கண்ணனே; (எயில் - மதில்);
மென்-சிறை வண்டுகள் ஆர்க்கும் திருத்தெங்கூர் வெள்ளிமலைப் - மெல்லிய இறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கும் திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற; (சிறை - இறகு); (சம்பந்தர் தேவாரம் - 2.78.11 - "மென்சிறைவண்டு யாழ்முரல் விளநகர்");
புன்சடைப் புண்ணியனே - செஞ்சடையை உடைய புண்ணிய வடிவினனே;
அடியேனைப் புரந்து அருளே - என்னைக் காத்து அருள்வாயாக; (புரத்தல் - காத்தல்; அனுக்கிரகித்தல்);
7)
மண்புனல் தீவளி விண்ணிவை ஆகி வருபரனே
பண்பயில் இன்மொழிப் பாவை தனையொரு பால்மகிழ்ந்தாய்
வெண்பிறை சூடு விகிர்த திருத்தெங்கூர் வெள்ளிமலைத்
தெண்புனல் வேணிய னேஎன் வினைகளைத் தீர்த்தருளே.
மண் புனல் தீ வளி விண் இவை ஆகி வரு பரனே - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் ஆகி வருகின்ற மேலானவனே;
பண் பயில் இன்மொழிப் பாவைதனை ஒருபால் மகிழ்ந்தாய் - பண் பொருந்திய இனிய மொழி பேசும் உமையை ஒரு பக்கம் பாகமாக விரும்பியவனே;
வெண்பிறை சூடு விகிர்த - வெண்மையான சந்திரனைச் சூடிய விகிர்தனே; (விகிர்தன் - ஈசன் திருநாமங்களுள் ஒன்று);
திருத்தெங்கூர் வெள்ளிமலைத் தெண்-புனல் வேணியனே - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற, தெளிந்த-நீரான கங்கையைச் சடையில் உடையவனே; (வேணி - சடை);
என் வினைகளைத் தீர்த்து அருளே - என் வினைகளை அழித்து அருள்வாயாக;
8)
பாரொடு நீரெரி காற்றுவிண் ஆய பரம்பொருளே
வேரொடு வெற்பிடந் தானை விரலால் விறலழித்தாய்
மேருவில் ஏந்திய வீர திருத்தெங்கூர் வெள்ளிமலைக்
காருறு கண்டத்தி னாயென் வினையைக் கடிந்தருளே.
பாரொடு நீர் எரி காற்று விண் ஆய பரம்பொருளே - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் ஆகி வருகின்ற மேலான பொருளே;
வேரொடு வெற்பு இடந்தானை விரலால் விறல் அழித்தாய் - கயிலைமலையை அடியோடு பெயர்த்த இராவணனை ஒரு விரலை ஊன்றி நசுக்கி அவன் வலிமையை அழித்தவனே; (இடத்தல் - பெயர்த்தல்); (விறல் - வெற்றி; வலிமை); (அப்பர் தேவாரம் - 6.89.10 - "விலங்கல் எடுத்துகந்த வெற்றியானை விறலழித்து");
மேருவில் ஏந்திய வீர - மேருமலையை வில்லாக ஏந்திய வீரனே;
திருத்தெங்கூர் வெள்ளிமலைக் - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற,
கார் உறு கண்டத்தினாய் - நீலகண்டனே; (கார் - கருமை);
என் வினையைக் கடிந்தருளே - என் வினையை அழித்து அருள்வாயாக; (கடிதல் - அழித்தல்);
9)
நற்பது மத்துறை நான்முகன் மாலிவர் நாணநின்றாய்
பற்பல பேர்கள் உடையவ னேபரி பாலகனே
விற்புரு வத்துமை பங்க திருத்தெங்கூர் வெள்ளிமலைக்
கற்பக மேஅடி யேன்வல் வினையைக் கடிந்தருளே.
நல்-பதுமத்து உறை நான்முகன் மால் இவர் நாண நின்றாய் - நல்ல தாமரைமலரில் உறைகின்ற பிரமனும் திருமாலும் அடிமுடி காணாமல் வெட்கி வணங்கும்படி ஜோதியாகி உயர்ந்தவனே;
பற்பல பேர்கள் உடையவனே - எண்ணற்ற திருநாமங்கள் உடையவனே;
பரிபாலகனே - காப்பவனே; (பரிபாலகன் - இரட்சகன்);
வில்-புருவத்து உமை பங்க - வில் போன்ற புருவத்தை உடைய உமையை ஒரு பங்காக உடையவனே;
திருத்தெங்கூர் வெள்ளிமலைக் கற்பகமே - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற கற்பகமே; (கற்பகம் - கற்பகமரம் போல அடியவர் வேண்டியன வழங்குபவன்);
அடியேன் வல் வினையைக் கடிந்து அருளே - என் வலிய வினையை அழித்து அருள்வாயாக; (கடிதல் - அழித்தல்);
10)
நல்லவர் போல நடிப்பவர்க் கென்றும் நலமருளாய்
அல்லினிற் பூதங்கள் பாடிட ஆடும் அதிர்கழலாய்
மெல்லிடை யாளொரு பங்க திருத்தெங்கூர் வெள்ளிமலை
வல்லவ னேஅடி யேன்வல் வினைகளை மாய்த்தருளே.
நல்லவர் போல நடிப்பவர்க்கு என்றும் நலம் அருளாய் - நல்லவர் போல நடிக்கின்ற நயவஞ்சகர்களுக்கு என்றும் அருளாதவனே;
அல்லினில் பூதங்கள் பாடிட ஆடும் அதிர்கழலாய் - இருளில் பூதகணங்கள் பாட ஆடுகின்றவனே, ஒலிக்கின்ற கழலை அணிந்தவனே; (அதிர்தல் - முழங்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.10.4 - "அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை");
மெல்லிடையாள் ஒரு பங்க - சிற்றிடை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே;
திருத்தெங்கூர் வெள்ளிமலை வல்லவனே - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற வல்லவனே;
அடியேன் வல்வினைகளை மாய்த்து அருளே - என் வலிய வினையை அழித்து அருள்வாயாக; (மாய்த்தல் - அழித்தல்);
11)
அஞ்சிய மார்க்கண்டர்க் காகவெங் காலனை அன்றுதைத்தாய்
மஞ்சு தவழ்கயி லாய மலையுறை மன்னவனே
செஞ்சுடர் வண்ணத்துச் செல்வ திருத்தெங்கூர் வெள்ளிமலை
நஞ்சணி மாமிடற் றாயென் வினையை நசித்தருளே.
அஞ்சிய மார்க்கண்டர்க்காக வெங்-காலனை அன்று உதைத்தாய் - (காலனைக் கண்டு) அச்சமுற்ற மார்க்கண்டேயரைக் காப்பதற்காக அன்று கொடிய காலனை உதைத்தவனே;
மஞ்சு தவழ் கயிலாயமலை உறை மன்னவனே - மேகம் தவழும் கயிலைமலையில் உறைகின்ற தலைவனே;
செஞ்சுடர் வண்ணத்துச் செல்வ - செந்தீப் போன்ற செம்மேனி உடைய செல்வனே;
திருத்தெங்கூர் வெள்ளிமலை - திருத்தெங்கூர் வெள்ளிமலையில் உறைகின்ற;
நஞ்சு அணி மா-மிடற்றாய் - விஷத்தை அணிந்த அழகிய கண்டம் உடையவனே;
என் வினையை நசித்து அருளே - என் வினைகளை அழித்து அருள்வாயாக;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment