Thursday, May 28, 2026

P.497 - வழுவூர் - இளங்கிளை நாயகி

2020-02-12

P.497 - வழுவூர்

--------------

(சந்த வஞ்சிவிருத்தம் - தானன தானன தனதான - சந்தம்;

விளம் விளம் புளிமாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.1 - "இன்குரல் இசைகெழும் யாழ்முரலத்")


முற்குறிப்பு: இந்தப் பதிகத்தில் அடியீற்றுச்சீர் "தனதான" என்ற சந்தம். (மேலே சுட்டிய சம்பந்தர் தேவாரத்தில் அடியீற்றுச்சீர் "தானதனா" என்ற சந்தம்).

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

இளங்கிளை நாயகி இடமானான்

களங்கறை திகழிறை கழல்பேணி

உளங்குளிர் அடியவர் உறுமூராம்

வளங்கிளர் குளமணி வழுவூரே.


இளங்கிளை நாயகி இடம் ஆனான் - இளங்கிளை நாயகி என்ற திருநாமத்தை உடைய உமையை இடப்பாகமாக உடையவன்; (* இளங்கிளை நாயகி - இத்தலத்து இறைவி திருநாமம்);

களம் கறை திகழ் இறை கழல் பேணி உளம் குளிர் அடியவர் உறும் ஊர் ஆம் - கண்டத்தில் கறை திகழும் இறைவனது திருவடியைப் போற்றி உள்ளம் மகிழும் பக்தர்கள் அடையும் ஊர் ஆவது; (களம் - கழுத்து); (உறுதல் - அடைதல்);

வளம் கிளர் குளம் அணி வழுவூரே - வளமும் அழகும் மிகுந்த குளம் திகழும் வழுவூர்; (கிளர்தல் - மிகுதல்; விளங்குதல்);


2)

மானையும் ஏந்திய மணிகண்டன்

தேனலர் சூடிய சிவனெம்மான்

ஆனையை உரிசெய்த அரனூராம்

வானணை கோபுர வழுவூரே.


மானையும் ஏந்திய மணிகண்டன் - (மழு, சூலம், உடுக்கை முதலியவற்றோடு) மானையும் கையில் ஏந்திய நீலகண்டன்; (மானையும் - உம் - எச்சவும்மை);

தேன்-அலர் சூடிய சிவன் எம்மான் - தேன்மலர்களைச் சூடிய சிவன், எம் தலைவன்;

ஆனையை உரிசெய்த அரன் ஊர் ஆம் - யானையைத் தோலுரித்த ஹரன் உறையும் ஊர் ஆவது;

வான் அணை கோபுர வழுவூரே - வானத்தைச் சென்றடையுமாறு உயர்ந்த (/ மேகம் அடைகின்ற உயர்ந்த) கோபுரம் திகழும் வழுவூர்; (வான் - ஆகாயம்; மேகம்);


3)

உணவிடும் எனமிக உழல்தேவன்

கணைதொடு மதனுடல் பொடிசெய்தான்

பண(ம்)மதி சூடிய பரனூராம்

மண(ம்)மலி பொழிலணி வழுவூரே.


"உணவு இடும்" என மிக உழல் தேவன் - (கையில் மண்டையோட்டை ஏந்தி) "உணவு இடுங்கள்" என்று பிச்சைக்குத் திரியும் தேவன்;

கணை தொடு மதன் உடல் பொடிசெய்தான் - மலர்க்கணையை ஏவிய மன்மதனது உடலைச் சாம்பலாக்கியவன்; (மதன் - காமன்);

பணம் மதி சூடிய பரன் ஊர் ஆம் - நாகத்தையும் சந்திரனையும் சூடிய பரமன் உறையும் ஊர் ஆவது; (பணம் - பாம்பின் படம்; நாகம்);

மண(ம்)மலி பொழில் அணி வழுவூரே - மணம் கமழும் சோலை திகழும் வழுவூர்;


4)

எரியன நிறமணி எழில்மேனிப்

பெரியவன் இணையிலி பிணியில்லான்

கரியதன் அதளுரி கரனூராம்

வரியளி அறைபொழில் வழுவூரே.


எரி அன நிறம் அணி எழில் மேனிப் பெரியவன் - தீப் போன்ற நிறம் திகழும் அழகிய திருமேனியை உடைய பெரியவன்; (எரி - நெருப்பு); (அன - அன்ன - போன்ற);

இணையிலி - ஒப்பற்றவன்;

பிணி இல்லான் - பந்தங்களும் நோய்களும் இல்லாதவன்;

கரியதன் அதள் உரிரன் ஊர் ஆம் - யானையின் தோலை உரித்த கையினன் உறையும் தலம் ஆவது; (கரி - யானை); (அதள் - தோல்); (சம்பந்தர் தேவாரம் - 1.20.4 - "பெருவலியினன் நலமலிதரு கரன்");

வரி-அளி அறை பொழில் வழுவூரே - வரிவண்டுகள் ஒலிக்கின்ற சோலை திகழும் வழுவூர்; (அளி - வண்டு); (அறைதல் - ஒலித்தல்);


5)

புயலன மணியது புனைகண்டன்

அயிலுறு வேலினன் அடையாதார்

எயிலெரி சிலைவளை இறையூராம்

வயலிடைக் கயலுகள் வழுவூரே.


புயல் அமணியது புனை-கண்டன் - மேகம் போன்ற கரிய மணியைக் கண்டத்தில் அணிந்தவன்; (புயல் - மேகம்); (அன - அன்ன - போன்ற);(மணியது - மணி; அது - பகுதிப்பொருள்விகுதி); (புனைதல் - அணிதல்);

அயில் உறு வேலினன் - கூர்மை மிக்க சூலத்தை ஏந்தியவன்; (அயில் - கூர்மை);

அடையாதார் எயில் எரி சிலை வளை இறை ஊர் ஆம் - பகைவர்களது முப்புரங்களை எரித்த வில்லை வளைத்த இறைவன் உறையும் தலம் ஆவது; (அடையாதார் - பகைவர்); (எயில் - கோட்டை); (சிலை - மலை; வில்);

வயலிடைக் கயல் உகள் வழுவூரே - வயலில் கயல்மீன்கள் பாய்கின்ற வழுவூர்; (உகளுதல் - தாவுதல்; ஓடித்திரிதல்);


6)

வெண்மழு வாளினன் விடையேறி

உண்மையில் உள்ளவன் ஒளிர்திங்கள்

அண்மையில் அரவணி அரனூராம்

வண்வயல் சூழ்தரு வழுவூரே.


வெண்மழு வாளினன் - ஒளிவீசும் மழுவை ஏந்தியவன்;

விடையேறி - இடபவாகனன்;

உண்மையில் உள்ளவன் - என்றும் இருப்பவன்; மெய்ப்பொருள்;

ஒளிர்-திங்கள் அண்மையில் அரவு அணி அரன் ஊர் ஆம் - ஒளிர்கின்ற சந்திரனுக்குப் பக்கத்தில் பாம்பை அணிந்த ஹரன் உறையும் தலம் ஆவது; (அண்மை - சமீபம்);

வண்வயல் சூழ்தரு வழுவூரே - வளம் மிக்க வயல் சூழ்ந்த வழுவூர்; (வண்மை - வளம்);


7)

மழவிடை ஊர்தியன் மணிநீரை

அழலன சடையிடை அடையண்ணல்

அழகிய மிடறுடை அரனூராம்

மழைநுழை பொழிலணி வழுவூரே.


மழவிடை ஊர்தியன் - இளைய எருதினை வாகனமாக உடையவன்;

மணிநீரை அழல் அன சடையிடை அடை அண்ணல் - தெளிந்த கங்கையாற்றைத் தீப் போன்ற செஞ்சடையில் அடைத்த பெருமான்; (மணிநீர் - பளிங்கு போலத் தெளிந்த நீர்); (அழல் - தீ);

அழகிய மிடறுடை அரன் ஊர் ஆம் - அழகிய நீலகண்டத்தை உடைய ஹரன் உறையும் தலம் ஆவது; (மிடறு - கண்டம்);

மழை நுழை பொழில் அணி வழுவூரே - மேகம் நுழைகின்ற சோலை சூழ்ந்த வழுவூர்; (மழை - மேகம்);


8)

கண்டிகழ் நெற்றியன் கயிலாயம்

பண்டிகழ் தசமுகன் படவூன்றிப்

பண்டிகழ் இசைமகிழ் பரனூராம்

வண்டறை பொழிலணி வழுவூரே.


கண் திகழ் நெற்றியன் கயிலாயம் - நெற்றிக்கண்ணனது கயிலைமலையை; (கண் + திகழ் = கண்டிகழ்);

பண்டு இகழ் தசமுகன் பட ஊன்றிப் - முன்பு இகழ்ந்து பேசிப் பெயர்த்து எறிய முயன்ற பத்துத்தலை இராவணனை அவன் மிகவும் வருந்தும்படி ஒரு விரலை ஊன்றி நசுக்கி; (பண்டு - பண்டை - முன்னாள்); (தசமுகற் பட ஊன்றிப் - தசமுகனைப் பட ஊன்றி; இரண்டாம்வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் ஈற்று ன் ஒற்று ற் என்று திரியும்);

பண் திகழ் இசை மகிழ் பரன் ஊர் ஆம் - (பின் இராவணன் பாடிய) பண் பொருந்திய இனிய கீதத்தை விரும்பிக் கேட்ட பரமன் உறையும் தலம் ஆவது; (பண் + திகழ் = பண்டிகழ்);

வண்டு அறை பொழில் அணி வழுவூரே - வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த வழுவூர்;


9)

பதியென அயனரி பகர்நாள்தாம்

துதிசெய ஓங்கிய சுடர்வண்ணன்

அதிசயன் நதிபுனை அரனூராம்

மதிதொடு பொழிலணி வழுவூரே.


"பதி" ன அயன் அரி பகர்-நாள் தாம் துதிசெய ஓங்கிய சுடர்வண்ணன் - "நானே தலைவன்" என்று பிரமனும் திருமாலும் சொல்லி வாதுசெய்த அன்று அவர்கள் இருவரும் துதிக்கும்படி எல்லையின்றி ஓங்கிய ஜோதி-வடிவினன்; (பகர்தல் - சொல்தல்); (தாம் - அவர்);

அதிசயன், நதி புனை அரன் ஊர் ஆம் - அதிசயனும் கங்கையைச் சடையில் அணிந்தவனுமான ஹரன் உறையும் தலம் ஆவது; (சம்பந்தர் தேவாரம் - 3.23.3 - "ஐயன்நல் லதிசயன்");

மதி தொடு பொழில் அணி வழுவூரே - சந்திரன் தொடுமாறு உயர்ந்த சோலை சூழ்ந்த வழுவூர்;


10)

வஞ்சகர் சொல்நெறி மதியேன்மின்

நெஞ்சினில் அன்பொடு நினைவார்க்கே

அஞ்சல ளித்தருள் அரனூராம்

மஞ்சடை பொழிலணி வழுவூரே.


வஞ்சகர் சொல் நெறி மதியேன்மின் - வஞ்சகர்கள் சொல்லும் மார்க்கங்களை நீங்கள் மதிக்கவேண்டா; (சொன்னெறி - சொல் நெறி); (மின் - ஏவற்பன்மை விகுதி);

நெஞ்சினில் அன்பொடு நினைவார்க்கே அஞ்சல் அளித்தருள் அரன் ஊர் ஆம் - மனத்தில் அன்போடு நினைக்கின்ற பக்தர்களுக்கு அபயம் அளித்தருளும் ஹரன் உறையும் தலம் ஆவது;

மஞ்சு அடை பொழில் அணி வழுவூரே - மேகம் அடைகின்ற சோலை சூழ்ந்த வழுவூர்; (மஞ்சு - மேகம்);


11)

காமனைக் காய்ந்தவன் கழல்போற்றித்

தூமலர் இட்டவர் துயர்தீர்த்துச்

சேமம ளித்தருள் சிவனூராம்

மாமதில் சூழ்தரு வழுவூரே.


காமனைக் காய்ந்தவன் கழல் போற்றித் - மன்மதனைச் சுட்டெரித்தவனது திருவடியைப் போற்றித்;

தூ-மலர் இட்டவர் துயர் தீர்த்துச் - தூய மலர்களை இட்டு வணங்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து;

சேமம் அளித்தருள் சிவன் ஊர் ஆம் - அவர்களைக் காக்கின்ற சிவன் உறையும் தலம் ஆவது; (சேமம் - க்ஷேமம் - நல்வாழ்வு; இன்பம்; காவல்);

மா மதில் சூழ்தரு வழுவூரே - பெரிய மதிலால் சூழப்பெற்ற வழுவூர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment