Friday, December 23, 2022

05.33 – நன்னிலம்

05.33 – நன்னிலம்

2015-05-24

நன்னிலம்

------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")


1)

வானவர்கள் தேனுருவில் வந்திக்கக் குறைதீர்த்தாய்

ஏனமருப் பணிமார்பா ஈரிருவர்க் காலதன்கீழ்

ஞானமருள் தேசிகனே நன்னிலத்துப் பெருங்கோயில்

தானமென நின்றவனே தமியேனைக் காத்தருளே.


* நன்னிலத்துத் தலபுராணச் செய்தி: விருத்திராசுரனின் துன்பம் தாளாமல் தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து வழிபட்ட தலம் ஆதலின் மதுவனம் என்று பெயர் பெற்றது;


வானவர்கள் தேன் உருவில் வந்திக்கக் குறை தீர்த்தாய் - தேவர்கள் தேனீ வடிவில் வந்து வழிபட அவர்களது குறையைத் தீர்த்தவனே; (தேன் - தேனீ); (வந்தித்தல் - வழிபடுதல்);

ஏன மருப்பு அணி மார்பா - பன்றிக்கொம்பை அணிந்த மார்பை உடையவனே; (ஏனம் - பன்றி); (மருப்பு - தந்தம்; கொம்பு);

ஈரிருவர்க்கு ஆல் அதன்கீழ் ஞானம் அருள் தேசிகனே - சனகாதியர் நால்வருக்குக் கல்லால மரத்தின்கீழ் உபதேசித்த குருவே;

நன்னிலத்துப் பெருங்கோயில் தானம் என நின்றவனே - நன்னிலத்துப் பெருங்கோயிலில் எழுந்தருளியவனே; (தானம் - ஸ்தானம் - உறைவிடம்; கோயில்); (நிற்றல் - தங்குதல்);

தமியேனைக் காத்தருளே - அடியேனைக் காத்தருள்க; (தமியேன் - துணையற்ற நான்);


2)

வாரியுமிழ் நஞ்சுகண்டு வானோர்கள் வந்திறைஞ்சக்

காரியலக் கண்டத்திற் கரந்தவனே காதலுடை

நாரியொரு கூறுடையாய் நன்னிலத்துப் பெருங்கோயில்

ஆரியனே அடிபோற்றும் அடியேனைக் காத்தருளே.


வாரி - கடல்;

கார் இயலக் கண்டத்தில் கரந்தவனே - கருமை திகழும்படி மிடற்றில் ஒளித்தவனே; (இயல்தல் - பொருந்துதல்; தங்குதல்);

காதலுடை நாரி - அன்புடைய உமையம்மை;

ஆரியன் - பெரியோன்; ஆசாரியன்;


3)

அங்கியினைக் கையேந்தி ஆடுகின்ற ஆரழகா

பொங்கரவும் வெண்மதியும் புனைந்தவனே கொம்பன்ன

நங்கையொரு பங்குடையாய் நன்னிலத்துப் பெருங்கோயில்

அங்கணனே அடிபோற்றும் அடியேனைக் காத்தருளே.


அங்கி - நெருப்பு;

ஆரழகன் - அரிய அழகையுடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.61.1 - "ஆதியன் ஆதிரையன் அன லாடிய ஆரழகன்");

கொம்பு அன்ன நங்கை - பூங்கொம்பு போன்ற உமையம்மை; (நங்கை - பெண்ணிற் சிறந்தவள்);

அங்கணன் - அருள்நோக்கம் உடையவன் - சிவன்;


4)

வம்புலவு கொன்றையினாய் வழிபட்ட சிலந்திதனைச்

செம்பியர்கோன் ஆக்குவித்தாய் சீராரும் சேவடியே

நம்பியவர்க் கன்புடையாய் நன்னிலத்துப் பெருங்கோயில்

எம்பெருமான் எருதேறீ இடர்தீர்த்துக் காத்தருளே.


வம்பு உலவு கொன்றையினாய் - மணம் கமழும் கொன்றையை அணிந்தவனே;

வழிபட்ட சிலந்திதனைச் செம்பியர்கோன் ஆக்குவித்தாய் - கோச்செங்கட்சோழ நாயனார் வரலாறு; (செம்பியன் - சோழன்);

சீர் ஆரும் சேவடியே நம்பியவர்க்கு அன்பு உடையாய் - சீர் மிக்க உன் சிவந்த திருவடிகளையே விரும்பியவர்களுக்கு அன்பு உடையவனே;

நன்னிலத்துப் பெருங்கோயில் எம்பெருமான் எருதேறீ - நன்னிலத்துப் பெருங்கோயிலில் எழுந்தருளிய எம்பெருமானே, இடபவாகனனே;

இடர் தீர்த்துக் காத்தருளே - துன்பத்தைத் தீர்த்து அடியேனைக் காத்தருள்க;


5)

சக்கரமாற் கீந்தவனே சடைமுடிமேற் கூவிளமும்

கொக்கிறகும் குராமலரும் குளிர்மதியும் அணிந்தவனே

நக்கெயில்கள் மூன்றெரித்தாய் நன்னிலத்துப் பெருங்கோயில்

முக்கணனே முடிவில்லா முன்வினையைத் தீர்த்தருளே.


சக்கரம் மாற்கு ஈந்தவனே - திருமாலுக்கு ஆழி அளித்தவனே;

கூவிளம் - வில்வம்;

கொக்கிறகு - கொக்கு வடிவுடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்;

நக்கு எயில்கள் மூன்று எரித்தாய் - சிரித்துக் கோட்டைகள் மூன்றை எரித்தவனே;


6)

கள்ளாரும் மலரிட்டுக் கைதொழுத வான்வாழப்

புள்ளூரும் மால்எரிகால் பொருந்துமொரு கணையெய்து

நள்ளார்ஊர் மூன்றெரித்தாய் நன்னிலத்துப் பெருங்கோயில்

வள்ளால்ஊர் விடையுடையாய் வல்வினையைத் தீர்த்தருளே.


கள் ஆரும் மலர் இட்டுக் கைதொழுத வான் வாழப் - தேன் பொருந்திய பூக்களைத் தூவிக் கைகூப்பி வணங்கிய தேவர்கள் உய்யும்படி;

புள் ஊரும் மால் எரி கால் பொருந்தும் ஒரு கணை எய்து - கருடவாகனனான திருமால், தீ, வாயு இம்மூவரும் பொருந்திய ஓர் அம்பைச் செலுத்தி;

நள்ளார் ஊர் மூன்று எரித்தாய் - பகைவர்களது முப்புரங்களையும் எரித்தவனே;

நன்னிலத்துப் பெருங்கோயில் வள்ளால் - நன்னிலத்துப் பெருங்கோயிலில் எழுந்தருளிய வள்ளலே; (வள்ளல் என்பது விளியில் வள்ளால் என்று ஆகும்);

ஊர் விடை உடையாய் - ஊர்கின்ற இடபத்தை உடையவனே; (ஊர்தல் - ஏறிநடத்துதல்);

வல்வினையைத் தீர்த்தருளே - என் வலிய வினையைத் தீர்த்து அருள்க;


7)

முகமாறு திகழ்குகனை முன்தந்த முக்கணனே

மகனாகச் சண்டிக்கு வரம்தந்த மணிகண்டா

நகையால்மும் மதிலட்டாய் நன்னிலத்துப் பெருங்கோயிற்

பகவாஎன் பல்பிறவிப் பழவினையைத் தீர்த்தருளே


குகன் - முருகன்;

மகன் ஆகச் சண்டிக்கு வரம் தந்த மணிகண்டா - சண்டேசுர நாயனாரை மகனாக ஏற்றுக்கொண்ட நீலகண்டனே;

நகையால் மும்மதில் அட்டாய் - சிரிப்பால் முப்புரங்களை எரித்தவனே;

பகவா - பகவனே; (பகவன் - பகவான் - கடவுள்); (சம்பந்தர் தேவாரம் - 2.24.4 - "நாகேச்சுர நகருள் பகவா என வல்வினை பற்றறுமே");

பல்பிறவிப் பழவினை - பல பிறவிகளிற் செய்த பழைய வினைகள்; பல பிறவிகளைத் தரும் பழைய வினைகள்;


8)

மஞ்சடையும் மலையசைத்த வாளரக்கன் வாய்பத்தும்

கெஞ்சியழு திசைபாடக் கேட்டிரங்கி வரமீந்தாய்

நஞ்சடைமா மிடற்றினனே நன்னிலத்துப் பெருங்கோயிற்

செஞ்சடையாய் பெரியோனே செய்வினையைத் தீர்த்தருளே.


மஞ்சு - மேகம்;

வாள் அரக்கன் - கொடிய அரக்கன் - இராவணன்;

நஞ்சு அடை மா மிடற்றினனே - விடத்தை அடைத்த அழகிய கண்டத்தை உடையவனே;

செய்வினை - செய்த வினைகள்;


9)

வரியரவை நாணாக வரைவில்லிற் கோத்தவனே

அரிபிரமற் கரியவனே அடியவர்க்கா மதுரைதனில்

நரிபரிசெய் நாடகனே நன்னிலத்துப் பெருங்கோயிற்

பெரியவனே பிஞ்ஞகனே பிணிதீர்த்துக் காத்தருளே.


வரியரவு - வரிகளை உடைய பாம்பு;

வரை-வில் - மலையால் ஆன வில்;

நாடகன் - கூத்தன்;

அடியவர்க்கா மதுரைதனில் நரி பரி செய் நாடகனே - நரிகளைக் குதிரைகள் ஆக்கியதைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க;

பிஞ்ஞகன் - சிவபெருமான் திருநாமங்களுள் ஒன்று; (தலைக்கோலம் உடையவன்);


10)

வெள்ளமடை சடையானே வெண்பொடியை அணியாராய்க்

கள்ளமுரை கசடர்களுக் கருளில்லாக் கண்ணுதலே

நள்ளிருளில் நடிப்பவனே நன்னிலத்துப் பெருங்கோயில்

உள்ளவனே உனையன்றி ஒருதெய்வம் உள்கேனே.


வெள்ளம் அடை சடையானே - கங்கைப்புனலை அடைத்த சடையினனே;

வெண்பொடியை அணியாராய்க் - திருநீற்றைப் பூசாதவர்களாகி;

கள்ளம் உரை கசடர்களுக்கு அருள் இல்லாக் கண்ணுதலே - பொய்களையும் வஞ்ச வார்த்தைகளையும் பேசுகின்ற கீழோர்க்கு அருள் இல்லாத நெற்றிக்கண்ணனே;

நள்ளிருளில் நடிப்பவனே - நள்ளிருளில் கூத்தாடுபவனே;

உனை அன்றி ஒரு தெய்வம் உள்கேன் - உன்னையன்றி வேறொரு தெய்வத்தை எண்ணமாட்டேன்;


11)

பெண்ணாணாய் இறப்போடு பிறப்புமிலாப் பெருமையினாய்

மண்ணோடு நீரெரிகால் வானானாய் ஒருகணையால்

நண்ணார்முப் புரமெரித்தாய் நன்னிலத்துப் பெருங்கோயில்

அண்ணாமுக் கண்ணாஎன் அருவினையைத் தீர்த்தருளே.


பெண் ஆண் ஆய் - பெண்ணும் ஆணும் ஆகி;

மண்ணோடு நீர் எரி கால் வான் ஆனாய் - நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்கள் ஆனவனே;

நண்ணார் - பகைவர்;

அண்ணா - தந்தையே என்ற திசைச்சொல்; அண்ணல் என்பதன் விளியுமாம். (அண்ணால் என்ற விளி அண்ணா என மருவிற்று);


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment