2018-06-05
V.054 - கங்காதரன் - நடுவெழுத்து அலங்காரம்
---------------------------------
(வெண்பா)
கைக்கும்காய் பண்பு கறையில்லான் கண்ணிலிதேர்
உய்க்குமொரு வன்வாகை உள்ளுளன் கைக்குழவி
ஊணிளகு வெல்லமிறை பெற்றமினம் ஒண்மலரிற்
காணறைசூழ் கங்கா தரன்.
பதம் பிரித்து:
கைக்கும் காய், பண்பு, கறை-இல்லான், கண்ணிலி, தேர்
உய்க்கும் ஒருவன், வாகை, உள் உளன்; கைக்குழவி
ஊண், இளகு வெல்லம், இறை, பெற்றம், இனம், ஒண்மலரில்
காண் நறை, சூழ் கங்காதரன்.
முற்குறிப்பு: நடுவெழுத்தலங்காரம் - இஃது ஒரு வார்த்தை விளையாட்டு. இக்காலத்தில் வரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் (crossword puzzles) போன்றது. பாடலின் முற்பகுதியில் வரும் சொற்களுக்கு அதே பொருள் தரும் மூன்றெழுத்துச் சொற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் நடுவே உள்ள எழுத்துகளைச் சேர்த்தால் பாடலில் சுட்டப்பெறும் தலைவன் பெயர் (அல்லது சொற்றொடர்) வரும். பாடலின் பிற்பாதியில், அந்த மூன்றெழுத்துச் சொற்களில் எஞ்சியுள்ள (= முதல் & மூன்றாம் எழுத்துகளான) ஈரெழுத்துச் சொற்களுக்குப் பொருந்துமாறு சொற்கள் அமையும். பாடலின் பிற்பாதிக்கும் பாடலில் சுட்டப்பெறும் தலைவன் பெயருக்கும் தொடர்பு (பெரும்பாலும்) இராது.
கைக்கும் காய், பண்பு, கறை-இல்லான், கண்ணிலி, தேர் உய்க்கும் ஒருவன், வாகை, உள் உளன் - கசக்கின்ற காய், குணம், குற்றமற்றவன், குருடன், தேரை ஓட்டும் ஒருவன், வெற்றி, என்ற பொருள்கள் தரும் சொற்களின் உள்ளே இருக்கின்றான்;
கைக்குழவி ஊண், இளகு வெல்லம், இறை, பெற்றம், இனம், ஒண்மலரில் காண் நறை, சூழ் - கைக்குழந்தையின் உணவு, இளகிய வெல்லம், அரசன், பசு, இனம், ஒளியுடைய பூவில் இருக்கும் மணம், என்ற பொருள்கள் தரும் சொற்கள் சூழ்ந்திருக்க;
கங்காதரன் - கங்கையைச் சடையில் தரித்த சிவபெருமான்;
இந்தப் பாடலில் மறைவாக இடம்பெற்றுள்ள சொற்கள்:
கைக்கும் (கசக்கும்) காய் = பாகல் / பால் = கைக்குழந்தையின் உணவு (ஊண்);
பண்பு = பாங்கு / பாகு = இளகிய வெல்லம்;
கறை இல்லான் (குற்றமற்றவன்) = மகான் / மன் = இறை (அரசன்);
கண்ணிலி (குருடன்) = ஆதன் / ஆன் = பெற்றம் (பசு);
தேர் உய்க்கும் (ஓட்டும்) ஒருவன் = சாரதி / சாதி = இனம்;
வாகை (வெற்றி) = வென்றி / வெறி = வாசம்;
பா(க)ல், பா(ங்)கு, ம(கா)ன், ஆ(த)ன், சா(ர)தி, வெ(ன்)றி ===> கங்காதரன்.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment