Wednesday, December 14, 2022

06.05.028 - இலிங்கபந்தம் - எங்கள் சிவன் என்று இயம்பு

06.05 – பலவகை

2015-03-30

06.05.028 - இலிங்கபந்தம் - எங்கள் சிவன் என்று இயம்பு

-------------------------------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


எங்கு முழிபுரங்க ளெரியச் சரம்பிடித்தா

னங்கையதில் மான்மறியன் மன்னனெவ்வ மானநசி

செங்கண்வெள் ளேறுகந்த சேவகன் வானதி

தங்குபிறங் குஞ்சடையா னெங்கள்சிவ னென்றியம்பு.


பதம் பிரித்து:

எங்கும் உழி புரங்கள் எரியச் சரம் பிடித்தான்

அங்கையதில் மான்மறியன்; மன்னன்; எவ்வமான நசி,

செங்கண்-வெள் ஏறு உகந்த சேவகன்; வானதி

தங்கு பிறங்குஞ் சடையான் எங்கள் சிவன் என்று இயம்பு.


எங்கும் உழி புரங்கள் எரியச் சரம் பிடித்தான் - எவ்விடமும் அலைந்த முப்புரங்கள் எரியும்படி கையில் ஒரு கணையைப் பற்றியவன்; (உழிதல் - அலைதல்); (சரம் - அம்பு);

அங்கையதில் மான்மறியன் - கையில் மான்கன்றை ஏந்தியவன்; (மறி - கன்று);

மன்னன் - தலைவன்;

எவ்வமான நசி, செங்கண்-வெள் ஏறு உகந்த சேவகன் - (பக்தர்களது) துன்பத்தை அழிக்கின்ற, சினம் மிகுந்த வெள்ளை இடபத்தை ஊர்தியாக விரும்பிய வீரன்; (எவ்வம் - துன்பம்); (நசித்தல் - அழித்தல்); (சேவகன் - வீரன்);

வானதி தங்கு பிறங்கும் சடையான் எங்கள் சிவன் என்று இயம்பு - கங்கை தங்குகின்ற, ஓளி விசும் சடையை உடையவன் எங்கள் சிவபெருமான் என்று சொல்; (வானதி - கங்கை); (பிறங்குதல் - விளங்குதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Tags:

பொது, வெண்பா, மடக்கு,

No comments:

Post a Comment