2018-06-21
V.055 - மனமே நம்மை - மெல்லினப் பாட்டு
---------------------------------
(வஞ்சிவிருத்தம் - மா மா மாங்காய் - வாய்பாடு)
முற்குறிப்பு: மெல்லின-எழுத்து ஆறும் வரப் பாடுவது மெல்லினப்பாட்டு ஆம்.
மனமே நம்மை நமனண்ணா
முனமே மஞ்ஞை மானன்ன
மனைமன் னெம்மான் நன்னாமம்
நினைநீ நன்மை நண்ணுமே.
பதம் பிரித்து:
மனமே, நம்மை நமன் நண்ணா
முனமே, மஞ்ஞை மான் அன்ன
மனை-மன் எம்மான் நன்னாமம்
நினை நீ; நன்மை நண்ணுமே.
மனமே, நம்மை நமன் நண்ணா முனமே - மனமே, நம்மை எமன் நெருங்குவதன் முன்பே; (நண்ணுதல் - நெருங்குதல்; அடைதல்);
மஞ்ஞை மான் அன்ன மனை-மன் எம்மான் நன்னாமம் நினை நீ - மயிலையும் மானையும் ஒத்த மனைவிக்குக் கணவனும், எம்பெருமானும் ஆன ஈசனது நல்ல நாமத்தை நீ நினை; (மஞ்ஞை - மயில்); (மனை - மனைவி); (மன் - கணவன்);
நன்மை நண்ணுமே - நன்மையே வந்தடையும்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment