2020-08-22 (விநாயக-சதுர்த்தி நாள்)
S.154 - சிவன் - விநாயகன் - சிலேடை
-----------
இக்கட் டழிப்பவனை எண்ணில் நலஞ்செய்யும்
அக்கர மைந்தனை மூத்தவனைத் - திக்குடை
நாதனை எம்மானை நல்வடிவா னானைமுக்கட்
போதனைவி நாயகனைப் போற்று.
சொற்பொருள்:
இக்கட்டு - 1. இக்-கட்டு (இந்தப் பந்தம், பாசம்); 2. கஷ்டம்; இடுக்கண்;
எண்ணில் - 1. எண்ணற்ற; அளவற்ற; 2. எண்ணினால்; சிந்தித்தால்;
அக்கரமைந்தனை - 1. அக்கரம் ஐந்தனை (திருவைந்தெழுத்தினனை); அக்கர மைந்தனை (அழிவற்ற வீரனை); 2. அக்-கரம் ஐந்தனை (அந்த ஐங்கரனை);
அக்கரம் - அக்ஷரம் (अक्षर akṣara) - 1. எழுத்து; 2. அழிவின்மை;
மைந்தன் - 1. வீரன்; 2.மகன்;
மூத்தவன் - 1. மேலோன்; 2. அண்ணன்;
திக்குடை - 1. திக்கு உடை (திசைகளே ஆடை - திகம்பரன்); 2. எல்லாத் திசைகளையும் உடைய (= ஆளும்);
திகம்பரன் - (दिगम्बर digambara - a. having only the directions for his clothing, stark naked, unclothed);
எம்மானை நல்வடிவானானை - 1. எம்மானை, நல்-வடிவு ஆனானை; 2. எம் ஆனை நல்-வடிவு ஆனானை (ஆனவனை);
வடிவு - 1. அழகு; 2. உருவம்;
ஆனானை - 1. ஆனவனை; 2. நீங்காதவனை; ஆனுதல் - நீங்குதல்;
போதன் - bōdha - ஞானன்;
விநாயகன் - கணபதி;
விநாயகன்:
இக்கட்டு அழிப்பவனை எண்ணில் - தியானித்தால் இடர்களைத் தீர்ப்பவனை;
நலம் செய்யும் அக்-கரம்-ஐந்தனை - நன்மைசெய்யும் அந்த ஐந்து-கரத்தனை;
மூத்தவனைத் - மூத்த பிள்ளையாரை;
திக்குடை நாதனை - எல்லாத் திசைகளையும் உடைய தலைவனை (= அண்டம் முழுதும் ஆள்பவனை);
எம் ஆனை நல்வடிவு ஆனானை - எங்கள் நல்ல யானை-வடிவத்தை உடையவனை;
விநாயகனைப் போற்று - கணபதியைத் துதி;
சிவன்:
இக்-கட்டு அழிப்பவனை - இந்தப் பந்தங்களைப் பாசங்களைப் போக்குபவனை; (மும்மலக்கட்டை நீக்குபவனை);
எண்-இல் நலம்செய்யும் அக்கரமைந்தனை - 1. அளவற்ற நன்மைசெய்யும் அஞ்செழுத்தனை; 2. அளவற்ற நன்மைசெய்யும் அழிவற்ற வீரனை;
மூத்தவனைத் - மேலானவனை; மிகவும் தொன்மையானவனை;
திக்கு-உடை நாதனை - திசைகளையே ஆடையாக உடைய தலைவனை; (திகம்பரனை);
எம்மானை - எம் தலைவனை;
நல்வடிவு ஆனானை - 1. நல்ல அழகுடையவனை; 2. நல்ல அழகிய வடிவுடைய, என்றும் நீங்காதவனை;
முக்கட் போதனைப் போற்று - முக்கண்ணுடைய ஞானனைத் துதி;
வி. சுப்பிரமணியன்
------------
No comments:
Post a Comment