2015-06-06
P.287 - விளமர் (விளமல்)
(திருவாரூர் அருகு உள்ள தலம்)
------------------
(வஞ்சித்துறை - மா விளம் - வாய்பாடு)
(திருவிருக்குக்குறள் அமைப்பு)
(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")
முற்குறிப்பு -
1. இப்பாடல்களில் 4 சிறிய அடிகள். அடியின் சிறுமை கருதி, இங்கே, ஒவ்வொரு வரியிலும் 2 அடிகள் இடப்பட்டுள்ளன.
2. படிப்போர்-வசதி கருதிச், சில இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.
1)
வெந்த நீறணி .. எந்தை விளமரை
முந்தை வினையறச் .. சிந்தி நெஞ்சமே.
வெந்த நீறு அணி - இச்சொற்றொடரைச் சிவபெருமானுக்கு அடைமொழியாகவும் கொள்ளலாம்; நெஞ்சுக்கு ஏவலாகவும் கொள்ளலாம்;
எந்தை விளமரை - எம் தந்தையான சிவபெருமான் உறையும் விளமரை;
முந்தை-வினை அறச் சிந்தி நெஞ்சமே - பழவினை தீர எண்ணு நெஞ்சே;
2)
நாயன் கையினில் .. தீயன் விளமரில்
தூயன் தாள்தொழ .. மாயும் வினைகளே.
நாயன் - தலைவன்; கடவுள்;
கையினில் தீயன் - கையில் நெருப்பை ஏந்தியவன்;
விளமரில் தூயன் - விளமரில் உறையும் பரிசுத்தன்;
தாள் தொழ மாயும் வினைகளே - அப்பெருமான் திருவடியை வணங்கினால் வினையெல்லாம் அழியும்;
3)
புடையிற் பெண்ணினன் .. விடையன் விளமரிற்
சடையன் தாள்தொழத் .. தடைகள் நீங்குமே.
புடையில் பெண்ணினன் - உமைபங்கன்; (புடை - பக்கம்);
விடையன் - இடபவாகனன்;
விளமரில் சடையன் - விளமரில் உறையும் சடையினன்;
தாள் தொழத் தடைகள் நீங்குமே - அப்பெருமான் திருவடியை வணங்கினால் எல்ளா இடையூறுகளும் நீங்கும்;
4)
நீரன் புரமெரி .. வீரன் விளமரில்
ஈரன் தாள்தொழச் .. சாரும் நன்மையே.
நீரன் - கங்காதரன்;
புரம் எரி வீரன் - முப்புரங்களை எரித்த வீரன்;
விளமரில் ஈரன் - விளமரில் உறையும் தயை உடையவன்; (ஈரம் - இரக்கம்; கருணை; அன்பு);
தாள் தொழச் சாரும் நன்மையே - அப்பெருமானுடைய திருவடியைத் தொழுதால் நன்மை வந்தடையும்; (சார்தல் - சென்றடைதல்; பொருந்தியிருத்தல்);
5)
ஆடல் வல்லவன் .. வேடன் விளமரிற்
சேடன் தாள்தொழ .. வீடும் வினைகளே.
ஆடல் வல்லவன் - கூத்தன்;
வேடன் - வேட்டுவன்; பல அருட்கோலங்கள் உடையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.13.5 - "துறையூர் வேடா");
விளமரில் சேடன் - விளமரில் உறையும் பெரியோன்; (சேடன் - உயர்ந்தவன்);
தாள் தொழ வீடும் வினைகளே - அப்பெருமான் திருவடியை வணங்கினால் வினையெல்லாம் அழியும்; (வீடுதல் - நீங்குதல்);
6)
பாந்தள் மாலையன் .. சாந்த நீறணி
வேந்தன் விளமரைச் .. சூழ்ந்து வாழ்மினே.
பாந்தள் மாலையன் - பாம்பை மாலை போல அணிந்தவன்; (பாந்தள் - பாம்பு);
சாந்த-நீறு அணி வேந்தன் - சந்தனம் போலத் திருநீற்றைப் பூசியவன்; (சாந்தம் - சந்தனம்);
விளமரைச் சூழ்ந்து வாழ்மினே - அப்பெருமான் உறையும் விளமரை வலம்செய்து வாழுங்கள்; (சூழ்தல் - சுற்றிவருதல்; பிரதட்சிணம் செய்தல்); (வாழ்தல் - செழித்திருத்தல்); (ஏ - ஈற்றசை);
7)
வாச மாருதம் .. வீசு விளமரில்
ஈசன் தாள்தொழ .. நாசம் வினைகளே.
வாச-மாருதம் வீசு விளமரில் - மணம் கமழும் தென்றல் வீசும் விளமரில் உறைகின்ற; (மாருதம் - காற்று - இங்கே தென்றல்);
ஈசன் தாள் தொழ நாசம் வினைகளே - ஈசனது திருவடியை வணங்கினால் வினையெல்லாம் அழியும்;
8)
குன்று பேர்த்தவன் .. கன்ற ஊன்றினான்
நின்ற விளமரைச் .. சென்று சூழ்மினே.
குன்று பேர்த்தவன் கன்ற ஊன்றினான் - கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனை அவன் வருந்தும்படி விரலை ஊன்றி நசுக்கியவன்; (பேர்த்தவற் கன்ற ஊன்றினான் - பேர்த்தவனைக் கன்ற ஊன்றினான்; இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் உள்ள ன் ஒற்று ற் ஒற்றாகத் திரியும்); (கன்றுதல் - வருந்துதல்; நோதல்; வாடுதல்);
நின்ற விளமரைச் சென்று சூழ்மினே - அப்பெருமான் நிலையாகத் தங்கிய விளமரைச் சென்றடைந்து வலம்செய்து வழிபடுங்கள்;
9)
எரியன் மாலயற் .. கரியன் விளமரிற்
பிரியன் தாள்தொழப் .. பிரியும் வினைகளே.
எரியன் - சோதி வடிவினன்;
மால்-அயற்கு அரியன் - திருமால் பிரமன் இவர்களால் அறிய ஒண்ணாதவன்;
விளமரில் பிரியன் - விளமரில் உறைகின்ற அன்பன்; (பிரியம் - அன்பு);
தாள் தொழப் பிரியும் வினைகளே - அப்பெருமானது திருவடியைத் தொழுதால் வினைகள் நீங்கும்; (பிரிதல் - விட்டுநீங்குதல்; கட்டு அவிழ்தல்);
10)
தூற்று வாயினர் .. கூற்றை விடுமினே
ஏற்றன் விளமரைப் .. போற்றி உய்ம்மினே.
தூற்று வாயினர் கூற்றை விடுமினே - மறைநெறியைப் பழித்துப் பேசுவோர்களது பேச்சைப் பொருட்படுத்தவேண்டா; பேச்சை நீங்குங்கள்;
ஏற்றன் - இடபவாகனன்;
விளமரைப் போற்றி உய்ம்மினே - அப்பெருமான் உறைகின்ற திருவிளமரைப் போற்றி உய்யுங்கள்; (அப்பர் தேவாரம் - 6.93.1 - "பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லாப் புலால்-துருத்தி போக்கலாமே"); (அப்பர் தேவாரம் - 5.43.10 - "நல்ல நல்லம் எனும்பெயர் நாவினால் சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே");
11)
எண்ணில் பெயரினன் .. கண்ணில் தீயினன்
அண்ணல் விளமரை .. நண்ணில் உய்தியே.
எண் இல் பெயரினன் - எண்ணற்ற திருநாமங்கள் உடையவன்;
கண்ணில் தீயினன் - நெற்றிக்கண்ணில் நெருப்பை உடையவன்; (கண்ணிற்றீயினன் = கண்ணில் தீயினன்);
அண்ணல் விளமரை நண்ணில் உய்தியே - அப்பெருமான் எழுந்தருளிய விளமரை அடைந்தால் (சென்று வழிபட்டால்) உய்வு பெறலாம்; (நண்ணில் - நண்ணினால் - அடைந்தால்); (உய்தி - உய்வு; ஈடேற்றம்); (அப்பர் தேவாரம் - 5.43.2 - "நல்லம் நண்ணுதல் நன்மையே");
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment