2019-07-16
T. 222 - அறையணிநல்லூர் - பழவினை எல்லாம்
(அரகண்டநல்லூர். இத்தலம் திருக்கோவலூர் அருகுள்ளது)
-----------------
(வண்ணவிருத்தம்;
தனதன தய்யா .. தனதான)
பழவினை எல்லாம் .. அடராமுன்
.. பலமலர் கையால் .. இடுவேனோ
நிழலுடை வையார் .. மழுவாளா
.. நெடுவரை வில்லா .. வளைவீரா
அழலன செய்யா .. அழகாரும்
.. அறையணி நல்லூர் .. உறைவோனே
மழவிடை ஐயா .. மறைநாவா
.. மதியணி செல்வா .. பெருமானே.
பதம் பிரித்து:
பழவினை எல்லாம் .. அடராமுன்
.. பலமலர் கையால் .. இடுவேனோ?
நிழலுடை வை ஆர் .. மழுவாளா;
.. நெடு-வரை வில்லா .. வளை-வீரா;
அழல் அன செய்யா; .. அழகு ஆரும்
.. அறையணிநல்லூர் .. உறைவோனே;
மழவிடை ஐயா; .. மறைநாவா;
.. மதி அணி செல்வா; .. பெருமானே.
பழவினை எல்லாம் அடராமுன் பலமலர் கையால் இடுவேனோ - பழவினையெல்லாம் என்னைச் சூழ்ந்து தாக்குவதன்முன் கையால் பல பூக்களை உன் திருவடியில் இட்டு வழிபடுவேனோ? (அப்படி வழிபடும் அன்பை அருள்வாயாக); (அடர்த்தல் - நசுக்குதல்; தாக்குதல்);
நிழலுடை வை ஆர் மழுவாளா - ஒளியும் கூர்மையும் பொருந்திய மழுவை ஏந்தியவனே; (நிழல் - ஒளி); (வை - கூர்மை);
நெடு-வரை வில்லா வளை வீரா - பெரிய மேருமலையை வில்லாக வளைத்த வீரனே; (வரை - மலை); (வில்லா - வில்லாக);
அழல் அன செய்யா - தீப் போல் செம்மேனி உடையவனே; (செய்யன் - சிவந்த நிறத்தை உடையவன்);
அழகு ஆரும் அறையணிநல்லூர் உறைவோனே - அழகிய அறையணிநல்லூரில் உறைகின்றவனே;
மழவிடை ஐயா - இளைய இடபத்தை வாகனமாக உடையவனே;
மறைநாவா - வேதங்களைப் பாடியருளியவனே;
மதி அணி செல்வா - சந்திரனை அணிந்த செல்வனே;
பெருமானே - பெருமானே;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment