2011-02-19
T.139 - நின்றவூர் (திருநின்றவூர்) - இகழ்கின்றதே நாடி
-----------------
(வண்ணவிருத்தம்;
தனதந்த தானான தனதந்த தானான
தனதந்த தானான .. தனதான)
இகழ்கின்ற தேநாடி இழிசிந்தை யால்நாளும்
.. .. இருள்குன்றம் ஆர்தீய .. வினைமேவி
.. இகல்கின்ற நோய்கூடி நமன்வந்து கால்வீடி
.. .. எரிகின்ற தீமூடி .. அழியாமுன்
புகழ்கின்ற பாமாலை அணிகின்ற நாவோடு
.. .. பொலிகின்ற தாளோத .. அருளாயே
.. பொரவந்த காரானை அதுவென்ற மாவீர
.. .. புலியொன்றின் ஈர்தோலின் .. உடையானே
அகமொன்றி வேறேது(ம்) நினைவின்றி வாழ்பூசல்
.. .. அவர்கண்ட ஓர்கோயில் .. மகிழ்தேவா
.. அறைகின்ற தேனாடு மலர்துன்று காரோதி
.. .. அணிமங்கை ஓர்பாகம் .. அமர்நாதா
திகழ்கின்ற பூவேதன் அரியன்று காணாத
.. .. சிரமம்பொ னார்பாதம் .. உடையானே
.. சிறுதிங்கள் வானாறு புனைசங்க ராகாமர்
.. .. திருநின்ற வூர்மேய .. பெருமானே.
பதம் பிரித்து:
இகழ்கின்றதே நாடி இழி-சிந்தையால் நாளும்
.. .. இருள்-குன்றம் ஆர் தீய .. வினை மேவி,
.. இகல்கின்ற நோய் கூடி, நமன் வந்து கால் வீடி,
.. .. எரிகின்ற தீ மூடி .. அழியாமுன்,
புகழ்கின்ற பாமாலை அணிகின்ற நாவோடு
.. .. பொலிகின்ற தாள் ஓத .. அருளாயே;
.. பொரவந்த கார்-ஆனை அது வென்ற மா-வீர;
.. .. புலியொன்றின் ஈர்-தோலின் .. உடையானே;
அகம் ஒன்றி வேறு ஏது(ம்) நினைவு இன்றி வாழ்-பூசல்
.. .. அவர் கண்ட ஓர் கோயில் .. மகிழ்-தேவா;
.. அறைகின்ற தேன் நாடு மலர் துன்று கார்-ஓதி
.. .. அணிமங்கை ஓர் பாகம் .. அமர்-நாதா;
திகழ்கின்ற பூ-வேதன் அரி அன்று காணாத
.. .. சிரம் அம்பொன் ஆர் பாதம் .. உடையானே;
.. சிறுதிங்கள் வானாறு புனை- சங்கரா; காமர்
.. .. திருநின்றவூர் மேய .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
இகழ்கின்றதே நாடி இழி-சிந்தையால் நாளும் இருள்-குன்றம் ஆர் தீய வினை மேவி - (சான்றோர்களால்) இகழப்படுகின்ற விஷயங்களையே விரும்பி இழியும் மனத்தால் தினமும் இருள்கின்ற மலை போன்ற தீவினை செய்து; (இகழ்தல் - வெறுத்தல்); (இழிதல் - இழிவுபடுதல்); (இருள்தல் - கறுப்பாதல்); (ஆர்தல் - ஒத்தல்);
இகல்கின்ற நோய் கூடி, நமன் வந்து கால் வீடி, எரிகின்ற தீ மூடி அழியாமுன் - என்னைத் தாக்கும் நோய்கள் பெருகிக், காலனும் வந்தடைந்து என் உயிர் நீங்கி, எரியும் தீ என் உடலைச் சூழ்ந்து நான் அழிவதன் முன்பே; (இகல்தல் - மாறுபடுதல்; பகைத்தல்); (கால் - காற்று); (வீடுதல் - கெடுதல்; ஒழிதல்);
புகழ்கின்ற பாமாலை அணிகின்ற நாவோடு பொலிகின்ற தாள் ஓத அருளாயே - உன்னைத் துதிக்கும் பாமாலைகளை என் நாக்கில் அணிந்து, உன் அழகிய திருவடியைப் போற்றி வணங்கி உய்ய அருள்வாயாக; (ஓதுதல் - பாடுதல்);
பொரவந்த கார்-ஆனை அது வென்ற மா-வீர - போர்செய்ய வந்த கரிய யானையை வென்ற பெருவீரனே; (பொருதல் - போர்செய்தல்); (கார் - கரியநிறம்);
புலியொன்றின் ஈர்-தோலின் உடையானே - ஒரு புலியின் உரித்த தோலுடையைக் கட்டியவனே; (ஈர்த்தல் - உரித்தல்);
அகம் ஒன்றி வேறு ஏது(ம்) நினைவு இன்றி வாழ்-பூசல் அவர் கண்ட ஓர் கோயில் மகிழ்-தேவா - வேறு சிந்தனைகள் எதுவும் இன்றித் தம் மனம் ஒருமுகப்பட்டு வாழ்ந்த பூசலார் நாயனார் கட்டித் தரிசித்த ஒப்பற்ற மனக்கோயிலில் விரும்பி எழுந்தருளிய தேவனே; (அகம் - மனம்); (பூசல் - பூசலார் நாயனார்); (காண்தல் - உண்டாக்குதல்; பார்த்தல்; தரிசித்தல்); (ஓர் - ஒப்பற்ற); (* திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்); (பெரியபுராணம் - பூசலார் புராணம் - 12.65.10 - "நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டாலயத்து நாளை நாம் புகுவோம்");
அறைகின்ற தேன் நாடு மலர் துன்று கார்-ஓதி அணிமங்கை ஓர் பாகம் அமர்-நாதா - ஒலிக்கும் வண்டுகள் நாடுகின்ற பூக்கள் பொருந்திய கரிய கூந்தலுடைய அழகிய உமாதேவி ஒரு பாகமாக இருக்கும் (/விரும்பிய) நாதனே; (அறைதல் - ஒலித்தல்); (தேன் - வண்டு); (துன்றுதல் - செறிதல்; பொருந்துதல்); (ஓதி - கூந்தல்); (அமர்தல் - இருத்தல்; விரும்புதல்;)
திகழ்கின்ற பூ-வேதன் அரி அன்று காணாத சிரம் அம்பொன் ஆர் பாதம் உடையானே - விளங்கும் தாமரைமலர்மேல் இருக்கும் பிரமன் திருமால் இவர்களால் முன்பு காண இயலாத திருமுடியும் அழகிய பொன் போன்ற திருவடியும் உடையவனே; (சிரம் - உச்சி); (அம் - அழகு); (ஆர்தல் - ஒத்தல்);
சிறுதிங்கள் வானாறு புனை- சங்கரா - பிறையையும் கங்கையையும் அணிந்த சங்கரனே; (வானாறு - வானதி - கங்கை); (புனைதல் - அணிதல்);
காமர் திருநின்றவூர் மேய பெருமானே - அழகிய திருநின்றவூரில் உறைகின்ற பெருமானே; (காமர் - அழகு);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment