Wednesday, August 6, 2025

P.436 - பேரூர் - அலையார்நதி மதிகூவிளம்

2018-05-23

P.436 - பேரூர்

---------------------------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்");

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீ");


1)

அலையார்நதி மதிகூவிளம் அணிசெஞ்சடை அடிகள்

மலையான்மகள் ஒருபங்கென மகிழும்பரன் எண்ணில்

பலபேரினன் பேரூருறை பட்டீசனைக் கண்டு

நலமார்தரு தமிழ்மாலைகள் நவில்வார்வினை அறுமே.


அலை ஆர் நதி, மதி, கூவிளம் அணி செஞ்சடை அடிகள் - அலை மிக்க கங்கை, சந்திரன், வில்வம் இவற்றை அணிந்த செஞ்சடைப் பெருமான்;

மலையான்மகள் ஒரு பங்கு என மகிழும் பரன் - உமையை ஒரு பாகமாக விரும்பும் பரமன்;

எண் இல் பல பேரினன் - எண்ணற்ற பல திருநாமங்களை உடையவன்;

பேரூர் உறை பட்டீசனைக் கண்டு நலம் ஆர்தரு தமிழ்மாலைகள் நவில்வார் வினை அறுமே - பேரூரில் உறைகின்ற பட்டீசன் என்ற திருநாமம் உடைய ஈசனைத் தரிசித்து நன்மை மிக்க தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளைப் பாடி வழிபடும் பக்தர்களது வினைகள் அழியும். (ஆர்தல் - நிறைதல்); (தருதல் - ஒரு துணைவினை);


2)

ஆரார்புரம் அவைவெந்திட அன்றோர்கணை தொட்டான்

நீரார்சடை மேல்வெண்பிறை நிலைபெற்றிட வைத்தான்

பாரோர்தொழப் பேரூருறை பட்டீசனைக் கண்டு

சீரார்தமிழ் சொல்வாரவர் தீராவினை அறுமே.


ஆரார் புரம்அவை வெந்திட அன்று ஓர் கணை தொட்டான் - பகைவர்களது முப்புரங்கள் வெந்து அழிய முன்பு ஒரு கணையை எய்தவன்; (ஆரார் - பகைவர்);

நீர் ஆர் சடைமேல் வெண்பிறை நிலைபெற்றிட வைத்தான் - கங்கைச்சடையின்மேல் வெண்திங்களை வைத்துக் காத்தவன்;

பாரோர் தொழப் பேரூர் உறை பட்டீசனைக் கண்டு சீர் ஆர் தமிழ் சொல்வார் அவர் தீரா வினை அறுமே - உலகோர் தொழுமாறு பேரூரில் உறைகின்ற பட்டீசனைத் தரிசித்து நன்மை மிக்க தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப்-பாமாலைகளைப் பாடி வழிபடும் பக்தர்களது தீராத வினைகளெல்லாம் அழியும்.


3)

ஓதந்தனில் எழுநஞ்சினை உண்டன்றருள் கண்டன்

வேதந்தனைக் கல்லால்நிழல் விரிசெய்தவன் அடியார்

பாதந்தொழப் பேரூருறை பட்டீசனைக் கண்டு

சீதந்திகழ் தமிழ்மாலைகள் செப்பக்கெடும் வினையே.


ஓதந்தனில் எழு நஞ்சினை உண்டு அன்று அருள் கண்டன் - கடலில் தோன்றிய ஆலகாலத்தை முன்னம் உண்டு அருள்செய்த நீலகண்டன்; (ஓதம் - கடல்);

வேதந்தனைக் கல்லால்நிழல் விரிசெய்தவன் - வேதங்களைக் கல்லால-மரத்தின்கீழ் உபதேசித்தவன்;

அடியார் பாதம் தொழப் பேரூர் உறை பட்டீசனைக் கண்டு, சீதம் திகழ் தமிழ்மாலைகள் செப்பக் கெடும் வினையே - அடியவர்கள் தன் திருவடியை வழிபடுமாறு பேரூரில் உறைகின்ற பட்டீசனைத் தரிசித்துக், குளிர்ச்சி பொருந்திய தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வழிபடும் பக்தர்களது வினைகள் அழியும்.


4)

நாகத்தினை அணிமார்பினன் நரையேற்றினன் எரிபோல்

ஆகத்தினன் பச்சைக்கிளி அன்னாள்மலை மங்கை

பாகத்தினன் பேரூருறை பட்டீசனை வாழ்த்தச்

சோகத்தினைத் தருவல்வினைத் துரிசோய்வது திடனே.


நாகத்தினை அணி மார்பினன் - பாம்பை மாலை போல மார்பில் அணிந்தவன்;

நரை-ஏற்றினன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;

எரி போல் ஆகத்தினன் - தீப்போல் செம்மேனியன்;

பச்சைக்கிளி அன்னாள் மலைமங்கை பாகத்தினன் - அழகிய பைங்கிளி போன்றவளான மலைமகளை ஒரு பாகத்தில் உடையவன்; (* இத்தலத்து இறைவி திருநாமம் பச்சைநாயகி);

பேரூர் உறை பட்டீசனை வாழ்த்தச் சோகத்தினைத் தரு வல்வினைத் துரிசு ஓய்வது திடனே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனை வாழ்த்தினால், துன்பம் தரும் கொடிய வலிய வினைக்குற்றம் அழிவது நிச்சயம்; (துரிசு - குற்றம்); (ஓய்தல் - அழிதல்);


5)

தோடுங்குழை ஒன்றும்புனை தூயன்சுடு கானில்

ஆடும்புகழ் உடையான்புலி அதளான்மறை நாலும்

பாடும்பரன் பேரூருறை பட்டீசனை அன்பால்

நாடுங்குணம் உடையார்தமை நண்ணாவினை தானே.


தோடும் குழை ஒன்றும் புனை தூயன் - காதில் தோடும் ஒரு குழையும் அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்;

சுடுகானில் ஆடும் புகழ் உடையான் - சுடுகாட்டில் கூத்து ஆடுபவன்;

புலி-அதளான் - புலித்தோலை ஆடையாக அணிந்தவன்; (அதள் - தோல்); (அப்பர் தேவாரம் - 6.68.1 - "கொல்வேங்கை அதளானை");

மறை நாலும் பாடும் பரன் - நால்வேதங்களைப் பாடியவன்; நால்வேதங்களால் பாடப்படுபவன்;

பேரூர் உறை பட்டீசனை அன்பால் நாடும் குணம் உடையார்தமை நண்ணா வினைதானே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனை அன்போடு வழிபடுபவர்களை வினைகள் நெருங்கமாட்டா;


6)

மடமாதொரு கூறானவன் மதனைச்சுடு கண்ணான்

சுடர்சோதியை நிகர்மேனியன் தூவெண்மதி திகழும்

படர்வேணியன் பேரூருறை பட்டீசனை நாளும்

உடலால்மனம் வாக்கால்தொழ ஒழியும்பழ வினையே.


மடமாது ஒரு கூறு ஆனவன் - அழகிய உமையை ஒரு கூறாக உடையவன்;

மதனைச் சுடு கண்ணான் - மன்மதனைச் சுட்டெரித்த (நெற்றிக்)கண்ணினன்; (அப்பர் தேவாரம் - 4.43.4 - "காமனைக் காய்ந்த கண்ணார்");

சுடர்-சோதியை நிகர் மேனியன் - சுடர்விடும் தீப்போன்ற செம்மேனியை உடையவன்;

தூ-வெண்மதி திகழும் படர் வேணியன் - தூய வெண்பிறையைப் படரும் சடைமேல் சூடியவன்;

பேரூர் உறை பட்டீசனை நாளும் உடலால் மனம் வாக்கால் தொழ ஒழியும் பழவினையே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைத் தினமும் மனம், வாக்கு, காயம் இவை மூன்றாலும் வழிபடுபவர்களது பழைய வினைகள் அழியும். (மனம் - மனத்தால்);


7)

சடையான்திரி சூலப்படை தரிசங்கரன் கொடிமேல்

விடையான்கழல் விண்ணோர்தொழ விடமுண்டவன் பூதப்

படையானணி பேரூருறை பட்டீசனைப் போற்றி

அடைவாரவர் அருநோய்கெடும் அடைவாரமர் உலகே.


சடையான், திரிசூலப்படை தரி சங்கரன் - சடையை உடையவன், திரிசூலத்தை ஏந்திய சங்கரன்; (படை - ஆயுதம்);

கொடிமேல் விடையான் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவன்;

கழல் விண்ணோர் தொழ விடம் உண்டவன் - திருவடியைத் தேவர்கள் இறைஞ்ச அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்டவன்;

பூதப்படையான் - பூதகணப்-படை உடையவன்;

அணி பேரூர் உறை பட்டீசனைப் போற்றி அடைவாரர் அவர் அருநோய் கெடும்; அடைவார் அமர் உலகே - அழகிய பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைப் போற்றி அடைபவர்களது அரிய நோய் (உடற்பிணி / பிறவிப்பிணி) அழியும்; அவர்கள் விரும்பத்தக்க சிவலோகத்தை அடைவார்கள்; (அமர்தல் - விரும்புதல்);


8)

வலியேமிக உன்னித்திரு மலைபேர்த்தவன் அழுகை

ஒலியேமிக விரலூன்றிய உமைகோன்அயன் தலையிற்

பலிதேரிறை பேரூருறை பட்டீசனைப் போற்றிப்

பொலிமாமலர் இடுவாரவர் பொல்லாவினை அறுமே.


வலியே மிக உன்னித் திருமலை பேர்த்தவன் அழுகை ஒலியே மிக விரல் ஊன்றிய உமைகோன் - தன் வலிமையையே மிகவும் எண்ணிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது அழுகை ஒலியே மிகும்படி திருப்பாத-விரல் ஒன்றை ஊன்றியவன், உமாபதி; (வலி - வலிமை); (உன்னுதல் - எண்ணுதல்);

அயன் தலையில் பலிதேர் இறை - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சை ஏற்கும் இறைவன்;

பேரூர் உறை பட்டீசனைப் போற்றிப் பொலி மாமலர் இடுவார்அவர் பொல்லாவினை அறுமே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைப் போற்றி அழகிய பூக்களைத் தூவி வழிபடும் பக்தர்களது தீவினை அழியும்;


9)

சிசுபாலனை மாய்த்தான்அயன் தேடித்தொழு சோதி

சசிசேகரன் புரிநூலணி தடமார்பினில் நீற்றன்

பசுவேறிறை பேரூருறை பட்டீசனைப் போற்றிக்

கசிவாரவர் வினையாயின கழலப்பெறு வாரே.


சிசுபாலனை மாய்த்தான் அயன் தேடித் தொழு சோதி - சிசுபாலனைக் கொன்ற (கிருஷ்ணனாக அவதரித்த) திருமாலும் பிரமனும் அடிமுடி தேடித் தொழநின்ற தீப்பிழம்பு;

சசிசேகரன் - மதிசூடி; (சசி - சந்திரன்);

புரிநூல் அணி தட-மார்பினில் நீற்றன் - பூணூலை அணிந்த அகன்ற மார்பில் திருநீற்றைப் பூசியவன்;

பசு ஏறு இறை - இடபவாகனன்;

பேரூர் உறை பட்டீசனைப் போற்றிக் கசிவார்அவர் வினை ஆயின கழலப் பெறுவாரே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைப் போற்றி உருகும் பக்தர்களது வினைகள் நீங்கும்; (அப்பர் தேவாரம் - 5.83.2 - "வார்சடை ஈசனை ... கண்டலும் வினையான கழலுமே");


10)

கரவேமலி நெஞ்சத்தினர் கத்தித்திரி பொய்யர்

உரைநீங்கிடும் அடியார்தொழும் உருவேற்றருள் செய்யும்

பரமாபரன் பேரூருறை பட்டீசனைப் போற்றிச்

சுரமார்தமிழ் சொல்வாரவர் துயராயின அறுமே.


கரவே மலி நெஞ்சத்தினர் கத்தித் திரி பொய்யர் உரை நீங்கிடும் - வஞ்சமே நிறைந்த நெஞ்சம் உடையவர்கள், பொய்களைக் கத்தித் திரிகின்றவர்கள் இவர்களது பேச்சை நீங்குங்கள்;

அடியார் தொழும் உரு ஏற்று அருள்செய்யும் பரமாபரன் - பக்தர்கள் வழிபடும் எந்த உருவையும் ஏற்று அவ்வடிவில் வந்து அருள்கின்ற மிக-மேலானவன்;

பேரூர் உறை பட்டீசனைப் போற்றிச் சுரம் ஆர் தமிழ் சொல்வார் அவர் துயர் ஆயின அறுமே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைப் போற்றி இசை பொருந்திய தமிழ்ப்பாமாலைகளைச் சொல்லும் அன்பர்களது துன்பம் தீரும்; (சுரம் - ஸ்வரம் - ஏழிசை);


11)

மணிநீரலை சடையின்மிசை மதிகூவிளம் கொன்றை

அணிநீர்மையன் வரியார்தரும் அதளாடையின் மீது

பணியார்பரன் பேரூருறை பட்டீசனைப் போற்றிப்

பணிவாரவர் வினைதீர்ந்தினிப் படிமேல்பிற வாரே.


மணிநீர் அலை சடையின்மிசை மதி கூவிளம் கொன்றை அணி நீர்மையன் - தெளிந்த கங்கை அலைகின்ற (/ அலைக்கின்ற) அழகிய பவளம் போன்ற சடைமேல் சந்திரன் வில்வம் கொன்றைமலர் இவற்றை அணிந்த பெருமை உடையவன்; (மணி - அழகு; பவளம்; பளிங்கு); (மணி - நீருக்கும் அடைமொழி & சடைக்கும் அடைமொழி);

வரிர்தரும் அதள்-டையின் மீது பணிர்-பரன் - வரிகள் பொருந்திய (புலித்)தோலாடையின்மேல் பாம்பைக் கட்டிய பரமன்; (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்); (அதள் - தோல்); (பணி - நாகம்); (ஆர்த்தல் - கட்டுதல்);

பேரூர் உறை பட்டீசனைப் பேரூருறை பட்டீசனைப் போற்றிப் பணிவாரவர் - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைப் போற்றி வணங்கும் அன்பர்கள்;

வினை தீர்ந்து இனிப் படிமேல் பிறவாரே - தங்கள் வினையெல்லாம் தீர்ந்து மீண்டும் பூமியில் பிறவி இல்லாத நிலையை (= முக்தி) அடைவார்கள்; (படி - பூமி);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment