2018-05-29
N.049 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2018
----------------
(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)
திருமறைக் காட்டில் அப்பர் .. செந்தமிழ் காப்பு நீக்கும்
அருமணிக் கதவு மீண்டும் .. அடைத்திடப் பதிகம் பாடி
அருளிய காழி மன்னர் .. ஆலவாய் அரன்வெண் ணீற்றால்
அருகரை வாதில் வென்றார் .. அணிமலர்ப் பாதம் போற்றி.
திருமறைக்காட்டில் அப்பர் செந்தமிழ் காப்பு நீக்கும் அருமணிக் கதவு மீண்டும் அடைத்திடப் பதிகம் பாடி அருளிய காழி மன்னர் - வேதாரண்யத்தில் திருநாவுக்கரசரது தேவாரம் தாழ் நீக்கிய அரிய அழகிய திருக்கதவு மீண்டும் சாத்தும்படி பதிகம் பாடியருளிய சீகாழித் தலைவர்; (காப்பு - கதவின் தாழ்); (காழி மன்னர் - சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தர்); (* திருநாவுக்கரசர் தேவாரம் - 5.10.1 - "பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ"); (* சம்பந்தர் தேவாரம் - 2.37.1 - "சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்");
ஆலவாய் அரன் வெண்ணீற்றால் அருகரை வாதில் வென்றார் - ஆலவாய் ஈசனது வெண்-திருநீற்றால் சமணரை வாதில் வென்றவர்; (அருகர் - சமணர்); (* சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - மந்திர மாவது நீறு");
அணி-மலர்ப்பாதம் போற்றி - அத்-திருஞானசம்பந்தரது அழகிய தாமரைமலர் போன்ற திருவடியை வணங்குகின்றேன்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment