Showing posts with label தனத்தன தனத்தன x3 தந்ததான. Show all posts
Showing posts with label தனத்தன தனத்தன x3 தந்ததான. Show all posts

Friday, July 8, 2022

T.140 - நின்றவூர் (திருநின்றவூர்) - மினற்சடை யிடைப்புனல்

2011-02-22

T.140 - நின்றவூர் (திருநின்றவூர்) - மினற்சடை யிடைப்புனல்

-----------------

(வண்ணவிருத்தம்;

தனத்தன தனத்தன தனத்தன

தனத்தன தனத்தன தனத்தன .. தந்ததான)

(Similar to - இருப்பவல் திருப்புகழ் - திருப்புகழ் - திருத்தணி - but with தந்ததான instead of தனதான at the end of the pattern.)


முற்குறிப்பு: அரையடிகளின் ஆரம்பத்தில் மோனை வரும் இடத்தில் எதுகை வருமாறு அமைந்த பாடல். அதனால் எட்டு அடிகள் உடைய பாடல் போலவும் தோற்றம் தரும்.

இதுபோல அரையடியில் எதுகை அமைந்த ஒரு திருப்புகழ் - கொடாதவனையே புகழ்ந்து - என்று தொடங்கும் விராலிமலைத் திருப்புகழ்.


மினற்சடை யிடைப்புனல் நிலைத்திட

.. .. விரித்தவன் அலர்க்கணை விடுத்தவன் .. வெந்துவீழ

.. அனற்பொறி செலுத்திடு நுதற்கணன்

.. .. அரைக்கர வசைத்தவன் விடத்தையும் .. உண்டவீசன்

மனைக்கிடம் அளித்தவன் அரிக்கொரு

.. .. வலத்திகி ரியைத்தரு கரத்தினன் .. அங்கணாதன்

.. வனப்புறு மலைக்குற மகட்கிறை

.. .. வரச்சுரர் தொழத்தரு கருத்தினன் .. அண்டவாணன்

முனர்த்தவம் இயற்றிடு கருத்துடை

.. .. முனிக்கிடர் கொடுத்திடு நமற்கொல .. வந்தகாலன்

.. வனத்திடை அருச்சுனன் விருப்பொடு

.. .. வழுத்திட அவற்கொரு விறற்படை .. தந்தவேடன்

மனத்தளி அமைத்தவர் சிறப்பினை

.. .. மனர்க்கிர வினிற்கன வினிற்புகல் .. அன்பர்நேயன்

.. நினைப்பவர் வினைக்கரு அழித்திடு

.. .. நெருப்பவன் இருப்பது மதிற்றிரு .. நின்றவூரே.


பதம் பிரித்து:

மினற்-சடையிடைப் புனல் நிலைத்திட

.. .. விரித்தவன்; அலர்க்கணை விடுத்தவன் .. வெந்து வீழ

.. அனற்பொறி செலுத்திடு நுதற்கணன்;

.. .. அரைக்கு அரவு அசைத்தவன்; விடத்தையும் .. உண்ட ஈசன்;

மனைக்கு இடம் அளித்தவன்; அரிக்கு ஒரு

.. .. வலத்-திகிரியைத் தரு கரத்தினன்; .. அங்கண் நாதன்;

.. வனப்புறு மலைக்குறமகட்கு இறை

.. .. வரச் சுரர் தொழத் தரு கருத்தினன்; .. அண்டவாணன்;

முனர்த் தவம் இயற்றிடு கருத்துடை

.. .. முனிக்கு இடர் கொடுத்திடு நமற்கொல .. வந்த காலன்

.. வனத்திடை அருச்சுனன் விருப்பொடு

.. .. வழுத்திட அவற்கு ஒரு விறற்படை .. தந்த வேடன்;

மனத்-தளி அமைத்தவர் சிறப்பினை

.. .. மனர்க்கு இரவினிற் கனவினிற் புகல் .. அன்பர் நேயன்;

.. நினைப்பவர் வினைக்கரு அழித்திடு

.. .. நெருப்பு-அவன் இருப்பது மதில்-திரு .. நின்றவூரே.


மினற்-சடையிடைப் புனல் நிலைத்திட விரித்தவன் - மின்னல் போன்ற சடையில் கங்கை தங்குமாறு அச்சடையை விரித்தவன்; (மினற்சடை - மின்னற்சடை - இடைக்குறை விகாரம்);

அலர்க்-கணை விடுத்தவன் வெந்து வீழ அனற்-பொறி செலுத்திடு நுதற்-கணன் - மலரம்பை எய்த மன்மதன் சாம்பலாகும்படி தீப்பொறியை உமிழ்ந்த நெற்றிக்கண்ணன்; (அலர்க்கணை - மலர் அம்பு); (செலுத்துதல் - செல்லச்செய்தல்; எய்தல்); (உகைத்தல் - செலுத்துதல்); (நுதற்கணன் - நெற்றிக்கண்ணன்; கணன் - கண்ணன் - இடைக்குறை);

ரைக்கு அவு அசைத்தவன் - அரையில் பாம்பைக் கட்டியவன்; (அசைத்தல் - கட்டுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.61.7 - "பையரவம் அரைக்கசைத்தான்"); (நக்கீரதேவ நாயனார் - கார் எட்டு - 11.15.1 - "அரவம் அரைக்கசைத்த அண்ணல்" - "அரைக்கு" என்பதை "அரைக்கண்" எனத் திரிக்க. இஃது உருபு மயக்கம்);

விடத்தையும் ண்ட ஈசன் - ஆலகாலத்தையும் உண்டருளிய ஈசன்;

மனைக்கு இடம் அளித்தவன் - மனைவிக்கு இடப்பாகம் அளித்தவன்; (மனை - மனைவி);

அரிக்கு ஒரு வலத்-திகிரியைத் தரு கரத்தினன் - திருமாலுக்கு ஒப்பற்ற வலிமையும் வெற்றியும் உடைய சக்கராயுதத்தை வரமளித்த அருட்கரம் உடையவன்; (வலம் - வலிமை; வெற்றி); (திகிரி - சக்கரம்);

அங்கண் நாதன் - அருள்நோக்கம் உடைய நாதன்;

வனப்புறு மலைக்குறமகட்கு இறை வரச் சுரர் தொழத் தரு கருத்தினன் - அழகிய, மலையில் வாழும் குறமகளுக்குக் கணவனான முருகனை அருள்க என்று தேவர்கள் இறைஞ்ச, அவ்வாறே அருள்புரிந்தவன்; (வனப்பு - அழகு); (இறை - கணவன்);

அண்டவாணன் - தேவன்; அண்டமெங்கும் இருப்பவன்; (அண்டம் - வானம்; பிரபஞ்சம்); (அப்பர் தேவாரம் - 4.67.2 - "அண்டனே அண்டவாணா");

முனர்த் தவம் இயற்றிடு கருத்துடை முனிக்கு இடர் கொடுத்திடு நமற்கொல வந்த காலன் - முன்பு தவம் செய்த முனிவரான மார்க்கண்டேயருக்குத் துன்பம் தந்த காலனைக் கொல்ல வந்த காலகாலன்; (முனர், கொல - முன்னர், கொல்ல; இடைக்குறை விகாரம்); (நமற்கொல - நமனைக் கொல்ல; உயர்திணையில் இரண்டாம்வேற்றுமைத்தொகையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்று ன் ஒற்று ற் என்று திரியும்);

வனத்திடை அருச்சுனன் விருப்பொடு வழுத்திட அவற்கு ஒரு விறற்படை தந்த வேடன் - காட்டில் அர்ஜுனன் விரும்பித் துதிக்க, வேடன் வடிவில் சென்று அவனுக்கு ஒப்பற்ற வெற்றியுடைய பாசுபதாஸ்திரத்தைத் தந்தவன்; (அவற்கு - அவனுக்கு); (விறல் - வெற்றி; வலிமை);

மனத்-தளி அமைத்தவர் சிறப்பினை மனர்க்கு இரவினிற் கனவினிற் புகல் அன்பர் நேயன் - மனக்கோயில் கட்டிய பூசலாரது சிறப்பைப் பல்லவ மன்னருக்கு இரவில் கனவில் சொன்னவன், அன்பர்க்கு அன்பன்; (தளி - கோயில்); (மனர்க்கு - மன்னர்க்கு - இடைக்குறை விகாரம்); (புகல்தல் - சொல்லுதல்); (* திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்); (பெரியபுராணம் - பூசலார் புராணம் - 12.65.10 - "நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டாலயத்து நாளை நாம் புகுவோம்");

நினைப்பவர் வினைக்கரு அழித்திடு நெருப்பு-அவன் இருப்பது மதில்-திரு நின்றவூரே - தன்னைத் தியானிப்பவர்களது வினையை வேரோடு அழிக்கின்ற தீயான அப்பெருமான் உறைவது மதில் சூழ்ந்த திருநின்றவூர்;


வி. சுப்பிரமணியன்

----------- -----------