2019-07-04
N.056 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2019
-------------
1) ---- ("கந்த பத்யம்" - அமைப்பில்) ----
குருவாய் நால்வர்க் கருளும்
பெருமான் கையா லெழுதிய பீடுடை நூலாம்
திருவா சகமது பாடிய
அருமணி வாசக ரிருமல ரடிகள் போற்றி.
பதம் பிரித்து:
குருவாய் நால்வர்க்கு அருளும்
பெருமான் கையால் எழுதிய பீடுடை நூலாம்
திருவாசகம்-அது பாடிய
அரு-மணிவாசகர் இரு-மலரடிகள் போற்றி.
பீடு - பெருமை;
2) ----- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ------
குருந்தடியில் வீற்றிருந்த குருபரன்முன் மதுரைநின்று
வருந்தமிழ்நாட் டமைச்சரென வணங்கிநின்று மறைப்பொருள்கேட்
டருந்தமிழை நாமுய்ய அளித்ததிரு வாதவூர்ப்
பெருந்தகையார் மலரனைய திருந்துகழல் இணைபோற்றி.
பதம் பிரித்து:
குருந்து-அடியில் வீற்றிருந்த குருபரன்முன் மதுரைநின்று
வரும் தமிழ்நாட்டு அமைச்சர் என வணங்கிநின்று மறைப்பொருள் கேட்டு
அரும்-தமிழை நாம் உய்ய அளித்த திரு-வாதவூர்ப்
பெருந்தகையார் மலர் அனைய திருந்து-கழல்இணை போற்றி.
குருந்து-அடியில் வீற்றிருந்த குருபரன்முன் "மதுரைநின்று வரும் தமிழ்நாட்டு அமைச்சர்" என வணங்கிநின்று மறைப்பொருள் கேட்டு - குருந்தமரத்தின்கீழ் இருந்த மேலான குருவின்முன் "மதுரையிலிருந்து வரும் பாண்டியநாட்டு மந்திரி" என்று வணங்கி ஞானோபதேசம் பெற்று; (நின்று - ஐந்தாம்வேற்றுமை உருபு);
அரும்-தமிழை நாம் உய்ய அளித்த திரு-வாதவூர்ப் பெருந்தகையார் - நாம் உய்யும்படி அரிய தமிழான திருவாசகத்தைப் பாடியருளிய, திருவாதவூரில் அவதரித்த அண்ணலார் மாணிக்கவாசகரது;
மலர் அனைய திருந்து-கழல்இணை போற்றி - மலர் போன்ற அழகிய இரு-திருவடிகளுக்கு வணக்கம்; (குறிப்பு - "திருந்தடி" என்பதுபோல் "திருந்துகழல்"; திருந்துதல் - அழகாதல்; கழல் - ஆகுபெயராய்ப் பாதத்தைக் குறித்தது);
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment