Wednesday, May 6, 2026

T.231 - வீழிமிழலை - பெரிய உலகினில்

2019-08-15

T. 231 - வீழிமிழலை - பெரிய உலகினில்

-----------------

(வண்ணவிருத்தம்;

தனன தனதன தனன தனதன

தனன தனதன .. தனதான)

(குமர குருபர முருக சரவண - திருப்புகழ் - சுவாமிமலை)


பெரிய உலகினில் அடையும் இடர்மிகு

.. .. பிறவி அவைமுடி .. விலவாகப்

.. பிழைகள் புரிவது பிரிய மண(ம்)மலி

.. .. பிணையல் உனதடி .. இடுவேனோ

இரியும் இமையவர் அழுது மலரடி

.. .. இணையில் விழவிடம் .. அமுதேபோல்

.. இனிது பருகிய மிடறு தனிலிருள்

.. .. இலகு மணிதனை .. உடையானே

கரிய குழலினில் நறவ மலரணி

.. .. கலவ மயிலன .. உமைபாகா

.. கமல மலரன நயனம் இடுமரி

.. .. கருது திகிரியை .. அருள்வோனே

விரியு(ம்) மலர்மலி பொழிலில் அளியினம்

.. .. விரவும் அணிநகர் .. திருவீழி

.. மிழலை தனிலடி பரவும் அடியவர்

.. .. வினைகள் அறவருள் .. பெருமானே.


பதம் பிரித்து:

பெரிய உலகினில் அடையும் இடர் மிகு

.. .. பிறவி அவை முடிவு .. இல ஆகப்

.. பிழைகள் புரிவது பிரிய, மண(ம்)மலி

.. .. பிணையல் உனது அடி .. இடுவேனோ?

இரியும் இமையவர் அழுது மலரடி

.. .. இணையில் விழ, விடம் .. அமுதே போல்

.. இனிது பருகிய மிடறுதனில் இருள்

.. .. இலகு மணிதனை .. உடையானே;

கரிய குழலினில் நறவ-மலர் அணி

.. .. கலவ-மயில் அன .. உமைபாகா;

.. கமல-மலர் அன நயனம் இடும் அரி

.. .. கருது திகிரியை .. அருள்வோனே;

விரியு(ம்) மலர் மலி பொழிலில் அளியினம்

.. .. விரவும் அணி-நகர் .. திருவீழி-

.. மிழலைதனில் அடி பரவும் அடியவர்

.. .. வினைகள் அற அருள் .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

பெரிய உலகினில் அடையும் இடர் மிகு பிறவி அவை முடிவு இகப் பிழைகள் புரிவது பிரிய - இந்தப் பெரிய நிலவுலகில் அடைகின்ற துன்பம் மிகுந்த பிறவிகள் முடிவின்றித் தொடரும்படி தீவினை செய்வது நீங்க; (பிரிதல் - நீங்குதல்; விட்டுவிலகுதல்);

மண(ம்) மலி பிணையல் உனது அடி இடுவேனோ - வாசமலர்-மாலைகளை உன் திருவடியில் இடுவேனோ? அப்படி வணங்க அருள்வாயாக; (பிணையல் - மலர்மாலை);

இரியும் இமையவர் அழுது மலரடி-இணையில் விழ, விடம் அமுதே போல் இனிது பருகிய மிடறுதனில் இருள் இலகு மணிதனை உடையானே - அஞ்சி ஓடிய தேவர்கள் அழுது உன் மலர்த்திருவடிகள் இரண்டில் விழுந்து இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை அமுதம்போல் உண்டு, கண்டத்தில் கருமை திகழும் மணியை உடையவனே; (சம்பந்தர் தேவாரம் - 3.121.4 - "ஒளிதிகழ் மேனி கருகினாரெல்லாம் கைதொழுதேத்தக் கடலுள் நஞ்சமுதமா வாங்கிப் பருகினார் போலும்");

கரிய குழலினில் நறவ-மலர் அணி கலவ-மயில் அன உமைபாகா - கருங்கூந்தலில் வாசமலர்களை அணிந்த, கலாபமயில் போன்ற உமையை ஒரு பாகமாக உடையவனே; (நறவம் - தேன்; வாசனை); (கலவம் - கலாபம் - தோகை);

கமல-மலர் அன நயனம் இடும் அரி கருது திகிரியை அருள்வோனே - தாமரைமலர் போன்ற கண்ணை இடந்து இட்டு வழிபட்ட திருமால் விரும்பிய சக்கராயுதத்தை அருளியவனே; (திகிரி - சக்கரம்); (* இது திருவீழிமிழலைத் தலவரலாற்றுச் செய்தி);

விரியு(ம்) மலர் மலி பொழிலில் அளியினம் விரவும் அணி நகர் திருவீழிமிழலைதனில் - விரிகின்ற மலர்கள் நிறைந்த சோலையில் வண்டினங்கள் பொருந்துகின்ற அழகிய திருவீழிமிழலையில்; (அளி - வண்டு);

டி பரவும் அடியவர் வினைகள் அறருள் பெருமானே - திருவடியைத் துதிக்கும் பக்தர்களது வினைகள் தீர அருள்கின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment