2011-02-25
T.142 - நின்றவூர் (திருநின்றவூர்) - மத்திடு சுரர்க்கு
-----------------
(வண்ணவிருத்தம்;
தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன .. தந்ததான)
(Somewhat similar to the syllabic pattern - சுத்திய நரப்புடன் - திருப்புகழ் - சுவாமிமலை - but with 9 தத்ததன instead of 12 தத்ததன in the pattern)
மத்திடுசு ரர்க்கிடர்த விர்த்தருவி
.. டத்தினைம டுத்திருள்மி டற்றனறு
.. மத்தமல ரைச்சடையி னிற்புனையும் .. உம்பர்நாதன்
உத்தமியை முத்தனைய பற்றிகழு(ம்)
.. மட்டவிழ்ம லர்க்குழலி யைப்பிரியம்
.. உற்றவளை நச்சியிடம் வைத்தவிறை .. கங்கைசூடி
முத்தமிழின் நித்தமடி யைத்துதிசெய்
.. பத்தர்அவர் இப்புவியி னிப்பிறவில்
.. முத்திநிலை பெற்றிடவ ரத்தையளி .. அங்கணாளன்
கத்திமலை யைப்பெயர ரக்கனழ
.. ஒற்றைவிரல் வைத்தவன ரைக்கணொரு
.. கட்செவிய சைத்தவனி ருக்குமிட(ம்) .. நின்றவூரே.
பதம் பிரித்து:
மத்திடு சுரர்க்கு இடர் தவிர்த்து, அரு
.. விடத்தினை மடுத்து இருள்-மிடற்றன்; நறு
.. மத்த-மலரைச் சடையினிற் புனையும் உம்பர்-நாதன்;
உத்தமியை, முத்து அனைய பல்-திகழு(ம்)
.. மட்டு அவிழ் மலர்க்குழலியைப், பிரியம்
.. உற்றவளை, நச்சி இடம் வைத்த இறை; கங்கைசூடி;
முத்தமிழின் நித்தம் அடியைத் துதிசெய்
.. பத்தர்அவர் இப்-புவி இனிப் பிறவு-இல்
.. முத்திநிலை பெற்றிட வரத்தை அளி அங்கணாளன்;
கத்தி மலையைப் பெயர் அரக்கன் அழ
.. ஒற்றை-விரல் வைத்தவன்; அரைக்கண் ஒரு
.. கட்செவி அசைத்தவன் இருக்கும் இட(ம்) நின்றவூரே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
மத்திடு சுரர்க்கு இடர் தவிர்த்து, அருவிடத்தினை மடுத்து இருள்-மிடற்றன் - பாற்கடலைக் கடைந்த தேவர்களுக்குத் துன்பத்தைத் தீர்த்துக், கொடிய விஷத்தை உண்டு கறுத்த கண்டத்தன்; (மத்து இடுதல் - கடைதல்); (தவிர்த்தல் - நீக்குதல்); (மடுத்தல் - உண்ணுதல்);
நறுமத்த-மலரைச் சடையினிற் புனையும் உம்பர்-நாதன் - மணம் வீசும் ஊமத்த மலர்ரைச் சடையில் அணிந்த தேவர் தலைவன்;
உத்தமியை - உத்தமியை;
முத்து அனைய பல்-திகழு(ம்) மட்டு அவிழ் மலர்க்குழலியைப் - முத்துப் போன்ற பற்கள் உடையவளும், வாசம் கமழும் மலர்களை அணிந்த கூந்தலை உடையவளுமான உமாதேவியை; (மட்டு - தேன்; வாசனை);
பிரியம் உற்றவளை - அன்பு உடையவளை;
நச்சி இடம் வைத்த இறை - விரும்பித் திருமேனியில் இடப்பக்கம் பாகமாக வைத்த இறைவன்; (நச்சுதல் - விரும்புதல்);
கங்கை-சூடி - கங்காதரன்;
முத்தமிழின் நித்தம் அடியைத் துதிசெய் பத்தர்அவர் இப்-புவி இனிப் பிறவு-இல் முத்திநிலை பெற்றிட வரத்தை அளி அங்கணாளன் - முத்தமிழினால் நாள்தோறும் திருவடியைத் துதிக்கும் பக்தர்கள் இந்த நிலவுலகில் இனிமேல் பிறவி இல்லாத முக்திநிலை பெற வரம் அருளும் பெருங்கருணையாளன்; (முத்தமிழின் - முத்தமிழினால்); (அப்பர் தேவாரம் - 4.11.4 - "அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாம் உற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே"); (பிறவு - பிறவி); (சம்பந்தர் தேவாரம் - 1.110.1 - "பெருந்தகை பிறவினொ டிறவுமானான்" - பிறவு இறவு - பிறப்பு, இறப்பு. 'வு' விகுதிபெற்ற தொழிற்பெயர்); (அங்கணாளன் - பெருங்கருணையாளன்; கண்ணோட்டமுடையவன்);
கத்தி மலையைப் பெயர் அரக்கன் அழ ஒற்றை-விரல் வைத்தவன் - மிகவும் ஆரவாரம் செய்துகொண்டு கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அழுமாறு ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கியவன்;
அரைக்கண் ஒரு கட்செவி அசைத்தவன் - அரையில் ஒரு பாம்பைக் கட்டியவன்; (அரைக்கண் - அரையில்; கண் - ஏழாம்வேற்றுமை உருபு); (கட்செவி - பாம்பு); (அசைத்தல் - கட்டுதல்);
இருக்கும் இட(ம்) நின்றவூரே - அப்பெருமான் உறையும் தலம் திருநின்றவூர்.
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment