Tuesday, August 19, 2025

P.438 - பொது - எழுகூற்றிருக்கை - ஒன்றாய் நின்ற

2018-06-06

P.438 - பொது - எழுகூற்றிருக்கை

-------------------------------

(நிலைமண்டில ஆசிரியப்பா - 34 அடிகள்)

(சம்பந்தர் தேவாரம் - திருவெழுகூற்றிருக்கை - 1.128 - "ஓருரு வாயினை")

(அருணகிரிநாதர் - திருவெழுகூற்றிருக்கை - "ஓருரு வாகிய")

(எழுகூற்றிருக்கை - பெயர் விளக்கத்தைக் கீழே பிற்குறிப்பில் காண்க)


1

ஒன்றாய் நின்ற ஊழி முதல்வன்

121

ஒருபுறம் பாவையை உகந்தத னாலே

இருகூ றுடைய எழில்திகழ் ஒருவன்

12321

ஒன்று மனத்தால் இருதாள் தொழுத

முப்புரி நூல்மறை முனிவர் வாழ .. 5

இருநமன் மார்பில் ஓருதை செய்தான்

1234321

ஒருபொருள் அறியா இருடிகள் ஏவு

மும்மத நால்வாய் உரித்த முக்கணன்

இருநிலத் துறைவோர்க் கொருநெறி ஆனான்

123454321

ஒருபெரு மலைதனை நட்டுத் தேவரும் .. 10

அசுரரும் இருபுறம் நின்று முந்நீர்

கடைய வருவிடம் நாற்றிசை எரிக்க

அஞ்சு சுரரெலாம் நால்வேத நாவா

மும்மலம் இல்லாய் அருளென் றிருங்கழல்

ஏத்த அவர்களைக் காத்து விடத்தை .. 15

ஒருமணி போலணி திருமிடற் றெந்தை

12345654321

ஒற்றைக் கொம்பும் இருபெருஞ் செவியும்

உடையவன் தாதை மூவரின் மேலன்

நான்முகன் அஞ்சச் சிறையில் அடைத்த

அறுமுகன் அப்பன் அமரரை அஞ்சல் .. 20

என்று நான்மறைப் புரவித் தேர்மிசை

நின்று முப்புரம் எரிய இருவரை

வில்லால் ஒருகணை தொட்ட வீரன்

1234567654321

ஒருமலை பெயர்த்த இருந்திறல் அரக்கன்

மூன்றொடு நான்கு சுரங்கொடு பாடி .. 25

அஞ்செழுத் தோத விரலூன் றிறைவன்

ஆறு சூடி ஏழிசை கூட்டி

அறுபதம் அஞ்சுரும் பார்மலர்க் கொன்றையன்

நான்முகன் மூவடி இரந்தவன் இருவரும்

நேடிய ஒருதழற் பிழம்பாய் நின்றவன் .. 30


பொய்யருக் கில்லாப் புரிசடை அண்ணல்

செய்ய மேனியன் செந்தமிழ் பாடிக்

கைதொழு வாரைக் காத்தருள் வரதன்

மைதிகழ் கண்டன் மலரடி சரணே.


பதம் பிரித்து:

ஒன்றாய் நின்ற ஊழி முதல்வன்;

ஒரு-புறம் பாவையை உகந்ததனாலே

இருகூறு உடைய எழில் திகழ் ஒருவன்;

ஒன்று-மனத்தால் இருதாள் தொழுத

முப்புரிநூல் மறை-முனிவர் வாழ .. 5

இருநமன் மார்பில் ஓர் உதை செய்தான்;

ஒரு-பொருள் அறியா இருடிகள் ஏவு

மும்மத நால்வாய் உரித்த முக்கணன்;

இருநிலத்து உறைவோர்க்கு ஒருநெறி ஆனான்;

ஒரு பெருமலைதனை நட்டுத், தேவரும் .. 10

அசுரரும் இருபுறம் நின்று, முந்நீர்

கடைய, வரு-விடம் நாற்றிசை எரிக்க,

அஞ்சு சுரரெலாம் "நால்வேத நாவா;

மும்மலம் இல்லாய்; அருள்" என்று இருங்கழல்

ஏத்த, அவர்களைக் காத்து, விடத்தை .. 15

ஒரு மணி போல் அணி திருமிடற்று-எந்தை;

ஒற்றைக் கொம்பும் இரு-பெருஞ்-செவியும்

உடையவன் தாதை; மூவரின் மேலன்;

நான்முகன் அஞ்சச் சிறையில் அடைத்த

அறுமுகன் அப்பன்; அமரரை அஞ்சல் .. 20

என்று, நான்மறைப் புரவித் தேர்மிசை

நின்று, முப்புரம் எரிய இரு-வரை-

வில்லால் ஒரு கணை தொட்ட வீரன்;

ஒரு மலை பெயர்த்த இருந்-திறல் அரக்கன்

மூன்றொடு நான்கு சுரங்கொடு பாடி .. 25

அஞ்செழுத்து ஓத விரல் ஊன்று-இறைவன்;

ஆறு சூடி; ஏழிசை கூட்டி

அறுபதம் அஞ்-சுரும்பு ஆர்-மலர்க்-கொன்றையன்;

நான்முகன் மூவடி இரந்தவன் இருவரும்

நேடிய ஒரு தழற்-பிழம்பாய் நின்றவன்; .. 30


பொய்யருக்கு இல்லாப் புரி-சடை அண்ணல்;

செய்ய மேனியன்; செந்தமிழ் பாடிக்

கைதொழுவாரைக் காத்தருள் வரதன்;

மை திகழ் கண்டன் மலரடி சரணே.


ஒன்றாய் நின்ற ஊழி முதல்வன் - ஏகன் ஆகி ஊழிகளைப் படைத்த முதல்வன்;


ஒருபுறம் பாவையை உகந்ததனாலே இருகூறு உடைய எழில் திகழ் ஒருவன் - ஒரு பக்கத்தில் உமையை விரும்பியதால், திருமேனியில் இரண்டு கூறுகளை உடைய அழகு திகழ்கின்ற ஒப்பற்றவன்; (உகத்தல் - விரும்புதல்; மகிழ்தல்); ஒருவன் - ஒப்பற்றவன்);


ஒன்று-மனத்தால் இருதாள் தொழுத முப்புரிநூல் மறை-முனிவர் வாழ இருநமன் மார்பில் ஓர் உதை செய்தான் - மனம் ஒன்றி இருதிருவடிகளை வழிபட்ட அந்தணச் சிறுவரான மார்க்கண்டேயர் சிரஞ்சீவியாக வாழும்படி, கரிய நிறத்துக் காலனது மார்பில் ஓர் உதைகொடுத்தவன்; (ஒன்றுதல் - மனம் ஒருமைப்படுதல்); (இருமை - பெருமை; கருமை);


ஒருபொருள் அறியா இருடிகள் ஏவு மும்மத நால்வாய் உரித்த முக்கணன் - மெய்ப்பொருளை அறியாத தாருகவனத்து ரிஷிகள் ஏவிய மும்மத யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவன், மூன்று கண்களை உடையவன்; (நால்வாய் - தொங்கும் வாய் - யானை; நால்தல் - தொங்குதல்);

இருநிலத்து உறைவோர்க்கு ஒரு நெறி ஆனான் - பூமியில் வாழும் மாந்தர்க்கு ஒப்பற்ற நெறியாகி விளங்குபவன்; (இருநிலம் - பூமி);


ஒரு பெரு-மலைதனை நட்டுத் தேவரும் அசுரரும் இருபுறம் நின்று முந்நீர் கடைய வரு-விடம் நாற்றிசை எரிக்க - ஒரு பெரிய மலையை மத்தாக ஊன்றித் தேவரும் அசுரரும் இரண்டு பக்கங்களில் நின்று கடலைக் கடைந்தபொழுது பொங்கி வந்த ஆலகாலம் நான்கு திசைகளையும் சுட்டெரிக்க; (முந்நீர் - கடல்; இங்கே, பாற்கடல்); (சம்பந்தர் தேவாரம் - 3.54.10 - "முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த ஆலாலம் உண்டு");

அஞ்சு சுரரெலாம் "நால்வேத நாவா; மும்மலம் இல்லாய்; அருள்" என்று இருங்கழல் ஏத்த - அது கண்டு அஞ்சிய தேவர்களெல்லாம், "நான்மறை ஓதிய நாவினனே; தூயனே; அருளாய்" என்று பெருமையுடைய கழல் அணிந்த திருவடியைத் துதிக்க;

அவர்களைக் காத்து விடத்தை ஒரு மணி போல் அணி திருமிடற்று எந்தை - அவர்களைக் காத்து, அந்த விஷத்தை உண்டு ஒப்பற்ற மணி போலக் கண்டத்தில் அணியும் எம் தந்தை; (மிடறு - கண்டம்);


ஒற்றைக் கொம்பும் இரு-பெருஞ்-செவியும் உடையவன் தாதை - ஒற்றைத் தந்தமும் இரண்டு பெரிய காதுகளையும் உடைய விநாயகனுக்குத் தந்தை; (தாதை - தந்தை);

மூவரின் மேலன் - மும்மூர்த்திகளினும் மேலானவன்;

நான்முகன் அஞ்சச் சிறையில் அடைத்த அறுமுகன் அப்பன் - பிரமன் அஞ்சும்படி அவனைச் சிறையிட்ட ஆறுமுகனுக்குத் தந்தை;

அமரரை அஞ்சல் என்று நான்மறைப் புரவித் தேர்மிசை நின்று முப்புரம் எரிய இரு-வரை-வில்லால் ஒரு கணை தொட்ட வீரன் - தேவர்களுக்கு அபயம் அளித்து, வேதங்களே குதிரைகளாகப் பூட்டப்பெற்ற தேரின்மேல் நின்று, முப்புரங்களையும் எரிக்க மேருமலை-வில்லால் ஓர் அம்பை எய்த வீரன்; (புரவி - குதிரை); (இருமை - பெருமை; வரை - மலை; இருமை + வரை = இருவரை = பெரிய மலை);


ஒரு மலை பெயர்த்த இருந்-திறல் அரக்கன் மூன்றொடு நான்கு சுரங்கொடு பாடி அஞ்செழுத்து ஓத விரல் ஊன்று இறைவன் - ஒப்பற்ற கயிலைமலையைப் பெயர்த்த மிகுந்த வலிமையுடைய இராவணன் ஏழுசுரம் பொருந்திய இசையோடு பாடித் திருவைந்தெழுத்தை ஓதி வணங்கும்படி அவனை ஒரு திருவடி-விரலை ஊன்றி நசுக்கிய இறைவன்;

ஆறு சூடி - கங்காதரன்;

ஏழிசை கூட்டி அறுபதம் அஞ்-சுரும்பு ஆர் மலர்க் கொன்றையன் - ஏழிசை பொருந்த வண்டுகளும் அழகிய சுரும்புகளும் ஒலிக்கின்ற கொன்றைமலரை அணிந்தவன்; (அம் - அழகு); (அறுபதம் - வண்டு); (சுரும்பு - வண்டு); (அறுபதம் அஞ்-சுரும்பு - ஒருபொருட்பன்மொழி என்றும் கொள்ளல் ஆம்); (சுந்தரர் தேவாரம் - 7.16.1 - "குரும்பைமுலை மலர்க்குழலி ... அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண் பாட);

நான்முகன் மூவடி இரந்தவன் இருவரும் நேடிய ஒரு தழற்-பிழம்பாய் நின்றவன் - பிரமனும் (முன்பு) வாமன வடிவில் மூன்றடி மண் யாசித்த திருமாலும் தேடும்படி ஜோதியாகி ஓங்கி நின்றவன்;


பொய்யருக்கு இல்லாப் புரி-சடை அண்ணல் - பொய்யர்களுக்கு அருள் இல்லாதவன், முறுக்கிய சடையை உடைய தலைவன்; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

செய்ய மேனியன் - செம்மேனியன்; (செய்ய - சிவந்த);

செந்தமிழ் பாடிக் கைதொழுவாரைக் காத்தருள் வரதன் - தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளைப் பாடி வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களை அளித்துக் காக்கின்றவன்;

மை திகழ் கண்டன் மலரடி சரணே - நீலகண்டனது மலர்ப்பாதங்களே நம் காப்பு; நம் புகலிடம்; (சரண் - புகலிடம்; அடைக்கலம்); (சம்பந்தர் தேவாரம் - 1.10.9 - "தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே");


* குறிப்பு : இப்பாடலில் நான்முகன் என்ற ஒரே சொல் ஒரே பொருளில் இரண்டு இடங்களில் வருகின்றது. சில பாடல்களில் சில சமயம் அப்படி வருவதும் உண்டு.

உதாரணமாக: திருவாசகம் - போற்றித்திருவகவல் - 8.4:

சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 95

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி 154

தென்னா டுடைய சிவனே போற்றி 164


பிற்குறிப்பு - எழுகூற்றிருக்கை - யாப்புக்குறிப்பு:

எழுகூற்றிருக்கை என்பது மிறைக்கவி (சித்திரகவி) வகைகளில் ஒன்று. இப்பாடலில் 1 முதல் 7 வரை உள்ள எண்கள் படிப்படியாக ஏறி இறங்கும் அமைப்பில் எண்ணலங்காரம் திகழ்கின்றது.

1, 121, 12321, ...., 1234567654321

என்று எண்களைக் குறிக்கும் சொல்லோ ஓசையோ (ஒன்று, ஒரு, ஓர், இரண்டு, இரு, ஈர், ... ஐந்து, அஞ்சு, , ... இத்யாதி) பாடலில் அதே வரிசையில் அமையுமாறு பாடப்பெறுவது. இப்படி எண்ணலங்காரம் திகழும் அடிகள் நிறைவுற்றபின் இன்னும் சில அடிகள் அமைந்து பாடல் நிறைவுறும்.

முன்னோர் அருளிய எழுகூற்றிருக்கைப் பாடல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment