2019-06-27
P. 474 - சேத்திரக்கோவை
------------------
(2017 டிசம்பர் மாதத்தில் தரிசித்த தலங்களில் பல தலங்கள் இப்பாடல்களில் இடம்பெறுகின்றன)
(கலிவிருத்தம் - மா மா மா மா - வாய்பாடு)
(கலிவிருத்தம் - விளம் மா மா மா - வாய்பாடு)
(கலிவிருத்தம் - மாங்காய் மா மா மா - வாய்பாடு)
(சுந்தரர் தேவாரம் - 7.91.1 - "பாட்டும் பாடிப் பரவித் திரிவார்")
முற்குறிப்பு: கலிவிருத்தப் பாடல்கள்; முதற்சீர் பொதுவாக மாச்சீர்; சில பாடல்களில் அச்சீர் விளம் / மாங்காய் என்ற அமைப்பில் வருவன;
1)
ஓடம் மல்கும் ஒற்றி யூரும்
மாடம் மல்கும் மயிலாப் பூரும்
வாடல் தீர்க்கும் வான்மி யூரும்
ஆடல் வல்லான் அமரும் பதியே.
* திருவொற்றியூர், மயிலாப்பூர், திருவான்மியூர்;
ஓடம் மல்கும் ஒற்றியூரும் - படகுகள் நிறைந்த (கடலோரத்தில் உள்ள தலமான) திருவொற்றியூரும்; (ஓடம் - தோணி; படகு);
மாடம் மல்கும் மயிலாப்பூரும் - மாடிவீடுகள் நிறைந்த மயிலாப்பூரும்; (மாடம் - மாடிவீடுகள்);
வாடல் தீர்க்கும் வான்மியூரும் - துன்பத்தைத் தீர்க்கும் திருவான்மியூரும்; (வாடல் - வாடுதல்; வருத்தம்);
ஆடல் வல்லான் அமரும் பதியே - கூத்தாடும் பெருமான் விரும்பி உறையும் தலங்கள்; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்); (பதி - தலம்);
2)
வாவி திகழும் மாடம் பாக்கம்
பூவிற் பொலியும் மதுவுண் டளிகள்
காவிற் பாடும் கழுக்குன் றம்கண்
பாவும் நெற்றிக் கடவுள் பதியே.
* மாடம்பாக்கம், திருக்கழுக்குன்றம்;
வாவி திகழும் மாடம்பாக்கம் - குளம் சூழ்ந்த மாடம்பாக்கமும்; (வாவி - குளம்);
பூவில் பொலியும் மது உண்டு அளிகள் காவில் பாடும் கழுக்குன்றம் - பூவில் திகழும் தேனை உண்டு வண்டுகள் சோலையில் பாடும் திருக்கழுக்குன்றமும்; (அளி - வண்டு); (கா - சோலை);
கண் பாவும் நெற்றிக்-கடவுள் பதியே - (கண் பரவிய நெற்றியையுடைய கடவுள் = ) நெற்றிக்கண்ணை உடைய கடவுள் உறையும் தலங்கள்; (அப்பர் தேவாரம் - 7.94.9 - "திருப்பாதிரிப்புலியூர்க் கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே");
3)
எட்டுத் திக்கில் இலிங்கம் இலங்க
மட்டில் இன்பம் வழங்கும் இடமாம்
சுட்ட நீறு துதையப் பூசும்
அட்ட மூர்த்தி அண்ணா மலையே
* திருவண்ணாமலை
எட்டுத்-திக்கில் இலிங்கம் இலங்க - எட்டுத் திசைகளிலும் லிங்கங்கள் விளங்க;
மட்டு இல் இன்பம் வழங்கும் இடம் ஆம் - அளவற்ற இன்பத்தை அருளும் தலம் ஆகும்; (மட்டு - அளவு);
சுட்ட நீறு துதையப் பூசும் அட்டமூர்த்தி அண்ணாமலையே - வெந்த திருநீற்றை அழுந்தப் பூசியவனும் எட்டு வடிவங்களை உடையவனுமான சிவபெருமான் உறையும் திருவண்ணாமலை;
4)
பொல்லா மனிதர் மனத்தைப் போலக்
கல்லாய் மரங்கள் காண அயலே
கல்லால் நிழலாய் காவென் றேத்திச்
செல்வார்க் கருளும் திருவக் கரையே.
* திருவக்கரை;
பொல்லாதவர்களது மனத்தைப் போல ஊரின் ஒரு பகுதியில் கல்லாகிய மரங்கள் காணக்கிடக்க, ஊரின் இன்னொரு பகுதியில், "கல்லாலமரத்தின் அடியில் வீற்றிருப்பவனே! காத்தருளாய்" என்று போற்றிச் சென்று வழிபடும் அன்பர்களுக்கு அருளும் தலம் திருவக்கரை;
5)
அறையணி நல்லூர் அடியார் தங்கள்
குறையறு கோவல் வீரட் டம்தேன்
நிறைமலர்ச் சோலை நிலவும் இடையா
றறைகடல் நஞ்சுண் அடிகள் பதியே.
* அறையணிநல்லூர் (அரகண்ட-நல்லூர்), கோவல் வீரட்டம் (திருக்கோயிலூர்), திரு-இடையாறு;
அறையணி நல்லூர் - அறையணிநல்லூரும்;
அடியார்-தங்கள் குறை அறு கோவல் வீரட்டம் - பக்தர்களது குறைகளைத் தீர்க்கின்ற திருக்கூவலூர் வீரட்டமும்;
தேன் நிறை-மலர்ச்சோலை நிலவும் இடையாறு - மது நிறைந்த மலர்ப்பொழில் திகழும் திருவிடையாறும்;
அறை-கடல் நஞ்சு உண் அடிகள் பதியே - ஒலிக்கின்ற கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்ட இறைவன் உறையும் தலங்கள்;
6)
பித்தன் நாமம் பெற்று கந்த
அத்தன் வெண்ணெய் நல்லூர் அனாதி
முத்தன் முண்டீச் சரமா மாத்தூர்
மத்தம் அணிந்தான் மகிழும் பதியே.
* திருவெண்ணெய்நல்லூர், திருமுண்டீச்சரம், திருஆமாத்தூர்;
குறிப்பு: "வெண்ணெய்நல்லூர், முண்டீச்சரம், ஆமாத்தூர், பித்தன் நாமம் பெற்று உகந்த அத்தன், அனாதிமுத்தன், மத்தம் அணிந்தான் மகிழும் பதியே" என்று இயைத்துப் பொருள்கொள்க;
பித்தன் நாமம் பெற்று உகந்த அத்தன் வெண்ணெய்நல்லூர் - பித்தன் என்ற பெயரை ஏற்று மகிழ்ந்த தந்தை உறையும் திருவெண்ணெய்நல்லூரும்;
அனாதி-முத்தன் முண்டீச்சரம் - அனாதியாகவே முக்திநிலையில் இருப்பவன் உறையும் திருமுண்டீச்சரமும்;
ஆமாத்தூர் - திருவாமாத்தூரும்
மத்தம் அணிந்தான் மகிழும் பதியே - ஊமத்தமலரை அணிந்தவனுமான சிவபெருமான் விரும்பி உறையும் தலங்கள்;
7)
நம்பியா ரூரர் நாவ லூர்தண்
அம்பொழில் சூழ்ந்த ஆமூர் எதிர்த்த
கம்பமா உரித்தான் கச்சூர் தேவர்
தம்பிரான் செம்பொற் சடையன் பதியே.
* திருநாவலூர், திருவாமூர், திருக்கச்சூர்;
நம்பி-ஆரூரர் நாவலூர் - சுந்தரமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலூரும்;
தண்-அம்-பொழில் சூழ்ந்த ஆமூர் - குளிர்ந்த அழகிய சோலை சூழ்ந்த திருவாமூரும்;
கச்சூர் - திருக்கச்சூரும்;
எதிர்த்த கம்ப-மா உரித்தான் - போர்செய்த யானையின் தோலை உரித்தவனும்; (கம்ப மா - அசையும் இயல்புடைய விலங்கான யானை);
தேவர்தம் பிரான் - தேவர்கள் தலைவனும்;
செம்பொற்-சடையன் பதியே - செஞ்சடையை உடையவனுமான சிவபெருமான் உறையும் தலங்கள்;
8)
பத்தணி முடியும் பாற எய்த
அத்திரத் தான்செய் இராமேச் சுரம்தென்
உத்தர கோச மங்கை ஓம்பும்
பத்தரைக் காக்கும் பரமன் பதியே.
* இராமேச்சுரம் (ராமேஸ்வரம்), உத்தரகோசமங்கை;
பத்து அணி முடியும் பாற எய்த அத்திரத்தான் செய் இராமேச்சுரம் - இராவணனது பத்து அழகிய கிரீடங்களை அணிந்த தலைகளும் அழியும்படி அம்பு எய்த இராமன் ஸ்தாபித்து வழிபட்ட ராமேஸ்வரமும்; (பாறுதல் - அழிதல்);
தென் உத்தரகோசமங்கை - அழகிய உத்தரகோசமங்கையும்;
ஓம்பும் பத்தரைக் காக்கும் பரமன் பதியே - போற்றும் பக்தர்களைக் காக்கின்ற பரமன் உறையும் தலங்கள்;
9)
சேணார் சோலைத் திருவா டானை
தூணார் சிற்பம் துலங்கும் பேரூர்
பேணா திருவர் பெரிதும் நேடிக்
காணா ஒருவன் கருதும் பதியே.
* திருவாடானை, பேரூர் (கோயம்புத்தூர் அருகே உள்ள தலம்);
சேண் ஆர் சோலைத் திருவாடானை - உயர்ந்த சோலை சூழ்ந்த திருவாடானையும்;
தூண் ஆர் சிற்பம் துலங்கும் பேரூர் - தூணில் அழகிய சிற்பங்கள் விளங்கும் பேரூரும்;
பேணாது இருவர் பெரிதும் நேடிக் காணா ஒருவன் கருதும் பதியே - தொழ எண்ணாத பிரமன் விஷ்ணு இவ்விருவரும் மிகவும் தேடியும் அவர்களால் அறிய ஒண்ணாத ஒப்பற்ற சிவபெருமான் விரும்பி உறையும் தலங்கள்;
10)
அவிநாசி அழகார் முருகன் பூண்டி
புவிபோற்றும் பொன்னி பாய்ந ணாகை
குவியாத குற்ற நெஞ்சர்க் கில்லான்
அவிர்வேணி அண்ணல் அமரும் பதியே.
* அவிநாசி, திருமுருகன் பூண்டி, திருநணா (பவானி);
அவிநாசி, அழகு ஆர் முருகன்பூண்டி - அவிநாசியும் அழகிய திருமுருகன்பூண்டியும்;
புவி போற்றும் பொன்னி பாய் நணா - உலகம் போற்றும் காவிரி பாயும் திருநணா என்ற பெயரையுடைய பவானியும்;
கை குவியாத குற்ற-நெஞ்சர்க்கு இல்லான் - கைகூப்பி வழிபடாத வஞ்சகர்களுக்கு அருள் இல்லாதவனும்;
அவிர்-வேணி அண்ணல் அமரும் பதியே - பிரகாசமான சடையை உடைய தலைவனுமான சிவபெருமான் விரும்பி உறையும் தலங்கள்;
11)
செடியறு திருச்செங் கோடு சீரார்
குடகினில் உதித்த குளிர்ந்த பொன்னி
தடவரை நீங்கித் தவழ்ந்து வளையும்
கொடுமுடி முக்கட் குழகன் பதியே.
* திருச்செங்கோடு, கொடுமுடி;
செடி அறு திருச்செங்கோடு - துன்பத்தையும் பாவத்தையும் தீர்க்கும் திருச்செங்கோடும்; (செடி - துன்பம்; பாவம்);
சீர் ஆர் குடகினில் உதித்த குளிர்ந்த பொன்னி - அழகும் பெருமையும் உடைய குடகுமலையில் தோன்றிய குளிர்ச்சி பொருந்திய காவிரியாறு;
தட-வரை நீங்கித் தவழ்ந்து வளையும் கொடுமுடி - பெரிய மலையை நீங்கித் தரையில் தவழ்ந்து (தெற்கிலிருந்து கிழக்குநோக்கி) வளைகின்ற இடமான கொடுமுடியும்; (தடம் - பெருமை); (வரை - மலை);
முக்கட்-குழகன் பதியே - முக்கண்ணனும் இளமையும் அழகும் உடையவனுமான சிவபெருமான் உறைகின்ற தலங்கள்;
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment