Tuesday, May 26, 2026

P.490 - பொது - ஈடிலாதவன்

2019-11-09

P.490 - பொது - "சொல்லைக் கடந்த சுகம்"

-----------------

(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பு )

(அப்பர் தேவாரம் - 5.2.1 - "பனைக்கை மும்மத வேழம்")

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

ஈடி லாதவன் ஈரச் சடையினன்

வாடி வாழ்த்து மதிதனை வார்சடைச்

சூடி சொல்லைக் கடந்த சுகம்பெற

நாடி நெஞ்சே நினையவன் நாமமே.


டு இலாதவன் - இணையற்றவன்;

ஈரச் சடையினன் - கங்கையைச் சடையில் அணிந்தவன்;

வாடி வாழ்த்து மதிதனை வார்சடைச் சூடி - தேய்ந்து வருந்தி வழிபட்ட சந்திரனை நீள்சடையில் சூடியவன்;

சொல்லைக் கடந்த சுகம் பெற, நாடி நெஞ்சே நினை அவன் நாமமே - பேரின்பத்தைப் பெற, நெஞ்சமே, அவன் திருநாமத்தை விரும்பி எண்ணுவாயாக;


2)

காதில் ஓர்குழை காட்டிய கண்ணுதல்

தீதி லாமறை ஓதி எருதமர்

சோதி சொல்லைக் கடந்த சுகம்பெற

ஆதி நாமம் அதுநினை நெஞ்சமே.


காதில் ஓர் குழை காட்டிய கண்ணுதல் - ஒரு காதில் குழை அணிந்த நெற்றிக்கண்ணன்;

தீது இலா மறை ஓதி - குற்றமற்ற வேதங்களை ஓதியவன்;

எருது அமர் சோதி - இடபவாகனத்தை விரும்பிய ஒளிவடிவினன்;

சொல்லைக் கடந்த சுகம் பெற, ஆதி நாமம் அது நினை நெஞ்சமே - பேரின்பம் பெற, நெஞ்சமே, ஆதிமூர்த்தியான ஈசனது திருநாமத்தை நினைவாயாக;


3)

தாயின் நல்லவன் தன்னடி யார்கட்குத்

தீயின் வண்ணன் திகழ்சடை ஆறணி

தூயன் சொல்லைக் கடந்த சுகம்பெற

நேய மாகி நினையவன் நாமமே.


தாயின் நல்லவன் தன் அடியார்கட்குத் - தன் பக்தர்களுக்குத் தாயைவிட நன்மை செய்பவன்;

தீயின் வண்ணன் - தீப் போன்ற நிறமுடைய திருமேனியன்;

திகழ்-சடை ஆறு அணி தூயன் - விளங்கும் சடையில் கங்கையை அணிந்த பரிசுத்தன்;

சொல்லைக் கடந்த சுகம் பெற, நேயமாகி நினை அவன் நாமமே - பேரின்பம் பெற, நெஞ்சமே, அப்பெருமானது திருநாமத்தை அன்போடு நினைவாயாக;


4)

தக்கன் வேள்வியை அன்று தகர்த்தருள்

முக்கண் மூர்த்தி முடிமிசைப் பாம்பணி

சொக்கன் சொல்லைக் கடந்த சுகம்பெற

நக்கன் நாமத்தை நாளும் நினைநெஞ்சே.


தக்கன் வேள்வியை அன்று தகர்த்தருள் முக்கண் மூர்த்தி - தக்கன் செய்த அவவேள்வியை முன்பு அழித்த முக்கட்பெருமான்;

முடிமிசைப் பாம்பு அணி சொக்கன் - தலைமேல் பாம்பை அணிந்த அழகன்;

சொல்லைக் கடந்த சுகம் பெற, நக்கன் நாமத்தை நாளும் நினை நெஞ்சே - பேரின்பம் பெற, நெஞ்சமே, திகம்பரனான ஈசனது திருநாமத்தைத் தினமும் நினைவாயாக;


5)

பித்தன் என்ற பெயரும் உடையவன்

நித்தன் நெற்றியில் நேத்திரன் நீறணி

சுத்தன் சொல்லைக் கடந்த சுகம்பெற

அத்தன் நாமம் அதுநினை நெஞ்சமே.


பித்தன் என்ற பெயரும் உடையவன் - பித்தன் (பேரருளாளன்) என்ற பெயரும் உடையவன்;

நித்தன் - அழ்விவற்றவன்;

நெற்றியில் நேத்திரன் - நெற்றிக்கண்ணன்;

நீறு அணி சுத்தன் - திருநீற்றைப் பூசிய தூயன்;

சொல்லைக் கடந்த சுகம் பெற, அத்தன் நாமம் அது நினை நெஞ்சமே - பேரின்பம் பெற, நெஞ்சமே, நம் தந்தையான ஈசனது திருநாமத்தை நினைவாயாக;


6)

காலன் மார்பில் கழலால் உதைத்தவன்

வேலன் தாதை விடையினன் மூவிலைச்

சூலன் சொல்லைக் கடந்த சுகம்பெற

ஆலன் நாமம் அதுநினை நெஞ்சமே.


காலன் மார்பில் கழலால் உதைத்தவன் - காலனை மார்பில் திருவடியால் உதைத்தவன்;

வேலன் தாதை - முருகனுக்குத் தந்தை;

விடையினன் - இடபவாகனன்;

மூவிலைச் சூலன் - திரிசூலன்;

சொல்லைக் கடந்த சுகம் பெற, ஆலன் நாமம் அது நினை நெஞ்சமே - பேரின்பம் பெற, நெஞ்சமே, கல்லாலமரத்தின்கீழ் இருக்கும் ஈசனது திருநாமத்தை நினைவாயாக;


7)

வேழந் தன்னை உரித்தவன் விண்ணவர்

வாழ வல்விடம் உண்டவன் வன்றொண்டர்

தோழன் சொல்லைக் கடந்த சுகம்பெற

ஏழை பங்கன்பேர் எண்ணு மடநெஞ்சே.


வேழம்-தன்னை உரித்தவன் - யானையின் தோலை உரித்தவன்;

விண்ணவர் வாழ வல்விடம் உண்டவன் - தேவர்கள் வாழுமாறு கொடிய விஷத்தை உண்டவன்;

வன்-தொண்டர் தோழன் - சுந்தரருக்குத் தன்னைத் தோழனாகத் தந்தவன்;

சொல்லைக் கடந்த சுகம் பெற, ஏழைபங்கன் பேர் எண்ணு மடநெஞ்சே - பேரின்பம் பெற, நெஞ்சமே, உமைபங்கனது திருநாமத்தை நினைவாயாக;


8)

மடமை யால்மலை பேர்த்தவன் சென்னிபத்(து)

அடர ஊன்றிய அண்ணல் அராப்புனை

கடவுள் சொல்லைக் கடந்த சுகம்பெறச்

சுடலை நீற்றன்பேர் சொல்லு மடநெஞ்சே.


மடமையால் மலை பேர்த்தவன் சென்னி பத்து அடர ஊன்றிய அண்ணல் - ஆணவத்தால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்துத்தலைகளும் நெரியும்படி திருப்பாதவிரலை ஊன்றிய தலைவன்; (5.44.11 - "விடலையாய் விலங்கல் எடுத்தான் முடி அடர ஓர்விரல் ஊன்றிய");

அராப்புனை

கடவுள் - இறைவன்;

சொல்லைக் கடந்த சுகம் பெறச், சுடலை-நீற்றன் பேர் சொல்லு மடநெஞ்சே - பேரின்பம் பெற, நெஞ்சமே, சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய ஈசனது திருநாமத்தைச் சொல்வாயாக;


9)

பங்க யத்தினன் பன்னகப் பள்ளியான்

எங்கும் நேடியும் எய்தற் கரியதோர்

துங்கன் சொல்லைக் கடந்த சுகம்பெறச்

சங்க ரன்பேர் தனைநினை நெஞ்சமே.


பங்கயத்தினன் - தாமரைமேல் இருக்கும் பிரமன்;

பன்னகப் பள்ளியான் - பாம்பைப் படுக்கையாக உடைய திருமால்;

எங்கும் நேடியும் எய்தற்கு அரியதோர் துங்கன் - அவ்விருவரும் மண்ணை அகழ்ந்து தேடியும் வானில் பறந்துசென்று தேடியும் அடிமுடி அடைய ஒண்ணாத மேலானவன்; (நேடுதல் - தேடுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.18.4 - "குஞ்சரத் தும்பியது உரிசெய்த துங்கர்");

சொல்லைக் கடந்த சுகம் பெறச், சங்கரன்-பேர்தனை நினை நெஞ்சமே - பேரின்பம் பெற, நெஞ்சமே, சங்கரனது திருநாமத்தை நினைவாயாக;


10)

நாளும் பொய்யுரை நாணிலார்க் கன்பிலான்

வேளை வெண்பொடி செய்த விமலனெண்

தோளன் சொல்லைக் கடந்த சுகம்பெறக்

காள கண்டன்பேர் நீள நினைநெஞ்சே.


நாளும் பொய் உரை நாண் இலார்க்கு அன்பு இலான் - எந்நாளும் பொய்களையே பேசுகின்ற வெட்கமற்றவர்களுக்கு அன்பு இல்லாதவன்;

வேளை வெண்பொடி செய்த விமலன் - மன்மதனைச் சாம்பலாக்கிய தூயன்;

எண்தோளன் - எட்டுப் புஜங்களை உடையவன்;

சொல்லைக் கடந்த சுகம் பெறக், காளகண்டன் பேர் நீள நினை நெஞ்சே - பேரின்பம் பெற, நெஞ்சமே, நீலகண்டனது திருநாமத்தை இடைவிடாமல் நினைவாயாக; (சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "நீள நினைந்தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்");


11)

ஏல வார்குழல் ஏந்திழை பங்கினன்

பால னார்பயம் பாற அருள்கால

காலன் சொல்லைக் கடந்த சுகம்பெற

நீல கண்டன்பேர் நீள நினைநெஞ்சே.


ஏல-வார்-குழல் ஏந்திழை பங்கினன் - மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.61.1 - "ஏல வார்குழலாள் உமைநங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற காலகாலனை");

பாலனார் பயம் பாற அருள் காலகாலன் - மார்க்கண்டேயரது அச்சம் நீங்கும்படி அருளிய காலகாலன்; (பாறுதல் - அழிதல்);

சொல்லைக் கடந்த சுகம் பெற, நீலகண்டன் பேர் நீள நினை நெஞ்சே - பேரின்பம் பெற, நெஞ்சமே, நீலகண்டனது திருநாமத்தை இடைவிடாமல் நினைவாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment