2011-05-02
N.017 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2011
----------------
(வெண்பா)
(11 பாடல்கள் - எல்லாம் ஒரே ஈற்றடி)
1)
மண்ணுலகு வாழ மலர்வாய் திறந்தழுது
வெண்ணிலவு சூடியும் வெற்பரையன் - பெண்ணும்
புகட்டியமெய்ஞ் ஞானமாம் போனகம் உண்ட
புகலியர்கோன் பொற்றாள் புகல்.
* அம்மையப்பரால் ஞானப்பால் உண்பிக்கப்பெற்றதைச் சுட்டியது.
வெற்பு-அரையன் பெண் - இமவான்மகள் - பார்வதி; (வெற்பு - மலை); (அரையன் - அரசன்);
புகட்டுதல் - ஊட்டுதல்;
ஞானமாம் போனகம் - ஞானப்பால்; (போனகம் - உணவு); (பெரிய புராணம்; "பொங்கு கொங்கையிற் கறந்த மெய்ஞ்ஞானமாம் போனகம் பொற்குன்ற மங்கை செங்கையால் ஊட்ட உண்டருளிய மதலையார்")
புகலியர்கோன் பொற்றாள் புகல் - 1. ஞானசம்பந்தரது பொன்னடி எம் துணை; 2. ஞானசம்பந்தரது பொன்னடியைப் போற்றிச் சொல்; (புகலியர்கோன் - திருஞான சம்பந்தர்; புகலி - சீகாழி); (பொற்றாள் - பொன்னடி); (புகல் - சரண்; துணை); (புகல்தல் - சொல்லுதல்);
2)
பாங்குறக் கையிரண்டால் ஒத்தறுத்துப் பாடும்போ
தாங்கையன் இன்னருளால் அஞ்செழுத்துத் - தாங்கித்
தகதகக்கும் தாளமொன்று தம்கையில் பெற்ற
புகலியர்கோன் பொற்றாள் புகல்.
பதம் பிரித்து:
பாங்கு-உறக் கை-இரண்டால் ஒத்தறுத்துப் பாடும்போது
அங்கு ஐயன் இன்-அருளால் அஞ்செழுத்துத் - தாங்கித்
தகதகக்கும் தாளம்-ஒன்று தம் கையில் பெற்ற
புகலியர்கோன் பொற்றாள் புகல்.
* திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றதைச் சுட்டியது.
பாங்கு - அழகு; தகுதி;
ஒத்தறுத்தல் - தாளவரையறை செய்தல்;
தாளம் - கைத்தாளக்கருவி;
3)
இறையும் எமபயம் இல்லை வினையும்
பறையும் இரவும் பகலும் - இறைவன்
புகழ்நாமம் போற்றும் அகத்தினர்க் கென்ற
புகலியர்கோன் பொற்றாள் புகல்.
* பஞ்சாக்கரப் பதிகத்தைச் சுட்டியது.
இறையும் - சிறிதும்;
பறைதல் - அழிதல்;
அகத்தினர் - மனத்தினர்;
(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "வந்த கூற்று அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே");
(சம்பந்தர் தேவாரம் - 3.22.4 - "நல்லவர் தீயர் எனாது நச்சினர் செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ ... ... அஞ்செழுத்துமே");
4)
மழைமிடறா மங்கையை வாடமயல் செய்வ
தழகா அருளென்று கொல்லி - மழவன்
மகளின்நோய் தீர்தமிழ் மாலை உரைத்த
புகலியர்கோன் பொற்றாள் புகல்.
பதம் பிரித்து:
"மழை-மிடறா! மங்கையை வாட மயல் செய்வது
அழகா? அருள்!" என்று கொல்லி மழவன்
மகளின் நோய் தீர் தமிழ்மாலை உரைத்த
புகலியர்கோன் பொற்றாள் புகல்.
* திருப்பாச்சிலாச்சிராமத்தில் கொல்லி-மழவன் மகளின் முயலகன்-நோயைத் தீர்த்ததைச் சுட்டியது.
மழைமிடறா - நீலகண்டனே; (மழை - கருமை; மேகம்); (மிடறு - கழுத்து);
மயல் - மயக்கம்;
(சம்பந்தர் தேவாரம் - 1.44.1 - "மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே");
5)
வாள்விழிமா தோர்பால் மகிழ்எந்தை மாதேவன்
தாள்பணியும் அன்பர்க்குக் கோள்களொடு - நாள்கள்
மிகநல்ல என்றுதமிழ் வேதம் மொழிந்த
புகலியர்கோன் பொற்றாள் புகல்.
* திருமறைக்காட்டில் கோளறுபதிகம் பாடியருளியதைச் சுட்டியது.
வாள்விழி மாது ஓர்பால் மகிழ் எந்தை - ஒளி திகழும் கண்களையுடைய உமையை ஒரு பாகமாக விரும்பிய எம் தந்தை; (வாள் - ஒளி);
(சம்பந்தர் தேவாரம் - 2.85.1 - "ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே);
6)
தீயை அடியார் திருமடத்தில் இட்டஅத்
தீயரொடு தென்னாட்டைப் பீடித்த - மாயை
அகலப் பதிகம் அருளிப் புரந்த
புகலியர்கோன் பொற்றாள் புகல்.
* மதுரையில் சமணர்களை வாதில் வென்றதைச் சுட்டியது.
மாயை - வஞ்சகம்; பொய்த்தோற்றம்;
பீடித்தல் - துன்புறுத்துதல்;
அகல்தல் - நீங்குதல்;
புரந்த - காத்த; (புரத்தல் - காத்தல்);
(சம்பந்தர் தேவாரம் - 3.51.1 - "பொய்யராம் அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே");
(சம்பந்தர் தேவாரம் - 3.54.1 - "வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்");
7)
பூவையுயிர் பெற்றுப் பொடியினின்று மீண்டெழப்
பாவையொரு பங்கனைப் பண்டெயில்கள் - வேவ
நகைசெய்த நம்பனை நற்றமிழால் போற்று
புகலியர்கோன் பொற்றாள் புகல்.
* மயிலாப்பூரில் குடத்திலிருந்த அஸ்தியிலிருந்து பூம்பாவையை எழச்செய்ததைச் சுட்டியது.
பூவை - பெண்; இங்கே பூம்பாவை;
பொடியினின்று - சாம்பலிலிருந்து; (பொடி - சாம்பல்; இங்கே, அஸ்தி);
பண்டு - முற்காலம்;
எயில் - கோட்டை;
நகைசெய்த - சிரித்த;
நம்பன் - சிவன்;
(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்");
8)
தகவின்றி வெற்பு தனையிடந்த பத்து
முகத்தன்தன் தோள்வலியை முன்பு - நகத்தால்
துகள்செய்த தூமதி சூடி மகனார்
புகலியர்கோன் பொற்றாள் புகல்.
* கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனைச் சிவபெருமான் தன் கால்விரல் நுனியால் நசுக்கியதைச் சுட்டியது.
தகவின்றி வெற்புதனை இடந்த - அறிவின்றிக் கயிலைமலையைப் பெயர்த்த; (தகவு - தகுதி; பொருத்தம்; அறிவு); (வெற்பு - மலை); ( இடத்தல் - பெயர்த்தல்);
பத்துமுகத்தன் - பத்துத் தலைகள் உடைய இராவணன்;
தோள்வலி - புஜபலம்;
நகத்தால் துகள்செய்த - விரல்நகத்தால் பொடிசெய்த (அழித்த);
தூமதிசூடி மகனார் - தூய வெண்திங்களைச் சூடும் சிவபெருமானுக்குத் திருமகனாரான ஞானசம்பந்தர்;
(சம்பந்தர் தேவாரம் - 3.92.8 - "முந்தி மா-விலங்கல் அன்றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே உந்தி மா-மலரடி ஒருவிரல் உகிர்நுதியால் அடர்த்தார்" - ஒரு விரலின் நகத்தின் நுனியால் அடர்த்தார்);
9)
அரியும் அயனும் அடிமுடி காணா
எரியின் உருவன் கரியின் - உரியன்
பகவன் கழலைப் பரவு மகனார்
புகலியர்கோன் பொற்றாள் புகல்.
எரி - ஜோதி;
கரி - யானை;
உரி - தோல்;
பகவன் - பகவான்; சிவன்;
பரவுதல் - புகழ்தல்; துதித்தல்; பாடுதல்;
10)
பரசமயப் புல்நீக்கிப் பைந்தமிழ்நீர் பாய்ச்சித்
தரையினில் சைவம் தழைக்க - அரவம்
திகழ்முடியன் சீர்பாடித் தேசமெங்கும் சென்ற
புகலியர்கோன் பொற்றாள் புகல்.
பரசமயம் - புறமதம்;
புல் - திரணம் (grass); இழிவு; அற்பம்;
தரை - உலகம்;
அரவம் - பாம்பு; ஒலி; (இரைக்கும் பாம்பு, கங்கை அலை ஓசை);
சீர் - புகழ்;
11)
தேசன் திருக்கயிலை வாசன் மலைமங்கை
நேசன் வினைநாசன் நெற்றிக்கண் - ஈசன்
புகழைத் தமிழ்பாடிப் போற்றிப் பணிந்த
புகலியர்கோன் பொற்றாள் புகல்.
தேசன் - ஒளியுருவினன்; (தேசு - ஒளி);
திருக்கயிலை வாசன் - கயிலைமலையில் வீற்றிருப்பவன்;
மலைமங்கை நேசன் - உமை மணாளன்;
வினைநாசன் - நம் வினைகளை அழிப்பவன்;
நெற்றிக்கண் ஈசன் - முக்கண்ணுடைய ஈசன்;
புகழைத் தமிழ்பாடிப் போற்றிப் பணிந்த - அப்பெருமானது புகழைத் தமிழ்ப்பாமாலைகள் (தேவாரம்) பாடிப் போற்றி வணங்கிய;
புகலியர்கோன் பொற்றாள் புகல் - 1. திருஞானசம்பந்தரது பொன்னடி எம் துணை; 2. திருஞானசம்பந்தரது பொன்னடியைப் போற்றிச் சொல்;
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment