Wednesday, August 20, 2025

V.055 - மனமே நம்மை - மெல்லினப் பாட்டு

2018-06-21

V.055 - மனமே நம்மை - மெல்லினப் பாட்டு

---------------------------------

(வஞ்சிவிருத்தம் - மா மா மாங்காய் - வாய்பாடு)

முற்குறிப்பு: மெல்லின-எழுத்து ஆறும் வரப் பாடுவது மெல்லினப்பாட்டு ஆம்.


மனமே நம்மை நமனண்ணா

முனமே மஞ்ஞை மானன்ன

மனைமன் னெம்மான் நன்னாமம்

நினைநீ நன்மை நண்ணுமே.


பதம் பிரித்து:

மனமே, நம்மை நமன் நண்ணா

முனமே, மஞ்ஞை மான் அன்ன

மனை-மன் எம்மான் நன்னாமம்

நினை நீ; நன்மை நண்ணுமே.


மனமே, நம்மை நமன் நண்ணா முனமே - மனமே, நம்மை எமன் நெருங்குவதன் முன்பே; (நண்ணுதல் - நெருங்குதல்; அடைதல்);

மஞ்ஞை மான் அன்ன மனை-மன் எம்மான் நன்னாமம் நினை நீ - மயிலையும் மானையும் ஒத்த மனைவிக்குக் கணவனும், எம்பெருமானும் ஆன ஈசனது நல்ல நாமத்தை நீ நினை; (மஞ்ஞை - மயில்); (மனை - மனைவி); (மன் - கணவன்);

நன்மை நண்ணுமே - நன்மையே வந்தடையும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment