2015-04-07
M.065 - என்னிலை - வாரி - மடக்கு
-------------
என்னிலை என்றிங் கியம்பவும் வேண்டுமோ
என்னிலை நீயறிவாய் எம்பெருமான் - என்னிலை
வாரி விடமுண்டு வானோரைக் காத்தபரன்
வாரி வழங்கும் வரம்.
பதம் பிரித்து:
"என் இலை என்று இங்கு இயம்பவும் வேண்டுமோ;
என் நிலை நீ அறிவாய் எம்பெருமான்" என்னில், ஐ,
வாரி-விடம் உண்டு வானோரைக் காத்த பரன்
வாரி வழங்கும் வரம்.
சொற்பொருள்:
என்னிலை - 1. என் இலை; 2. என் நிலை; 3. என்னில், ஐ;
என் - 1. என்ன; எது அல்லது எதையெனப் பொருள்படும் இடைச்சொல்; 2. என்னுடைய;
இலை - இல்லை; இடைக்குறை விகாரம்;
என்னில் - என்றால்; என்று சொன்னால்;
ஐ - தலைவன்;
வாரி - 1. கடல்; 2. அள்ளி; (வாருதல் - அள்ளுதல்);
"என் இலை என்று இங்கு இயம்பவும் வேண்டுமோ; என் நிலை நீ அறிவாய் எம்பெருமான்" என்னில் - "என்ன இல்லை என்று சொல்லவும் வேண்டுமோ? எம்பெருமானே; என் நிலையை நீ அறிவாய்" என்று இறைஞ்சினால்;
ஐ - தலைவன்;
வாரி-விடம் உண்டு வானோரைக் காத்த பரன் - கடல்நஞ்சை உண்டு தேவர்களைக் காத்த பரமன்;
வாரி வழங்கும் வரம் - வரங்களை அள்ளிக் கொடுப்பான்; (வழங்கும் - வழங்குவான்; செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment