Tuesday, May 26, 2026

P.492 - பழனம் - நிசியில் நடமாடிய

2019-11-09

P.492 - பழனம்

(திருவையாறு அருகே உள்ள தலம்)

--------------

(சந்த வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")


1)

நிசியில் நடமா டியநாதா

சசியைச் சடைமேல் உடையானே

பசிதீர் வயல்சூழ் பழனத்தாய்

நசியா வினைதீர்த் தருளாயே.


நிசியில் நடம் ஆடிய நாதா - இருளில் திருக்கூத்து ஆடும் நாதனே;

சசியைச் சடைமேல் உடையானே - சந்திரனைச் சடைமேல் தரித்தவனே;

பசி தீர் வயல் சூழ் பழனத்தாய் - உலகின் பசியைத் தீர்க்கும் வயல் சூழ்ந்த திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே;

நசியா வினை தீர்த்து அருளாயே - என் தீரா-வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;


2)

பிறவா இறவாப் பெருமானே

நறவார் இதழிச் சடையானே

பறவைப் பொழில்சூழ் பழனத்தாய்

அறவா வினைதீர்த் தருளாயே.


பிறவா இறவாப் பெருமானே - பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமானே;

நறவு ஆர் இதழிச் சடையானே - தேன் பொருந்திய கொன்றைமலரைச் சடையில் அணிந்தவனே; (நறவு - தேன்); (இதழி - கொன்றை);

பறவைப்-பொழில் சூழ் பழனத்தாய் - பறவைகள் நிறைந்த சோலை சூழ்ந்த திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே;

அறவா - அறவடிவினனே;

வினை தீர்த்து அருளாயே - என் வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;


3)

குழையோர் செவியிற் புனைவானே

நிழலார் மழுவாட் படையானே

பழமார் பொழில்சூழ் பழனத்தாய்

பழவல் வினைதீர்த் தருளாயே.


குழை ஓர் செவியில் புனைவானே - ஒரு காதில் குழையை அணிந்தவனே;

நிழல் ஆர் மழுவாள்-படையானே - ஒளி திகழும் மழுவாயுதத்தை ஏந்தியவனே;

பழம் ஆர் பொழில் சூழ் பழனத்தாய் - பழங்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே;

பழ-வல்வினை தீர்த்து அருளாயே - என் பழைய வலிய வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;


4)

அடையார் புர(ம்)மூன் றவைதீயில்

உடன்வெந் தறவோர் கணையுய்த்தாய்

படர்கா விரிநீர்ப் பழனத்தாய்

தொடர்வல் வினைதீர்த் தருளாயே.


அடையார் புர(ம்) மூன்று அவை தீயில் உடன் வெந்து அற ஓர் கணை உய்த்தாய் - பகைவர்களது முப்புரங்களும் நெருப்பில் ஒரே சமயத்தில் உடனே வெந்து அழியும்படி ஒரு கணையை ஏவியவனே;

படர்-காவிரிநீர்ப் பழனத்தாய் - பரவிய காவிரியின் நீர் வளம் செய்கின்ற திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே;

தொடர்-வல்வினை தீர்த்து அருளாயே - என்னைத் தொடர்கின்ற வலிய வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;


5)

முனிவார் நமனைச் செறுகாலா

புனிதா புரிநூல் திகழ்மார்பா

பனியார் பொழில்சூழ் பழனத்தாய்

இனியாய் வினைதீர்த் தருளாயே.


முனிவு ஆர் நமனைச் செறு-காலா - கோபம் மிக்க காலனை அழித்த காலகாலனே; (முனிவு - கோபம்);

புனிதா - தூயனே;

புரிநூல் திகழ் மார்பா - முப்புரிநூலை மார்பில் அணிந்தவனே;

பனி ஆர் பொழில் சூழ் பழனத்தாய் - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே;

இனியாய் - இனியவனே;

வினை தீர்த்து அருளாயே - என் வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;


6)

தயிர்பால் இவையா டியநாதா

உயிராய் உடலாய்த் திகழ்தேவா

பயிரார் வயல்சூழ் பழனத்தாய்

துயரார் வினைதீர்த் தருளாயே.


தயிர் பால் இவை ஆடிய நாதா - தயிர் பால் இவற்றால் அபிஷேகம் மகிழ்ந்த நாதனே;

உயிராய் உடலாய்த் திகழ் தேவா - உயிரும் உடலும் ஆன தேவனே; (சுந்தரர் தேவாரம் - 7.1.7 - "ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய்");

பயிர் ஆர் வயல் சூழ் பழனத்தாய் - பயிர்கள் நிறைந்த வயல் சூழ்ந்த திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே;

துயர் ஆர் வினை தீர்த்து அருளாயே - துயரில் பிணிக்கின்ற வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக; (ஆர்த்தல் - கட்டுதல்);


7)

கண்ணார் நுதலாய் கயிலாயா

அண்ணா மலையாய் அளிபாடும்

பண்ணார் பொழில்சூழ் பழனத்தாய்

திண்ணார் வினைதீர்த் தருளாயே.


கண் ஆர் நுதலாய் - நெற்றிக்கண்ணனே; (நுதல் - நெற்றி);

கயிலாயா - கயிலைமலையானே;

அண்ணாமலையாய் - அண்ணாமலையானே;

அளி பாடும் பண் ஆர் பொழில் சூழ் பழனத்தாய் - வண்டுகள் பாடும் இசை பொருந்திய சோலை சூழ்ந்த திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே; (அளி - வண்டு);

திண் ஆர் வினை தீர்த்து அருளாயே - என் வலிய வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக; (திண் - வலிமை; உறுதி); (சம்பந்தர் தேவாரம் - 1.116.4 - "திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்");


8)

பத்துத் தலையான் பலகாலம்

கத்தித் தொழவோர் விரல்வைத்தாய்

பத்தர்க் கருளும் பழனத்தாய்

அத்தா வினைதீர்த் தருளாயே.


பத்துத்-தலையான் பல காலம் கத்தித் தொழ ஓர் விரல் வைத்தாய் - பத்துத்தலை அரக்கனான இராவணன் நெடுங்காலம் ஓலமிட்டு அழுது தொழும்படி ஒரு திருப்பாதவிரலை ஊன்றியவனே;

பத்தர்க்கு அருளும் பழனத்தாய் - அன்பர்களுக்கு அருளும் திருப்பழனப் பெருமானே;

அத்தா - தந்தையே;

வினை தீர்த்து அருளாயே - என் வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;


9)

பணியா அயன்மாற் கறிவொண்ணாத்

துணிமா மதியச் சடையானே

பணிமா லையினாய் பழனத்தாய்

பிணிவல் வினைதீர்த் தருளாயே.


பணியா அயன்-மாற்கு அறிவு ஒண்ணாத் - வழிபடாத பிரமன் திருமால் இவர்களால் அறியப்படாத; (மாற்கு - மால்+கு - திருமாலுக்கு); (அப்பர் தேவாரம் - இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை - 5.95.4 - "நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர் பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர் ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை மெய்யைக் காணலுற்றார் அங்கு இருவரே"); (சம்பந்தர் தேவாரம் - 1.3.9 - "இருவர்க்கு அறிவொண்ணா வடிவாகும்");

துணி-மா-மதியச் சடையானே - சடைமேல் நிலாத்துண்டத்தை அணிந்தவனே; (துணி - துண்டம்);

பணி-மாலையினாய் - பாம்பை மாலையாக அணிந்தவனே; (பணி - நாகம்);

பழனத்தாய் - திருப்பழனப் பெருமானே;

பிணி வல்வினை தீர்த்து அருளாயே - என் நோய்களையும் என்னைப் பிணித்துள்ள வலிய வினையையும் தீர்த்து அருள்வாயாக; (பிணி வல்வினை - 1. பிணியும் வல்வினையும் (உம்மைத்தொகை); 2. பிணித்துள்ள வல்வினை (வினைத்தொகை));


10)

நாகா பரணா அருளென்னா

ஆகா தவருக் கிலனானாய்

பாய்கா விரிநீர்ப் பழனத்தாய்

போகா வினைதீர்த் தருளாயே.


"நாகாபரணா அருள்" என்னா ஆகாதவருக்கு இலன் ஆனாய் - "நாகாபரணனே, அருள்வாயாக" என்று போற்றி வழிபடாத வீணர்களுக்கு அருள் இல்லாதவனே; (ஆகாதவன் - பகைவன்; பிரயோஜனம் அற்றவன்);

பாய் காவிரிநீர்ப் பழனத்தாய் - காவிரிநீர் பாயும் திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே;

போகா வினை தீர்த்து அருளாயே - தீரா வினையையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;


11)

தவளப் பொடிபூ சியமார்பா

துவளங் கொடிமா தொருகூறா

பவளச் சடையாய் பழனத்தாய்

அவலப் பிணிதீர்த் தருளாயே.


தவளப்-பொடி பூசிய மார்பா - வெண்ணீற்றை மார்பில் பூசியவனே; (தவளம் - வெண்மை);

துவள் அம் கொடி மாது ஒரு கூறா - துவள்கின்ற அழகிய கொடி போன்ற உமையை ஒரு கூறாக உடையவனே; (அம் - அழகு);

பவளச்-சடையாய் - பவளம் போன்ற செஞ்சடையானே;

பழனத்தாய் - திருப்பழனப் பெருமானே;

அவலப்-பிணி தீர்த்து அருளாயே - என் துன்பப் பிணியைத் தீர்த்து அருள்வாயாக; (அவலம் - துன்பம்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment